சந்தோசமே உயிர் மூச்சு !(கவிதைக்குள் ஒரு கதை)

This entry is part [part not set] of 34 in the series 20030607_Issue

புகாரி, கனடா


அவளுக்கும் அவனுக்கும்
இந்த
உலகத்தைப் போல
சந்தோசமே உயிர் மூச்சு

ஆனால் அதற்கு
வழிசொல்லும்
வரைபடங்கள் மட்டும்
அவர்களிடம் வேறு வேறு
என்றால்
அவர்களுக்குள் ஏது பேச்சு

எல்லாமே
தூரமாய்ப் போச்சு

O

அவளின்
வரைபடம் பார்த்தான் அவன்

நிலைகுலைந்த புருவத்தில்
நெருப்புப் பற்றிக்கொண்டது

அவனின்
வரைபடம் பார்த்தாள் அவள்

எழில் வடித்த விழி நழுவி
எரி அமிலத்துள் விழுந்து
துடிதுடித்தது

அவர்களின் இதயங்களில்
வெறுப்புப் பயிர்கள்
வரப்பு மீறி வளர்ந்தன

O

முதலில்
மெளன மர நிழல்களில்தான்
ஒதுங்கினார்கள்

பின் ஒரு
தரங்கெட்ட நாளில்
மெளனக் கூடுகள் உடைந்து
வார்த்தைக் கழுகுகள்
வாய்கிழியக் கூவி வட்டமிட்டன

O

உள்ளங்கள் ஒருமிக்காத
இடத்தில்
உறவுப் பசை ஒட்டுமா ?

பொருந்தாததொன்றே
பொருத்தமென்றானபின்
நிலைக்கும் பிணைப்பென்று
ஒன்றுண்டா ?

கிழக்கும் மேற்கும்
கைகோர்க்கின்றன என்றால்
வியப்பு நிலவலாம்
நிம்மதி நிலவுமா ?

பொய்யும் உண்மையும்
ஒரு முட்டை ஓட்டுக்குள்
உயிர்க் கருவாய் வாழுமா ?

வாழ்க்கைக்குள்
முரண்பாட்டு இடிகள் இறங்கும்
முரண்பாட்டுக்குள்
வாழ்க்கை மழை பொழியுமா ?

அன்பற்ற பாறைக்குள்
ஈரம் தேடுவதும்
நேசமற்ற நெஞ்சில்
பாசமனு தொடுப்பதும்
சுயநலமனதுக்குள்
நியாயவொளி தேடுவதும்
விந்தைகள் என்று
இந்தப்
பாழும் மனதிற்குப்
புரியவில்லையென்றால்
என்னதான் செய்வது
என்று
அங்கலாய்த்தார்கள்
இருவரும்

O

ஆயினும்…
அவளுக்கும் அவனுக்கும்
இந்த
உலகத்தைப் போல
சந்தோசமே உயிர் மூச்சு

அங்கேதான்
இருண்டு கிடந்த
அவன் இதயத்துள்
ஓர் தீப்பொறி எழுந்தது

ஆம்
அவளுக்கும் அவனுக்கும்
ஒன்றுபோலவே
சந்தோசமே உயிர் மூச்சு

சந்தோசமே உயிர் மூச்சு

O

வேற்றுமைகளையே
விரல்விட்டு
எண்ணிக்கொண்டிருந்தபோது
வெறுமனே தேய்ந்தது
விரல்கள் மட்டுமல்ல
அவர்களின் நாட்களும்தானே !

O

இலைகளும்
இதழ்விரித்துப் பூத்துக்குலுங்கிய
ஓர் மலர் நாளில்
அவள் கனவுகளைக் காண
அவன் கண்களைத் தந்தான்

மனம் நெகிழ்ந்த மறுநாள்
அவன் ஆசைகளின் திசையில்
அவள் தீபம் ஏற்றி வைத்தாள்

O

இன்றோ…
அவளுக்கும் அவனுக்கும்
இந்த
உலகத்தையே மிஞ்சும்
சந்தோசமே வாழ்க்கை

சுபம்!

*

அன்புடன் புகாரி

buhari2000@rogers.com

Series Navigation

புகாரி

புகாரி