பூஜைக்கு வந்த மலர்

This entry is part [part not set] of 8 in the series 20000625_Issue

சிவகாசி திலகபாமா


வயதுக்கு

வந்தபோது

வாராத ஆசையுன்

வட்டமிடும் கண்பார்த்து

வந்து விட்டதே

வெள்ளித்திரையில்விரியும்

விளங்காத காட்சிகள்உன்

கண் பார்த்து

மண்பார்த்தபோது

புரிந்து போனதே

மீசை பற்றிகேட்டாள்தோழி

ஆசைகொண்ட நேரத்தில்

பசை போட்டு ஒட்டவில்லை

உன்முகமென்றால்

வசைபாடுவாளே

கடவுள் கூட

பிடித்துபோனது

உன்பெயரை அவருக்கு

வைத்திருப்பதால்

கனவு தந்து

கவிதை தந்து

காதல் தந்தது

உறவு தந்து

உயிரும் தந்து

உடலில் கலந்தது

இரவு கொன்று

இனிமை தின்று

இதயம் தீர்ந்தது

கண்மை கலைத்து

பெண்மை எழுந்து

மென்மையானது

தன்மை மறந்து

தவிக்கும் நெஞ்சம்

தனலாய் ஆனது

மலர்ந்த மலரிது

மடியும் முன்னே

மழையாய் வந்திடு

கலந்த இதயம்

கலங்கு முன்னே

கண்ணே வந்திடு

எனக்குள் இருந்து

எழும்பும் எழுத்திற்கும்

ஏக்கம் இருந்திடும்

தாக்கம் கண்டு

காக்க நீயுமெனை

நோக்கி வந்திடு

நேரம் கடந்தென்

நிலையை மறந்துன்

நினைவால் ஏங்குகின்றேன்

காலம் கடந்து

கனவில் நடந்தோர்

கனவைத் தேடுகின்றேன்

உலகம் மறந்து

உள்ளம் கலந்த

உள்ளத்தைத் தேடுகின்றேன்

விழிக்குள்ளே

விழித்திருக்கும் என்

உயிரைத் தேடுகின்றேன்

ஓர் இதயத்துள்ளே

ஒளிந்து கொண்டஎன்

இதயத்தைத் தேடுகின்றேன்

காயும் நிலவென

பாயும் ஒளியென

தாயென வருவாயே

உலகம் மறந்து

உலவும் உடலை

உனக்கா தருவது

அக்னியின் முன்னே

அழிக்கப்பட்ட என் ஆசையை

அழித்தா விடுவது

பிற மஞ்சம் ஏறினாலும்

நெஞ்சம் மாறாததை

வஞ்சம் என்பாயா

அர்ச்சிக்கப்பட்ட

மலரென்றாலும்

அட்சதையாய் விழுவதை

அள்ளிக் கொள்வாயா

எச்சில் பட்டாலும்

ஏற்றுக் கொள்வாயா

அணில் கடித்ததென

பூஜிக்கப்பட்ட

மலரென்றாலும்

பிரசாதமென ஏற்றுக் கொள்வாயா ? ? ?

 

 

  Thinnai 2000 June 25

திண்ணை

Series Navigation

சிவகாசி திலகபாமா

சிவகாசி திலகபாமா