காலம் விழுங்கிய காலன்.

This entry is part [part not set] of 25 in the series 20011222_Issue

ஜெயானந்தன்.


எப்போது எடுத்தான் உளியை
உன்னை பார்த்தா……… ?
என்னை பார்த்தா………… ?
எதைப்பார்த்து ? யாரைப்பார்த்து ?
கல்லில் உயிர் கொடுத்தான்,
பெண்ணின் உயிர் எடுத்து.
கண்களுக்குள் மின்னல் மறைத்து
இதயத்தில் இறங்கிய கல்நதி.
கல்லெல்லாம் உயிர்,
உயிரெல்லாம் கல்.
சிலைசெய்தான் சிலையானான்
சிலையருகே கிடந்தான் சிலையாக.
சரித்திரம் புரண்டது,
சாம்ராஜ்ஜியங்கள் மாண்டது.
கலை கொண்ட உயிர் மட்டும்
காலம் கடந்து நின்றது.
கலைஞன் விழுங்கிய காலம்
வழிநெடுக துண்டுதுண்டு உயிர்கள்.
இடையும், தொடையும், அல்குலும்;
அளந்து படைத்தான்.
கண்களும்,கைகளும்,முலைகளும்
முடிவாய் படைத்தான்.
பாறையெங்கும் அவன்
பாதச் சுவடுகள்.
தூண்களெங்கும் அவன்
உளியின் ராகங்கள்.

Series Navigation

ஜெயானந்தன்

ஜெயானந்தன்