மனம் தளராதே!

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

அனந்த்


என்றும் மனம்தள ராதே! – உனக்கு
…என்னால் வரும்தொல்லை எண்ணிஓயா தே (என்றும்..)

கோடிப் பிறவியாய்ச் செய்த- பிழை
… கோபுரம் போலக் குமிந்தென்னை எய்த
ஆடிநான் சாய்வதில் என்ன – பெரும்
…அதிசயம் ஆகையால் அன்றுநீ சொன்ன

வார்த்தை நினைவினில் கொண்டு – உன்னை
… வந்தடைந் தால்நீயோ வாய்மூடிக் கொண்டு
சோர்ந்து கிடக்கின்றாய் இன்று – நான்
… செய்திட்ட பாவத்தைக் கண்(டு)ஐயோ என்று

அஞ்சி நடுங்கிட லாமோ ? – நீயும்
… அற்ப மனிதர்போல் ஆகிடப் போமோ ?
கொஞ்சம் மனத்தினைத் தேற்று – என்றன்
… குறைகளை உன்னிரு காதினில் ஏற்று

ஆனை முதலையும் கூட – முன்னம்
… ஆற்றிய பாவத்தைத் தூக்கிநீ போடப்
போன கதைநெஞ்சில் எண்ணு – ஒரு
… போக்கற்ற என்மேல் தயவினைப் பண்ணு

வாழ்வினில் துன்பத்தைக் கண்டு- உன்றன்
… வாசலில் நிற்பவர் கோடியாய் உண்டு
தாழ்ந்துன்னைச் சார்ந்திடும் போது – அவர்
… தாபம்தீர்க் காவிடில் வந்திடும் வாது!

போட்டி உனக்கெவ ருண்டு ? – உன்றன்
…புகழை நிலைநாட்ட என்துணை கொண்டு
காட்டுஉன் வீரத்தை இன்று – நீ
… கடவுள்என் றால்என்னைக் காப்பாற்றல் நன்று! (என்றும்..)
ananth@mcmaster.ca

Series Navigation

அனந்த்

அனந்த்