தங்கப்பாவின் மொழிபெயர்ப்புக் கவிதைகள்

This entry is part [part not set] of 38 in the series 20030419_Issue

அச்சாக்கம் : பாவண்ணன்


1. வாலாட்டிக்குருவியும் குழந்தையும்

ஆங்கில மூலம் : தாமஸ் ஹார்டி

வாய்க்கால் ஓரம் தண்ணீர் குடிக்க ஓர்
வாலாட்டிக் குருவி வந்து உட்கார்ந்தது.
அதை ஒரு குழந்தை பார்த்தது. அப்போது
முக்காரத்தோடு ஒரு முரட்டுக்காளை
அக்கரை போக அங்கு வந்தது.
பக்கம் இரந்த வாலாட்டிக் குருவி
சற்றும் அசையவே இல்லை. பின்பு
குதிரை ஒன்று குதிநடை போட்டு
வாய்க்காலைக் கடந்து மறுகரை சென்றது.
அந்தக் குதிரை அலப்பிய நீரில்
முழுக்க முழுக்க குருவி நனைந்தது.
இருப்பினும் குருவி இறக்கையைக் குலுக்கி
உதறி விட்டுக் கொண்டதே அன்றிப்
பதறி எழுந்து பறக்கவே இல்லை.
அடுத்தாற் போல, அங்கொரு தெருநாய்
பதுங்கி வந்ததைப் பார்த்தது குருவி.
ஆயினும் கொஞ்சமும் அச்சமில்லாமல்
நீரைக் குடிப்பதும் அலகால் இறகைக்
கோதி விட்டுக் கொள்வதுமாகக்
குந்தி இருந்தது. கொஞ்ச நேரத்தில்
மாண்பு நிறைந்த ஓர் மாந்தன் அவ்விடம்
வந்ததைக்கண்ட வாலாட்டிக் குருவி
திடுக்கிட்டு அஞ்சிச் சிறகை விரித்து
விருட்டெனப் பாய்ந்து விரைவாய் மறைந்தது
யாவையும் பார்த்துக் கொண்டிருந்த
குழந்தையோ மிகவும் குழப்பம் அடைந்ததே

2. பெயர் பெரிதா, செயல் பெரிதா ?

ஆங்கில மூலம்: டக்ளஸ் மலோக்

குன்றத்தின் உச்சியில் ஓங்கி வளரும் ஓர்
கோங்கென நீ நிற்கத் தேவையில்லை
நன்று செழித்திடும் நாணல் புதர் என
நானிலம் போற்றிட வாழ்ந்திடலாம்.

நாணலைப்போல புகழ்இல்லை என்றால், பின்னும்
நல்லதோர் புல் என வாழ்ந்திடலாம்.
காணும் திமிங்கிலம் போல்கிலையேல் சிறு
கயல் என மின்னிப் புகழ்பெறுவாய்

எல்லாருமே படைத்தலைவர்கள் ஆய்விடின்
யார் களம்சென்று வாள்துாக்கிடுவார் ?
எல்லார்க்குமே இங்குச் செய்யப் பணிஉண்டே
இனிததைச் செய்து புகழ்பெறுவோம்

தேர்வரும் வீதியாய் இல்லை என்றாலும், நீ
சின்னக் கொடி வழி ஆகிடுவாய்
பேர்பெரிதா, இங்குச் செயல்பெரிதா, உன்றன்
பெருமை உன் செம்மையில் உள்ளதடா

3. ஆன்ம உறக்கம்

ஆங்கில மூலம் : தாகூர்

அருகில் வந்தமர்ந்தான்-ஐயோ
அயர்ந்து உறங்கிவிட்டேன்
உருகி என்ன பயன் ?- பாழும்
உறக்கம் தீய்த்ததடி.

இரவில் தேடிவந்தான்- கையில்
யாழினைத் தாங்கி நின்றான்
உருகப் பண்இசைத்தான்-நான்
உறக்கம் நீங்கவில்லை

விழைவு தீர்தலின்றி-இரவுகள்
வீணில் கழிவதற்கே
பிழைகள் என்ன செய்தேன் ?-உள்ளம்
பேதுற்று அழியுதடி

அருகில் முகம்கொணர்ந்தே- மூச்சால்
அன்பன் எனைத்தொடினும்
உருவம் கண்டறியா – என்
ஊழ்வினை என்ன சொல்வேன்

4. விடை பெறுதல்

ஆங்கில மூலம் : தாகூர்

முடிந்ததுகாண் என்வேலை, உடன்பிறப்பீர்
முடிசாய்த்து வணங்குகிறேன், விடை கொடுப்பீர்
பிடியுங்கள் என் வீட்டின் திறவுகோலை
பிறகெனக்கு வேலையில்லை இந்த வீட்டில்
அடுத்தபடி வேறென்ன ? உங்கள் வாயால்
அன்புரைகள் மட்டும்நான் வேண்டுகின்றேன்

நெடுநாளாய் அருகருகே வாழ்ந்து வந்தோம்
நிறையவே உங்களுக்குக் கடன்பட்டுள்ளேன்
விடிந்ததுநாள் இருள்மூலை ஒளிசெய்வித்த
விளக்குத்தான் நின்றதுவே. எனை அழைக்க
எழுந்ததுகாண் ஓர்அழைப்பும். இனிமேல் என்ன
என்பயணம் தொடங்க இதோ புறப்பட்டேனே

அச்சாக்கம் : பாவண்ணன்

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்