சம்மதம்

This entry is part [part not set] of 34 in the series 20051223_Issue

ரிஷபன்


‘சரசு மருந்து குடிச்சிருச்சு. ஆசுபத்திரிக்குக் கொண்டு போறாங்க ‘

தகவல் சொன்னவன் காத்திருக்கவில்லை. வண்டியைக் கிளப்பிக் கொண்டு போய்விட்டான். மணிவேல்தான் பதறினான்.

‘நான் போறேன்.. ‘

சண்முகம் விடவில்லை.

‘நீ நில்லு.. யாவாரத்தைக் கவனி.. நான் போயிட்டு என்னான்னு பார்த்திட்டு வரேன்.. ‘ கல்லாவைத் திறந்து கொஞ்சம் பணத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்பும் போது பார்வை தன்னிச்சையாய் பெற்றோர் படத்தின் மீது பதிந்தது. ‘கூட வரீங்களா ‘ சரக்கு எடுக்கப் போகும்போது.. வங்கியில் பணம் கட்டப் போனால்.. எந்த முக்கிய வேலை என்றாலும் ‘அப்பா..அம்மா ‘ படம். மனசுக்குள் வேண்டுதல். ‘கூட வாங்க ‘ தடங்கல் இல்லாமல் வேலை முடியும் என்ற நம்பிக்கை.

மணிவேல் தந்த குரலில் சொன்னான்.

‘உடனே ஃபோன் பண்ருங்க ‘

சண்முகம் தலையாட்டினான். பைக் உறுமிக் கொண்டு போனது.

‘தம்பி.. அரிசி 25 கிலோ வேணும்.. அனுப்பிடறீங்களா ‘

வாடிக்கையாளர் வந்ததும் புத்தியில் வியாபாரம் புகுந்தது.

‘அண்ணே.. கவர் பால் இருக்கா ‘

ஃப்ரிட்ஜைத் திறந்து அரை லிட்டர் பாலைக் கொடுத்து பணத்தை வாங்கிப் போட்டான். மளிகைக்கடை என்று பெயரே தவிர ஆத்திர அவசரத்திற்கு எல்லாம் விற்பனைக்கு வைத்திருக்க வேண்டியிருக்கிறது. ‘தலைவலி மண்டைய பொளக்குது.. ‘ என்று ஒருத்தர் வருவார். ‘கிப்ட் ஐட்டம் இருக்கா ‘ என்று கூட ஒருவர் கேட்டார். ‘இல்லை ‘யென்று அனுப்பியதும் மணிவேல்தான் உடனே அதற்கும் அவசரப்பட்டான்.

‘அண்ணே.. ஏதாச்சும் வாங்கி வைக்கணும் ‘

இதெல்லாம் ரெகுலர் விற்பனை இல்லை. பணத்தை முடக்க வேண்டாம் என்று சமாதானம் செய்யவேண்டியிருந்தது.

பெட்டிக்கடை ரேஞ்சில் எதிரில் கடை வைத்திருந்தவன் இவர்களுக்கு முன் போட்டி போட முடியாமல் வியாபாரம் படுத்துப் போய் காலி செய்து கொண்டு போய் விட்டான்.

அண்ணன் தம்பியா.. என்று ஒருத்தர் கேட்டாராம்.

‘ஏனாம் ‘

‘இல்லே.. ஒத்துமையா யாபாரம் பண்றாங்களே.. அது எப்படின்னு ‘

அண்ணனுக்கு பெண் பார்க்கப் போனபோது பெண் வீட்டில் முதலில் தரகர் இவனைத்தான் அறிமுகம் செய்தார்.

‘மணிவேலுன்னு சொன்னேனே.. அது இவருதான் ‘

வரப் போற அண்ணி எட்டிப் பார்த்தாங்களாம்.

‘கட்டிக்கப் போறவன் என்னைக் கூட இவ சரியாப் பார்த்தாளோ.. என்னவோ.. முத முதல்ல உன்னைத்தான் பார்த்தாளாம்.. ‘ என்று சண்முகமே கேலி செய்வான்.

கல்யாணப் பேச்சு ஆரம்பித்த உடனேயே மணிவேலை அழைத்துக் கொண்டு வங்கிக்குப் போனான்.

‘இவர் பேர்ல ஒரு அக்கவுண்ட் ஆரம்பிக்கணும்.. ‘

மணிவேல் பதறிப் போனான்.

‘எதுக்குண்ணே.. ‘

‘எல்லாம் நல்லதுக்குத்தான்.. ‘

கசமான தொகையுடன் ஆரம்பித்த கணக்கில் பணம் மாதாமாதம் ஏறிக் கொண்டிருக்கிறதே தவிர மணிவேல் எடுக்க வேண்டிய அவசியமே வரவில்லை. அதுவுமில்லாமல் இப்போது இன்னொரு வேலையும் சண்முகம் செய்து விட்டான். தரகர் வந்துவிட்டுப் போனதாக கடைப் பையன் சொன்னதும் முதலில் மணிவேல் நம்பவில்லை. ‘வீட்டுல வச்சுப் பேசாம கடையில வச்சு ஏன் பேசணும்.. ‘

மணிவேலுக்கு அண்ணனிடம் கேட்கத் தயக்கம். ‘அவரே சொல்லுவாரு.. ‘ என்று விட்டு விட்டான். பிறகுதான் புரிந்தது. மணிவேலுக்குப் பெண் பார்த்திருக்கிறான்.

‘அண்ணி.. உங்களுக்குத் தெரியுமா ‘

சண்முகம் குறுக்கிட்டுச் சொன்னான்.

‘அவதாண்டா பார்க்கச் சொன்னது.. உனக்கும் வயசாச்சில்ல ‘

அண்ணி சிரித்தாள்.

‘அதெல்லாம் ஒண்ணுமில்லே. நான் தனியா இருக்கேனாம். சண்டை போட ஆள் வேணுமான்னு கேட்டாரு.. கூட்டியாங்கன்னு சொன்னதும் உங்களுக்குப் பொண்ணு பார்க்கறாரு ‘

அண்ணி உறவில் ஒரு சம்பந்தம் இருப்பதாகத் தகவல்.

‘புடிச்சிருந்தா மட்டும் பேசலாம். எங்க வீட்டு மனுஷங்கன்னு ஒப்புத்துக்க வேணாம் ‘

கார் வைத்துக் கொண்டு போனார்கள். பெண் அப்படியொன்றும் அசத்தல் இல்லை. ஆனாலும் அவர்கள் வீட்டில் திரும்பத் திரும்ப ‘ரொம்ப மரியாதை தெரிஞ்ச பொண்ணு ‘ என்று சொன்னது மூளைச் சலவை செய்த மாதிரி ஆகி விட்டது. மறுபடி அதே பெண்ணைப் பார்க்க ‘ஆமா.. நான் அப்படித்தான் ‘ என்று சொல்கிற மாதிரி முகபாவம்.

‘என்னடா.. சொல்றே.. ‘

‘உங்களுக்குப் புடிச்சிருந்தா சரிண்ணே ‘

‘வாழப் போறவன் நீதாண்டா ‘

சண்முகம் சிரித்ததும் பெண் வீட்டார் விசாரித்தார்கள்.

‘என்னங்க.. ‘

அண்ணி ஏதோ சொல்ல முயற்சி செய்ய சண்முகம் தடுத்து விட்டான்.

‘தகவல் சொல்லி விடறேன்.. அப்ப வரட்டுங்களா ‘

வீட்டுக்கு வந்ததும் அண்தான் கேட்டாள்.

‘ஏன் அப்படிச் சொல்லிட்டு வந்தீங்க.. ‘

சண்முகம் மெளனமாக இருக்கவும் அண் மீண்டும் பதட்டமாய்க் கேட்டாள். மணிவேல் ஹாலை விட்டு வாசற்புறம் வந்து விட்டான். இருந்தாலும் சண்முகத்தின் குரல் தெளிவாய்க் கேட்டது.

‘உடனே சம்மதம்னு சொல்லி.. மணியை அவங்க குறைவா எடை போட்டிரக் கூடாதில்லே.. ஒரு வாரம் பொறுத்து சொல்லுவோம்.. நீ பேசாம இரு.. முந்திரிக் கொட்டையாட்டம் போய் உளறி வைக்காதே.. ‘ என்றான் கொஞ்சம் இறுக்கமாகவே.

ஒரு வாரம் என்பது அப்படி.. இப்படியென்று பத்துப் பதினைந்து நாள் ஆகி விட்டது. அதற்குள்தான் இந்தத் தகவல்.

‘நம்ம மணிவேலுக்குப் பார்த்தமே.. அந்தப் பொண்ணு.. மருந்து குடிச்சிருச்சாம்.. ஆசுபத்திரிக்குக் கொண்டு போயிருக்காங்க.. ‘

என்ன நடந்தது.. ஏன் மருந்து குடித்தாள். மனசு குழம்பிப் போனது.. என்னைப் பிடிக்கலியா.. காதல் தோல்வியா.. வீட்டார் வற்புறுத்தி எனக்குப் பேசியதால் இந்த முடிவா.. தறிகெட்டு ஓடிய மனசைக் கடிவாளம் போட முடியாமல் மணிவேல் தடுமாறித்தான் போனான்.

ஃபோன் மணி ஒலித்தது. அவனையும் அறியாமல் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். ஒரும நேரம் ஓடிவிட்டது. அவசரமாய் ரிசீவரை எடுக்க சண்முகத்தின் குரல்.

‘ஒண்ணும் பயமில்லே.. புழைச்சிருச்சு ‘

ஹப்பாடா.

‘அண்ணே.. வந்து.. ‘

‘அண்ணியும் நானுந்தான் வந்தோம்.. அவ இங்கே தங்கிட்டு வரேன்னா.. நான் அரை மணியில கடைக்கு வந்திருவேன்.. வச்சிரட்டுமா ‘ பதிலை எதிர்பாராமல் வைத்து விட்டான். மணிவேல் ‘அண்ணே.. அண்ணே ‘ என்று கத்தியதுதான் மிச்சம்.

இனி அவன் வரும்வரை நிலை கொள்ளாது. பதில் தெரியாத கேள்விகள் தலையைக் குடைந்து கொண்டிருக்கும். இன்னும் முப்பது நிமிஷம். இருபத்தொன்பது.. இருபத்தெட்டு.. ஏன் இத்தனை மெதுவாக நகர்கிறது..

‘எங்கே பெரியவரைக் காணோம்.. ‘ வாடிக்கையாளர்தான். ஒருவகையில் உறவுகூட. ‘வெளியே போனாரு.. வந்திருவார் ‘ என்றான் மணிவேல்.

‘நம்ம பொண்ணு கல்யாணம் ஞாபகம் இருக்கில்ல.. சாமான் முழுக்க நம்ம கடையிலதான்.. எப்ப லிஸ்ட் கொடுக்கட்டும்.. ‘

‘ஒன் அவர் டைம் கொடுங்க.. கொண்டு வந்து எறக்கிர மாட்டோம்.. ‘ என்று வழக்கமாய் உற்சாக பதில் வரும். இன்று மெதுவாகத் தலையாட்டினான். வந்தவருக்கே அவன் சுணக்கம் புரிந்து போனது.

‘என்ன தம்பி.. மேலுக்கு சுகமில்லியா ‘ சுதாரித்துக் கொண்டு தலையாட்டினான். ‘நல்லாத்தான் இருக்கேன் ‘ பெரிதாய் ஒரு சிரிப்பும் சிரித்து வைத்தான்.

‘அதானே பார்த்தேன்.. வெக்கை அதிகமா.. அதான் தம்பி முகம் வாடியிருக்கு.. ‘ என்று அவராகவே ஒரு காரணம் கற்பித்துக் கொண்டு போய் விட்டார்.

சண்முகத்தின் பைக் சத்தம் கேட்டது. வரட்டும். அவசரப் படக்கூடாது. அவனாகவே சொல்லட்டும். மணிவேல் ஏதோ வேலையாக இருப்பதுபோல காட்டிக் கொண்டாலும் பார்வை சண்முகத்தைத்தான் தேடியது.

உள்ளே வந்து கல்லாவின் அருகில் உட்கார்ந்து பெரிதாய் மூச்சு விட்டான். சொம்புத் தண்ர் கடகடவென இறங்கியது. தொண்டைக் குழி மேலும் கீழும் ஏறி இறங்கியதைப் பார்த்துக் கொண்டிருந்த மவேலுக்கு பொறுமை இறங்கிக் கொண்டிருந்தது. ‘அண்ணே.. நல்லா இருக்கில்ல ‘

‘ம்ம் ‘

‘எ..என்னவாம்.. ‘

‘மருந்து குடிச்சிருச்சு ‘

‘தெரியாமலா ‘

‘தெரிஞ்சுதான் ‘

‘ஏ..னாம் ‘ மவேலின் குரல் அடைத்துக் கொண்டது.

‘நாம பதில் சொல்லாம லேட்டாயிருச்சில்ல.. ஒரு வேளை புடிக்கலியோன்னு.. தப்பா யூகம் பண்கிட்டு.. ‘

சண்முகத்திற்கு இப்போது குரல் பிசிறியது. ஒருவேளை தன்னால் தானோ..

‘அப்புறம்.. ‘

‘நல்ல பொண்ணும்மா.. நாள்.. நட்சத்திரம் பார்க்க வேணாமா.. டப்புனு எதையாச்சும் சொல்லிர முடியுமான்னு சமாதானம் பண்.. இப்படி பொசுக்குன்னு மருந்து குடிச்சா.. எந்த நம்பிக்கையில உனக்கு சம்மதம் சொல்றது.. எங்க வீட்டுல வந்தபிறகும் இந்த மாதிரிதான் இருப்பியான்னேன்.. பாதியை அதுவே துப்பிருச்சு. முழுசாக் குடிக்கலே.. ஒருவாய்கூட உள்ளே போவலே.. அதுக்குள்ர இவங்க பதறிப் போய் ஆசுபத்திரிக்குக் கூட்டிகிட்டு போயிட்டாங்க.. உன் அண்ணி கேட்டா.. ருசி பார்த்துக் குடிக்கிற மனுஷ’யா.. உடனே துப்பிட்டியேன்னு.. பொண்ணுக்கு எதுவும் ஆபத்தில்லேன்னு தெரிஞ்சப்புறம்.. இந்தப் பேச்சு எல்லாம் ‘

மவேல் மெளனமாக இருந்தான். தானம் வந்திருந்தது. தன்மீது பெண்ணுக்குக் மனக்குறை இல்லை.

‘ரெண்டு கிலோ ரவை.. ஒரு கிலோ மைதா.. மூணு கிலோ சக்கரை.. ‘

கடைக்கு வந்தவர் கையில் வைத்திருந்த லிஸ்டைப் பார்த்துப் படிக்க ஆரம்பிக்க மணிவேல் கைப்பேடில் குறிக்க ஆரம்பித்தான்.

‘இங்கே கொடுரா.. நான் பார்த்துக்கறேன்.. ‘ என்றான் சண்முகம் கையை நீட்டி.

‘நான் சும்மாதான்னே இருக்கேன்.. ‘

‘ இந்தா சாவி.. போ.. பார்த்திட்டு வா.. உன் வாயால சம்மதம்னு சொல்லிட்டு வந்திரு.. யாவாரம் ஆவுதுன்னாலும் சும்மா சும்மா பூச்சி மருந்தெல்லாம் கடையில வாங்கி வைக்க முடியாதில்ல.. ‘

கை நீட்டி சாவியை வாங்கிக் கொண்ட மணிவேலுக்குத் தோன்றியது ‘அண்ணனின் சிரிப்புகூட அழகுதான் ‘.

— ரிஷபன்

Published in Kalki Deepavali Malar

rsrini@bheltry.co.in

Series Navigation

ரிஷபன்

ரிஷபன்

சம்மதம்

This entry is part [part not set] of 23 in the series 20010902_Issue

அ மணவழகன்


உம் என்று சொல்

உலகை உன்னுடையதாக்குகிறேன்!

சரி என்று சொல்

சகத்தினை உன் சேலை சரிகையில் கட்டுகிறேன்!

விருப்பம் என்று சொல்

விண்ணை மண்ணிற்குக் கொண்டுவருகிறேன்!

என்றெல்லாம் நான் பொய் சொல்லமாட்டேன்!

சம்மதம் என்று ஒரு பார்வை பார்

உன்னை வாழவைத்துக்காட்டுகிறேன்

உனக்காகவே நான் வாழ்ந்து காட்டுகிறேன்!

Series Navigation

அ மணவழகன்

அ மணவழகன்