பாராட்டு

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

புகாரி


பாராட்டு!

உன் பாராட்டால்
தமிழா – நம்
தமிழுக்குச் சோறூட்டு!

O

பாராட்டும் போது வரும்
பெளர்ணமி நிறைவும்
அதைக் கேட்ட கணமே
கம்பி மத்தாப்பு
கொளுத்திக்கொள்ளும்
கண்களைச் சந்திக்கும்
இதய நெகிழ்வும் தவிர
உயர்வான இன்பங்கள்
வேறுண்டா ?

O

மறந்துவிட்டாயா ?

தாலாட்டிப்
பாராட்டியதாலேயே
தோழா நீயன்று
நிம்மதிக்குள் கண்ணயர்ந்தாய்

O

தமிழா நீ
சபிப்பதைத் தள்ளிப்போடு
ஆனால்
இன்றே இப்பொழுதே உன்
பாராட்டை அள்ளிப்போடு

O

பண்புயரப் பாராட்டினால்
உனக்குப்
பதவியும் பறிபோகுமா
அன்றி
பற்கள்தான் உடைபடுமா ?

பாராட்டுவதால்
பாராட்டியவன்தானே
பன்மடங்கு உயர்கிறான் ?

O

கலைஞர்களெல்லாம்
நல்ல
பாராட்டும் பண்பாளர்கள்தாம்
ஆனால்
ரசிகன்தானே உலகின்
முதல் மூலக் கலைஞன் ?

O

ரசனைகளே நமது உள்ளம்
ரசித்ததைப் பாராட்டும்
பண்புதான் அதன் மகுடம்

ரசனைகளற்றவனின்
உடலும் உள்ளமும்
ஐம்புலன்களும் புதைபட்ட
சமாதிகளல்லவா ?

கண்ணுக்குள் விழுந்து
பூவிரித்ததைப் பாராட்டாதவன்
குருடன்தானே ?

காதுக்குள் நுழைந்து
கிசுகிசுத்ததைப் பாராட்டாதவன்
செவிடன்தானே ?

நாவினில் தித்தித்து
நினைவழித்ததைப் பாராட்டாதவன்
ஊமைதானே ?

O

வண்டுவந்து பாராட்டாமல்
மலர்கள் பூக்கத் தவிக்குமா ?

தென்றல் வந்து பாராட்டாமல்
வசந்தம் உன்னைத் தழுவுமா ?

நிலவு வந்து பாராட்டாமல்
இரவு மனதில் இனிக்குமா ?

மழை வந்து பாராட்டாமல்
சோறு உனக்குக் கிடைக்குமா ?

இளமை வந்து பாராட்டாமல்
வாழ்க்கைதான் இனிக்குமா ?

O

பெண்ணைப் பாராட்டாமல்
ஒரு காதல் இல்லை

அவள் கண்ணைப் பாராட்டாமல்
ஒரு மயக்கம் இல்லை

சொந்தம் பாராட்டாமல்
நெஞ்சுக்கு இன்பம் இல்லை

உறவைப் பாராட்டாமல்
உலகில் உயிர்களே இல்லை

O

பாராட்டி வளர்வதன்றோ
எங்கும் கலைகள்

பாராட்டி செழிப்பதன்றோ
நமது சமுதாயம்

O

அடடா…

இப்படி நீ
பாராட்டாமல் கிடந்தால்
அப்படி அப்படியே
அழிந்துபோகுமே
உன் மொத்த இனமும்

அந்த அழிவின்
இராட்சச வாய் வாசலில்
முதலாமவன் யார் தெரியுமா ?

நீதான் தமிழா
நீயேதான்!

*

அன்புடன் புகாரி
buhari@rogers.com

Series Navigation

புகாரி

புகாரி

பாராட்டு

This entry is part [part not set] of 13 in the series 20010527_Issue

பாரி பூபாலன்


உள்ளம் குளிர்ந்தது அவனுக்கு. தன் மேலாளர், தான் செய்யும் வேலை விஷயமாக தன்னைப் பாராட்டியதைக் கேட்டு அவனுக்கு ஒரே சந்தோஷம். தன்னைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல் தனக்கு நன்றி கூட சொல்லியதால் அவனுக்கு அவனுடைய வேலையின் மீது இன்னும் பற்றுதல் ஏற்பட்டது. மேலாளரின் மீது மேலும் மதிப்பு கூடியது. அவர் கூறிய வார்த்தைகளை மனதுக்குள் திரும்பத் திரும்ப சொல்லிப் பார்த்தான். ‘THANK YOU FOR DOING THIS. ‘ அவர் கூறிய வார்த்தைகளும், அந்த வார்த்தைகளைச் சொன்ன முறையும், அப்படிச் சொல்லும் போது கொண்ட முக பாவமும் இவை வெறும் உதட்டளவில் இருந்து வந்த வார்த்தைகளாகத் தோன்றவில்லை. நன்றியுணர்வும் பாராட்டுதலும் அவரது உள்ளத்திலிருந்து வந்ததாக, அவர் உண்மையைக் கூறியதாக, அவரிடத்தில் ஒரு ஈடுபாட்டை உருவாக்கக் கூடியதாக இருந்தது.

சிந்தித்துப் பார்த்தான். இது தேவையா ? இந்த பாராட்டுதலும் நன்றி கூறுதலும் தன் மேலாளருக்கு அவசியமா ? தான் என்ன இலவசமாகவா வேலை செய்தோம் ? வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும், வேலை இருந்தாலும் இல்லாவிட்டலும், நாளுக்கு குறைந்த பட்சம் எட்டு மணி நேரத்தாளில் பதிவாகிவிடுகிறது. அதன்படி மாதமிருமுறை சம்பளம் வங்கிக்கணக்கில் வந்து சேர்ந்து விடுகிறது. இப்படி செய்யும் வேலைக்கு கிடைக்கும் கூலி நேர் செய்துவிடும் போது, கூட போனஸாகக் கிடைக்கும் இந்த பாராட்டுதலும் நன்றி கூறுதலும் தம்மை இந்த மேலாளருக்கும், அவர் மூலம் அவரைச் சார்ந்த இந்த நிறுவனத்துக்கும் நன்றிக்கடனாளியாக ஆக்கி விடுவதை உணரத்தான் செய்தான் அவன்.

பல்வேறு இடங்களில், பல்வேறு மேலாளர்களிடம் பணியாற்றி அனுபவப்பட்டதால், அவனால் அந்த மேலாளர்களை ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது.

சக ஊழியர்கள் தன்னைப் பற்றி பெருமையாகப் பேசினாலும், எந்த காரியத்தையும் மிக எளிதாகவும், சீக்கிரமாகவும் செய்து முடிக்கும் வேலைத்திறனைப் பற்றி ஆச்சரியமாக விவரித்தாலும், மேலாளர் ‘அதுதான் அவனது வேலை. அவன் அப்படிச் செய்வதனால்தான் இந்த வேலையில் இருக்கிறான், அவனை இங்கு வேலைக்கு வைத்திருக்கிறோம். இதிலென்ன ஆச்சரியம் ? ‘ என்று கூறும் போது அந்த இடத்தில் அவனுக்கு எந்தப் பிடிப்பும் வரவில்லை. செய்யும் வேலைக்குத் தகுந்த ஊதியம் கிடைத்தாலும், ஊதியத்திற்கு மேல் ஏதோ ஒன்று அவனுக்கு வேண்டியதாக இருந்தது. அது அந்த இடத்தில் கிடைப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அவனால் அந்த இடத்தில் நெடுநாள் ஊன்றி இருக்க முடியும் எனத் தோன்றவில்லை. அப்படி ஊன்றி இருக்கவும் அவன் விரும்பவில்லை.

ஒரு மேலாளருக்கு தன் கீழ் நல்ல முறையில் வேலை செய்யும் நபரை பாராட்டுவதோ அல்லது நன்றி கூறுவதோ ஒரு அவசியமான விஷயமாகத் தோன்றவில்லை. வேலைக்கு கூலி என்றிருக்கும் பட்சத்தில் தான் எதற்கு இவர்களைப் பாராட்ட வேண்டும் ? எதற்கு நன்றி கூற வேண்டும் ? எனக்காக ஏதாவது செய்தார்களா என்ற மனப்பான்மையுடன் இருப்பது தவறாகவும் தோன்றவில்லை. அவரவர் அவரவரது வேலையைக் குறித்த நேரத்தில் சரியாக செய்து முடிக்கும் பட்சத்தில் அங்கே எந்த ஒரு பிரச்சினையுமில்லை. ஆனால் அப்படி ஒருவரைப் பாராட்டும் போது, ஒருவர் செய்த வேலைக்கு நன்றி கூறும் போது அந்த இருவருக்குமிடையே ஒரு நட்புறவு வளர சாத்தியமாகிறது. அந்த நிறுவனத்தில் ஒரு பிடிப்பும் ஈடுபாடும் ஏற்படுகிறது. அதனால் அங்கு பணியாற்றும் மேலாளரிடம் நீண்ட நாள் தொடர்ந்து வேலை செய்ய வாய்ப்பு ஏற்படுகிறது.

அந்த பாராட்டுதலால், நன்றி சொல்வதால் ஏற்பட்ட மகிழ்வும் நிறைவும் அவனுக்கு அவன் செய்யும் வேலையின் மதிப்பை அவனுக்கு உணர்த்துவதாய் இருந்தன. இந்த உணர்வுகள் ‘செய்யும் தொழிலே தெய்வம் ‘ என்பதை உணர்த்துவதாய், அவனது வேலையை புனிதமாய் நோக்க வைப்பதாய் இருந்தன. இந்த எண்ணங்களால் ஏற்பட்ட திருப்தி அந்த மேலாளரிடமும், அவரைச் சார்ந்த நிறுவனத்திடமும் ஒரு நன்றியுள்ளவனாய் ஆக்க வைத்தன. இந்த மகிழ்ச்சியான எண்ணங்கள் அவனுள் வளரும் போது, அவன் செய்யும் வேலையை இன்னும் திறம்படச் செய்ய வைப்பதாய் இருந்தன. இந்த ஆக்க பூர்வமான உணர்வுகள், அவன் செய்யும் வேலை மற்றும் அந்த நிறுவனத்தின் மதிப்பை உயர்த்தியதால், அவனுக்குள் பெருமை பொங்கியது. அங்குள்ள சக ஊழியர்களை ஒரு மதிப்புடன் எதிர்நோக்கவும், அவர்களிடம் நன்றி சொல்லவும் பாராட்டவும் முடிந்தது.

Series Navigation

பாரி பூபாலன்

பாரி பூபாலன்