ஒரு திரைப்பட இயக்குனரின் சுயசரிதம்

This entry is part [part not set] of 35 in the series 20100905_Issue

வே.சபாநாயகம்


சிறந்த சமூக சிந்தனையாளரும் படைப்பாளியுமான திரு.சங்கமித்ரா அவர்களோடு
ஒருதடவை பேசிக்கொண்டிருந்தபோது, ”உங்கள் சுயசரிதையை எழுதி விட்டீர்களா?” என்று கேட்டார்.
”சுயசரிதை எழுதுமளவிற்கு நான் என்ன பெரிய ஆளா? காந்தி நேரு போல என் வாழ்க்கை என்ன
பிறருக்கு வழிகாட்ட வல்லதா?” என்றேன். ”அப்படியல்ல. பெரிய ஆளாய் இருந்தால்தான் எழுத
வேண்டுமா? ஒரு புழு கூட தன் வரலாற்றை எழுதலாம். அதிலிருந்து நாம் பல புதிய செய்திகளைத்
தெரிந்து கொள்ள முடியும்!” என்றார் சங்கமித்ரா. அது உண்மைதான் என்று தோன்றுகிறது. தன்
வரலாறுகள் நமக்குத் தெரியாத பல தகவல்களைத் தருகின்றன. ஆனால் ஒரு விஷயம். அது
சுவாரஸ்யமாய் – நாமக்கல் கவிஞரின் ‘என் கதை’ போல, உ.வே.சாவின் ‘என் சரித்திரம்’ போல –
சொல்லப் பட்டிருக்க வேண்டும்.

ஸ்பெயின் நாட்டவரான லூயி’ பனுவல் ஒருபுகழ் பெற்ற திரைப்பட இயக்குனர். அவர்
ஃபிரிட்ஸ் லாங் என்னும் திரைப்பட இயக்குனரை ஆதர்ஸமாய்க் கொண்டிருந்தவர். ‘The milky way’,
‘The Discreet charm of the Bourgeoise’, ‘The Phantom of Liberty’ என்கிற மிகச் சிறந்த திரைப்படங்
களை உருவாக்கியவர். அவர் தனது திரைப்பட அனுபவங்களையும், தனது இயக்குனர் நண்பர்களான
டாலி பிரெட்டன், மேக்ஸ் எர்னெஸ்ட், பால் எலுவர்ட் ஆகியோரின் ஆளுமைகளையும் விவரிக்கும்
சுய வரலாற்றினை ‘இறுதி சுவாசம்’ என்றதலைப்பில் எழுதியுள்ளார். 77வது வயதில் தன் இறுதிப்
படத்தை எடுத்த அவர் தனது உருவாக்கங்களில் தான் கண்டறிந்ததையும், சிலவற்றைக் கைவிட்டு
விடுவதன் அவசியத்தையும் இந்நூலில் வற்புறுத்துகிறார். புரட்சிகரமானதும் கவிதாபூர்வமானதுமான
இந்நூலை திரு.சா.தேவதாஸ் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

‘மொழிபெயர்ப்பு நூல்களைத் திறனாய்வு செய்வது சற்று சிக்கலான வேலை: ஏனெனில்
திறனாயப்படுவது மொழிபெயர்ப்பா அல்லது மூல நூலா என்பதைத் திறனாய்வில் தெளிவு படுத்துவது
சற்று அசாத்தியம். மூல நூலின் மொழி திறனாய்வாளனுக்குத் தெரியாவிட்டால்? அல்லது அந்த மூல
நூல் திறனாய்வாளனுக்குக் கிடைக்காவிட்டால்? அத்தருணங்களில் திறனாய்வாளனால் உருப்படியாக
ஒன்றும் செய்ய இயலாது’ என்று தேவக்கோட்டை வா.மூர்த்தி தனது திறனாய்வு ஓன்றில் சொல்லி
இருப்பதைப்போல் இந்நூலைத் திறனாய்வு செய்வதில் எனக்குள்ள பிரச்சினை இதன் மூல நூல் எந்த
மொழியில் எழுதப்பட்டது, திரு.தேவதாஸ் அம் மொழியிலிருந்து நேரடியாக இதனை மொழிபெயர்த்தாரா
அல்லது மூல மொழியின் ஆங்கில வழி மொழிபெயர்ப்பா என்பதற்கான குறிப்பு ஏதுமில்லாததால்
மொழிபெயர்ப்பை விமர்சிப்பது இங்கு தேவையற்றதாகிறது. எனவே மூல நூலை மட்டும் விமர்சிக்க
நேருகிறது.

தன் தாயாரின் நினைவுகளுடன் தன் சரிதையைத் தொடங்குகிறார் புனுவல். தனது ஆயுளின்
கடைசி பத்தாண்டுகளில் தன் தாயார் படிப்படியாகத் தன் நினைவுகளை இழந்ததையும் தன் பிள்ளை
களில் எவரையும் அவருக்கு அடையாளம் காண முடியாது போனதையும் குறிப்பிட்டு, தனக்கும்
அத்தகைய ஞாபக மறதி தனது எழுபதாவது வயதில் ஏற்பட்டதையும் சொல்கிறார். இதனால் இச்
சரிதத்தில், விஷயத்திலிருந்து அடிக்கடி விலகித் திரிவது நேர்ந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.

எட்டு அத்தியாயங்கள் வரை இடைக்காலங்களில் இருந்ததான நினைவுகள் சொல்லப்
பட்டிருக்கின்றன. தனது பிறந்த கிராமமான காலந்தா இடைக்காலங்கள் முதல் உலகப்போர் வரை
நீடித்த சூழ்நிலை பற்றி விரிவாகச் சொல்வது சற்று அலுப்பூட்டினாலும் அவரது இளமைக்காலம் பற்றிய
அந்நினைவுகள் கத்தோலிக்கப் பிரிவின் சில முரண்பாடுகளைக் கோடிட்டுக் காட்டுகிறது. அக்கால
கட்டத்தில் நிலவிய வர்க்க, இன வேறுபாடுகள், நினைத்துப் பார்க்க முடியாத சொர்க்கம் நரகம் பற்றிய
மத நம்பிக்கைகள் ஆகியவற்றால் தனது இளமைக்காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைப் பதிவு செய்துள்
ளார்.

தனது எட்டாவது வயதுக் காலகட்டத்தில் தான் பார்த்த திரைப்படங்கள் பற்றிச் சொல்லும்
போது ஒவ்வொரு அரங்கமும் ஒருகதை சொல்லியை வைத்திருந்ததையும், அவர் திரையருகே நின்று
பார்வையாளருக்கு காட்சிகளை விளக்கியது பற்றியும் சுவாஸ்யமாகச் சொல்கிறார். ‘இன்றைக்கு
இதனைக் கற்பிதம் செய்வது கடினம். ஆனால் திரைப்படம் குழந்தைப் பருவத்தில் இருந்தபோது,
புதியதும் வழக்கத்துக்கு மாறான எடுத்துரைப்பு வடிவமும் கொண்டிருந்ததால், என்ன நிகழ்ந்து
கொண்டிருந்தது என்பதைப் புரிந்து கொள்வதில் பார்வையாளருக்குச் சிரமம் இருந்தது. இப்போது
திரைப்பட மொழி, படத்தொகுப்பு அம்சங்கள் ஒரே நேரத்தில் மற்றும் அடுத்தடுத்து நிகழும்
நடவடிக்கை மலரும் நினைவுகள் ஆகியன நமக்கு மிகவும் பழகிப் போயுள்ளதால், நமது புரிந்து
கொள்ளுதல் தன்னிச்சையாக உள்ளது; ஆனால் ஆரம்ப ஆண்டுகளில் புதிய காட்சி இலக்கணத்தை
விடுவித்துக் கொள்வது மக்களுக்குக் கடினமானதாயிருந்தது. காட்சிக்குக் காட்சி தம்மை வழிகாட்டிச்
செல்ல அவர்களுக்கு விளக்கம் சொல்பவர் தேவைப்பட்டார்’ என்று அதற்கு விளக்கம் சொல்கிறார்.

தொடர்ந்து தன் சகோதரி கொன்சிடாவின் நினைவுகள், தனது மதுவிடுதி அனுபவங்கள்
போன்ற மண்ணுலகச் சந்தோஷங்கள், டெநோயெல்ஸ், டாலி போன்ற இயக்குனர்களுடனான
தொடர்புகள் மற்றும் அது தொடர்பான அனுபவங்களைச் சொல்லிச் செல்கிறார். தனது அமெரிக்க
அனுபவங்களைச் சொல்லும் எட்டாவது அத்தியாயத்திலிருந்து சுவாரஸ்யமாகச் செல்கிறது. இது முதல்
திரைப்படங்களை அவர் இயக்கிய அனுபவங்களை ரசிக்க முடிகிறது. இயக்குனராக விரும்புகிறவர்
களுக்குப் பயனுள்ள பதிவுகள்.

லூயி பனுவலின் திரைப்பட இயக்க அனுபவங்கள் மட்டுமின்றி அவரது அரசியல்
அனுபவங்களும், நம்மூரைப் போன்றே நடிகர்களின் அரசியல் தொடர்பு ஆகியவையும் இடையிடையே
சொல்லப்பட்டுள்ளன. இதன் பின்னர் அவரது காதல் அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பின்னர் அவரது இலக்கிய நண்பர்களுடனான தொடர்புகள், இங்கே நம்மூர் போலவே இலக்கியவாதி
களுக்கிடையே நிகழ்ந்த கைகலப்புகள் பற்றிய பதிவுகள் சுவாரஸ்யமாக உள்ளன.

அமெரிக்க அனுபவங்களைத் தொடந்து அவரது பாரிஸ், ஸ்பெயின், மெக்ஸிகோ அனுபவங்
களும் அவரது கனவுகள், மிகையதார்த்தவாதம் பற்றிய கருத்துக்களும் ரசனைக்குரியவை.

இறுதிப் பகுதியில் முதுமைக்காலம் பற்றிய சிந்தனைகள், மரணம் பற்றிய எண்ண
வோட்டங்கள் என வாசிப்பவர்க்கு நிறைய ஆன்மீகத் தகவல்கள் உள்ளன. நமக்குத்தொடர்பில்லா
திருந்தாலும் எந்தவொரு தன் வரலாறும் எதாவது ஒரு வகையில் பயன் தரும் எனபதற்கு லூயி
பனுவலின் ‘இறுதி சுவாசம்’ என்கிற இச்சுயசரிதை ஒரு சான்று. 0

நூல்: இறுதி சுவாசம்
ஆசிரியர்: லூயி பனுவல்.
தமிழில்: சா.தேவதாஸ்
வெளியீடு: வம்சி புக்ஸ், திருவண்ணாமலை.

Series Navigation

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்