நினைவுகளின் சுவட்டில் – (44)

This entry is part [part not set] of 28 in the series 20100227_Issue

வெங்கட் சாமிநாதன்


ஆமாம். ஒரு கார்டு தான். அதில் அதிகமாக ஒன்றும் எழுதவில்லை. ஒரு கார்டில் எவ்வளவு எழுத முடியும்? மேலும் அதிகம் எழுத எனக்கு என்ன தெரியும்?

“மாமா அவர்களுக்கு அனேக நமஸ்காரம். நான் சாமிநாதன், உடையாளூரிலிருந்து எழுதுகிறேன். தங்கத்தின் மூத்த பிள்ளை, இப்போது எஸ்.எஸ்.எல்.ஸி பாஸ் செய்து விட்டேன். இரண்டு வருஷங்களுக்கு முன் நீங்கள் பாட்டியைப் பார்க்க மதுரை வந்திருந்தபோது, பாஸ் செய்ததும் எனக்கு வேலை வாங்கித் தருவதாக சொன்னீர்கள். ஞாபகம் இருக்குமென்று நினைக்கிறேன். இப்போது நான் உங்களிடம் ஜெம்ஷெட்பூருக்கு வரட்டுமா? வேலை கிடைக்குமா? உங்களிடமிருந்து வரச்சொல்லி லெட்டர் வந்ததும் புறப்பட்டு வருகிறேன். நமஸ்காரம், இப்படிக்கு உங்கள் அன்புள்ள,….

இப்படித்தான் ஏதோ எழுதியிருப்பேன் என்று நினைக்கிறேன். கறாராக, businesslike என்பார்களே அந்த மாதிரி. அப்படித்தான் எழுதினேன் என்பது பின்னால் மாமாவிடமிருந்து வந்த கடிதத்தில் தெரிந்தது. அது பற்றிப் பின்னால்.

அப்பா வந்ததும், “உங்க பிள்ளை வடக்கே மாமா கிட்டே போகப் போறானாம். வரட்டுமா, வேலை வாங்கித் தரேளா?-ன்னு கேட்டு அப்புக்கு லெட்டர் எழுதிப் போட்டிருக்கான்.” என்று அம்மா சொன்னாள். அப்பா என்னைப் பார்த்தார். “ரொம்ப பெரியவனாயிட்டானோல்யோ! தானே எல்லாக் காரியமும் செஞ்சுக்க ஆரம்பிச்சுட்டான் போல்ருக்கு. அது சரி, முதல்லே போய் மார்க் என்ன வாங்கிருகேன்னு பாத்துட்டு வாடா, மாமா சொல்லிருக்காளே, நல்ல மார்க் வாங்கினா, என்னமோ பரிட்சை எழுதினா, இங்கேயே வேலை கிடைக்கும்னு. மாமா சொல்றதைக் கேக்காம, அதிகப் பிரசங்கித்தனமா உன்னோட அப்பு மாமாக்கு லெட்டர் போட்டுட்டே.” என்று கொஞ்சம் கோபத்தோடு சொன்னார். “ஏண்டா, ஏதோ பேச்சுக்கு எதையோ சொன்னா அத பெரிசா எடுத்துப்பாளாடா, ரண்டு வருஷம் முன்னாலே சும்மா நீ நன்னா படிக்கணும்கறதுக்காகச் சொன்னதை, இப்போ நீ அப்படிச் சொன்னியேன்னு எழுதுவாளாடா, அவனுக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்கப் போறதா என்ன?” என்று சொல்லிக்கொண்டிருந்தார். அம்மாவையும் கோபித்துக் கொண்டார், “அவன் தான் எழுதினான்னா, நீயாவது அவனுக்கு புத்தி சொல்லப்படாதா? என்று.

பிறகு இரண்டு நாள் கழித்து அதெல்லாம் மறந்து விட்டது. கும்பகோணம் போய் ஸ்கூல்லே யிருந்து செர்ட்டிபிகேட் வாங்கிவரணும். மார்க் என்ன வாங்கிருக்கேன்னும் தெரியும். ஒரு நாள் போய் டிரான்ஸ்பர் செர்டிபிகேட், ஸ்கூல செர்டிபிகேட் எல்லாம் வாங்கிவந்தேன். மொத்தம் 600-க்கு 306 மார்க், ஆங்கிலத்தில் 38, ஹிந்தியில் 49. தமிழில் தான் நிறைய -56. மற்ற பாடங்களில் எல்லாம் 53, 54 என்று தமிழுக்கு ஒன்றிரண்டு குறைய. பரிட்சை அன்றைக்கு ஒரு மணி நேரம் முன்னால் போய், வீரராகவனிடம், படிக்காத பாடங்கள் ஒவ்வொன்றிலும் என்ன சொல்லியிருக்கு? என்று தமிழில் கேட்டுக்கொண்டு அவ்வளவு லக்ஷணமாக எழுதிய ஹிந்தி பரிட்சையில் கிடைத்த மார்க் 49. எப்படி இவ்வளவு மார்க் கிடைத்தது என்பது ஒரு ஆச்சரியம். ஆனால் முக்கியமா இங்கிலீஷில் 38 தான். மதராஸ் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எழுத இந்த மார்க் போதாது. அதுவே எனக்கு நிம்மதியாக இருந்தது. மாமாவுக்கு எழுதிப் போட்டுடலாம். மார்க் போதாது என்று. அப்படி ஒரு சந்தோஷம்.

மாமாவுக்கு பரிட்சையில் கிடைத்த மார்க்குகளைச் சொல்லி அப்பா லெட்டர் போட்டார். உடனே மூன்றாம் நாளே மாமாவிடமிருந்து பதில் வந்து விட்டது. சர்வீஸ் கமிஷன் பரிட்சை எழுதுவதற்கு இந்த மார்க் போதாது. இருந்தாலும் பரவாயில்லை. மறுபடியும் மார்க் குறைவா இருக்கற இங்கிலீஷ்லே மாத்திரம் நன்னா மறுபடியும் படித்து பரிட்சை எழுதினால் நிச்சயம் மார்க் நிறையா வரும். கவலைப்பட வேண்டாம்.” என்று எழுதியிருந்தார். இது எதிர்பார்த்தது தான் என்றாலும், நிஜமாகவே ஒரு லெட்டர் வந்து சேர்ந்ததும், மனசு உடைந்தே போயிற்று. மறுபடியும் படிக்கணுமா?, மறுபடியும் பரிட்சை எழுதணுமா? என்று.

“என்னடா சொல்றே, உன்னோட மாமா இப்படி எழுதியிருக்கானே, மறுபடியும் பரிட்சை எழுதி மார்க் நிறைய வாங்கினா, இங்கேயே வேலை கிடைக்குமே, அதுவும் கவர்ன்மெண்ட் வேலை? என்று அப்பா வேற ஆரம்பித்துவிட்டார்.

நான் உடனே ஒன்றும் பதில் சொல்லவில்லை. “ஏண்டா நான் கேக்கறேனோல்யோ, பதில் சொல்லேன். மாமாவுக்கு என்ன பதில் சொல்றது?,” என்று எரிச்சலோடு அதட்டிவே, “பாக்கலாம்பா, அப்பு மாமாகிட்டேயிருந்து ஏதாவது லெட்டார் வரதான்னு பாக்கலாம். அப்புறம், மறுபடியும் பரிட்சை எழுதணும் அதிலே மார்க் நிறைய வரணும். அப்புறம் பப்ளிக் சர்வீஸ் கமிஷனுக்கு எழுதணும். அப்படியும் வேலை கிடைக்கும்னு என்ன நிச்சயம். அதிலே பாஸ் பண்றவா எல்லாரையும் எடுத்துக்கப் போறதில்லே. எத்தனை காலி இடம் இருக்கோ அத்தனை பேரை எடுத்துண்டு பாக்கி பேரை விட்டுடுவா”. என்று சொன்னேன். இப்படி ஒரு சிக்கல் இருக்கறதைக் கேட்டதுக்கு அப்புறம் அதில் அவருக்கு சுவாரஸ்யம் விட்டுப் போயிற்று என்று தான் தோன்றியது.

கொஞ்ச நாள் இப்படியே வீடு இறுக்கமாகத் தான் இருந்தது. அப்பா மாத்திரம் அப்பப்போ, “யாராவது சொல்றதைக் கேட்டாத்தானே, எப்படியோ ஒழிஞ்சு போங்கோ, உன்பாடு, அவன்பாடு,” என்று அம்மாவிடம் எரிச்சல் பட்டுக்கொள்வார்.

நாட்கள் செல்லச் செல்ல ஜெம்ஷெட்பூரிலிருந்து ஒன்றும் வராதோ என்றும் சந்தேகம் வரத் தொடங்கியது. அப்படி ஒன்றும் நாட்கள் ஆகிவிடவில்லை. தபாலெல்லாம் ரயிலில் தானே வந்தாகணும்? உடனே பதில் எழுதுவதாக இருந்தாலும் பதில் வர ஒருவாரமாவது ஆகுமே. ஆனாலும் வீட்டில் இருந்த இறுக்கமான சூழலில் ஏதோ யுகம் போவது போலத் தான் இருந்தது. இனி எதிர்பார்ப்பதில் அர்த்தம் இல்லை, மறுபடியும் பரிட்சை எழுத வேண்டும் போலிருக்கிறதே என்று பயந்து கொண்டிருந்த சமயத்தில் ஜெம்ஷெட்பூரிலிருந்து அப்பு மாமா கடிதம் வந்தது. ஒரு கார்டு தான். அப்பாவுக்கு எழுதியிருந்தார். “உங்க பிள்ளையாண்டான் சாமிநாதன்கிட்டேயிருந்து ஒரு கார்டு வந்தது. அவனுக்கு இங்கே வேலை கிடைக்குமான்னு கேட்டு எழுதியிருந்தான். அவன் எழுதினது உங்களுக்கு தெரியுமோ இல்லே ஏதோ ஆர்வத்திலே அவனே எழுதினானா என்று தெரியவில்லை. எதற்கும் உங்கள் சம்மதத்தின் பேரில் தான் எழுதியிருக்கிறான், உங்களை விட்டு அவன் இவ்வளவு தூரம் வருவதில் உங்களுக்கு ஆ§க்ஷபணை இல்லை என்று எனக்குத் தெரிந்தால் நல்லது என்று பட்டது. மற்றபடி அவன் தனியாகப் போய் வேலை பாக்கணும், அப்பா அம்மாக்கு உதவியா இருக்கணும்னு அவனுக்கே தோணினது சந்தோஷமா இருக்கு” என்று எழுதியிருந்தார்.

அந்த ஒரு கார்டு வீட்டில் இருந்த இறுக்கத்தை நீக்கி ஒரு மாதிரியாக சுமுக நிலை திரும்ப வைத்துவிட்டது. ‘அப்ப்….ப்…பா’ என்று ஒரு நிம்மதிப் பெருமூச்சு, எனக்கு மாத்திரமில்லை. எல்லோருக்குமே. ‘போட்டு வைப்போமே, பதில் வந்தால் சரி, வராவிட்டாலும் சரி’ என்று நான் எழுதிய கார்டுக்கு எதிர்பாராத விதமாக நிரம்ப அக்கறையோடும் வாத்சல்யத்தோடும் வந்த பதில் எல்லோருக்கும் சந்தோஷத்தை அளித்தது. உடனே அப்பாவே தன் கைப்படவே பதில் எழுதிப் போட்டு விட்டார்.

இதன் பிறகு ஏழெட்டு நாட்களுக்குள் அப்பு மாமாவிடமிருந்து இன்னொரு கார்டு வந்துவிட்டது. முன்னர் அவரிடமிருந்து கடிதம் வராத நாட்கள் தந்த இறுக்கம் இப்போது இல்லை. கட்டாயம் அவரிடமிருந்து கடிதம் வந்து விடும் என்ற எதிர்பார்ப்பு சந்தோஷத்தைக் கொடுத்தது. அத்தோடு நிலக் கோட்டை மாமாவின் ஆலோசனைகள் இப்போது பயமுறுத்துவதாக இல்லை

அப்பு மாமா அப்பாவுக்கே எழுதியிருந்தார். “எஸ்.எஸ்.எல்.ஸி சர்டிபிகேட் போக இன்னும் என்னென்ன உண்டோ எல்லாவற்றையும் பையன் வரும்போது கொடுத்து அனுப்புங்கள். அத்தோடு வெள்ளை டிரில் துணியில் நாலு பாண்ட்டும் வெள்ளை பாப்ளினில் நாலு சர்ட்டும் புதிதாக அவனுக்கு தைத்துக் கொடுத்து அனுப்புங்கள். மதராஸ் செண்டிரலிலிருந்து புறப்படும் கல்கத்தா மெயிலில் டாடாநகருக்கு என்று சொல்லி டிக்கட் வாங்கவேண்டும். சாயந்திரம் கல்கத்தா மெயிலில் ஏறினால் ஒரு நாள் விட்டு மறுநாள் காலை கார்க்பூர் ஸ்டேஷன் வரும். அங்கு இறங்கி கல்கத்தாவிலிருந்து பம்பாய் போகும் மெயிலில் ஏறினால் சாய்ந்திரம் நாலுமணிக்கு டாடா நகர் வந்து சேரும். நான் ஸ்டேஷனுக்கு வந்து அழைத்துப் போகிறேன். கரக்பூர் ஸ்டேஷனுக்கு ரயில் வந்ததும் சாமிநாதனை கரக்பூரிலிருக்கும் என் சினேகிதர் வந்து அழைத்துக்கொண்டு போவார். பின் பம்பாய் மெயிலில் ஏற்றி விடச் சொல்லி எழுதுகிறேன். கவலை வேண்டாம். நான் எல்லா ஏற்பாடுகளையும் செய்கிறேன். உங்கள் சம்மதத்தோடுதான் சாமா இங்கு வருகிறான் என்பதால் என் மனசில் ஒரு நிம்மதி. என்றைக்கு மதராஸிலிருந்து புறப்படுவான் என்பதை மட்டும் எனக்கு முன்னதாகவே தெரியப்படுத்துங்கள்” என்று இவ்வளவு விஷயங்கள் இருந்தன அந்த கார்டில்.

இவ்வளவோடு, இந்த கார்டிலோ அல்லது முந்தி வந்த கார்டிலோ, அம்மாவைப் பற்றியும் ஒரு வரி எழுதியிருந்தார். “தங்கம் பேர் மாத்திரம் தங்கம் இல்லை. அவளே தங்கம் தான்.” என்று. அம்மாவின் சந்தோஷத்தைச் சொல்லி சாத்தியமில்லை. அப்பு அண்ணாகிட்டேயிருந்து உடனே இவ்வளவு கரிசனமும் அன்போடும் லெட்டர் வந்தது மட்டுமில்லை. அதில் தன்னைப் பற்றி இவ்வளவு புகழ்ந்து எழுதியிருந்தது, அம்மா இப்படியெல்லாம் தன்னைப் பற்றி யாரும் சொல்லிக் கேட்காத வார்த்தைகளாதலால், ஏதோ ஆகாயத்தில் தான் மிதந்தாள். இந்த வரி எங்களுக்கெல்லாம் மிக ஆழமாக நினைவில் பதிந்த வரி. உண்மையில் சொல்லப் போனால், அப்பு மாமா 1949 ஜூலை மாதம் எப்போதோ எழுதிய அந்த இரண்டு கார்டுகளையும் பத்திரப்படுத்தித் தான் வைத்திருந்தேன். இப்போது அந்த கார்டுகள் இரண்டையும் இங்கே அப்படியே ஸ்கான் செய்து தர ஆசைப்பட்டு தேடினேன். கிடைக்கவில்லை. இப்போது திரும்பிப் பார்க்கும் போது என் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்பத்தைத் தந்தவை அந்த கார்டுகள் இரண்டும். அவை தொலைந்து போயிற்று என இப்போது தேடும் போது தெரிந்ததும் மந்துக்கு மிகவும் வேதனையாகத்தான் இருக்கிறது. கடந்த வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தின் சுவடு இப்போது இல்லாமல் போய்விட்டது. இருப்பது நினைவுகள் மட்டும் தான். எப்போது எந்த சந்தர்ப்பத்தில் தொலைந்திருக்கும் என்பதும் தெரியவில்லை.

ஆக, என் பிரச்சினைகள் ஒரு வழியாக அமைதியாகத் தீர்ந்தன என்று தான் சொல்லவேண்டும். நான் அப்பு மாமாவின் அழைப்பின் பேரில் ஜெம்ஷெட்பூர் போய் வேலை தேடுவது என்பது எவ்வித சுணக்கமுமில்லாமல் எல்லோரும் ஒரு மனதாக தீர்மானிக்கப்பட்ட விஷயமாயிற்று.

ஆனால் திரும்ப இங்கிலீஷ் பாடத்துக்கு பரிட்சை எழுதுவது, சர்வீஸ் கமிஷன் பரிட்சை எழுதுவது என்ற பயங்கள் விலகியதில் எனக்கு ஒரு நிம்மதி உணர்வு ஏற்பட்டது உண்மை தான். ஆனால், தமிழ் நாட்டை விட்டு வடக்கே போய் இனி வாழ்ப்போகிறோம் என்ற சில வாரங்கள் முந்திய எதிர்பார்ப்பும் கனவும் இப்போது நிச்சயமானதும் அது எனக்கு ஒரு மன அமைதியைத் தந்ததே தவிர ஏதும் வானத்தில் மிதப்பதான சந்தோஷங்கள் ஏதும் இருக்கவில்லை. கனவாக எண்ணியது நனவாகப் போகும் கட்டத்தில் அது மிக இயல்பான ஒரு நடப்பாகிவிட்டது போலும்.

வெங்கட் சாமிநாதன்/19.10.09

vswaminathan.venkat@gmail.com

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்