தம்பி தாளெடுத்து வா – உரைவெண்பா

This entry is part [part not set] of 45 in the series 20030302_Issue

மத்தளராயன் (என்ற) இரா.முருகன்


கலைப்படைப்புகளின் ‘காணாமல் போனவைகள் ‘ பட்டியலில், ஓவிய மேதை ரெம்ப்ராண்ட் வரைந்த புகழ் பெற்ற ஓவியமான ‘குழந்தை ஏசுவின் சுன்னத் என்ற மார்க்கக் கல்யாணம் ‘ படம் முக்கியமானது.

இந்த ஓவியத்துக்காக ரெம்ப்ராண்ட் எடுத்துக் கொண்ட விஷயம் கலைப்படைப்பாளிக்குச் சவால் விடும் விதத்தில் அமைந்தது.

காட்சியை லாங்க் ஷாட்டில் சித்தரித்திருந்தால், அது எதைச் சொல்கிறது என்பதே தெரியாமல் போயிருக்கும். டைட் க்ளோஸ் அப் ஆக வரைந்திருந்தால், அந்த முக்கியமான நொடியின் மகத்துவம் மறைந்து வெறும் அனடாமிக்கல் ஸ்டடியாகத் தெரிந்திருக்கும்.

ரெம்ப்ராண்டுக்கு இதை எப்படி, எந்தக் கோணத்தில் சித்தரிக்க வேண்டும் என்று தெரிந்திருந்தது.

கிட்டத்தட்ட அரை இருட்டில் ஒரு யூதக் கோவில். ஒரு சிறிய மேடை. கீழே மண்டியிட்டபடி பெண்கள், முதியவர்கள். ஜோசப் ஒரு சிறிய வட்ட மேஜையில் குழந்தை ஏசுவை அணைத்துப் பிடித்தபடி இருக்கிறார். பக்கத்தில் மருத்துவர். மருத்துவரையும் குழந்தையையும் தழுவி மேலே இருந்து பொன் நிறத்தில் ஒரு வெளிச்சம் பொழிந்து கொண்டிருக்கிறது. மருத்துவர் ஒரு கையில் குழந்தையின் உறுப்பைப் பிடித்தபடி, இன்னொரு கையில் சிறிய கத்தியோடு ஆயத்தமாக இருக்கிறார்.

வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கருதக்கூடிய ஒரு கணம் ரெம்ப்ராண்டின் அற்பத ஓவியத்தில் உறைந்து போய் அந்தக் கணத்தைத் திரும்பத் திரும்ப நிகழ்த்திக் காட்டுகிறது.

1646-ல் வரையப்பட்ட இந்தச் சித்திரம் இப்போது என்ன ஆனது என்று தெரியவில்லை. 1755 வாக்கில் அது காணாமல் போனது போனதுதான்.

ஓவியத்தின் ஒரு நகலை (அல்லது அசல் ஓவியத்தை வரைவதற்கு முன் வரைந்து பழகிய முன்னோட்டப் பிரதியை) ரெம்ப்ராண்ட் எடுத்து வைத்திருந்ததால், அந்த ஒரிஜினல் ஓவியம் எப்படி இருந்திருக்கும் என்று தெரிகிறது. ஆனாலும், நகல் எல்லாம் அசல் ஆகிவிடுமா ?

ஓவியத்தை யார் எடுத்திருப்பார்கள் ? ஏன் எடுத்திருப்பார்கள் ? என்ன செய்திருப்பார்கள் ?

இந்தக் கேள்விகளுக்கு இன்னும் விடையில்லை. ஆனாலும் கலை விமர்சகர்களில் பெரும்பாலானவர்கள் கருதுவது, ஏசுநாதரை இப்படி உடல் முழுக்கக் காட்டியபடி (குழந்தையாக இருந்தாலும்) ரெம்ப்ராண்ட் சித்தரித்தது ஆசாரக் குறைச்சல் என்று கருதிய யாரோ செய்த வேலை தான் அந்தக் கலைப்படத்தைக் கடத்திப் போன செயல். அதை அழித்துக் கூட இருக்கலாம்.

கலையும், இலக்கியமும் அவற்றோடு ஸ்னானப் பிராப்தி கூட இல்லாதவர்களால் நம்பிக்கை, நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் என்ற ஏதேதோ பெயர்களில் மதிப்பிடப்படுவது, குகை மனிதன் இருண்ட குகைச் சுவர்களில் மிருகங்களையும் சக மனிதர்களையும் வரைந்தபோதே தொடங்கி இருக்க வேண்டும்.

‘கூளப்ப நாயக்கன் காதல் ‘ ஐம்பது வருடம் முன்னால் வரைகூட ஆபாசப் புத்தகம் என்று தடை செய்யப்பட்டிருந்ததாகச் சொல்வார்கள். இங்கிலாந்தில் 1700களின் இறுதியில் எழுதப்பட்ட ஃபேனி ஹில் ‘authentic porno and a literature of its own kind ‘ என்று விமர்சகர்களால் இப்போது கொண்டாடப்படுகிறது. அது பிரசுரமானபோது, தடை செய்யப்பட வேண்டும் என்று மதகுருமார்கள் போராடித் தடை செய்தார்கள். அப்போது புத்தகம் முழுக்க விற்றுத் தீர்ந்ததாம். வாங்கியவர்களில் பலர் மதகுருமார்கள் தான். படித்துவிட்டுத்தானே தடை செய்யச் சொல்லிப் போராட வேண்டும்!

மூத்த தமிழ் எழுத்தாளர் வல்லிக்கண்ணன் ‘சம்பங்கிபுரத்துப் பொம்பளைகள் ‘ என்ற ஒரு சிருங்கார ரசம் மிகுந்த நாவலைப் பல வருடம் முன்னால் எழுதினார். ஆனால் அதைப் பிரசுரிக்கத் துணிவின்றிக் கையெழுத்துப் பிரதியாகவே பல காலம் பெட்டிக்குள் வைத்திருந்தார். அந்தக் கையெழுத்துப் பிரதியைப் படிக்க வாய்ப்புக் கிடைத்த (லேசில் கிடைக்காத வாய்ப்பு அது) காலம் சென்ற என் எழுத்தாள நண்பர் தஞ்சை பிரகாஷ், நாவலைப் பற்றி உற்சாகமாகச் சொன்னது நினைவு வருகிறது. அது பிரசுரமாகி இருந்தால், தமிழில் இன்னொரு முக்கியமான சோதனை முயற்சி கிடைத்திருக்கும். அதைப்பற்றி பிரகாஷ் நடத்திய (ஒரே ஒரு இதழ் மட்டும் வெளிவந்த) ‘குயுக்தம் ‘ இலக்கிய இதழிலும் எழுதியிருந்த நினைவு.

வல்லிக்கண்ணன் தற்போது கையெழுத்துப் பிரதியைக் கிழித்துப் போட்டிருப்பார்.

கதைத்த பிரகாசு காலமானார் கேட்டால்
உதைக்க வருவார் வகண்ணன் – சதையொடு
சம்பங்கி யூர்க்கதை சட்டெனக் கட்டலாம்
தம்பிநீ தாளெடுத்து வா.

மத்தளராயன் (என்ற) இரா.முருகன்

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்