மழை!

This entry is part [part not set] of 33 in the series 20091119_Issue

ஆர் பாலா


மழையே பெய்யாத ஊரில் வெக்கைக்காற்று தெருவெங்கும், ஏன் முடுக்குகள் தோறும் வேட்டை நாயைப்போலவும் இண்டு இடுக்குகளிலெல்லாம் இரவினில் அலையும் பெருச்சாளியைப்போலவும் அலைந்து கொண்டிருந்தது. பச்சை படர்ந்த மரங்கள் எதையும் பார்க்கமுடியவில்லை.இனிமேல் மழை வருமென்ற நம்பிக்கை எவருக்குமில்லை.பதின்ம வயது சிறுவர் சிறுமியர் மழையென்றால் என்னவென்றே அறியாமலிருந்தனர்.வெக்கை காற்றினெதிரே பனையோலை காற்றாடியை பிடித்துக்கொண்டோடிய சிறுவர் சிறுமியரின் தந்தைமார்கள் பட்டணத்தில் கூலி வேலையோ அல்லது கடை கண்ணியிலோ வேலைபார்த்து வந்தனர்.ஊர் திருவிழாவிற்கு அவர்கள் வரும் நாட்களில்தான் ஊரே சந்தோசத்திலிருக்கும். ஊரிலிள்ள எந்தக்கிணற்றிலும் தண்ணீரே இல்லை.சுற்றுச்சுவர்களில் வளர்ந்த ஆலஞ்செடிகள் கூட வளராமல் ஒரே அளவாயிருப்பதாய் தெரிகிறது.வெளிறிய வீதி வழியே பாதவெடிப்போடு வந்தவன் மாடக்கண்ணுவின் வீட்டு கூரையிலிருந்து குச்சியை ஒடித்து பல் குத்தியபடியே நின்றுகொண்டிருந்தான்.ஒட்டிய வயிறொடு பெண் நாயொன்று அதன் காம்புகள் அசைய அவனைக் கடந்து ஓடியது.ஓணான் ஒன்று வேகமாய் வீதியை கடந்து சென்றது.
“லேய், மேக்க நல்ல மழ தெரியுமால” என்றார் மாடக்கண்ணு தாத்தா.

வயத்தெரிச்சல கெளப்பதையும் ஓய்,ஒமக்கென்ன கண்குளிர மழய பாத்தவரு” என்றபடி நகர்ந்தான்

“ஆமால போ…போ…,மோட்டுல இருக்க கலப்பைய பக்கும் போதெல்லாம் வெப்புறாளமா வருது”வந்தவன் ஏதோ முனங்கிக்கொண்டே தெருவைத்தாண்டி எங்கோ மறைந்துவிட்டான்.

ஊரிலுள்ல குளம் மற்றும் வயல் வெளியெல்லாம் உடை மரம் முளைத்திருந்தது. அவற்றினூடே காடை,கவுதாரி சில சமயம் செண்பகம் போன்றவை பறந்து திரிந்தன.எங்கிருந்தோ வரும் வேட்டை நாய்கள் சில வேளைகளில் கவுதாரி குஞ்சுகளை கவர்ந்து சென்றன.

மாடக்கண்ணு கோவில் கல் திண்ணையில் படுக்கச்சென்றார் . திண்ணை குளிர்ச்சியாயிருந்தது .கன்னம் திண்ணையில் உரச படுத்துக்கிடந்தார்.ஆங்காங்கே எறும்புகள் வரிசையாய் சென்றுகொண்டிருந்தன.கோவிலை ஒட்டிச்செல்லும் தெருவில் யாரோ நடந்து செல்வது போலிருந்தது.

கூவி அழைத்தார்.

“என்ன பாட்டா காலைலே படுத்தாச்சு?”

“யாருடே பெருமாளா…?நமக்கு வேற எங்கடே போறது?”

“காலைலே வெக்கய பாத்தேரா ஓய்?”

“என்ன எளவுக்குன்னே தெரியல வெயிலு இந்த போடு போடுது”” ஆமா ஆடெல்லாம் வித்து போட்டியாமே?”

“குட்டி,பெரிய ஆடு எல்லாத்தையும் வித்தாச்சு பாட்டா.சவத்து எளவு திடீர்னு செத்து போவுது ஓய்”

“இனி பொழப்புக்கு?”

“எல்லாவனும் ஆடு வளத்தா பொழைச்சுகிட்டுருக்கான்.கோயில் கொட முடிஞ்ச்தும் நாமளும் அவனுவள மாதிரி கடைகளுக்கு போக வேண்டியதுதான்”.

“சரி பாட்டா நான் கெளம்புதேன்”

ஊரில் திருவிழா முடிந்து இரண்டு நாளாகியிருந்தது. எல்லோர் வீடும் வண்ண மயமாயிருந்தது.மிட்டாய்கள்,கோழிக்கறி,துணிமணிகள்,ஆண்களாயின் மதுவுடனும் பெண்கள் புது நகைகளுடனும் சந்தோசமாயிருந்தனர்.ஆனாலும் வெக்கை மட்டும் குறைந்தபாடில்லை.கிராமத்திலுள்ள அனைத்து பெண்களும் தத்தம் கணவன்மாரிடம் தங்களையும் ,குழந்தைகளையும் பட்டணத்திற்கு அழத்துச்செல்லும் படி வற்புறுத்தினர்.

ஆண்கள் வழக்கம் போல முடியாதெனவும் அதிலுள்ள செலவுச்சிக்கலையும் கூறி சமாதானப்படுத்தினர்.முன்னிலும் வேகமாக வெக்கை தாழ்வாரங்களிலிருந்து வீட்டினுள் இறங்கி வந்தது.குடிநீரெல்லாம் எறும்புகள் அப்பிக்கிடந்தன.சிலந்திவலைகள் சிலந்தியின்றி வெறுமையாயிருந்தன.

தெருவானது பகலில் பெருங்குரலெடுத்து அழுவது போலிருந்தது।குழந்தைகள் வெளியே வர அஞ்சினர்.மக்கள் நடமாட்டத்தை மாலையில்தான் காண முடிந்தது.சிறுமிகள் சிறு குழுக்களாய் விளையாடிக்கொண்டிருந்தனர்.கோழி ஒன்று குப்பையை கிளறிக்கொண்டிருந்தது.எல்லாமே வழக்கம் போலத்தான் இருந்தது.சிறுவர்கள் சிலர் நாயைத்துரத்தியபடி ஓடிச்சென்றனர்.

நத்தை,மழைப்பூச்சி,ஈசல்,கரையான் போன்ற சொற்களை மக்கள் மறக்கத்தொடங்கியிருந்தனர்।நாளுக்கு நாள் வெயில் உக்கிரமாவது போல் தோன்றியது.எப்போதும் வெக்கை. இரவினில் எல்லோரும் விட்டு முற்றத்தில் சாக்கின் மேல் படுத்து தூங்கினர்.சிறுமிகள் நட்சத்திரங்களை எண்ணியபடி உறங்க பழகியிருந்தனர்.மாடக்கண்ணு தாத்தா ஒவ்வொரு நாளும் அடிக்கடி வானத்தை பார்த்து மழை வருமா என போவோர் வருவோரிடெமெல்லாம் கேட்கத்தொடங்கியிருந்தார்.
ஒருநாளும் இல்லாத திரு நாளாய் வெயிலின் சீற்றம் சற்று குறையத்தொடங்கியிருந்தது.பறவைகள் சிறகடிப்பும் அதன் கீச்சுக்குரலும் கேட்கும்படி மேலே பறந்து சென்றன।குழந்தைகள் வெளியெ விளையாடிக்கொண்டிருந்தனர்। ஆண்கள் வீட்டினுள் பெட்டியில் பொருட்களை அடுக்கியபடியிருந்தனர்। பெரியவர்களும் பெண்களும் ,”அதை வச்சாச்சா? இதை வச்சாச்சா ” என நினைவூட்டிக்கொண்டிருந்தனர்.
மாலையில் சற்று குழுமையான காற்று வீசியது.பின்னர் ஒன்றிரெண்டாயும் சீராகவும் விழுந்த துளி பெரு மழையாய் மாறியது.இரவு நடுநிசியிலும் மழை உக்கிரமாய் ஊரை விழுங்கும் உத்வேகத்துடன் பெய்தது.நெடுநாட்களுக்குப்பின் அனைவரும் வீட்டினுள் உறங்கினர்.மாடக்கண்ணு தாத்தா திண்ணையிலிருந்து ஆசைதீர மழையை பார்த்துக்கொண்டிருந்தார்.அதை முழுவதும் பருகும் உத்வேகத்துடன் கண் இமைக்காமல் அதையே பார்த்தபடியிருந்தார்.

Series Navigation

ஆர் பாலா

ஆர் பாலா

மழை

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

சூர்யா லட்சுமிநாராயணன்


குளிர்ந்த நீரின் முதல் துளி உடலின் மேல் தோலை ஸ்பரிசிக்கும் சில்லென்ற முதல் உணர்வு அனுபவிக்கும் ஆசை பிறந்த முதல் பருவம் இளம் பருவம். 6 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது. மாலை நேரம் ஆசிரியர் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். மணி 3.45 ஐ தொட்டது. ஆசிரியருக்குத் தெரியாமல் புத்தகங்களையெல்லாம் பைக்குள் திணித்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால் 4 மணிக்கு பள்ளி விட்டுவிடும். அந்த மணி அடிக்கும் சப்தம் தேனாக காதில் ஒலிக்கும். அந்த சந்தோஷத்தை அனுபவிக்க தயராகிக் கொண்டிருந்தேன். நான் மட்டுமல்ல எல்லோரும் அப்படித்தான். 3.45க்கு மேல் பாடம் நடத்துவது வீண் என்பது ஆசிரியருக்கும் தெரியும். அவரும் அணிச்சையாக பாடம் நடத்துவதை நிறுத்தி விடுவார். எத்தனை வருட அநுபவம் அவருக்கு. மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. வெளியே அரை அடி உயரத்திற்கு நீர் தேங்கியிருந்தது. அதில் விளையாடுவதே ஒரு தனி சுகம் தான். செருப்பை தயாராக கையில் எடுத்து வைத்துக் கொண்டேன். கடவுளிடம் வேண்டிக் கொண்டேன், மழை அடுத்து ஒரு மணி நேரத்துக்கு விடாமல் பெய்ய வேண்டும் என்று.

உலகெங்கும் சுதந்திர நாட்டம் எப்பொழுது ஏற்படுகிறது தெரியுமா? அடக்கப்படும் பொழுதுதான். அடிமைத் தனம் என்பது அளவில் வேண்டுமானால் வித்தியாசப்படலாம். ஆனால் உணர்வைப் பொறுத்த வரை அனைத்தும் கசப்பானவைதான். நான் இன்னும் 15 நிமிடத்தில் விடுதலையடையப் போகிறேன் என்ற சந்தோஷம் எந்த விதத்திலும் குறைந்ததில்லை. என்னை வரவேற்க மழை தயாராக பொழிந்து கொண்டிருந்தது. எனக்கே எனக்காக மட்டும். மற்ற யாரும் தயாராயில்லை. அனைவரும் குடை, மழை அங்கி என தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

ஒவ்வொரு பள்ளியிலும் நல்ல திடகாத்திரமான விளையாட்டு வீரர்களை தேர்வு செய்ய வேண்டுமானால். மாலை நேரத்தில் பள்ளியின் மணி அடிக்கும் நேரத்தில் வாசலின் அருகே நின்று கொள்ள வேண்டும். அந்த மணி அடிக்கப்பட்டதும் சுதந்திரம் அடைந்துவிட்ட மகிழ்ச்சியில் தலைதெறிக்க ஓடி வருவார்கள் பார்க்க வேண்டுமே? சிறந்த 100 மீட்டர் ஓட்டப்பந்தய வீரர்கள் எல்லாம் நமது நாட்டிற்கு அங்கு தான் கிடைப்பார்கள். வீட்டிற்கு சென்று அப்படி ஒன்றும் செய்துவிடப்போவதில்லை. இருப்பினம் பள்ளியை விட்டு வெளியேறுவதில் அப்படி ஒரு ஆவேசம் பிறக்கும். நான் இன்று விடுதலை அடையப் போகும் ஆனந்தத்துடன் காத்திருந்தேன். காரணம் மழை. அதில் நனைவது என்பது குதூகலமான விஷயம்.

மணி அடிக்க இன்னும் 2 நிமிடம் தான் நான் வாசலின் அருகே நகர்ந்து நகர்ந்து போய் உட்கார்ந்து கொண்டேன். ஆசிரியர் அதை கவனித்துவிட்டார். என்னை எச்சரித்தார். நான் அதை பொருட்படுத்தவில்லை. ஏனென்றால் இவ்வாறு எச்சரிப்பது முதல் முறை அல்ல. எனக்கு பழகிவிட்டது. நியாயமாக அவருக்கு அலுத்திருக்க வேண்டும். அப்படி என்ன பிடிவாதமோ.?

ஏனோ இன்று மணி அடிக்க வேண்டிய நேரத்தில் அடிக்க வில்லை? இரண்டு நிமிடம் அதிகமாகிவிட்டது. இரண்டு நிமிடத்தின் முக்கியத்துவம் தெரியாதவர்கள். திடீரென்று இன்டர்காம் ஒலித்தது. மழை அதிகமாக பெய்வதால் இன்று அரை மணி நேரம் கழித்துதான் பள்ளி விடப்படும் என்று அந்த தலைமை ஆசிரியர் அறிவித்து விட்டார். எனது ஆசையில் கிலோ கணக்கில் மண்ணை அள்ளி போட்டு விட்டார். வேறு என்ன செய்ய முடியும். வாசலின் ஓரமாக உட்கார்ந்து கொண்டு ஏக்கத்துடன் மழை பொழிவதை பார்த்துக் கொண்டிருந்தேன். மழையின் வேகம் மேலும் அதிகரித்தது. சற்றும் குறைவதாக இல்லை. சிறுவன் என்பதால் எனக்கு கோபம் வரக்கூடாது என்று நீங்கள் நினைத்தால் அதை நான் வண்மையாக கண்டிக்கிறேன். என்றாவது ஒரு நாள் அநத தலைமை ஆசிரியரின் வழுக்கைத்தலையில். என்னால் எரியப்படப் போகிற அந்த வலிமையான பொருள் மோதி பெருஞ்சேதத்தை ஏற்படுத்தத்தான் போகிறது. ஏக்கமும் கோபமும் சேர்ந்து என்னை நிலை குலைத்துக் கொண்டிருந்த நேரத்தில் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை திடீரென்று மணி அடித்து விட்டார்கள். மழை லேசாக குறைந்திருந்தது. எழுந்து தலை தெறிக்க ஓடினேன். எனது பை ரெயின் ப்ரூப் பை என்பதால் புத்தகம் நனைந்து விடும் என்ற கவலை எனக்கில்லை. சந்தோஷமாக நனைய ஆரம்பித்தேன். ஒவ்வொரு மழைத்துளியும் எனது உயிர் வரை சென்றது. ரசனை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். ஏக்கத்தின் விளைவு. இன்று நான் நன்றி சொல்கிறேன் அந்த தலைமையாசிரியருக்கு, என்னை அந்த அளவுக்கு ஏங்க வைத்தவர் அவர் தானே? அவர் தலை தப்பித்தது இதனால் தானோ என்னவோ. அவர் செய்த தர்மம் அவர் தலையை காத்தது.

காதலியின் முதல் ஸ்பரிசத்துக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை மழையின் முதல் ஸ்பரிசம். எனது 22 ஆவது வயதில் அவளை சந்தித்தேன். பிரீத்தி. லவ் அட் பஸ்ட் சைட் என்பது எவ்வளவு உண்மை. மழைத்துளிக்கு பின் என் உள் வரை சென்ற மற்றொரு விஷயம் அவளது பார்வை. உள்ளே, உள்ளே, உள்ளே…….. ஆழமாக அவளது பார்வையும். மழைத்துளியும் சந்தித்துக் கொண்டன. 22 வயதில் ஆரம்பித்தது 24 வயது எப்பொழுது ஆனது என்றே தெரியவில்லை. நான் முழுமையாக காதல் செய்தேன். நான் வாழ்க்கையில முழுமையாக செய்த ஒரே விஷயம் இது தான். காதல் என்றாலே அது முழுமைதான். அது அறைகுறையாக இருக்க முடியாது.

காலை 9 மணி ஆனால் என்னை எங்கு பார்க்க வேண்டும என்று கிட்டத்தட்ட எல்லோர்க்கும் தெரிந்து விட்டது. அது அவள் கல்லூரி செல்லும் வழியில் இருக்கும் டீ கடை. ஒரு நாள் கூட ஆப்சன்ட் கிடையாது. அதே போல் மாலை நேரமும். என்னை வெகுவாக அலைய வைத்துவிட்டாள் அவள். அவளுக்கு சிறிது கூட மனசாட்சி இல்லை ஒன்றரை ஆண்டுகளாக . ஆனால் அதன் பின் அவள் மனசாட்சி தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டது. அவள் மனசாட்சியை விழிக்கச் செய்ய எவ்வளவு ரத்தம் சிந்த வேண்டியிருந்தது. ம்….. சற்று வலிக்கத்தான் செய்தது. சிந்திய ரத்தத்தை மையமாக பயன் படுத்தி அந்த கடிதத்தை எழுதி முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

நான் வாழ்க்கiயில் அதிகம் எரிச்சலான சமயங்கள் என்று கணக்கெடுத்தால் அதில் இந்த சம்பவமும் இடம் பெறும். கையை காயப்படுத்தி வலிந்த ரத்தத்தில் கடிதம் எழுதிக் கொடுத்தால். அவள் அதை வாங்கி படித்துப் பார்த்துவிட்டு பிழை திருத்திக் கொண்டிருக்கிறாள். ஒரு மனிதனால் எவ்வளவுதான் பொருத்துக் கொள்ள முடியும். பின்னர் திருமணத்திற்கு பிறகு இது குறித்து கேட்ட பொழுது இவ்வாறு கூறினாள். அதை சிவப்பு மை என்று நினைத்துவிட்டதாக. அதன் பிறகு தான் எனக்கே இந்த ஐடியா வந்தது. சிவப்பு மையில் எழுதிவிட்டு ரத்தம் என்று பொய் சொல்லியிருக்கலாமோ என்று கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்து என்ன பிரயோஜனம்.

அதன் பின் பல்வேறு சாகசங்கள் செய்து அவளை மடக்கிவிட்டேன். பின் தான் தெரிந்தது குடும்பம் நடத்த வேண்டுமென்றால் வேலை என்று ஒன்று வேண்டும் என்று. எனக்கு ஆச்சரியமாக உள்ளது. எப்படி இதை நான் இந்த 2 வருடங்களில் யோசிக்கவேயில்லை என்று. பின் கடினமாக போராடி பொழைப்பை தேடிப் பிடிப்பதற்குள் செத்துப் பிழைக்க வேண்டியதாகப் போய்விட்டது. ஒரு வருடமும் ஓடிவிட்டது. விஷயம் வீட்டிற்கு தெரிந்து பெரிய பிரச்சனையாகிவிட்டது. காதல் விஷயம் வீட்டிற்கு தெரிந்து பிரச்சனையாகாமல் இருந்தால் பூமி அல்லவா அழிந்துவிடும். நான் என்ன வேறு மாதிரியாகவா யூகிக்க முடியும். முன்பே தெரிந்தது தான். ஏற்கனவே திட்டங்கள் எல்லாம் தயாராக இருந்தன. வீட்டிலிருக்கும் வில்லன்களுக்குத் தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வது தான். இது பழைய ட்ரிக் தான் என்றாலும் நல்ல பலன் கொடுக்கும் என்பதால் அதிகமாக யோசிக்கவில்லை.

அன்று மழை பெய்து கொண்டிருந்தது. நான் வேலை பார்க்கும் சென்னையிலேயே வீடு பார்த்து விட்டேன். திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக வேண்டியது தான் இனி செய்ய வேண்டிய ஒரே வேலை. ஆனால் நடந்ததோ? பொன்னம்பலத்தை நினைவு படுத்தும் அவளது அப்பன். விஷயம் தெரிந்து மருந்தை குடித்துவிட்டானாம். அவளும் தந்தை பாசத்தில் மயங்கி வீட்டிலேயே இருந்து விட்டாளாம். விஷயம் நண்பன் மூலமாக எனக்கு வந்தது. எனக்கு அந்த நேரம் அந்த மழை சுகமானதாக இல்லை. உடலில் அமிலத்தை ஊற்றுவது போல் இருந்தது. என் உயிரின் ஆழம் வரை சென்ற அந்த மழை இன்று என் தோலில் படுவதே எரிச்சலைக் கொடுத்தது. என் கண்ணீருடன் மழை நீரும் கலந்து காணாமல் போனது. அன்று நான் ரயில்வே ஸ்டேசனில் மழையில் நனைந்தபடி 4 மணி நேரமாக நின்றிருந்தேன். இரயிலும் என்னை கடந்து சென்று விட்டது. வெகு நேரமாக எதையோ வெறித்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு

சென்னையில் என் நண்பர்களுடன் அன்று தான் சினிமாவுக்குப் போயிருந்தேன். சினிமாவில் விஜயகாந்த் பொன்னம்பலத்தை போட்டு புரட்டி எடுத்துக் கொண்டிருந்தார். என்னால் சந்தோசப்படாமல் இருக்க முடியவில்லை. என்ன ஒரு குத்து. அந்த மூக்கிலிருந்து ரத்தம் பொல பொலவென வலிந்த பொழுது. ஆகா என் ஆத்மா சாந்தி அடைந்தது.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு வீட்டிலிருந்து போன் வந்தது உடனே வீட்டிற்கு வருமாறும் காரணம் கேட்க வேண்டாம் என்றும் விஷயம் சீரியஸ் என்றும். நான் பதறியடித்துக் கொண்டு ஓடினேன். விஷயம் உண்மையிலேயே சீரியஸ்தான். அங்கு எனக்கு திருமணப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. 8 மாதங்களுக்கு முன் மருந்தைக் குடித்த பொன்னம்பலத்தான் இன்று என்னை மாப்பிள்ளை கேட்டு வந்திருக்கிறான். அவன் பெண்ணின் காதல் விஷயம் ஊர் முழுவதும் தெரிந்து யாரும் பெண் கேட்டு வரவில்லையாம். என் பெண்ணின் வாழ்க்கையையே கெடுத்து விட்டீர்களே என்று என் தந்தையிடம் வந்து புலம்பியிருக்கிறான். அவனை நாலு அப்பு அப்பிவிடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் மேலும் சில விஷயங்கள் அறிந்து நான் அமைதியாகிவிட்டேன். அவளும் இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றிருக்கிறாள். அவளது கல்லூரி மேற்படிப்பும் வீணாகிப் போனது.

சில மாதங்களுக்குப் பிறகு திருமணமான புதிதில் அவளுடன் ஊட்டிக்கு சென்றிருந்தேன். சென்னை வெயிலின் அருமை அங்குதான் புரிந்தது. இனிமேல் சும்மா சும்மா சென்னை வெயிலை திட்டக் கூடாது என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டேன். ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வதில் அப்படி என்னதான் பிரச்சனை இருக்கிறது என்று இன்றளவும் எனக்குப் புரியவில்லை. கிராமங்களில் பசுக்களை சினைக்கு அழைத்துச் செல்வார்கள். அந்த பசுவுக்கு தான் எந்த எருதுடன் சேரப்போகிறோம் என்று தெரியாது. அதற்கு 5 அறிவு என்பதால் எந்த உணர்வும் அற்று இருக்கும். ஆனால் மனிதனுக்கு ஆறு அறிவு இருந்தும். அவன் மாட்டைப் போலவே மனிதனையும் நடத்துகிறான். ஆண் பெண்ணைப் பார்க்கக் கூடாது, பெண் ஆணை பார்க்கக் கூடாது. பேசக் கூடாது, பெரியவர்களாக பார்த்து பேசி ஏற்பாடு செய்வார்கள். பெண் என்பவள் தலையை குனிந்து தாலியைக் கட்டிக் கொள்ள வேண்டும். பின் ஐயர் குறித்துக் கொடுத்த நல்ல நேரத்தில் சாந்தி முகூர்த்தத்தை முடித்துக் கொள்ள வேண்டும். முன் பின் பார்த்து பேசியறியாத ஒரு ஆணுடன், முதலிரவு அன்று தனது பாலுணர்வை தனித்துக் கொள்ள வேண்டும் என்று அனுமதி அளிக்கும் இந்த சமுதாயப் போக்கு மாட்டையும், மனிதனையும் வித்தியாசமின்றி நடத்துவதன்றி வேறு எப்படி எடுத்துக் கொள்ள முடியும்.

ஆனால் எனக்கும் பிரீத்திக்கும் அப்படிப்பட்ட பிரச்சனைகள் எதுவும் இல்லை. நாங்கள் ஒருவரையொருவர் முழுமையாக காதலித்திருந்தோம். நாங்கள் நல்ல மழைக் காலத்தில் ஊட்டிக்கு வந்து விட்டதால் எங்களால் வெளியே சுற்றிப்பார்க்க முடியவில்லை. ஊட்டியில் அந்த குளிரில் மழையில் நனைந்தால் அது என் உயிர் வரை செல்லாது. என் உயிரை எடுத்துச் சென்று விடும். அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்துவிட்டு சென்னை வந்து சேர்ந்தோம். அடுத்த மழைக்காலத்துக்குள் பிரீத்தி கருவுற்றிருந்தாள். சென்னையில் மழை பெய்தால் இரு சக்கர வாகனத்தை விட்டுவிட்டு, படகுக்கு மாறிவிட வேண்டும். அதோடு நீச்சலும் கற்றிருக்க வேண்டும். ரோட்டில் செல்லும்பொழுது ஒரு குச்சியை கையில் வைத்துக் கொள்வது நல்லது. ஆர்மியில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு கன்னிவெடியை கண்டுபிடிப்பதற்காக முன்னாள் குத்திக் கொண்டே செல்வார்கள். அது போன்று முழங்கால் வரை தேங்கி நிற்கும் தண்ணீரில் முன்னாள் குத்திக் கொண்டே செல்வது நல்லது. இல்லையென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஆங்காங்கே சாக்கடை மூடிகளை திறந்த வைத்திருப்பார்கள். அசட்டையாக இருந்துவிட்டால் சாக்கடை சமாதிதான். வாழ்க்கை எவ்வளவு ரிஸ்கானது என்பதை சென்னையில் இந்த மழைக்காலத்தின் பொழுது தான் புரிந்து கொண்டேன்.

எனது அலுவலகத்தில் என்னை அலைய விட்டுக் கொண்டிருந்தார்கள். வேளச்சேரி, தாம்பரம், வடபழனி, நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை என ஒரு நாளுக்கு 50, 60 கிலோ மீட்டர்கள் பைக்கில் சுற்ற வேண்டியதிருக்கும். இந்த மழை நேரத்தில் பாவம் புண்ணியம் பார்க்காமல் அலைய விட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பொருத்த வரை வேலை மட்டும் தான் முக்கியம். அன்று நான் நுங்கம்பாக்கம் சாலையில் போய்க் கொண்டிருந்தேன். வண்டியின் பாதிதான் வெளியே தெரிந்தது. பாதி தண்ணீருக்குள் மூழ்கியிருந்தது. எஞசினுக்குள் தண்ணீர் புகுந்து வண்டி உருமிக் கொண்டிருந்தது. வெகு நேர போராடடத்துக்குப் பிறகு வண்டி தன் உயிரை விட்டது. என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு போராடி பார்த்தேன். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. திடீரென செல்போன் ஒலித்தது. செல்போனை தூக்கி எறிந்து விடலாம் போல இருந்தது. வேண்டாவெறுப்பாக எடுத்து ஆன் செய்தேன். பக்கத்து வீட்டு பார்வதியம்மாள் பேசினார். ப்ரீத்திக்கு பிரசவ வலி எடுத்துவிட்டதாகவும். அவளை வடபழனி ஹாஸ்பிட்டலில் சேர்த்திருப்பதாகவும். நான் விழுந்தடித்து ஓடினேன். அந்த வழியாக சென்ற ஆட்டோவை நிறுத்தினேன். அவன் கூசாமல் 400 ரூபாய் கேட்டான். இத்தனை மழையிலும் அரசு பேருந்து ஒன்று அந்த வழியாக போர் வீரனைப் போல சென்று கொண்டிருந்தது. ஓடிச் சென்று அதில் தாவிக் கொண்டேன். உயிரை விடப் போகும் வயதான கிழவனைப் போல அந்த பேருந்து தத்தி தத்தி சென்று கொண்டிருந்தது. பேருந்தின் ஓட்டுனர் குத்துமதிப்பாக வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். மழை காரணமாக வண்டியை பல தடங்களில் மாற்றி விட்டார்கள். எந்த ரூட் வழியாக சென்றார்கள் என்றே தெரியவில்லை. திடீரென்று வண்டி ஒரு சப்வேக்குள் சென்றது. சென்னையில் குளம் வெட்டி வைத்திருக்கிறார்கள் என்றால் அது சப்வே தான். தண்ணீர் குளம் போல் தேங்கியிருந்தது.

பேருந்து ஓட்டுநர் கப்பல் கேப்டனாகும் ஆசையில் இருந்து வேறு வழியில்லாமல் பேருந்து ஓட்டுநராக வந்து விட்டார் போல வண்டியை அந்த குளத்துக்குள் சிரித்துக் கொண்டே விட்டுவிட்டார். பேருந்து மூழ்கிவிட்டது. அந்த மழையிலும் சுற்றிநின்று வேடிக்கை பார்க்க 200 பேர் கூடிவிட்டார்கள். என்னமாக ரசித்தார்கள் தெரியுமா? ஏதோ ஒன்றிரண்டு பேர் பேருந்தில மாட்டியிருப்பாவர்களை காப்பாற்ற தண்ணீருக்குள் குதித்தார்கள். எனக்குத் தெரிந்த அரைகுறை நீச்சலை வைத்துக் கொண்டு இரண்டு குழந்தைகளோடு கரையேறினேன். தண்ணீரில் மொத்தமாக மூழ்கியதில் செல் போன் நனைந்துவிட்டது. நடந்து சென்றிருந்தால் இந்நேரம் சென்றிருக்கலாம். எதை நம்பினாலும் நம்பலாம் மழை காலத்தில் சென்னை போக்குவரத்தை மட்டும் நம்பி விடக்கூடாது.

நடந்து செல்வதே உத்தமம் என்ற நம்பிக்கiயில் நடக்க ஆரம்பித்தேன். ஓட்டமும் நடையுமாக ஹாஸ்பிட்டலை நெருங்கிவிட்டேன். என்ன அவசரத்தில் சென்றானோ அந்த ஆட்டோக்காரன் சேற்றை வாரியிரைத்துவிட்டு சென்றான்.

‘ஆட்டோக்காரன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.” மனதிற்குள்ளாக பாராட்டிவிட்டு மருத்துவமனைக்குள் சென்றேன். பார்வதியம்மாள் முகமலர்ச்சியுடன் வரவேற்றார். ஆண் குழந்தை பிறந்திருப்பதாக கூறி இனிப்பை வாய்க்குள் திணித்தார். மகிழ்ச்சியாக இருந்தாலும். இந்த மழை எனக்கு அவ்வளவு இனிமையாக இல்லை. அன்று ரசித்த அதே மழைதான் இன்று இவ்வளவு இம்சையை கொடுத்துவிட்டது. வாழ்வில் சின்னசின்ன விஷயங்களை ரசிக்கும் மனப்பான்மையை நான் இழந்துவிட்டேனோ என்று தோன்றுகிறது. வாழ்க்கை நிர்ணயிக்கப்பட்ட தன்மையுடன் என்னை இழுத்தபடி சென்று கொண்டேயிருக்கிறது. நான் அதன் பின்னே ஓடிக் கொண்டேயிருக்கிறேன். நின்று நிதானிக்க நேரமில்லை. அதற்குள்ளாக ஆயிரம் கடமைகள் என்னை அழைத்தப்படி வரிசையில் காத்து கொண்டிருக்கின்றன. வேலை டென்ஷன், மாதச்சம்பள எதிர்பார்ப்பு, மனைவி, இப்பொழுது குழந்தை. இவையெல்லாம் தான் என் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன. நிர்ணயிக்கப்போகின்றன. வேறு புதிதாக எதிர்பார்க்க ஒன்றுமில்லை. அவ்வப்பொழுது வேறு சில பெண்கள் மீது கவனம் செல்லும். ஆனால் என்ன செய்வது நான் வேறு நல்லவனாக பிறந்து விட்டேன்.

அதன் பிறகு வாழ்க்கை போவதே தெரியாமல் நழுவிக் கொண்டிருந்தது. விடிவதும். இரவாவதும் மட்டுமே கண்ணில் படுகிறது. நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது. இப்படி ஒரு இயந்திரத்தனமான வாழ்க்கையா? எப்படி இதற்குள் தள்ளப்பட்டேன். வாழ்க்கiயில் ரிடையர்டுமென்ட் என்பது எவ்வளவு தேவையான, எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

நான் சிறு வயதில் செய்த சேட்டைகள் எல்லாம் எந்த அளவிற்கு என் தந்தையை கொடுமை படுத்தியிருக்கும் என்பது எனக்கு இப்பொழுதுதான் புரிந்தது. எனது பையனுக்கு இப்பொழுது 12 வயது. என்னை பாடாய் படுத்துகிறான். எதை செய்யக் கூடாது என்று சொல்கிறேனோ அதைத்தான் செய்வான். அவன் வீட்டில் உடைத்த பொருட்கள் போக மிஞ்சியிருக்கும் பொருட்களை பாதுகாப்பதற்கு நியாயமாக ஒரு ஆளை வேலைக்கு வைக்க வேண்டும். அதற்கு வசதியில்லாததால் என் மனைவிதான் அந்த வேலையை செய்கிறாள். எங்களுக்கு ஒரு குழந்தையே போதும் என்று உணர்த்திவிட்டான். அவன் தொல்லை பொருக்க முடியாமல் டாக்டரிடம் சென்று காட்டினால் அவர் எனக்கு இப்படி அட்வைஸ் செய்கிறார்.
‘குழந்தைன்னா அப்படித்தான் இருக்கும், சேட்டை பண்ணாதான் குழந்தை, உங்க குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறான் என்பதற்கு அவன் செய்கிற சேட்;டைதான் ஆதாரம்.”
அவருக்கு என்ன தெரியும் நான் படுகிற பாடு . அந்த டாக்டரையும் என் பையனையும் ஒரு அறைக்குள் இரண்டு நாட்கள் அடைத்துவிட்டாள் தெரியும் அந்த டாக்டருக்கு பைத்தியம் பிடித்துவிடும். கேள்விகளை கேட்டுக் கொண்டே இருப்பான். பதில் சொல்லவில்லை என்றால் விட மாட்டான். அவனும் என்னைபோலத்தான் மழை நீரில் நனைவதில் அப்படி ஒரு ஆர்வம். தடுக்ககூடாது என்று நினத்தாலும் தடுத்துவிடுவேன். காரணம் அவனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போய் விட்டால் என்னால் தாங்க முடியாது.

வாழ்க்கை எவ்வளவு குறுகியதாக இருக்கிறது என்பது குழந்தைகளின் வளர்ச்சியை பார்க்கும் பொழுதுதான் உணர முடிகிறது. என் முடியின் நிறம் வேறு சிறிது சிறிதாக மாறிக் கொண்டிருந்தது. அன்று தான் நிதானித்து கவனித்தேன். அவன் எனக்கு மேல் வளர்ந்து விட்டான். அவனது சேட்டைகளும் சற்று குறைந்திருந்தது. எனக்கு சற்று பதற்றமாகத்தான் இருந்தது. இந்த வயதில் தானே நானும் ஒரு பெண்ணை இழுத்துக் கொண்டு ஓட எத்தனித்தேன். அவனும் ஏதோ ஒரு பெண்ணை இழுத்துக் கொண்டு வந்துவிடுவானோ என்று பயந்தது உண்மைதான். இல்லையென்று சொல்வதற்கில்லை. ஏன் தந்தையான பின் இத்தகைய பயம் வருகிறது. நான் என் பையனின் எதிர் காலம் குறித்து கவலைப்படுவதால் தான். அவன் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான். ஆனால் நான் இன்று நன்றாகத்தானே இருக்கிறேன். அப்படி ஒன்றும் மோசமாகப் போய்விடவில்லையே. என்னதான் சமாதானம் சொல்லிக் கொண்டாலும் பயம் இருக்கத்தான் செய்தது. கடவுள் போதுமென்று நினைத்துவிட்டாரோ என்னவோ? என்னை இதற்கு மேல் சோதிக்க வேண்டாம் என்று நினைத்தாரோ என்னவோ? என் பையன் என்னைப் போல் இல்லை, அவன் நன்றாகப் படித்தான். நல்ல வேலையில் அமர்ந்தான். நான் பார்த்த பெண்ணை மனந்து கொண்டான். அவனது வாழ்க்கை மிக நேராக சென்றது.

நான் எதிர் பார்த்த ரிடையர்டுமென்ட்டும் எனக்கு கிடைத்தது. வாழ்க்கையை இனிமையாக கழிக்கலாம் என்று நினைத்தால் சலிப்பு ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டது. முன்பெல்லாம் 24 மணி நேரம் போதவில்லை. இப்பொழுது 24 மணி நேரத்தை கடப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. மனம் எதிலும் லயிக்க மறுக்கிறது. வாழ்க்கை வீணடிக்கப்பட்டதாகவே தோன்றுகிறது. இத்தனை நாள் போராட்டங்கள், ஆசைகள் அனைத்தும் எதற்காக என்கிற மிகப்பெரிய கேள்வி ஆக்கிரமிக்க அதன் போக்கிலேயே உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. சின்ன சின்ன ஆசைகள் மேல் மனம் ஈடுபட ஆரம்பித்தது. இனிப்பு தின்பது. குட்டி குழந்தைகளுடன் விளையாடுவது, தெருவை வேடிக்கை பார்ப்பது, கார்ட்டூன் சேனல் பார்த்து சிரித்துக் கொண்டிருப்பது, மீண்டும் மழையில் நனைவது!!!!!

எனது கடைசி நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதை உணர ஆரம்பித்தேன். முன்பு போல் இல்லை. என் உடல் இவ்வளவு சோர்வடையும் என்று எதிர்பார்க்கவே இல்லை. வாழ்க்கை தோல்வியை நோக்கிதான் சென்று கொண்டிருக்கிறது என்பதை இப்பொழுது தெளிவாக உணர முடிகிறது. எதற்காக இவ்வளவு அர்த்தமில்லாத் போட்டிகள் என்று விந்தையாகவும் உள்ளது. பிறப்பின அர்த்தமும் புரியவில்லை. இப்பொழுதைய புரியாத்தனத்திலிருந்துதான் இவ்வளவுநாள் புரிதலின் முட்டாள் தனம் புரிகிறது. வாழ்க்கையின் நிலையற்ற தன்மை எதையுமே உணர்த்தப்போவதில்லை என்றாலும். நிலையற்ற வாழ்க்கையை உணராமல் சாக முடியாது. மொத்தமாக அதனிடம் சரணடையத்தான் வேண்டும். எப்பேர்பட்டவனாக இருந்;தாலும். இதில் கெஞ்ச முடியாது. மிரட்ட முடியாது, ஏமாற்ற முடியாது, தப்பிக்க வழியே இல்லை, அமைதியாக ஏற்றுக் கொள்ள வேண்டியது தான்.

அன்று படுக்கையில் தளர்வாய் படுத்திருந்தேன். என் நிமிடங்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. ஏனோ என்னைச் சுற்றி அழுது கொண்டிருக்கும் சூழ்நிலை எனக்குப் பிடிக்க வில்லை. என்னை காற்றோட்டமாக ஜன்னலோரத்தில் கிடத்தும் படி சைகையில் கூறினேன். யாரோ என் நிலைமையை புரிந்து கொண்டு என்னை தனிமையில் விடும் படி கூறி கூட்டத்தை கலைத்தார். ஜன்னலின் வழியாக பொய்து கொண்டிருந்த மழையை ரசித்துக் கொண்டிருந்தேன். சாரல் ஜன்னல் வழியாக என்னை ஸ்பரிசித்தது. எனக்குள் இன்னும் உயிர்ப்பு இருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது. அந்த கடைசித்துளி என் தோலை ஸ்பரிசித்த போது என் நினைவு தப்பியது.
ljsurya@gmail.com

Series Navigation

சூர்யா லட்சுமிநாராயணன்

சூர்யா லட்சுமிநாராயணன்

மழை

This entry is part [part not set] of 39 in the series 20090716_Issue

ஜி.எஸ்.தயாளன்


வானம் பார்த்தப் பூமியில்
பூமி பார்த்து மழை

மண்ணில் வீழ்ந்ததும் உயிர்க்கும் மண்
தெருத் தெருவாய் கால்வாய்கள்

மழையில் மனிதர்கள்
மிருதுவானார்கள்

தூங்கும் மரங்கள்
சிலிர்த்தெழுந்தன

முற்றத்து மழை நீரில்
விளையாடும் குழந்தைகள்

வேளிமலை மறைய
புலப்படும் ஈரக்காற்று

மழையில் நனைந்த
முலைகளில் போகம்

மழைச் சத்தம் சூழ்ந்திருக்க
புனர்தலே புணர்தல்

மாரிப்பாட்டு தாலாட்டு
உறங்கவும் இதுவே இரவினும் தருணம்

மழைநேர தேநீருக்கு
ஐந்து ரூபாய் அதிகமில்லை

குடைகளைத் தொலைத்து
சாவகாசமாய் நடந்து போ

gsdhayalan@gmail.com

Series Navigation

ஜி.எஸ். தயாளன்

ஜி.எஸ். தயாளன்

மழை

This entry is part [part not set] of 24 in the series 20051202_Issue

த.அகிலன்


ஒருநீண்ட தார்ச்சாலையில்
சோவெனத்துரத்தும்
மழையென விரட்டுகிறது
உன்பிாிவு.

ஒரு
கொடுமிருகத்தைப்போல்.

எதிரே விாியும்
பெருவெளியின் நீளத்தை
என் கால்கள்
விழுங்க விழுங்க.

மறுபடியும்
முடிவற்று விாிகிறதுவெளி
உனை அழைக்கும்குரல்
தொண்டைக்குள் தேங்க
எனை விழுங்கிப்போகிறது மழை.

த.அகிலன்
—-

agiilan@yahoo.co.uk

Series Navigation

த.அகிலன்

த.அகிலன்

மழை

This entry is part [part not set] of 33 in the series 20051125_Issue

டி.ஜி.கே. கோவிந்தராஜன்


கடந்த மாதம் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்த ஒரு நாளில் தான் , நான் பணி நிமித்தம் நியூயார்க நகருக்கு பயணமானேன்..

படப்பிடிப்பு தொடர்ந்து ( வேட்டையாடு விளையாடு படத்தில் உதவியாளராக பணி ) நடந்ததால் தமிழக மழை பற்றிய செய்தி காது வழி விஷயமாச்சு….

23ம் தேதி தமிழகத்தில் மழை தொடரும் ஒரு நாளில் தான் மீண்டும் கால் வைத்தேன்…

சிதிலமடைந்த தார்ச்சாலைகள், செம்மலர் பூத்தாற் போல் வண்ணமுடன் குண்டு குழிகள், தேங்கிய நீர்கள், உடைந்த மரக்கிளைகள் என காட்சிகள்.

நசநசப்பும், சகதியுமாக ஊரில் பல பகுதிகள்.

மழை இந்த மாதிரி பெய்ததில்லை… பலத்த சேதம்… நாசம்… எனப் பேச்சுகள்.

எப்போது முடியும் என்று கட்டியம் கூறும் தின, வார பேப்பர், தொலைக்காட்சி செய்திகள்…

மழை சார் அது தான் கூட்டம் இல்லை… என்பது, ஹோட்டல், திரை மற்றும் அனைத்து வர்த்தக இடங்களின் விஷயமானது…

கண்மாய் உடைந்தால்…. பூண்டி ஏரி திறந்து விட்டதால், காவிரி, வைகை, தாமிரபரணி கரை புரண்டு ஊர் புகுந்தால் , பயிரிகள் தண்ணீரில் மூழ்கி நாசமடைந்ததால்.. என அழிவைப் பற்றியே பேச்சு…

புதனன்று என் குழந்தையின் பள்ளியில் இயற்கை பேரழிவு பற்றிய குழந்தைகள் பங்கேற்ற கண்காட்சி…

புயல், வெள்ளம், பூகம்பம் பற்றிய மாணவ மணிகள் அழிவு ஏன் .. எப்படி காப்பாற்றிக் கொள்வது என படம் மற்றும் மாதிரி வடிவங்களால் ஒப்பித்து விளக்கினார்கள்..

ஆம், அது தான் வளர்ந்த மனிதன் இயற்கை பற்றிய நம்பிக்கையின்மையின் தனது மனநிலையை குழந்தகளிடம் விதைக்கும் போக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியது….

இதற்கு முந்தி இருபது ஆண்டுகள் என்றும் ஐம்பது ஆண்டுகள் முன் தான் இப்படி மழை நாசம் என்று ஜோதிடம் கூறியது செய்திகள்…

எனக்குத் தோன்றியது… ஐம்பது ஆண்டுகளாய் வறண்ட பூமியில் என்ன செய்தார்கள் மனிதர்கள்.

கண்மாய், ஏரி , குளம், ஆறு இவற்றை தயார் நிலையில் மழை நீர் சேகரிப்புக்கு ஏற்பாடு செய்திருக்கலாமே…

ஆற்றில் முள்செடி வளரவிட்டு கழிப்பிட மறைவாய் கொண்டது மனிதன் தானே..

கண்மாய் அசூர வளர்ச்சி மரம் கண்டு அது நீர் ஆவியாகாமல் காக்க என்று சொல்லி அவை வளர நீர் உறிஞ்ச ஏலம் விட்டது நாம் தானே..

கெண்டையும், கெழுத்தியும் வில் எய்தி பிடித்த மனிதர்கள் சகதி தண்ணியில் தலைப்பிரட்டையை காலால் இடறியது நமது குணம் தானே…. ? ? ?

நாட்டிய நிகழ்ச்சிக்கு மேடையின் வலிவை சரிபார்ப்பவன், கிரிக்கெட் மைதானத்தை கோடிகள் கொட்டி தடவி தடவி தயார் செய்யும் நாம் …. மழை நீர் சேகரிக்க குளம் , ஏரி, ஆற்றை தயார்படுத்த என் செய்தோம்… ?

பின் ஏதோ, மழை நாசம் செய்ய வந்தது போல் செய்திகளை பறிமாறிக் கொள்கிறோம்.. ?

ஊர் புகுந்து குலம் அழித்த சுனாமியை , நிலம் பிளந்து கட்டிடங்கள் முழுங்கிய பூகம்பத்தை திட்டியவன் இதோ, மழையை ‘ இன்று இவ்வளவு நாசம் ‘ எனும் தலைப்புச் செய்தியுடன் வசவுபாடிக்கொண்டு..

என்ன வேண்டும் மனிதா.. ? மழையால் எத்துனை நாசம் செய்ய முடியும் என்ற புள்ளிவிவரம் வேண்டுமா… ?

அட மூடா… ?

இவ்வளவு அள்ளித் தரும் வானத்து வரவை பயன்படா நீராக மாறுவது நம்மால் அன்றோ..

அனைத்து நாசமும் நம்மால் தான்..

மழையே…. இருகரம் நீட்டி அழைக்கிறேன்.. வா…. பெய்யென பெய்வது தாண்டி.. இவர்கள் பொய்யென வாழ்பவர்கள் என உணர்த்தி நடனமாடு…

கணுக்கால் மழை நீரில் காகிதக் கப்பல் விட்ட ரசிகர்கள் தொலைந்து போய் , கழுத்தளவு மழைக்கு குளம், கண்மாய் என வசிப்பிடம் தந்திருந்த சமூகமும் போய், கிடைத்த நிலத்திலெல்லாம் கான்கிரீட் வனம் அமைத்து மழையை தொந்தரவாய் டிவி முன் அமர்ந்து விமர்சிக்கும் மனித குலம் என்னாகும் … ? யோசிப்போம்….

—-

gocha2003@yahoo.com

Series Navigation

டி.ஜி.கே. கோவிந்தராஜன்

டி.ஜி.கே. கோவிந்தராஜன்

மழை

This entry is part [part not set] of 61 in the series 20040805_Issue

பத்ரிநாத்


ரவிச்சந்திரனின் வாழ்க்கையே ஒரு பெரும் கதைதான்.

நான் கும்பகோணம் வந்திருந்த போது நண்பர்களிடம் அவன் வடக்கிலிருந்து திரும்பி வந்து விட்டானா என்று விசாரித்தேன்..கடந்த முறை வந்த போது தனக்கு வடக்கே மாற்றல் ஆகி விட்டதென்றும் ஓரிரு வருடங்களில் திரும்பி வந்து விடுதாகச் சொன்னான்..ஏனோ இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியும் திரும்பவேயில்லை. அவனை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை..ஒரு வேளை அங்கே நிரந்தரமாகத் தங்க முடிவெடுத்துவிட்டானா தெரியவில்லை.

ரவிச்சந்திரன் என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரித் தோழன் மற்றும் என் ஆத்மார்த்த நண்பனும் கூட.. ஏனோ அவனை என்னால் மறக்கவே முடியாமல் அவன் மீது எனக்கு அதீத ஒட்டுதல் ஏற்பட்டு விட்டது. அதற்கு, அவன் பரோபகாரத்தன குணம் மட்டும் காரணம் அல்ல..எனக்கு என்னவோ ஒருவர் மீது தனிப்பட்ட அன்பு வருவதற்கு ஒரு விசயம் மட்டும் காரணமாக இருக்க முடியாது என்பது என் கணிப்பு…

சிறு வயது முதல் அவன் சந்தித்த சோதனைகள், வேதனைகள். அத்தனை இருந்தும் அவன்

நிதானம், துவளாத தன்மை, பிறருக்கு உதவவேண்டும் என்ற எண்ணம் போன்றவை என்னை ஈர்த்திருக்கலாம்..ஒரு வேளை அவன் அத்தனை துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்ததாலோ என்னவோ அப்படி பரோபகாரியாக இருந்தானோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.

சிறுவயதிலேயே அவன் போராட்டம் ஆரம்பமாகிவிட்டது. அவன் தந்தை ஒரு ஸ்திரி லோலன்ி.. அவன் தாயை விரட்டிவிட்டுவிட்டார். நான்கு குழந்தைகளுடன் அவர் தாயார் தனித்து எங்கள் ஊருக்கு வந்தார்ி. அடுத்த வேளை உணவுக்குக்கூட உத்தரவாதமில்லாமல்..

மூத்தவன்தான் ரவிச்சந்திரன்..அந்தச் சிறிய வயதில் தாயுடன் சேர்ந்து குடும்ப பாரத்தை ரவி சுமந்து வந்தான்.. பள்ளியில் படித்துக் கொண்டே பகுதி நேரமாக ஏதாவது தொழிலில் ஈடுபட்டு வந்தான்.. காலை ஐந்து மணிக்கே எழுந்து கொண்டு பேப்பர் போடுவான்.. இரவு தாயுடன் சேர்ந்து கொண்டு வெளியில் சமையல் வேலைக்குச் சென்று விடுவான். சம நண்பர்களான நாங்கள் விளையாடிக் கொண்டு கொட்டமடித்துக் கொண்டிருப்போம்.. அவனோ ஏதோ வேலை செய்து கொண்டிருப்பான். நாங்கள் திருக்குளத்தில் நீச்சல் அடித்துக் கொண்டு ஓரே கூச்சல் போட்டுக் கொண்டு இருக்கும் சமயத்தில், அவனோ திருக்குளப் படிகள் வழியாக இரண்டு கையிலும் இரண்டு தூக்குக்கில் சாம்பார் சட்னியைக் கொண்டு போய்க் கொண்டிருப்பான்..

‘ ‘ என்னடா குளிச்சிட்டியா.. வா ‘ ‘ என்பேன்..

‘ ‘நான் கருக்கல்லயே முடிச்சிட்டேன்… அம்மா இந்தத் தூக்கை காபி கிளப்பில கொடுத்துட்டு வரச் சொன்னார்.. ‘ ‘, என்பான்.. அவன் எடுத்துக் கொண்டு போகும் அந்தத் தூக்குகளை வாங்கிப் பார்ப்பேன்.. பேய் கனம் கனக்கும்.. ‘ ‘டேய்.. என்னடா எப்படி இத்தன பாரத்தைக் கொண்டு போற.. ‘ ‘, என்பேன்.. ‘ ‘என்னடா பண்றது.. பொழப்பு.. ‘ ‘, என்பான்.

சிறிய வயதில்தான் அப்படி என்றால், வளர்ந்த பிறகும் அதே நிலைதான்.. அவன் தங்கையைக் கட்டிக் கொடுத்த இடத்தில் வரதட்சணை தகராறு வந்து விட்டது.. பையன் வீட்டுச் சொந்தக் காரர் காவல் துறையில் இருந்தவராதலால், தகராறில் ரவி மீது போலி வழக்குப் போட்டு கைது செய்து விட்டார்கள். அவன் அதிலிருந்து மீண்டு, நடையாய் நடந்து தங்கையின் வாழ்க்கையில் சமரசம் செய்து வைத்தான்.

கல்லூரியில் படிக்கும் காலத்திலும் அப்படியே.. கல்விக் கட்டண உயர்வு என்றால் அதை எதிர்த்த போராட்டத்திலும் முதல் ஆளாக நிற்பான். ..நான் குடந்தையை விட்டு வரும் போது கூட, ஏதோ ஒரு ஆதரவற்றோர், மற்றும் முதியோர் காப்பகம் கட்டுவதற்காக அலைந்து கொண்டிருந்தான்.. அதன் திறப்பு விழாவிற்குக் கூட எனக்கு அழைப்பு வந்தது..

நாற்பதைத் தொடும் வயதில் எங்கள் நண்பர்கள் அனைவரும் குடியும் குடித்தனமுமாக இருக்கும் சமையத்தில், அவனோ திருமணத்தையே விரும்பவில்லை.. நான் பலமுறைகள் அவனை வற்புறுத்தி வந்த போது ‘ ‘என்னைப் போன்றவர்களுக்கு திருமணம் பெரிய தடைகல் என்றுதான் நினைக்கிறேன்.. ‘ ‘ என்று சொல்லி தட்டிக் கழித்து வந்தான்.. திடாரென்று ஒரு நாள் எங்கள் எவருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு வந்தான்.. என்னிடம் மட்டும் அந்த ரகசியத்தைச் சொன்னான்..

‘ ‘சமீபத்தில பேப்பர்ல படிச்சுருப்பியே.. பல பெண்களை கல்யாணம் பண்ணிட்டு ஒருத்தன் ஏமாத்திட்டு, அப்பறம் மாட்டிக்கிட்டு ஜெயிலுக்குப் போயிட்டான்னு.. அவன் ஏமாத்தியதுல ஒருத்திதான் என் மனைவி.. அந்தப் பெண்கள் கூட்டத்திலகூட என் மனைவிதான் பரம ஏழை வேற …இதெல்லாம் வெளியில, குறிப்பா எங்கம்மாகிட்டச் சொன்னா அவங்க புரிஞ்சுக்க மாட்டாங்க.. அதான் யாருக்கும் அழைப்பே இல்லாம தாலி கட்டிக் கூட்டிட்டு வந்துட்டேன்.. ‘ ‘,

‘ ‘என்னடா திடார் திடார்ன்னு இந்த மாதிரியெல்லாம் செய்யற.. கல்யாணங்கறது ஒரு லைஃப் பிரச்சனையாச்சேடா.. ‘ ‘, என்றேன்.

‘ ‘ ஆமாடா.. பெரிய லைஃப்.. எங்கம்மாவ அப்பா தொறத்திவிட்டபோது பட்ட கஷ்டத்த நெனைக்கிற போது..வேற எதுதான் பிரச்சனைன்னு தோணுது..நீ நெனைச்சுட்டு இருக்கற மதிப்பீடுகள் படி நான் வாழறதுல்ல.. எனக்குன்னு சில மதிப்பீடுகள் வெச்சுருக்கேன்..அதனால உனக்கு நான் பண்றது பாத்தா ஏதோ பயங்கரமாகவும், நான் ஏதோ பரம வேதனை பட்டு எல்லாத்தையும் செய்யறமாதிரி தோணும்.. ஆனா உண்மையில் எனக்கு என்னவோ இதைப் போன்ற காரியங்கள்ல ஈடுபடற போது ஏற்படும் திருப்திக்கு ஈடா எதையுமே சொல்லத் தெரியல..இது ஒரு ஹிப்பாகரசி உலகம்.. பிறருக்கு வேதனைகளை ஏற்படுத்துவது மட்டுமல்லால், அதைப் பார்த்து ரசிப்பவர்கள் கூட நம்மிடம் அதிகம் இருக்கறாங்க.. அந்த மாதிரி மனிதர்களை வச்சிக்கிட்டு வாழும் உலகத்தோட தர்க்க நியாயங்களை நான் ஏற்றுக் கொள்ளவதில்லை..அதான் என் போக்கில வாழறதுதான் எனக்கு பிடிச்சிருக்கு..இது சமூக சேவையா அல்லது அப்படி ஏதாவது ஒரு தலைப்புகளில் கீழ் வருதான்னு பாத்துட்டு செய்யறதுல்ல..என்னைப் பொருத்தவரை நான் அன்றாடம் செய்யற பல கடமைகளில் ஒன்றாகச் செய்யறேன்.. ‘ ‘,

மனித மனங்களே வினோதமானது..இந்த விசித்திர உலகத்தில் இப்படியான வினோத மனங்கள் இருப்பது ஒன்றும் ஆச்சரியமில்லைதான்.. சமூகம் மோசமானவர்களை உருவாக்குகின்ற அதே சமயத்தில் இவனைப் போலவும் சிலரைச் சேர்த்து உருவாக்கிவிடுகிறது.. அதனால் தன் எடையை நிறை செய்து கொள்கிறது போலும்..

ஃஃஃ

வெகுநாட்கள் கழித்து ஒரு நான் சென்னையில் ஓர் உணவகத்தில் அவனைச் சந்தித்தேன்.. பார்த்தவுடன் வந்து கட்டிப் பிடித்துக் கொண்டான்..

‘ ‘ரவி.. போன மாசம் கும்பகோணம் போனேன்.. நீ திரும்பி வந்துருப்ப.. பாக்கலாம்னு நெனச்சேன்.. என்னது வடக்கப் போனவன் போனவன்தானா.. ‘ ‘, என்றேன்.

‘ ‘அடுத்த வருஷம் வந்துடலாம்னு இருக்கோம்.. ‘ ‘, என்றான்.. அப்போதுதான் கவனித்தேன்.. அவன் மனைவியின் கையில் ஒரு குழந்தை இருந்தது..

‘ ‘ அட .. குழந்த எப்ப பொறந்தது…. ‘ ‘, என்றேன்.. அந்தச் சின்னஞ்சிறு தளிர், என்னைப் பார்த்து பூவைப் போல மென்மையாகச் சிரித்தது..

‘ ‘எங்களுக்குப் பொறக்கல.. தத்து எடுத்து வளர்க்கிறோம்.. ‘ ‘, என்றான்..

‘ ‘மறுபடியும்..ஏதாவது பழைய மாதிரியா.. ‘ ‘, என்றேன்.

‘ ‘ம்ம்.. சமீபத்தில நடந்த குஜராத் கலவரத்தில இந்தக் குழந்தை அனாதை ஆயிடுச்சு..யாரு அப்பா அம்மா.. என்ன ஜாதி, மதம், இனம் எதுவும் தெரியாது..பாக்க பாவமா இருந்துச்சு.. ‘ ‘, என்றான்..

இதோ.. ரவிச்சந்திரன் தன் அன்றாட கடமைகளில் இன்றும் செய்து கொண்டுதான் இருக்கிறான்.. அவன் செய்யும் காரியங்கள் மத்தாப்பு போல ஜொலிப்பதில்லை..அதனால் பிறருக்குத் தெரிவதும் இல்லை.. ஆனால் ஒரு மெழுகுவர்த்தியைப் போல நிரந்தரமாக எரிந்து கொண்டுதான் இருக்கிறது..

அவன் வாழ்க்கை கதை அல்ல.. தொடர்கதை..

****

prabhabadri@yahoo.com

Series Navigation

பத்ரிநாத்

பத்ரிநாத்

மழை

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

கற்பகம் சோமசுந்தரம்.


ஏ மழையே!
பூமியுடன் வந்து இணைய
ஏன் இன்னும் தாமதம் ?
வரதட்சணை ஏது தேவையா ?
சொல் தருகிறோம்!!!!!

skarpag@yahoo.com

Series Navigation

கற்பகம் சோமசுந்தரம்.

கற்பகம் சோமசுந்தரம்.

மழை

This entry is part [part not set] of 28 in the series 20030504_Issue

ஸ்ரீராம்…


நிலம் அண்ணாந்து பார்த்தது தன் மேனியை நனைத்தது யார் என்று ? ?
முதல் துளி துள்ளி குதித்தோடியது தன்னுடன் விளையாட யாரும் இல்லையென்று ….

வானம்,நிலம் பார்த்த பார்வையால் சற்றே சினத்துடன் தன் உடலை உலுக்கிற்று !!!!
உலுக்கலினால் இடியுடன் பல துளிகள் விழந்தன…..

வானம் இசைத்த இடி மழை துளிக்கு பின்னிசையாக அமைந்திட்டது…
இசைக்கு ஏற்றவாறு மழை துளிகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து நாட்டியம் புரிந்தன….

இந்த பின்னிசையையும் நடனத்தையும் பார்த்து நிலம் தன் பரந்த மேனியை வளைந்திட்டது…
இதை கவனித்த வானம் தன் மின்னல் என்னும் புகைக்கருவியால் அழகிய புகைப்படம் எடுத்தது…..

மக்கள் வாழ்வை செழிப்புடன் தழைக்க வைப்பதால் தான் அதன் பெயர் மழையோ !!!!

அன்புடன், ஸ்ரீராம்…
slib@rediffmail.com

Series Navigation

ஸ்ரீராம்

ஸ்ரீராம்

மழை

This entry is part [part not set] of 29 in the series 20030119_Issue

பிரியா ஆர்.சி.


வேளைக்கு ஒரு நிறமாய்
உடுத்த ஆடைகொடுத்தும்
பகலிலும் இரவிலும் பளிச்சென
வட்ட பொட்டிட்டும்
வானவில் வளையலும் நட்சத்திர
மாலையும் நகையாய் அளித்தும்
அண்டம் அனைத்தையும் அவள்
காலடியில் கொணர்ந்தும்
இட்ட பணிசெய்ய லட்சம் லட்சமாய்
மேகப்படை ஏவியும்
கண்ணைக் கசக்கும் வான மகளுக்கு
என்ன வரதட்சணைக் கொடுமையா ?

rcpriya@yahoo.com

Series Navigation

பிரியா. ஆர். சி. ...

பிரியா. ஆர். சி. ...

மழை.

This entry is part [part not set] of 27 in the series 20021027_Issue

எஸ். வைதேஹி.


குடை விரிந்து
குடை மடங்கி
இடிபாடுகள்
முகம் சுளிக்கும்.

இருள் மூடிய
தரை தழுவிய
மழை சேறு.

ரயில் தடங்களின்
கருங்கள் ஜல்லி
மனம் பேசும்
ஈரத்தோடு
அவ்வப்போது.

பாதை நம்பி
உருவங்கள்
ஒதுங்கி மறையும்
வெளிச்சக் கம்பிகளில்.

நடுக்கமான கணங்களில்
பாம்பு நெளியும் மரங்களுக்கிடையில்
அழுத்தமான மனம்
உரைத்திடும் ‘அம்மா ‘வெனும் சொல்லை.

***
svaidehi@hotmail.com

Series Navigation

எஸ். வைதேஹி.

எஸ். வைதேஹி.

மழை.

This entry is part [part not set] of 23 in the series 20020602_Issue

எஸ்.வைதேஹி.


மண்ணைத் தொடும்
முன்பு
கிளறி விடும்
வெப்பத்தையும்,
ஆற்றிவிடும்
மரங்களின் தலைகளையும்.

பிசுபிசுத்து ஒட்டும்
காற்றின் அழுகைகள்
கையில்.

குளித்து முடித்திருக்கும்
விளக்குப் பொதி
நிறைந்த
தீப்பெட்டி கட்டடங்கள்.

கருத்த மேகம்
காட்டும்
நிழல் பிரமைகள்.

***

Series Navigation

எஸ். வைதேஹி.

எஸ். வைதேஹி.

மழை

This entry is part [part not set] of 11 in the series 20010122_Issue

திருமாவளவன்


*

இன்று ‘இடியுடன் கூடிய மழை ‘

பொழியுமென மொழிகிறது

வானிலை அறிக்கை

புகலிட வாழ்வினுள் சபிக்கப்பட்ட நாளில்

நான் நனையப் பெய்ததில்லை

மழை

பால்யத்து மழைநாட்கள்

பெய்யெனப் பெய்கிறது

இன்றும்

*

காலத்தின் உக்கிரத்தில்

வான் கிழிந்து கொட்டியது

பெருமழை

தவளைகள் புணரக்கிளர்த்திய

ஒலியும்

அம்மாவின் சேலையுள் குடங்க

கணண்ற உடற்சூடும்

உறங்கப்போறேன்

மறுநாள் பள்ளி

அரைநாள் விடுமுறை

வீடுதிரும்பு வழியில்

சுடலைவெளி நிறைய வெள்ளம்

முழந்தாள் தாண்டி

அரைக்களிசான் விளிம்பெல்லாம்

ஈரம்

நீரிலாடி நேரங்கழித்து

வீட்டுள் நுழைகிறேன்

முதுகில் உறைக்கிரது

‘பூவரசம்பழம் ‘

நினைவிடை நான் நனைய

*

மறுமழை

மூன்றுநாட்கள் அடைமழை

மேட்டுக்குடி ஒழுங்கை

நீரோடி

வெள்ளவாய்க்காலாதல் இழுக்கென்று

அணையிட்டு நீர் அடக்க

நிறைந்து கிடக்கிறது வளவு

தலைவாசல் படிதாண்டி உள்நுழைய

ஒரு விரலிடை இருக்கையிலே

மழை ஓய

அடுப்பில் உலையேற்றி

அரிசிவாங்கிவர ஓடுகிறாள்

அம்மா

வாசல்படியிருந்து

கப்பல் மிதக்கவிட்டு

களியுற்றிருக்கிறோம்

மறுபாட்டம் சொரிகிறது

வானம்

அம்மாவும் இல்லாத் தனிமை

நீரெழுந்து படிதாண்டி உள்நுழைய

ஊர்திரண்டு அணை வெட்டி

சிறை மீட்கப் பதிகிறது

நெஞ்சில்

*

ஊழி தொடங்கி ஊரெரிந்தபோதில்

பொழிந்து

மூன்றாம் மழை

தீயின் விழுதுகளுள் விலகி

பெடியளுக்கு

மண்ணெண்ணை தேடி

வெள்ளாங்குளம் போவதாய்

போக்குக்காட்டிவிட்டு

சங்குப்பிட்டித்துறையில் படகிற்கு

காத்திருக்கிறேன்

பெருவளி

நடுநிசி

மனிதர் வரிசை

துறையின் திசைநீள

துவக்கொடு அலையும் மைந்தர்

உயரக்காற்றில் எழுகிறது

ஹெலியொலி

கிலியில் உரைகிறது குருதி

திடாரென

வானம் கருக்கொண்டு

பெருந்துளிகள் சொரிய

குலைகிறது மனித ஒழுங்கு

ஒதுங்க நிழலற்று

உடல் விறைத்து

தெப்பமாய் நனைந்திருக்கிறேன்

ஒரு மணி கழிய

வானில் பூக்கிறது வெள்ளி

வயிற்றில் பூக்கிறது பசி

பிரிவின் துயரொடு

காதற்துணைவி கண்ணீர் கலந்து

கட்டிய பொதிசோற்றில்

கையை நுழைக்கிறேன்

மழைநீர் கலந்து நெக்குருகி

கிடக்கிறது சோறு

கூடவே மனசும்

பால்யத்து மழைநாட்கள்

பெய்யெனப் பெய்கிறது

இன்றும்

**

Series Navigation

திருமாவளவன்

திருமாவளவன்