தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல்- 2

This entry is part [part not set] of 34 in the series 20090724_Issue

லதா ராமகிருஷ்ணன்


(நிகழ்வு குறித்த சில தகவல்கள் – கண்ணோட்டங்கள்-கருத்துப்பதிவுகள்)

சூரியன் தனித்தலையும் பகல் என்ற தலைப்பிட்ட தமிழ்நதியின் கவிதைத் தொகுப்பு குறித்த திறனாய்வுக் கட்டுரையை ராஜேசுவரி வாசித்தார். அவருடைய கட்டுரை முன்வைத்த கருத்துகளில் சில :

இந்தக் கவிதைகள் தம் நாட்டை விட்டு வெளியேறி அகதிகளாக வந்தவர்களின், குறிப்பாக அக்தி முகாம்களிலுள்ள பெண்களின் அவலநிலையை வலியோடு பேசுகின்றன.
ஆறரை கோடி தமிழ்மக்கள் வாழும் தமிழ்நாட்டில் சில நூறு பேர் மட்டுமே ஈழத்தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தார்கள் என்பது அவலம்.
இன்றைய தேவை சொற்களை விட செயல்கள் தான். அமைதியான உலகம் அமைய கவிஞர்கள் தங்களுடைய செயல்பாடுகள் மூலம் வழிவகுக்க வேண்டும்.
தமிழ்நதியின் பெரும்பான்மையான கவிதைகள் போரைப் பேசினாலும் வேறு பல மனிதமன உணர்வுகளையும் அவர் நுட்பமாகப் பேசியுள்ளார்.

நாடற்றவனின் குறிப்புகள் என்ற தலைப்பிட்ட கவிஞர் இளங்கோவின் கவிதைத் தொகுப்பு குறித்து நாடகக் கலைஞரும், படைப்பாளியுமான சோமீதரன் பேசினார். இளைஞரான அவர் போர்ச்சூழலை நேரடியாக அனுபவங்கொண்டு வரும் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் உரையின் சில பதிவுகள்:
· இளங்கோவனின் கவிதைகளில் என்னைப் பார்க்க முடிகிறது.

· எந்த நாடு புகல் தரும் என்று தெரியாமல் இதோ நின்றுகொண்டிருக்கிறேன்.

· சிங்களவர்களும், தமிழர்களும் பிரிக்கப்பட்ட தலைமுறை எங்களுடையது.. முஸ்லீம், சிங்களவர், தமிழர் என்று மூன்றுவிதமான பாடசாலைகள் கொண்ட தலைமுறை நாங்கள். தமிழர்கள் என்றால் சிங்களர்களுக்கு புலிகள் தான. சிங்களவர்கள் என்றால் எங்களுக்கு சிங்கள இராணுவம் தான். நிங்கள அரசு சிங்கள ராணுவம் தான்.

· இசுலாமியர், தமிழர் ஆகிய இருதரப்புப் பள்ளிகளிலும் பாட புத்தகங்கள் சிங்கள பாட புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளே. இந்தப் பாட புத்தகங்கள் சோழ மன்னன் இலங்கை மண் மீது படையெடுத்தான், பௌத்த விகாரங்களை அழித்தான் என்று வரலாறு எடுத்துரைத்து தமிழரையும், சிங்களவரையும் நிரந்தரமாகப் பிரித்துவைத்தன.

· அகதியாக இருக்கிறேன். இது தான் என் தலைமுறை. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம் புலிகள் இயக்கம் தான்.இன்றைய தலைமுறையின் அக, புற சிக்கல்கள், பிரச்னைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. இரண்டாயிரத்தில் எழுதப்பட்ட கவிதைகளும் ஈழப் பிரச்னையின் 1986ஆம் ஆண்டு காலகட்டத்தையே பெரும்பாலும் பேசுகின்றன.

· இளைய தலைமுறையினருக்குஇலங்கை வரலாறு முறையாகச் சொல்லித் தரப்படவில்லை.

· எங்களுடைய முதல் தலைமுறை உருவாக்கிய போரில் தொடர்ச்சியாகச் செத்துக் கொண்டிருப்பவர்கள் நாங்கள். அலைந்து கொண்டிருப்பவர்கள் நாங்கள்.

· யாழ்ப்பாணத்தில் கடற்கரையில் காலார நடந்து செல்வோம் என்பார் கவிஞர் ஜெயபாலன். நாங்கள் கடற்கரையைப் பார்த்ததே கிடையாது. இசுலாமியர் கொன்றழிக்கப்பட்ட விவரமும் எங்களுக்குத் தெரியாது. வீடு கொளுத்து கிறார்கள். ஓடுங்கள் என்பார்கள். மணிக்கணக்காக ஓடுவோம்.

· பத்து வயதில் மாவீரர் கூட்டத்தில் எல்லாம் பேசியிருக்கிறேன் – முழு விவரங்கள் தெரியாமலே.

· ஈழத்தின் அன்றைய இன்றைய நிலைமைகளை ஒப்பிட்டுப் பார்த்தல், ஈழத்தையும், பிற நிலங்களையும் ஒப்பிடுதல் – இவை இந்தக் கவிதைகளில் இடம்பெற்றிருக்கின்றன.

· பத்து வயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது ஹெலிகா·ப்டர் வந்தால் எங்களுக்கெல்லாம் சந்தோஷமாக இருக்கும். சரியாக அரை மணி நேரம் குண்டுபோட்டு விட்டுப் போய்விடும் அது. அந்த சமயத்தில் பள்ளியிலுள்ள பதுங்கு குழிகளில் மாணாக்கர்களை ஒளிந்துகொள்ளச் சொல்வார்கள். வீடு ப்க்கத்திலிருக்கும் பிள்ளைகளை அனுப்பிவிடுவார்கள். கீழே விழுந்திருக்கும் துப்பாக்கிரவைகளை பொறுக்கியெடுத்துக் கொன்டுபோய் இயக்கத்தில் கொடுத்தால் ஒரு தோட்டாவுக்கு ஒன்றரை ரூபாய் வீதம் தருவார்கள். அதிகப் பணம் கிடைக்க வேண்டுமென்பதற்காய் வீதியிலேயே ஓரமாகப் பதுங்கியிருந்து ஹெலிகா·ப்டர் போனதும் மற்றவர்கள் பதுங்கு குழிகளிலிருந்து வெளியேறி வருவதற்குள் நாங்கள் ஓடிப்போய் அதிகத் தோட்டாக்களை திரட்டியெடுத்துக்கொண்டுபோய் கொடுப்போம். மற்றபடி, இரவு பகலில் நடைபெறும் ஊர்த்திருவிழாக்கள் என்றெல்லாம் நாங்கள் எதையும் பார்த்தது கிடையாது.

· நாடு என்று எங்கள் முன்னோர்கள் எதைக் குறிப்பிட்டுப் பேசுகிறார்களோ அந்தக் கட்டமைப்பில் நாங்கள் எப்போதும் நாடற்றவர்களாகவே இருந்தோம்.

திரு. மகேந்திரனுடய கருத்துரையின் தொகுப்பு:

(பேசும்போது ‘சுகனின் வயதென்ன? அவருக்கு ஈழத் தமிழர்களின் பிரச்னை முழுமையாகத் தெரியுமா என்பதாக உரத்த குரலில் மொழிந்திருக்க வேண்டிய தேவையில்லை. அது எழுத்தாளர்கள் சமமானவர்களாய் அமர்ந்து ஒட்டியும் வெட்டியும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் வெளி).

ஒரு விஷயத்தை அதன் சூழலைக் கொண்டு தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். வெறும் கற்பனையும், தன்வயக் கருத்துகளுமாய் புரிந்துகொள்வது சரியல்ல. அவை காலத்தால் புறந்தள்ளப்பட்டு விடும்.

சுகன் இலங்கை வரலாறைப் புரிந்துகொள்ள வேண்டும். சிங்கள பௌத்தம் அன்பும் கருணையும் அல்ல. இலங்கையின் பௌத்தம் ஆயுதத்தையும், சாதியையும் கையில் வைத்திருக்கும் பௌத்தம்.

இலங்கையின் முக்கியத் தலைவர்களில் அனைவரும் உயர் சாதியினர். பௌத்த குருமார்களிடையே இவ்வகை இரு பிரிவுகள் இருக்கின்றன.
இசுலாமியர்களுக்கு சில தவறுகள் இழைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அதற்காக தமிழ்ப்பேரினவாதம் என்று பார்க்கக் கூடாது. இலங்கையில் சிங்களவர்கள்77 லட்சமாக இருந்தது ஒரு கோடிக்கும் மேலாக உயர்ந்திருக்கும்போது ஏற்கனவே சிறுபான்மை யாக உள்ள தமிழர்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களில் மிகவும் அருகி யிருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை தலைசிறந்த கவிதைகள் ஈழத்தில் தான் பிறந்திருக்கின்றன.

புலம்பெயர் அனுபவங்கள் ஈழத்தமிழ்க்கவிஞர்களின் கவிதைகளில் அதிகம் பதிவு செய்யப்படவில்லை என்கிறார் சுகுணா திவாகர். ஆனால், ஈழ மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் அனுபவங்கள் வலிகூடியது. நாடுநாடாக விரட்டியடிக்கப்படுகிறார்கள் அவர்கள். இரண்டாம் தலைமுறையினருக்கு முதல் தலைமுறையினரின் வலி தெரியாது என்றாலும்தங்கள் மூதாதையர் வழியாக அவர்களையும் அது வந்தடைகிறது. இசுலாமியர்கள் சாகடிக்கப்பட்டார்கள் என்பதற்காய் தமிழர்கள் சாகடிக்கப்படுவது நியாயமாகி விடுமா? இரண்டு மூன்று மாதங்களாக எல்லோரும் ஓங்கிக் குரலெடுத்துக் கத்தியும் இந்தப் படுகொலைகள் நிறுத்தப்படவில்லையே, ஏன்?

(கூட்டத்திலிருந்து ஒருவர் சீனாவின் பங்கு குறித்து ஏதோ கூறுகிறார்)
சீனா செய்தது சரியென்று நான் கூறவில்லை அதே சமயம், சீனாவின் நிர்வாகம் என் கையிலில்லை. 1998 இல், விடுதலைப் புலிகளின் இயக்கம் வலிமையோடிருந்தபோதே நான் எழுதிய ‘தீக்குள் விரலை வைத்தால் என்ற நூலில் அவர்கள் இசுலாமியர்களை நடத்திய விதம் தவறு என்று எழுதியிருக்கிறேன். அதற்காக, பழிக்குப் பழி என்பதாய் நம்முடைய அணுகுமுறை இருக்கலாகாது.

இன்று நடப்பது ஜியோ-பாலிடிக்ஸ். இந்தியாவுக்கு இலங்கை மீது ஒரு ‘வெஸ்டட் இண்ட்ரஸ்ட்’ இருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள இசுலாமிய எழுத்தாக்கங்களை விட இலங்கை முஸ்லீம் எழுத்தாக்கங்கள் செழிப்பாக உள்ளன.

போலிகள் இருக்கத்தான் செய்வார்கள். நாம் அவர்களை இனங்காண வேண்டும்.

இலங்கைத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் குறித்தும் கவிஞர்கள் எழுத வேண்டும்.இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய படுகொலை ஈழத்தில் நடந்தேறியிருக்கிறது. 2,00,000 தமிழர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அகதி முகாம்களில் உழன்று கொண்டிருக்கிறார்கள். இனிமேல் நடக்கப்போகும் ஈழப்போராட்டம் வேறுபட்ட அலவில், மேம்பட்ட அளவில் இருக்கும் என்பது திண்ணம்.

உலகத்திலேயே இதைப் போன்றதொரு விடுதலைப் போராட்டம் கிடையாது.

இந்தியா இந்தப் போரில் குற்றவாளி தான்.

திரு சுகன் :
23 ஆண்டுகளாக அகதியாக அலைந்துகொண்டிருக்கிறேன். உடுத்தியிருக்கும் இந்த உடுப்பைத் தவிர வேறெதுவும் இல்லை.
பாண்டிச்சேரி, கடலூர் அகதிகள் முகாம்களுக்குப் போயிருந்தேன். ஒரு முகாமில் பதினான்கு நாட்களுக்கு முன்பு இறந்துபோயிருந்த அகதியைப் புதைக்க மறுத்தார்கள்.

விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள். ஆனால், நாம் இத்தனை வருடங்கள் பல நாடுகளில் அழையா விருந்தாளியாய் இருக்க நேர்ந்ததற்கு யார் காரணம்?

இத்தனை வருடங்கள் இந்திய அரசு நம்மைப் பராமரித்து வருவதற்கு நன்றி கூறும் அதே நேரம் அகதி முகாம்களிலுள்ள குழந்தைகளின் கல்வி குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியதும், முகாம்களின் நிலைமை, தரம், சுகாதாரம் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியதும் அவசியம்.

எனக்கு 47 வயதாகிறது. 1981 இல் ஆயுதம் தூக்கினேன். பின், இயக்கத்திலிருந்து வெளியேறினேன்.

இன்று 10,000 புலிகள் இலங்கை முகாம்களில் இருக்கிறார்கள். அவர்களில் 1000 பேரை முடித்து விடுவார்கள்.

1945 இல் சிறுபான்மைத் தமிழரமைப்பு முன்வைத்த கோரிக்கை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனி பிரதிநிதித்துவம். அது இன்று வரை சாத்தியமாகவில்லை. இந்த 60 ஆண்டு காலத்தில் தலித் மக்களுக்கு தனிப் பிரதிநித்துவம் கொடுக்க உயர் சாதியினர் தயாரில்லை. மூன்றாம் காங்கிரஸில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், இசுலாமியர்களுக்கும் விசேட பிரதிநிதித்துவம் கொடுக்கத் தீர்மானித்ததைத் தடுத்தவர்கள் யார்?

40,000 மக்கள் கொல்லப்பட்டதாக மனம் வருந்திக் கூறினார். எந்த மக்கள் இயக்கத்திற்கு எல்லாம் கொடுத்தார்களோ அந்த அப்பாவி மக்கள் இறுதிக் கட்டத்தில் பாதிகாப்புக் கேடயங்களாகப் பயன்படுத்தப்படவில்லையா? நேரப்போகும் பேரழிவைத் தடுத்து நிறுத்த இயக்கத்தின் தரப்பிலிருந்து என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன? வரப் போவதை அவர்கள் அறிந்திருக்கவில்லையா முடியாதா?
லண்டனிலுள்ள தமிழர்கள் போர் நிறுத்தத்திற்கெதிராக குரல் கொடுத்தார்கள்.
சமாதான முயற்சியை மூன்று முறை குழப்பியதற்கு அரசு மட்டுமா காரணம்?
மாற்றுக் கருத்தை அனுமதிப்பதன் மூலமே நமக்கு நிரந்தரத் தீர்வு சாத்தியம்.

கவிஞர் வசுமித்ரன் எழுத்தாளர் ஷோ¡பாசக்தியின் வரிகள் சிலவற்றை மேற்கோள் காட்டிப் படித்த பிறகு விதலைப் புலிகள் வெற்றியடைந்திருந்தால் நமக்கு மகிழ்ச்சியாயிருக்குமா? நமது வீரர்கள் இறந்தால் வீர மரணம். இதுவே எதிர்தரப்பு படைவீரர்கள் இறந்தால் ‘பலியானார்கள்’. மனித மனங்களை நினைத்தால் பயமாயிருக்கிறது. One Nation-One People எனும்போது மூன்று லட்சம் பேரை ஏன் கொன்றீர்கள்? என்று கேள்வி கேட்ட என் தோழனை இலங்கை ராணுவம் கொன்றது என்று குறிப்பிட்டார்.
கிளாரன்ஸ் என்பவர் சிங்கள மக்களை வெல்வதினூடாய் ஈழத்தைப் பெறுவதல்ல எங்கள் விருப்பம். எங்கள் பகுதியில் நாங்கள் சுதந்திரமாக வாழ வேண்டும் அதுவே நாங்கள் வேண்டுவது என்றார்.

பார்வையாளராக வந்திருந்த இன்னொருவர் ( திரு. மாறன் அல்லது திரு.பாலன் – பெயரை சரியாகப் பதிவு செய்யவியலாததற்கு மன்னிக்கவும்) நிகழ்வு குறித்த தனது கருத்துகளைப் பதிவு செய்யும்போது நடந்த இனப்படுகொலை மிகப் பெரிய பேரவலம். அதை மையப்படுத்தி விவாதம் இருந்திருக்க வேண்டும். இங்கிருக்கும் தமிழனுக்குப் போராடாமல் ஈழத் தமிழனுக்குப் போராட வேண்டுமா என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இது சரியான பார்வையல்ல. இப்போது நாம் நடப்பு காலத்தையும், எதிர்காலத்தையும் பேசுவது தான் முக்கியமானது. ஜனநாயகத்தில் உள்-அடையாளப் போராட்டத்தையும் நாம் அனுமதிக்கத் தான் வேண்டும் ஒரு பேரவலத்தின் போது ஏற்கனவே நடந்த இன்னொரு அழிவு குறித்து பேசும்போது அந்தப் பேசுபவரின் நோக்கம் சந்தேகத்திற்குரியதாகிறது. இந்திய நாடு ஈழம், நேபாளம் எல்லாவற்றிற்கும் எதிரி தான் என்றார்.

திரு.மகேந்திரனுடைய குரல் அதிகாரத் தொனி கொண்டதாக இருந்தது சரியல்ல என்றும் இனியான போராட்டத்தில் இங்குள்ள மாற்றுக் கருத்துகளையும் கணக்கில் கொண்டு அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் சுகுணா திவாகர் தெரிவித்தார். வசுமித்ரன் பேச்சை சிலர் பாதியில் நிறுத்தியது சரியல்ல என்று திரு. சுகன் கருத்துரைத்தார். பார்வையாளர் பஸாரியா ‘அகதிகளைப் போய் பாருங்கள். அது மட்டுமே நாம் செய்யக் கூடியது என்றவர் ‘நீங்களெல்லாம் ஏ.ஸியில் அமர்ந்துகொண்டு பேசுகிறீர்கள் என்று குற்றஞ்சாட்ட வேண்டிய அவசியம் என்ன?

பொதுவாகவே, ஈழப் பிரச்னை குறித்து மற்றவர்கள் என்ன நினைக்க வேண்டும், எப்படி இயங்க வேண்டும் என்று போதிப்பதே குறியாக சிலர் இயங்கி வருகிறார்கள். அதை மீறி சற்றே சுயமாய் யோசித்து சில மாறுபட்ட கருத்துகளை முன்வைத்தால் உடனே தமிழுணர்வற்றவர்கள், தமிழின விரோதிகள் என்று முத்திரை குத்தி விடுகிறார்கள். வேறு சிலர் தங்களுடைய செயல்பாடுகளை அளவுகோலாகக் கொண்டு ‘நீங்கள் இதை மேற்கொள்ளாததால் உங்களுக்கு இந்தப் பிரச்னையில் அக்கறையில்லை என்கிறார்கள். இந்த மனப்பாங்கும், பார்வையும், மேலும், ஈழப் பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக முன்னெடுத்துச் செல்லாமல் அதை இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான பிரச்னையாக மட்டுமாய் நீண்ட காலம் குறுக்கி விட்டதும், புலிகளின் செயல்பாடுகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை என்பதாய் சொல்லாலும் செயலாலும் அவை சார்ந்த கருத்துகளையும், விமர்சனங்களையும் ஒடுக்க முயற்சிகள் மேற்கொண்டதும், மற்ற போராளிக் குழுக்கள் ஒடுக்கப்பட்டதும், பேச்சுவார்த்தைகளில் முனைப்பு காட்டாத நிலையும் ஈழத்தில் தனி ஈழம் என்பதை இந்தியாவில் தமிழ் தேசம் என்பதோடு இணைத்துப் பேசியதும், இன்னும் பல்வேறு காரணிகள் ஈழத்தமிழ் மக்களின் பிரச்னையும், அவலமும் தீவிரமடையக் காரணமாகின என்று சொல்ல முடியும். தமிழ் எழுத்தாளர்கள் யாரும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்குக் கொடி பிடிக்கவில்லை. அதற்கான அவசியமும் இல்லை. இலங்கைக்கு சர்வதேசப் பத்திரிகையாளர்கள் சென்றுவர அனுமதியளிக்கச் செய்ய இலங்கை அரசை சர்வதேச சமூகம் நிர்பந்திக்க வேண்டும். இந்தப் போரில் தனக்குள்ள பங்கு குறித்தும் இலங்கை அரசுக்கு உதவி நல்கியதற்கான காரணங்கள் குறித்தும் இந்திய அரசு ஒரு வெள்ளை அறிக்கை மக்களுக்குத் தர வேண்டும். அதற்காவது அதிகாரபீடத்திலிருக்கும் தமிழர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும். இலங்கை பாதுகாப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் காலதாமதமின்றி அவர்களுடைய வாழ்விடங்களில் சுதந்திர மனிதர்களாகத் திரும்பிச் செல்ல ஆவன செய்யப்பட வேண்டும்.

ஈழப் பிரச்னை குறித்து பலதரப்பட்ட கருத்துகளைப் பெற இந்தக் கூட்டம் வழிவகுத்தது ஆக்கபூர்வமான விஷயம். தமிழ்க்க் கவிஞர்கள் இயக்கத்தின் இத்தகைய முயற்சிகள் பாராட்டிற்குரியவை. கூட்டம் நடந்தேறிய அரங்கிற்கு முன்னதாகவே சென்றுவிட்டதில் இருள்-யாழி என்ற தலைப்பிலான கவிஞர் திருமாவளவனின் கவிதைத் தொகுப்பை முழுவதுமாய் வாசிக்க முடிந்தது. கவித்துவம் குறையாமல் சமகால அரசியல் சமூக நடப்புகளைப் பேசும் கவிதைகள். குருதியில் நனைந்த கவிதை, இங்கனம் நான், அவர்கள் ஒரு கவிஞனைக் கொன்றனர், அதிகாலைச் செய்தி, கோடை, வானம் பார்த்த பூமி, குருதியில் நனைந்த கவிதை, காயம் பட்ட நிலம் என நிறையக் கவிதைகளைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். மாதிரிக்கு ஒரு குறுங்கவிதை:

உயிர்த்தெழுதல்

துர்மரணச் செய்தியில்லாத காலையொன்றில்
விழித்தெழுந்து நெடுநாளாயிற்று.

சமாதானத்துக்கானதே
யுத்தங்கள்;
வாழ்தலின் நிகழ்கதவுகளே சாவுகள்-
சொல்லிக் கொள்கிறார்கள்
வலியோர்.

Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்

தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் கவிதை – ஒன்றுகூடல் – உரையாடல் – 1

This entry is part [part not set] of 34 in the series 20090724_Issue

லதா ராமகிருஷ்ணன்


(நிகழ்வு குறித்த சில தகவல்கள் – கண்ணோட்டங்கள்-கருத்துப்பதிவுகள்)

தமிழ்க் கவிஞர்கள் இயக்கம் கடந்த இரண்டாண்டுகளாக சீரிய முறையில் தமிழ் இலக்கிய வெளி குறித்தும், இலக்கியவாதிகளின் சமூக, அரசியல் பார்வை, பங்கேற்பு குறித்தும் அக்கறையோடு இயங்கி வருகிறது. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்து கண்டனக் கவிதை இயக்கம், தில்லியில் கண்டனப் போராட்டம் முதலிய செயல்பாடுகளை சீரிய முறையில் மேற்கொண்ட இந்த அமைப்பு ஜூன் 13-14 அன்று கவிதை-ஒன்றுகூடல்-உரையாடல் என்ற இருநாள் கலந்துரையாடல் அரங்கை வால்பாறையில் ஏற்பாடு செய்திருந்தது. சமீபத்தில் வெளியான கவிதைத் தொகுப்புகள் சில குறித்த திறனாய்வுக் கட்டுரைகள் வாசிக்கப்பட்டு அவை தொடர்பான கலந்துரையாடல்களும், விவாதங்களும் நடந்தேறின. அதன் தொடர்ச்சியாக ஈழத்தமிழ்க்கவிஞர்கள் சிலரின் கவிதைத் தொகுப்புகள் குறித்த அரங்கம் நிகழ்வு -2 : பன்முக வாசிப்பில் ஈழக் கவிதைகள் என்ற தலைப்பில் சென்னையிலுள்ள AICUF அரங்கில் கடந்த 16ஆம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற்றது. அ.மங்கை தொகுத்த ஈழப்பெண்கவிஞர்களின் கவிதைகள் குறித்துப் பேசும் ‘பெயல் மணக்கும் பொழுது’ என்ற நூல் குறித்து கவிஞர் வ.ஐ.சு.ஜெயபாலன் பேசினார். கவிஞர் தீபச்செல்வனின் ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை என்ற கவிதைத்தொகுப்பு குறித்து எழுத்தாளரும் கவிஞருமான அரங்கமல்லிகா கருத்துரைத்தார். “புலி பாய்ந்த போது இரவுகள் கோடையில் அலைந்தன’ என்ற தலைப்பிட்ட மஜீத்தின் கவிதைத் தொகுப்பு குறித்து கட்டுரை வாசித்தார். சந்திரா. “எனக்குக் கவிதை முகம் என்ற அனாரின் கவிதைத் தொகுப்பு குறித்து கவிஞர் அனார் எழுதிய ‘எனக்கு கவிதை முகம்’ என்ற தலைப்பிட்ட தொகுப்பு குறித்து கவிஞர் செல்மா பிரியதர்ஷன் பேசினார். கருத்துரைத்தார். தனிமையின் நிழல் என்ற தலைப்பிட்ட பா.அகிலனின் கவிதைத் தொகுப்பு குறித்து கவிஞரும், எழுத்தாளருமான சுகுணா திவாகர் தனது கண்ணோட்டங்களை முன்வைத்தார். ‘சூரியன் தனித்தலையும் பகல்’ என்ற தலைப்பிட்ட தமிழ்நதியின் கவிதைத் தொகுப்பு குறித்த திறனாய்வுக் கட்டுரையை ராஜேசுவரி வாசித்தார். நாடற்றவனின் குறிப்புகள் என்ற தலைப்பிட்ட கவிஞர் இளங்கோவின் கவிதைத் தொகுப்பு குறித்து நாடகக் கலைஞரும், படைப்பாளியுமான சோமீதரன் பேசினார்.

கவிஞர் ஜெயபாலன் : அ.மங்கை எழுதிய பெயல் மணக்கும் பொழுது என்ற தலைப்பிலான ஈழத்தமிழ்ப்பெண்கவிஞர்களின் கவிதைகள் குறித்த நூலைப் பற்றிய தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். அ.மங்கை ஒரு சிறந்த பெண்ணிய எழுத்தாளர் என்று பாராட்டியவர் அவருடைய மணிமேகலை நாடகம் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று என்றார். 1976-86 காலகட்டங்களில் இலங்கையில் பல பெண்கள் திறம்படக் கவிதைகள் எழுதத் தொடங்கினார்கள் என்றவர் அவர்களில் செல்வி, சிவரமணி ஆகியோரின் கவிதைகள் தன்னை மிகவும் பாதித்தவை என்றார். சமூக, அரசியல் மற்றும் இயக்க முரண்பாடுகளால் தூண்டப்பட்ட தற்கொலை சிவரமணியுடையது என்று வேதனையோடு குறிப்பிட்டவர் அவருடைய கவிதையொன்றை வாசித்துக் காண்பித்தார். இந்தக் கவிதைகள் எம்முடைய துயரங்களும், அவமானங்களும் எங்களைப் புதையுண்டு போகச் செய்வதில்லை, முன்னைக் காட்டிலும் வலுவடையச் செய்கின்றன என்று குறிப்பிட்டவர் இப்போதைய சூழலில் அந்தக் கவிஞர்களின் கவிதைகளுக்குள் உட்புக இயலவில்லை என்றும் அவை தன்னை மீண்டும் மீண்டும் வெளியே வலியும், வேதனையுமாக வெளியே தூக்கியெறிவதாகவும் அதுவே அந்தத் தொகுப்பின் வெற்றியாகக் கொள்ள முடியும் என்றும் கூறினார்.

பொதுவாக தமிழகம் ஈழம் ஆகிய இரண்டு நிலங்களில் கவிதை எழுதும் கவிஞர்களை ஒப்புநோக்குபவர்கள் ஈழக் கவிதைகள் மேலானவை என்பார்கள் என்றும் அதற்கு முக்கியக் காரணம் ஈழப் படைப்பாளிகளுக்கு ஒரு பொதுவான நோக்கமும் அக்கறையும் இருந்தது , அவர்கள் ஒரு குடையின் கீழ் பல முகங்களாக இருந்தார்கள், ஆனால், இங்கோ பல குடைகளின் கீழ் பல முகங்கள் என்றவர் ஈழத்தைச் சேர்ந்த தமிழ்ப் படைப்பாளிகளுக்கு ஒரு பொதுவான நோக்கமும், அக்கறையும் இருந்தாலும் அதனால் அவர்களுடைய பன்முகத்தன்மை தொலைந்துவிடாமல் காப்பாற்றி வருவதாகவும் குறிப்பிட்டார். ஒப்புநோக்க, தமிழகக் கவிஞர்கள் ஒருவிதமான ‘standardized’ கொண்ட கருப்பொருள்களையே கையாள்கிறார்கள் என்று அவர் கூறியது விவாதத்திற்குரியது.

கவிஞர் தீபச்செல்வனின் ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ என்ற கவிதைத்தொகுப்பு குறித்துப் பேசிய எழுத்தாளரும் கவிஞருமான அரங்கமல்லிகா “இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளைப் படித்ததும் இயல்பாக இருக்க முடியாமல் போயிற்று. வகுப்பில் மாணவிகளிடம் படித்துக் காண்பித்தேன். அவர்களாலும் அதன் பாரத்தைத் தாங்க இயலவில்லை. ‘நமக்குச் சொரணையிருக்கா?” என்று மட்டும் கேட்டேன். “இருக்கு” என்றவர்கள் ” இதுவரை இந்த விஷயத்தை சரிவர உள்வாங்கவில்லை” என்று வருத்தம் தெரிவித்தார்கள். தொலைக் காட்சிகளில் அதிகமாக மானாட-மயிலாட, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை மட்டுமே அதிகம் பார்ப்பது வழக்கம் என்றார்கள். நாம் இனியும் இப்படித்தான் சொரணை கெட்டு இருக்கப்போகிறோமா?” என்ற கேள்வியை முன்வைத்த அரங்க மல்லிகா ஈழ விடுதலையின் பல குரல்களும் தீபச்செல்வனின் தொகுப்பில் ஒலிப்பதாகக் கூறினார். அம்பேத்கார் தமிழனுக்கு வலிமையைத் தரக்கூடியது சிங்கள பௌத்தம் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதை இன்றைய சூழலில் மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியம் எனக் கருத்துரைத்தார்.

“புலி பாய்ந்த போது இரவுகள் கோடையில் அலைந்தன’ என்ற தலைப்பிட்ட மஜீத்தின் கவிதைத் தொகுப்பு குறித்து கட்டுரை வாசித்த சந்திரா அந்நியராய் உணரும் வலி மஜீத்தின் கவிதை வரிகளில் பரவித் தெரிகிறது என்று குறிப்பிட்டார். தமிழின பேரினவாத அச்சுறுத்தலால் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் சிறுகதை எழுத்தாளர்-திரைப்பட இயக்குனர் என்பது மஜீத்திற்கான அறிமுகக் குறிப்பாகத் தரப்பட்டது. எனது சகோதரனை/ புலி கொன்றது/ எனது நண்பனை/சிங்கம் கொன்றது / எங்கள் பெண்களை இரண்டும் கொன்றன’ – ‘இன விடுதலைக்கான/ போராட்டத்தில்/ எல்லாத் துரோகங்களும்/ மறக்கடிக்கப்படும்’ – ‘எனது வெளியை பங்கு போட்டு/ சிங்கங்களும் புலிகளும்/ பங்கு போட்டுக் கொண்டன முதலிய வரிகளை எடுத்துரைத்த திறனாய்வாளர் சந்திரா ‘கருத்தியல் ரீதியாகப் பார்க்கும்போது இது மிகைப்படுத்தப்பட்ட பதிவாகத் தோன்றுகிறது. மஜீத் இசுலாமியராகவே இலங்கைப் பிரச்னையைப் பார்த்திருக்கிறார், தமிழ்க் கவிஞராக இன்னொரு கோடைச் சித்திரத்தை அவர் வரைவாரா’ என்ற கேள்வியை முன்வைத்தார்.

கவிஞர் அனார் எழுதிய ‘எனக்கு கவிதை முகம்’ என்ற தலைப்பிட்ட தொகுப்பு குறித்து கவிஞரும், தமிழ்க்கவிஞர்கள் இயக்கம் சீரிய முறையில் இயங்கி வருவதில் முக்கியப் பங்கு வகிப்பவருமான செல்மா பிரியதர்ஷன் பேசினார். ‘பெண் எழுத்து ஆண் எழுத்தை விட முற்றிலும் மாறுபட்டதே. அதேபோல் தான், வாசகரின் வாசிப்பிலும் இந்த பால் தன்மை கண்டிப்பாக உள்ளது என்று குறிப்பிட்ட அவர் ‘ அனாரின் இந்த கவிதைத் தொகுப்பை வாசித்தது ஆண் என்ற உணர்வோடு தான் என்ற புரிதலை வெளியிட்டார். போர்ச்சூழலில் இருக்கும் பெண்ணால் எப்படி காதல் கவிதைகளை எழுத முடிகிறது என்று தனக்கு ஏற்படும் ஆச்சரியத்தைத் தெரிவித்த அவர் கேள்விகளற்று சரணடையும் பெண் குரலையே அவருடைய கவிதைகளில் அதிகம் கேட்க முடிவதாகவும் குறிப்பிட்டார். தன் உடல் என்பதை தனக்குள்ளிருக்கும் அங்கமாக, ஒரு மனோநிலையாக உருவகப்படுத்துகிறார் அனார் என்ற செல்மா பிரியதர்ஷன் உலகின் பொதுவெளியை ஆண்களே அதிகம் அனுபவிக்கிறார்கள். ஆனால், பெண்களைப் போல் அவர்கள் தங்களை இயற்கையின் அம்சமாக உனர்வதில்லை; உருவகித்துக் கொள்வதில்லை. எனில், இந்தத் தன்மை பெண்களுடைய எழுத்தாக்கங்களில் அதிகம் காண முடிகிறது என்றவர் அனாரின் கவிதைகளில் தன்னை ஈர்த்த அம்சங்களையும் எடுத்துரைத்தார்.

ஒவ்வொரு பேச்சாளரையும்/திறனாய்வாளரையும் அவர்கள் பேசப்போகும் தொகுப்பை எழுதிய கவிஞர்களையும் பற்றி சுருக்கமாக எனில் கச்சிதமாக லீனா மணிமேகலை அறிமுகப்படுத்தினார். இந்தக் கூட்டம் பற்றி சக-படைப்பாளி என்ற முறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டசபை உறுப்பினர் ரவிக்குமார் அவர்களுக்கு விவரம் தெரிவிக்கப்பட்டதற்கு ‘பேஷ்!பேஷ்! செத்தும் கொடுத்தார்கள் சீதக்காதிகள்” என்ற குறுஞ்செய்தி அவரிடமிருந்து கிடைத்த தகவலை சபையில் தெரியப்படுத்தி அதற்கு கவிஞர்கள் சங்கத்தின் சார்பில் தனது கண்டனத்தையும் அவையில் அழுத்தமாகப் பதிவு செய்தார் லீனா.

நான்கு தொகுப்புகள் குறித்த திறனாய்வுக் கட்டுரைகள்/விரிவுரைகளுக்குப் பிறகு அவை தொடர்பான கருத்துரைக்கும் அமர்வு நடைபெற்றது. கருத்துரையாளர்களில் ஒருவராக நானும் இடம்பெற்றிருந்தேன். கூட்டம் நடைபெறும் அன்று காலை மின்னஞ்சலில் தமிழாராய்ச்சி குழுமம் சார்பாக அனுப்பப்பட்டிருந்த தாமரையின் ‘கண்ணகி மண்ணின் கருஞ்சாபம்’ என்ற கவிதை அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மறுத்த இந்தியா மண்ணோடு மண்ணாய் போகட்டும், அதன் ஆறுக ளெல்லாம் வற்றிப் போகட்டும், காடு கழனிகளெல்லாம் கருகிப் போகட்டும் என்று, இந்தியாவில் உள்ள ஏழை எளிய மக்களையெல்லாம் எண்ணப்புகாமல் எழுதப்பட்டிருந்த அந்தக் கவிதையின் ஆங்காரமும், மிகையுணர்ச்சியும் கைத்தட்டலை வேண்டுமானால் தருவிக்குமே தவிர பிரச்னைகளை எந்தவிதத்திலும் தீர்க்க உதவாது என்பது என் உறுதியான கருத்து. {மின்னஞ்சலில் வந்த கவிதையை எழுதியது இந்தியாவிலுள்ள கவிஞர் தாமரையா அல்லது இலங்கைத் தமிழ்க் கவிஞர் யாரேனும் அந்தப் பெயரில் உள்ளார்களா என்று எனக்கு அப்பொழுது உண்மையிலேயே தெரியவில்லை என்பதால் அந்த என் சந்தேகத்தை அவையில் எடுத்துரைத்தேன். (எனக்குப் பின்னர் பேசிய எழுத்தாளர் சுகுணா திவாகர் யாரிடமாவது கேட்டு நான் கவிஞர் இந்தியாவிலுள்ள கவிஞர் தாமரையா அல்லது ஈழத்தமிழ்க்கவிஞர் தாமரையா என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்டிருக்க முடியும், அப்படிச் செய்திருப்பது தான் முறை என்று தன்னுடைய உரையில் குறிப்பிட்டார்.)

அந்தக் கவிதையின் சில வரிகளை அவையில் வாசித்துக் காட்டி ஒரு கவிஞரின் மனிதநேயம் என்பது இத்தனை வன்மமானதாக இருக்கலாகாது என்ற எனது கருத்தை முன்வைத்தேன். அதேபோல், ‘இலங்கைப் பிரச்னை குறித்து இங்கே மக்கள் சொரணையில்லாமல் இருக்கிறார்கள் என்று சொல்வதும் தவறு. இது குறித்த உண்மையான அக்கறையோடு விவாதிப்பவர்களும், எழுதுபவர்களும் செயல் படுபவர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஆங்கில தொலைக்காட்சி அலைவரிசைகள் இந்தப் போர் குறித்து மிகவும் மேம்போக்கான, ஒருதலைப்பட்சமான கருத்துகளையே முன்வைத்தன என்பதும் உண்மை. மேலும், இந்த விஷயத்தில் அதீத சொரணை இருப்பதாகக் காட்டிக் கொள்பவர்களால் தான் பிரச்னை தீவிரமடைகிறது” என்றேன். இலங்கைப் பிரச்னையை, போர்ச்சூழலைப் பற்றி ‘பாதுகாப்பான தொலைவிலுள்ளவர்கள் எழுதுவதற்கும், அந்த சூழலின் மத்தியில் இருப்பவர்கள் எழுதுவதற்கும் நிறைய வேறுபாடுகள் காணக்கிடைக்கின்றன. பாதுகாப்பான தொலைவில் இருந்துகொண்டு ‘மொக்கைச் சிங்களவன்’ என்றெல்லாம் எழுதுவதும், பேசுவதும் அங்கே முகாம்களில் அல்லலுறும் தமிழ்மக்களைப் இன்னும் பாதிப்புக்காளாக்க வழியுண்டு என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று கூறினேன். போர்ச்சூழலில் இல்லாமல், அந்த அவலத்தை அனுபவிக்காமல் இருப்பவர்கள் தான் ‘போரை ‘ரொமான்டொஸைஸ்’ செய்து, அதை மறத்தமிழனின் மாண்பாக, மனித நாகரீகத்தின் வளர்ச்சியாகக் காட்டி வருகிறார்கள் என்றேன். இந்திய ராணுவத்தினர் எல்லோரையும் வன்புணர்ச்சியாளர்களாய் விவரித்தல், தமிழர்களை சுரணை கெட்டவர்களாய் ஒட்டுமொத்தமாய்ச் சாடுதல், சாபமிடுதல் போன்ற Sweeping generalizations தவிர்க்கப்பட வேண்டியவை என்ற கருத்தை முன்வைத்தேன்.

{ஒரு சொட்டு தண்ணீருக்காக/விக்கி மடிந்த/ எங்கள் குழந்தைகளின் ஆத்மா/சாந்தியடைய/இனி ஒரு நூற்றாண்டுக்கு/உன் ஆறுகள் எல்லாம் வற்றிப்/போகட்டும் !/ மழைமேகங்கள் மாற்றுப்பாதை கண்டு/மளமளவென்று கலையட்டும்!

ஒரு பிடிச் சோற்றுக்கு எங்களை/ஓட வைத்தாய்/ இனி உன் காடு கழனிகளெல்லாம்/ கருகிப் போகட்டும்’

இப்படி சாபமாய் கொடுத்துக் கொண்டே போகிறார் கவிஞர் தாமரை. இந்தக் கவிதை குறித்த எனது பார்வையை தமிழ் ஆராய்ச்சிக் குழுமத்தினருக்கும் அனுப்பி வைத்தேன். எனக்கு ஆதரவாய் ஓரிருவர் எழுதியிருந்தார்கள். என்றபோதும், நிறைய கடிதங்கள் இந்தியா மண்ணோடு மண்ணாகப் போக வேண்டும், சீனாவும், பாகிஸ்தானும் இந்தியாவை வீழ்த்திச் சாய்க்கும் நாள் வெகுதூரத்திலில்லை. அன்று நாங்கள் ஆனந்தமாய் கைகொட்டிச் சிரிப்போம் என்ற ரீதியில் அமைந்திருந்தன. வேறு சில கடிதங்கள் இந்தியாவில் தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள் என்றும், இந்திய தேசியம் என்பதன் அடிமைகளாக இருப்பதைப் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் இந்தியாவிலுள்ள தமிழர்கள் என்று பேசியிருந்தன. (அப்படித்தான் இங்குள்ள தமிழர்கள் உண்மையாகவே கருதுகிறார்களா? அப்படித்தான் அவர்கள் உண்மையிலேயே நடத்தப்படுகிறார்களா? இதன் மறுபக்கமாக இன, மத, நிற, சாதி முதலான பல்வேறு பேதங்களை மீறிய அளவில் ‘all are equal; some are more equal’ என்ற நிலை தானே உலகெங்கும் நடப்புண்மையாக இருந்து வருகிறது?) இன்னும் சில கடிதங்கள் “அவர் தமிழச்சி. அப்படித்தான் எழுதுவார். ஆனால் நீங்கள்???” என்று என்னை இடித்துரைத்திருந்தன. இப்படியெல்லாம் எழுதுவதன் மூலம் தமிழையும், தமிழுணர்வையும் யாரும் தங்களுடையதே தங்களுடையதாக்கிக் கொண்டுவிட முடியாது !}.

இங்கே நமக்கு சொரணையே இல்லை என்று கூறுவதற்கு என்ன அர்த்தம்? இங்கும் ரத்த ஆறு ஓட வேண்டுமா? தொப்புள்கொடி உறவு என்ற சொற்பிரயோகத்தை உபயோகிக்கும் நாம் போர் என்பது உடனடியாக மக்களைக் கொன்று குவிக்கிறது என்றால் வறுமை மக்களை நாளுக்குநாள் நலிவடையச் செய்து கொன்றழிக்கிறது. தேர்தல் காலத்தில் இலங்கைப் பிரச்னை குறித்து மட்டுமே முன்னிலைப்படுத்திப் பேசியது, அந்த சமயத்தில் அம்பத்தூர் முதலான பல பகுதிகளில் ஏரி ஆக்ரமிப்பு அகற்றம் என்ற பெயரில் ஏழை எளிய மக்களின் வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால், அது குறித்தெல்லாம் தேர்தல் பிரச்சாரங்களில் (தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டவற்றைக் கணக்கில் கொண்டு பார்க்க) மிகவும் குறைவாகவே பேசப்பட்டது. இவ்வாறு, மிக அதிகமாக ஈழப் போர்ச்சூழல் குறித்துத் தரப்பட்ட கவனம், இங்கு பற்றாக்குறை வாழ்வு வாழ்ந்து வரும் மக்களிடம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வழியுண்டு என்றேன். உரிமைப் போர், ஆதிக்கப் போர் என்ற வேறுபாடுகள் நாம் அறிந்தவையே. ஆனால், எந்த வகைப் போரானாலும் எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக முடித்துவைக்கப் படுவதற்கான முயற்சிகள் உண்மையான அக்கறையோடு மேற்கொள்ளப் பட வேண்டும். அப்படியில்லாமல் போர் தான் மனிதனின் சொரணையுணர்வை நிரூபிப்பது என்பதான பார்வை எந்தவிதத்தில் சரி ?
மனிதன் அதிகபட்சமாக முப்பது நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தால் அதிகம். அந்த குறுகிய வாழ்நாள் முழுக்க அவனைப் போர்ச் சூழலிலேயே இருக்கும்படி நிர்பந்தித்தல் எத்தனை அவலமானது? இங்கே இருபது வருடங்களுக்கும் மேலாக அகதிகளாகவே முகாம்களில் வாழ்ந்து வருபவர்களின் நிலை எத்தனை துயரமானது. அவர்கள் இங்கேயும் நினைத்த இடத்திற்குப் போய் வர முடிவதில்லை. அவர்களுக்கு வேலை கிடைப்பதும் அரிதாகவே உள்ளது

(நான் கருத்துரைத்துக் கொண்டிருக்கும்போது கவிஞர் ஜெயபாலன் ‘தமிழ் மீனவர்கள் தொடர்ந்து சாகடிக்கப்படுகிறார்களே, அது குறித்தும் பேசுங்கள்” என்றவிதமாய் இரண்டு மூன்று தடவைகள் என் பேச்சில் குறுக்கிட்டார். நான் கூறிய கருத்துக்களில் அவருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், நான் என்ன பேச வேண்டும் என்று வகுத்துரைக்க வேண்டிய தேவையென்ன? தமிழக மீனவர்கள் குறித்து அவர் எதுவும் அங்கே கருத்துரைக்கவில்லை. இன்று தமிழக மீனவர் நிலையைப் பற்றிப் பேசுவதென்றால் ஐந்து வருடங்களுக்கு முன்பு தமிழக மீனவர்கள் இவ்வாறு தாக்குதல்களுக்கு ஆளாகவில்லையென்ற நிலையையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையிருக் கிறதல்லவா? சில மாற்றுக் கருத்துகளை முன்வைப்பதால் உடனே இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின் அராஜகங்களை ஆதரிப்பதாகவோ, தமிழுணர்வு இல்லையென்றோ, ஈழத்தமிழர்களின் துயரம் குறித்த அக்கறை இல்லையென்றோ அர்த்தமல்ல. அப்படிப் பகுப்பதிலுள்ள அரசியல் அவதானிப்பிற்குரியது).

இறுதியாக, இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்பாக்கங்கள் இந்தியத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை விட தரமானவை என்ற கருத்து திரும்பத் திரும்ப எந்தவித முறையான ஒப்பாய்வும் இல்லாமல், போர்ச்சுழலைப் புகழ்ந்தேத்துவதே குறியாய் முன்வைக்கப்படுவதற்கும் என்னுடைய ஆட்சேபத்தைத் தெரிவித்தேன்.

(நான் பேசி முடித்ததும் லீனா மணிமேகலை ஒருவர் தனது கருத்துகளை முன்வைக்கும்போது மற்றவர்கள் குறுக்கிட வேன்டாம் என்று அவையோரி டம் கேட்டுக் கொண்டார்).

தனிமையின் நிழல் என்ற தலைப்பிட்ட பா.அகிலனின் கவிதைத் தொகுப்பு குறித்து கவிஞரும், எழுத்தாளருமான சுகுணா திவாகர் தனது கண்ணோட்டங்களை முன்வைத்தார். அவற்றில் சில:

கவிஞரின் பிற ஐந்து கவிதைத் தொகுப்புகளோடு ஒப்புநோக்க இது காத்திரம் குறைந்ததாகவே எனக்குப் படுகிறது. வழக்கமான காதல் வர்ணணைகள் , விடலைக் காதல் கவிதைகளே இதில் அதிகம். ஈழக் கவிஞர் என்றால் நமக்கு ஒரு எதிர்பார்பு இருக்கும். அது இந்தத் தொகுப்பில் நிறைவேறவிலை என்றே குறிப்பிடத் தோன்றுகிறது. ஈழக் கவிஞர்கள் என்றால் போர் பற்றி, புலப்பெயர்வு பற்றிக் கவிதைகள் இருக்க வேண்டும் என்று எண்ணும் விதத்தில் நம் மனங்கள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஈழக் கவிஞர் ஏன் காதலைப் பற்றி எழுதக் கூடாது? ஆனால், முதிர்ச்சியான காதல் கவிதைகளை இந்தத் தொகுப்பில் காண முடியவில்லை.

இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளைப் பொறுத்தவரை அவை வெளிப்படையாகப் பேசாத, தன்னைத் தனக்குள்ளாகவே சுருக்கிக் கொள்ளும் கவிதைகளாக அமைந்திருக்கின்றன. வேறு தன்னிலைகள் இடம்பெறுவதில்லை. வன்முறையை எதிர்க்கும் கவிதைகள் சில இத்தொகுப்பில் உள்ளன. நிச்சயமற்ற வாழ்க்கைத்தன்மையை பேசும் கவிதைகளும் சில உள்ளன. ஏற்கனவே குறிப்பிட்டதுபோல், அகிலனின் கவித்துவம் இத்தொகுப்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படலாகாது.

· ஈழக் கவிஞர்களின் விரிவான புலம்பெயர் அனுபவங்கள் அவர்களுடைய கவிதைகளில் அரிதாகவே இடம்பெறுகின்றன. நாட்டைப் பிரிந்த ஏக்கமே அவர்களுடைய கவிதைகளில் அதிகம்

தலித் கவிஞர்கள் என்னும்போது கவிஞர் மதிவண்ணன் போன்றவர்களை ஒதுக்கி விடுவது தான் நம் வாடிக்கையாக உள்ளது.

தாமரை, சீமான் போன்றவர்களின் தொனியும், மொழியும் எனக்கும் உடன்பாடில்லை தான். ஆனால், சாபமிடுவது கவியின் உரிமை. பாரதி சாபமிடவில்லையா? அது ஆதங்கத்தில் பிறந்ததல்லவா?

பௌத்தம் நேசமிக்கது என்றாலும் அதன் யதார்த்தத்தையும் பார்க்க வேண்டும்.

· இந்தியர்களை சாபமிட்டது நியாயம் தான். இந்திய தேசியம் என்பதே ஒரு பார்ப்பனீயக் கட்டமைப்பு தான்.

தமிழ் நாட்டுத் தமிழ்க் கவிஞர்கள், ஈழத் தமிழ்க் கவிஞர்கள் என்று பிரித்துப் பார்ப்பதும், ஒப்புநோக்குவதும் தவிர்க்கமுடியாதது. அதேசமயம், ஈழத்தமிழ்க் கவிஞர்கள் என்ற ஒருபடித்தான அடையாளத்தையும் மறுக்கிறோம்.

ஒரு பக்கம், நம் அத்தனை செயல்களும் இன்று கண்காணிக்கப்படுகின்றன. இன்னொரு பக்கம் ஈழப் படுகொலைகள் வெகு சுலபமாக உலகின் கண்களிலிருந்து மறைக்கப்படுகின்றன. இந்த வினோத சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம்.

*(கட்டுரையாளர்கள், கருத்துரையாளர்களின் முக்கியக் கருத்துகளில் சில பதிவு செய்யப்படாது விடுபட்டிருந்தால் அது என் நினைவுகூரலின் குறைபாடே தவிர உள்நோக்கம் கொண்டதல்ல. முடிந்தவரை குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறேன்)

எழுத்தாளர் சுகன் முன்வைத்த கருத்துகளின் தொகுப்பு பின்வருமாறு:-
பௌத்தம் அன்புமயமானது. கோபமான மனநிலையிலிருந்து நாம் உரையடலைத் தொடங்கினால் பயன் விளையாது. ஆனால், ‘ காட்டிக் கொடுப்பவன் எங்கே- சாகும் வரை அடி’ என்ற திரு.காசி ஆனந்தன் கவிதையிலிருந்து தான் ஆரம்பத்தில் ஈழக் கவிதை கட்டமைக்கப் படுகிறது. அதற்கு அடுத்த தளம் சேரனது கவிதைகள். போரை கவிதையில் வலியுறுத்தினார்கள் கவிஞர்கள். ஆனால், அவர்கள் இப்போது எங்கே நிலைகொண்டிருக்கிறார்கள்.
போர் எல்லாவற்றையும் அழித்துவிடும். இலக்கியம் வாழ்க்கை எதுவுமே மிச்சமிருக்காது.
தமிழர்கள் வேறு, தலித்துகள் வேறு என்று எழுதும் கவிஞர் எப்படி நியாயமாவார்? சாதிகள் இன்னும் அங்கே இருக்கின்றன.
மலைவாழ் தமிழக மக்கள் வெறும் இலக்கமாகப் பார்த்து அனுப்பப்பட்டார்கள். இரண்டாம் தலைமுறையாக முஸ்லீம்கள் அகதிகளாக இலங்கையில் வாழ்ந்து வருகிறார்கள்.

Series Navigation

லதா ராமகிருஷ்ணன்

லதா ராமகிருஷ்ணன்