‘இன்னும் கொஞ்சமாய் என்மனக் கசகில் ‘

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

இராம.கி.


உலகியற் போக்கில் ஒன்றிய பலரும்
இலகாய்க் கேட்பது ‘இன்னுங் கொஞ்சம் ‘;
எங்கு திரும்பினும், எப்படிக் காண்கினும்,
அங்கு நுழைவது, ‘இன்னுங் கொஞ்சம் ‘;
கிண்ணிச் சோற்றைக் குழவி மறுத்தால்,
அன்னை சொல்வது ‘இன்னும் கொஞ்சம்! ‘
நுழைவுத் தேர்வில் முன்னிலை நோற்பின்,
விழையும் மதிப்பெண், இன்னும் கொஞ்சம்!
நூற்று மாத்திகள்(0) வெற்றியை நாடின்,
ஏற்றுக வேகம் இன்னும் கொஞ்சம்!
கடுந்தொலை ஓடிக்(0a) கடந்திட வேண்டின்,
இடையிலா நகர்ச்சி(1) இன்னும் கொஞ்சம்!

இதுபோற் காட்டுகள் எத்தனை ? இருந்தும்,
அதுவெல் லாமே அறிந்த விளைவுதான்!
கொஞ்சம் முயன்றால், கொஞ்சம் பலன்கள்!
கொஞ்சம் விஞ்சினால், கூடிய விளைவு!
கொஞ்சம் என்பதின் எல்லை எதுவரை ?
விஞ்சி யஞ்சியே துஞ்சும் வரையிலா ?
இன்றைய அறிவியல் விந்தையிற் கொஞ்சம்
உன்னியே பார்த்தால், புரிந்தவை புரியா.

இன்னும் இன்னுமே கொஞ்சம் ஏற்றினால்
என்ன ஆகிடும் இயற்கை விளைவுகள் ?
ஆலெனப் படர்ந்து அகல்ந்திடப் போமோ ?
பீலிபெய் சகடாய் அச்சிறுந் தாகுமோ ?
பரந்த பாலையில் பாவும் மணலெலாம்
சரவிக் கிடக்கும் சமன்வெளி யென்றால்,
முன்னுறு நிலையாய் முகிழ்ப்பது எதுவோ ?
கன்னிய வெறுமையில் கானல் பூக்குமே ?
மேடும் பள்ளமும், போடும் விடுகதை
புரிந்தால் தானே போயுறும் பயணம் ?

‘கொஞ்சம் கொஞ்சமாய் கூட்டிச் செய்கையில்,
கொஞ்சம் விளையுமா ? கொள்ளை பெருகுமா ?
இழுமிய விளைவா(3) ? இழுமா விளைவா(4) ? ‘
‘சுழுமுனை(5)ச் சூக்குமம் சொன்னவர் யார்தான் ? ‘
இந்த ஆய்விலே இசகு பிசகென
வந்து தித்ததே, கசகு (2) எனும்புலம்;
பூத வியலும்(6), வேதி யியலும்(7),
ஆதிக் கணக்கும், அளகை யியலும் (8)
புதுவகைப் போக்கில் கசகைப் புரட்டும்;
நொதுமற்(9) பார்வையில் நோக்குவோம் ஒருசில!

முதற் பார்வை:

குவளை ஒன்றில் துவலை நீர்ப்பல
குவளைச் சுவரைத் தொடுகும் வரைக்கும்
ஆடி அசைந்து முத்தெனக் காட்டும்;
கூடிப் பெருகியும் கூவளைத்(10) தோற்றமே;
இன்னும் கொஞ்சம் இட்டதும், நீர்த்துளி
சன்னமாய்ச் சுவரைச் சார்ந்ததும், ‘அடடா!
எப்படி மாயம் இங்கேற் பட்டது ?
குப்புறப் பரவிக் கூங்குவை(11) ஆனது ? ‘

இரண்டாம் பார்வை:

கொஞ்சம் வெப்பிட(12), குவளையுள் நீர்மம்
கொஞ்சம் வெம்மை(13) கூட்டியே காட்டும்;
மிஞ்சிக் கொதிநிலை மேவா வரைக்கும்,
கொஞ்சம் உப்பும்(14), கொஞ்சம் குமுறும்;
கிடுகிய நிலை(15)க்கு அடுகா திருந்தால்,
கடுகிய மாயம் காட்டிச் சிதறும்!
சின்ன வெடிப்பு; சீறும் பொக்குளம்(16);
மண்டி விரிந்து மேலுறும் ஆவி,
சடபுடத் தாளம், சக்கர வாகம்!
படபடச் சத்தம், வாகை(17)யே மாற்றம்!

மூன்றாம் பார்வை:

தூரம் என்பதே மாறா முழுமுதல் (18),
சாரம் இதுவெனக் கற்றோம் இல்லையா ?
ஓரடிக் கோலை ஒத்தி அளந்தால்,
ஈழகத் தீவின் சுற்றள வென்ன ?
பாதிய கோலாய்ப் பதித்துப் பார்த்தால்
ஏதிது மாயம் எக்கச் சக்கமாய் ?
இன்னம் கூடுதே இத்தரைச் சுற்று ?
சின்னக் கோலால் சீரிதாய் அளந்தமோ ?(19)
அளவுகோல் இக்குணி ஆகியே விட்டால்,
விளம்பிய சுற்று விளிம்பிலாத் தொலைவோ(20) ?

பரந்த பார்வை:

இப்படிக் கொஞ்சம் ஏறவும், குறையவும்,
எப்படி விந்தை, இயற்கையின் நிகழ்வில் ?
தன்னுமைச் சமலையாம் (21); பகுவல் தோற்றமாம் (22);
பகிர்த்த விளைவாம் (23); பட்டாம் பூச்சியாம் (24);
ஆருடம் சொல்லுதற்கு அமையாப் புலமாம் (25);
விந்தையின் ஈர்ப்பாம் (26); துருவளை நகர்வாம் (27);
எல்லாம் ஒருவகைச் சொலவம் என்றுநாம்
தள்ளவும் முடியா நுள்ளிய விளைவுகள்;
கொளுவிய(28) தெல்லாம் குலைக்கும் விளைவுகள்;
இழுமாச் செய்கைகள் இன்னுமா கொஞ்சம் ?

அத்தமே இல்லா ஆழறி வியலில்,
வித்தகர் இந்நாள் விண்டியே சொல்வது:
‘உலகப் போக்குகள், ஆருடக் கணிப்பிலை,
கலவும் தொடக்கக் கட்டையே(29) பொறுத்ததால்!
தொடக்கம் மாறின், தோய்வதும் மாறும்!
மடக்கிப்(30) பெருகி மாறுபட் டோடும்! ‘
தொடக்க முரணின் விடைப்புக் கூறுகள்
இடக்கர் அளித்து முடக்கியே வைக்கையில்,
தலையா ? பூவா ? தாயக் குலுக்கலா ?
பழமா ? மலையா ? பாம்பா ? ஏணியா ?

தனிக்கதைப் பார்வை:

‘இன்னும் கொஞ்சம் ‘ என்கிற கட்டுகள்
தன்னிலே பாதிதான்! தனிக்கதை அறியுமோ ?
‘பென்னம் போர்க்களம்; இருபடை; ஒன்றில்
சின்னஞ் சிறிய ஆணியில் லாமல்
புதையடி(31) போச்சு; குதிரையும் போச்சு;
குதிரையின் வீரனோ குப்புறக் கவிழ்ந்தான்;
வீரன் இறந்ததால், போரிலே தோற்றார்;
பாரிலே அரசு பாழாய்ப் போச்சு ‘;
இன்னும் கொஞ்சம் ஆணிகள் இருந்தால்,
தன்னுடை அரசைத் தவிக்க விடுவரோ ?

வாழ்கோட்டுப் பார்வை:

கசகு என்பதை மிகையுடன் சொன்னால்,
திசைகளே அறியாத் திகைப்புடன் முடியலாம்;
முடிவிலா ஓர்மையில் தொடக்குகள் மாறி,
அடிகொள் வாழ்நிலை அகன்றே விலகி,
நாற்பரி மாண நகர்விலே உழன்று,
ஏற்புறுங் காலப் பிறழ்ச்சியும் வாய்த்து,
என்வாழ் கோடு எங்கோ சுழித்து,
என்றன் பேரன் எனக்குமுன் பிறந்து,
யானே எனக்கு வழிமுறை ஆகி,
கோணிக் குறுகி குழம்பிக் கிடப்பனே!

‘என்ன மானி! கடைசிலே
ரொம்பச் சிக்கலா கசகுலே
கொணாந்துட்டாக! ‘

‘பங்காளி, இதுக்கே பயந்தா, எப்படி ?
இன்னம் கொஞ்சம், எத்தனையோ இருக்கு,
நம்ம ரெண்டுபேரு வாழ்கோடும்
இன்னொரு நாள் முட்டுணாப் பார்க்கலாம்.
அப்ப, வரட்டா ? ‘

——————————————————————
சொல் விளக்கம்:

0) நூற்று மாத்திகள் = 100 meters
0a) கடுந்தொலை ஓட்டம் = marathon run
1) இடையிலா நகர்ச்சி = non-stop movement or motion
2) கசகு = chaos, கசங்கிக் குதறிக் குழம்பிக் கிடப்பது கசகு; இந்தச் சொல்லையே chaos என்பதற்கு
இணையாகப் பயன்படுத்துகிறேன். இந்தப் பாவில் இனி வரும் கருத்துக்கள் சிலவற்றின் விரிவை James
Gleick எழுதிய Chaos என்ற பொத்தகத்தில் அறியலாம்; அருமையான பொத்தகம்; வியக்க வைக்கும்
செய்திகளை அறிவு பூர்வமாக அங்கே காணலாம். (இது ஒரு கார்டினல் வெளியீடு.)
3) இழுமிய விளைவு = linear effect
4) இழுமா விளைவு = non-linear effect, கோடு என்பது இழுத்து வருவது (line);
ஆயினும் அதற்கு வளைவு என்ற பொருளும் பழகு தமிழில் வந்துவிட்டது.
இழுத்தலின் திரிபான இழுமித்தல் என்ற இன்னொரு சொல்லும் கோடுதல் என்பதற்கு இணையானதே;
நாம் புரிகின்ற ஒரு செய்கையில் (process)
ஒரு சாராத வேறி (independent variable)யை அதன் மதிப்பில் இருந்து கொஞ்ச விழுக்கிற்கு
வேறுபட வைத்து,
இந்த வேறுபாட்டின் விளைவால்,
சாருகின்ற வேறியும் (dependent variable) தன் மதிப்பில் அதே விழுக்கு வேறுபடுமானால்,
இத்தகைய உறவு உள்ள செய்கையை,
இழுமியச் செய்கை (linear process) என்றும்,
கன்னா, பின்னாவென்று அளவிறந்து நிறைய விழுக்கு வேறுபடுமானால்
இழுமாச் செய்கை (non-linear process) என்றும்
இன்றைய அறிவியலில் சொல்லுவார்கள்.
இழுமிய செய்கையில் அதன் சாய்வு (gradient) மாறாது இருக்கும்;
இழுமாச் செய்கையில் சாய்வு மாறிக் கொண்டு வரும் (gradient will keep changing).
இழுமாச் செய்கைகள் பலவும் அவற்றின் வாகு(behaviour)க்களால், இன்றைக்கும் அறிவியலில் புதிராகவே
இருக்கின்றன. அதனால் பலரும் இந்தச் செய்கைகளை ஆழ்ந்து படிக்கிறார்கள். கணியின் பயன்பாடு கூடிய பிறகே
இந்தப் படிப்பு ஓரளவு முன்வந்து இருக்கிறது.
5) சுழுமுனை = மூளையின் மூல ஆதாரத்தில் இருந்து உச்சித் துளை வரைக்கும் உள்ள நாடி என்பதற்கு, ஓகத்தில்
(yoga) பயிலும் சொல்.
6) பூத வியல் = Physics
7) வேதியியல் = Chemistry
8) அளகையியல் = Logic; இதைத் தருக்கவியல், ஏதுசாற்றம் என்றும் சொல்வது உண்டு. இதன் வல்லமை
நாவலந்தீவில் காஞ்சியில் சிறந்து இருந்ததால், புத்தர் காலத்திலேயே இதைப் படிக்க பலரும் தென்னாடு
வந்ததாகச் சான்றுகள் உண்டு. அளவையாடல் என்ற சொல்லாட்சி முந்நாளிலேயே இலக்கியங்களில் உண்டு.
Logic- கும், Law- வும் தொடர்பு உடையவை; அளவை என்பது law- வையும் குறிக்கும். அளவு செய்யப்படுவது
அளவை. அதாவது குமுகாயம் ஒன்றைச் சரி என்கிறது; இன்னொன்றை மறுக்கிறது; ‘இது அளவுற்றது; இது
அளவொழித்தது ‘ என்று வரையறுக்கிறது. நுண்ணிய வேறுபாடு காட்டுதற்காக logic- ஐ அளகை என்றும், law
-வை அளவை என்றும் குறிக்கிறோம்.
9) நொதுமல் = neutral
10) கூவளை = convex
11) கூங்குவை = concave
12) வெப்பு = heat
13) வெம்மை = hotness. (வெதுமை = temperature. வெதுமை என்பது வெம்மையில் இருந்து மிகச்
சிறிது வேறுபட்டதாகக் கொள்ளவேண்டும். சில்லீடு, பனிநிலை, குளிர், வெதுவெதுப்பு, சூடு, வெப்பம்,
கொதிநிலை எனப் பலவாறாக வெம்மையைப் பற்றிக் குறிப்பிடுகிறோம். தொடுவுணர்வால் அறியப்படும்
இந்தச் சொற்களுக்கு ஒரு அளவு கோலின் வழி எண்ணிய வெளிப்பாடு (numerical representation)
கொடுப்பதே வெதுமை எனப்படும். காட்டாக, பனிநிலையைச் சுழி என்றும், கொதிநிலையை நூறு என்றும்
கொள்ளுவது ஒரு வகை வெதுமை அளவுகோல் – temperature scale. இதை நூறலகுக் கோல்
(centigrade scale) என்கிறோம். Temperature is minutely different from
hotness. It is a numerical representation of qualitative aspects of hotness.)
14) உப்புதல் = expansion of the volume
15) கிடுகிய நிலை = critical state (என்னங் காணும், இப்படியா கிடுக்குப் பிடி போடுவாங்க!)
[இன்னதென்று சொல்ல முடியாமல் இங்குமல்லாமல் அங்குமல்லாமல் கிடுக்கப் பட்டநிலை கிடுகிய நிலை.
கிடுகிய நிலையில் ஒரு பொருளை நீர்மம் (liquid) என்றும் சொல்ல முடியாது; வளிமம் (gas) என்றும்
சொல்ல முடியாது. எனவே கிடுகிய நிலைக்கு மீறிக் கிடக்கும் வாகையை பாய்ம வாகை – fluid phase
என்று அறிவியலில் சொல்லுகிறோம்.]
16) பொக்குளம் = bubble
17) வாகை = வாகு என்ற சொல்லின் திரிவாய்ப் பிறந்தது; phase என்ற சொல்லை இங்கு இது குறிக்கும்.
(Here the liquid phase is
turning into vapour phase); வாகு = behaviour
18) முழுமுதல் = absolute
19) சீரிதாய் அளத்தல் = precise measurement (சீர்மை/சீரிமை = precision; ஓரிமை =
uniformity)
20) விளிம்பிலாத் தொலைவு = infinite distance; விளிம்பு = finite; விளிம்பிலி =
infinity;
கந்திலி என்றும் சிலர் infinity பற்றிச் சொல்லுவது உண்டு. அதுவும் நல்ல சொல்லாக்கமே; கந்து என்பது
பற்றுக்கோல்; அடிமரம்.
கந்து>கந்தன் = வாழ்விற்குப் பற்றுக்கோடு ஆனவன், முருகன்.
கந்தை வைத்தே கந்தனைத் தொழுத காலம், காட்டு விலங்காண்டிக் காலம்; கந்திற்பாவை என்ற
சொல்லாட்சியைச் சிலம்பில் காணலாம். மரங்களின் அடியில் இறைவனைத் தொழுத காரணத்தால் ஆலமர்
செல்வன், கந்தன், கடம்பன் போன்ற சொற்கள் எழுந்தன. இன்றைக்கும் கோயில் மரம் என்ற கருத்து
தென்னாட்டவர் மனத்தில் ஆழ்ந்து இருப்பதை உணரலாம்.
கந்தில் படர்ந்த கொடி வள்ளிக் கொடி, எனவே அவன் தேவி வள்ளியானாள்.
வள்ளிக்கு இன்னொரு பொருளும் உண்டு. அதைக் கீழே பார்ப்போம்.
கந்தில் இருந்து பிறந்த இன்னொரு சொல் கந்தழி. கந்து>கந்தழி = நெருப்பு. தான் பற்றிய கோலையே
அழிப்பது.
கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே!
என்று தொல்காப்பிய நூற்பா 1034 -ல் குறிப்பிடப் பெறும். கொடிநிலை என்பது மாறாது நிலைத்து நிற்கும்
ஞாயிற்றையும், கந்தழி என்பது மேலே சொன்னவாறு நெருப்பையும், வள்ளி என்பது (வளர்ந்தும் அமைந்தும்
ஒளிதரும்) நிலவையும் குறிக்கும். இவைதாம் தமிழர்களின் முதல் மூன்று கடவுள்கள். அதனால் தான் அவை
‘முதலன மூன்றும் ‘ என்று குறிக்கப் பெற்றன. வள்ளை = வளர்ந்தும் அமைந்தும் ஒளி தரும் நிலவு. இந்த மூன்றும்
மூவேந்தர்களுக்கு முறையே முன்னவர்களாகச் சொல்லப் பெறும். (இந்தச் செய்திகளை பாவலரேறு
பெருஞ்சித்திரனாரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை பக்கம் 27 -ல் அறியலாம்.) சிலம்பில்,
தொல்காப்பிய மரபுப்படி, திங்களைப் போற்றி, ஞாயிறைப் போற்றித் தொடங்கும் இளங்கோவடிகள்
மூன்றாவதாகக் கந்தழிக்கு முரணாக மாமழையைப் போற்றித் தொடங்குகிறார்.
21) தன்னுமைச் சமலை = self similarity
22) பகுவல் தோற்றம் = fractal appearance (பகுவற் படங்களைப் பார்க்க இணையத்தில் ஒரு தளமே
இருக்கிறது. இதைப் பற்றி எழுதத் தொடங்கினால், ஏகப்பட்டவை இருக்கின்றன. தலைசுற்ற வைக்கும் விந்தைகள்.)
23) பகிர்த்த விளைவு = bifurcation (ஒரு புலத்தில் இருந்து இன்னொரு புலத்தைப் பிரித்துக் காட்டுவது.)
24) பட்டாம் பூச்சி விளைவு = butterfly effect (இதைப் பற்றியும் சொல்வதற்கு நிறைய
இருக்கிறது. கசகைப் பற்றிப் படிக்கும் போது இதை உணரலாம்.
25) ஆருடம் சொல்ல அமையாப் புலம் = unpredictable field
26) விந்தை ஈர்ப்பு = strange attractor
27) துருவளை நகர்வு = turbulent motion (துருவிச் சுழித்து வளையும் நகர்வு துருவளை நகர்வு. கசகைப்
பற்றிப் படிக்கத் தொடங்கிய பின்தான், துருவளை நகர்வின் உள்ளாழங்கள் புரியத் தொடங்கின.)
28) கொளுவு = hypotheis
29) தொடக்கக் கட்டு = initial condition
30) மடக்கல் = exponentiation (2 என்ற எண்ணின் ஐந்தாம் மடக்கு 32.)
31) புதையடி = boots or shoes, மிதியடி போலப் புதையடி என்று சொல்லலாம். இங்கே குதிரைக்
குளம்புக்கான இலாடத்தைக் குறிக்கிறது.
—————————————–

poo@giasmd01.vsnl.net.in

Series Navigation

இராம.கி.

இராம.கி.