ஏழையின் தேசிய கீதம்

This entry is part [part not set] of 42 in the series 20030615_Issue

சத்தி சக்திதாசன்


அழகானதொரு தேசியகீதமதைக் கொண்டதே எங்கள் அருமை
நாடு
அழுகையையே தேசியகீதமாய்க் கொண்டதே எம்நாட்டின் ஏழை உழைப்பாளி
வீடு
தினம் ஒருவேளை உணவுக்காய் அலைவதே அத்தோழன் படும்
பாடு
கருணையற்ற உள்ளங்கள் ஆயிரமாய் கொட்டி தம் பாவம் நீக்க செய்யும் பூஜை ஒரு
கேடு
சமமற்ற சமுதாயத்தில் சிறு சமத்துவமேனும் காண தோழரே நாமின்று போடுவோம் புதுக்
கோடு
வறுமைக்கோலம் காணும் ஏழை உள்ளங்களின் விடிவு நோக்கிய பாதைகளைத்
தேடு
வகுப்புவாதம் பேசும் மூளையற்ற வீணர்கள் கூட்டம் தன்னைக் கண்டால் உடனே
சீறு
அன்பு மனமும் உதவும் கரங்களும் கொண்ட தெய்வ நெஞ்சங்களுக்கு இல்லை ஒன்றுமே
ஈடு
பாடுபடும் தொழிலாளிகளின் வாழ்வை உயர்த்தி அவர்தம் குழந்தைகளின் கைகளில் கொடுப்போம்
ஏடு
உண்மையான தேசியகீதம் இதுவேயென்று என் தோழனே தினமும் நீ
பாடு
பிச்சை கேட்டு ஓர் உயிரும் இனிமேல் ஏந்த வேண்டாம் தம் கைகளில் ஒர்
ஓடு
ஒருநாளும் பொய்க்காத உண்மை ஒன்றறிவோம் அந்தமாய் நமக்கெல்லாம் ஒரே
காடு

Series Navigation

சத்தி சக்திதாசன்

சத்தி சக்திதாசன்