வைரமுத்துக்களின் வானம்-5 (குமுதம் -6.10.03 இதழ்)

This entry is part [part not set] of 48 in the series 20031010_Issue

ருத்ரா.


கவிதைகளின் சிகரமே!

உன் எழுத்துகளில்

கசிந்த ஈரம்

மனிதாபிமானத்தின்

ஒரு சமுத்திரமாக

அந்த குளத்தில்

அலையடித்த காட்சி

எங்கள்

இதயங்களையெல்லாம்

நிமிண்டிவிட்டது.

ஓட்டாஞ்சல்லியில்

நீ தவளைக்கல் எறிந்து

விளையாட விரும்பிய

அந்தக் குளம்…

வறட்சியின்

பாய் விரித்துக் கிடக்க

பாலைத்திணையில்

நீ பாடிய பாட்டு

எங்கள்

ஆவியை எல்லாம்

அவிந்துபோக வைத்தது

ஒரு மண்டையோட்டின்

கண்குழி போல

அந்தக் குளத்தின்

சூன்யப்பிழம்பில்

சூரியப்பிரகாசம்

ஒன்றைத்தேடி அங்கு

ஓடிப்போய் இருக்கிறாய்.

‘அவசரச் சட்டமே ‘ இல்லாமல்

மழைநீர் சேகரிக்க

வாய் பிளந்து காத்திருந்த உன்

ஆழ்மனக்கடலின்

அழகுச்சிப்பியில்

வைரமும் முத்துமாய்

உருண்டு திரண்டு கிடைத்த

அற்புதக் கவிதை இது.

உன்னால்

இந்த மொட்டைக்குளம் கூட

வைரக்கிரீடம்

சூட்டிக்கொண்டது.

ஆனாலும் அந்த

கருத்தம்மா சீமையிலே

கள்ளிப்பால்

நிரம்பிய குளங்கள்

ஏராளம் தான்.

கண் திறக்காமலேயே

மண் தின்றுவிட்ட

பெண்மைக்கனவுகளில்

செவனம்மாக்களும்

புதைந்து கிடப்பதன்

நிகழ்வுகளை

அகழ்வு செய்து

ஆவணப்படுத்தியிருக்கிறாய்.

அந்தத்

தாமரைத்தடாகம்

‘தடா ‘ போட்ட தேசமாய்

பூவின்

தடம் அழிந்து

இடம் கலைந்து கிடப்பதை

‘ஃப்ளாஷ் பேக்கு ‘களால்

நிரப்பி

எங்கள் நெஞ்சங்களை

நெருட வைத்தாய்.

முரட்டுக் கண்களைக் கூட

ததும்ப வைத்திடும்

தத்ரூபம் அது.

உயிர் தூர்ந்த இடத்திலும்

உயிரூட்டுவதாய்

நினைத்துக்கொண்டு

அந்த படிக்கட்டுகளில்

ஆடை கழற்றி

ஆடை உடுத்தும்

அவசர அழகின்..அந்த

வினாடிப் பிஞ்சுகளையும்

விசுவரூபம் ஆக்கியிருக்கிறாயே

அது ஏன் ?

விசும்பின் துளியின்றி

பசும்புல் உடையின்றி

விசும்பிக்கிடக்கும்

அந்த நிர்வாணக்

குட்டையிலும்

ஒரு ‘பொன் தூண்டில் ‘

வீசியிருக்கிறாயே.

அது ஏன் ?

தூர்ந்து கிடப்பது

குளம் அல்ல.

இளைய யுகத்தின்

சிந்தனைக்களம் அது.

சூரியன்களை

விவசாயம் செய்து

அறுவடை செய்வதற்குப்பதில்

ஏதோ ஒரு கவர்ச்சியின்

மத்தாப்புக்காட்டையும்

அல்லவா அங்கு

கொஞ்சம்

கொளுத்தி வீசியிருக்கிறாய்.

பசித்தீக்கு

மரத்தில் விறகு வெட்டி

பிய்த்துத் திங்க

பறவைகளின் இறகு வெட்டி

இன்னும்

வில்லும் அம்புமாய்

விறைத்துக்கிடக்கும்

மிருக மிச்சத்தில்

மனிதம் மாண்டு கிடந்ததில்

இந்த குளம் மட்டும் அல்ல

இந்த தேசமே பாழ்.

சினிமா செட்டிங்க் நினைப்பின்

ஆயிரம் வாட்ஸ் பல்புகளில்

ஆதவன் விழித்து

விடியல் தந்தான் என்று

பூபாளங்கள் பாடினாய்

இந்த பூங்குயில்களுக்கு.

கரிசல் பூமியின்

கம்பங்களியில் கூட

காதல் களி

கிண்டத்தெரிந்தவன்

அல்லவா நீ.

பழம் நினைப்புகள்

மண்டிக்கிடக்கும்

அந்த குளத்தங்கரையில்

‘ஃபிஃப்டி கேஜி தாஜ்மகால்களும் ‘

சிக்ஸ்டி கேஜி காளைகளும்

ஜல்லிக்கட்டு நடத்தி நின்றதை

ஜொள்ளுக் காட்டு இதிகாசமாக்கி

இளைஞர்களை இனிமையாக

இம்சிக்கத் தெரிந்த

இன்பியல் கவிஞன் அல்லவா நீ.

சினிமாவின்

நிழல் கூத்துப்பட்டறையில்

கொஞ்சம் வெளிச்சம் பூசி

இளைஞர்களுக்கு

திருநெல்வேலி

‘இருட்டுக்கடை ‘ அல்வாவை

இதமாய்த்

தருபவன் அல்லவா நீ.

இருந்த போதும்

கொஞ்ச நேரத்துக்கு

சினிமா ராஜ்யத்தையும்

துறந்து

காதல் கவிதை எனும்

பட்டத்து ராணியையும்

ஏலத்துக்கு விட்டு விட்டு

சொற்களில் வரட்டி அடுக்கி

சடலமாய் விழுந்து கிடக்கும்

இந்த மானுடத்திற்கு

உணர்ச்சியில் தீ மூட்டினாய்.

குமுதம் எனும்

சுடலைக்காட்டில்

மயான காண்டம்

பாடியிருக்கும்

அரிச்சந்திர ராஜாவே !

உருக்கம் உருக்கம்

மிக உருக்கம் உன் பாட்டு.

கதிரவனே

கண்விழிக்காதே.

இரவுகள் விடியவேண்டாம்.

இவன் கூத்து தொடரட்டும்.

எங்கள்

குருட்டுக்கண்களும்

திறக்கட்டும்.

‘மானுட ‘ லோகிதாசன்

மீண்டும் உயிர்த்தெழட்டும்.

***
ருத்ரா

epsi_van@hotmail.com

Series Navigation

ருத்ரா

ருத்ரா