முல்லை = பாலை

This entry is part [part not set] of 35 in the series 20021022_Issue

வ.ந.கிரிதரன்


எத்தனையோ நாட்களாகி விட்டன
நான் இந்த வனத்தில் சிக்கி.
யார் சொன்னது கனல்வது
பாலைகள் மட்டும் தானென்று ?
வந்து பாருங்கள் ஒருமுறை
இந்த முல்லையினுள்.
முல்லைகளே பாலைகளான
விந்தையினைப் புரிந்து கொள்வீர்கள்.
பாலைகளில் தான் கானல் நீர்
பாய்வதென்பதில்லை.
பாருங்கள் இந்தப் பெருவனத்தை.
இங்கும் தான் கானல்கள்
பாய்கின்றன.
கொதிக்கும் அனலிற்குள் சுமந்து செல்லும்
ஒட்டகங்கள் அங்கு மட்டும் தானா ?
வந்து பாருங்கள் இங்கே.
இரண்டு கால் ஒட்டகங்களை
இங்கே நீங்கள் தாராளமாகவே
காணலாம்.
இவற்றால்
இருப்பையே இரசிக்க முடியாத அளவிற்கு
முதுகில் சுமைகள்.
சுமந்து சுமந்து சுமந்து
சுமையே வாழ்வாகிப் போன
ஒட்டகங்கள் இவை.
சுழன்று வீசும் பெருங்காற்று
அங்கு மட்டும் தானென்பதில்லை.
இங்குமுண்டு.
ஓங்கிய விருட்சங்களிற்கிடையில்
ஒருமுறை நின்று பாருங்கள்
வீசுவது பெருங்காற்றா இல்லையா
என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
வனமென்றால் அங்கொரு மரமிருக்கும்.
அதன் கீழ் இருக்க நிழலிருக்கும்.
அதன் மேல் புள்ளிருக்கும்.
இங்கு மரத்தின் நிழலிலும்
கனலிருக்கும். இரு காற் புள்ளால் நிறைந்திருக்கும்
மரங்களில் சிறகு விரிக்கும்
நிஜப் புள்ளெங்கே ?
விரிந்திருக்குமிந்த காங்க்ரீட் வனத்திலிருந்து
கொண்டு
வியந்து கொண்டிருக்கின்றேன் இன்னும்
முல்லைக்கும் பாலைக்கும் இடையிலுள்ள
வேறுபாடுகளையெண்ணி எண்ணி.

ngiri2704@rogers.com

Series Navigation

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்