பெண்தெய்வம்

This entry is part [part not set] of 24 in the series 20020805_Issue

அனந்த்


1. கவிதையென்னும் கள்ளையள்ளி உண்டு
காலமெலாம் களிக்குமிந்த வண்டு

…. தவிதவித்துத் தத்தளிக்கும்
…. தஞ்சம்என்று கைகுவிக்கும்

புவியிலதன் பே(டு)அதனைக் கண்டு!

*****

2. அன்றொருநாள் (கடந்தஆடி வெள்ளி)
அடுக்கித்தந்த வீட்டுவேலை தள்ளி

…. என்கருத்தில் தடங்கலேது
…. மின்றிக்கவி தொடங்கும்போது

நின்றனள்முன் அவள்,என்காதைக் கிள்ளி!

*****

3. கவிஞனைநான் ஏன்மணந்தேன் என்று
கண்கசக்கும் என்மனைவி இன்று

…. அவியலுடன் ரசமும்வைத்து
…. அப்பளம்பா யசம்சமைத்துச்

செவியில்சொன்னாள்: உம்குறும்பா நன்று!

***
ananth@mcmaster.ca

Series Navigation

அனந்த்

அனந்த்