எலி வீஸல் – நாஜி சிறைமுகாமிலிருந்து ஒரு சமாதான தூதுவர்

This entry is part [part not set] of 30 in the series 20100530_Issue

வெங்கட் சாமிநாதன்


மனித சிந்தனையும் ஆளுமையும் புறச்சூழல்களினாலும், வாழ்க்கை அனுபவங்களாலும் உருவாவதாக நமக்குச் சொல்ல்பபட்டு வந்திருக்கிறது. பெருமாலும் இது உண்மையென்றே நம் அனுபவங்களிலிருந்தும் பார்த்து நாம் இச்சிந்தாந்தத்தை ஏற்று வந்திருக்கிறோம். ஆனால் மனித மனத்தின் விசித்திரங்களை என்னவென்று சொல்வது?

எலி வீஸல் தந்து நினைவுகளைப் தன் சிறுவய்துப் பிராயத்துக்குப் பின் தள்ளிப் பார்க்கும்போது, அவர் த்ன்னை தன் தந்தையுடன் நாஜிகளின் சிறை முகாம்களில் ஒன்றான ஆஸ்விட்ஸில் பசியிலும், பட்டினியிலும், கொடும் சித்திரவதையிலும் இரையாகி தினமும் மரணத்தையே எதிர்நோக்கியிருக்கும் நிலைக்குத் தான் இட்டுச் சென்று உறைகின்றன அந்த நினைவுகள். அந்நிலையிலும் சிறுவனாகத் தனக்குக் கிடைக்கும் உண்வையும் கூட தன் தந்தையுடன் பகிர்ந்து கொள்ள அவரைத் தடுப்பது, பக்கத்தில் நின்று முறைக்கும் சிறைக்காவலர்கள் மட்டுமல்ல. சிறைமுகாமின் கொடூரங்களைத் தன் தந்தையுடன் சேர்ந்து மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் மற்ற யூதக் கைதிகளும் கூடத்தான். ”நீ வாழவேண்டியவன். நானும் உன் தந்தையும் இன்றோ நாளையோ, மறு கணமோ சாகக் காத்திருப்பவர்கள். நீ உன்க்குக் கொடுத்ததை உன் தந்தைக்குக்க்கொடுப்பதால், உன் தந்தை உயிர் காப்பாற்றப்படப் போவதில்லை. நீ வாழவேண்டியவன். நீ உன் தந்தைக்காக இரக்கப்படுவதில் அர்த்தமில்லை” என்று அவர்கள் இவனுக்குச் சொன்னது இரக்கமற்ற வார்த்தைகளாகத் தோன்றினாலும் ஒரு கொடூர உண்மையைத் தான் சொல்லின.

இன்று அந்தச் சிறுவன் 1986-ம் வருட உலக அமைதிக்கான நோபெல் விருதைப் பெற்ற பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பேராசிரியனாகவிருக்கும் எலி வீஸல்.

ஆனால் இந்த விவ்ரங்கள் ஒன்றும் அப்படி அதிச்யிக்கத்தக்கன அல்ல. அந்த சிறுவன் அன்று அறிந்தது ஆஸ்விட்ஸ் சிறை முகாமில் யூதர்கள் அனுபவித்த கொடூரங்களும், ஜனசம்ஹாரமும் தான். ஆனால் அவனும் உலகமும் .அறிய நேர்ந்தது, யூதர்கள் ஒரு இனமாக தனிமைப் படுத்தப்பட்டு அழிக்கப்பட்டது. ஐரோப்பிய கண்டம் முழுதும் தழுவிய் இன எதிர்ப்பு, படுகொலை. தன் கண் முன்னேயே தன் தந்தை யூதன் என்ற காரணத்துக்காக சித்திரவைதைக்குட்பட்டு இறந்தார். இந்நிலையில் தன் இன அழிவுக்குக் காரணமானவர்கள் மேல் அளவு கடந்த வெறுப்பு எலி வீசலின் ஆளுமையை ஆக்கிரமித்திருக்கவேண்டும். சிறு வயதில் அந்த சூழலில் தனக்கு வெறுப்பு இருந்ததென்றாலும், போர் முடிந்த பிறகு அந்த வெறுப்பு தன்னை அண்டாத்வாறு தன்னைக் காத்துக்கொண்டதாகச் சொல்கிறார் எலி வீஸல். அத்தகைய வெறுப்பு தன்னிடம் வளர்ந்திருந்தால் அது இயல்பான் ஒன்றாகவே இருந்திருக்கும் என்று சொல்லும் வீஸல், அதற்கான சாத்தியப்பாடுகள் இருந்த போதிலும் ஆனால் தான் தேர்வு செய்து கொண்டது வெறுப்பு அல்ல, பழி தீர்க்கும் உணர்வும் அல்ல. இத்தகைய தன் தேர்வு இயல்புக்கு மாறானது என்றும் சொல்கிறார் வீஸல்.

இவை வெற்று வார்த்தைகள் அல்ல என்பதை வீஸல் எதிர்கொள்ளும் உலக பிரச்சினைகளிலிருந்து அன்றாட சின்ன சின்ன பிரசினைகளை அவர் எதிர்கொள்ளும் முறையிலிருந்தே, இத் தேர்வுகள் கொள்கை சார்ந்ததல்ல, ஆளுமையின் குணம் சார்ந்தது இவை வெற்று வார்த்தகள் அல்ல, அவரது உள்ளார்ந்த தேர்வுகளின், சிந்தனையின் வெளிப்பாடு என்று தெரிகிறது. அன்றாட நடைமுறைப் பிரசினைகளிலிருந்து தொடங்கி, இனங்களிடையே, நாடுகளிடையே வெடித்தெழும் போராட்டங்கள் வரை எல்லாமே பேசித் தீர்வுக்காணக்கூடியவையாகவே எலி வீஸல் கருதுகிறார். அவர் படிப்பிக்கும் வகுப்புகளில் மாணவர்களிடையே எழும் கறுப்பு-வெளுப்பு பிரசினைகளாகட்டும், ஆண் பெண் பாலியல் ஏற்றத் தாழ்வுகளாகட்டும்,, நாடு தழுவிய போராட்டங்களாகட்டும், அவர் தன்னளவில் இரு தரப்பையும் கூட்டிப் பேசியே தீர்வு கண்ட சம்பவங்களை ஆங்காங்கே சொல்லிச் செல்கிறார். இவை ஏதும் தன் சாதனகள் என்று காட்டும் முனைப்பில் அல்லாது ருட்ஜர்ஸ் என்னும் இன்னொரு பல்கலைக் கழக பேராசிரியருடன் நிகழ்ந்த தொடர்ந்த உரையாடலில் அவ்வப்போது தன் முன் எதிர்வந்த பிரசினைகளைப் பற்றியும் அவற்றைத் தன் வழியில் அவர் எதிர்கொண்ட்தைப் பற்றியும் அவர் சொல்லிச் செல்கிறார். தன் பல்கலைக் கழகத்தில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் பேராசிரியர்களை வன்முறை காட்டி பயமுறுத்திய போது, மாணவர்கள் பிரசினைகளையும் புரிந்து கொண்டு அவர்கள் வன்முறை இனப் பிரசினையாகவும் உருவெடுக்கும் அபாய நிலையில், தான் செய்யக் கூடியது அந்த பிரசினைக்கான மாணவர்களை தன் அலுவலகத்துக்கு அழைத்து ஒரு மணியானாலும் சரி நான்கு மணி நேரமானலும் சரி அவர்களுடன் பேசித்தான் அவர்களைப் புரிய வைப்பேன் என்று சொல்லும் வீஸல், ஆஸ்லோவில் தான் ஏற்பாடு செய்திருந்த . Anatomy of Hate என்னும் கருத்தரங்கிறகு, அப்போது தான் சிறையிலிருந்து விடுதலை பெற்றிருந்த நெல்ஸன் மண்டேலாவையும், அவரை பல பத்தாண்டுகளாகச் சிறையில் தள்ளிய தென்னாப்பிரிக்க அரசின் அமைச்சர் ஒருவரையும் அழைத்திருந்தார். அந்த மேடையிலேயே அந்த அமைச்சர் நெல்ஸன் மண்டேலாவை நோக்கி, தான் நிறவெற்யுடன் பிறந்து வளர்ந்ததாகவும் இப்போது அதன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளக் காத்திருப்பதாகவும் சொன்னது எல்லோர் நெஞ்சையும் நெகிழ்வித்தது என்று வீஸல் சொல்கிறார். இதன் அடுத்த கட்டத்தில் தான் இருவரது அங்கு தொடங்கிய உரையாடல் மண்டேலாவை அதிபராகத் தேர்ந்தெடுப்பதில் முடிவுற்றது என்றும் அதன் தொடக்கத்தைத் தான் அக்கருத்தரங்கம் சாதித்தது என்றும் வீஸல் கருதுகிறார்.

எந்த போராட்டமும், பிரச்சினையும் இரண்டு தரப்புகளும் உட்கார்ந்து பேசித் தீர்க்கப்படவேண்டும் அது சாத்தியம் என்று வீஸல் நம்புவது ஒரு லட்சியக்கனவாக நம்க்குத் தோன்றலாம். ஆனால் அவர் அந்த நம்பிக்கையில் திடமாகவே இருக்கிறார். யூத இனப்படுகொலை நேர்ந்தது, ஜெர்மன் கலாசாரம், யுத கலாச்சாரத்தை எதிர்த்து சண்டையிடவில்லை. யூத கலாசாரத்தையே, யூத இனத்தையே ஒழிக்க நினைத்தது. யூதர்களாக இருப்பதே ஜெர்மன் சட்ட விரோதமாககப்பட்டது. ஆக, யூதர்களை ஒழிப்பது சட்டத்தின் படி தேவையான ஒரு காரியமாகியது. இதைத் தொடர்ந்து வீஸல் சொல்கிறார். எந்த கலாசாரமும், அது இந்துவோ வேறு எதுவுமோ என்னுடைய கலாச்சாரத்துக்கு இணையான சிறந்த் ஒன்று தான். ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்வதே சமூக உறவாடலின் விளைவாக இருக்கவேண்டும் என்றும் சொல்கிறார்.

சிறைமுகாமிலிருந்து வெளிவந்ததும், அவர் யூதமத் பற்றுமிக்கவரானார். எந்த விஷயத்திலும் அவர் மேற்கோள் காட்டுவது, சிறப்பாக எடுத்துப் பேசுவது யூத மத சித்தாந்தங்களும் சட்டங்களும் அடங்கிய தால்மூதைத்தான். அவர் இஸ்ரேலைக்கூட மதநெறி சார்ந்த நாடாகவே கருதுகிறார். அதே சம்யம் யூதர்கள் ஏன் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளாக மற்றவர்களின் வெறுப்பிற்கு இரையாகி இடம் பெயர்ந்து அலையும் நிலைக்கு விதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் தன்னைக் கேட்டுக்கொள்கிறார். எந்த மதநெறியும் அறம் சார்ந்து, ஒழுக்கம் சார்ந்தே இருக்கவேண்டும் என்று சொல்கிறவர், அதே போல் மற்றவர் மதநெறியும் அறம் சார்ந்த, ஒழுக்கம் சார்ந்த ஒன்றாக அங்கீகரிக்கவேண்டும் என்றும் சொல்கிறவர், வரலாற்றின் நிர்ப்பந்தங்களுக்கு இரையாகி, தன்னைக் காத்துக்கொள்ள தான் வாழ ஒரு இடம் வேண்டி தன்னைக் காத்துக்கொள்ள தம்மை இணைப்பது வரலாற்றில் இரையாகிக்கொண்டிருக்கும் மக்கள் தொகையாக இருப்பதன் காரணத்தை, அவர் இஸ்ரேலின் இறைசார்பைப் பார்க்கவில்லை.

வீஸலின் ஆளுமையைச் சொல்லும் இன்னுமொரு சம்பவம், அமெரிக்கர்கள் ஜெர்மனியில் முன்னேறி வரும்போது நாஜி அரசு சிறை முகாம்களிலிருந்த யூதர்களை, நாளொன்றுக்கு பத்தாயிரம் என்ற கணக்கில் எங்கோ கப்பலில் ஏற்றி கண்காணாத இடத்திற்கு அனுப்பிவைத்தார்கள். ஆனால் என்ன காரணத்தாலோ எலி வீஸல் இருந்த குழந்தைகள் பகுதி தொடப்படாத காரணத்தால் அமெரிக்கர்கள் முன்னேறி வந்த போது அவர்கள் பாதுகாப்பில் வந்தார்கள். அவர்களில் கறுப்பினத்தவர்களும் இருந்தார்கள். எலி வீஸல் சொல்கிறார். வதைமுகாம்களில் இருந்த சிறுவர்களைவிட அவர்க்ள் தான் கொலைகார நாஜிகள் மீது ஆத்திரப்படடார்கள். பின் கோபம் மேலிட்டு அழவும் செய்தார்கள். தங்களிடமிருந்த ரேஷன் பொருள்களையெல்லாம் முகாமிலிருந்த குழந்தைகளுக்கு வீசி எறிந்தார்கள். ஆனால் அவற்றைச் சாப்பிடும் முன், பிரார்த்தனை செய்யவே அந்தச் சிறுவர்கள் விரும்பினார்களாம். அதற்கான பிரார்த்த்னனை கூடம் ஒன்று ஏற்பாடு செய்ய்பபட்டது. தங்களைக் கைவிட்டு விட்ட கடவுளிடம் கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்த்தாக எலி வீஸல் சொல்கிறார். நோபல் விருது பெற்ற சமயம் நெல்லி சாக்ஸ் என்ற பெண் கவிஞரைச் சந்தித்துப் பேசியது பற்றி மிக மன நெகிழ்ச்சியுடன் குறிப்பிடும் வீஸல் சொல்கிறார். நெல்லி சாக்ஸ் ஜெர்மன் மொழியில் சில வார்த்தைகளை தாம் பயன்படுத்தவே முடியாது மனம் இறுகிப் போய்விட்டதாகவும் அதற்குக் காரணம் அந்த வார்த்தைகளை நாஜிகள் தம் கொடூர செயல்களுக்குப் ப்யன்படுத்தியதே காரணம் என்றும்,, அவர் மன நோய்க்கு ஆளாகி சிகித்சை பெற வேண்டியதாயிற்று, ஒரு கவிக்கு தன் மொழியுடன் ஆன பிணைப்பில் உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது என்று கூறுகிறார்.

இதற்கு அடுத்த படியாக மேலும் வீஸல் சொல்கிறார். எப்போதெல்லாம் மொழியின் மீது தாக்குதல் நடக்கிறதோ அப்போதெல்லாம் மனித மனத்திற்கும் ஆன்மாவிற்கும் ஊறு நேர்கிறது. மொழி ஒரு நினைவுச் சின்னம் மொழியின் பிரயோகங்கள் அது பெறும் மாற்றங்கள் அம்மக்கள் கூட்டம் பெற்ற மாற்றங்களைச் சொல்லும். ஒரு வாக்கியத்தை ஆராய்ந்தால் அந்த வாக்கியத்தைப் பயன்படுத்திய மக்களின் எல்லா விவரங்களையும் அறிய முடியும் என்று வீஸல் விளக்குகிறார். மக்கள் மீதான தாக்குதல் மொழியின் மீதான தாக்குதலையும் உள்ளடக்குகிறது. என்கிறார் வீஸல்;

தங்களை வதைத்தவர்களைப் பழி வாங்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை என்கிறார் வீஸல். பழி வாங்குதல் வெறுப்பில் பிறக்கிறது.வெறுப்பு அதைக் கைக்கொளப்வரையும் அழிக்கிறது அது ஒரு அழிவு சக்தி. அது மரணத்திற்கே எப்போதும் சேவை செய்கிறது. அதன் காரணமாகவே வீஸல் மரணதண்டனையையும் வெறுப்பின் ப்ழிதீர்த்தலின் விளைவாகக் கருதி அதை ஒப்புக்கொள்வதில்லை. வெறுப்பு, பழிதீர்த்தல் என்ற இரண்டு எதிர்மறை கருதுகோள்கள் வீஸலின் பெரும்பாலான தீர்வுகளைத் தீர்மானிக்கின்றன. “கொமேனியைப் பாருங்கள். கடவுள் மீதான அன்பு, விசுவாசம் என்ற் பெயரில் எத்தகைய வெறுப்பு பரப்பப்பட்டு வருகிறது கடவுள் சார்பால் மேற்கொள்ளப் பட்டு வரும் போர்கள் எத்தனை, எத்தனை? …பைபிள் என்பது பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் இருப்பில் உள்ள ஆவனங்களில் ஆகச் சிறந்த மனித நேய ஆவணங்களில் ஒன்றாக நான் நம்புகிறேன்.. இருந்தும் அதிலும் கூட சில கடுமையான பக்கங்கள் இருக்கின்றன. நம் எதிரிகளை நாம் எப்படி நடத்தவேண்டும், தண்டிக்கவேண்டும் என்பதை பகுதியைப் போல். புனித நிலத்திற்கு ஜோஷ்வா வந்து சேரும்போது கனானை வெற்றி கொள்வது என்ற நிகழ்வை என்னால் பெருமெத உணர்வோடு ஏற்க இயலவில்லை. இயலவே இல்லை.” என்று மேலும் வேறோரிடத்தில் அவர், “ஆனால் சகிப்புத்தன்மையற்றவர்களிடம் சகிப்புத் தன்மையோடு இருக்க என்னால் இயலாது” சகிப்பின்மை என்பது அடிப்படைவாதிகல், வெறியர்களுக்கு மட்டுமே எப்போதும் சேவை செய்து வருவது, என்கிறார்..

வீஸல் தன் வாழ்க்கையின் தொடக்கத்தையே மறைமுகமாகக் குறிப்பிட்டு வேறோரிடத்தில் சொல்கிறார்: “ஒரு மகனின் தந்தை கொலையாளி ஒருவரால் சாகடிக்கப்பட்டு விட்டதாக வைத்துக்கொள்வோம். சரி, அந்த மகன் சென்ற்கு தன் தந்தையைக் கொன்றவனைக் கொலை செய்து விடுகிறானென்றால், அதன் மூலம் கிடைப்பது என்ன? நடந்த துன்பியல் நிகழ்வு முன்பு இருந்ததைப் போல் அத்தனை உண்மையாக இனி இல்லாமல் போய் விடுகிறது. இப்போது வேறொன்று சமன்பாட்டில் இடம் பெறுவதாகிவிடுகிறது. பழி தீர்த்துக் கொள்ளல் என்ற செயல்பாட்டை நாம் ஆரம்பித்து விடலாகாது…….முதலில் பழிதீர்க்கப்படவேண்டியவர்கள் SS-தானே? ஆனால், அந்த SS-ஐ ஆதரித்து அதற்கு உதவி செய்த குழுக்கள் எத்த்னையோ இருந்தன நடக்கும் அக்கிரமங்களையெல்லாம் ஓரமாக நின்றபடி பார்த்துக்கொண்டிருந்தவர்கள் இருந்தார்கள். பின் நாம் ஹ்ங்கரிக்குப் போகவேண்டியிருக்கும்`. அங்கேயும் கணிசமான அளவில் ஹங்கரி நாஜி வெறியர்கள் என்னுடைய சொந்த ஊரில் SS-க்கு உதவி செய்து வந்தார்கள். ஜெர்மானியர்களைவிட அதிக அளவு இவர்கள் யூதர்களை அடித்துதைத்தும் அவமானப் படுத்தியும் துன்புறுத்தினார்கள். ருமேனியா, போலந்து, மற்றும் உக்ரெய்ன் ஆகிய இடங்களிலும் கூட இது தான் நடந்தது. நாம் எங்கே நிறுத்துவது?

இது ஏதும் Utopian என்று சொல்லத்தக்க லட்சியக் கனவு அல்ல. வெகுவாக நடைமுறை விவேகம் என்று சொல்லத்குந்த ஒன்றுதான். இதுவும் பிரக்ஞைபூர்வமாக தேர்ந்தெடுத்துக்கொண்ட ஒன்றல்ல என்று எலி வீசல் சொல்கிறார். இது தனிநபர் சார்ந்த அறவியல். இயல்பாக உருவானது, பாரம்பரியமாக தொடர்வது. தந்தையர்களின் நற்பண்புகள் என்று தொடர்வது. அவர் தாத்தா, கொள்ளுத் தாத்தா சொல்வாராம்: “வேண்டாம், நீ அதைச் செய்யாதே. நீ செய்யத் தக்க காரியம் இல்லை அது. நாம் ஒரு போதும் அவ்வாறு நடந்து கொண்டதில்லை” என்று. பின் தொடர்ந்து சொல்கிறார்: இரண்டாயிரம் வருட யூத வரலாறு வெறுப்பும், தண்டனையும் கொன்றுகுவித்தலுமான வரலாறு தான். ஒவ்வொரு முறையும் நாங்கள் பழிக்குப் பழி என்று நடந்து கொள்ள் முற்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்?” அதே சமயம் வேறோரிடத்தில் ஒரு கசப்பான உண்மையையும் பார்க்கவேண்டியிருக்கிறது. “இஸ்ரேலில் மதம் எனது, அதன் வரலாறு காரணமாய், வருந்தத் தக்க அளவில், மிக அதிக் செல்வாக்குடையதாய் விளங்குகிறது. மதங்கள் மிக அதிகமாக அரசிய்லோடு கலக்கின்றன. அது எனக்கு உடன்பாடான் விஷய்மில்லை.”

அவர் உடன்படுகிறாரோ இல்லையோ, கொமேனிக்கு அதிகாரம் வந்தடைந்ததும் ஈரான் என்னவாயிற்று என்பது அவருக்கே தெரியும். அவரும் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து வேறிடத்தில், “எனக்கு கவலையளிக்கும் விஷயம் மதம் என்பது அதன் உச்சபட்ச அடிப்படைவாதப் போக்கில் எழுச்சி பெற்று வருவது தான். அஸர்பைஜான் மற்றும் உஸ்பெக்கிஸ்தான் இரண்டிலுமாகச் சேர்ந்து 700 ல்ட்சம் இஸ்லாமிய்ர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே தீவிர வாதத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். பிறகு, உலகில் மத அடிபப்டைவாதிகளின் மேலாதிக்கத்தின் கீழே 200 கோடி ஈஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். இஸ்ரேலைப் பொறுத்தவரையிலும் இதே நிலைமைதான்.”….என்று சொல்லிச் செல்கிறார். 200 கோடி முஸ்லீம்கள் மத அடிப்ப்டை வாதிகளின் ஆதிக்கத்தில் தீவிரமடைவது எங்கே. இவர்களிடையில் இஸ்ரேலும் தன் மத தீவிரவாத்த்தைக் கையாளும் தற்காப்பு எங்கே.? எது காரணம்? எது விளைவு? அவரவர் தரப்பு நியாயத்துக்கு காரணத்தையும் விளைவையும் மாற்றி வாதிடலாம் தான். வலுத்த கையின் சொல் அம்பலமேறும். இதில் எலி வீஸல் கூறும் வட்டமேஜையைச் சுற்றி உடகார்ந்து கருத்து பரிமாறிக்கொள்வதில் எந்த பிரசினை தீரும்? எத்தனை ஆண்டு இனவெறியின் ஆளுகைக்குப் பின் உல்களாவிய எதிர்ப்புக்குப் பிறகு, ஒரு தென்னாப்ப்ரிக்க அமைச்சர் நெல்சன் மண்டேலாவின் அருகே அமர முடிந்த்து? அது ஏன் ஹிட்லரோடு ஸ்டாலினோடு, மாவோடு, பால் பாட்டோடு, சாத்தியமாகவில்லை? மகாத்மா எவ்வளவு விட்டுக்கொடுத்த போதிலும் ஏன் ஜின்னாவோடு சாத்தியமாகவில்லை? சாத்தியமாகது போனபின் நடந்த வரலாறு என்ன.? இன்னும் ஒரு பேரழிவு தானே.

ஆனால் நம் நம்பிக்கைகளும், அவநம்பிக்கைகளும் என்னவாக இருந்தாலும், எலி வீஸல் போன்ற ஒரு குரலுக்கு நாம் மரியாதை செய்யவேண்டும். வெகு அபூர்வமாக ஒலிக்கும் குரல் இது. இப்படிப்பட்ட ஒரு குரல் 1948- வருடம் ஜனவரி மாதம் 30 தேதி தொடர்ந்து எழாது பலவந்தமாக நசுக்கப்பட்டது.

எலி வீசல் யூத இறையியலாளர்குழு கதை ஒன்று சொல்கிறார்: இரண்டு நபர்கள் தற்செலாக சந்தித்துக் கொள்கின்றனர். முதலாமவன் கானகத்தில் தனியாக வழிதெரியாமல் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்ன். அவனுக்குள் பயமும் பீதியும் பரவுகிறது. அந்த சமயத்தில் அவன் இன்னொரு மனிதனைப் பார்க்கிறான். மனம் மகிழ்ந்து அவனிடம் ஓடிச்சென்று, “உன்னை இங்கே காண்பதற்கு நான் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன். தயவு செய்து இங்கிருந்து வெளியேறும் வழியை எனக்குக் காட்டு” என்று கேட்கிறான். அதற்கு இரண்டாமவன் சொல்கிறான்.”நானும் வழியைத் தொலைத்தவன் தான். என்னால் உனக்குச் சொல்ல்முடிவது, நான் வந்த வழியாகச் செல்லாதே. ஏனெனில் அந்த வழியாகத் தான் வழிதொலைத்து இங்கே வந்திருக்கிறேன்.” என்று. அந்தக் கதை முடிகிறது. பின் வீஸல் சொல்கிறார். “இந்த நூற்றாண்டு மறுபடியும் இருபதாம் நூற்றாண்டுக்குத் திரும்பிச் செல்லாமல் இருக்க நாம் கற்றுக்கொள்ளவேண்டு.ம்.”

ஆனால் நம்க்குத் தெரியும், நாம் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளும் ஒரே பாடம் வரலாற்றிலிருந்து எதையுமே நாம் கற்றுக்கொள்வதில்லை என்பது தான்.

எலி வீஸலுடனான உரையாடலைப் படிப்பது ஒரு அரிய அனுபவமாக இருந்தது. இதை சாத்தியமாக்கிய சந்தியா பதிப்பகத்துக்கும், தமிழில் மொழிபெயர்த்த லதா ராம கிருஷ்ணனுக்கும் நாம் நன்றி சொல்லவேண்டும்.

எலி வீஸல் உரையாடல்கள்: (உரையாடுபவர் ரிச்சர்ட் ட். ஹெஃப்னர்) தமிழில் லதா ராமகிருஷ்ணன்.: சந்தியா பதிப்பகம், நியு டெக் வைபவ், 57, 53வது தெரு, அசோக் நகர், சென்னை-83. விலை ரூ 135

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்