எது பொய் ?

This entry is part [part not set] of 25 in the series 20020106_Issue

கோமதி கிருஷ்ணன்


கண் என்பார் மணி என்பார் மாணிக்கம் என்பார்

பசும்பொன் குவிய லென்பார், இதிலேதாவது

நிகராகுமோ தாய்க்குத் தான் ஈன்றெடுத்த சேய்க்கு ?

உலகம் பொய்என்பார் காண்பதெல்லாம் மாயை என்பார்

எது பொய் எது மாயை என்பது விளங்காமல் தவிக்கும்

இந்தத் தாய்க்கு எந்த விளக்கமும் ஒப்பவில்லையே, தாயே!

வேண்டித் தவமிருந்து உன்வரமாக நான் அடைந்தது பொய்யா ?

சுமந்தது பொய்யா ? நொந்து ஈன்றது பொய்யா ?

உன் அம்சமாகக் கிடைத்தாக நம்பியது பொய்யா ?

கண்மணியாய் வளர்த்தது பொய்யா ? மணம் முடித்து

மகிழ்ந்ததுதான் பொய்யா ? மகிழ்ச்சி கண்டு பொங்கிய

போதும் உன் கருணையை நம்பிப் புகழ்ந்ததுதான் பொய்யா ?

எல்லாம் பொய்யென்று காட்ட எடுத்து கொண்டாயா ?

தவித்துத் துடிக்கும் அறிவிலித் தாயான எனக்கு

ஜகன்மாதா! உன்பதில் தான் என்ன ? சொல்வாய்!

மயங்கிய என்கனவில் வந்த கருணைக்கடலே அம்மா!

நொடியில் நான் கண்ட உன் திவ்ய ரூபமே

நான் அடைந்த ஜன்ம ஸாபல்யம், அது ஒன்றே போதும்.

நீ தந்தவிளக்கம் மஹா ஞானியருக்கும் கிடைக்குமோ ?

‘விளையாட்டுக் குழந்தையான உனக்கு விளையாட

நான் தந்த பொம்மை (பொய்மை) உனக்குச் சொந்தமல்லவே குழந்தாய் ? ‘

உன்னிலிருந்து எடுத்துக் கொடுத்த ஜோதி

உன்னையே திரும்பி அடைந்ததில்

அளவிடாத ஆனந்தமே எனக்கு, என் அம்மா!

Series Navigation

கோமதி கிருஷ்ணன்

கோமதி கிருஷ்ணன்