சுய உதவிக் குழுக்கள் ( மகளிர்) எதிர் கொள்ளும் சமூகப் பிரச்சனைகள்…

This entry is part [part not set] of 36 in the series 20101101_Issue

தேனம்மை லெக்ஷ்மணன்


****

தீஞ்சுவைப் பாலெடுத்து நறுஞ்சுவைத் தேன் கலந்து பழச்சாறும் ஊற்றிக் கொடுத்தாலும் புளிக்குதென்பேன்.. தமிழ்த்தாயிடம் மதலை நான் தாய்ப்பால் குடித்து வளர்ந்த காரணத்தால்.. அன்னையவள் பரிவு கொண்டு என்னை வளர்த்த காரணத்தால்… தமிழ் அன்னைக்குக் குழந்தையின் வணக்கங்கள்..

நாத விந்துவால் உருவாகி நிற்கும் இந்த உலகு ஜீவனுள்ள கீதங்களால் நிரம்பி இருப்பதால்.. அந்த ஜீவனை… சக்தியை தன்னகத்தே கொண்ட சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனுக்கு வணக்கங்கள்.. அன்றாடம் பத்ரிக்கைகளிலும்., கூகுளிலும் இவரின்., பணிகளை ., — அங்கன்வாடி ஊழியருக்கு சலுகை., ரேஷன் கடை ஊழியருக்கு ஓய்வூதியம்., சத்துணவு ஊழியருக்கு மருத்துவ வசதி., ஆதரவற்ற ஏழை., அனாதை பெண்களுக்கும்., விதவைகளுக்கும் அரசாங்கத்தின் உதவி கிடைக்கச் செய்தல்., — என பரந்துபட்ட பணிக்குச் சொந்தக்காரரான அமைச்சரின் பணிகள் அறிகிறேன்.. அவற்றில் ஒன்று சுய உதவிக் குழுப் பெண்களுக்கும் உரிய சலுகைகள் கிடைக்கச் செய்வது.. அனைத்திற்கும் பாராட்டுக்கள்..

ஒரு கல்லைச் செதுக்கி சிற்பம் செய்வது போல என்னைச் செதுக்கி இங்கே நான் நிற்கக் காரணமாயிருக்கும் கிரிஜாம்மாவுக்கு வணக்கங்கள்.. எக்ஸ்னோரா தலைவர் சுலோசனா ராமசேஷனுக்கும்., ராஜத்துக்கும்., அவையோருக்கும் என் வணக்கங்கள்..

பொதுவாக பெண்கள் எதிர்கொள்ளும் பிர்ச்சனைகள் என மூன்றைக் குறிப்பிட விழைகிறேன்..

முதலில் தன்னைக் கடந்து வெளிவருதல்..

இரண்டாவது சுற்றி இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என நினைத்து தன் திறமைகளை முடக்கி இருத்தல்

மூன்றாவது தொழிற் சார்ந்த பிரச்சனைகள்..

தனிமனிதரும் சமூகமும் சார்ந்தவர்தானே.. தான் ஒரு தொழிலைச் செய்ய வேண்டும் என தன் முனைப்போடு இருத்தல்.. சிறப்பாக செய்ய இயலும் என எண்ணுதல்.. தன் குடும்பத்தினரின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி அடைய வேண்டி தொழில் செய்ய செல்லும் போது , அவர்களுக்கு அதை சரியான முறையில் தெளிவு படுத்துதல்., எல்லாம் முக்கியம்.,

குழந்தைகள் படிப்பு செலவு வேண்டியோ., அன்றாடம் கணவன் வருமானம் போதாமல் குடும்பம் நடத்த வேண்டியோ செயல் படும் போது குழந்தைகளை தானே பராமரிக்கப் பழக்குதல்., குடும்பத்திற்காக தான் உழைப்பதை குழந்தைகள் உணரும்படிச்செய்தல்., வியாபார நிமித்தம் சில காலம்., ( 10., 15 நாட்கள்) குடும்பத்தை விட்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலையை எதிர் கொள்ளுதல்., உடல் உபாதைகளோடு புதிய சூழலில் இருத்தல் என குடும்பத்திற்காக ஏற்கும் சிரமம் நிறைய..

தன்னிடம் நம்பிக்கை வைத்து தன் குடும்பத்திற்கு புரியச் செய்து வெளிவருதல் அவசியம்..

இரண்டாவதாக.. அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஏதும் சொல்வார்களோ.. நேரம் கெட்ட நேரத்தில் செல்ல வேண்டி இருந்தால் என தயங்குதல் ஒரு பின்னடைவை ஏற்படுத்தும்.. நாம் சரியானவற்றை சரியான முறையில் செய்யும் போது அடுத்தவரின் விருப்பு வெறுப்புக்கு இடம் கொடுக்கவேண்டியதில்லை.. நாமும்., நம்மைப் போன்றோரும் கலந்ததுதானே சமூகமும். நாம் சரியானவற்றைச் செய்யும் போது அங்கே அவதூறுகளுக்கு இடம் இல்லாமல் போகிறது..

மூன்றாவதுதான் முக்கியம்.. இதில் தொழில் தொடங்க கடனுதவி கேட்டு வங்கிகளை அணுக வேண்டும்.. அதற்கு சிலரிடம் அனுமதிக் கையெழுத்து வாங்க வேண்டியிருக்கும்.. மேலும் தொழில் தொடர்பாக பலரிடம் பழக வேண்டியிருக்கும்… இந்தச் சூழல்களில் அனைவரும் நல்லவரென்று கருத இயலாது.. அந்த சமயங்களில் இவர்கள் தெளிவாக இருந்தால்., அதாவது லஞ்சம் கொடுக்காமலும்., பாலியல் தொந்தரவுக்கு சம்மதிக்காமலும் நேர்மையான வழியிலேயே எல்லாவற்றையும் பெறுவது என..உறுதியாக இருந்தால் ஜெயிக்கலாம்.,

வியாபாரம் செய்யப் போகும் இடத்திலும் வீடு வீடாக சென்று கான்வாஸ் செய்யும் இடங்களில் கூட எரிச்சலான பதில்களும் ., சரியில்லாத மனிதர்களையும் சந்திக்க நேரும்.. எல்லாவற்றிலும் சகிப்புத்தன்மையும்., பத்திரமாக மீண்டுவரும் தன்மையும் வேண்டும்.

வருமானம் இல்லாத கால கட்டங்களில் கந்து வட்டிக்கு வாங்காமல் கடனுக்குள் வீழ்ந்துவிடாமல் சமாளிக்கத் தெரிய வேண்டும்..

கணவன் குடிகாரனாயிராதபட்சத்தில் இது நிகழாது.. மேலும் ஒரு சுய உதவிக் குழுத்தலைவியிடம் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார்.. நாம் இடம் கொடுத்தால்தான் நம்மை ஆண்கள் எதற்கும் அணுகுவார்கள்.. நாம் சரியாக இருந்தால் நம் நிலையிலேயே நமக்கான இடத்திலேயே நீடித்து இருக்கலாம்..என்று..

உண்மைதான்.. சமூகம் என்பது நாம் அடங்கிய குழுதானே.. எனவே நாம் எந்த இடத்தை தேர்ந்தெடுக்கிறோமோ அந்த இடம் கிடைக்கும்..

Series Navigation

தேனம்மை லெக்ஷ்மணன்

தேனம்மை லெக்ஷ்மணன்