முப்பத்து மூன்று!

This entry is part [part not set] of 31 in the series 20100312_Issue

ராமலக்ஷ்மி, பெங்களூர்.


மங்கையராலே.. பொங்கிடும் அன்பு! தங்கிடும் சுபிட்சம்!:

தாய்மை என்பது அன்பின் உச்சம். உலகின் ஜனத்தொகையில் பாதியாகிய பெண்கள் அந்த உச்சத்தை அடைந்து அனுபவிப்பதாலேயே அன்பு உலகில் நிலைக்கிறது, பரவுகிறது.

அன்பின் வடிவாய்.. தன் குழந்தைகளுக்காகத் தன்னையே உருக்கிக் கொள்ளும் தாயினைப் பார்த்து ஒரு பெண் சிறுமியாய் இருக்கும் போதே தானும் ஒரு மகளாய் ஒரு தமக்கையாய் ஒரு தங்கையாய் தாய்மை உணர்வில் பரிமளிக்கத் தொடங்கி விடுகிறாள்.

புகுந்த இடத்திலும் அத்தனை பேருக்கும் தாய்மையின் வடிவாய் தன்னை அர்ப்பணிக்கிறாள். அதன் பிரதிபலிப்புத்தான் ஆண் பெண் பாகுபாடின்றி குடும்பத்திலுள்ள அத்தனை பேரும் அன்பின் வசமாகி மனமது தெளிவாகி நல்லது கெட்டது புரிவாகி பக்குவப்பட்டு நிற்கிறார்கள். வெற்றியையும் கை வசமாக்கிக் கொள்கிறார்கள்.

ஒவ்வொரு குடியும் இவ்வாறாகப் பெண்ணினால் பக்குவப் பட்டு நின்றால் போதுமே: “குடி உயரக் கோல் உயரும்; கோல் உயரக் கோன் உயர்வான்”! ஒளவை சொன்னதுதான்!

இப்படித் தாய்மை உள்ளத்தில் பரிமளித்துத் தத்தமது குடிகளை உயர்த்துகிற பெண்களுக்கு மத்தியிலே தாய்மையே உருவான அன்னை தெரசா போன்றவர்கள் கருணைக்கும் தியாகத்துக்கும் எடுத்துக் காட்டாக இருந்து சாதி மத இன பேதம் தாண்டிய பரஸ்பர அன்பு பரவிடக் காரணமாயிருந்தார்கள்.

அத்தகைய பரஸ்பர அன்பே அகிலத்தின் அமைதிக்கான அடிப்படை. இன்று அமைதி என்பது ஆங்காங்கே அவ்வபோது ஆட்டம் கண்டபடியே இருப்பது ஏன் எனச் சற்று ஆராயத்தான் வேண்டும். அப்படி ஆராய்கையில், தாய்மையும், பெண்மையின் தன்னிகரற்ற தியாக உள்ளமும் போற்றப் பட ஆரம்பித்த பிறகுதான் இந்த ‘உலகின் சுபிட்சம்’ உச்சத்துக்கு செல்லத் துவங்கிய உண்மை புரியும்.

பத்தொன்பதாவது நூற்றாண்டின் வரையிலும் கூட உலகின் பல நாடுகளில் பெண்கள் ஓட்டுரிமை பெற்றிருக்கவில்லை. வளர்ந்த நாடாகத் தன்னைக் காட்டிக் கொண்ட அமெரிக்காவில் 1920ஆம் ஆண்டுதான் பெண்கள் மதிக்கப்பட்டு ஓட்டுரிமை தரப் பட்டார்கள்.

உன்னிப்பாக உலக சரித்திரத்தைக் கவனித்தால் வியக்கத்தகு வளர்ச்சி என்பது மங்கையர் மதிக்கப்பட ஆரம்பித்த இருபதாம் நூற்றாண்டில்தான் வந்தது என்றிடலாம். 1905-ல் கண்டு பிடிக்கப் பட்ட விமானம் முதல் தொலைக்காட்சி, அலைபேசி, இணையம் போன்ற உலகத்தை ஒரு வளையத்துக்குள் கொண்டு வந்த அத்தனை சமாச்சாரங்களுக்கும் இருபதாம் நூற்றாண்டே சாளரங்களை விரியத் திறந்து விட்டது.

இந்தியாவில் ‘உடன்கட்டை’ வழக்கம் முற்றிலுமாக ஒழிந்தது. பெண்களும் கல்விக்காக வெளிவரத் தொடங்கினார்கள். பரவலாக வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார்கள். பொருளாதார ரீதியாகவும் குடும்பப் பொறுப்பினைத் தாங்க ஆரம்பித்தார்கள். உடலால் பலவீனமானவர்களாய் அறியப் பட்ட பெண்கள் வீட்டையும் கவனித்துக் கொண்டு வேலையிலும் பெரும் வெற்றிகளைக் குவித்த படி பெரும் சக்திகளாய் மாறலானார்கள்.

மகாக் கவி பாரதி பெண்களின் விடுதலை வேண்டிப் பாடிய கும்மிப் பாட்டு அட்சரம் பிசகாமல் மெய்ப் பட்டது.

‘சிவனின்றி சக்தி இல்லை. சக்தியின்றி சிவனில்லை’ என்பது வேதகாலப் பாடமாக மட்டுமின்றி நடைமுறை வாழ்க்கையிலும் நடக்கக் கண்டார்கள். வேலைக்குச் செல்லாவிடினும் வீட்டிலிருந்த படி குடும்பப் பொறுப்புகள் நிர்வகிப்பதில் ‘ஒன்றும் தெரியாது உனக்கு’ என்கிற மாதிரியான பிம்பங்கள் உடைத்து திறமைமிகு மதி மற்றும் நிதி மந்திரிகளானார்கள்.

சீனர்களின் யின்-யாங் தத்துவம் எதிரெதிரான பெண் ஆண் சக்திகளின் அலைகள் ஒன்றில்லா விட்டால் மற்றதில்லை எனும் அளவுக்கு ஒன்றையொன்று சார்ந்து ஒன்றின் உயர்வுக்கு மற்றது காரணமாய் அமைவதே இயற்கையின் நியதி என்கிறது. அது உண்மையென்றே படுகிறது.

இப்படி சரிவிகித அலை உலகிலே என்றும் இருக்குமாயின் செழிப்பிற்குக் குறைவிருக்காது. கருணை என்பது கடலெனப் பெருகி தீவிரவாதம் தீய்ந்தே போய்விடும். எப்போதெல்லாம் இந்த அன்பின் தூதர்களும் சுபிட்சத்தின் காவலர்களுமான பெண்கள் அனுசரணையாக நடத்தப் படாது போகிறார்களோ அப்போதெல்லாம்தான் வருகிறது அமைதிக்குப் பங்கமும் சுபிட்சத்துக்குப் பஞ்சமும். இதைக் கருத்தினில் கொண்டு கொண்டாடுங்கள் மகளிரை!

ஆதரியுங்கள் சதவிகிதம் முப்பத்து மூன்றை!
*** *** ***
ramalakshmi_rajan@yahoo.co.in

Series Navigation

ராமலக்ஷ்மி

ராமலக்ஷ்மி