அழியா எழில்

This entry is part [part not set] of 41 in the series 20030904_Issue

புகாரி, கனடா


சந்தனப் பேழைகள்
சிந்தினவோ
சாயங்காலமாய்ப் பூத்ததுவோ ?
சிந்தையில் மணக்கும்
அவ்வேளைதனில்
சீட்டியடித்து நான் புறப்பட்டேன்

தந்தங்கள் இல்லா
யானைகளாய்
தரிசனம் தந்தன மாமலைகள்
சிந்துகள் பாடியே
அருவிமகள்
சித்திரம்போல் மண் மடிவீழ்ந்தாள்

0

வந்தனம் பாடிய
வண்டுகளோ
வந்த என் வரவை ஆதரிக்க…
எந்தவோர்ப் பூவினில்
ராஜவண்டு
எத்துணை சுகங்கள் அள்ளிடுமோ

அந்த நற்பூவின்
மனதினைப்போல்
ஆனந்தமாய் நான் நன்றியென்றேன்
வந்ததும் கண்களைத்
தேனமுதாய்
வருடியப் பசுமைகள் வாழ்கவென்றேன்

0

துள்ளித் துள்ளியோர்
மான்கன்று
தூரத்தில் ஓடிய அழகு சொர்க்கம்
அள்ளித் தெளித்தச்
சந்தனமாய்
அங்கோர் அழகுப் பூந்தோட்டம்

சொல்லிச் சிரித்திடக்
குரங்குகளோ
சொடுக்கிடும் பொழுதில் என் பழந்திருடி
தள்ளி நின்றவோர்
நெடுமரத்தின்
தனிந்த கிளையினிற் தாவினவே

O

சில்லென வீசியக்
குளிர்வாடை
சிலிர்த்திட வைத்தது என்னுயிரை
நில்லெனக் கூவிட
வேண்டும் வண்ணம்
நிலைத்துப் பொழிந்தது பனித்தூரல்

உள்ளமோ மகிழ்வின்
உச்சியிலே
உடலோ ஆடிட வாடையிலே
இல்லை இச்சுகத்துக்கு
ஈடுயிணை
இடிபடும் பட்டிணத் தெருக்களிலே

O

மன்மத அம்புகள்
எய்தவண்ணம்
மாலையும் இரவாய் மாறிவர
வண்ண நிலவோ
மலைமுகட்டில்
வந்து வனப்பாய் நின்றிருந்தாள்

இன்று ஏன்
புதிதாய் அம்புலிக்கு
இல்லாப் பொலிவு வந்ததென்றே
கண்ணிமை அசைக்க
நான்மறந்து
கண்ணுக்குள் ஏந்திக் களிப்படைந்தேன்

O

கண்களை மூடிட
கிடைத்ததங்கே
கனவினில் வருகிற தனியில்லம்
எண்ணும் போதே
மனம் சிலிர்க்கும்
இரவின் தனிமையில் என் வீட்டின்

முன்னும் பின்னும்
ஏதேதோ
முரட்டுக் காலடிச் சத்தங்கள்
கண்களைச் சுருக்கி
சன்னல்வழி
கண்டேன் ஓரிரு கரடிகளை

O

மெல்லப் புலர்ந்ததும்
அதிகாலை
மேனியிற் புதியதோர் மினுமினுப்பு
வெள்ளை வெள்ளையாய்ப்
புகைபோலே
முல்லையில் நெய்த குடில்வனப்பில்

பள்ளியறை என
முகிலினங்கள்
படுத்து உறங்கின மலைமுகட்டில்
அள்ள அள்ள
அவ்வழகெல்லாம்
அடிமனம் வரைக்கும் பாய்ந்தனவே

O

மெள்ளத் துள்ளிநான்
ஆடியோடி
மிதந்தேன் அருவியின் மடியினிலே
சொல்லி முடியாச்
சுகங்கோடி
சொர்க்க வெளியில் எனைத்தள்ளி

இல்லை இல்லை
நான் திரும்பவில்லை
எனக்கிம் மலையே யாவுமென
சொல்லி விடடா
ஊருக்கென
சொல்லின சுகங்கள் சுகங்களெங்கும் !

*

புகாரி, கனடா
buhari@rogers.com

Series Navigation

புகாரி

புகாரி