எங்கே போனது ஜனநாயகம் ?

This entry is part [part not set] of 13 in the series 20010519_Issue

விஜய்.


(மே மாதம் 10ம் தேதி.தொலைக்காட்சியில் செய்திகள் கேட்டுக் கொண்டிருந்திருந்தேன். மாலைப் பொழுதில் வீசும் தென்றலால் உடல் குளிர்ந்திருந்தாலும்,உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. ‘தமிழகத்தில் 58 சதவீத மக்களே வாக்களித்தனர்;அதுவும் குறிப்பாக நகர்ப்புறங்களில் வாக்குப்பதிவு குறைவாகவே காணப்பட்டது ‘ என்ற செய்தியைக் கேட்டு என்னுள்ளே வெடித்த எாிமலையின் சிதறிய துண்டுகள்.)

கிராமத்தில்:

அது ஓர் அழகான கிராமம்.

கிராமத்தின் நடுவினிலே ஒரு மரம்.

மர நிழலில் நடக்கும் சம்பாஷனை:

ஏலே செவச்சாமி

எங்கடா போவுற நீ ?

கூலிக்கு ஆளெடுக்க

பண்ணையாள் வந்திருக்கான்.

பொஞ்சாதி கூட சேர்ந்து

போயி வந்தீங்கன்னா

நாளுக்கு நூறு வரும்

வேளைக்கு சோறும் வரும்.

ஏம்மா!

நாளும் கிழமையும் தான்

தொியாம பேசுற நீ.

ஜனங்க கடமையத்தான்

புாியாம பேசுற நீ.

ஓட்டுப் போட்டிடத்தான்

ஒண்டியா நான் போகையிலே

என்னை வழிமறிச்சி

ஏதேதோ பேசுறியே.

நல்ல தலைவனைத் தான்

நாம தேர்ந்தெடுத்தா

தொல்லை பல தீரும்

துன்பமெல்லாம் பறந்தோடும்

இருட்டு நமை நீங்கும்

இரவெல்லாம் பகலாகும்.

மவராசன் வந்திடுவான்

சொன்னதெல்லாம் செஞ்சிடுவான்

தெருவிளக்கு போட்டிடுவான்

தார்சாலை தந்திடுவான்.

வரப் போற தலைவனைத்தான்

வாக்குகளில் தேர்ந்தெடுக்க

பத்து-நூறைத் தான்

பார்க்காதே என்னாத்தா!

நகரத்தில்:

நகரமென்பது கட்டிடக் காடு.

அந்த காட்டின் நடுவே ஒரு வீடு.

வீட்டில் நடக்கும் சம்பாஷணை:

மனைவி:

ஊரே திரண்டு வந்து

ஓட்டுப் போட்டிடவே

பத்திாிக்கை விளம்பரங்கள்

பலமுறை தான் வந்துடுச்சு

நாமும் சென்றிடுவோம்

நம் கடனை ஆற்றிடுவோம்.

கணவண்:

போடி,பைத்தியமே!

பொழப்பின்றி பேசுற நீ!

ஓட்டுப் போடுவதால்

விடியாத ராத்திாிகள்

விடிஞ்சிடவா போகுதிங்கே ?

படியாத நம் வாழ்க்கை

படிஞ்சிடவா போகுதிங்கே ?

வாக்குச் சாவடிக்கு

வாசல் தாண்டி நாம் போனா

பாவி மகனுங்க

பஸ் மறியல் பண்ணிடுவான்

மீதி பேரும் தான்

கலவரத்தை செஞ்சிடுவான்.

ஒரு ஓட்டுப் போட்டுத்தான்

தலையெழுத்து மாறிடுமோ ?

ஒற்றை உளி கொண்டா

உச்சி மலை பெயரும்.

யார் வந்தா நமக்கென்ன ?

யார் போனா நமக்கென்ன ?

பாழும் அரசியலோ எக்கேடோ போகட்டும்.

ஏதும் நினைக்காம

உள்ள போய் தூங்கு கண்ணே….

Series Navigation

விஜய்

விஜய்