அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 5- ஆ. இரா. வேங்கடாசலபதி

This entry is part [part not set] of 28 in the series 20090319_Issue

மு இராமனாதன்



ஆ. இரா. வேங்கடாசலபதி ஒரு தமிழறிஞரா? இந்த மண்ணில் பல தமிழறிஞர்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள், பலர் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் எந்தத் தமிழ் மரபிலிருந்து வந்தவர்களோ, அதே மரபின் வழி வந்தவர்தான் வேங்கடாசலபதி . அவர்களெல்லாம் தமிழ் மொழியின் மீதும் தமிழ்ச் சமூகத்தின் மீதும் எந்த அளவிற்கு அக்கறையும் ஈடுபாடும் கொண்டிருந்தார்களோ, அதற்கு நிகரான அக்கறையும் ஈடுபாடும்  கொண்டவர். வேங்கடாசலபதி சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development studies) பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். பல உள்நாட்டு வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் வருகைதரு பேராசிரியராக இருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய-சமூக ஆய்விற்குப் பங்களித்து வருகிறார். என்றாலும் இளைஞர், 40 வயதுதான் ஆகிறது. இளைஞர் அறிஞராக இருக்க முடியாதா? அப்படி இருப்பது நம் சமூகம் கொண்டிருக்கும் முன்முடிவுகளுக்கு எதிரானது ஆயிற்றே!  அதனால்தான் சுந்தர ராமசாமி கூறுகிறார்: “இன்று ஒரு இளைஞர் – தமிழ் அறிஞர் என்று அவரைச் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை, இளைஞனும் அறிஞனாக இருக்கமுடியும் – புதுமைப்பித்தன் கதைகளுக்கு மிகச் சிறப்பான ஒரு பதிப்பை உருவாக்கித் தந்து விட்டார்”[1]. 

புதுமைப்பித்தன் தேடல்:
சுந்தர ராமசாமி இப்படிச் சொன்னது எட்டு ஆண்டுகளுக்கு முன். அப்போதுதான் புதுமைப்பித்தனின் அனைத்துக் கதைகளும் உள்ளடக்கிய  நூலை சலபதி பதிப்பித்திருந்தார்[2]. இது வரை ஐந்து பதிப்புகளைக் கண்டிருக்கும் இந்நூலில், புதுமைப்பித்தனின் 97 கதைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. 1948இல் புதுமைப்பித்தன் காலமானபோது, இதில் சரி பாதிக் கதைகளே நூல் வடிவம் பெற்றிருந்தன. ‘மேதாவிலாசத்துக்கும் அற்பாயுளுக்கும் நமக்கு எட்டாதபடி உள்ள ரகசிய உற’வின் காரணமாகவோ என்னவோ, ‘வறுமை பிடுங்கும் இந்தியாவில் எழுத்தாளர்களுக்குச் சோதனையாகவே இருந்த நாற்பதையொட்டிய வயதுகளில்’ புதுமைப்பித்தன் மறைந்தார்[3]. அவரது மறைவிற்குப் பின் வெளியான நூல்களில் கதைகள் வெளியான காலமும் இதழும் சுட்டப்படவில்லை. கதைகளும் கட்டுரைகளும் தழுவல்களும் மாறி மாறி இடம்பெற்றன. பிழைகளும் இருந்தன. அவை செம்மையாகவும் வெளியிடப்படவில்லை. இவ்வாறு குறைபாடுகளுடன் பதிக்கப்பட்டவை அன்னியில், தொகுக்கப்படாத, அச்சிடப்படாத படைப்புகளும் இருந்தன. இதுகாறும் நூல் வடிவம் பெறாத படைப்புகளை மட்டுமல்ல, ஏற்கனவே வெளியான நூல்களையும், அவை வெளியான இதழ்களையும் சலபதி கண்டடைந்திருக்கிறார். புதுமைப்பித்தனின் உறவினர்கள், நண்பர்கள், அன்பர்கள், பதிப்பாளர்கள், வாசகர்கள் என்று சாத்தியமான எல்லாக் கதவுகளையும் அவர் தேடித் திறந்திருக்கிறார். சென்னை, காரைக்குடி, புதுக்கோட்டை, மருங்கூர், ஆண்டிப்பட்டி, தில்லி, லண்டன், சிகாகோ போன்ற இடங்களில் உள்ள தமிழ் நூல் நிலையங்களில் ஏறி இறங்கியிருக்கிறார். 50 ஆண்டுகளுக்கு முன் வெளியான, நூற்றுக் கணக்கில் மட்டுமே அச்சாகியிருக்கக் கூடிய இலக்கியச் சிற்றிதழ்களையும், நூல்களையும் கண்டடைவது தமிழ்ச் சூழலில் புலிப்பால் பருகுவதற்குச் சமமானது. இந்த இடத்தில் சில சமகாலத் தமிழ் எழுத்தாளர்களின் அனுபவங்கள் என் நினைவிற்கு வருகின்றன.
ஜெயகாந்தன் 1961இல் ‘கல்கி’ பத்திரிகைக்கு எழுதிய ‘கைவிலங்கு’ எனும் குறுநாவல் அவரது ‘அனுமதியின்றியே வெட்டிக் குறைக்கப்பட்டு பாதியளவோ அல்லது பாதிக்கும் கொஞ்சம் கூடுதலாகவோ பத்திரிக்கையில் வெளிவந்தது’. பிற்பாடு ஜெயகாந்தன் எழுதியது அப்படியே நூல் வடிவம் பெற்றபோது, அவர் ‘கல்கி’க்கு நன்றி செலுத்துகிறார். ஏனென்றால், ‘இப்பொழுது நான் எழுதியது முழுக்கவும் புத்தகமாக வெளிவருவது, அவர்கள் பழுதுபடாமல் பாதுகாத்துக் கையெழுத்துப் பிரதியைக் கொடுத்ததனால்தானே!’ என்கிறார் ஜெயகாந்தன்[4]. அதாவது பத்திரிகைக்கு கொடுத்தபோது அவர் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவில்லை. ஒளிநகல்கள் இல்லாத காலம். கதை-கட்டுரைகளைத் திரும்பிப் பெற போதிய தபால்தலைகள் வைத்து அனுப்ப வேண்டியிருந்த காலம். எனில், பிரதி எடுப்பது இலகுவான காலகட்டத்தில், அச்சில் வெளியான தனது நூல்களையே பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளாத எழுத்தாளர்களும் உண்டு. வண்ணநிலவன் அவர்களில் ஒருவர். 1981இல் வெளியான அவரது ‘ரெயினீஸ் ஐயர் தெரு’ நாவல், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பதிப்பு கண்டபோது, முந்தைய பதிப்பின் ஒரு பிரதி போலும் அவர் கைவசம் இல்லை. இத்தனைக்கும் நானறிந்த வரையில் வண்ணநிலவன் மூன்று நாவல்கள்தான் எழுதியிருக்கிறார். ‘ரெயினீஸ் ஐயர் தெரு பிரதியை நண்பர் சைதை முரளி மிகுந்த சிரமத்திற்குப் பிறகு தேடிக் கண்டுபிடித்துத் தந்த’தாகச் சொல்லி இருக்கிறார் வண்ணநிலவன்[5]. இப்போது பிரதி எடுப்பதும், சேமித்து வைப்பதும் முன்னைப் போல் சிரமம் இல்லை. கணினி வந்துவிட்டது. ஆனாலும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளைக் கைதவற விடுவது தொடர்கிறது.
அ. முத்துலிங்கம் தனது சமீபத்திய தொகை நூல் ஒன்றின் முன்னுரையில், ‘இந்தத் தொகுப்புக்காக நான் அவ்வப்பொழுது எழுதி, கணினியில் வெவ்வேறு அலகுகளில் சேமித்து வைத்திருந்த கட்டுரைகளையெல்லாம் ஒன்றாகத் திரட்டினேன். அவற்றிலே சில கிடைக்கவில்லை. தவறிய கட்டுரைகளை திருப்பி எழுதினால் அவை புதுக் கட்டுரைகளாக உருமாறும். ஆகவே இவற்றை மீட்கவே முடியாது’ என்று கைவிட்டு விட்டதாக எழுதுகிறார் [6]. தலைசிறந்த எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை அவர்கள் காலத்தில் அவர்களே மீட்டெடுப்பதில் இத்தனை பாடுகள் உள்ளன. இது உலகம் முழுமைக்கும் பொதுவான பண்பாக இருக்க முடியாது. தரமான இலக்கியத்திற்குப் பாராமுகம் காட்டி வரும் சூழல்களில் படைப்பாளிகளால் இப்படித்தான் இருக்க முடியும்.  
இவ்வாறான சூழலில்தான் சலபதி, புதுமைப்பித்தன் மறைந்து 50ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது அனைத்துப் படைப்புகளையும் துரத்தித் துரத்தி மீட்டெடுத்திருக்கிறார். அப்படிக் கண்டெடுத்தவைகளைக் கால வரிசைப்படி தொகுத்திருக்கிறார். ஒவ்வொரு கதையின் இறுதியிலும் வெளியீட்டு விவரம் இருக்கிறது. கதை முதலில் வெளியான இதழ், பயன்படுத்திய புனைப்பெயர், நூலாக்கம் பெற்ற விவரம் அனைத்தும் பின்னிணைப்பாகத் தரப்பட்டிருக்கின்றன. இதைத் தவிர புதுமைப்பித்தனின் கதைகள் இதழ்களில் வெளியானதற்கும் நூலாக்கம் பெற்றதற்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. புதுமைப்பித்தனின் காலத்தில் வெளியான நூல்களில் அவரே மாற்றங்கள் செய்திருக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, ‘கலைமக’ளில் வெளியான கதையில் ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’ அருந்தும் இரண்டு கப் காப்பியின் விலை இரண்டணாவாக இருக்கிறது, பிற்பாடு காஞ்சனை(1943) என்கிற தொகை நூலில் கதை வெளியாகும்போது மூன்றணா ஆகிவிடுகிறது! இன்னும் வடிவ நேர்த்தி, சொல்முறை, ஆங்கிலப் பயன்பாடு, கதைப் பொருள் முதலான பல காரணங்களையொட்டி புதுமைப்பித்தனே சிறிதும் பெரிதுமான பல மாற்றங்கள் செய்திருக்கிறார். இந்தக் கதைகளுக்கெல்லாம் நூற்பதிப்புகளை மூல பாடமாகக் கொண்டு, இதழ்களில் வெளியானவற்றில் இருக்கும் வேறு பாடங்களை, பின்னிணைப்பில் பட்டியலிட்டிருக்கிறார் சலபதி. புதுமைப்பித்தன் மறைவிற்குப் பிறகு சில கதைகள் நூல் வடிவம் பெற்றிருக்கின்றன, பல பெறவில்லை. இவற்றுக்கெல்லாம் இதழ்களில் வெளியான பாடத்தையே மேற்கொண்டிருக்கிறார். இந்த நூல் ஆய்வு நெறிகளுக்கு உட்பட்டே உருவாக்கப் பட்டிருக்கிறது. ஆனால் அவை புதுமைப்பித்தனை அணுகும் எளிய வாசகனுக்கு தடையாக இல்லை. மாறாக கதைகளுக்கு வெளியே தரப்பட்டிருக்கும் ஆய்வுக் குறிப்புகள், அவனுக்கு புதிய வாசிப்பனுபவத்தை நல்குகின்றன.
சமூக ஆய்வு:
கல்விப் புலம் சார்ந்த ஆய்வு நெறிமுறைகளில் சமரசம் செய்து கொள்ளாமல், அதே நேரத்தில் பண்டிதத்தனம் இல்லாமல், சுவாரசியமும் குறையாமல், ‘புதுமைப்பித்தன் கதைகள்’ நூலுக்கு ஒரு ஆய்வுரையும் எழுதியிருக்கிறார் சலபதி. இந்தப் பண்பு அவரது எல்லாக் கட்டுரைகளிலும் காணக் கிடைக்கிறது. அவரது ‘நாவலும் வாசிப்பும்’ என்கிற நூலை இதற்கு எடுத்துக் காட்டாகச் சொல்லலாம் [7]. புது தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், 1995ல் முனைவர் பட்டத்திற்காக அவர் சமர்ப்பித்த ஆய்வேட்டின் விரிவாக்கப் பட்ட வடிவந்தான் இந்நூல். ‘இரங்கற்பா பாடப்படும் போதெல்லாம் உயிர்த்தெழுவது நாவலுக்கு வழக்கமாகிவிட்டது’ என்கிற கவித்துவம் மிக்க வரியோடு நூல் தொடங்குகிறது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய நாவல், 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெள்ளமாய்ப் பாய்ந்தது. அவற்றில் பலவும் நடுத்தர வர்க்க அறிவாளர்களுக்கு உவப்பாயில்லை. ‘பச்சை மோதிரத்தின் மர்மம் அல்லது புருஷனை ஏமாற்றிய புஷ்பவல்லி’ போன்ற தலைப்புகளில் வந்த நாவல்களை அவர்கள் கடுமையாகச் சாடுகிறார்கள். எனில், இந்த எதிர்ப்புகளூடேதான் நாவல் என்ற வடிவம் நிலைபெற்றது என்று நிறுவ முயல்கிறார் சலபதி.  
நடுத்தர வர்க்கத்தின் கலைவடிவமாக நாவல் உருப்பெற்றதன் உடனிகழ்வாக மெளன வாசிப்பு முறை தமிழ்ச் சமூகத்தில் தோன்றியது என்றும் துணிகிறார். இதற்காக அதற்கு முன்பு நிலவிய வாசிப்பு முறைகளையும் விரிவாக ஆய்கிறார். ஏட்டுச் சுவடிகளை வாய்விட்டுப் படிப்பதும், மனனம் செய்வதும் அவசியமாக இருந்ததையும், நாட்டுப் புறங்களில் அல்லியரசாணி மாலை, தேசிங்கு ராஜன் கதை போன்றவற்றைக் கூட்டாக வாசித்ததையும் விரிவாகப் பேசுகிறார். நூலெங்கும் பல தரவுகள் முன் வைக்கப் படுகின்றன. மேலும், வடசொற்களும் ஆங்கிலமும் இயன்றவரை தவிர்க்கப்பட்ட சலபதியின் தமிழ்நடை மெல்லிய தென்றலாக வாசகனை வருடிக் கொண்டேயிருக்கிறது. இந்த நூலை வாசிப்பதற்கு முன்னர் பல்கலைக்கழக ஆய்வேடுகள் சாதாரண வாசகர்களின் பாவனைக்கானதல்ல என்றுதான் நினைத்திருந்தேன்.

சலபதியின் ‘அந்தக் காலத்தில் காப்பி இல்லை முதலான ஆய்வுக் கட்டுரைகள்'(2000), ‘முச்சந்தி இலக்கியம்'(2004) போன்ற நூல்களும் மிகுந்த உழைப்பிற்குப் பின் உருவாகியிருப்பவை; ஆய்வுநெறிகளிலிருந்து வழுவாதவை; எளிய வாசகனின் கைக்கெட்டுபவை.
பாரதி தேடல்:
சலபதியின் இன்னொரு முக்கியப் பங்களிப்பு பாரதி தேடலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதாகும். பாரதியும் (1882-1921) ‘மேதாவிலாசத்துக்கும் அற்பாயுளுக்கும் உள்ள ரகசிய உறவின்’ கரங்களில் பலியானவர். எனில், அவர் மறைந்த சில ஆண்டுகளிலேயே அவரது மேதாவிலாசம் உணரப்பட்டது. அதன் விளைவாக கடந்த 80 ஆண்டுகளில் அவரது தொகுக்கப்படாத அச்சிடப்படாத பல்வேறு படைப்புகளை வெளிவந்த வண்ணமிருக்கின்றன. ‘வ.உ.சி. பற்றிய ஆய்வினூடாக பாரதி ஆய்வுக்குள் நுழைந்த’வர் சலபதி. வ.உ.சி. கடிதங்கள் (1982), ‘வ.உ.சி.யும் திருநெல்வேலி எழுச்சியும்’ (1987) ஆகிய நூல்களைத் தொடர்ந்து, ‘வ.உ.சி.யும் பாரதியும்’ (1994) ‘பாரதியின் கருத்துப் படங்கள்’ (1994) ஆகிய நூல்களைப் பதிப்பித்தார்.
பாரதி தன் வாழ்நாளின் பெரும்பகுதியை (1904-1921) பத்திரிக்கையாளராகக் கழித்தவர். அவர் ‘இந்தியா’ ,’சுதேசமித்திரன்’,’சூரியோதயம்’ ஆகிய இதழ்களில் எழுதியதில் கணிசமானவற்றை பாரதி ஆய்வாளர்கள் பதிப்பித்திருக்கிறார்கள். எனில், பாரதியே ஆசிரியராக விளங்கிய ‘விஜயா’ நாளேட்டின் இதழ்கள் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. ‘விஜயா’ 1909-10இல் புதுச்சேரியிலிருந்து வெளியானது. பாரதியின் அரசியல் தோழர்களான வ.உ.சி, சுப்பிரமணியம் சிவா ஆகியோர் 1908இல் கைது செய்யப்பட்டு, கடும் தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டபோது, தான் சிறைப்படுவதும் உறுதி என்று கருதிய பாரதி பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து பிரான்சின் ஆளுகையிலிருந்த புதுச்சேரியில் அடைக்கலம் புகுந்தார். அங்கிருந்து பாரதியின் ஆசிரியப் பொறுப்பில் செப்டம்பர் 1909இல் தொடங்கப்பட்ட ‘விஜயா’, அதன்மீது  தடையாணை விதிக்கப்பட்ட ஏப்ரல் 1910 வரை வெளியானது. ஒரு கொந்தளிப்பான அரசியல் சூழலில் பாரதியின் எழுத்துக்களை அறிகிற வாய்ப்பு – ஓரிரண்டு நறுக்குகள் தவிர- பாரதி அன்பர்களுக்குக் கிட்டவில்லை. அக்குறை சலபதியால் நீங்கியது. சலபதி பதிப்பித்திருக்கும் ‘பாரதி விஜயா கட்டுரைகள்’ [8] நூலின் செம்பாகம் இரண்டு இடங்களிலிருந்து பெறப்பட்டவை.

பிப்ரவரி 1910இல் வெளியான 20 ‘விஜயா’ இதழ்களை பாரிசீல் கண்டு பிடித்திருக்கிறார் சலபதி. ‘விஜயா’ tabloid அளவில் நான்கு பக்கங்களில் தலையங்கம், படங்கள், விளம்பரங்களுடன் வெளியாகியிருக்கிறது. ‘விஜயா’ சுமார் 150 இதழ்கள் வெளியாகியிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகிறது. இதில் முழுமையாகக் கிடைத்திருப்பவை இந்த 20 இதழ்கள் மட்டுமே.
இவையன்னியில், ‘விஜயா’வில் வெளியான மேலும் சில கட்டுரைகளையும் சலபதி வெளிக் கொணர்ந்திருக்கிறார். அன்றைய ஆங்கிலேய அரசின் புலனாய்வுத்துறை பொதுமக்கள் கருத்து எப்படித் திரள்கிறது என்பதைக் கண்காணிக்கும் பொருட்டு சுதேசப் பத்திரிக்கைகளில் வெளியானவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வந்தது. இந்த ரகசிய அறிக்கைகளில் ‘விஜயா’வில் வெளியான 45 கட்டுரைகள் கிடைக்கின்றன. இவற்றை சலபதி தமிழில் மீள மொழிபெயர்த்திருக்கிறார். அவற்றுள் ஒன்று:-
“….அவர்(கவர்னர்) வரும் பாதையில் வேறு வாகனம் ஓடக் கூடாது. வரவேற்புப் பந்தல்களும் தோரணங்களும் வழியெங்கும் போடப்படவேண்டும். கவர்னர் எங்கேனும் தாமதிப்பாரானால், கிராமத்தாரெல்லாம், இரவல் வாங்கியேனும், நல்ல வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அதிக  வரி  செலுத்துபவரின் தலைமையில் சென்று, பெரிய புஷ்ப மாலைகளுடன் அவரை  வரவேற்கவேண்டும். வைஸிராய்  ரயிலில் பிரயாணம் செய்வாரானால், எல்லா ஸ்டேஷன்களும் அலங்காரம் செய்யப்பட்டிருப்பதோடு, ராத்திரியில் ஒவ்வொரு  தந்திக்  கம்பத்திலும்  ஒருவன் தீப்பந்தத்தோடு நிற்கவேண்டும். இவ்வாறு செய்ய வேண்டுமென்று எந்தச் சட்டமும் இல்லை. ஆங்கிலேய ஆட்சியின் கீழ் சென்ற நான்கைந்து வருஷங்களாக இயற்றப்பட்ட சட்டங்களையெல்லாம் ஒருவன் படிப்பானாகில் அவன் அதை ராமராஜ்யம் என்றும் தர்ம ராஜ்யம் என்றும் புகழ்வான். சட்டத்தில் என்ன சொல்லியிருந்தபோதிலும் நடைமுறை வேறாயிருக்கிறது…” (விஜயா, 3 மார்ச் 1910)
நூறாண்டுகளுக்குப் பிறகு கவர்னர், வைஸ்ராய் போன்ற பதவிப் பெயர்கள்தாம் மாறியிருக்கின்றன என்பதற்காக இதை நான் எடுத்துக் காட்டவில்லை. தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்தக் கட்டுரைகளை, நூறாண்டுகளுக்குப் பிறகு சலபதி பாரதி காலத்து வசன நடையிலேயே மொழியாக்கம் செய்திருக்கிறார் என்பதை இதை வாசிக்கும்போது உணரலாம். இந்த நூல் ஒரு முக்கியமான காலகட்டத்தில் பாரதியின் எழுத்துக்களையும், கூடவே சலபதியின்  புலமையையும், அர்ப்பணிப்பையும் புலப்படுத்துகிறது.

பாரதியியலுக்கு சலபதி அளித்திருக்கும் இன்னொரு கொடை ‘பாரதி கருவூலம்’ [9].  பாரதி ‘ஹிந்து’ நாளிதழுக்கு ‘ஆசிரியருக்குக் கடிதங்கள்’ பகுதிக்கு  எழுதிய 16 கடிதங்களையும், அதன் செய்திப் பகுதியில் வெளியான 2 ‘பகிரங்க’க் கடிதங்களையும், இன்னும் 2 கட்டுரைகளையும் சலபதி  இந்த நூலில் பதிப்பித்திருக்கிறார். பாரதியின் ஆங்கிலப் புலமையும், அவர் ‘ஹிந்து’விற்கு அவ்வப்போது எழுதி வந்திருக்கிறார் என்பதையும் பாரதி ஆய்வாளர்கள்  அறிந்திருந்தனர். எனில், இரண்டொரு கடிதங்களையும் சில நறுக்குகளையும் மட்டுமே அவர்கள் பார்த்திருந்தனர். ‘பாரதி கருவூலம்’ நூலில் இடம்பெற்றிருக்கும்  பாரதியின் எழுத்துக்களில் பாதிக்கும் மேல் முதல் முறையாக நூலாக்கம் பெறுகின்றன. இவற்றை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் தென்னாசிய மையத்தில் இருந்த நுண்படச் சுருள்களிலிருந்து பெற்றிருக்கிறார் சலபதி.  
1904 முதல் 1911 வரையிலான நெடிய காலகட்டத்தில் வெளியான இந்தக் கடிதங்கள் பாரதியின் சிந்தனைப் போக்குகளை வெளிப்படுத்துகிறது. இந்த எழுத்துக்களின் வீச்சும் விரிவானது. திலகரின் மீதான அபிமானம், அன்னிபெசன்ட் மீதான விமர்சனம், தென்னாப்பிரிக்காவில் அல்லலுறும் இந்தியத் தொழிலாளிகள் மீதான கரிசனம், புதுச்சேரியிலும் பிரிட்டிஷ் ஒற்றர்களால் பாரதி படும் அவதி போன்றவை கடிதங்களில் வெளிப்படுகின்றன. தமிழைப் போலன்றி, பாரதி ஆங்கிலத்தில் நீண்ட வாக்கியங்களைக் கைக்கொள்கிறார். சலபதி இந்தக் கடிதங்களையும் பாரதி காலத்து தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். பாரதியின் சில கடிதங்கள் ‘ஹிந்து’வில் வெளியான செய்திகளுக்கு ஆற்றப்பட்ட எதிர்வினை. பாரதியின் கடிதங்களுக்கும் எதிர்வினைகள் வெளியாகியிருக்கின்றன. இவையும் நூலில் இடம்பெறுகின்றன. கடிதங்களோடு தொடர்புடைய வரலாற்றுக் குறிப்புகளும் தரப்படுகின்றன. எனில், சலபதியின் நூல்கள் வெறும் ஆவணத் தொகுப்பு மட்டுமில்லை. அவற்றை விரிவான ஆய்வு முன்னுரைகள் அணி செய்கின்றன. அவற்றில் தன்னுடைய ஆய்விலிருந்து பெறப்படும் கருதுகோள்களையும் அவர் முன்வைக்கிறார்.

“பாரதி ‘ஹிந்து’வில் எழுதியதில் வியப்பொன்றுமில்லை. அவர் பத்திரிக்கையாளராகவே இருந்து வந்தார். ஆகவே அப்போதையத் தலையாய ஆங்கில நாளேட்டை அவர் தொடர்ந்து வந்தது இயல்பேயாகும்” என்கிறார் சலபதி [10]. மேலும், “காலனீயப் போலீஸ் அவரது வாயைக் கட்ட முயன்ற ஒரு காலகட்டத்தில் அவரது எழுத்துக்களுக்கு மேடை அமைத்துத் தந்ததில் ‘ஹிந்து’ பெருமைப்படலாம் என்றும் சொல்கிறார் [11]. ஆனால் இந்தப் பாராட்டுரைகளின் புறமே நின்று அவர் ‘ஹிந்து’வை விமர்சனமும் செய்கிறார். “பாரதியின் மேதமையை ‘ஹிந்து’ ஆசிரியர்கள் அறிந்திருந்தனர் என்று கொள்ளத்தக்க எந்த முகாந்திரமும் இல்லை” என்றும் நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்.  பாரதி மறைந்த பொழுது ‘ஹிந்து’ ஒரு சிறு தலையங்கக் குறிப்பை மட்டுமே வெளியிட்டது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். அக்குறிப்பும் பாரதியைக் குறித்து ‘ஹிந்து’வில் வெளியான சில உதிரிச் செய்திகளும் நூலில் இடம் பெறுகின்றன.
பாரதியின் மாறிவரும் நிலைப்பாடுகளையும் சலபதி படைப்புகளுக்கு வெளியே நின்று சுட்டுகிறார். எடுத்துக்காட்டாக பாரதி 1904இல் ‘ஹிந்து’ ஆசிரியருக்கு எழுதிய Mr. Sankaran Nair’s Pronouncement என்கிற கடிதத்தைக் குறிப்பிடலாம். ‘சாதிகள் ஒழியும் வரை இந்தியா விடுதலை பெறக் கூடாது’ என்று சென்னை ஆசாரத் திருத்த சங்கம் என்கிற அமைப்பின் தலைவர் சங்கரன் நாயர் பேசியது ‘ஹிந்து’வில் விரிவாக வெளியானது. இந்தக் கருத்தை மறுத்து ஒரு வாசகர் எழுதியிருந்தார். வாசகரின் கருத்தை மறுத்தும், சங்கரன் நாயரை ஆதரித்தும், சமூக சீர்திருத்தம் ஏற்படாமல் அரசியல் மாற்றம் ஏற்படும் என்பது வெறும் கனவுதான் என்று பாரதி வாதிடும் கடிதம்தான் மேலே சுட்டப்படுவது. இந்தக் கடிதத்தை எழுதியபோது பாரதிக்கு வயது 22. பாரதியின் பிரசுரமான முதல் ஆங்கிலப் படைப்பு இதுவாகவே இருக்கக்கூடும். கடிதத்தின் கீழுள்ள வரலாற்றுக் குறிப்பில், கடிதம் வெளியான சில மாதங்களிலேயே பாரதி தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுவிட்டதை சலபதி ‘இந்தியா’ இதழொன்றிலிருந்து மேற்கோள் காட்டுகிறார். இந்தப் பின்குறிப்பை ‘ஆயிரம் உண்டிங்கு சாதி, எனில் அந்நியர் வந்து புகலென்ன நீதி?; ஓர் தாயின் வயிற்றிற் பிறந்தோர், தம்முட் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ?’ என்ற வரிகளோடு வாசகனால் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடிகிறது.

அங்கீகாரம்:
தமிழிலும் ஆங்கிலத்திலுமாக சலபதி இருபத்தைந்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டிருக்கிறார். அவற்றுள் ஒன்று: ‘அண்ணல் அடிச்சுவட்டில்’. ஏ.கே செட்டியார் அரும்பாடு பட்டுத் தயாரித்த ஆவணப் படம் ‘காந்தி’, இதைப் பற்றி ஏ.கே செட்டியார் எழுதிய அனுபவக் குறிப்புகள் ‘அண்ணல் அடிச்சுவட்டில்’ இடம் பெறுகின்றன. அதன் முன்னுரையில் சலபதி இப்படிச் சொல்கிறார்:  

“படம் பிடிப்பதில் முறையான பயிற்சியை ஜப்பானிலும் அமெரிக்காவிலும் இளமையிலேயே பெற்றிருந்த ஏ.கே. செட்டியாருக்கு, 1937 அக்டோபர் 2ஆம் நாள், நியூயார்க்கிலிருந்து டப்ளினுக்குக் கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த போது காந்தி பற்றிய ‘டாக்குமெண்டரி’ படத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ‘வெறும் மனக் கோட்டை கட்டும் இளைஞன்’ என்ற பலருடைய எண்ணத்தை உடைத்து, அதற்கடுத்த இரண்டரை ஆண்டுகளில் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு ஏறத்தாழ நூறு காமிராக்காரர்கள் முப்பது ஆண்டுகளில் படம் பிடித்த 50,000 அடி நீளமுள்ள படங்களை, உலகம் முழுவதும் ஒரு லட்சம் மைல் பயணம் செய்து தேடியெடுத்து, 12,000 அடி நீளமுள படமாகத் தொகுத்து 1940இல் அதை வெளியிட்டார். அப்போது அவருக்கு வயது 29. இதை ஒரு சாதனை என்று சொல்வது குறைவு நவிற்சியாகவே இருக்க முடியும். இதனைத் தமிழரல்லாதவர் ஒருவர் செய்திருந்தால் இந்தியாவே கொண்டாடி இருக்கும் என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை”[12].

கடைசி வரிகள் ஏ.கே செட்டியாரை மட்டுமல்ல, தமிழ் மொழிக்காகவும் சமூகத்துக்காகவும் பங்களித்து போதிய அங்கீகாரத்தைப் பெறாத அனைவரையும் குறிப்பதாகக் கொள்ளலாம். இந்த வரிகள் விளம்பரமும் வெளிச்சமும் இல்லாமல் வாழ்ந்து மறைந்த, நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிற பல தமிழறிஞர்களைக் குறிக்கும். புதுமைப்பித்தனையும் குறிக்கும். ஓரளவிற்கு பாரதியையும் குறிக்கும். ஆய்வுலகமும் தமிழ் அறிவாளர்களின் ஒரு பகுதியும் சலபதியின் பங்களிப்பின் சில கூறுகளையேனும் அறிந்திருப்பதாகவே தோன்றுகிறது. எனில், அவரும் அவர் அருகிக்கிற அங்கீகாரத்தைப் பெறவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.  தமிழ்ச் சமூகமும், இந்தியச் சமூகமும் மறுத்து வரும் அங்கீகாரத்தைக் குறித்து தமிழறிஞர்கள் ஒரு போதும் கவலை கொண்டதில்லை. காலந்தோறும் அவர்கள் தங்கள் பங்களிப்பைச் செய்து கொண்டேயிருக்கிறார்கள்.
(ஹாங்காங்கில் உள்ள ‘இலக்கிய வட்டம்’ (www.ilakkyavattam.com) 2008ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி ‘அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்’ என்ற பொருளில் ஒரு கூட்டம் நடத்தியது. அதில் திரு. வி.க, வ.உ.சி, தேவநேயப் பாவாணர், சி.சு.செல்லப்பா மற்றும் ஆ. இரா. வேங்கடாசலபதி ஆகியோரைக் குறித்து உறுப்பினர்கள் பேசினார்கள் [13]. மேலேயுள்ளது சலபதியைக் குறித்து நிகழ்த்தப்பட்ட உரையின் எழுத்து வடிவம்)
சான்றுக் குறிப்புகள்:
1. சுந்தர ராமசாமி, ‘உரைநடையும் யதார்த்தமும்’. தமிழ் இனி 2000 மாநாட்டுக் கட்டுரைகள் (2005), காலச்சுவடு அறக்கட்டளை, ப. 30.
2. ஆ. இரா. வேங்கடாசலபதி (ப-ர்), புதுமைப்பித்தன் கதைகள் (2000), காலச்சுவடு பதிப்பகம்.
3. சுந்தர ராமசாமி, ஜே.ஜே. சில குறிப்புகள் (1986), க்ரியா, ப. 10.
4. ஜெயகாந்தன் முன்னுரைகள் (1978), மீனாட்சி புத்தக நிலையம், ப. 14-15.
5. வண்ண நிலவன், கம்பா நதி-ரெயினீஸ் ஐயர் தெரு(2001), நர்மதா பதிப்பகம், ப. 6.
6. அ. முத்துலிங்கம், பூமியின் பாதி வயது (2007), உயிர்மை பதிப்பகம், ப. 5.
7. ஆ. இரா. வேங்கடாசலபதி, நாவலும் வாசிப்பும்-ஒரு வரலாற்றுப் பார்வை (2002),காலச்சுவடு பதிப்பகம்.
8. ஆ. இரா. வேங்கடாசலபதி(ப-ர்), பாரதி விஜயா கட்டுரைகள் (2004), காலச்சுவடு பதிப்பகம்.
9. ஆ. இரா. வேங்கடாசலபதி(ப-ர்), பாரதி கருவூலம் -ஹிந்து நாளிதழில் பாரதியின் எழுத்துக்கள் (2008), காலச்சுவடு பதிப்பகம்.
10. T.S. Subramanian, ‘Subramania Bharati’s Letters: a treasure trove’, The Hindu, April 06, 2008.
11. T.S. Subramanian, ‘Early views of nationalist-poet Subramania Bharati’, The Hindu, March 30, 2008.
12. ஏ.கே.செட்டியார், அண்ணல் அடிச்சுவட்டில் (2003), காலச்சுவடு பதிப்பகம், ப. 19.
13. திரு. வி.க, வ.உ.சி, தேவநேயப் பாவாணர் மற்றும் சி.சு.செல்லப்பா ஆகியோரைக் குறித்து ஹாங்காங் இலக்கிய வட்டத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகள் திண்ண.காமின் 30/1/09, 12/2/09, 19/2/09, 5/3/09 இதழ்களில் வெளியாகியுள்ளன. தற்போது ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் இணயதளத்திலும் வலையேற்றப்பட்டிருக்கிறது. சுட்டி: http://www.ilakkyavattam.com/talks

**********

இணையதளம்: www.muramanathan.com
மின்னஞ்சல்: mu.ramanathan@gmail.com

Series Navigation

மு இராமனாதன்

மு இராமனாதன்

அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்- 4: சி.சு.செல்லப்பா

This entry is part [part not set] of 32 in the series 20090305_Issue

எஸ். நரசிம்மன்


சின்னமன்னுர் சுப்ரமண்யம் செல்லப்பா(1912 – 1998 )

தற்காலத்திய தமிழ் இலக்கியம் எப்போதெல்லாம் நினைக்கப்படுமோ அப்போதெல்லாம் சில பெயர்கள் நினைவு கூறப்படும். அவர்களில் சிலர் தமிழ் எழுத்தாளர்கள். சிலர் தமிழ் இலக்கியம் வளர்த்தவர்கள். இன்னும் சிலர் தமிழ் இலக்கியமாகவே வாழ்ந்தவர்கள். சி சு செல்லப்பாவை மூன்றாம் வகையில் சேர்க்கலாம். ஒரு எழுத்தாளர், ஒரு பத்திரிகையாளர், ஒரு விமர்சகர், ஒரு பிரசுரகர்த்தா, சுதந்திரப் போராட்ட வீரர், தன் மானம் மிக்க தனி மனிதர். அதிகம் பேசப்படாத என்ணற்ற தமிழறிஞர்களில் ஒருவர். இலக்கியம்தான் என் வாழ்வு என்ற மூர்க்கத்தனத்தோடு 84 ஆண்டுகள் வாழ்ந்தவர்.

“வாடி வாசல்” “ஜீவனாம்சம்” “சுதந்திர தாகம்” போன்ற நாவல்களையும், “முறைப்பெண்” நாடகத்தையும், ந,பிச்சமூர்த்தி கவிதைகள் பற்றிய “ஊதுவத்திப் புல்”, “மாயத் தச்சன்” மற்றும் “பி.எஸ்.ராமையாவின் சிறுகதைப் பாணி” போன்ற பல நூல்களைப் படைத்திருந்தாலும் அவரது சரியான அறிமுகம் “எழுத்து” பத்திரிக்கைதான். எப்படி “மணிக்கொடி” காலம் என்று ஒன்று சொல்லப்படுகிறதோ அதே போல் “எழுத்து” பேசப்பட வேண்டியது ஆகும்.

“எழுத்து” பிறந்த கதை விசித்திரமானது. 1956 இல் சுதேசமித்திரன் தீபாவளி இதழில் செல்லப்பா ஒரு கட்டுரை எழுதிருந்தார். தலைப்பு : “தமிழ்ச் சிறுகதையில் தேக்கம் “. உடனே இதற்கு மறுப்பு தெரிவித்து ஆர்.வீ., அகிலன் போன்றோர் எழுதினார்கள். கடுமையான உழைப்புக்கும், துணிச்சலான செயல்களுக்கும் சொந்தக்காரர் ஆயிற்றே. செல்லப்பாவால் உடன் பட முடியவில்லை. செயலில் இறங்கினார். விளைவாக தமிழில் விமர்சனத்திற்காகவே ஒரு சிற்றேடு வேண்டும் என்று உருவானது தான் “எழுத்து”. “மக்களுக்கு பிடிக்கிறதை நாங்கள் கொடுக்கிறோம்” என்ற குரல் இலக்கிய உலகத்தையும் அரித்துக் கொண்டிருந்த ஒரு சூழ்நிலையில் மக்களுக்குப் புதியவைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, தோற்றத்தில் எளிமையாகவும், குறைந்த பக்கங்களைக் கொண்டும் வெளிவந்த “எழுத்து”, விமர்சனத்துக்கு என்று தொடங்கி பிற்பாடு “புதுக்கவிதை”களின் களம் ஆகியது. “மரபை அறிந்து அதை மீற வேண்டிய அவசியம் வருகிறபோது மீறித்தான் ஆக வேண்டும்” என்று கருதியவர் சி சு செல்லப்பா.

அப்போது, புதுக் கவிதைகளுக்கு இரண்டு விதத்தில் எதிர்ப்பு வந்தது . ஒன்று, தமிழ்ப் பண்டிதர்களிடமிருந்து -இவர்கள் அதன் புதிய வடிவத்தை உதாசீனப் படுத்தினார்கள். முற்போக்கு முகாம்களிலும் புதுக் கவிதைக்கு எதிர்ப்பு இருந்தது. சி சு செல்லப்பா எத்தனையோ தலையங்கங்களில் தனது எதிர்ப்புகளுக்கும் ஏளனங்களுக்கும் பதில் சொல்லியுள்ளார். “தமிழ்க் கவிதையில் கொஞ்சம் நஞ்சம் இருக்கும் இலக்கணத்தையும் அழிக்க வந்து விட்டான் இந்த பார்ப்பான்” என்று சில பண்டிதர்களும், “அமெரிக்க முதலாளித்துவத்தின், சீரழிந்த கலாச்சர்ரத்தின் கைக்கூலி” என்று சில கம்யூனிஸ்டுகளும் இவரை வசைபாடினர். சி சு செல்லப்பாவைப் பார்த்து , “இது ஒரு அசடு, ஆர்வக் கோளாறினால் ஏதோ செய்கிறது” என பரிதாபப்பட்டவர்களும் உண்டு.

எழுத்து மிகப் பெரிய பணத் தட்டுப் பாட்டுடன் நடத்தப்பட்டது. பத்திரிக்கையின் தொடக்கமே அவரது மனைவியின் முதலீடான ரூபாய் நூறு தான். எழுத்துப் பிரசுரம் எனும் பதிப்பகம் ஒன்றையும் தொடங்கி, வா.ரா., ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா,.போன்றோர் நூல்களை வெளியிட்டார் செல்லப்பா. ஓயாமல் மைல் கணக்கில் ரயிலிலும், பஸ்சிலும், நண்பர்களின் சைக்கிளிலுமாக எழுத்து பத்திரிக்கைப் பிரதிகளையும், எழுத்துப் பிரசுரம் பதிப்பித்த பல புத்தகங்களையும் சுமந்து சென்றார். கல்லுரிகளிலும் பள்ளிகளிலும் நாவல்களும், சிறுகதைகளும் பாடப் புத்தகங்கள் ஆக வேண்டும் என்பதற்காக உழைத்தார். பல கல்வி நிலையங்களில் புத்தகக் கட்டுடன் ஏறி இறங்கினார். “கடை விரித்தேன் கொள்வார் இல்லை” என்ற பொதுஜன நிலைதான் அன்றும் கோலோச்சியது.

நாள் ஒன்றுக்கு பதினான்கு மணி நேரம் பற்பல நூலகங்களின் நூல்களைத் தேடிப் பிடித்து குறிப்புகள் எடுத்து கடுமையாக உழைத்தார் சி.சு. செல்லப்பா. தொடக்க காலத்தில், க.நா.சு., சிட்டி, ந.சிதம்பர சுப்ரமண்யம் போன்றோர் எழுதினாலும், பிறகு ஆத்மார்த்த ஒத்துழைப்பு நல்கியவர் ந. பிச்சமூர்த்தி மட்டுமே. பிரமிள், தர்மு சிவராமு, எஸ்.வைத்தீஸ்வரன், சி மணி, ந.முத்துசாமி, வெங்கட் சாமிநாதன் என்று பல புதியவர்களுக்கு இடம் கொடுத்து தனக்கென ஒரு தடம் பதித்தது எழுத்து. பின்னால் வந்த “நடை”,”கசடதபற”, “யாத்ரா” “பிரக்ஞை” போன்ற பல சிற்றேடுகளுக்கு எழுத்து-தான் முன்னோடி. பத்து ஆண்டுகள் நிற்காமல் எரிந்த அந்த வேள்வித்தீ பல எழுத்தாளர்களுக்கு வெளிச்சம் கொடுத்தது. “எழுத்து” 1970இல் பணத் தட்டுப்பட்டால் நின்று போனது.

மதுரைப் பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு என்னும் போட்டியைக் களமாக வைத்து, கள்ளர் சமூகத்தின் பேச்சு நடையில், “வாடி வாசல்” எழுதிய சி சு செல்லப்பா, இதன் நிமித்தம் போட்டியை பல முறை நேரில் பார்த்தும், நூற்றுக் கணக்கில் போட்டோக்கள் எடுத்தும் யதார்த்தமான நாவல் வடித்தார். மனிதனுக்கும் மிருகத்துக்கும் நடக்கும் போராட்டம் என்றாலும்,அது குறியீட்டு முறையில் வலிமைக்கும், அழகுக்கும் வெறிக்கும் இடையேயான போராட்டம் என்றும் கொள்ளலாம் .

“ஜீவனாம்சம்” ஒரு கைம்பெண்ணின் அலை பாயும் மனக் குழப்பங்களைப் பற்றிய நாவல் – முழுக்க முழுக்க “நனவோடை” உத்தியில் எழுதப்பட்டது. (ஜேம்ஸ் ஜைசின் “உலீசஸ்” போல) சி சு செல்லப்பா வீட்டின் மாடியில் விமர்சனம் குறித்து மதக்கூட்டங்கள் நடத்தி வந்தார். பிறகு, நா.பா வுடன் சேர்ந்து “பவர்” என்ற அமைப்பைத் தொடங்கினார். முதலில் புதுக்கவிதைக்கு எதிர்ப்பு தெரிவித்த நா பா, பின்னர் செல்லப்பாவோடு நண்பரானார். பி .எஸ்.ராமையா, தீபத்தில் “மணிக்கொடி காலம்” எழுத சி சு செல்லப்பாதான் காரணம்.

“எழுத்து” நின்றபோன ஆண்டில் சி சு செல்லப்பா, தனது சுதந்திரப் போராட்ட நினைவுகளை வைத்து சுய சரிதைத் தன்மையுடன் கூடிய மாபெரும் நாவலை எழுதத் தொடங்கினார். அதற்கு முன் மாதிரியாக LIO TOLSTOY எழுதிய ” போரும் அமைதியும்” அமைந்தது. உடல் நிலை பாதிக்கப்பட்டும், தொடர்ந்து எழுதி, அது “சுதந்திர தாகம்” என மூன்று தொகுதிகளுடன் இரண்டாயிரம் பக்க நாவலாக பின்னர் வெளியானது. நானூறு சிறுகதைககளைப் பற்றி அவர் எழுதிய “ராமையாவின் சிறுகதை களம்” செல்லப்பாவின் இறுதிப் படைப்பு. செல்லப்பா இலக்கியத்தில் மட்டும் அல்ல-தனி மனித வாழ்க்கையையும் இலக்கியமாகவே வாழ்ந்தவர் எனலாம். தோட்டக் கலை, பொம்மைகள் செய்வது, இயற்கையை ரசிப்பது, கிரிக்கெட் ஆட்டம் என்று பல செயல்களில் ஆர்வம் கொண்டிருந்தது அவரது வாழ்க்கையை கடைசி வரை சுவையாக்கியது. எளிமையான தோற்றம். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத குணம், இலக்கியத்திலும் காந்தீயத்திலும் ஈடுபாடு, நேர்மை, மன உறுதி, கடுமையான உழைப்பு, உள்ளார்ந்த துறவு மனப்பான்மை, விருதுகளையோ அல்லது வேறு உதவிகளையோ தேடிச்செல்லாத இயல்பு, என விந்தை மனிதர் தான்- யாரிடமும் கை நீட்டி பணம் பெற்றவர் இல்லை. அவரது தெளிவான, தீர்க்கமான குறிக்கோள்களில் பணம் சேர்ப்பது என்பது அறவே இல்லை.

இலக்கியச்சிந்தனை, ராஜராஜன் விருது, கோவை ஈ எஸ் தேவசிகாமணி, அக்னி அட்சரா விருது என பலவற்றை மறுத்து விட்டவர். கடைசியில் அமெரிக்கா வாழ் தமிழர் அமைப்பு “விளக்கு” வழங்கிய “புதுமைப் பித்தன்” விருதை மட்டும் ஏற்றுக்கொண்டு அதன் பரிசுத் தொகை ( ரூ. 25000) புத்தகம் போடச் சொல்லி அங்கேயே வழங்கி விட்டார். சாகித்ய அகாதமி விருதும் அதன் பின் தமிழக நூலகத் துறையின் லட்சம் ரூபாயும் தேடி வந்த போது அவர் உயிரோடு இல்லை. படைப்பாளி, விமர்சகர், பத்திரிக்கை ஆசிரியர்- “புதுக் கவிதை” என்னும் முயற்சி தமிழில் வேரூன்ற அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர். “நல்ல எழுத்து எங்கிருந்தாலும் கண்டு பரவசமடையும் மனம் கொண்ட செல்லப்பாவை மிகவும் கவர்ந்தவர் பி.எஸ்.ராமையா.

தார்மீகக் கோபம் கொண்டால் எதற்கும் பணிய மாட்டார்.படிக்கத் தெரியாவிட்டாலும் படைக்கப் பட்டதை நியாயமாக விமர்சிக்கத் தெரிய வேண்டும் என்பது அவர் கருத்து. தனி மனிதனாகவே கடைசிவரை கலங்கரை விளக்கம் போல் அவரது முயற்சிகள் இருந்தன- “எழுத்து” உட்பட. அவரது வாழ்வே ஒரு இலக்கியம் போல் தான்.

(எஸ்.நரசிம்மன் ஹாங்காங் இலக்கிய வட்டத்தை நிறுவியவர், தற்போது சென்னையில் வசிக்கிறார். அவரது கட்டுரையைக் கூட்டத்தில் வாசித்தவர்: காழி அலாவுதீன்)

****
ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் இணைய தளம்: www.ilakkyavattam.com
****
snntamil@gmail.com

Series Navigation

எஸ். நரசிம்மன்

எஸ். நரசிம்மன்

அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 3 -தேவநேயப் பாவாணர் (1)

This entry is part [part not set] of 30 in the series 20090219_Issue

ராஜேஷ் ஜெயராமன்


அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 3 -தேவநேயப் பாவாணர்

ராஜேஷ் ஜெயராமன்

(2008ஆம்ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி ‘அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்’ என்ற பொருளில் ஹாங்காங் இலக்கிய வட்டம் நடத்திய கூட்டத்தில் வாசிக்கப்பட்ட உரை)

* 23 உலகப் பெருமொழிகளில் இலக்கண இலக்கிய ஆராய்ச்சி அறிவும் 58 மொழிகளில் வேர்ச்சொல் ஆய்வறிவும் கொண்ட பெருந்திறம் கொண்டவர்.

* மொத்தம் 81 மொழிகளை அறிந்த பேரறிஞர்

* மேலை மொழிகளுக்கு மட்டுமே சொந்தமாயிருந்த வேர்ச்சொல் ஆராய்ச்சி முறைமையைக் கற்றுத் தேர்ந்து தமிழில் வேர்ச்சொல் ஆய்வுகளை செய்தவர்.

* வேர்ச்சொல்லாய்வுத் துறையில் கொண்டிருந்த பேராற்றலால் உலக மொழி ஆய்வாளர்களையும் வரலாற்று அறிஞர்களையும் கலங்கடித்தவர்.

* “தமிழ் திராவிடத்திற்குத் தாய், ஆரியத்திற்கு மூலம், உலக முதல்மொழி-தமிழ்,முதல் மாந்தனும் தமிழன்; தோன்றிய இடம் மறைந்த குமரிக்கண்டம்” எனவாகியவைகளை மொழியியல் சான்றுகளுடன் நிறுவிக்காட்டியவர்.

* உலகத்தின் முதல் தாய்மொழியாகிய தமிழ்மொழியே பல்வேறு காலங்களில் பல்வேறு மாறுதல்களை அடைந்து பல்வேறு மொழிக் குடும்பங்களாக மாறிப் பிரிந்து இருக்கிறது என்றும் உலக மக்கள் யாவரும் தமிழ்மொழியால் உறவினர்கள் ஆகின்றனர் என்றும் அறுதியிட்டுச் சொன்னவர்.

* 50 ஆண்டுகள் தொடர்ந்து மொழியாராய்ச்சி செய்து 35க்கும் மேற்பட்ட அரிதிலும் அரிதான ஆய்வியல் நூல்களை தமிழுக்கும் தமிழருக்கும் வழங்கியவர்.

கடந்த இருபதாம் நூற்றாண்டுத் தமிழறிஞர்களில் தனித்தன்மையானவர்; தலைமையானவர் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், நெல்லை மாவட்டத்தில் சங்கரநயினார் கோவில் என்ற கிராமத்தில் 1902ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 7ஆம் நாள் ஞானமுத்து -பரிபூரணம் தம்பதிகளுக்கு பத்தாவது பிள்ளையாக பிறந்தார். 5 வயது நிறைவுறும் போது தாயும் தந்தையும் இயற்கை எய்தினர். அதன் பின் தனது மூத்த தமக்கை ஆதரவில் ‘ஆம்பூர்’ என்ற கிராமத்தில் வளர்ந்தார். அங்கேயே ஆறாம் வகுப்பு வரை கல்வி கற்றார். அதன் பின் ”யங்” என்ற விடையூழியர் ஒருவரின் ஆதரவில் படிப்பைத் தொடர்ந்தார். 1919ஆம் ஆண்டு சீயோன் மலை உயர்நிலைப் பள்ளியில் தன் 19ஆம் வயதில் ஒரு தமிழ் ஆசிரியராகப் பணியைத் தொடங்கினார். தம் கல்விக்காகப் பட்ட கடனை அடைக்கவே அச்சிறு வயதில் தொழில் மேற்கொண்டார். ஆசிரியர் பணியைச் செய்துகொண்டே சென்னை பல்கலைக் கழகத்தில் மொழி ஆய்வியல் துறையில் BA, BOL,MA,MOL போன்ற பட்டங்களைப் பெற்றார். மதுரைத் தமிழ்ச்சங்கப் புலவர் தேர்வில் முதல் மாணாக்கராய்த் தேறினார்.

தேவநேயர் பாடல்கள் இயற்றுவதிலும் மீட்டுவதிலும் வல்லவர். இவரின் ‘தமிழ் இசைக் கலம்பகம்’ என்ற நூலே இவரின் இசைப் புலமைக்குச் சான்றாகும். ஆகவேதான் அறிஞர்கள் இவரை ‘பாவாணர்’ என்று அழைத்தனர். நேசமணி என்ற அம்மையாரை துணைவியாகக் கொண்டார். இவர்களுக்கு ஆறு பிள்ளைகள். குடும்பத்தின் மீதும் அதிக அன்பு பூண்டிருந்தார். முப்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

தேவநேயப் பாவாணர் தமிழ், ஆங்கிலம் தவிர்த்து, பிரெஞ்சு, ஜெர்மன்,லத்தின், ஸ்பெயின், ஹிப்புரு, ரஷ்யா, கிரேக்கம், அரபு, மெண்டரின்,கெண்டனீஸ், ஜப்பான், உருது, துளு, சமஸ்கிருதம், இந்தி, மலாய் போன்ற மொழிகளில் புலமையும், இன்னும் இந்திய பூர்வகுடிகள் பேசுகின்ற பல மொழிகளில் பேசும் ஆற்றலையும் அவர் பெற்றிருந்தார். நீலகிரி மலைச்சாரலில் வாழும் ‘தோடர்’ என்ற இனத்தவர் பேசும் மொழியையும் அப்பகுதிக்குச் சென்று அவர் கற்று வந்தார். இம்மொழிகளை எல்லாம் அவர் கற்றதற்குக் காரணம் தாம் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கமோ அல்லது பட்டங்களையும் புகழையும் அடைய வேண்டும் என்ற எண்ணமோ அல்ல. தமிழ் மொழியை இம்மொழிகளோடு ஒப்பு நோக்கிடவும் மற்றும் தமிழ் மொழி எவ்வாறு இம்மொழிகளை வளர்ச்சியடையச் செய்திருக்கிறது அல்லது அம்மொழிகள் வளர உதவியிருக்கிறது என்பதை உலக அரங்கில் எடுத்துரைக்கவும் வேண்டியே அவர் முனைந்து இந்த மொழிகளை எல்லாம் கற்றார்.

தன் வீட்டில் இருந்த ஏழு நிலைப் பேழைகளிலும் உலகில் வழக்கில் இருக்கும் பல பெரிய மொழிகளின் அகர முதலிகளையும், பேரகாதிகளையும் வாங்கி வைத்து தமது மொழி ஆய்வுக்குப் பயன்படுத்தி இருக்கிறார். மொழி ஆய்வில் நுண்மாண் நுழைபுலம் மிக்கரவாய்த் திகழ்ந்ததால் அறிஞர்கள் அவரை ‘மொழி ஞாயிறு’  என்றும் அழைத்தனர். இவர் பல்துறைகளில் ஆய்வுகளைத் செய்திருந்தாலும் அவை யாவிலும் வேர்ச்சொல் ஆய்வே முதன்மையானதாகும். தமிழ் மொழியின் ஆணி வேர்ச் சொல் என்ன என்பதைக் காணவே இவ்வாய்வினை அவர் மேற்கொண்டார். அதில் வெற்றியும் பெற்றார். மொழி என்பது தகவல் தொடர்புச் சாதனம் என்று சொல்லப்படுவதை மொழியாளர்கள் மறுக்கவே செய்வார்கள். பண்பாடுகளின் உருவகமாகத்தான் மொழிகள் உள்ளன. மொழிகளை ஆராய்ந்தாலே முழு உலக வரலாற்றையே கண்டு கொள்ளலாம்.

பாவாணர் தம் மொழியறிவால் மாந்தன் தோன்றிய இடம் கடல் கொண்ட லெமுரியா எனப்படும் குமரிக்கண்டமே என்றும் உலகின் முதல் மொழி ஆதித் தமிழே என்றும் தக்க சான்றுகளுடன் பல ஆராய்சி நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். பரிதிமாற் கலைஞர் ஒருமுறை ‘பெரும்பாலான வடமொழி இலக்கியங்களின் மூலம் தமிழே’ என்றும் ‘அவற்றிலிருந்து மொழிமாற்றம் செய்தபின் தமிழ் இலக்கியங்கள் பண்டைய காலத்திலேயே அழிக்கப்பட்டு விட்டது’ என்ற பற்றியத்தையும் பிடித்துக் கொண்ட தேவநேயர் தம் தமிழாராய்சியை அதன் அடிப்படையிலேயே துவங்கினார். இந்திய மொழிகள் அனைத்தையும் ஆராய்ந்துவிட்டு பாவாணர் பல ஆராய்சி நூல்களை எழுதியுள்ளார், அவற்றில் அவர் எழுதிய வடமொழி வரலாறு 1 & 2 மற்றும் தமிழ்மொழி வரலாறு 1 & 2 ஆகிய நூல்கள் பல உண்மைகளைக் காட்டுகிறது. அவர் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்ட காலங்கள் தொல்காப்பியத்துக்கும் முந்தியது. ஏறத்தாழ தொல்காப்பியருக்கும் முன்பு இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அகத்தியர் தொல்காப்பியருக்கு ஆசிரியர் அல்ல என்றும் தக்க சான்றுகளுடன் விளக்கியுள்ளார். மொழியை, பண்பாட்டை ஆராய்வதற்கு தொல்காப்பியத்தை சான்றாகக் கொள்ளக் கூடாது, ஏனென்றால் தொல்காப்பியம் இலக்கண நூலேயன்றி சொல் அகராதியல்ல என்றார். மேலும் தொல்காப்பியர் காலத்தில் வடமொழிக்கு எழுத்தோ, இலக்கணமோ இருந்தது இல்லை என்றும் அப்படி ஒருவேளை எழுத்து இருந்தால் வடமொழியில் இருந்து தோன்றியதாக சொல்லப்பட்ட தமிழுக்கு அதைவிட குறைந்த அளவுக்கு எழுத்துக்கள் இருப்பதற்கான கூறுகளே இல்லை. மேலும் தமிழ் இலக்கணம் வடமொழிக்கு பிந்தியதாக இருந்திருந்தால் எழுதும் சொற்றொடர் முறைகள் தலைகீழாக இருப்பதற்கான கூறுகளே இல்லை என்று நிறுவினார்.

தமிழ் எப்படி திராவிட மொழிகளின் தாய்மொழி என்பதை ‘திராவிடத் தாய்’ என்ற நூலில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் வடமொழியில் இருந்து பெற்றுக் கொண்டதென எதுவும் இல்லை என்றாலும் அந்தப் போர்வையில் இழந்தது, மறைந்தது, மறைக்கப்பட்டவை மிக்கவையே என்பது அவரின் வாதம். உலக மொழிகட்கெல்லாம் தாயும் தந்தையுமாய் விளங்கும் தமிழ் மொழிக்கு இடுக்கண் வரும்போதெல்லாம் அதன் இன்னல் களைந்திட, அதன் வளர்ச்சிகுத் தடையாய் இருக்கின்ற தளைகளை நீக்கிடவும் பேராற்றல் மிக்க தமிழ் அறிஞர்கள் காலந்தோறும் தோன்றுகின்றனர். அவ்வாறே கடந்த இருபதாம் நூற்றாண்டின் இடைவெளியில் வட மொழியே உலக மொழிகட்கெல்லாம் தாய் என்று கூறியபோது அக்கருத்தை முற்றிலும் மறுத்து ”தமிழ் மொழியே உலக மொழிகட்கெல்லாம் தாய்” என்று தம் வேர்ச்சொல் ஆய்வினை உலக அறிஞர்கள் முன் வைத்தார் பாவாணர்.

பாவாணரின் ஆராய்ச்சியிலிருந்து, வருகின்ற கருத்தாவது, ‘உலகில் உள்ள மொழிகளில், 6 மொழிகள் மற்ற எல்லா மொழிகளும் உருவாகக் காரணமான தாய் மொழிகளாக இருக்கின்றன. இந்த 6 மொழிகளிலே தமிழே மூத்த முதல் மொழியாக விளங்குகின்றது.’ மற்ற ஐந்து மொழிகளூம் தமிழில் உள்ள பல சொற்களைப் பிரதிபலிக்கின்றன. மேலும் உலகிலுள்ள பிற மொழிகளிலும் தமிழில் உள்ள பல சொற்கள் காணப்படுகின்றன. அவர் கோடிட்டுக் காட்டிய சில எடுத்துக்காட்டுகள்: தமிழில் ‘காண்’ என்றால் பார் என்று பொருள். சீன மொழியில் ‘கண்’ என்றால் பார் என்று பொருள். தமிழில் ‘ஆ’ என்றால் மாடு என்று பொருள். எகிப்திய மொழியில் ‘ஆ’ என்றால் மாடு என்று பொருள்.  தமிழில் ‘பொங்கலோ பொங்கல்’ என்கிறார்கள். கொரிய மொழியில் ‘ஹொங்காலோ ஹொங்காலோ’ என்கிறார்கள். தமிழ் மொழி பிறமொழி கலப்பில்லாது தூய மொழியாக செந்தமிழாக உலக அரங்கில் சிறப்பிடம் பெற வேண்டும் என்றால் அதற்கு சரியான, முறையான ‘அகரமுதலி’ இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். தமது அரை நூற்றாண்டு கால மொழி ஆய்வுப் பட்டறிவைக் கொண்டு இதனை செப்பமாகச் செய்து விடலாம் என நம்பினார்.ஆகவே, ‘செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி’ என்னும் பேரகரமுதலி தயாரிக்கும் முயற்சியில் தீவீரமாக முனைந்தார். தமிழக அரசு ஆதரவுடன் பேரகரமுதலி திட்ட இயக்குநராகப் பொறுப்பேற்று செயற்கருஞ் செயலில் இறங்கினார். தமது வாழ்நாள் பணிகளில் மணிமுடியாய்த் திகழவிருப்பது இத்திட்டமே என்பதால் பேரகரமுதலியை பன்னிரெண்டு மடல்களாக இயற்றத் திட்டமிட்டு முதல் மடலத்தில் ‘அ, ஆ, இ’ என மூன்று் பகுதிகளை மட்டுமே அவரால் நிறைவு செய்ய முடிந்தது.

தேவநேயப் பாவாணர் தமிழ் மொழியின் மேம்பாட்டிற்காகவும், தமிழர் இன வளர்ச்சிக்காவும் செய்த சேவைகள் அளப்பரியன. இவர் தமிழ் மொழியின் ஒப்பற்ற உயர்வை தம் ஆய்வின் முடிவில் தெரிவித்தார்.

“உலக முதன்மொழி தமிழ் உலக முதல் மாந்தர் தமிழன்
தமிழ் திராவிட மொழிகளுக்குக் தாய் வட மொழிகளுக்கு மூலம்
தமிழும் தமிழனும் பிறந்தது குமரிக் கண்டத்தில்
குமரிக் கண்டமே உலகின் தோன்றுவாய்”

என்பது அவரது ஆய்வின் முடிவு ஆகும்.

தமிழ் மொழியின் மூலத்தைக் கண்டு பிடித்த இவர் தம் எண்பதாம் வயதில் 1982 -ஆம் ஆண்டு சென்னையில் மறைந்தார்.  “தவிர்க்க முடியாத சூழ்நிலையில் உங்களை விட்டுப் பிரிகிறேன்; தமிழை காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்குண்டு” இது அவர் இறுதியாகச் சொன்ன சொற்களாகும்.

தேவநேயப் பாவாணர் 35 -க்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஒப்பியன்,தமிழ் வரலாறு, தமிழ் தாய், வடமொழி வரலாறு என்று சில. இதில் திருக்குறள் தமிழ்மரபை என்ற நூல் அவரின் நுண்மான் நுழைபுலத்திற்கு தக்க சான்றாகும்.  பாவாணரின் தமிழ் தொகுப்பு நூல்களைப் தேடிப் பிடித்து படியுங்கள் அதன்பின் பெருமிதப்பின் வியப்பின் எல்லைக்கே செல்வீர்கள், பிறகு எவரேனும் தமிழ்பற்றி தாழ்வாகவும், தமிழின் குறையென்று எவரேனும் அறியாமையால் சொன்னாலும் ஒரு ‘ஏளன பார்வையை வீசிவிட்டு பதில் சொல்லாமல்’ அவர்களை கடந்து செல்வீர்கள்.

==============================================
பாவாணரின் சில நூல்கள்:

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்
இன்று இந்தியப் பண்பாடு, இந்திய நாகரிகம் என்று வழங்குவதெல்லாம் அடிப்படையில் தமிழ்ப் பண்பாடும், தமிழ நாகரிகமுமே என்பது மனோன்மணியம் சுந்தரனார் ,மறைமலை அடிகள் போன்ற தமிழ் சான்றோர் கருத்தாகும். இன்றைய மேனாட்டு அறிஞர்கள்  டைலர்: {India an Anthropological Perspective, 1973} ;  ஜோபர்க் Andree F. Sjoberg;  {in Comparative Civilizations Review 1990 Vol 23} கருத்தும் அதுவே. இத்தகைய சிறப்பு வாய்ந்த பண்டைத் தமிழர் நாகரிகத்தையும் பண்பாட்டையும் விளக்கி பாவாணர் வரைந்ததே ‘பண்டைத் தமிழ நாகரிமும் பண்பாடும் ’ ஆகும்.

பழந்தமிழாட்சி
சங்க காலத்தில் இருந்து 17ஆம் நூற்றாண்டு முடிய தமிழகத்தில் இருந்த ஆட்சி முறையை வரலாற்றுச் சான்றுகள் கல்வெட்டுச் சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் விளக்குவது பழந்தமிழாட்சி ஆகும்.

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை
வருங்காலத் தமிழகம் சமுதாயம்,  அரசு, பொருளியல், பண்பாடு போன்ற துறைகளில் திருவள்ளுவர் கண்ட கூட்டுடைமை, பொதுமை, மாந்தநேயம் ஆகிய அடிப்படைகளில் எவ்வாறு அமைய வேண்டும் என்று பாவாணர் கண்ட கனவை மண்ணில் விண் நூலில் காணலாம்.

தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்களுடைய மரபு விளையாட்டுகள் மறையத் தொடங்கிவிட்டன. அவற்றை விளக்கமாகப் பதிவு செய்த அருமையான ஆவணம் தமிழ்நாட்டு விளையாட்டுக்கள் ஆகும். இந்நூலில் உள்ள பல செய்திகளை அறிந்தவர் இன்று இலர்.

தமிழர் திருமணம்
அகநானூற்றுப் பாடல்கள் 86, 136 ஆகியவற்றில் பண்டைத் தமிழர் திருமணச் சடங்குகள் தெளிவாக தரப்படுகின்றன. அவற்றை தமிழர் திருமணம் நூலில் பாவாணர் விளக்குகிறார். இடைக்காலத்தில்தான் ஆரியச் சார்பான சடங்குகள் தமிழரிடம் நுழைந்தன. அவற்றை நீக்கி தமிழ் மரபுப்படி திருமணச் சடங்குகளை நடத்துவது எப்படி என்பதை பாவாணர் விளக்குகிறார்.  (இந்நூலில் ‘தமிழர் சரித்திர சுருக்கம்’, ‘தமிழன் எப்படிக் கெட்டான்?’ என்னும் பாவாணருடைய சிறுநூல்கள் இரண்டும் இணைத்து அச்சிடப்பட்டுள்ளன.)

பாவாணர் நோக்கில் பெருமக்கள்
பாவாணர் வாழ்நாள் முழுவதும்  தமிழ் மொழி, நாகரிகம் பண்பாடு ஆகியவற்றை பாதுகாக்கவும் வளர்க்கவும் பாடுபட்டார். எனவே அத்துறையில் உழைத்த அவர்காலத்து தமிழறிஞர்கள் பலரையும் பாராட்டி அவ்வப்பொழுது இதழ்கள் முதலியவற்றில் பாராட்டுரைகள் தந்துள்ளார். அவற்றின் தொகுப்பே பாவாணர் நோக்கில் பெருமக்கள் என்பதாகும். மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், பாரதிதாசன், குன்றக்குடி அடிகளார், வ.சுப்பையா, பெருஞ்சித்திரனார் முதலிய சான்றோர்களைப் பற்றிய பாவாணர் பாராட்டை இந்நூலில் காணலாம்.
 
தமிழர் மதம்
தமிழ் மொழியே ஞால முதன்மொழி என்பது பாவாணர் கொள்கை. தமிழர் சமயம் உலகிலுள்ள சமயங்கள் அனைத்திலும் தொன்மை வாய்ந்தது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்  உருவானது என்பதை இந்நூலில் பாவாணர் நிறுவுகிறார். இன்றைய இந்து சமயத்தின் தலைமைக் கடவுளர்களாக உள்ள சிவனும், விட்ணுவும் தமிழர் கடவுளரான சேயோன், மாயோன் ஆகியோரிலிருந்து உருப்பெற்றவர்களே என்பதை பாவாணர் விளக்குகிறார். இன்றைய இந்து சமயம் எனப்படுவது அடிப்படையில் தமிழர் சமயமே என்பார் அவர். தனது History of the World (1992) நூலில்  ஜே.எம். ராபர்ட்ஸ்  ‘இன்று உலகிலுள்ள அனைத்து சமயங்களிலும் மிகுந்த தொன்மை வாய்ந்தது சிவன் வழிபாடேயாகலாம்’ என்று கூறுவது பாவாணர் கருத்தை அறன் செய்வதாகும். சிந்துவெளி நாகரிகம் பற்றிய தமது நூலில் சர் ஜான் மார்ஷலும் இவ்வாறே கூறியுள்ளார். (பாவாணர் நூல் எதுவாயினும் அதில் மொழியியல் ஆய்வும் இருக்கும் என்பதற்கு இந்நூலில் உள்ள எடுத்துக்காட்டு: தா (Dha) என்னும் ஒரு சொல்லே  இந்தோ ஆரிய மொழிகள் தமிழில் இருந்து ஏராளமான அடிப்படைச்  சொற்களை கடன் பெற்றுள்ளன என்பதற்குச் சான்றாகும் என்று இந்நூலில் கூறுகிறார்.
 
திரவிடத்தாய்
ஒப்பியன் மொழிநூல் பற்றிய விளக்கத்தில் கண்டது போல திரவிடத்தாய், சுட்டுவிளக்கம் ஆகிய இரண்டும் அந்நூலின் இணைப்புகளாகவே கருதத்தக்கவை. தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் ஆகியவை தத்தம் சொற்றொகுதி, இலக்கணம், மொழியியல் கூறுகள் ஆகியவற்றில் தமிழிலிருந்துதான்  அவை உருவாயின என்பதைக்காட்டுவதாக உள்ளன . இதுபற்றிய நூல்  திரவிடத்தாய்.

 
சுட்டுவிளக்கம்
இந்த நூலில் முச்சுட்டுகளின் புடைப்பெயர்ச்சியால் தமிழில் எவ்வாறு பல்லாயிரக் கணக்கான சொற்கள் உருவாகியுள்ளன என்பதை பாவாணர் விளக்குகிறார்.

வண்ணனை மொழிநூலின் வழுவியல்
மேனாட்டு மொழியியல் அறிஞர்களின் வண்ணனை மொழி நூலின் கோட்பாடுகள் பல வழுவானவை என்பதை அக்காலத்திலே மதுகையுடன் நிறுவியவர் பாவாணர். மேனாட்டு மொழியியல் அறிஞர்கள் அவற்றை இன்றுதான் ஏற்கின்றனர். எ.கா: ஆர்.எம்.டபிள்யூ.டிக்சன் தமது The Rise and fall of Languages 1997 இல் பாவாணர் அன்றே சொன்ன பின்வரும் கருத்துகளை ஏற்றுள்ளார்:

1. எல்லா மொழிகளிலும் இந்தோ ஐரோப்பிய மொழிகளில் நிகழ்ந்தவாறே (கிரிம்ஸ் விதி) ஒலியன் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என்று வரையறுப்பது தவறு.

2. க்ளாட்டோ கிரனாலஜி, லெக்சிகோ ஸ்டாடிக்ஸ்  (Glottochronology, Lexicostatistics) போன்ற கோட்பாடுகள் மொழிகளின் தொன்மையை ஆய்வு செய்ய உதவுவன அல்ல.

3. ஞாலமுதன்மொழி ஒரே தடவை ஒரே இடத்தில் தோன்றியிருக்கவே வாய்ப்புகள் அதிகம். (ஹாரி ஹைஜர், மாரிசு சுவாதசு, மெரிட்ரூலன், வாக்லாவ் பிலாசக், ஜான் பெங்ட்சன், தால்கோபால்ஸ்கி, செவரோஸ்கின் ஆகியோர் கருத்தும் இதுவே.) எனவே வண்ணனை மொழிநூலின் வழுவியல் மொழியியல் அறிஞர்களுக்கு இன்றியமையாதது ஆகும். 

The Primary Classical Language of the world
பாவாணர் மொழியியல் கருத்துகள் அனைத்தையும் ஆங்கிலப்படுத்தி ஒரு சேர அவரே தந்த அருமையான நூல் The Primary Classical Language of the world என்பதாகும். அது 1966இல் வெளிவந்தது. தமிழிலிருந்து இந்தோ ஐரோப்பிய மொழிகளுக்கு சென்றுள்ளனவாக பாவாணர் இந்நூலில் குறிப்பிட்ட நூற்றுக்கணக்கான சொற்களை பற்றிய பாவாணர் முடிவுகள் ஏற்கத்தக்கன என்று The Journal of Indo European Studies Vol.28; 2000 இதழில் அமெரிக்க மொழியியல் அறிஞர் ஸ்டெபான் லெவிட் குறிப்பிட்டுள்ளார்.

தலைமைத் தமிழ்
தமது முதிர்ந்த பருவத்தில் 1977-80இல் பாவாணர் 24 அடிப்படைத் தமிழ்ச் சொற்கள் எவ்வாறு இந்தோ ஐரோப்பிய மொழிகள் உட்பட உலகின் பல்வேறு மொழிக் குடும்பங்களிலும் பரவியுள்ளன என்பதை நிறுவி ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டார். அவற்றை தொகுத்து தமிழ்மண் பதிப்பகம் ‘தலைமைத் தமிழ்’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. (அக்கட்டுரைகளின் ஆங்கில ஆக்கம் Nostratics – the light from Tamil according  to Devayan என்ற பெயரில் பி.இராமநாதன் அவர்களால் 2004இல் வெளிவந்துள்ளது.) அந்த 24 வேர்ச்சொற்கள் உம்பர்,உருளை, உய், அரத்தம், கல்லுதல், காந்துதல், காலம், கும்மல், அந்தி, எல்லா, களித்தல், மகன், மன், உருத்தல், புகா, பள்ளி. பாதம், புரி, பெறு, பகு, பேசு, திரும்பு, பூனைப்பெயர்கள்,சுல் அடிப்படையில் அமைந்த நெருப்பின் பெயர்கள் ஆகியவையாம்.

Series Navigation

ராஜேஷ் ஜெயராமன்

ராஜேஷ் ஜெயராமன்

அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 3 -தேவநேயப் பாவாணர் (2)

This entry is part [part not set] of 30 in the series 20090219_Issue

ராஜேஷ் ஜெயராமன்


இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?,
The Language Problem of Tamilnadu and its Logical Solution

இவ்விரண்டு நூல்களும் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து தமிழை பாதுகாப்பதற்காக தமிழகத்தில் உருவான இயக்கங்களுக்கு அரணாக எழுதப்பட்டனவாகும். இவற்றில் சிறந்த மொழியியல், வரலாற்று அரசியல் கருத்துகள் உள்ளன. தமிழ்ப் பாதுகாப்பிற்கான கேடயங்களாக இந்நூல்கள் உள்ளன.

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு
இருபது ஆண்டுகளுக்கு மேலாக சென்னைப் பல்கலைக்கழகத்தில் வையாபுரிப் பிள்ளை தலைமையில் அமைந்த குழு உருவாக்கிய சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியில் பாவாணர் கண்ட பல்வேறு குறைபாடுகளை விளக்குவது இந்நூல். குறிப்பாக இவ்வகராதியில் தமிழ்ச் சொற்கள் பலவற்றிற்கு தவறாக வடமொழி வேர்கள் தரப்படுவது மிகப் பெரிய சீர்கேடு. வரம்பு இகந்து சமஸ்கிருதம் உருது, தெலுங்கு போன்ற மொழிகளிலிருந்து ஆயிரக்கணக்கான சொற்களை சேர்த்து தமிழை ஒரு கலவை மொழியாக இவ்வகராதி காட்டுவது இன்னொரு சீர்கேடு. மேலும் தமிழ்நாட்டில் பாமர மக்களிடம் வழங்கும் ஏராளமான தூய தமிழ்ச் சொற்களை இவ்வகராதி தொகுக்காமல் விட்டுவிட்டதையும் பாவாணர் கண்டித்துள்ளார். ( இக்கண்டனத்தின் விளைவாக பின்னர் 1974-81இல் செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலியை தொகுக்கும் பணியில் பாவாணர் ஈடுபடுத்தப்பட்டார்.)

செந்தமிழ்க்காஞ்சி, இசைத்தமிழ்க் கலம்பகம்
இவ்விரண்டும் பாவாணருடைய இனிய பா நூல்களாகும். செந்தமிழ்க் காஞ்சி நூலில் இசையரங்கு இன்னிசைக் கோவை, சிறுவர் பாடல் திரட்டு, கிறித்தவக் கீர்த்தனம் ஆகியவை அடங்கியுள்ளன. நடுவண் அரசு தமிழ்நாட்டில் புகுத்திய இந்தி மொழியை விரட்டும் பாட்டுப் படைக்கலனாக செந்தமிழ்க் காஞ்சி எழுதப்பட்டது. தமிழுணர்ச்சி ஊட்டுகின்ற தீஞ்சுவைத் தெள்ளமுதம் இசையரங்கு இன்னிசைக் கோவை.

சிறார்களின் இயல்பறிந்து பாடப்பெற்ற செந்தமிழ்ப் பாத்திரட்டு ‘சிறுவர் பாடல் திரட்டு’ பாவாணர் படைத்த மொழியாய்வுச் சார்பில்லாத ஒரே சமய இலக்கியம் ‘கிறித்தவக் கீர்த்தனம்’. தமிழினம் எவ்வளவு தொன்மையானதோ அவ்வளவு தொன்மையானது தமிழிசை. தமிழன் தன் தொன்மையையும், முன்மையையும் உணர்ந்து முன்னேறிச் செல்வதற்காக எழுதப்பட்ட நூலே ‘இசைத்தமிழ் கலம்பகம்’

திருக்குறள் தமிழ் மரபுரை(1,2,3,4)
கி.மு.முதல் நூற்றாண்டில் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளுக்கு ஆயிரம் ஆண்டுகள் கழித்து எழுதப்பட்ட பரிமேலழகர் உரையே மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. எனினும், பரிமேலழகர் காலச்சூழலுக்கு ஏற்ப அவர் உரை பலவிடங்களிலும் வடமொழி/ ஆரியச் சார்பாக உள்ளது என்பதை மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார் போன்ற பலரும் சுட்டிக் காட்டியுள்ளனர். தமிழறிஞர் பலர் 20ஆம் நூற்றாண்டில் பரிமேலழகர் உரையின் ஆரியச் சார்பை ஒதுக்கி புத்துரைகள் எழுதினர்.அவ்வாறு தமிழ் மரபுக்கு ஏற்ப சிறந்த ஓர் உரையை 1970இல் தேவநேயப் பாவாணர் வெளியிட்டார். தமிழியல் புலங்கள் அனைத்திலும், மொழியியல், இலக்கணம், சங்க இலக்கியம், பழந்தமிழ் வரலாறு போன்றவற்றிலும் ஆழங்கால் பட்ட மூதறிஞர் பாவாணர் எழுதிய தமிழ் மரபுரையே இத்தகைய புத்துரைகள் அனைத்திலும் தலைச சிறந்ததாகும். பரிமேலழகர் உரையில் கண்ட ஆரியச் சார்பு வழுக்களைக் களைந்துள்ளார். எனினும் அன்னார் உரையின் நயங்களை ஏற்றுப் போற்றியுள்ளார். பாவாணர் உரை இன்றுள்ள திருக்குறள் உரைகளுள் தலை சிறந்ததாகும். மொழியியல் அறிஞர் என்ற முறையில் திருக்குறள் சொற்கள் பலவற்றை வடமொழி அல்லது பாலி மொழியிலிருந்து கடன் பெற்றதாக கூறிய கூற்றுக்களை மறுத்து அச்சொற்கள் தமிழே என்று நிறுவியுள்ளார்.

தமிழ் வரலாறு (1,2)
தமிழ் மொழியின் வரலாற்றை தருவதற்கான தலைசிறந்த அதிகாரி பாவாணர் அன்றி வேறு யார்? ஞால முதல்மொழிக்கு மிக நெருங்கியது தமிழ். இதனை விளக்கும்.மொழியியல் கூறுகள் பலவற்றையும் தமிழே கொண்டுள்ளது என்பதை இந்நூலில் பாவாணர் நிறுவுகிறார். உலகிலுள்ள பல்வேறு மொழிக் குடும்பங்களிலும் புகுந்துள்ள இலக்கண/மொழியியல்/ஒலியனியல் கூறுகளுக்கான அடிப்படையை தமிழில் தான் காணவியலும் என்பதை இந்நூல் விரிவாக நிறுவுகிறது. ‘தொல் திராவிடம்’ என்று வண்ணனை மொழிநூலார் கற்பனை செய்துள்ளது ‘தொல் தமிழ் ’தவிர வேறொன்றுமில்லை என்பதையும் இது நிறுவுகிறது. ஞால முதன்மொழி ஆய்வில் தலைப்பட்டுள்ளோருக்கு புத்தொளி காட்டவல்லது இந்நூலே.

தமிழர் வரலாறு (1,2)
திராவிடர்கள் ( அதாவது திராவிட/தமிழிய மொழி பேசுநர்) கி.மு. மூவாயிரத்தை ஒட்டி மைய கிழக்கு நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்து குடியேறிய வந்தேறிகள் என்ற அபத்தமான கருத்தையே இன்றும் பெரும்பாலான இந்திய வரலாற்றறிஞர் கொண்டுள்ளனர். இதனை மறுத்து, தமிழர் தென்னாட்டின் ( ஏன் இந்திய நாட்டின்) தொல்குடிகள் என்பதையும் தமிழிய மொழி பேசுநருள் சிலர்தாம் ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகளுக்கு வெகு முன்னரே தென்னிந்தியாவில் இருந்து வடஇந்தியாவிற்கும், மைய கிழக்கு நாடுகளுக்கும், மைய ஆசியாவிற்கும் பிற பகுதிகளுக்கும் புலம் பெயர்ந்து சென்றனர் என்பதை மொழியியல் அடிப்படையிலும் பிற பல்துறை சான்றுகள் அடிப்படையிலும் இந்நூல் நிறுவுகிறது. ஏற்கனவே இக்கருத்தை கொண்டிருந்த ஹால், ஹீராஸ், வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர், பி.டி.சீனிவாச அய்யங்கார் முதலிய அறிஞர்கள் வழியில் சென்று மேலும் பல வலுவான சான்றுகள் அடிப்படையில் தமிழரின் உண்மை வரலாற்றை இந்நூலில் பாவாணர் நிறுவுகிறார்.

தமிழ் இலக்கிய வரலாறு (1,2)
தமிழிலக்கிய வரலாறு எழுதினோர் பலர். அவர்களுள் வையாபுரியாரும் அவர் வழியினரும் சங்க இலக்கியங்களையே கி.பி. ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டுக்கு கொண்டு சென்று மகிழ்வர்; தமிழிலக்கியங்கள் பலவற்றுக்கும் (தொல்காப்பியம், திருக்குறள் உட்பட) ‘வடமொழி மூலங்களை’ க் காட்டுவர். அத்தகையோரை மறுத்து தமிழ் இலக்கிய வரலாற்றைச் சிறந்த முறையில் பாவாணர் எழுதியுள்ளார். தமது 60 பக்க முன்னுரையில் தமிழின் தொன்மை வரலாற்றையும், எவ்வாறு வடதமிழ் திராவிடமாக மாறியது என்பதையும், அதுவே பின்னர் ஆரியமாக மாறியது என்பதையும் விளக்கியுள்ளார். நூலின் கடைசி நூறு பக்கங்களில் 20ஆம் நூற்றாண்டுத் தமிழ் மொழி, இலக்கிய வரலாற்றை 1973 முடிய தந்துள்ளார். வருங்காலத்தில் தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் பாதுகாத்து வளர்ப்பதற்கான வழிமுறைகளையும் தந்துள்ளார்.

வடமொழி வரலாறு ( 1,2 )
வடமொழியாகிய சமற்கிருதம், அதன் முன்வடிவமாகிய வேதமொழி ஆகியவற்றின் உண்மையான வரலாற்றை ‘வரலாற்று மொழியியல்’ (Historical Linguistics) அடிப்படையில் தரும் தமிழ் நூல் இது ஒன்றே. வடமொழி / வேதமொழியின் தாயாகிய இந்தோ ஐரோப்பிய மொழி பேசுநரிடமிருந்து ஏறத்தாழ கி.மு. 5000-இல் பிரிந்த இந்தோ ஐரோப்பிய மொழியின் கீழைக் கிளையாகிய இந்தோ ஆரிய (ஈரானியன்/வேதமொழி) மொழி பேசுநர் கி.மு.1500 இல் இந்தியாவிற்குள் நுழைந்தனர். மிகப் பழைய வேதமாக ரிக்கு வேதத்திலேயே திராவிடச் சொற்கள் பல இருக்கின்றன என்பதும் திராவிட மொழியியல்/ஒலியினயியல் கூறுகள் உள்ளன என்பதும் கால்டுவெல், பரோ, எமனோ போன்ற சமற்கிருத அறிஞர்களும் ஏற்றதாகும். ஆயினும் கால்டுவெல்லுக்குப் பின் வந்த மேனாட்டு அறிஞர்கள் ஆழ்ந்த தமிழ்ப் புலமையுடையவர் அல்லர். பாவாணரோ தமிழ் மொழியியலை ஆழங்கண்டவர்; வடமொழி போன்ற மொழிகள் சார்ந்த மொழியியலையும் நன்கறிந்தவர். இந்தப் பின்புலத்தில் பாவாணர் வடமொழியானது தமிழ்/திராவிட மொழிகளின் அடிப்படையில் வளர்ந்த மொழியே என்பதை இந்நூலில் நிறுவுகிறார். வடமொழிச் சொற்களில் ஐந்தில் இரண்டு பகுதி தமிழ் சொற்கள் அல்லது தமிழ் வேர்களைக் கொண்டவை என்பது அவர் கருத்து. எனவே இலத்தீன், கிரேக்கம், கெல்திக், செருமானிய மொழிகளில் உள்ளனவாக பாவாணர் இந்நூலில் காட்டும் தமிழ்ச் சொற்களும் மொழியியல் கூறுகளும் வரலாற்று மொழியியல் அறிஞருக்கு பயன் தருவதாகும்.

முதற்றாய்மொழி ( 1,2 )
தமிழில் உள்ள அடிப்படை வேர்ச்சொற்கள் அனைத்தும் முன்மைச் சுட்டு ஆகிய ஊ – உ விலிருந்து தான் தோன்றின என்பது பாவாணரின் சொல்லாய்வுக் கோட்பாட்டின் அடிப்படையாகும். உ – உல்; பின்னர் ‘உல் ’ லிருந்து குல், சுல்,துல்,நுல், புல் , முல் என்றவாறு அடிப்படை வேர்ச்சொற்கள் தோன்றின. இந்த அடிப்படைச் வேர்ச்சொற்கள் ஒவ்வொன்றிலிருந்தும் முன்மை, நெருங்கல், தொடுதல், வளைதல், துளைத்தல், குத்தல் முதலிய பல்வேறு பொருள் புடை பெயர்ச்சிகளில் நூற்றுக்கணக்கான தமிழ்ச்சொற்கள் உருவாகியதை இந்நூல் விளக்குகிறது.சேய்மைச் சுட்டான ஆ – அ மற்றும் அண்மைச் சுட்டான ஈ-இ ஆகியவற்றில் இருந்தும் பல இரண்டாவது கட்ட வேர்ச்சொற்கள் உருவாயின எனினும், உகரச் சுட்டில் இருந்து உருவான சொற்களே முதற்றாய் மொழியாகிய தமிழில் பெரும்பாண்மையானவை.

ஒப்பியன் மொழிநூல் ( 1,2)
தமது மொழியியற் சிந்தனைகளை ஏறத்தாழ முழுமையாக விளக்கி பாவாணர் வரைந்த முதல் பெருநூல் இதுவேயாம். 1940 இல் வெளிவந்தது. அதற்கு முன் 1930 லிருந்தே இந்நூலுக்கு அடிப்படையான மொழியியற் சிந்தனைகளை இதழ்களில் கட்டுரைகளாக எழுதி வந்த போதிலும் விரிவான நூலாக வந்தது இதுவே. மாந்தன் முதன்மொழிக்கு மிக நெருங்கியதாக இருந்திருக்கக் கூடிய திராவிட (தமிழிய) மொழிக் குடும்பத்திற்கும், இந்தோ ஐரோப்பியம், துரானியம் (சிதியன்/உரால்-அல்தாய்க்) ஆகிய மொழிக் குடும்பங்களுக்கும் நெருங்கிய தொடர்பு கழி பழங்காலத்திலேயே இருந்திருக்கலாம் என்பதை கால்டுவெல் 1856 இலேயே கோடிட்டுக் காட்டியிருந்தார். இவ்வழியில் பாவாணர் ஆழமாக மேல் சென்று இந்நூலை உருவாக்கினார். கடந்த 70 ஆண்டுகளில் தமிழ் மொழியியல், தமிழியல் துறைகளில் தமிழ் சார்ந்த மெய்ம்மைகளை நிலை நாட்டவும், வடமொழி/இந்தோ ஆரிய சார்பாக பரப்பப்பட்டு வந்த போலிக் கோட்பாடுகளை மறுக்கவும் ஆதார நூலாக இது அமைந்தது. பின் காலத்தில் பாவாணர் தனித் தனியாக எழுதிய முதற்றாய்மொழி, சுட்டுவிளக்கம், திரவிடத்தாய், தமிழ் வரலாறு, வடமொழி வரலாறு போன்றவையெல்லாம் இந்த மூல நூலில் ஏற்கனவே சுருக்கமாக தெரிவிக்கப்பட்ட நுண்மான் நுழைபுலம் மிக்க கருத்துக்களின் விரிவாக்கங்கள் தாம். வரலாற்று மொழியியல் அறிஞர்களுக்கு இன்றியமையாதது.

வேர்ச்சொற் கட்டுரைகள் ( 1,2,3,4)
ஞால முதன்மொழி ஆய்வு, நாஸ்திராதிக்/யுரேசியாடிக் (Nostratic/Eurasiatic) ஆய்வு ஆகிய ‘வரலாற்று மொழியியல்’ சார்ந்த ஆய்வாளர்களுக்கு இன்றியமையாதவை. இக்கட்டுரைகள் 1964 திசம்பரிலிருந்து 1977 ஆகத்து முடிய பாவாணர் எழுதி வெளியிட்டவையாகும். இக்கட்டுரைகள் மொத்தம் 54 வேர்ச்சொற்கள் பற்றியவை. அவை அம், இல், இள்,உ,உய், உள், (3 பொருள்கள்), உல், ஊது, ஏல், எல், ஓ. கல், குல் (6 பொருள்கள்) சுல் (5 பொருள்கள்) துல் (4 பொருள்கள்) நுல் (6 பொருள்கள்), புல் (6 பொருள்கள்); முல் (6 பொருள்கள்) வல் , வா, விள் (3 பொருள்கள்) . இந்த அடிப்படை வேர்ச்சொற்களும் அவற்றிலிருந்து இரண்டாம் நிலை மூன்றாம் நிலை என்றவாறு உருவான பல்வேறு வேர்ச்சொற்களும் தமிழில் மட்டுமின்றி பிற தமிழிய மொழிகளிலும், வடமொழி உள்ளிட்ட இந்தோ ஐரோப்பிய மொழிகளிலும், வேறு மொழிக் குடும்பங்களிலும் புகுந்துள்ள விவரங்களையும் ஆங்காங்கு பாவாணர் விளக்கியுள்ளார்.

==============================================

ஒரு பின் குறிப்பு:
தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் பேத்திக்கு பெண்குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட உதவித்தொகையை வழங்க அதிகாரிகள் மறுத்துள்ள அவலம் ஏற்பட்டுள்ளது. தமிழறிஞர் தேவநேயப் பாவாணரின் எல்லா நூல்களையும் அரசு நாட்டுமையாக்கி மரியாதை செலுத்தியது குறிப்பிடத்தக்கது. தேவநேயப் பாவாணரின் மூத்த மகன் செல்வராசு. இவரது மகள் எஸ்தர் (40). இவருக்கும் மோசஸ் என்பவருக்கும் திருமணம் ஆகி திண்டுக்கல் அருகே கன்னிவாடி கிராமத்தில் வசித்து வருகின்றனர்.திருமணமாகி பல ஆண்டுகள் குழந்தைப்பேறு இல்லாமல் கடந்த 2006இல் ஒரு பெண் குழந்தையும், அதற்கு அடுத்த ஆண்டில் மற்றொரு பெண் குழந்தையும் பிறந்தது. தற்போது எஸ்தரின் குடும்பம் வறுமையான சூழ்நிலையில் உள்ளது. அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தால் அரசின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்கக் கோரி விண்ணப்பித்து இருந்தார். ஆனால், இந்தத் திட்டத்தின்கீழ், இரு பெண் குழந்தைகளின் தாயின் வயது 35க்குள் இருக்க வேண்டும் என்ற விதியை காரணம் காட்டி எஸ்தருக்கு உதவித் தொகை வழங்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதையடு்த்து தனது குடும்ப வறுமையைக் கருத்தில் கொண்டு கருணையுடன் உதவி செய்ய வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலவர் வாசுகியிடம் மனு கொடுத்து விட்டு நம்பிக்கையுடன் காத்துக் கிடக்கிறார் தமிழறிஞரின் பேத்தி.

==============================================
இந்தக் கட்டுரைக்கு உதவிய சில வலைத்தளங்கள்:
http://www.geocities.com/Athens/1594/pavanar.htm
http://www.viruba.com/atotalbooks.aspx?id=384
http://govikannan.blogspot.com/2007/08/blog-post_23.html
==============================================

ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் இணைய தளம்: www.ilakkyavattam.com

****

jrajesh@hotmail.com

Series Navigation

ராஜேஷ் ஜெயராமன்

ராஜேஷ் ஜெயராமன்

அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்- 2 வ. உ. சிதம்பரம் பிள்ளை

This entry is part [part not set] of 33 in the series 20090212_Issue

சுகந்தி பன்னீர்செல்வம்


கப்பலோட்டிய தமிழன் என்றும், செக்கிழுத்த செம்மல் என்றும் அனைவராலும் அறியப்பட்ட வ.உ. சிதம்பரனாருக்கு தமிழும் தேசியமும் தமது இரு கண்கள்; எந்த அளவிற்கு தேசப்பற்றும் விடுதலை உணர்வும் கொண்டிருந்தாரோ, அதே அளவு மறுபக்கம் தாய்மொழியான தமிழ் மீது பற்றும் இலக்கிய உணர்வும் கொண்டிருந்தார். நாடு தழுவிய நிலையில் அன்றைய அரசியல் களத்தில் ஒரு சாதனையாளராக, தன்னிகரில்லாத் தலைவராக தலைவணங்கி ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்தியத் தலைவர் அவர். அவரின் வீரார்ந்த அரசியல் சாதனைகளே அவர் சிறைமீண்டு வெளிவரும் பொழுது, மறக்கப்பட்டு விட்டன. அவர் 4 ஆண்டு சிறைவாசத்திற்குப்பின் விடுதலையாகி மீண்ட பொழுது அவரை எதிர்கொள்ள சுப்பிரமணிய சிவா மட்டுமே காத்திருந்தார் என்கிறது வரலாற்றுக் குறிப்பு. இந்நிலையில் அவருடைய தமிழ்ப்பணிகளின் நிலை கேட்கவும் வேண்டுமோ?

நமது ஹாங்காங் தமிழ் இலக்கிய வட்டம், ‘அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்’ என்ற பொருளில் கூட்டம் நடத்துவதென தீர்மானித்த பிறகு நண்பர் திரு.மு.இராமனாதன் என்னிடம் டாக்டர்.அரங்க இராமலிங்கம் எழுதிய “வ.உ.சி கண்ட மெய்ப்பொருள்” என்ற நூலைக் கொடுத்தார். அந்த நூல் ‘இலக்கியச் சிந்தனை’ வெளியிட்டது. இன்றைய இளைய தலைமுறையின் கவனத்தில் இல்லாத முந்தைய தலைமுறை இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஓர் அறிஞரைப் பற்றிய நூலை இலக்கியச் சிந்தனை வெளியிட்டு வருகிறது. அந்த வரிசையில் 2006ஆம் ஆண்டு வெளியான 20ஆவது ஆய்வு நூல் அது. நூலில் வ.உ.சி ஒரு மெய்ஞானி என்ற நோக்கில் அவர் வாழ்வில் கண்டது, கடைபிடித்தது, படைத்தது என வ.உ.சியின் எழுத்துக்களிலிருந்து மேற்கோள்களுடன் பட்டியல் இட்டிருந்தார் ஆசிரியர். இதைப் படித்ததும் வ.உ.சியின் படைப்புகளைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் உந்தியது.

சென்னை நண்பர்களிடம் உதவி கோரி விண்ணப்பித்தேன். ‘அதிகம் பேசப்படாத’ என்ற தலைப்புக்குச் சிறிதும் பங்கம் இல்லாமல், எத்தனை பிரயத்தனப்பட்டும் நூல்கள் எதுவும் கிடைக்கவில்லை என நண்பர்கள் துவண்டனர். ‘வ.உ.சி ஒரு தமிழறிஞரா’ என்று அவர்கள் கேட்கவும் தவறவில்லை. அப்போதுதான் திரு. மு. இராமனாதனின் முயற்சியால் பேராசிரியர். ஆ. இரா. வேங்கடாசலபதியின் தொடர்பு கிடைத்தது. அவர் மூலம் வ.உ.சியைக் குறித்த சில நூல்களும், வ.உ.சி யின் சில படைப்புகளும் கிடைத்தன. அவை:
• உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட இரண்டு நூல்கள்: எஸ். கண்ணனின் “வ.உ.சி. ஒரு பன்முகப் பார்வை ” (2005), மற்றும் ம.ரா. அரசுவின் “வ.உ.சி. வளர்த்த தமிழ்” (2002);
• சாகித்திய அகாதெமி் வெளியிட்டு வரும் “இந்திய இலக்கியச் சிற்பிகள்” வரிசையில் ம.ரா.அரசு எழுதிய “வ.உ. சிதம்பரனார்”(2005);
• ஆ.இரா. வேங்கடாசலபதியின் “வ.உ.சியும் பாரதியும்” (மக்கள் வெளியீடு,1994)

இந்த உரையில் வரும் அனைத்துக் குறிப்புகளும், கருத்துகளும், மேற்கோள்களும் தகுந்த உரிமம் பெறாமல் இந்த ஆய்வு நூல்களிலிருந்து பெற்ற இரவல்களேயாகும்.

வ.உ.சியின் இளம்பிராயத்திலேயே அவருக்கு ஒரு நல்ல இலக்கிய அடித்தளம் அமைந்தது. வ.உ.சியின் முன்னோர்கள் தமிழ் மொழியில் ஆர்வம் உள்ளவர்களாக விளங்கினர்; கவிஞர்களாகவும் திகழ்ந்தனர். ஒட்டப்பிடாரத்தில் இவருடைய வீட்டிற்குக் “கவிராயர் வீடு” என்ற பெயரும் உண்டு. இளமையில் வ.உ.சிக்குக் கற்பித்த ஆசிரியர்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றவர்கள். ஆதலால், இயல்பாகவே இலக்கிய நூல்களைப் பயிலும் வாய்ப்பினை அவர் பெற்றார். ஆத்தி சூடி, உலகநீதி முதலிய ஒழுக்க நூல்களைப் பலமுறை கேட்டுப் பயின்றார். கொன்றை வேந்தன், வெற்றி வேற்கை, நளவெண்பா, மூதுரை ஆகிய நூல்களைப் பொருளுணர்ந்து கற்றார். மகாபாரதம் மற்றும் திருவிளையாடல் புராணக்கதைகளையும் நீதிக்கதைகளை யும் பாட்டனார், பாட்டியிடமிருந்து விரும்பிக் கேட்டவர்.

தொடக்க காலத்தில் வ.உ.சி யின் மனம் ஆன்மிகச் சிந்தனைகளில் தோய்ந்திருந்தது. தனிமனித ஒழுக்கத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். தனிமனித வாழ்க்கை நெறிப்படும்பொழுது சமுதாயம் மேம்படும் என்பது அவர் நம்பிக்கை. இந்த நம்பிக்கையே, 1900ஆம் வருடம் செப்டம்பரில், “விவேகபாநு” என்ற பெயரில் நண்பர்களுடன் இணைந்து, “லெளகிகத்திற்கும் வைதீகத்திற்கும் அவசியமான ஒழுக்கங்களை எடுத்துப் போதிக்கும் பத்திரிக்கை”யாக ஆரம்பிக்கப்பட்டது. அவர் எழுதிய கட்டுரைகள் பெரும்பாலும் ‘விவேகபாநு’வில்தான் வெளியாயின. அவருடைய முதல் கட்டுரை “கடவுளும் பக்தியும்” என்பதாகும். 1936 ஜனவரி 17, தினமணியில் வெளிவந்த “உலகமும் கடவுளும்” என்பதே அவர் எழுதிய கடைசிக் கட்டுரையாகும். ஏறக்குறைய 37 ஆண்டுகளில் ஆன்மீகம், அரசியல்,வாழ்க்கை வரலாறு, மொழி, இலக்கியம், மர்றும் பொதுவான பொருள்கள் குறித்தும் பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

வ.உ.சி யின் கட்டுரைகளின் சிறப்பு அவற்றிலிருந்த எளிமையும் தெளிவும். உதாரணத்திற்கு “கடவுள் ஒருவரே” என்ற கட்டுரையில், “எல்லா மதத்தவரும் ஒரே கடவுளைத்தான் வணங்குகிறாரென அவர் அறிகின்றிலர். தமது மதத்திற்குரிய கடவுளே உண்மையானவரென்றும், பிற மதத்துவருடைய உண்மையல்லாதவரென்றும் அவர் நினைக்கின்றனர். அவ்வெண்ணந்தான் இவ்வளவு விபரீதங்களையும் விளைவிக்கிறது” என்கிறார். மேலும், “ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு காலத்தில் தோன்றிய ஒவ்வொரு பெரியவருடைய அறிவு விளக்கமேயன்றி வேறன்று. ஒருவர் அறிவுக்கு மற்றொருவர் அறிவு எல்லா விஷயங்களிலும் பொருத்த முடையதாக இருக்குமா? சில விஷயங்களில் பொருத்தமின்றித்தானே இருக்கக் கூடும். அது பற்றிச் சுதேசத்தாருக்குள் சகோதர வாஞ்சையைக் குறைப்பது நியாயமா?” என்று எளிமையாக தனது கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

தாய் நாட்டின் பெருமை உணரப்பட வேண்டும் என்பதை, “ஒருவர் பிறப்பதற்கு ஆதாரமாயிருந்தவர் அவருக்கு தாயென்றால், அவரும் அவருடைய முன்னோரும் பிறப்பதற்கு ஆதாரமாயிருந்த தேசம் அவரைப் பெற்ற தாயினும் மேலென்பதற்குத் தடையென்ன?” என்றும், “வறுமையினும் வியாதியினும் சகிக்கொணாக் கொடியது அடிமைத்தனமே” என்றும் சொல்கிறார்.

இலங்கையில் இருந்து வெளிவரும் “வீரகேசரி” என்னும் நாளிதழில் ‘பாரத ஜோதி ஸ்ரீ திலக மகரிஷியின் வரலாறு’ என்னும் தலைப்பில் திலகரின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் எழுதியுள்ளார். இது இவருடைய கட்டுரைப் பணியில் மற்றுமொரு சாதனையாகும்.

மேடைப் பேச்சு:

ஆன்மிக உணர்வும் தமிழ் உணர்வும் வ.உ.சியின் குருதியில் கலந்தவை. இடையில் தோன்றிய அரசியல் ஈர்ப்பு அவருடைய வாழ்வின் போக்கையே மாற்றியது. தமிழகத்தில் விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் தலைவரானார். விடுதலை இயக்கத்தை மக்கள் இயக்கமாக மாற்றுவதற்குத் தமிழைப் பயன்படுத்தினார். இன்று பெருவழக்காகவும், இயல்பாகவும் அனைவரும் அறிந்த ஒன்றாகவும் நடைமுறையில் உள்ள அரசியல் மேடைப்பேச்சு என்பது வ.உ.சியின் அரசியல் வாழ்க்கையின் ஆரம்பகாலத்தில் அரிய பொருளாகவே இருந்தது. சொற்பொழிவுக் கலையை – மேடைப்பேச்சைத் தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தவர் என்ற வகையில் குறிக்கத்தக்கவர் சுப்பிரமணிய சிவா ஆவார்.

ஒழுக்கம், சிற்றிலஞ்சேராமை, அருளுடைமை, தவம், கள்ளாமை, நிலையாமை, திருக்குறள் முதலதிகார ஆராய்ச்சி ஆகிய தலைப்புகளில் சிறந்த சொற்பொழிவுகள் ஆற்றி பாராட்டுப் பெற்ற வ.உ.சி, சுப்பிரமணிய சிவா தொடங்கி வைத்த மேடைப்பேச்சை- அரசியல் சொற்பொழிவை ஒரு கலையாகவே வளர்த்துப் பாமர மக்களை அரசியல் விழிப்புணர்வு கொள்ளச் செய்து புதிய வரலாறு படைத்தவர்.

வ.உ.சியின் பேச்சுத் தமிழ், ஆழமும் வேகமும் உள்ள ஓர் ஆறு கரைபுரண்டு வெள்ளமிட்டு வரும் அழகை நினைவூட்டும் என சான்றோர்கள் பாராட்டியுள்ளார்கள். அன்றைய சுயராஜ்ய கட்சியிநன் கொள்கை பரப்புச் செயலாளர் அவர். தமிழை எளிமைப்படுத்தி, பொதுக்கூட்டம் கூட்டிப் பேசும் முறையை பிரசித்தமாக்கி, அச்சம், அறியாமை, வறுமை ஆகியவற்றில் ஆழந்து கிடந்த மக்களை அரசியல் விழிப்புணர்வு பெற வைத்த தமிழ் புரட்சியாளரும் ஆவார்.

மெய்ஞான நூல்கள்:

பால கங்காதிர திலகர் பர்மா சிறையில் அடைப்பட்டிருந்த பொழுது “கீதாரகசியம்” என்ற உலகப் புகழ் பெற்ற நூலை எழுதினார். அதேபோல் பண்டித ஜவஹர்லால் நேருவும் “நான் கண்டுணர்ந்த இந்தியா” என்ற வரலாற்று நூலை எழுதி முடித்தார் சிறையில் இருந்தபடியே. அதுபோலவே சிதம்பரம் பிள்ளை அவர்களும் சிறையில் இருந்த பொழுது தமிழ் இலக்கியப்பணியில் ஈடுபட்டார். கண்ணனூர் சிறையில் உடனிருந்த கைதிகளுக்கு நன்னூல், நீதிமுறை போதித்தார். அக்குற்றவாளிகளில் சிலர் “பாக்களாகச் செய்து கொடுத்தால் மனனம் செய்து நினைவு கூற இலகுவாக இருக்கும்” என்ற வேண்டிக் கொண்டனர். அதற்கிணங்கி பத்து அதிகாரங்களைக் கொண்ட 100 வெண்பாக்கள் அடங்கிய “மெய்யறிவு” என்ற நூலை இயற்றினார்.

இந்த நூல் 1.தன்னையறிதல், 2. விதியிலறிதல், 3. உடம்பை வளர்த்தல், 4. மனத்தையாளுதல், 5. தன்னிலையில் நிற்றல், 6. மறங்களைதல், 7. அறம்புரிதல், 8. தவஞ்செய்தல், 9. மெய்யுணர்தல், மற்றும் 10. மெய்ந்நிலையடைதல் என்ற அதிகாரங்களைக் கொண்டதாகும். உடல், உள்ளம், உயிர் என்ற மூன்றின் சேர்க்கைதான் நாம். “உடலைப் புறக்கணித்தல் தவறு”, “ஒருவன் முதலில் தான் யார் என்பதை அறிதல் வேண்டும்”, “மறம் களைய வேண்டும்” என்பன போன்ற பல்வேறு கருத்துகள் கொண்ட நூல் இது. அறத்தைச் சரியாகப் புரிதலும், பொருளை நியாயமாக ஈட்டலும், வீட்டை நேராக அடைதலும், அவற்றிற்கு அனுகூலமான நிலைகளை எய்தலும் இந்நூலைக் கேட்போர் பெறும் பயன்களாகும்.

அடுத்ததாக, திருக்குறள் விளக்கும் நீதிக்கருத்துகளை மையமாக வைத்து எழுதப்பெற்ற நூல் “மெய்யறம்”. தமிழ் இலக்கியங்களுள் வ.உ.சியின் மனத்தை மிகவும் ஈர்த்தது திருக்குறளே ஆகும். மாக்களைப் போல மனம் போனபடி வாழ்க்கை நடத்தும் மக்கள் மனந்திருந்தி நல்வாழ்வு வாழத் துணைபுரிவது திருக்குறளே என்பது வ.உ.சியின் அசைக்க முடியாத நம்பிக்கை. மக்கள் மனநலம் பேணி நல்வாழ்வு பெற வேண்டும் என்பதற்காகக் குறளின் அடிப்படையில் இந்நூலை இயக்கி உள்ளார்.

இந்நூல் மாணவரியல், இல்வாழ்வியல், அரசியல், அந்தணவியல், மெய்யியல் என்னும் 5 இயல்களைக் கொண்டது. ஓர் இயலுக்கு 25 அதிகாரங்கள் என்றும் ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்து ஒற்றை அடிகள் கொண்டு 1250 அடிகள் உண்டு. “மானுடப் பிறப்பை அடைந்த ஒவ்வொருவரும் முறையே மாணவராய், இல்வாழ்வராய், அரசராய், அந்தணராய் படிப்படியாய் வாழ்வில் உயர்ந்து இறுதியில் மெய்ந்நிலையை அடையலாம்” என்பது அவர் வலியுறுத்தும் கருத்து. மெய்யறத்தைப் பற்றி ராஜாஜி பாராட்டுகையில் “இந்நூலிற் கூறியுள்ள பொருள்களை யான் இனிதுணர்ந்தேன். இந்நூலை யான் பெரிதும் மதிக்கின்றேன். முற்காலத்திய திருவள்ளுவர் குறளை, இக்காலத்திய கருத்துகளால் மணப்படுத்தி அற்பக் கல்வி உடையாரும் உணரத்தக்கவாறு செய்யலாமென்பதை இந்நூல் காட்டுகின்றது” என்கிறார்.

மெய்யறத்தின் முதல் பகுதியான மாணவரியலில் முதல் அதிகாரமான மாணவர் கடமை என்ற பகுதியில்:

“மாண் பெற முயல்பவர் மாணவர் ஆவார்
ஆணும் பெண்ணும் அது செயவுரியர்
இளமைப் பருவம் இயைந்ததற்கே
மற்றைய பருவமும் வரைநிலையிலவே
அவர் கடன் விதியிலறிந்து நன்றாற்றல்
அன்னை தந்தையரை ஆதியைத் தொழுதல்
தீயினம் விலக்கி நல்லினஞ் சேர்தல்
தக்க ஆசிரியரால் இன்னியலறிதல்
ஒழுக்கமும் கல்வியும் ஒருங்கு கைக்கொள்ளல்
இறைவன் நிலையினை எய்திட முயறல்”

மொழி பெயர்ப்பு நூல்கள்:

அடுத்ததாக கலாசாலைகளுக்குப் பாடநூல்கள் விதிக்கும் பாடப் புத்தகச் சபையார் (Text Book Committee) வ.உ.சியின் காலத்திலேயே ஏற்றுக் கொண்ட நான்கு மொழி பெயர்ப்பு நூல்கள் வ.உ.சி மொழிபெயர்த்தவை ஆகும்.

சுயமுன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக விளங்கும் தத்துவ நூல்களை எழுதிய ஜேம்ஸ் ஆலன் என்ற ஆங்கிலேய எழுத்தாளரின் எழுத்துக்களால் கவரப்பட்ட வ.உ.சி அவரது நூல்களை தமிழில் மொழிபெயர்க்க வேண்டும் என்று விரும்பினார். அவருடைய சிறைக்காலத்தில் அது ஈடேறியது. ஜேம்ஸ் ஆலன் தமது 24ஆம் வயதில் “ஆசிய தீபம்” (The Light of Asia) என்னும் நூலை வாசித்தார். அந்நூலிலிருந்து அவருக்கு மெய்யுணர்வு உண்டாயிற்று. “கீழ்நாட்டாரே மெய்ஞ்ஞானக் கருவூலம்” என்று அவர் கருத்து கொண்டிருந்தார். அவர் இறந்து பிறகு கூட கீழை நாட்டு வழக்கப்படி தனது உடலை தகனம் செய்ய வேண்டும் என அவர் விருப்பத்திற்கேற்ப, அவர் உடல் தகனம் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இவ்வுலகத்தில் மனிதர் அனுபவிக்கும் துன்பங்களே நரகமாகுமென்பதும், இன்பங்களே சுவர்க்கமாகுமென்பதும், இவ்வுலகத்திற்கு அந்நியமாக சுவர்க்க நரகங்கள் இல்லையென்பதும் அவருடைய ஆணித்தரமான கருத்து.

“அகமே புறம்”-” Out from the Heart” என்ற ஜேம்ஸ் ஆலனின் ஆங்கில நூலின் மொழிபெயர்ப்பு இது. இந்த நூலுக்கு சுதேசமித்திரனில் வந்த விளம்பரம்: “இது ஸ்ரீமான் வ.உ சிதம்பரம் பிள்ளையவர்கள் கோயம்புத்தூர் சிறை வீட்டிலிருந்து இயற்றிய இரண்டாவது தமிழ் நூல். இது லெளகிக உன்னத நிலையையும் வைதிக உன்னத பதவியையும்சுலபமாக அடையச் செய்யும் மார்க்கங்களை வரிசைப்படுத்தித் தெளிவாகக் கூறுகிறது. இதனைக் கற்றுணர்ந்து இதில் கூறியுள்ள மார்க்கங்களில் ஒழுகுபவர் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் ஒருங்கே இம்மையில் அடைவரென்பது திண்ணம்”. இது விளம்பரத்துக்காக எழுதப்பட்ட மிகையான வார்த்தை களல்ல. ஒரு சிறிய அளவிலான சரியான மதிப்பீடாகும்.

“இந்நூலைத் தமிழறிந்த ஒவ்வோர் ஆடவரும், பெண்டிரும், சிறுவரும், சிறுமியரும் கற்க வேண்டும் என்பதும், இந்நூல் நமது நாட்டில் நிலவும் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட வேண்டுமென்பதும், இந்நூல் எஞ்ஞான்றும் நிலைபெற்று, நமது நாட்டில் நிலவ வேண்டும் என்பதும் எனது கோரிக்கை”, என்று பாயிரத்தில் வ.உ.சி அவரின் உள்ளக்கிடக் கையை தெரியப்படுத்தி உள்ளார். இந்நூலை மூன்று பாடங்களாகப் பிரித்து, முதல் பாடத்தில் சரீர தீயொழுக்கங்களாக சோம்பலும், மீதூண் (அதிகம் உண்பதும்) எனவும், இரண்டாம் பாடத்தில் நாவின் தீயொழுக்கங்களாக புறங்கூறல், பயனில சொலல், நிந்தித்தல், புன்மொழி பகரல், குதர்க்கம் பேசல் எனவும் குறிப்பிட்டு, மூன்றாவது பாடத்தில் கொள்ள வேண்டிய நல்லொழுக்கங்களாக மனத்திருத்தத்தில் நிஷ்காமிய கருமம், கடமை, அசையாத நடுவு நிலைமை, அளவற்ற பொறுமை எனவும் எடுத்து இயம்பியுள்ளார்.

இந்த நூலைப் பற்றி பாரதியார் தனது மதிப்புரையில் கூறுகிறார்: “அகமே புறம் என்ற பெயருடன் ஸ்ரீமான் பிள்ளையவர்கள் எழுதி வெளியிட்டிருக்கும் புதிய நூல்,ஆலன் என்ற பண்டிதரின் ஆங்கில் நூல் ஒன்றிலிருந்து மொழி பெயர்த்தது. எனினும், பிள்ளையவர்கள் அதிலே பரிபூரணமான தமிழ் மணத்தையேற்றியிருக்கிறார்கள். பிற நாட்டுப் பொன்னிலே நமது முத்திரையை வைத்து நமது பொருளாக்கி விட்டார்கள். இது மொழிபெயர்ப்பென்று பிள்ளையவர்கள் சொல்லாவிடில் நாம் இதனைத் திருக்குறளில் சில பகுதிகளுக்கு விரிவுரையென்று கொண்டிருப்போம். நோய், கீழ்மை, மிடிமை முதலிய தளைகளை இப்பிறப்பில் இன்றே, இப்பொழுதே தொலைத்து நலமெய்த வேண்டுவோர் இந்நூலின் உபதேசங்களைக் கைக்கொள்க. உடலுறுதி, அறிவு, ஆக்கம், தெளிவு, வீடு ஆகிய இன்ப நிலைகளைப் பெற விரும்புவோர்க்கு ஸ்ரீமான் பிள்ளைய வர்கள் நல்ல துணையாக அமைந்துள்ளார்கள். இது நன்று.” இவ்வண்ணமான பாரதியின் மதிப்புரை, வ.உ.சியின் தமிழ் நடையையும் மொழியாக்கச் சிறப்பையும் மிகத் துல்லியமாக எடுத்துரைக்கிறது.

“மனம் போல வாழ்வு” – As a man thinketh என்ற ஜேம்ஸ் ஆலனின் ஆங்கில நூலின் தமிழாக்கம் “எண்ணிய எண்ணியாங் எய்துவ; எண்ணியார் திண்ணியராகப் பெறின்” என்னும் திருக்குறளுடன் பாயிரத்தை ஆரம்பித்திருக்கிறார். “தம்மை ஆக்குபவர் தாமே” என்ற உண்மையை மக்கள் உணருமாறு செய்யக் கருதிய சிறுநூல் “இது முதனூற்குச் சற்றேறக்குறைய சரியான மொழிபெயர்ப்பென்றே சொல்லலாம்; முதனூலில் மேற்கோளாகக் காட்டியுள்ள செய்யுள்கள் எத்தனை அடிகளைக் கொண்டுள்ளனவோ, அத்தனை அடிகளில் தமிழ்ச் செய்யுள்களை அமைத்துள்ளேன். மற்றைய உரை மேற்கோள்களுக்கு மேற்கோள் அடையாளங்கள் இட்டுள்ளேன். ஆயினும், சில இடங்களில் முதலாசிரியரது கருத்துகளை நன்கு விளக்குதற் பொருட்டுச் சிற்சில சொற்களைக் கூட்டியும் குறைத்தும் மொழிபெயர்த்திருக்கிறேன்”, என்று வ.உ.சி பாயிரத் தில் குறித்திருப்பது அவர் எடுத்திருக்கும் சிரத்தையைக்காட்டுகின்றது.

“வலிமைக்கு மார்க்கம்”. “From Poverty to Power” என்றா ஜேம்ஸ் ஆலனின் நூலின் முதல் பாகமான “The part of Prosperity”இன் மொழிபெயர்ப்பே இந்நூல். இதில் துன்பக் கடலைக் கடக்கும் நெறிகள் வலியுறுத்தப் பெறுகின்றன. “உலகம் முழுவதிலும் கவலையால் கலங்காத உயிரே இல்லை. துன்பத்தால் துடிக்காத மனமே இல்லை. துக்கத்தால் துயர் உறாத கண்ணே இல்லை. கவலையும் துன்பமும், துக்கமும் வாழ்க்கையின் மாயைகள் எனலாம். துன்பத்திலிருந்தும், துக்கத்திலிருந்தும் தப்புவதற்குரிய மார்க்கம், துன்பமோ துக்கமோ அவற்றின் தன்மையைச் சரியாக அறிதலேயாகும்.துன்பத்தை வெறுப்பதாலோ கவனியாது இருத்தலினாலோ தப்பிக்க முடியாது. அதனை அறிய வேண்டும். துன்பத்தை நீக்கும்படி கடவுளைப் பிரார்த்திப்பது மட்டும் போதாது, அது எதன் பொருட்டு வந்ததென்றும், எதனை அது கற்பிக்க நிற்கிறதென்றும் அறிதலே அவசியம்” என உணர்த்தும் நூல்.இதில் வழக்கிலுள்ள பல வட மொழி வார்த்தைகளை உபயோகித்திருக்கும் வ.உ.சி, அதற்கு இணையானதமிழ் வார்த்தைகளையும் ஆரம்பித்திலேயே கொடுத்திருக்கிறார்.

“சாந்திக்கு மார்க்கம்”, “From Poverty to Power” என்ற நூலின் இரண்டாம் பாகமான “The way to peace” என்பதனின் மொழியாக்கம் இது. இதில் தியான வலிமை, யானும் கடவுளும், ஆன்ம வலிமையை அடைதல், சுயநலமற்ற அன்பை அனுபவித்தல், கடவுளோடு ஐக்கியமாதல், முனிவர்களும், முனிகளும், இரஷிகர்களும் ஊழியம் புரிதல், பூரண சாந்தியை அடைதல் என்ற பகுதிகளைக் கொண்டுள்ளது.

உரை நூல்கள் :

ஆழ்வார் திருநகரில் வாழ்ந்த இரத்தினக்கவிராயர் ஓலைச்சுவடிகளை அடிப்படையாகக் கொண்டு 1915ஆம் ஆண்டு “இன்னிலை”க்கு விருத்தியுரை எழுதி பதிப்பித்தார். அறப்பால், பொருட்பால், இன்பப்பால்,வீட்டுப்பால் என்ற நான்கு பிரிவுகளைக் கொண்டு 45 பாடல்களால் ஆனது இன்னிலை.வ.உ.சி அவர்கள் இன்னிலையை ஆய்ந்து அதன் சிறப்பினை, திருக்குறளோடு உள்ள ஒப்பினை அக்குவேர் ஆணிவேராகக் காட்டியுள்ளமை போற்றற்குரியது ஆகும். மேலும், “இந்நூலாசிரியர் போன்றதக்க புலவர் திருக்குறளின் பொருள்களையும் சொற்களையும் எடுத்து ஆண்டிருப்பின், இந்நூல் செய்யுள்களதுஅழகு முதலியவை திருக்குறட் செய்யுள்களது அழகு முதலியவற்றிற்கு மிக மேம்பட் டனவாயிருக்கும்” என முடிவுரையில் முடித்திருக்கின்றார்.

வ.உ.சி. தம் வாழ்நாளின் இறுதியில் உரை எழுதியது “சிவஞான போத” சூத்திரங்களுக்காகும். இது பதினான்கு மெய்ப்பொருள் நூல்களில் ஒன்றாகும். மெய்கண்டார் இந்நூலை அருளிச் செய்தார். சிவஞானபோதத்திற்கு முதன் முறையாக சிற்றுரையும் பேருரையும் வழங்கியவர் சிவஞான முனிவர் ஆவார். திருக்குறளுக்கும், சிவஞானபோதத்திற்கும் எளிய உரை காண வேண்டும் என்று வ.உ.சி ஆசைப்பட்டிருந்தார். நாள் ஒன்றிற்கு இரண்டு மணி வீதம் பன்னிரண்டு நாட்களுக்கு சிவஞானபோதத்தை ஆராய்ந்து உரை எழுதியுள்ளார். சிவஞானபோதத்திற்கு எழுந்த உரைகள் பல மதக்கோட்பாடுகளையும் அவற்றின் கண்டனங்களையும் காட்டியுள்ளன. ஆனால், வ.உ.சி அவற்றினைத் தமது உரைநடையில் காட்டாது, எளிய, நேரிய உரையினை எழுதியுள்ளார்.

பாடல் திரட்டு:

இது வ.உ.சி எழுதிய தனிப்பாடல்களின் தொகுப்பாகும். சிறை செல்வதற்கு முன் வ.உ.சி எழுதிய பாடல்கள் இதன் முதல் பகுதியாகவும், சிறையிலிருந்த காலத்தில் எழுதிய பாடல்கள் இரண்டாம் பகுதியாகவும் அமைந்துள்ளன. இதில் மொத்தம் 380 பாடல்கள். அவற்றுள் 100 பாடல்கள் கடவுள் பற்றியும், 100 பாடல்கள் ஒழுக்கம் பற்றியும் அமைந்தவை. எஞ்சிய 180 பாடல்கள் சுற்றத்தார்க்கும் நண்பர்களுக்கும் உறவுமுறைத் தொடர்பில் அமைந்தார்க்கும் எழுதப்பட்டவை.

இந்த தனிப்பாடல் திரட்டிலிருந்து சில கவிதைத் துளிகள்.

சிறைவாழ்க்கையில் ஒரு நாள் கேழ்வரகுக் கூழை உண்ண நேர்ந்த நாள் – வ.உ.சியின் மனத்தில் பின்னோட்டமாகக் கடந்த காலத்தின் இனிய நினைவுகள். தம் மனைவிக்கு எழுதியது இக்கவிதை.

“முக்கனியின் சாறெடுத்து முந்திரிஏ லம் வாதம்
அக்காரம் தேன்பாலோ டட்டூட்டக் – கக்குமென்னா
கேழ்வரகின் கூழுண்டல் கேடறியாய் நின்மலர்த்தாள்
வாழ்வதொக்கும் கற்காட்டில் வந்து”

இப்பாடல் தொகுப்பில் 350 வெண்பாக்கள், 1 தாலாட்டுப் பாடல், 3 விருத்தப்பாடல்கள், 15 கட்டளைகவித்துறைப் பாடல்கள், 11 நிலைமண்டில ஆசிரியப்பாக்கள் அடங்கும்.

சுயசரிதை:

சிறையில் இருக்கும்போது அவருடைய சுயசரிதையை கவிதை வடிவில் எழுதினார். தமிழ் மொழியில் தன்னுடைய சுயசரிதையைக் கவிதை வடிவில் எழுதிய முதல் மனிதர் வ.உ.சி என்றே கூறலாம். பரலி சு.நெல்லையப்பரின் வேண்டுகோளுக்கு இணங்கி வ.உ.சி இதை உருவாக்கினார். இது ஒரு வரலாற்று ஆவணம். அவருடைய குடும்ப வரலாறு; அக்காலச் சிறைக் கொடுமை, கப்பல் வணிகம் ஆகியன இதில் இடம் பெறுகின்றன. இதிலிருந்து சில வரிகள் :

இள வயதில் இவர் விளையாடிய விளையாட்டுகளைப் பற்றி:

“சுவர் மேல் நடத்தல், தொன்மரம் ஏறுதல்,
கவண்கொடுங் கைகொடுங் கல்லெறி பழகுதல்,
கண்ணினைப் பொத்திக் காட்டில் விடுதல்,
எண்ணினைச் சுவாசம் இழுக்காது இயம்பல்,
குதி வட்டாடுதல், கோலி தெறித்தல்,
குதிரை மீது ஊரிதல், கோலேறி நடத்தல்,
காற்றிரி எறிதல், கால்மாறி ஓடுதல்,
மேற்றிரி பந்தின் விளையாட்டுப் பலப்பல
சடுகுடு, கிளியந்தட்டு, பல்லி
நெடுகடும் ஓட்டம் நீர் விளையாட்டம்
கம்பு சுற்றுதல், கத்தி வீசுதல்,
‘தம்’ மினை அடக்கித் தலைகீழ் நடத்தல்,
கசரத்து, பஸ்கி, கலப்புறு குஸ்தி
நிசத்துச் சண்டையில் நிற்கும் முறைகள்
வெடிகொடு சுடுதல், வில்லொடு தெறித்தல்
அடிபிடி சண்டை அளவில் புரிந்தேன்.”

சிறையில் காலில் விலங்கிட்டதினை இங்ஙனம் விவரிக்கிறார்:

“தந்தான் வலதுகால் தண்டைகள் எமக்கே;
அரும்பொன் காலிடல் அபசாரமாதலால்
இரும்பினை அணியுமென் றீந்ததைப் போன்றே”

செக்கிழுத்ததைப் பற்றி:

“திங்கட்கிழமை ஜெயிலர் என் கைத்தோல்
உரிந்ததைப் பார்த்தான் , உடன் அவன் எண்ணெய்
ஆட்டும் செக்கினை மாட்டிற்குப் பதிலாப்
பகலெலாம் வெயிலில் நடந்து தள்ளிட
அனுப்பினன் ; அவனுடைய அன்புதான் என்னே!”
வ.உ.சி வாழ்ந்த வாழ்க்கை என்பது உலகம் அறிந்த ஒரு திறந்த புத்தகம் போன்றது. அதில் ஒளிவு மறைவு என்பதற்கே இடமில்லை. அதற்கு அணி சேர்த்தாற் போன்று அவர் வரைந்த சுயசரிதம் அமைகின்றது. சுயசரிதையில் உண்மையை நிலைநாட்ட உறுதி கொண்டு, அனைத்தும் சொல்லும் பாங்கும், தம்முடைய தவறு, குற்றம், குறை போன்றவற்றையும் மறைக்காமல் எழுதிச் சொல்லும் பாங்கும் உலகோர்க்கு ஓர் எடுத்துக் காட்டாக அமைகின்றது.

பதிப்பு நூல்கள் :

தன்னை “திருக்குறள் அன்பன்’ என்று அறிமுகம் செய்து கொண்டவர் வ.உ.சி. “தமிழர்களெல்லாம் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும். 1330 குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழர் முற்றுந்துறந்த முனிவரேயாயினும், என்னை பெற்ற தந்தையேயாயினும் யான் பெற்ற மக்களேயாயி னும், யான் அவரைப் பூர்த்தியாக மதிப்பதுமில்லை; நேசிப்பதுமில்லை” என வ.உ.சி கூறியுள்ளார். அவர் தம் வாழ்நாள் முழுவதும் திருக்குறளை ஓதுவதும், திருக்குறளைச் சுட்டுவதும் பெருங்கடமையாகக் கொண்டிருந்தார். எங்கெல்லாம் எடுத்தாள முடியுமோ அங்கெல்லாம் குறளடிகளைக் கையாண்டார்.

திருக்குறள் மணக்குடவர் உரையை முதன்முதல் பதிப்பித்தவர் வ.உ.சியே ஆவார். தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், பருதி திருமலையர், மல்லர், கவிப்பெருமாள் என்ற பதின்மர் உரைகளில் அச்சமயத்தில் தமிழ்நாட்டில் பயின்று வந்தது பரிமேலழகருரை ஒன்றே. மற்ற உரைகளையும் படிக்கவேண்டும் என்ற ஆவலில் தமிழ்நூல்கள் இருக்கும் இடங்களில் அவற்றைத் தேடவும், தேடுவிக்கவும் முயன்று, அதன் பலனாக அவருக்குக் கிடைத்தது மணக்குடவருடைய பிரதி ஒன்றே. அது வள்ளுவர் கருத்துகளைத் தெள்ளென விளக்குவதாகவும், இனிய செந்தமிழ் நடையில் எழுதப் பெற்றதாகவும் தோன்றியது. வ.உ.சி க்கு அவ்வுரையில் கண்ட எளிமையும் தம்மனமொத்த கருத்துப் பரிமாற்றலும்அவரை ஈடுபாடு கொள்ள வைத்தது. அதைப் பதிப்பித்தது மட்டுமன்றி, தானும் ஒரு உரை நூல் எழுதினார். அவருடைய உரையில் பரிமேலழகரினின்றும் பல அதிகாரங்களை மாற்றியும், கருத்துக்களில் புது வீச்சினை வரைந்தும் ஒரு புது வழியைக் காட்டியுள்ளார்.
தொல்காப்பியம் இளம்பூரணம் உரையை பதிப்பித்ததும் அவருடைய இலக்கியப் பணிகளில் ஒன்றாகும். எழுத்ததிகாரத்தையும், பொருளதிகாரத்தையும் 1920-ம் ஆண்டு அச்சிடத் தொடங்கி, 1928-ல் எழுத்ததிகாரம் வெளிவந்தது. 1933இல் களவியல், கற்பியல், பொருளியல் பகுதிகள் தனிநூலாக வெளிவந்தன. 1936-ல் எஞ்சிய மெய்ப்பாட்டியல், உவமயியல், செய்யுளியல், மரபியல் பகுதிகள் தனிநூலாக வெளியாயின. ஏடுகளிலும் அச்சேடுகளிலும் பொழிப்புரையாகக் கொடுக்கப்பட்டிருந்த உரைப்பகுதி இவரால் பதவுரையில் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் இடத்திலும் கற்போர் எளிதில் உணருமாறு பொருள் தொடர்பு நோக்கி, நூற்பாவின் சொற்களும், அவற்றின் பொருள் சொற்களும் பிரிக்கப்பட்டு அடையாளங்கள் இட்டுப் பதிக்கப்பட்டுள்ளன.

தமிழறிஞர்:

அவருடைய நூல்கள் மொத்தம்- 16.அவை மொழியாக்கம் -4, உரைநூல்கள்-3, பதிப்புகள்-3, மெய்ஞ்ஞானம்-2, பாடல் திரட்டு-1, சுயசரிதை -1 மற்றும் அரசியல் பெருஞ்சொல் என்று அவருடைய அரசியல் மேடைப்மொழிவுகளின் தொகுப்பு, வ.உ.சி கண்ட பாரதி என்ற மற்றுமொரு தொகுப்பு. வ.உ.சி யின் சுயசரிதையும், வ.உ.சி கண்ட பாரதியும் தொகுத்து பதிக்கப்பட்டது 1946-ல், அவரது மறைவுக்குப் பின். வ.உ.சி யின் இலக்கியப் பணி ஒரு மேடைப்பேச்சாளராக, கட்டுரையாளராக, மொழி பெயர்ப்பாளராக, பதிப்பாளராக நின்று விடாமல் தமிழை, தமிழ் இலக்கியங்களை மற்றவருக்கு போதித்த சிறந்த ஆசிரியராகவும் இருந்தார். சுவாமி சகஜானந் தருக்கு, பிற்காலத்தில் சிதம்பரத்தில் நந்தனார் கழகம், நந்தனார் பாடசாலை ஏற்படுத்திய அவருக்கு தமிழ் இலக்கியங்கள் மற்றும் திருக்குறள், தொல்காப்பியம் ஆகியவற்றைப் போதித்து தமிழ் பயிற்சி ஊட்டினார். ராஜாஜியும் வ.உ.சி யிடம் திருக்குறள் பயின்றதாக சரித்திரம் சொல்லுகிறது. தம்முடைய வாழ்வின் இறுதி நாட்களில் அன்றாடம் தம்முடைய வீட்டில் இலக்கியச் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்திருந்தார். “தூத்துக்குடி சைவசித்தாந்த சபை” என்ற அமைப்பை நிறுவி கம்பன், திருக்குறள், சிவஞானபோதம், தொடர்பான சொற்பொழிவுகளை பல இலக்கிய அறிஞர்களை வரவழைத்து நடத்தி வந்தார்.

தம்முடைய பேச்சாற்றலால் தமிழுக்குப் புதியதொரு கலையை – ‘மேடைத்தமிழ்’ என்னும் துறையை வழங்கினார். தம்முடைய ஆன்மிக எழுத்துகளால், பின்னாளில் பல்கிப் பெருகித் தழைத்த ‘வாழ்வியல் நூல்கள்’ என்ற புதிய துறையைத் தமிழில் தொடங்கி வைத்தார். இன்று மில்லியன் கணக்கில் ‘வாழ்வியல் நூல்கள்’ விற்பனையாகும் நேரத்தில், வ.உ.சியின் தமிழ் மொழியாக்கங்களை நம் தமிழகம் தவறவிட்டது ஏன் எனத் தெரியவில்லை. இவை கருத்துக் கருவூலப் பெட்டகங்கள்; நம் வாழ்வுடன் இணைந்து பொருள் உணர வைப்பவை. இன்று பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் நீதிப்பாட (Moral Science) வகுப்புகளுக்கு பாடநூல்களாக இவைகளை மீண்டும் கொணர்ந்தால் சமூகமும், நாடும் உயரும். ‘அகமே புறம்’ சிறிய அளவிலான நூல்-56 பக்கங்கள்; ‘மனம் போல வாழ்வு’-59 பக்கங்கள்; ‘வலிமைக்கு மார்க்கம்’- 100 பக்கங்கள்; ‘சாந்திக்கு மார்க்கம்’-102 பக்கங்கள். சாத்தியப்பட்டால் இணையதளத்தில் ஏற்றி வ.உ.சி யின் தமிழ்த் தொண்டைப் பரப்ப நம் ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் சார்பில் முயற்சிக்கலாம்.

செல்வமும், செல்வாக்குமாக இருந்த காலத்திலும் (1898-1907), வெஞ்சிறையில் வாடிய காலத்திலும் (1908-1912), எல்லாம் இழந்து வறுமையில் வாடிய காலத்திலும் (1913-1936), தமிழை மறவாது, இலக்கியத் தொண்டைத் தம் வாழ்வின் ஓர் அங்கமாகவே கருதி வாழ்ந்த தன்னலமற்ற தேசபக்தரான, கப்பலோட்டிய தமிழரான, திருக்குறள் அன்பரான வ.உ.சிதம்பரம் பிள்ளையின் தமிழ் தொண்டை நாம் மறவாதிருப்போம், அவரது நூல்களைக் கற்றுத் தேர்வோம்.
****
ஹாங்காங் இலக்கிய வட்டத்தின் இணைய தளம்: www.ilakkyavattam.com

****

suganthi61@yahoo.co.uk

Series Navigation

சுகந்தி பன்னீர் செல்வம்

சுகந்தி பன்னீர் செல்வம்

அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1 தமிழ்த் தென்றல் திரு.வி.க (பகுதி இரண்டு)

This entry is part [part not set] of 36 in the series 20090129_Issue

ப குருநாதன்


இவருடைய தனித்தன்மையிலும் ஒரு தனிச் சிறப்பென்னவென்றால், தமிழ் உரைநடைப் பாங்கில், மொழிநடையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியவர் என்பதாகும். தமிழ் மொழியில் உரைநடைப் பாங்கை, வெகு எளிதாக, மிகச் சரியாக திரு.வி.க-விற்கு முன், திரு.வி.க-விற்குப் பின் என்று நாம் பிரித்துவிடலாம். அயல்மொழிகளின் நெடி வீச, நெடிய சொற்றொடர்களில், கடினமான, புரியாத, பண்டிதச் சொற்களைக் கொண்டு, உரைநடை எழுதப்பட்டு வந்தபோது, எளிய, இனிய தமிழ்ச் சொற்களைக்கொண்டு, சிறு சிறு சொற்றொடர்களை உருவாக்கி, அரிய பெரியக் கருத்துக்களை அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் எழுதிக் காட்டியவர் திரு.வி.க. பாரதியைப் பற்றிப் பேசும்போது, கவிதையைத் தேனாய், பாலாய், பாகாய், அமுதாய்க் கருதி வந்தக் காலத்தில், அதை மனிதனின் அன்றாட, அடிப்படைத் தேவையான குடிநீராய் ஆக்கியவன் என்று சொல்வார்கள். அதுபோலவே, திரு.வி.க தமிழ் உரைநடையைத் தூய, தெளிந்த, குளிர்ந்த, சுவையான குடிநீராய் ஆக்கிக் காட்டியவர் என்பது ஒரு பேருண்மை. தமிழ் மணம் கமழ அவர் உருவாக்கியச் சொற்றொடர்கள், குறியீடுகள், பயன்படுத்திய வார்த்தைகள் மற்றும் மொழிநடை பத்திரிக்கைத் துறையிலும், மற்ற துறைகளிலும் பின்பு பலராலும் பின்பற்றப்பட்டது. கண்ணதாசன், கல்கி போன்றவர்கள் ‘திரு.வி.க-வின் உரைநடைப் பாங்கை அப்படியே நாங்கள் பின்பற்றினோம்,’ என்று அவர்களே குறிப்பிட்டிருக்கின்றனர்.

எழுத்தாளர் வ.ரா. எழுதினார்: ‘தூய தமிழின் இன்னிசை ஒலியைக் கேட்டு ரசிக்கும் எண்ணம் கொண்டவர்கள், திரு.வி.க நடத்தி வந்த ‘தேசபக்தன்’ இதழின் பழைய படிகளைக் கண்டெடுத்துப் படிப்பார்களேயானால், மனப்பூரிப்பு அடைவார்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை. தமிழில் உரைநடையில் ஒலியழகு, பொருளழகு, வர்ணனை அழகு உண்டோ என்பவர்கள் அவரின் எழுத்தைப் படித்தால் தெளிவார்கள்.’

திரு.வி.க சென்னையை அடுத்த, போரூருக்கு அருகிலுள்ள துள்ளம் என்ற சிற்றூரில் 1883-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 26-ஆம் தேதி பிறந்தார். தந்தையார் பெயர் விருத்தாசலம்; தாயார் பெயர் சின்னம்மாள். கல்யாணசுந்தரம் என்று பெற்றோர்களால் பெயரிடப்பட்டார். மூதாதையர்களின் ஊரான திருவாரூரின் நினைவாக ‘திருவாரூர்’ அவர் பெயரில் இணைக்கப்பட்டது. எனவே, அவர் முழுப் பெயர் திருவாரூர் விருத்தாசலம் கல்யாணசுந்தரம். சுருக்கமாக, ‘திரு.வி.க.’ அவர் பெயரில் வந்து ஒட்டிக்கொண்ட ‘திரு’ ஒரு அடைமொழியோ, விளிமொழியோ அல்லது அணிமொழியோ அல்ல. அது ஒரு வெறும் அடையாளமொழிதான். இருப்பினும், அவரிடம் இயற்கையிலே அமைந்திருந்தப் பேரறிவு என்னும் திருவாலும், அதைவிட மேலாக அவரிடமிருந்த மனிதநேயம் என்னும் பெரும் திருவாலும் அவர் பெயரில் வந்து ஒட்டிக்கொண்ட ‘திரு’ திருவடைந்தது., பெருமைக்குரியதாகியது. திருவள்ளுவரைப்போல!

திண்ணைப் பாடமாக ஆரம்பக் கல்வியை தன் தந்தையிடமே கற்றார். கற்றது அரிச்சுவடி முதல் ஓரளவு ஆங்கிலம்வரை. பின்பு, சென்னை இராயப்பேட்டை ஆரியன் பிரைமரி பள்ளியில் இரண்டாம் வகுப்புத் தொடங்கி, வெஸ்லி கல்விச்சாலையில் நான்காம் படிவம் வரைப் படித்தார். படிப்பில் முதல் மாணாக்கனாக விளங்கினார். பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி முதலியவற்றில் கலந்துகொண்டு முதல் பரிசும் பெற்றார். உடல் பருமன் குறைய உட்கொண்ட ஒரு நாட்டு மருந்து, பத்திய முறிவின் காரணமாக ஒத்துக்கொள்ளாமல் போய், முடக்கு நோய்க்கு ஆளாகினார். அதனால், பள்ளிப் படிப்பு பாதியில் கெட்டது. புகழ் பெற்ற அயோத்திதாசப் பண்டிதரிடம் சித்த வைத்தியச் சிகிச்சைப் பெற்று, இரண்டாண்டுகளில் படிப்படியாகக் குணமானார். இதற்கிடையில், குடும்பமும் வறுமைக்கு ஆளானது; பெற்றோரும் நோய் வாய்ப்பட்டனர்.

நான்காண்டு இடைவெளிக்குப் பின் உடல் தேறிய திரு.வி.க மீண்டும் வெஸ்லி பள்ளியில் நான்காம் படிவத்தில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். தன் அறிவாலும் திறமையாலும் மீண்டும் படிப்பில் முதல் மாணாக்கனாக விளங்கினார். அவர் ஐந்தாம் படிவம் படிக்கும்போது அவரின் தமிழாசிரியாரக இருந்தவர் புகழ்பெற்ற யாழ்ப்பாணம் நா. கதிரைவேல் பிள்ளை. பள்ளி இறுதியாண்டு படிக்கும்போது, திரு.வி.க-விற்கு ஏனோ படிப்பில் ஆர்வம் குன்றத் தொடங்கியது. மேலும், ஒரு தேர்வு நாளன்று, தான் பெருமதிப்பு வைத்திருந்த கதிரைவேல் பிள்ளைமேல் தொடரப்பட்ட ஒரு வழக்கில் சான்று கூறச் சென்றதால், தேர்வு எழுதமுடியாமல் போய், படிப்பில் முதல் மாணாக்கனாக விளங்கிய திரு.வி.க, பள்ளி இறுதித் தேர்வில் தோல்வியுற்றார். அதனால் மனம் விரக்தி அடைந்து, சிலகாலம் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவராக இருந்தார். பின், உறவினர் ஒருவரின் வற்புறுத்தலால், வணிகப் பள்ளியில் சேர்ந்து, வணிகக் கணக்கியல் பயின்று தேறினார்.

ஆரம்பத்தில் தன் தந்தையிடமும் அதன்பின் கதிரைவேல் பிள்ளையிடமும் தமிழ் கற்ற திரு.வி.க, பின்பு சுவாமிநாத பண்டிதர், மயிலை மகாவித்துவான் தணிகாசலம், சிதம்பர முதலியார் போன்றோரிடம் திருமறைகள், நீதி நூல்கள், ஞான நூல்கள், இலக்கணம், இலக்கியங்கள் ஆகியவற்றைக் கசடறக் கற்றார். அயோத்தி தாசரிடமிருந்து பெளத்தக் கல்வியையும் கற்றார். எல்லா ஆசிரியர்களுமே அவரிடம் இயற்கையாகவே அமைந்திருந்த அறிவையும் திறமையையும் கண்டு வியந்தனர்; மதித்தனர். ஓவியத்திலும் இசையிலும் கூட அவருக்கு ஆர்வம் இருந்தது. அக்கலைகளைப் பற்றிய ஆய்ந்த, நுட்பமானக் கருத்துக்களை எடுத்துச் சொல்லும் அளவிற்கு அந்த ஆர்வம் அவரிடமிருந்தது. இயற்கை அழகை ஆராதிக்கின்ற மனப்பாங்கு அவரிடம் இயற்கையாகவே அமைந்திருந்தது.

இடையில் குடும்பத்தில் ஏற்பட்டப் பொருளாதார நெருக்கடியினால், சென்னை ஸ்பென்சர் நிறுவனத்தில் அட்டவணைப் பிரிவில் திரு.வி.க பணியில் அமர்ந்தார். ஓய்வு நேரங்களில் படிக்கவும் எழுதவும் செய்தார். அப்போது அவருக்கு நாட்டின் விடுதலைப் போரில், அதன் ஒரு அங்கமான சுதேசி இயக்கத்தில் ஆர்வம் பிறந்து மிகுந்தது. சென்னைக் கடற்கரையில் விபின்சந்திரபாலர் ஆற்றிய, மிகவும் புகழ்பெற்ற சொற்பொழிவு அவரை மிகவும் உலுக்கியது. கல்கத்தாவிலிருந்து அரவிந்தரின் ‘வந்தேமாதரம்’ பத்திரிக்கையை வரவழைத்து, தானும் படித்து, தான் படித்த விடுதலை இயக்கச் செய்திகளை எல்லாம் தன்னுடன் பணியாற்றியவர்களுக்கும் அவர் எடுத்துச் சொல்லி வந்தார். இதைக் கண்டு எரிச்சலுற்ற ஆங்கிலேயருக்குச் சொந்தமான ஸ்பென்சர் நிறுவனத்தின் நிர்வாகம், அவரைக் கூப்பிட்டு எச்சரித்தது. அதனால் வெகுண்டு, தன் பணியைத் துறந்து வெளியேறினார். பின்னர், தன் தமையனாருடன் சேர்ந்து ஒரு அச்சுக்கூடத்தைத் துவக்கினார். அங்கேதான் முதலில் ‘திருமந்திரம்’ பதிப்பிக்கப்பட்டது. அதன்பின், அவரின் சிறப்புக் குறிப்புகளுடன் ‘பெரியபுராண’மும் அங்கே வெளியிடப்பட்டது. இருப்பினும், ஏற்பட்டப் பொருள் இழப்பினால், இரண்டு ஆண்டுகளில் அந்த அச்சுக்கூடம் மூடப்பட்டது.

பின்னர், தான் படித்த வெஸ்லியன் பள்ளியிலேயே ஆறாம் வகுப்பு ஆசிரியராக திரு.வி.க பணியில் சேர்ந்தார். அப்போது அப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பணிபுரிந்த ஜான் இரத்தினம் மிகுந்த தமிழ் ஆர்வம் உள்ளவராக இருந்தார். திரு.வி.க-வின் தமிழ்ப் புலமையைக் கண்டு வியந்து, தலைமையாசிரியர் அவரை வெகுவாக ஆதரித்தார். திரு.வி.க-வின் வருவாயைக் கூட்டும் பொருட்டே, ‘வெஸ்லியன் தொழிற்பயிற்சி நிலையம்’ என்று ஒன்றைத் தொடங்கி, அதில் திரு.வி.க-வை வணிகக் கணக்கியல் கற்பிக்கும் பகுதிநேர ஆசிரியாராகவும் பணியமர்த்தினார். இந்த ஜான் இரத்தினத்தின் மூலம்தான் திரு.வி.க கிறித்துவ மதத்தின் நுட்பமான கோட்பாடுகளை எல்லாம் கேட்டறிந்தார். சிறிது காலத்திற்குப்பின், தன் தகுதியால் திரு.வி.க பள்ளியின் தலைமைத் தமிழாசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார். திருமனமே வேண்டாமென்றிருந்த திரு.வி.க-வை, திருமணத்திற்கு ஒப்புகொள்ள வைத்தவரும் இந்த ஜான் இரத்தினமே. பள்ளியில் தமிழ்ச் சங்கம் நிறுவி, சக ஆசிரியர்களின் ஊதிய மேம்பாட்டிற்கும் வசதிக்கும் உழைத்து, தன் பணியில் மிகவும் பரிமளித்த திரு.வி.க, ஒன்றைரை ஆண்டுகாலமே பள்ளிப் பணியில் இருந்தார்.

1912-ஆம் ஆண்டு, கமலாம்பிகை என்ற மாதரசியை மனைவியாகப் பெற்றார். தன் கணவனிடம் அந்தப் பெண் கேட்டது பொன்னும், மணியும், புடவையும், அழகு சாதனங்களும் அல்ல. கல்வியை மட்டுமே அவரிடம் கேட்டார். திரு.வி.க-வும் தன் மனைவிக்கு கல்வியையும் காப்பியங்களையும் கற்பித்து வந்தார். அவர்களின் இனிய திருமண வாழ்வின் அடையாளமாக, அவர்களுக்கு ஒர் ஆண் மகவு பிறந்து சில நாட்களிலும், பிறகு ஒரு பெண்பிள்ளை பிறந்து ஒராண்டிலும் இறந்தனர். 1918-ல் அவர் மனைவி எலும்புருக்கி நோய்க்கு ஆளாகி எமனுக்கு இரையானார். ஆறு ஆண்டுகளில், திரு.வி.க-வின் இல்வாழ்க்கை தொடங்கி முற்றும் முடிந்துவிட்டது. சுற்றமும் நட்பும் மிகவும் வற்புறுத்தியும், மறுமணம் செய்துகொள்ள திரு.வி.க மிகத் திண்ணமாக மறுத்துவிட்டார்.

மனைவியின் மறைவிற்குப் பிறகு, தான் பார்த்துவந்த தலைமைத் தமிழாசிரியர் பணியைத் துறந்து, பொதுத் தொண்டில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொள்ளத் தொடங்கினார் திரு.வி.க. தன்மீது பெருத்த அன்பு வைத்திருந்த, குறுகிய காலத்திலேயே தன்னைப் பலவகையிலும் பண்படுத்திய தன் மனைவியின் நினைவாக, பெண்ணின் பெருமை இவ்வுலகில் நன்கு விளங்கப் பாடுபடுவதென உறுதிபூண்டு செயலாற்றினார்.

அப்பொழுது திலகரும், அன்னிபெசண்ட் அம்மையாரும் ஒன்றுபட்டு நடத்திவந்த தன்னாட்சிக் கிளர்ச்சி அறப்போர் திரு.வி.க-வை வெகுவாக ஈர்த்தது. அந்நாளில் புகழ்பெற்று விளங்கிய ‘New India’ நாளிதழின் துணையாசிரியராக இருந்த சுப்பராய காமத் என்பவர் திரு.வி.க-வின் நெருங்கிய நண்பர். சுப்பராய காமத்தின் முயற்சியினால் தொடங்கப்பெற்ற ‘தேசபக்தன்’ நாளிதழில், திரு.வி.க ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தினர். தமிழிப் பத்திரிக்கைத் துறையில் ஒரு புதிய, ஒளி வீசும், தெளிவான, சுவையான, எளிதில் புரியும் உரைநடை வழக்கு பிறந்தது. பரலி.சு.நெல்லையப்பர், வெ.சாமிநாத சர்மா போன்றோர் அவரிடம் இந்தப் பத்திரிக்கையில் உதவியாசிரியர்களாகப் பணிபுரிந்தனர். ஆங்கிலேய ஆட்சியின் மீதும், அதிகார வர்க்கத்தின் மீதும் அனல் கக்கும் கருத்துக்களை, தேசபக்தியைத் தூண்டும் சிந்தனைகளை, தேசத் தலைவர்களின் எழுச்சி மிக்கப் பேச்சுக்களை எல்லாம் திரு.வி.க இந்தப் பத்திரிக்கையில் தனக்கேயுரிய, புத்தொளி வீசும், அழகியத் தமிழ்நடையில் எழுதினார். பின்னர், இதழின் உரிமையாளர் மாற, இதழின் அச்சுக்கூடம் அவருக்குத் தெரியாமல் அடமானம் வைக்கப்பட, மனம் வெறுப்படைந்த திரு.வி.க, இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் பத்திரிக்கைப் பொறுப்பைத் துறந்து, அதிலிருந்து வெளியேறினார். பின்னர், வ.வே.சு. ஐயரை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்துகொண்டிருந்த ‘தேசபக்தன்’ நாளிதழ், பின் வாரயிதழாக மாறி, அதன்பின் அடியோடு மறைந்தது.

திரு.வி.க-விடம் மிகவும் அன்பு பூண்டிருந்த ஒருசில தொழிலாளத் தோழர்கள் தாமாகவே முன்வந்து அளித்தப் பொருளுதவியைக் கொண்டு, 1920-இல் அவரால் ஒரு அச்சுக்கூடம் வாங்கப்பட்டது. அந்த அச்சுக்கூடத்திலிருந்து, புகழ்பெற்ற ‘நவசக்தி’ வார இதழ் திரு.வி.க-வை ஆசிரியராகக்கொண்டு வெளிவரத் தொடங்கியது. அவ்விதழில், அரசியல் மட்டுமின்றி, பெண்கள் நலன், சமூகச்சீர்திருத்தம், மொழிச் சிறப்பு, கலையாக்கம், சன்மார்க்க நெறிகலந்த சமதர்மம் எனப் பொதுப்பகுதிகளும் இடம் பெற்றன. வன்மைக்கும், மென்மைக்கும் உள்ள வேற்றுமையே, தேசபக்தன் நாளிதழுக்கும், நவசக்தி வார இதழுக்கும் இருந்தது. இதழ் அடைந்த புகழாலும், பெற்ற வரவேற்பாலும், ஈ.வெ.ரா. பெரியாரின் ஆலோசனை மற்றும் நிதியுதவியாலும், வாரப்பதிப்பாக வந்துகொண்டிருந்த நவசக்தி, கூடுதலாக மாதம் மும்முறைப் பதிப்பாகவும் 1923-ல் வரத்தொடங்கியது.

கல்கி நவசக்தியில் அப்பொழுது துணையாசிரியராகப் பணிபுரிந்து வந்தார். திரு.வி.க விடம் மிகுந்த பக்தியும், பேரன்பும் பூண்டிருந்தார். திரு.வி.க-வும் கல்கியிடம் பேரன்பு கொண்டிருந்தார். கல்கியைப் பற்றி தன் நூல்களில் குறிப்பிடும் போதெல்லாம், ‘தம்பி’ என்றே அன்போடு விளித்து திரு.வி.க குறிப்பிடுகின்றார். 1939-ல் அறிவிக்கப்பட்ட போர்கால அவசரச் சட்டங்களினால், பல பத்திரிக்கைகள் முடக்கப்பட்டன. நவசக்தியும் அம்முடக்கலுக்கு ஆளாகியது. 1941-ல் தான் பார்த்துவந்த ஆசிரியர் பொறுப்பை மற்றொருவரிடம் விட்டுவிட்டு, பத்திரிக்கையை விட்டு விலகி, திரு.வி.க, முழுநேர சமரச சன்மார்க்கத் தொண்டில் ஈடுபடத் தொடங்கினார். தேசப்பக்தியைத் தூண்டுவதற்கு பாரதிக்கு இருந்தது அவரின் கவிதையும் பாட்டும். நம் திரு.வி.க-விற்கு இருந்ததோ, அவருடைய தெளிந்த, எளிய, அழகிய, எழுச்சியூட்டும் உரைநடை.

நாட்டுப்பற்று மிக்கவரான திரு.வி.க, தேசீய அரசியலில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டவர். காந்தியடிகளைச் சந்தித்து அவருடன் பழகியிருக்கிறார். காந்தியடிகளின் வேண்டுகோளின்படி, அவருடைய ஆங்கில உரைகள் சிலவற்றை தமிழில் திரு.வி.க மொழி பெயர்த்திருக்கிறார். திலகரைச் சந்த்தித்து அவருடனும் பழகியிருக்கிறார். பாரதியின் சமகாலத்தவர், ஆதலால் அவருடனும் பழகி, அவருடைய பாடல்களுக்கு ஒரு பெரிய ரசிகராக இருந்திருக்கிறார். வ.உ.சி, ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி முதலியோரின் நண்பராய் இருந்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் உறுப்பினாரய் இருந்து, பல கூட்டங்களக்குத் தலைமை தாங்கி நடத்திக் கொடுத்திருக்கிறார். இருப்பினும், மனிதநேயமும் மக்கள் நலனனும் அவரின் அரசியல் கொள்கைகளாக இருந்திருக்கின்றன. அவர் கூறினார்: ‘நான் சாதி, மத, நிற, மொழி, நாடு முதலிய வேறுபாடுகளைக் கடந்தவன். பொதுமக்களின் சுகவாழ்வு மட்டுமே எனது குறிக்கோள். என்னுடைய அரசியலும் அதுவே. யார் என் கருத்துக்கு, நோக்கத்திற்கு உடன்படுகிறார்களோ அவர் கட்சியே என் கட்சி.’ திரு.வி.க-வின் இத்தகைய அணுகுமுறைதான் எதிர்த்தரப்பிலிருந்த, மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்ற அறிஞர் அண்ணா அவர்களை மிகவும் கவர்ந்தது. ‘அரசியலில் புயலாகவும், தமிழில் தென்றலாகவும் இருப்பவர் நம் திரு.வி.க. நூல்களிலே நுண்ணிய உரைகளை அழகிய தமிழில் தீட்டியவர் நம் திரு.வி.க,’ என்று அறிஞர் அண்ணா உரிமையுடனும், பெருமையுடனும், பெருமிதத்துடனும் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்நியரின் பிடியிலிருந்து தன் தாய் நாட்டையும், அந்நியமொழிகளின் ஆதிக்கத்திலிருந்து தன் தாய்மொழியையும் விடுவிக்கத் தொடர்ந்து போராடிய இப்பெருந்தகையின் ஊனுடம்பு 1953-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17-ஆம் நாள் மண்ணுலகைவிட்டு மறைந்தது. அவர் சுவாசித்தக் காற்று அன்று நின்றது. ஆனாலும், அவரிடமிருந்துப் பிறந்து, சுகமாக வீசிவந்த தென்றல் நின்றுவிடவில்லை. தொடர்ந்து இன்றும் வீசிவருகிறது – மற்ற காற்றலைகளுக்கு எப்படி வீசுவது, எப்படி வருடுவது, எப்படித் தீண்டுவது என்று நாளும் கற்றுத் தந்தபடியே!

1983-ஆம் ஆண்டு அவருடைய நூற்றாண்டு விழா தமிழகமெங்கும் மிகச் சிறப்பாக தமிழ்நாடு அரசாலும் மற்ற தமிழ் அமைப்புகளாலும் கொண்டாடப்பட்டது. கட்டிடங்களுக்கும், பாலங்களுக்கும், நகர்களுக்கும், பூங்காக்களுக்கும் அவர் பெயர் வைக்கப்பட்டது. அதன்பின் வழக்கம் போல் எல்லாம் மறக்கப்பட்டன. நினைப்பதும் ஏத்துவதும், விழாவோடு விடைபெற்றன.

திரு.வி.க ஒரு தலைசிறந்த மேடைப் பேச்சாளர். மடைதிறந்த வெள்ளமென, உணர்ச்சியும், எழுச்சியும் எழுப்பும், கருத்தாழமுள்ள பல உரைகளை அவர் நிகழ்த்தியிருக்கிறார். அரசியல், சமயம், சமூகம் என்ற பல்வேறு தலைப்புகளில், பல இடங்களில் அவர் நிகழ்த்திய உரைகள் அவை. கட்டிப்போடுகின்ற பேச்சாற்றல் கொண்டவர் அவர். கேட்பாரைப் பிணிக்கும் தன்மையுடன், கேளாரையும் கேட்க விரும்ப வைக்கும் வகையினதாய், மாற்றாரையும் மயக்கி தன்வசம் ஈர்க்கும் வண்ணம் அமைந்தவை அவருடைய மேடைப் பேச்சுக்கள். அவருள் சுடர்விட்டுத் திகழ்ந்த உண்மை, நேர்மை, ஒழுக்கம், நியாயம், தியாகம், கனிவு, பனிவு, துணிவு அவருடைய எழுத்துக்கும் பேச்சுக்கும் ஓளியும் உறமும் அளித்தன. அந்தக் காலத்தில் மேடைப் பேச்சில் ஒரு சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த அறிஞர் அண்ணாவையே மிகவும் கவர்ந்தப் பேச்சாளர் திரு.வி.க என்றால், அவருடையப் பேச்சாற்றலுக்கு வேறு என்ன சான்று வேண்டும்?

மொழிக் காவலராகவும் விளங்கிய அவர், ‘தாய்மொழியின் வாழ்விழந்தால் தரைமோதி மாய்தல் நலம், போய்க் கடலில் விழுதல் நலம், பொலிதருமோ உடலுயிரே’ என்று பொங்கி முழங்கிய அவர், தாய்மொழி வழிக் கல்வியையும், தமிழர்கள் பல மொழிகளைப் பயில வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தி வந்திருக்கின்றார். உலகில் பல மொழிகளில் இருக்கின்ற அறிவியல் மற்றும் கலைச்சொற்களைத் தமிழில் மொழிபெயர்த்தாலே அது தமிழுக்குச் செய்கின்ற பெரும் தொண்டாக இருக்கும் என்றும் அவர் கருதினார். தமிழ் மொழி மற்றும் தமிழ்க் கலை, இலக்கியங்களை உலகம் முழுவதும் பரப்புதல் வேண்டும் என்பது அவரின் அவாவாக இருந்தது. சென்ற நூற்றாண்டில், தமிழ் மொழி வாழ, வளம் பெற உழைத்தவர்களில் திரு.வி.க-விற்கு என்று ஒரு தனியிடம் எப்போதும் உண்டு.

வாழ்க்கை வரலாறு, உரை நூல்கள், அரசியல் நூல்கள், சமய நூல்கள், சமயப் பாடல்கள் என்று 56 நூல்களை நம் திரு.வி.க படைத்துள்ளார். ‘பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை,’ ‘தமிழ்த் தென்றல் அல்லது தலைமைப் பொலிவு,’ ‘முருகன் அல்லது அழகு,’ ‘பரம்பொருள் அல்லது வாழ்க்கைவழி,’ ‘வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கைப் பிதற்றல்’ என்று இரண்டு, இரண்டு தலைப்புகளைத் தன் நூல்களுக்குத் தருவது அவரின் தனிச் சிறப்பு. அந்த நூல்களின் உட்பொருள் அந்த இரண்டு தலைப்புகளுக்குமே பொருத்தமாக இருப்பதை அந்த நூல்களைப் படிப்போர் காணலாம். அவர் எழுதிய நூல்களில் ‘முருகன் அல்லது அழகு’ மற்றும் ‘தமிழ்க்கலை’ என்ற அவரின் இரண்டு நூல்களை மட்டுமே நான் முழுதும் படித்திருக்கிறேன். அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஓரளவிற்குப் படித்திருக்கின்றேன். எல்லாமே அருமையான நூல்கள். மேலும், மேலும் படிக்கத் தூண்டுவன அவை. ஒரு தாய் எப்படி தன் சிறு குழந்தைக்கு அருகில் அமர்ந்து ஒரு புத்தகத்தை வரிக்குவரி அந்தக் குழந்தைக்குப் படித்துக் காட்டுவாளோ அதுபோல, அவர் நூல்களைப் படிக்கும் போது அவரே நம் அருகிலிருந்து, நமக்கு அவர் எழுத்துக்களைப் படித்துக் காட்டுவது போன்ற ஓர் உணர்வு ஏற்படுவது தவிர்க்க இயலாதது என்பது என் அனுபவம். அவர் பார்வையில் இயற்கையே கடவுள். அக்கருத்தை மிக அழகா முன் வைக்கிறார் ‘முருகன் அல்லது அழகு’ என்ற நூலில். 1908-ல் தொடங்கி, 1953-ல் தான் இறக்கும் வரை தொடர்ந்து இந்த 56 நூல்களையும் ஒன்றின்பின் ஒன்றாக திரு.வி.க எழுதி வந்திருக்கிறார்.

தமிழகத்தின் தொழிற்சங்க வரலாற்றிலும் திரு.வி.க மிகவும் குறிப்பிடத்தக்கவர். முதற் தொழிற்சங்கத்தை 1918-ல் தமிழகத்தில் தொடங்கி, அதன்பின் தலைமைத் தொழிற்சங்கத்தை 1920-ல் அமைத்து, அதன் தலைவராகவும் இருந்து பரிமளித்தார். தன் தொண்டாலும் எழுத்தாலும் பேச்சாலும் முன்மாதிரி நன்னடத்தையாலும், தொழிலாளர்களிடையே விழிப்புணர்ச்சியும் எழுச்சியும் ஏற்படுத்தி, அவர்களிடையே ஒற்றுமை, தோழமை மற்றும் தொண்டு மனப்பான்மையை வளர்த்து, அவர்களை வழிநடத்தி, அவர்களுக்காகத் தொடர்ந்து போராடி, கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தொழிற்சங்க இயக்கத்தில் அரும்பணியாற்றிப் பெரும் புகழ் அடைந்தவர் திரு.வி.க.

தன் மனைவி தன்னைவிட அறிவாளி என்று உண்மையாகவே கருதினார் திரு.வி.க. திருக்குறள் படித்தும் அதன்படி நடக்காத தன்னைவிட, அதைப் படிக்காமலேயே அதன் நெறியில் நின்ற தன் மனைவியை தன் நூல்களில் திரு.வி.க வியந்து பாராட்டுகிறார். தன் மனைவி தன்னை நல்வழிப்படுத்தியதற்கு தன் நூல்களில் அவர் நன்றி பாராட்டுகிறார். திரு.வி.க பெண்கள் நலனில் பெரிதும் அக்கறை செலுத்தினார். அவர்களின் நலனுக்காகத் தொடர்ந்து உழைத்தார். மாதர் நலச் சங்கங்கள், விதவைகள் நலச் சங்கங்கள் நிறுவுவதில் துணை நின்றார். சீர்திருத்தத் திருமணங்களை ஆதிரித்து எழுதி, பேசி, நடத்தியும் வைத்தார். மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் கொண்டுவந்த தேவரடியார்கள் ஒழிப்புச் சட்ட முன்வடிவிற்குத் துணை நின்று, அவர் ஏற்பாடு செய்தக் கூட்டங்களில் பேசி, அதைப் பற்றி தன் பத்திரிக்கையில் விரிவாக எழுதி, அதற்குப் பேராதரவு ஈட்டித் தந்தார். பெண்களுக்குத் தலைமைப் பொறுப்பு தரப்படல் வேண்டும் என்று வாதாடி, போராடி, அதை வாங்கியும் தந்தவர்தான் திரு.வி.க.

மதம் மாறாமலே ஒரு மதத்தைச் சார்ந்தவர் இன்னொரு மதத்தைச் சார்ந்தவரை மணக்கும் உரிமை வேண்டும் என்று எழுதினார் திரு.வி.க. ‘சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்’ என்று முழங்கி, இளைஞர்கள் சாதி ஒழிப்பில் ஈடுபட அறிவுரையும், வழிகாட்டலும் வழங்கிவந்தார்.

கல்விச் சீர்திருத்ததிற்காகவும் தொடர்ந்து பாடுபட்டு வந்தவர் அவர். ‘கல்வி என்பது அறிவுடன் ஒன்றி வாழ்வில் கலப்பதாக இருத்தல் வேண்டும். கல்வியறிவின் பலன் அக ஒழுக்கம், புறத் தூய்மை ஆகும். நமது நாட்டு அற ஒழுக்கங்களையும், மேலை நாடுகளின் சுகாதார முறைகளையும் ஒன்றுபடுத்தி, இக்கால வாழ்வுக்கேற்ற ஒரு கல்வி முறையை வளர்த்துப் பயன்படுத்துதல் வேண்டும்,’ என்பது அவர் கருத்து.

ஒரு எழுத்தாளன் என்பவன் தன்னுள் அடிக்கடி உள்முகப் பயணம் செய்து, தன்னைத்தானே சுய விமர்சனத்திற்கு ஆளாக்கிக்கொண்டு, பாம்பு சட்டையை உரித்துக்கொள்வதுபோல் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றார் திரு.வி.க. ஒரு சன்மார்க்கச் சமயவாதியாவகும் இருந்த அவர், ஒரு சமயத்தின் உண்மை இலக்கு ஒரு மனிதனை வீடுபேறு அடைவதற்கு ஆற்றுப்படுத்துவதல்ல. ஒரு சமயத்தின் தேவை சமுதாயத்தின் நலனுக்காக, பயனுக்காக என்றொரு நுட்பமானக் கருத்தையும் வலியுறுத்தி வந்தார். தனிமனித புற, அக ஒழுக்கத்தை தன் வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் உறுதியாகக் கடைப்பிடித்தவர் திரு.வி.க. எளிமையாக உடலோம்புதலையும் அவர் முறையாகப் பயின்று வந்தார். முறையாகப் படித்து, பத்தாவது வகுப்பைக் கூடத் தாண்டாத இப்பெருந்தகை, கல்லாத கல்வியில்லை, பட்டுப் பெறாதப் பட்டறிவும் இல்லை என்பதை அவருடைய எழுத்தும் பேச்சும் செயலும் விளக்கி நிற்கின்றன என்று அவரை ஆய்ந்த அறிஞர்கள் குறிப்பிட்டு வியக்கின்றனர்.

திரு.வி.க வெளிப்படையான, எந்தவிதப் பாசாங்கும் பகட்டும் இல்லாத, கள்ளமற்ற எளிய வாழ்க்கையை வாழ்ந்தவர். அவருடை வாழ்க்கைக்குறிப்பு இன்னொரு ‘சத்திய சோதனை’ என்று நாம் உறுதியாகச் சொல்லலாம். தொண்டாற்ற வசதி தேவையில்லை என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அவர் எழுதினார்: ‘நான் ஒன்றுமில்லாதவன். வாடகை வீட்டில் வசிப்பவன். எனினும், என்னால் இயன்ற அளவு நாட்டுத் தொண்டு புரிகிறேன். செயல், தொண்டானால் மனம் வசதியை நாடாது. அதற்குத் தொண்டே பெரும் செல்வமாகும்.’ வசதியும் வாய்ப்பும் பதவியும் அவரைத் தேடி வந்தபோது, அவைகளை வேண்டாமென்று மறுத்தவர் அவர். பதவிகளுக்கு ஒருபோதும் ஆசைப்படாமல் இருந்தவர். தான் வகித்துவந்தப் பதவிகளிலிருந்தும் தொண்டு செய்ய அவைகளில் வாய்ப்பில்லாதபோதும், தன்னைவிடச் சிறந்தவர்கள் அப்பதவிகளுக்குத் தயாராக இருந்தபோதும், தானே முழுமனத்துடன் அப்பதவிகளை மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து விலகியவர்.

பல புரட்சிகரமானக் கருத்துக்களை அச்சமின்றி எழுதி, அவைகளுக்காகப் போராடி, அவைகளில் பலவற்றை செயல்படுத்தியும், சாதித்தும் காட்டியவர்தான் திரு.வி.க. அவர் ஆற்றியத் தொண்டுகளைப் பற்றி மட்டுமே நாம் மணிக்கணக்காக, நாட்கணக்காகப் பேசிக்கொண்டே போகலாம். சொல்லப்போனால், அவருடைய பன்முகங்களில் ஒவ்வொரு முகமாக நாம் தனித்தனியாக எடுத்துக்கொண்டு, அதைப் பற்றி நெடுநேரம் பேசிப் பெருமிதமடையலாம். அவ்வளவு இருக்கின்றன!

திரு.வி.க-வின் காலத்தில் அவருடைய பிள்ளைபோல் வாழ்ந்தவர் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் கூறுகின்றார்: ‘திரு.வி.க. அவர்கள் ஒரு பெரிய ஆலமரம் போன்றவர். மற்ற அறிஞர்கள், சமயவாதிகள், இலக்கியவாதிகள்போல் தன்னை ஒரு சிறிய கூட்டுக்குள்ளே அடைத்துக்கொள்ளாமல், தன்னை ஒரு சிறிய வட்டத்திற்குள்ளே அடக்கிக்கொள்ளாமல், அனைத்திலும் ஈடுபட்டு, அனைத்திலும் தன் தனிச்சிறப்பைப் பதித்து, அனைவரிடமும் அன்புடன் பழகி, அனைவரின் மதிற்பிற்கும், மரியாதைக்கும் உரியவராயிருந்து மறைந்தார்.’

திரு.வி.க-வின் அழகு உரைநடை வழக்கிற்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள்:

‘தொண்டு இருவகை. ஒன்று பயன் கருதுவது. மற்றொன்று பயன் கருதாதது. முன்னையது இல்வாழ்க்கையில் தலைப்படுவதற்கு முன்னர் நிகழ்வது. பின்னது அவ்வாழ்க்கையில் தலைப்பட்ட பின்னர் படிப்படியாக நிகழ்வது.’

‘கடவுளின் கடந்த நிலையை நான் விழைகின்றேனில்லை; கலந்த நிலையையே விழைகின்றேன். ஏன்? கடந்த நிலை பிறவி வேரை அறுப்பது. பிறவி வேர் அறுந்தால் பின் தொண்டுக்கு அங்கே இடமில்லாமல் போகும். எனக்குத் தொண்டு – சன்மார்க்கத் தொண்டு தேவை. அதற்கென்று பல பிறவிகள் எடுத்தாலும் எனது விடாய் தணியாது; வேட்கை குறையாது.’

என்ன ஓர் ஆழ்ந்த, நுண்ணியப் பொருளுடைய அழகிய உரைநடை வழக்கு! ஒரு சொற்றொடருக்கு 3 முதல் 5 சொற்கள் மட்டுமே உடைய உரைநடை. ஒவ்வொரு சொற்றொடரிலும் வஞ்சிப்பாவைப் போல் பயன்படுத்தப்படும் சொற்களிலே மிகவும் சிக்கனம் காணப்படுகிறது. திருக்குறளைப் போல் அளவில் சுருக்கம்; அரும்பொருளின் பெருக்கம், இவைகளே திரு.வி.க-வின் உரைநடைக்கு உரிய விளக்கம்.

தெள்ளுதமிழ், தெளிந்த நீரோடையின் அழகு, தென்றலின் சுகம், கவிதையின் சுருக்கம், கவின்சுவை, கருத்துச் செறிவு – இவைகளே அவரின் உரைநடையில் அணிவகுப்பன. ஒரு அணி மற்றொன்றை விஞ்சுவது கூடுதல் இன்பம் தருவதாகும்.

திரு.வி.க-வின் நூற்றாண்டு விழாவில் பாவலேறு பெருஞ்சித்திரானார் அவர் மீது இயற்றிப் பாடிய ஒரு கவிதையின் ஒருசில அடிகள் திரு.வி.க-வை மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

‘குணமேவிய ஒரு கொள்கையின் குன்றம்.
குற்றமில்லாதொரு வாழ்க்கையின் கூறு.
கையைக் கறை செய்யாது, உடல் நலம் கருதாது,
காலம் முழுதுமே கடமைகள் ஆற்றிட,
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த நல் தெய்வம்!
பணியுமாம் பெருமை எனும் பைந்தமிழ்க்குப்
பயில்வுரை எழுதிப் பதிப்புரை தந்தவர்!
தணியாத் தமிழ்விடாய், தளர்வுறாக் கால்கள்!
தாழ்விலாச் செய்கை! தகைவுசேர் பயனுரை!
அணியாம் தமிழ்க்கெனும் அருமை நூல்கள்
அயர்வுறாது ஏழையர்க்கு அலைந்து திரிந்து
மணியும் நேரமும் காலமும் பாராது
மக்கட்கு உழைத்த மணவழகனாரே! வாழ்க!!’

இங்கு மக்கள் என்பது, திரு.வி.க தான் தொண்டு செய்வதற்காக தானே ஏற்றுக்கொண்டப் பொதுமக்களை. இன்றைக்கு இருப்பதுபோல், இணையின் மூலமும் துணையின் மூலமும் ஒருவர் ஈன்றெடுத்த தன் மக்களையல்ல. திரு.வி.க இன்று இருந்திருந்தால், அவருக்கு எந்தப் பட்டம் கிடைக்கிறதோ, இல்லையோ, ‘பிழைக்கத் தெரியாத பைத்தியம்’ என்ற பட்டம் நிச்சயம் கிடைத்திருக்கும்!

திரு.வி.க அவர்களின் வாழ்க்கை நம் யாவர்க்கும் ஒரு நல்ல பாடம். அவர் ஆற்றிய அளப்பறிய பணி நமக்கு ஊக்கமும் ஊட்டமும் உற்சாகமும் தருவது. அவர் எழுதிய நூல்கள் அவர் தமிழுக்கும், தமிழர்களுக்கும் தந்த நற்கொடை. அவர் கடைப்பிடித்த, கற்பித்த உரைநடை வழக்கு, தமிழன்னைக்கு அவர் சாத்திய அணி. வரலாறு படைத்து, வரலாறு ஆகி, வரலாற்றுக்கே அணிசெய்த நம் திரு.வி.க வணங்கி, வாழ்த்தத் தக்கவர்; நம் வழிகாட்டியாகக் கொள்ளத் தக்கவர்.

இப்படியெல்லாம் இருந்தும், அவர் இன்று தமிழகத்தில் பெரிதும் பேசப்பாடாது இருப்பது, தமிழகத்தின் பேரிழப்பே, தமிழர்களின் அவமானமேயன்றி, அவர் புகழுக்கு ஒரு பங்கமோ, பாதிப்போ சற்றுமில்லை.

மேலே கொடுக்கப்பட்டிருப்பன திரு.வி.க-விற்கு ஒரு சிறிய அறிமுகம் மட்டுமே. இங்குத் தரப்பட்டிருப்பன அவரின் தமிழ்ச்சாலைக்குரிய விலாசம் மட்டுமே. இங்குச் சுட்டப்பட்டிருப்பது அவர் தவச்சாலைக்குச் செல்கின்ற வழியை மட்டுமே. தமிழ்த் தென்றல் சிறிது வீச, சற்றே கதவு திறக்கப்பட்டிருகிறது. தென்றல் முழுதும் உள்ளே வர, அதை முழுதும் சுகிக்க, அவரவரின் கதவை அவரவரே முயன்று, முனைந்து முழுதும் திறந்திட வேண்டும் என்பதே என்னால் இங்கே வைக்கப்படும் வேண்டுகோள்.

Series Navigation

ப குருநாதன்

ப குருநாதன்

அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1 தமிழ்த் தென்றல் திரு.வி.க (பகுதி ஒன்று)

This entry is part [part not set] of 36 in the series 20090129_Issue

ப குருநாதன்


ஹாங்காங் இலக்கிய வட்டம், அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்: 1
தமிழ்த் தென்றல் திரு.வி.க.

ப குருநாதன்

(2008ஆம்ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள் என்ற பொருளில் ஹாங்காங் இலக்கிய வட்டம் நடத்திய கூட்டத்தில் திரு. ப.குருநாதன் பேசியதின் சுருக்கம்.)

நான் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும்போது ‘Ideas that Moved the World’ என்ற ஒரு அருமையான ஆங்கில நூலைப் படிக்கின்ற வாய்ப்பினைப் பெற்றேன். கடந்த பல நூற்றாண்டுகளில் தம்தம் மெய்ஞான தத்துவங்களாலும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளாலும் இப்பூவுலகை முன்னேற்றப் பாதையில் இட்டுச் சென்ற பெரிய மேதைகளைப் பற்றிய புத்தகமது. அதன்பிறகு, சில ஆண்டுகளுக்கு முன்னால், கடந்த 20-ஆம் நூற்றாண்டில் மனிதகுலத்திற்கு அளப்பரிய தொண்டாற்றிய, கொடை நல்கிய மிகப் பெரிய மேதைகளைப் பற்றிய ஒரு கட்டுரையையும் வாசிக்கின்ற வாய்ப்பும் எனக்குக் கிட்டியது. இந்த மேதைகளின் வாழ்க்கை வரலாறுகளை எல்லாம் சற்று கூர்ந்து நோக்கி ஒப்பிட்டால், அவர்கள் எல்லாம் தங்களின் உள்ளத்தின் உந்துதலினாலும், சுய முயற்சியாலும், எண்ணற்ற இடர்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் இடையே, இந்த உலகம் உயர்வுற உழைத்தவர்கள்; பங்களித்தவர்கள் என்பது தெளிவாகும். இதில் மிகப் பெரும்பான்மையானவர்களுக்கு எந்த ஒரு அரசோ அல்லது ஒரு அரசு சார்ந்த அமைப்போ அல்லது ஒரு நிறுவனமோ எந்த உதவியும் செய்யவில்லை; அவர்களுக்கு ஓரளவேனும் துணை நிற்கவில்லை என்பதும் புலப்படும். மாறாக, அந்த மேதைகளுக்குக் கிடைத்தெல்லாம் தொல்லைகளும் இடையூறுகளும் மட்டுமே.

அதுபோலவே, கடந்த 200 வருடங்களில் தமிழ்நாட்டில் தமிழ் வாழ்ந்தது, வளர்ந்தது, செழித்தது, செப்பமடைந்தது என்றால் அதற்குக் காரணமானவர்கள் பெரும்பாலும் தனி மனிதர்களே. அவர்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளும் இன்னல்களும் எதிர்ப்பும் ஏமாற்றங்களும் ஏராளம். அவர்கள் எதிர்கொண்ட ஏளனமும் மிகவும் தாராளம். அவர்களுக்கும் ஒர் அரசோ அல்லது அரசு சார்ந்த அமைப்புகளோ, மற்ற நிறுவனங்களோ பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. சமயம் சார்ந்த தமிழ் ஒருசில சமைய அமைப்புகளின் உதவியினால் ஓரளவு வளர்ந்தது, வாழ்ந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், தமிழ் ஓங்க ஓய்வின்றி உழைத்தப் பெரியோர்களே, நண்பர் திரு. மு. இராமனாதன் ஹாங்காங் இலக்கிய வட்ட உறுபினர்களுக்கு அனுபிய மின்னஞ்சலில் காணப்படுபவர்கள். தன்முனைப்பு, தன்முயற்சி, தன்னார்வம், தன்நிதி, தன்உழைப்பு மட்டுமே துணையாய்க் கொண்டு தமிழ் வாழ, வளர, தளராது உழைத்துச் சாதித்த பெருமைக்குரிய பெரியோர்கள் அவர்கள். எந்த நிறுவனத்தின் துணையுமின்றி, தங்கள் பங்களிப்பால், தங்கள் செயல்களால், தங்கள் தொண்டால், தங்கள் படைப்பால் தாங்களே ஒரு நிறுவனாமாகிப் (institution) போந்த பெரியோர்களே அவர்கள்.

அவர்களின் பெயர்ப் பட்டியலில், ஒவ்வொருவரின் பெயருக்குப் பின்னால் அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டிருந்த, அவரவர் தோன்றி மறைந்த ஆண்டுகள், அவரவர் வாழ்ந்த வருடங்களின் எண்ணிக்கையைக் குறிப்பன. சாதாரணமானவர்களுக்கு அவர்களின் தோற்றமும் மறைவும் வெறும் வாழ்க்கைக் குறிப்பு. ஆனால், இப்பெரியோர்கள் வாழ்ந்தது வெறும் வாழ்க்கையல்ல. அவர்களின் தோற்றமும் மறைவும் வெறும் வாழ்க்கைக்குறிப்புகளும் அல்ல. அவைகள் எல்லாம் வரலாறுகள்! எவன் ஒருவன் தான் வாழ்ந்த காலத்தில் தன்னலம் கருதாது தன் மொழியை, தன் மக்களை, தன் கலையை அல்லது தன் கலாச்சாரத்தை தன் தோளிலேற்றிச் சற்றாவது உயர்த்துகிறானோ அல்லது உயர்த்த உண்மையிலேயே எத்தனிக்கின்றானோ, அவன் வாழ்க்கை வரலாறு ஆகிறது. அத்தகைய வரலாறு படைத்த இப்பெரியோர்கள் தமிழகத்தில் அதிகம் கற்றோராலேயே கூடப் பெரிதும் பேசப்படாதிருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு., தமிழர்களின் வெட்கக்கேடு. பகட்டுக்கும், பசப்பிற்கும், பாசாங்கிற்கும் தமிழன் பறிபோவதும், பலியாவதும் அவன் தலையெழுத்தோ என்று கூட சில சமயம் எனக்கு எண்ணத் தோன்றுகிறது.

வங்காளத்தில் தாகூரைப் பற்றித் தெரியாதவர்கள், கேரளத்தில் வள்ளத்தோளை அறியாதவர்கள் மிகக் குறைவானவர்களே. ஆனால், தமிழகத்தில் பாரதியைப் பற்றி சரியாக அறியாதவர்கள், அவர் பாடல்களில் ஒன்றைக் கூட முழுதும் படிக்காதவர்கள் அதிகம்! திருவள்ளுவரைப் பற்றி சரியாகத் தெரியாதவர்கள், ஒரு திருக்குறளாவது முழுமையாகத் தெரியாதவர்கள் மிக அதிகம்! நான் சொல்வது மெத்தப் படித்தவர்களையும் சேர்த்துத்தான்! இந்நிலையில், இந்தப் பட்டியலிலேக் காணப்படும் தமிழ்ப் பெரியோர்கள் பெரும்பாலோர் அதிகம் அறியப்படாமல் அல்லது பேசப்படாமல் இருப்பதில் என்ன வியப்பு இருக்கமுடியும்?

ஆனால், பட்டியலில் காணப்படும் இந்தப் பெரியோர்கள் எல்லோரும் மாரியை ஒத்தவர்கள். பயன் கருதாது, தன்னலமின்றி, தன்னைத்தானே வருத்திக்கொண்டு, காரியமே கண்ணாகி இருந்து, தமிழ்த் தொண்டு செய்தவர்கள்; அரும் படைப்புகளைத் தந்தவர்கள். பிற்காலத்திலே நாம் பேசப்படப் போகின்றோம், பாராட்டப்படப் போகின்றோம் என்றெல்லாம் கருதியொன்றும் அவர்கள் தங்கள் செயற்கரிய செயல்களை ஆற்றவில்லை. நம் இலக்கிய வட்டம் அவர்களில் ஒரு சிலரைப் பற்றியாவது ஓரளவாவது பேச, சிந்திக்க ஏற்பாடு செய்தமைக்கு வட்ட அமைப்பாளர்களுக்கும், அதற்கு மூலகாரணமாய் இருந்த நண்பர் திரு. ராஜேஷ் ஜெயராமன் அவர்களுக்கும் நாம் மிகவும் நன்றி பாராட்டக் கடப்பாடு உற்றவர்கள் ஆனோம். இந்தப் பெரியோர்களைப் பற்றி பேசி, இன்று நம் இலக்கிய வட்டம் தன்னைத்தானே பெருமைப்படுத்திக் கொண்டுள்ளது, உயர்த்திக்கொண்டுள்ளது என்றால் அது எந்தவிதத்திலும் மிகையாகாது.

அடுத்தது, இப்பெரியோர்களைப் பற்றிப் பேசி, அறிந்துகொள்வதால் என்ன பயன், என்ன நன்மை என்ற வினா எழக் கூடும். மூதுரையின்படி நல்லோரைப் பற்றி பேசுவதும், நல்லோர் குணங்கள் உரைப்பதும் நன்று என்று சொல்லலாம். அல்லது, திருக்குறள் வழி நின்று, பெரியோரைத் துணைக்கோடுவதால் ஏற்படக் கூடிய நன்மைகளை நாம் பட்டியலிடலாம். ஆனால், உண்மையில் இந்தத் தமிழிப் பெரியோர்களைப் பற்றி நாம் அறிந்துகொள்வதால், அவர்கள் ஆற்றியத் தொண்டைப் பற்றியும், அவர்களின் படைப்புகளைப் பற்றியும், அவர்கள் ஆற்றிய செயற்கரிய செயல்களைப் பற்றியும் தெரிந்துகொள்வதால், ஒரு புத்துணர்ச்சியும் ஒரு புதிய எழுச்சியும், நாமும் சாதிக்க வேண்டும், நம்மாலும் சாதிக்கமுடியும் என்ற எண்ணமும் உறுதியும் நம்முள் மிகும். நம்மை நாமே உள்நோக்கிப் பரிசோதித்துக்கொள்ள ஒரு உந்துதல் நமக்குக் கிடைக்கும். நம்மை நாமே உயர்த்திக்கொள்ள ஒரு உத்வேகம் பிறக்கும். இங்கே நாம் பேசுவதெல்லாம் வெறும் பேச்சாக, பொழுதுபோக்காக இருந்துவிடக்கூடாது என்பதுவே என் அவா மற்றும் வேண்டுதல்.

இந்தப் பெரியோர்களிலும், தனக்கே உரிய தனித்தன்மையும், தனிச் சிறப்பும் உடையப் பெருந்தகைதான் தமிழ்த் தென்றல் திரு.வி.க. இவரும் பாரதியைப்போல் ஒரு பன்முகம் கொண்ட விந்தையாளர். பள்ளியாசிரியர், பத்திரிக்கை ஆசிரியர், தேசபக்தர், தேசத்தொண்டர், எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், தொழிற்சங்கத் தலைவர், வணிகக் கணக்காளர், வள்ளலாரைப்போல் சமரச சன்மார்க்கத்தில் ஈடுபாடு உடையவர், இயற்கை உபாசகர், சமூகச் சீர்திருத்தவாதி, பெண்கள் முன்னேற்றத்திற்காக் குரல் கொடுத்து, உழைத்து, சாதித்தும் காட்டியவர். தான் வாழ்ந்த காலத்தில், வசதியின்றி இருந்தாலும், வறுமையிலே உழன்றாலும், தன் புலமைக்காவும், நாவன்மைக்காகவும், தொண்டிற்காகவும் பெரிதும் மதிக்கப்பட்டவர்; போற்றப்பட்டவர்.

****
இலக்கிய வட்டத்தின் இணைய தளம்: www.ilakkyavattam.com

****

guru@nhcl.com.hk

Series Navigation

ப குருநாதன்

ப குருநாதன்