யாழ்ப்பாணத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்

This entry is part [part not set] of 40 in the series 20110522_Issue

மரீஸா த சில்வா தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்



எனது சிறுவயதில் சிங்கள தமிழ் புத்தாண்டானது, அயலவரும் நாமும் மிகவும் எதிர்பார்த்திருக்குமொன்றாக அமைந்திருந்தது. அப் புத்தாண்டுக் காலத்தில் நாம் சீட்டு விளையாடுவோம். பேட்மிண்டன் போட்டிகளை நடத்துவோம். புத்தாண்டு தினமானது எங்கள் அனைவருக்கும் வேலைப்பளு நிறைந்ததாய் அமைந்திருக்கும். சிறுவர்கள் சிரித்துக் களித்தபடியே வெவ்வேறு கருமங்களில் ஈடுபட்டிருப்பர். யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்த ‘யாழ்ப்பாண புத்தாண்டுக் கொண்டாட்டம்’ மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புக்களை மின்னச் செய்தது.

நான் யாழ்ப்பாணத்தில் வைத்து, வெவ்வேறு பிண்ணனிகளுடன் வந்திருந்த இளைஞர்கள் சிலருடன் கதைத்தேன். புதுவருடத்தில் அவர்களது எதிர்பார்ப்புக்கள், அச்சங்கள் மற்றும் இலட்சியங்கள் குறித்த கருத்துக்களை அந்த உரையாடலினூடு பெற்றுக் கொள்ள என்னால் முடிந்தது.

“யுத்தம் முடிவுற்ற பிற்பாடு நான் எந்தவித கொண்டாட்டங்களிலும் பங்குபற்றவில்லை. வன்னியில் மட்டுமல்லாது யாழ்ப்பாணத்திலும் இளைஞர்கள் இன்னும் துயருற்றுக் கொண்டிருக்கையில் நான் எப்படிக் கொண்டாடுவது? நிறையப் பேருக்கு கல்வி கற்க வாய்ப்பு இல்லை. சிலருக்கு சாப்பிடக் கூட ஒழுங்காக ஏதுமில்லை. எனது வயதிலுள்ள ஏனையவர்களும் இதே துயரத்தை அனுபவிக்கிறார்கள். அவர்கள் உள்ளுக்குள்ளேயே அனுபவிக்கும் வேதனைகளை நான் அறிந்த காரணத்தால் விழாக்களை நடத்த என்னால் முடியவில்லை. அரசாங்கமானது வடக்கு மக்களின் வாழ்க்கையினை இதனை விடவும் முன்னேற்றுமென்றால் எங்களுக்கு உண்மையாகவே விழாக்களை நடத்துவதற்கான காரணமொன்று இருக்கும். அரசு தான் நினைக்கும் விதத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.” இவ்வாறு என்னிடம் சொன்னார் 24 வயதேயான பல்கலைக்கழக மாணவரொருவர்.

“வடக்கையும் தெற்கையும் ஒப்பிட்டுப் பார்ப்போமேயானால் தெற்கு மக்கள் தங்களது சுதந்திரத்தை பரிபூரணமாக அனுபவிப்பது விளங்கும். இன்னும் எங்களை செக் பொயிண்டுகளில் நிறுத்துகிறார்கள். விசாரிக்கிறார்கள். இங்கு எங்களுக்கு சுதந்திரமில்லை. எவ்வாறு நாங்கள் விழாக்களை நடத்துவது? இன்று, நாளை, நாளை மறுநாள் என எந் நாளுமே இவ்வாறுதான். புத்தாண்டு என்பதுவும் இன்னுமோர் தினம் மாத்திரமே. இத் தினத்தில் தமிழர்களுக்கு சமாதானமும் சம உரிமையும் பெற்றுக் கொடு என கடவுளிடம் வேண்டுவதை மட்டுமே எம்மால் செய்ய இயலும்.” அவர் மேலும் கருத்துரைத்தார்.

27 வயதான கோசலை கூறியவை கீழே தரப்பட்டிருக்கிறது.

“எனக்கும் கொண்டாட்டங்களுக்குச் செல்ல மனமில்லை. எவ்வாறாயினும் நான் கொண்டாட்டங்களுக்குச் செல்வதுமில்லை. நாங்கள் விழாக்களைக் கொண்டாடுவது எங்களது கலாச்சார முறைப்படிதான். எனினும் எனக்கு இந் நாட்களில் எந்த விஷேடமும் தென்படுவதில்லை. பல தசாப்தங்களாக இது பற்றிக் கதைத்தும் பயனேதுமில்லை. அதனால் எதுவுமே இதை விடவும் முன்னேற்றம் பெறும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. உரிமை மற்றும் விடுதலைக்காக நாங்கள் செல்லவேண்டிய நெடும் பயணமொன்று இருக்கிறது. அதுதான் நாங்கள் முகங்கொடுக்கும் பெரிய சவால். நான் நினைக்கும் விதத்தில், எமது வேண்டுகோள்கள் குறித்து எங்களுக்கு இருக்கும் தெளிவான பார்வை, போதியளவு கலந்துரையாடும் திறமை, மனிதர்களிடையே இருக்கும் ஒற்றுமை மற்றும் அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள வேண்டியிருப்பதன் அவசியம் போன்றவைகளால்தான் எங்களது நிலைமை உயரக் கூடும்.”

இன்னுமொரு பல்கலைக்கழக மாணவர் தனது கருத்தினைப் பகிர்ந்து கொண்டார். அவரது வயது 24.

“என்னைப் பொறுத்தவரையில் போன வருடத்திலிருந்து இந்த வருடம் வரைக்கும் எதுவுமே மாற்றமடையவில்லை. எனினும் எனக்கு அது குறித்து இருப்பது ஒரு கலவையான உணர்வே. ஏனெனில் நான் இங்கு வந்தது அரைகுறைத் தமிழ் பேசி வியாபாரம் செய்யும் வியாபாரிகள் இருந்த ஓர் தெருவோரம் வழியேதான். எங்களைத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றியதாக எங்களிடம் சொல்கிறார்கள். எனினும் அதே வழிமுறையைத்தான் அரசின் கருத்தை ஏற்றுக் கொள்ளாத மற்றும் அரசைக் கேள்வி கேட்கும் மக்களை அழிப்பதற்கும் பயன்படுத்துகிறார்கள். மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும் உண்மையில் அவ்வாறில்லை. அரசாங்கம் யாழ்ப்பாண மக்களை மகிழ்ச்சிப்படுத்த முயற்சிக்கிறது. அது போலவே விதம் விதமாக விழாக்களைக் காட்டி அவர்களது பாதையை மாற்றவும் முயற்சிக்கிறது. எனினும் நிறைய மக்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய நேர்மையான முயற்சியொன்றை எடுப்பதைத்தான் காண முடியவில்லை.” என அவர் விளக்கமளித்தார்.

“தமிழர்கள் ஒன்றிணைந்து நியாயமானதொரு தீர்வினைப் பெற்றுக் கொள்ள முடியுமென நான் வெளிப்படையாகவே எதிர்பார்க்கிறேன்.அதற்கு அவர்கள் மத்தியில் ஓர் மனதுடனான ஒற்றுமையொன்று இருக்க வேண்டும். குறைந்த பட்சம் பிறக்கும் புதுவருடத்திலேனும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

“எனது எதிர்பார்ப்பானது எங்களது எல்லா நடவடிக்கைகளும் சமாதானத்துடனும் சகோதரத்துவத்துடனும் நடைபெற வேண்டும் என்பதுதான். நாங்கள் எமது கலாச்சாரத்தின் அங்கமொன்றாக புத்தாண்டினைக் கொண்டாடுகிறோம். பொங்கல் செய்கிறோம். மூத்தவர்கள் கை விஷேசமாக பணம் தருகிறார்கள். எங்களுக்கு மூத்தவர்களிடமிருந்து பணம் கிடைத்தால் அதனை அதிர்ஷ்டம் எனக் கருதுகிறோம். நல்ல விடயங்கள் மேலும் தொடரட்டும், கெட்ட விடயங்கள் அழிந்து போகட்டும் என்றே நான் எப்பொழுதும் எண்ணுகிறேன். வழமையாக நாங்கள் புத்தாண்டு தினத்தில் பாட்டி வீட்டில் ஒன்றுகூடுவோம். எனினும் கடந்த வருடம் அவர் மரணித்த காரணத்தால் இந்த வருடம் எங்களுக்கு புத்தாண்டு இல்லை” என 30 வயதான தாணு கூறினார்.

“நாங்கள் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ரீதியில் தோற்கடிக்கப்பட்ட ஓர் இனம். நாங்கள் நிழலேதுமற்ற மனிதர்கள். நான் நினைக்கும் விதத்தில் எம் மக்கள் தன்னம்பிக்கை மிகுந்த அமைதியானவர்கள். விஷேடமாக கடந்த வருடங்களில் அது புலப்பட்டது. நாங்கள் ஒன்றாக இணைந்தால் எங்களது சக்தியை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். எனினும் நாங்கள் முகங்கொடுக்க நேர்ந்திருக்கும் முடிவேயில்லாத இடையூறுகளின் காரணத்தால் அது யதார்த்தத்தில் சாத்தியப்படாது. சிறிய உதாரணமொன்றைக் கூறின், மிக அண்மையில் தமிழ் மக்களின் துயரங்கள் குறித்து பிரசித்தமாக கூட்டமொன்றில் பேசிய புகழ்பெற்ற மதகுருவொருவருக்கு அதன் பிறகு இனந்தெரியாத நபர்கள் மூவரின் எச்சரிக்கைகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்திருக்கிறது. காவல்துறை எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மதகுரு ஒருவருக்குக் கூட தனது மக்களுக்காக கதைக்க முடியாது எனின் எங்களால் செய்ய முடியுமான விடயங்கள் குறித்த எதிர்பார்ப்புக்கள் என்ன?” என இன்னுமொரு 27 வயதேயான பல்கலைக் கழக மாணவரொருவர் கூறினார். “நான் பொதுவாகவே மத ரீதியான, கலாச்சார ரீதியான விழாக்களைக் கொண்டாடுவதில்லை எனது குடும்பத்தவர்கள் செய்தபோதும். எங்களது இனம் நெடுங்காலமாக அடிமைப்பட்டுக் கிடந்த இனம். இன்றும் எங்களால் சுதந்திரமாகக் கதைக்கவோ அங்கிங்கு செல்லவோ முடியாதுள்ளது. இனி நாங்கள் எதனைக் கொண்டாடுவது?” என்று அவர் மேலும் கூறினார்.

“கடந்த தினமொன்றில் இராணுவத் தளபதி, இராணுவத்தால் அபகரித்துக் கொள்ளப்பட்டுள்ள சொத்துக்களை படிப்படியாக விடுவிக்கப் போவதாக வெளிப்படையாக அறிவித்துள்ளார். எனினும் பார்க்கும் எல்லா இடங்களிலும் புதிய பெயர்ப் பலகைகளைக் காண முடிகிறது. ‘இந்திந்த ப்ரிகேடியர் உங்களை அன்புடன் வரவேற்கிறார்’ என்றே அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாங்கள் வாழ்வது ஜனநாயக சமூகமொன்றிலா அல்லது இராணுவ சமூகமொன்றிலா என்பது பற்றிய சந்தேகத்தை அது எழுப்புகிறது. இதற்கிடையில் யுத்த நிலத்தினை முன்னேற்றுவதற்கே முன்னுரிமை வழங்கப்படுவதாக அரசாங்கம் சொல்கிறது. அது அவ்வாறெனில் வடக்கில் சேவை செய்ய எதிர்பார்க்கும் ஒருவருக்கு ஜனாதிபதி தரப்பிலிருந்து அனுமதியைப் பெற்றுக் கொள்ளும் விதத்தில் அதிகாரத்துவ எதிர்ப்பும் தாமதமும் ஏற்படுவதற்கு இடமளித்திருப்பது ஏன்? இன்னுமொரு சந்தர்ப்பத்தில் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளை மீண்டும் விசாரிப்பதற்காகக் கைது செய்திருப்பதாக பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறான பிண்ணனியில் எங்களுக்கிருக்கும் பாதுகாப்பு என்ன? நாங்கள் எந்தக் கணத்தில் கைது செய்யப்படுவோமோ, இன்னல்களுக்கு உள்ளாக்கப்படுவோமோ தெரியாது. இளைஞர்கள் பலம் பெறுதலும், அவர்களது பங்களிப்பானது முன்னேற்றத்துக்கும் அரசியல் செயற்பாடுகளுக்கும் ஒன்று சேர்க்கப்படுவது, மாற்றமொன்றுக்காக அத்தியாவசியமானது. எனினும் அரசாங்கம் இன்னும் அது குறித்து முயற்சிக்கவில்லை.” என அவர் மேலும் தெரிவித்தார்.

“நான் விருப்பத்துடனேயே இந்தப் புத்தாண்டைக் கொண்டாடுவதாக நான் நினைக்கவில்லை. இது எனது வாழ்வில் இன்னுமொரு நாளைப் போன்றது. புத்தாண்டு எனப்படுவது வாழ்க்கையில் புதிய பகுதியொன்றில் பாதம் பதிக்க உருவாக்கப்பட்ட இலகு வழி என்பதாகவே நான் நினைக்கிறேன். தம்மைச் சுற்றிலும், நிழலொன்றற்ற மனிதர்கள் அனேகர் இருக்கையில் எவர்க்கும் புத்தாண்டைக் கொண்டாட முடியுமாக இருக்குமென நான் நினைக்கவில்லை. அதுபோலவே அவர்களிடையே சாதிப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களும், வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு புத்தாண்டு எங்கிருந்து? அதுதான் என்னைத் துயருக்குள்ளாக்கும் கேள்வி.” என 26 வயதான திரு சொல்கிறார்.

“நான் சிறுவனாக இருந்த காலத்தில் யுத்தம் இருந்த போதும் புத்தாண்டு வந்தது. நான் தந்தையின் சைக்கிளை மிதித்தபடி அக்காவோடு பாட்டி வீட்டுக்குச் சென்றேன். புத்தாடைகள் அணிந்தேன். எனினும் பட்டாசுகள் இருக்கவில்லை. தமிழ் மக்கள் எதிர்பார்ப்பு மற்றும் எதிர்பார்ப்பின்மைக்கிடையிலிருந்து புத்தாண்டையும் எதிர்பார்க்கிறார்கள். நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த சமாதானம் இன்னும் எங்கள் வாசல்களுக்கு வரவில்லை. அச்சமற்று மனிதர்களுடன் கதைக்க முடியுமான நாளொன்றை நான் எதிர்பார்த்திருக்கிறேன். வெவ்வேறு விதமாக ஒரு புறமாகத் தள்ளப்பட்டிருக்கும் இலங்கையின் எல்லா மனிதர்களோடும், மாற்றமொன்றை எதிர்பார்க்கும் மனிதர்களும் ஒன்றிணைந்து தங்களது எதிர்கால வேலைத் திட்டங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ளவேண்டுமென எனக்குத் தோன்றுகிறது” என அவர் எதிர்பார்ப்புடனேயே கூறினார்.

இங்கு எந்த இளைஞர் யுவதியும் கூட தங்களது பெயர்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பவில்லையென்பது தெளிவாகியிருக்கும். யுத்தம் முடிவுற்று இரண்டு வருடங்கள் கழிந்த பிற்பாடும் வடக்கு மக்கள் தற்காலிக சமாதானமொன்றை இன்னும் எதிர்பார்த்திருக்கிறார்கள். அந்த எதிர்பார்ப்பு ஈடேறிய பிற்பாடுதான் புத்தாண்டை உண்மையாகவே கொண்டாட முடியுமாக இருக்கும்.

– மரீஸா த சில்வா தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

Series Navigation

எம்.ரிஷான் ஷெரீப்

எம்.ரிஷான் ஷெரீப்