சேவியர் கவிதைகள்

This entry is part [part not set] of 22 in the series 20010825_Issue

1)வேப்ப நிழல் நினைவுகள்… 2)- அவரவர் வேலை அவரவற்கு… -3) இன்னும் சில பக்கங்கள்….4) மழை


***

வேப்ப நிழல் நினைவுகள்…

பள்ளிக்கூட பிள்ளை நாட்களில்

வீட்டுக்கு மேற்கே நிற்கும்,

வேப்பமர நிழலில் படித்து…

கல்லூரி நாட்களில்

ஏதோ ஒரு பூங்காவின் எல்லையில்

வேப்பமர அடியில் படுத்து…

நடுவயது நாட்களில்

வெயில் தீயின் வேகம் இறக்க

சாலைக் கரைகளில்

வேப்ப மர நிழல் தேடி..

வியர்வையால் வருந்திய

வருடங்கள் அவை…

இப்போது

சுத்தமான காற்று வேண்டுமென்று

சாய்வு நாற்காலி எடுத்து

வேப்பமர நிழலில் இடுகிறேன்.

என் பேரனுக்கு

மின்விசிறி தான் பிடித்திருக்கிறதாம்.

மெத்தையில் படுத்து

படித்துக் கொண்டிருக்கிறான்.

எனக்கோ,

கிளையசைத்துக் கதைபேசி,

இலையசைத்து விசிறிவிடும்

வேப்பமரம் தான் தோழனாய் இருக்கிறது.

பிள்ளைகளுக்கு பரபரப்புப் பிராயமானபின்,

என் முதுமையின் முனகல்களை

முணுமுணுக்காமல் கேட்பது

என் கைத்தடியும் இந்த வேப்பமரமும் தானே…

*****

அவரவர் வேலை அவரவற்கு…

இந்த கணிப்பொறி வேலை

பாடாய்ப் படுத்துகிறது.

எழுத்துக்களின் மேல் ஓடி ஓடி

கை விரல்களுக்குக் கால் வலிக்கிறது.

எத்தனை நேரம் தான்

வெளிச்ச முகம் பார்ப்பது ?

கண்களுக்குள் பார்வை கொஞ்சம்

பழுதடையும் வாசனை.

உட்கார்ந்து உட்கார்ந்தே

என்

முதுகெலும்புக்கும் முதுகு வலி.

எல்லாம் எழுதியபின்

அவ்வப்போது

தொலைந்துபோகும் மின்சாரம்,

எரிச்சலின் உச்சிக்கு என்னை எறியும்.

வேண்டுமென்றே பிடிவாதம் பிடிக்கும்

சில சில்லறை வேலைகள்…

நிம்மதியை நறுக்குவதற்காகவே

கத்தியோடு அலையும் வைரஸ்கள்.

அவ்வப்போது எட்டிப்பார்த்து

நிலமை கேட்கும் மேலதிகாரி…

முரண்டுபிடித்து ஸ்தம்பிக்கும் என் கணினி.

தேனீர் தேடச்சொல்லும் தளர்வு…

அப்பப்பா…

இந்த கணிப்பொறி வேலை

பாடாய்ப் படுத்துகிறது…

சோர்வில் சுற்றப்பட்டு மாலையில்,

வீடுவந்ததும் மனைவி சொல்வாள்

உங்களுக்கென்ன

உக்கார்ந்து பாக்கிற உத்யோகம்…

****

இன்னும் சில பக்கங்கள்….

நண்பர்களே…

ஏன் இந்த சிந்தனை ?

போர்கள் வாழை மரங்கள்,

ஒன்றின் முடிவில் இன்னொன்று முளைக்கும்.

போர்ப்பயிரை நிறுத்துங்கள்.

பாதுகாப்புக்காய்

எழுபது விழுக்காட்டை ஒதுக்கி,

பாட்டாளிகளை பட்டினிக்குள் பதுக்கி,

வறுமைக்கோட்டை இறுக்கிக் கட்டும்

இந்த மண்டையோட்டு அறுவடை

இருபதாம் நூற்றாண்டிலுமா ?

ஒவ்வோர்ப் போரின் பின்னாலும்

பலியிடப்படும் பொருளாதாரமும்,

தீயிடப்படும் தியாகிகளின் உயிரும்,

மிஞ்சுவதெல்லாம்

மட்கிப்போன தடயங்கள் மாத்திரம்.

உலகத்தைச் கோரைப்பாயாய்

சுடுட்டிக் கட்டியவர்கள் எல்லாம்,

விரலிடுக்கில் சிறு வெண்கலம் கூட

எடுத்துச் சென்றதில்லை.

நீயா.. நானாப் போட்டிகள்

எப்போதுமே

மூன்றாவது மனிதனென்று தானே

முடிவாகியிருக்கிறது !

மலைச்சரிவுகளில் ஞானிகள்

முளைக்கலாம்…

ஆனால் மனச் சரிவுகளில் தான்

மனிதர்கள் முளைக்க முடியும்.

தேசியப்பறவையாய் மயில் இருந்தும்

வல்லூறுகளை மட்டும்

வழிபடுவது நியாயமில்லை என்பதால்…

இதோ…

முதல்

சமாதானப் புறாவை பறக்கவிடுகிறேன்

தயவு செய்து அதை

சமையலுக்குப் பயன்படுத்தாதீர்கள்.

***

மழை

மெல்ல மெல்ல மனக்கேணியில்

தெறித்துச் சிதறுகிறது நீர் முத்துக்கள்.

வெளியே மழை.

மண்ணோடு ஏதோ சொல்ல

மரண வேகத்தில் பாய்கிறது மேகம்.

மழை…

இயற்கை செடிகளுக்கு அனுப்பும்

பச்சையப் பராமரிப்பாளன்.

சாலைகளுக்கோ அவன்

சலுகைச் சலவையாளன்.

வாருங்கள்,

குடைகளுக்குள் நனைந்து போதும்

தண்ணீரால் தலைதுவட்டிக் கொள்ளலாம்.

பாருங்கள்,

அந்த வரப்பின் கள்ளிகள் கூட

கண்திறந்து குளிக்கின்றன…

சின்னச் சின்ன சிப்பிகள் கூட

வாய் திறந்து குடிக்கின்றன…

பூக்கள் செல்லமாய்

முகம் கழுவிக் கொள்கின்றன.

முகம் நனைக்க முடியாத வேர்கள் கூட

அகம் நனையக் காத்திருக்கிண்றன.

மழை வேர்வை சிந்தியதும்

பூமிப்பெண்ணிடம் புதுவாசனை…

இப்போது தான்

சகதிக்கூட்டைச் சிதைத்து வெளிக்குதிக்கின்றன

பச்சைத் தவளைகள்…

முகம் சுருக்க மறுக்கின்றன

தொட்டாச்சிணுங்கிகள்.

புற்களைக் கழுவி சாயவிட்டு,

காய்ந்த ஆறுகளில் ஆழப்பாய்ந்து,

சிறுவர்களின் காகிதக் கப்பல்களைக் கவிழ்த்து,

மரங்கொத்திக்கு தாகம் தணித்து

இதோ நதியைக் குடிக்கப் பாய்கிறது

மண்ணில் குதித்த மழை.

பூமிக்கு வானம் அனுப்பிய

விண்ணப்பக் கயிறு இது ?

காற்று ஏறி வர

வானம் இறக்கிவைத்த

இந்த தண்ணீர்ஏணி மேகத்தின் முதுகில்

தான் சாய்க்கப்பட்டிருக்கிறது.

அவ்வப்போது வானம்

மின்னல் நுனியில்

இடி கட்டி இறக்குகிறது.

மொட்டைமாடியில் இளைப்பாறி,

நாட்டிய நங்கையின்

சலங்கையொலியாய் சன்னலோரம் சிதறி,

குவிந்த இலைகளின் கழுத்து வரைக்கும்

குளிர் ஊற்றி சிரிக்கிறது

இந்த மழை.

தேனீர்க் கோப்பைகளில் வெப்பம் நிறைத்து

கதகதப்புப் போர்வைக்குள் உடலைப் பொதிந்து,

சாரளங்கள் வழியேயும்

மழையை ரசிக்கலாம்…

உச்சந்தலைக்கும்

உள்ளங்கால் விரலுக்குமிடையே

ஈரச் சிறகைச் சுற்றிக்கொண்டும்

மழையை ரசிக்கலாம்..

மழை.. அது ஒரு இசை.

கேட்டாலும் இன்பம்,

இசைத்தாலும் இன்பம்.

நல்ல இசை தன் ரீங்காரத்தை

காதோரங்களில் விட்டுச் செல்லும்…

மழை மாவிலையில் விட்டுச் செல்லும்

கடைசித் துளிகளைப்போல.

வாருங்கள்,

குழாய்த்தண்ணீர்க் கவலைகளை

கொஞ்சநேரம் ஒத்திவைத்துவிட்டு…

இந்த சுத்தமழையில்

சத்தமிட்டுக் கரையலாம்….

மழை…

புலன்கள் படிக்கும் புதுக்கவிதை…

மழை…

பூமிக்கு பச்சை குத்தும்

வானத்தின் வரைகோல்…

மழை…

இளமையாய் மட்டுமே இருக்கும்

இயற்கையின் காவியம்…

மழை…

இலக்கணங்களுக்குள் இறுக்கமுடியாத

இயற்கையின் ஈர முடிச்சு…

***

Series Navigation

'அந்நியமற்ற நதி ' தொகுப்பிலிருந்து.

'அந்நியமற்ற நதி ' தொகுப்பிலிருந்து.

சேவியர் கவிதைகள்.

This entry is part [part not set] of 20 in the series 20010805_Issue

நீள்பாதை, பூனைக்குட்டி, தூக்கம்


***

நீள் பாதை….

பிாியமே..
வருடங்கள் எவ்வளவு விரைவாய்,
பந்தையக் குதிரையாய்ப் பாய்ந்து போனது
பார்த்தாயா நீ ?

உன்னோடு செல்லமாய்ச் சண்டையிட்டு,
நீ குழந்தையாய் கோபித்துக் கொள்ளும் போது
உன் கரம் கோர்த்து,
கூந்தலின் இழையிடையே விரல் வரைந்து
மூச்சுக்காற்று மூச்சுத்திணறும் நெருக்கத்தில்
மன்னிப்புக் கேட்ட பொழுதுகள்….

நீயும் நானும் தவிர
உலகத்தில் எல்லாமே ஐந்தறிவு ஜ ‘வன்கள் என்று,
தூக்கமே தூங்கத்துவங்கிய பின்னிரவுப் பொழுதிலும்,
கதைபேசிக் கதைபேசியே
நாட்களைக் கிழித்தெறிந்த நாட்கள்.

உன் உதட்டுக்கும்
என் உதட்டுக்குமிடையே மட்டும்
ஓயாமல் நடந்துகொண்டிருந்த
தொடர் ஒப்பந்தங்களின் தியதிகள்….

வாழ்த்து அட்டை கவர்களின்
ஓரம் கூடக் கிழியாமல்
காதலின் முத்திரைகள் என்று
முத்தமிட்டு சேமித்துக் கரைத்த வருடங்கள்…

இப்போது,
மனசின் வெயில்ப் பிரதேசங்களில்
நிகழ்ந்தவற்றின் சில நிழல்ப்பதிவுகள் பட்டுமே.
கல்லூாிக்குச் செல்கின்றன நம் குழந்தைகள்.
காதலிப்பதற்கு நமக்கு நேரம் கிடைப்பதில்லை…

முன்னினைவுகள் வந்து முகம் தட்டும்
பின்னிரவுப்பொழுதில் அவ்வப்போது உன்
முகம் பார்த்துக் கிடக்கிறேன்….
ஆழமாய்த் துயில்கிறாய் நீ, அதே அழகுடன்.
அடுத்த அறை தொலைபேசியில்
நம் மகள் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறாள்
அதே சிாிப்புடன்…

****

பூனைக்குட்டி

அது ஒரு மிக அழகான பூனைக்குட்டி…
உடல் முழுதும்
வெண்பஞ்சு ஒட்டிவைத்ததாய்,
வெல்வெட்டை வெட்டி வைத்ததாய்,
பாதரசப் பயணமாய் வழவழப்பு.

மெல்லிய மீசையை மெதுவாய் என்
முகத்தில் தேய்த்து விளையாடும்…
என் தோளுக்கும் காலுக்குமாய்
அவசரப் பாதங்களுடன்
மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ளும்.

கூாிய நகங்கள் அதற்கு…
ஆனால் ஒருமுறை கூட காயம் தந்ததில்லை,
உறைக்குள் சொருகப்பட்ட சிறுவாளாய்
விரல்களுக்குள் புதைந்து கொள்ளும் அவை.

தரையில் உணவுதந்தால் அடம்பிடிக்கும்,
பாத்திரத்தில் பாிமாறினால் மட்டுமே
முத்தமிட்டு ஒத்துக்கொள்ளும்.

என் படுக்கைக்குள் அவ்வப்போது
குறுகுறுக்கும்…
பாத்திரங்கள் கலைத்து பால் தேடும்,
என் தனிமைத் திண்ணையில் தலைகோதும்.

நான் வீடுதிரும்பும் வேளைகளில்
வாசலோரத்தில் வந்து சத்தமிடும்…
கால்களைச் சுற்றிச் சுற்றியே வட்டமிடும்..

என் உயிர்த் தோழனாய்..
அந்த சின்ன ஜ ‘வன்.

இரண்டுநாளாய்
அதைக் காணவில்லை.
உயிரைத் தொலைத்ததாய் உள்ளுக்குள் வலித்தது.
கூாியதாய் ஏதோ ஒன்று
இதயத்தை குறுக்கும் நெடுக்குமாய் கூறுபோட்டது.

அலுவலகத்தில் வேலை நகரவேயில்லை…
சக நண்பனின் பேசினான்.
பூனைத்தொல்லை தாங்கமுடியவில்லை…
கண்காணாத தூரத்தில் விட்டுவிடவேண்டுமென்று
சத்தமில்லாமல் சலித்துக் கொண்டான்.

**********

தூக்கம்

என் முன்னால் மலை போல
பணிகள் குவிந்திருக்கும் போது
இந்த தூக்கம் வந்து இமை இழுக்கும்.

சுடச்சுட தேனீர் குடித்தும்,
பக்கத்து இருக்கைக்காராிடம்
பழைய கதை பேசிப்பார்த்தும் ,
பிடிவாதமாய் இமைகளிலேயே அமர்ந்திருக்கும் அது.

தூங்கி வழிவதை யாரேனும் பார்ப்பார்களோ
எனும் பதட்டம் மனதில் எழ..
தப்புத் தப்பாய்க் கணிப்பொறி
வார்த்தைகளை திரையில் எழுதும்.
விரல்கள் வலுவிழந்து வீழும்.

மதிய உணவை முடித்து வந்ததும்
தினமும் நடக்கும் சங்கதிதான் இது.

என்ன செய்தால் தூக்கம் போகுமென்று தொியாது…
பக்கத்துத் தொலைபேசி
அவ்வப்போது அலாரமாகும்.
சிாிப்புச் சத்தம் சில நேரங்களில் சேவலாகும்.

அப்போதெல்லாம்
தற்காலிகமாய் தூக்கம் தொலையும்.
ஆனாலும் மெல்லிய அந்த தூக்கத்தின் துணி மட்டும்
மேலிமைக்கும் கீழிமைக்கும் நடுவே
திரைச்சீலையாய் தொங்கும்…

கிழித்து எறியவேண்டுமென்று
மீண்டும் முயலும்போது
பக்கத்து அறை தோழி கொட்டாவியுடன் கேட்பாள்
ாஎனக்கு தூக்கம் தூக்கமாய் வருகிறதுா
உனக்கு வரவில்லையா ?

இல்லையே என்று
மெதுவாய் நான் மறுக்கும் போது
காதருகே என் தூக்கம் அமர்ந்து
சத்தமாய்ச் சிாிக்கும்..

Series Navigation

'அந்நியமற்ற நதி ' தொகுப்பிலிருந்து.

'அந்நியமற்ற நதி ' தொகுப்பிலிருந்து.

சேவியர் கவிதைகள்

This entry is part [part not set] of 12 in the series 20010722_Issue


நயாகரா…

இது,

இரு நாடுகளுக்கிடையே பாயும்

ஓர் தண்ணீர்ப்பாலம்.

மொழிபெயர்க்க முடியுமா

இந்த

விழிபெயர்க்கும் பிரம்மாண்டத்தை ?

கைக்கெட்டும் தூரத்தில் கனடா

பாதங்களுக்குக் கீழ் அமொிக்கா,

நடுவில் ஓடும் நயாகரா நீாின்

இருகரங்களில் இரு நாடுகள்.

வானத்தின் ஒருபகுதி கிழிந்து விழுகிறதா ?

இந்த அருவியின் அடிவாரம்தான்

மேக உற்பத்தியின்

கொள்முதல் நிலையமா ?

கால்வழுக்கி கீழே விழுகின்ற தண்ணீருக்கு

புதுக்கால்கள் பிறப்பதெப்படி ?

புருவங்கள் விழுந்துவிடுமளவுக்கு

விழிகளுக்குள் வியப்புக் கோளங்கள்.

பாறைகளுக்கு இடையே

வானவில் பார்த்ததுண்டா ?

நாடுகளுக்கிடையே அருவி கிழித்த

அழகிய கவிதையை வாசித்ததுண்டா ?

இருகண்களும் இளைக்குமளவுக்கு

அழகுகளை அள்ளிக் கொட்டியதுண்டா ?

இல்லையேல்

நயாகராவுக்கு வாருங்கள்.

இங்கேயும்

மழைக்கோட்டுடன் நனைகிறார்கள் பலர்.

முட்டைக்குள் ஒளிந்துகொண்டு

கொக்காிக்க ஆசைப்படும் சேவல் மனிதர்கள்.

தலை நனையும் கவலையுடன்

நடக்கிறார்கள் பல நாகாீகவாதிகள்…

பாவம்

புல்லாங்குழல் இவர்களுக்கு

உடைந்துபோன மூங்கில்.

ஒவ்வொரு பாறைஇடுக்கிலும்

நயாகரா எழுதிப்போகும் சிம்பொனியை,

ஒட்டுமொத்த ஈரச் சூழலுக்கு

இயற்கை அமைக்கும் பின்னணி இசையை,

எந்த இசைக் கருவியும் இன்னும்

அருவியாய்ப் பொழியவில்லை.

தண்ணீரும் தண்ணீரும் மோதி மோதியே

கண்களுக்குள் பரவசத் தீ..

பனிக்கட்டியை உடைத்து தலையில் கொட்டுவதாய்

வேகத்தின் விஸ்வரூபம்.

கோப்பைகளில் ஊற்றி ஊற்றி இந்த

நயாகராவை நுகர்ந்துவிட முடியாது…

நயாகரா பொழியும் பிரம்மாண்டச் சாரலும்

தாய் மடி தரும் பிரபஞ்ச அமைதியும்

தலைவைத்தால் மட்டுமே நனையும் சங்கதிகள்.

இன்னும் சில கண்கள் இருந்தால்

அழகின் கொள்ளளவு அதிகமாகியிருக்கும்,

நயாகராவின் நாட்டிய அரங்கேற்றத்துக்கு

இருகண்கள் என்பது

இருளில் நடப்பது போன்றதே !!

நயாகரா….

மூன்று அருவிகளின் கூட்டுக் குடும்பம்.

குதிக்கும் அருவிகளின் குதூகலக் கூடம்.

அமைதியாய் நகரும் அதன் தாழ்வாரம்

நூற்று எண்பது அடிகளை முழுங்கிய ஆழமாம்….

நயாகரா

நான் என்னும் கர்வத்தை

கசக்கிப் பிழிந்துக் கிழித்துப் போடும் …

விரல் தொடும் தூரத்தில்

நோில் பார்த்தால் மட்டுமே

நெஞ்சக்குழிகளுக்குள் நிஜமாய் தங்கும்.

நயாகரா…

எந்தக் கவிதையும் எழுதிவிட முடியாத

சிலிர்ப்பின் குழந்தை.

நயாகரா…

இது ஒரு காவியத்துக்கான கனத்தின்

ஒரு வார்த்தைக் கவிதை.


விரல்களே விளக்குகள்…

எதிர்பாராத நிகழ்வுகளின் குவியல்,

ஒவ்வோர் எதிர்பார்ப்புகளுக்குமிடையே

முளைத்து வளரும் எதிர்ப்புகள்,

நெருங்க நெருங்க விலகிச் செல்லும்

தொடு வான இலட்சியங்கள்….

இவற்றின் காங்கிாீட் கலவை தான் வாழ்க்கை.

ரோஜா மேல் பனித்துளி அழகுதான்

ஆனால்

வரப்புகளின் தண்ணீர்தானே வாழ்க்கை.

கனவுகளை இரவுகளுக்கு ஒத்திவைத்துவிட்டு

நிஜங்களுக்கு முதுகெலும்பு முடைவோம்.

காதல் அழகுதான்,

கவிதை அழகுதான்…

ஆனால் வறுமையின் அமிலக்குழிக்குள்

வயிற்றுத் தாகம் தானே அருவியாகிறது ?

மீன்கள் பிடித்துப் பிடித்து

மீந்துபோன வாழ்வில் மிச்சத்தின் செதில்கள் மட்டுமே.

போதும்…

மீன்கள் சேகாிப்பது தேவை தான்

ஆனாலும் தூண்டில்கள் தயாராக்குவோம்.

எத்தனை நாள் தான்

ஒற்றைத் தெரசாவும்,

ஒரு காந்தியும் கொண்டே வரலாறு நகர்த்துவது ?

நூறு கோடி மக்களில்

பெரும்பாலானோர்க்கு இன்னும் பெயாிடப்படவில்லையே !!!

வெற்றிகளின் பாதையில்

தோல்விகளும் படிக்கட்டுகளே…

தோல்வியின் பாதையில்

வெற்றிகள் கூட படுகுழிகளே…

நமக்குத் தேவையான முதல் வெற்றி

எங்கே தோல்வியடைகிறோமெனும் தேடலில் தான்.

கதவுகள், ஜன்னல்கள் எல்லாம்

திறந்துதான் கிடக்கின்றன…

நாம் தான்

சுவாில் அறையப்பட்ட ஆணிகளாய் இருக்கிறோம்.


புகைத் தோட்டத்தின் புன்னகைப் பூக்கள்…

வாருங்கள்…

பிரியத்துக்குரிய பேச்சுவார்த்தைப்

பிரதிநிதிகளே வாருங்கள்.

போர்க்களங்களை இந்த

விவாதக் களங்கள் அழித்துவிடுமென்றால்,

எல்லைக்கோடுகளை

அவசரக் கூட்டங்கள் அவிழ்த்துவிடுமென்றால்

போராட்டங்களை இந்த

பேச்சுவார்த்தைகள் பிரிக்குமென்றால்

ஆயுதங்களை அறுத்தெறிந்துவிட்டு வாருங்கள்.

முடியவில்லை எங்களால்…

போர்க்களத்துக்கு வீரர்களை அனுப்பி

புள்ளி விவரங்களை மட்டும் பொறுக்கி எடுக்க

இனியும் முடியவில்லை.

ஒவ்வொரு எல்லையிலும்

சத்தமின்றி சரிந்து கொண்டிருக்கும்

ஜீவன்களுக்கு

ஆயுதங்கள் செரிக்கவில்லை இப்போதெல்லாம்.

எதற்கெடுத்தாலும் வெட்டரிவாள் தூக்கி

பீரங்கிகளுக்குள் பிடிவாதம் திணித்து

நானா நீயா போட்டியில்

இருவருமே தோற்றுப்போக

இன்னும் ஏன் தொடர்ப்போராட்டம் ?

புன்னகை இன்னொரு வெற்றி

அது

உள்ளங்கையில் ஆயுள் ரேகையை நீளமாக்கும்

உள்ளத்துக்குள் நிம்மதியின் அருவியை

ஆழமாக்கும்.

பதுங்குகுழிகளுக்குள் படுத்து

சவப்பெட்டி தயாரிப்பில் மூழ்கி

மலர்வளையங்களுக்காய் தோட்டம் செய்து

எத்தனை நாள் தான்

சந்தோஷங்களுக்கு விஷம் அளிப்பது ?

பூமி அழகானது,

வாழ்க்கையின் ஒவ்வோர் வினாடிகளும் அழகானவை.

அதை இன்னும்

விரோதத்தின் விரல்களுக்கே விற்றுவிடுவதா ?

பேசுங்கள்….

வார்த்தைகளின் பரிமாற்றத்தில்

ஆறறிவின் பரிமாணத்தை அறியுங்கள்.

பேசும்போது,

தீர்ப்புக்களோடு பேசாதீர்கள்

தீர்வுகளுக்காய் பேசுங்கள்

சேவியர்.

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்