தேவதேவன் கவிதைகள் —4 : கடவுள்

This entry is part [part not set] of 25 in the series 20020902_Issue

தேவதேவன்


1] பக்த கோடிகள்
———————

பக்த கோடிகள் புடைசூழ
கால்மேல் கால்போட்டு
கடவுள் நான் என்று
டிக் டிக்கிறது
முக்காலிமேல் ஒரு கடிகாரம்

பக்தகோடிகளுக்கு
ஓவர் டைமும் உபரிவருமானமும்
உயர்குடி வாழ்வும்
அருளுகிறார் கடவுள்

கடவுள் மரிப்பதில்லை
ரிப்பேர்தான் ஆவதுண்டு என்கிறது வேதம்
கடவுள் பழுதானால்
காலநோய்கள் பெருத்துவிடுமாகையால்
கடவுள் பழுது நீங்க
நிரந்தர மடங்களும் ம்டாதிபதிகளும்
அவ்வபோது தோன்றும் மகான்களும்
காலநோய் தீர்க்க கல்விமான்களும்
சதா கடவுள் நாமம் மறவாது பாடிக்கொண்டிருக்க
பக்த கோடி மகாஜனங்களும் உண்டே

இந்தக் கூட்டத்தில் போய்
கவிஞனை தேடுவதென்ன மடமை
அதோபார் உழைத்து ஓடாகி
மரணம் பார்த்து நின்றுகொண்டிருக்கும்
ஒரு மாட்டின்மேல்
மெளன அஞ்சலி செய்துகொண்டிருக்கிறது
ஒரு காகம்
நித்யத்துவத்தை நோக்கி அதன் முகம்

2]கடவுளே
————-

ஒரு புதுக்காற்று ஒன்று
அறைக்குள் சுழன்றடித்திருக்கிறது

ஊதுபத்தி பூமாலைகள் திகைக்க
தன் முதுகின் வெட்டவெளியை காட்டியபடி
திரும்பியிருக்கிறார் காலண்டர் தாளிலுள்ள கடவுள்

கோபமா
சுய மறுப்பா ?
காட்டும் புதிய தரிசனமா ?

வரண்டு இருண்டு விறைத்த முகம் ஒன்று
வந்தது நான்கு ஆணிகள்
மற்றும் சுற்றியலுடன்

3] ஒரு பரிசோதனையும் கவலையும்
———————————————-

கவனத்தை ஈர்க்கும் ஒரே நோக்குடன்
குறுக்கும் மறுக்குமாய் அலைந்துகொண்டிருந்தனர்
தேவதைகள்

பூமியை பரிசோதிக்க மனம்கொண்ட கடவுள்
ஒரு மழையை பெய்துவிட்டு
பின்னாலேயே தேவதைகளை அனுப்பிவைத்தார்

தட்டான்களின் வாலில் கல்லைக்கட்டியும்
நீண்ட நூல்களை கட்டியும் கல்சுமக்க வைத்தும்
சிறகுகளை துண்டித்து பறக்கவிட்டும்
இரண்டு தட்டான்களை ஒரு நூலால் இணைத்தும்
அவை திண்டாடுவதை ரசித்துக் கொண்டிருந்தனர்
மனிதக்குழந்தைகள்

கடவுளும் தேவதைகளின் தலைவனும்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்
ஆழ்ந்தகவலையுடன்

3] உருமாற்றம்
————-

அந்த அறையில் மூவர் குடியிருந்தனர்

காட்சி -1

சாந்தியும் சந்துஷ்டியும் காட்டும் புன்னகையுடன்
தியானத்தில் அமர்ந்திருந்தார் புத்தர்
முழுநிர்வாணத்தை நோக்கி
அரை நிர்வாணத்துடன்
ராட்டை சுற்றிக் கொண்டிருந்தார் காந்தி
ரத்தம் சொட்ட தன்னைத்தானே
சிலுவையில் அறைந்து கொண்டிருந்தான்
மரிக்கவும் உயிர்த்தெழவும் அறிந்த மேதை

வெளியே இருந்து ஓர் ஓலக்குரல்
உள்ளே புகுந்தது
அரைக்கணம் தாமதித்திருக்குமா ?
புகுந்த வேகத்தில் வெளியே ஓடிற்று
ஆனால் அந்த அரைக்கணத்தில்
அக்குரல் உருமாறியிருந்தது
சாந்தியும் துக்கமும் நிறைந்த ஒரு குரலாய்

காட்சி 2

நான் உள்ளே புகுந்தபோது
ஒரு காபி கிடையாதா என்றார் புத்தர்
தனது இதயத்தை ஒரு யாசகக் குவளையாய்
குலுக்கினார் யேசு
பட்டினிக்குழந்தைகளுடன்
கைவிடப்பட்ட பெண்ணின்
சீரழிந்த புன்னகையைப்போல
ஒரு புன்னகையை வீசிவிட்டு
ராட்டை சுற்றினார் காந்தி

அதீத துக்கத்தால் என் இதயம் வலித்து எழுந்த குரல்
வேகமாய் குதித்தது ஜன்னல் வழியே வெளியே
வெளியே குதித்த குரல் வீதியெல்லாம் அலைந்து
நாற்றமடிக்கும் ஓர் அவலக்குரலாய் மாறியது

4] இந்தத் தொழில்
————————–

கபடமற்றதோர் அன்புடனும்
அற்புதமானதோர் உடன்படிக்கையோடும்
கடவுளும் சாத்தானும்
கைகுலுக்கிக்கொண்டு நிற்பதைக் கண்டேன்.
கடவுள் முதல்போட
சாத்தான் தொழில் செய்ய
கடவுள் கல்லாவில் இருக்க
சாத்தான் வினியோகத்திலிருக்க
அற்புதம் ஒன்றுகண்டேன்
கவிதை எழுதிக் கொண்டிருக்கையில்

அங்கே
என் சிந்தனை ஒன்றைக் கொடுத்து
படிமம் ஒன்று வாங்கிக் கொண்டிருந்தேனா ?
அல்லது
படிமம் ஒன்றைக் கொடுத்து
சிந்தனை ஒன்றை வாங்கிக் கொண்டிருந்தேனா ?

சேச்சே என்ன கேள்விகள் இவை ?
கடவுளும் சாத்தானும் கைகோத்த கோலத்தை
கண்டதற்கு சாட்சியாய் பாடும் என் இதயம்
அக்கறை கொள்ளாது இந்த தொழில்மீது.

5 ] மாண்புமிகு கடவுளைப்பற்றிய ஒரு கட்டுக்கதை
—————————————————————

கடவுளையும் அனுமதிககதபடி
அந்த அறையை சுதந்தரித்திருந்தார்கள் அவனும் அவளும்
ஆனால் செளகரியமான ஒரு சூக்கும உருவுடன்
கடவுள் இருந்தார் அங்கே ஒரு படைப்பாளியின் ஆசையுடன்

ஒரு பெரும் கச்சடாவாக இருந்தது அவர்கள் பாஷை
அவருக்கு அது புரியவில்லை முழித்தார்
என்றாலும் மேதமை மிக்கவரானதனால்
அந்த நாடகத்தின் சாராம்சத்தை அவர் புரிந்துகொண்டார்

அவர்கள் ஆடைகளை களைந்தபோதுதான்
அவர் கண்களில் ஒளிர்ந்தது ஒரு தெளிவு
ஆனால் அவர்கள் விழிகளில் நின்றெரிந்தது
ஓயாத ஒரு புதிர்
அப்புறம் அவர்களைதழுவியது ஒரு வியப்பு
தத்தம் விழிகள் விரல்கள் இதழ்கள் மற்றும் சதையின்
ஒவ்வொரு மயிர்க்கால்களைக் கொண்டும்
துதியும் வியப்பும் பாராட்டும் சீராட்டும் பெற்றது
கடவுளின் படைப்பு

சந்தோஷமும் வெட்கமும் கிள்ள
முகம் திருப்பிக் கொண்டார் படைப்பாளி
அளவற்ற உற்சாகத்துடன் அங்கிருந்து கிளம்பி
தன் பட்டறைக்குள் நுழைந்தவர் திடுக்கிட்டார்
அங்கே அவரில்லாமலே
தானே இயங்கிக் கொண்டிருந்தது படைப்புத்தொழில்

அன்றுமுதல் கடவுளைக் காணோம்

இதுவே
புதிரான முறையில்
இப்பூமியை விட்டே காணாமல் போன
கடவுளைப் பற்றிய கதை

6 ] விதிகள்
——————-

மகளை ஒரு முழு உருவப் புகைப்படமாக மாற்றி
பைக்குள் வைத்துக் கொண்டு மாப்பிள்ளைதேடும் தந்தை
பழையபடி அப்புகைப்படத்தை
ஒரு பெண்ணாக மாற்றவல்ல மந்திரவாதி ஆவார்.

உற்றத்திலும் சுற்றத்திலும்
ஒரு இதயத்தைக்கூட சந்தித்தறியாத ரசிகன்
அவன் தன் கலைஞனைக் கண்டவுடன்
உயிர்பெருகி சாவான்

வண்ண விகாரங்களும் கர்ண கொடூரங்களூமான
வாழ்க்கையை
வெற்று திரைச்சீலையையும் ஒற்றை வண்ணமும் கொண்டு
எதிர்கொள்ளும் கலைஞன்
உதிரச்சாயம் உள்ளவரையே அவன் வாழ்க்கை

எளியவன் நான் நன்றாகவே அறிவேன்
வரிசையாக நிறுத்தி வைத்தான் நானே கடைசி மனிதன்
முதல்வனை கடவுளை அல்லது மகாத்மாவை
நான் நனறாகவே அறிவேன்
அவரை அடுத்துநிற்கும் பேற்றை நான் பெற்றுள்ளதால்!
எவ்வாறெனில்
பூமி ஒரு கோளம் அதில்
ஒவ்வொரு உண்மையும் ஒரு வட்டம்

இடத்தை அடைக்கும் பொருட்கள் மேலெல்லாம்
தூசியாய் படியும் பரம்பொருள் அது !
அதுமட்டுமென்ன
விதிகளுக்குள் அடங்காது
எல்லாவற்றுக்கும் விதிகளை இயற்றிக் கொண்டிருக்கிறது .

7 ] வெற்றுக்குவளை
—————————

வெற்றுக்குவளையை தந்து சென்றவன்
வந்து பரிமாறுவதற்குள்
என் ஆசைகளால் நிறைத்து விட்டேன் அதனை.
துக்கத்தால் நிறைந்துவிட்டது வாழ்க்கை
காணுமிடமெங்கும் மெளனமாய் நிறைந்திருந்தது
என் குவளையில் பரிமாறப்படாத பொருள்.
என் ஆசைகள் பருகி முடிக்கப்பட்டு
காலியாகி நின்ற குவளையில் பரிமாறப்பட்டு
ததும்பியது அது.
வெற்றுக்குவளையை தந்து சென்றவன்
வந்து பரிமாறியது அது
இப்போது நான் பருகிக் கொண்டிருப்பது .
பருகி முடித்ததும்
மீண்டும் பரிமாற வந்தவன் முகத்தில்
என் முகத்தில் தன் மரணத்தை
கண்டதன் கலக்கம்

***

8 ] பலி
—-

யார் உண்டாக்கிக் கொண்டிருப்பது
நூறு நூறு மின்னல்களால் அறியப்படும்
இவ்வாளின் சுழற்சியை ?
எவருடைய சிந்தனைகள் இவை ?
அன்றைய காலை சூரியனின்
முகத்தில் ஓர் ஏளனப்புன்னகை

9]இறையியல்
—————–

‘ஆண்டவர் முதலில் ஆதாமையும்
அப்புறம் அவனுக்கு துணையாக ஏவாளையும்.. ‘
என்பது ஓர் ஆணாதிக்கப்பொய்
ஆண்கடவுள் ஆதாமையும்
பெண்கடவுள் ஏவாளையும் படைத்தனர்

தத்தமது ஏகாந்தநிலை சலிப்புற்று
ஆதாமும் ஏவாளும் காதலிக்கத் தொடங்கிய
மண்ணின் அழகுகண்டு உண்டான தாபம் உந்த
ஆண்கடவுளும் பெண்கடவுளும் காதலிக்கத்தொடங்கினர்

கடவுளர்கள் ஒரு குழந்தையை கருவுறுவதற்கு முன்
ஓராயிரம் கோடி மக்களை பெற்றிவிட்டனர் ஆதி தம்பதியினர்

துன்பச் சூழலில் இருந்து விடுபட ஆதாமும் ஏவாளும்
தத்தமது கடவுளை நோக்கி திரும்பியபோது
ஆட்சிபீடத்தை சாத்தானுக்கு விட்டுவிட்ட
கடவுள் தம்பதியினர்
கலவியிலிருந்தே இன்னும் விடுபடவில்லை

மீட்சிக்கு இனி எங்கேபோவது ?ஆதாமும் ஏவாளும்
தங்கள் காதலுக்கு முன்னாலுள்ள ஏகாந்த
வானிலிருக்க கூடும் தங்கள் கடவுளர்களின்
சொற்களை தேடிக் கொண்டிருந்தனர்.

வானத்திலிருந்து சொற்கள்
பறவைகளை ஏந்திக் கொண்டதை கண்டனர்
மேகங்களை உருவாக்கி
மழையை பொழிந்ததைக் கண்டனர்
உயிர்காக்கும் உணவாகி தங்கள் இரத்தத்தில்
காலங்காலமாய் துடித்துக் கொண்டிருப்பதையும்
இன்னும்…. அவர்கள் முடிவற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்
வானத்துச் சொற்களின் முடிவற்ற வேலைகளை

10] பட்டறை
————-

என்னை அழைத்துவந்து
என் பெயரை ஏன் கேட்கிறாய் ?
என்னை நீ அழைப்பதற்கு
என் பெயர் உனக்கு தேவைப்படவில்லையே ?
எனக்கு நீ இட்ட பணி
எதுவென நான் அறிவேன்
எனக்குள் வலிக்கிறது
எதனாலென நான் அறியேன்
நெருப்பில் பழுத்த
இரும்புத்துண்டம்போல
என் நெஞ்சே எனக்குத்
துயர் தரும் சேதிகேட்டு
தோள்குலுக்கி ஊர் சிரிக்க
ஒப்புகிறதா உன் உள்ளம் ?
எந்த ஒரு பூவும் மலரவில்லை
இப்போதெல்லாம் என் வதனத்திலிருந்து
மந்திரக்கனி எதுவும் தோன்றவில்லை
ஓர் உள்ளங்கைக்கு நான் பரிமாற .
உன் பிரசன்னம் என்னை சுட்டுருக்குகிறது
உன் சம்மட்டி அடி என் தலைமீது.
அம்ருதக்கடலில் இருந்து
அலை ஓசை கேட்கிறது .
அக்கினிக்கடலில் இருந்து
அலறும் குரல்களும் கேட்கின்றன.
உன் கம்பீரப்பதில் குரலாய்
என் தலைமீது ஒலிக்கிறது
உன் சம்மட்டி அறை ஓசை.
காலிக்குடமாகவா
தங்கத்தோணியாகவா
ஓர் கூர்வாளாகவா
என்னவாக்கிக் கொண்டிருக்கிறாய்
என்னை நீ ?
ஒன்றும் புரியவில்லை.
உணர்வதெல்லாம்
குறைகூற முடியாத
ஓர் வேதனையை மட்டுமே.

தேவதேவன் கவிதைகள் தொடர்பு
———————————————
http://www.thinnai.com/ar0812023.htm
வீடு http://www.thinnai.com/pm0812024.html
மரம் http://www.thinnai.com/pm0819028.html
பறவை http://www.thinnai.com/pm0825025.html
***
தொகுப்பும் தட்டச்சும் – ஜெயமோகன்

Series Navigation

தேவதேவன்

தேவதேவன்