மான மிருந்தால், மங்கையரே!

This entry is part [part not set] of 40 in the series 20030809_Issue

ஜோதிர்லதா கிரிஜா


‘மனைவியல்லா மற்ற பெண்கள்
மாதாவென நினைக்கின்றோம் – ஆனதனால்
அயல் பெண்கள் தமை நாங்கள்
அம்மாவென் றழைக்கின்றோம்
இது எங்கள் இனிய பண்பாடு – இதனைப்
பொதுமறையாய்க் கொண்டதெம் நாடு! ‘
என்றிங்கே கதைக்கின்றோம்.

மனிதகுலத்தின் சரிபாதி மங்கையர்க்கு
‘இனிதான பாதி ‘ யெனும் பொருள்படவே
‘பெட்டெர் ஹாஃப் ‘ (better half) எனும் பேரவர்க்கு
இட்டவரைச் சிறப்பித்தார் –
பொருத்தமாய் மேநாட்டார்.

ஆனாலும் –
பார்முழுதும் பாவையர்க்கு முகவாட்டம்
பறிக்கப்பட்ட உரிமைகட்கு இன்றவர்தம் போராட்டம்.

நம் நாட்டில் –
எண்பதுக்கும் மேலான ஆண்டுகளாய்
இருந்துவரும் சாபக்கேடு
கண்பிதுக்கும் வரதட்சினை
என்னுமிந்தக் கொடுங்கேடு.

ஐம்பதுக்கும் மேலான ஆண்டுகளாய் –
அண்ணல் காந்தி தொடங்கிவைக்க –
எண்ணிறந்த சான்றோர்கள் – இதை
எள்ளிப் பேசியுள்ளார்
எதிர்த்துமே எழுதியுள்ளார்
மேடைகளில் இதைச் சாடி முழங்குகிறார் இன்றும் பலர்
ஏடுகளில் எண்ணிறந்தோர் எதிர்த்திதனை எழுதுகின்றார்.

காந்தி சொன்னார் –
பெண்ணை மணப்பதற்குப்
பொன்னும் பொருளும் தரக்கேட்டு
உள்ளங்கை விரிக்கின்ற இளைஞர்கள்
உலுத்தார்கள் – மனிதரல்லர்;
காசுகேட்டுப் பேரம் பேசும் இவர்களெல்லாம்
மாசுபடிந்தோர், மானமற்றோர் – மாந்தரல்லர்! ‘

மருமகளாம் தனக்கொருநாள் சிறுமைகள் இழைத்திட்ட
மாமியாரைப் பழி தீர்க்கும் மாமோச எண்ணமதில்
மகன் விரும்பும் மங்கையிடம் ‘மஞ்சள் நிற ‘ அணிகலன்கள்
‘வெள்ளைப் ‘ பாத்திரங்கள், பல ‘பச்சை ‘ நோட்டுகள்
வெட்கமெனும் உணர்வற்று வாய்விட்டுக் கேட்கிற தாய்
பெற்றுத்தந்தாள் அவப்பெயரைப் பெண்களுக்குத் தலைகுனிவாய்
பெண்களுக்குக் கேடு செய்வோர் பெண்கள்தான் நிச்சயமாய்
ஆண்களல்லர் ஒருபோதும் அறிந்திடுவீர் என்கிறதாய்!

உண்மை இதில் ஓரளவு உள்ளதனால், உறுதியற்ற ஆண்களெல்லாம்
ஒளிந்துகொண்டு இதன் பின்னால் ஒதுங்குகிறார் தந்திரமாய்!

அற்பப் பொறாமைகள் பெண்டிர்க்கே உரிய குணம் – ஆனதனால்
ஐந்திருமாதங்கள் சுமந்து பெற்ற பிள்ளையினை
அயல்பெண்ணொருத்தி வந்து அபகரித்துக் கொள்வதனை
அவள் தாங்கமாட்டாமல் விலை பேசமுற்பட்டாள்!

தானே பெண்ணினும் உயர்ந்தவன் என்பதாய்
ஆணென்போன் தன் தோள்வலியால்
பெண்ணை நம்ப வைத்ததன் விளைவாய்ப்
பெண்ணினும் உயர்ந்தவனை தானமாய்த் தரமறுத்துப்
பொன்னும் பொருளும் கேட்கலானாள்
ஆணைச் சுமந்து ஈன்ற தாய்!

யானை பதினெட்டுமாதம் குட்டிதனைச் சுமக்கிறதாம்:
யாரிடம் கைநிட்டி அது வரதட்சிணை கேட்கிறதாம் ?

பெண்களின் கண்திறக்கத் தேவையாம் கல்வியினை
ஆண்களன்றோ மறுத்திட்டார் ? – அவர்தம்
கண் அவிய வித்திட்டார் ?

பெண்ணைப் பெற்றவனைப் பொன்னும் பொருளும் கேட்டுக்
கொள்ளையடிப்பதற்கே அவள் தீட்டும் திட்டமதில் – இவன்
பேடியாய்ப் பேதையாய்ச் செயலற்று நிற்பதென்ன –
தாடி, மீசை, கிருதாக்கள் தாராளமிருந்தபோதும்!
ஐந்துமுதல் இருபத்தைந்து வரை அம்மா-அப்பா கட்டளைகள்
அனைத்தையுமே சாடிடுவான், அதிலெல்லாம் பேடியல்லன்!

சம்பளத்தில் பாதியைத்தான் செலவுக்குத் தந்திடுவான்
‘என் பணம் ‘ எனக்கூறி மீதியைத்தான் வைத்திடுவான்.

இன்னும் பலவிதமாய் அருமை மகன் தன்
அம்மா கிழிக்கின்ற கோடுகள் அத்தனையும் அழித்திடுவான் – இன்றேல்,
சும்மா அவற்றைப் பழித்திடுவான்

அம்மகனைப் பெற்றவளை
அடக்கிடுவான் மற்றபலவற்றிலும்
அவளுக்குத் தாலிகட்டி
அந்த நாள் தன் மாமனாரை
முடக்கி வதைத்திட்ட
அவள் கணவன் – இவன் அப்பன்.

ஆனால் –
வரதட்சிணை எவ்வளவு
கறக்கவேண்டும் எனும் கேள்வி
இந்த நாள் எழுகின்றபோது மட்டும்
தடக்கென்று விழுந்திடுவான் மகன் என்போன்
முழு உரிமையும் தாய்க்கு அளித்து!
கொழுநனோ ஒதுங்கிடுவான் பல்லிளித்து –
மழுங்குவதால் அவன் அறிவு!
உழைக்காமல் வரும் காசைச்
சளைக்காது பொறுக்கும் ஆசை!

ஆண்மை இல்லை ஆண்களுக்கு –
ஆசைகள் அறிவினை மழுக்குவதால்.
அன்னைமீதும் தந்தை மீதும் அடாது பழிசுமத்தி
வேசைபோல் நடக்கின்றார்.

‘படுப்பதற்கு என்னுடன் ஓர் இரவு
கொடுத்திடுக பத்து ரூபாய் ‘ என – விரல்
சொடுக்கிக் கேட்பவள் ‘விபசாரி ‘.

‘படுப்பதற்கு என்னோடு பல இரவு
கொடுப்பாயா பல்லாயிரம் ? ‘ எனக்கேள்வி
விடுப்பவன் என்ன ‘சாரி ‘ ? ‘

என்றெல்லாம் எகத்தாளிச் சொல்லம்பு எறிந்தாலும்
குன்றிமணி அளவுகூடக் கூச்சமில்லை இவர்தமக்கு! மலக்
குன்றுகளைக் கிளறித் தின்னும்
பன்றிகளே இவர்களெல்லாம்!

ஆனதனால் –
நாணம்கெட்ட இவர்தம்மை
நம்பி இனிப் பயனில்லை.
ஆண்மை என்பது பெண்மைதனை அரவணைக்கும்;
மென்மையாய் அவர் தம்மைப் பாதுகாக்கும்
என்றல்லோ இதுகாறும் எண்ணி இருந்திட்டோம் ?
இன்றிவர்தம் உண்மை நிலை நன்றாய் அறிந்திட்டோாம்.

நிதிகள் மீதுள்ள ஆசையினால்
நீதிகள் செத்துவிட்ட நிணங்கள் இவர்!

எனவேதான் –
நம்பிப் பயனில்லை இவர்தம்மை இனி என்றும்!
பொங்கி யெழுந்திடுவோம் பொறுத்தது போதுமென்று.

மானமிருந்தால், மங்கையரே!
‘தானமாய் இனி என்றும் தாரோம்
பணமோ, பொருளோ வரதட்சிணையாய்;
உணர்வும் உயிரும் உடைத்த எங்களை
மனிதராய் மதித்தால், மணம் பேசவாரும் ‘
என்பதாய் நீரென்று அறை கூவுவீரோ
அன்றுதான் உம் வாழ்வில் அறிவார்ந்த நாளென்று
என்றுதான் அறிவீரோ!

இன்றேல் –
காசு தந்து தாசியிடம் சுகம்காணும் ஆணுக்கும்
காசு தந்து கணவன் பெறும் கன்னியர்க்குமிடையே யாம்
தூசளவு வேறுபாடும் காண்கிலோம், காண்கிலோமே!

ஆனந்த விகடன் / 5.7.1981

jothigirija@vsnl.net

Series Navigation

ஜோதிர்லதா கிரிஜா

ஜோதிர்லதா கிரிஜா