ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 2

This entry is part [part not set] of 42 in the series 20090115_Issue

கே. வி. ராமகிருஷ்ண ராவ்


பெரியார் ஜின்னாவை 1944ல் பம்பாயில் சந்தித்தாரா?: ஜின்னாவின் வாழ்க்கையை எழுதிய ஏ.கே.ரிபாயி என்பவர் 1944ம் ஆண்டு மத்தியில், பெரியார் ஜின்னாவை பம்பாயில் அவரது இல்லத்தில் சந்தித்ததாகக் குறிப்பிடுகின்றார் . பெரியாரின் 09-08-1944 தேதியிட்டக் கடிதம் மற்றும் ஜின்னாவின் 17-08-1944 தேதியிட்ட பதில் கடிதம் முதலியவற்றைக்குறிப்பிட்டு, அவைகள் அப்பொதைய அரசியல் விவகாரங்களை கூடிபேசியதாகக் குறிப்பிடுகிறார்: “1944 மத்தி வாக்கில் பெரியார் ஈ.வே.ரா. அவர்களும் அறிஞர் அண்ணாவும் பம்பாயில் ஜின்னா சாகிப் இல்லத்தில் அவரை சந்தித்து அன்றைய அரசியல் நிலவரம் குறித்துப் பேசினார்கள். 1944 ஆகஸ்டு 9ம் தேதி பெரியார் அவர்கள் ஜின்னா சாகிபுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதற்கு ஆகஸ்டு 17ம் தேதி ஜின்னா சாகிப் பதில் கடிதம் அனுப்பி இருந்தார்”. திராவிட எழுத்தாளர்கள் இச்சந்திப்பினைக் குறிப்பிடுவதில்லை .

பெரியாருடன் திடீரென மாறுபட்ட ஜின்னாவின் போக்கு:
பெரியார் முஸ்லீம் லீக் மற்றும் முஸ்லிம்களுடன் மிகவும் நெருக்கமாகயிருந்தும், அவர்களுக்குப் பலவிதங்களில் ஆதரவாக பேசி, அனுகூலமாக இருந்து வந்தபோதும், ஏன் திடீரென்று பெரியாரிடம் ஜின்னா தலைக்கீழாக மாறி தமது கருத்தை வெளியிட்டதுடன், “தீர்மானமே எடுக்க முடியாத நிலையில் உள்ளீர்”, என குற்றம் சாட்டி தான் “திராவிடர்களுக்காக” ஆதரவு தர, போராட முடியவே முடியாது, என திட்டவட்டமாக தெளிவு படுத்தினார், என்பது புதிராக உள்ளது. பெரியார் பாகிஸ்தானுடன், திராவிடஸ்தான் பிரச்சினையினையும் எடுத்துக்கொள்ள 1944 ஆகஸ்டு 9ம் தேதி பெரியார் அவர்கள் ஜின்னாவிற்க்கு ஒரு கடிதம் எழுதினார் (பின்னிணப்பு-2). அதற்கு ஆகஸ்டு 17ம் தேதி கடிதத்தில் ஜின்னா வெளிப்படையாக தனது நிலையை எடுத்துக் காட்டினார். அதே மாதிரி, பி.பி.முதலியார் என்ற கோவாச் சங்கத்தைச் சேர்ந்தவர் அனுப்பிய தந்திகளுக்கும் ஆதரவாக எதையும் செய்யவில்லை. கோவாச் சங்கம், கோவா மஹாராஷ்டிரத்துடன் இணையவேண்டும் என்ற கோரிக்கையை ஜின்னாவிடம் கூறி அதற்கு உதவியை நாடினர். வி.எஸ்.டி பாம்பியோ வியகாஸ், கோவாச் சங்கத்தின் காரியதரிசி தமது ஜூலை 30, 1942 தேதியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டதாவது , “தாங்கள் இந்நாட்டின் பெரும்பான்மையிலுள்ள சிறுபான்மை மக்களின் தலைவராக உள்ளதால், தாங்கள், இந்நாட்டிலுள்ள எல்லா இந்தியர் குறிப்பாக சிறுபான்மையினரின் உரிமைகளைக் காக்க உமது மதிப்புள்ள ஆதரவை எதிர்பார்க்கிறோம்”.

பி.பி. முதலியார், “சண்டே அப்சர்வர்” தலமையாசிரியரும், முஸ்லீம்களுக்குத் தனிநாடு கேட்கும்போழுது பிராமணரல்லாதவரின் தனிநாடு கோரிக்கைக்கும் ஆதராவாக இருக்குமாறு கோரி, அக்டோபர் 13, 1946ல், ஒரு கடிதம் எழுதினார் . ஆனால், ஜின்ன கண்டுகொள்ளவேயில்லை. மேலும், காந்தியிடம் பேச்சுவார்த்தைகள் நடத்தும்போது, “…………நீதிகட்சியின் தலமை மிகவும் சக்தியற்ற கைகளில் உள்ளது” என்று குறிப்பிடுகிறார்! எனவே, எதற்காக பெரியாரின் தலமையினை சந்தேகித்தார் எனத்தெரியவில்லை.

இருப்பினும், முஸ்லீம்-அல்லாதவரைத் தனிமைப்படுத்த வேண்டும் என்ற அவரது தந்திரம், வைஸ்சிராய் நிர்வாக கவின்சிலுக்கான ஒதுக்கப்பட்ட முஸ்லீம்-லீக் அங்கத்தினர்-இடத்தை ஜோகேந்திர நாத் மண்டல் என்ற செட்யூல்டு-சாதியைச் சேர்ந்தவருக்குக் கொடுக்கப் பரிந்துரைத்தார். இது, முகமதியர் 1910ல், லார்ட் மின்டொவிடம், தமது எண்ணிக்கை அதிகமாக இருக்க்கவேண்டும் என்பதற்காக, இந்துக்கள், பழங்குடியினர், இயற்கைவழிபாடு-செய்பவர், தீண்டத்தகாதவர் என இந்து-மக்களைப் பிரிக்கவேண்டும் என்று வலியுரித்தியதைப் போன்றதாகத் தெரிகிறது. இதனை, அம்பேட்கரே எடுத்துக் காட்டியுள்ளார் . ஆகவே ஜின்னா, ஒரு தனி-நாட்டில், அதாவது பாகிஸ்தானத்தில், முகமதியர் மற்றும் பிராமணரல்லாதவர் சேர்ந்து இருக்கக்கூடிய “ஒரு பரந்த இஸ்லாமிய நாட்டை” உருவாக்க அவ்வாறுக் கேட்டிருக்கலாம். அல்லது, நேரிடையாகவே, அம்பேட்கர், பெரியார் தங்களது ஆதரவாளர்களை, முகமதியராக மதமாறச் சொல்லியிருக்கலாம் . ஏனெனில், இருவருமே, இந்துமதத்தை ஏற்கெனவே இழித்தும்-பழித்தும் பேசியும்-எழுதியும் வந்துள்ளனர். மேலும், ஜனவரி 1940 கூட்டத்திற்குப் பிறகு, அவர்களுக்கு அத்தகைய ஆசை, அரசியில் ரீதியில்-தனி-நாடு கிடைக்குமே என்ற இச்சையில் ஆதரவாகப் பேசியிருக்கலாம். உதாரணத்திற்கு, அம்பேத்கர் “பாகிஸ்தான் பிரச்சினையை’ அணுகும்போது, அத்தகைய முடிவை சூசகமாகத் தருகிறார். மேலும், பம்பாய் மாகாண மஹர் மாநாடு மே 30, 1936ல் நடந்தபோது, இந்துமதத்தைத் துறக்கவேண்டிய நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளார் . அண்ணாதுரை எப்பொழுதுமே, திராவிடரும், முகமதியரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள், ஏனனில் அவர்கள் இந்துக்கள்-ஆரியர்களுக்கு வேறுபட்டவர்கள் என பேசிவருபவர், இதோ அவரது பிரபலமான வாதங்கள்:

“மேலே பாகிஸ்தான்! தெற்கே திராவிடநாடு: இடையில் இந்துஸ்தான்”

“பாகிஸ்தான் என்பதின் எதிரோலியல்ல, “திராவிடஸ்தான்” என்ற முழக்கம், மூலம் திராவிடஸ்தான் முழக்கமே! அதன் வடநாட்டுப் பதிப்பே பாகிஸ்தான் என்ற முழக்கம், பாகிஸ்தான், லாகூர் லீக் மாநாட்டில் எழும்பியது, 22-3-40ல்! திராவிடநாட்டைத் தனி நாடாக்க்க. வேண்டும் என்பது, ஜஸ்டிஸ் கட்சி மாநாடு சென்னையில் கூடியபோது பெரிடாரின் பேருரையொலிருப்பது. இது 1938 டிசம்பரில்!”

“அவர்கள் ஆரியர்-நாம் திராவிடர்? அதே ஆராய்ச்சியே, முஸ்லீம்கள் திராவிட இனம், இஸ்லாமிய மார்க்கம் என்ற உண்மையை உரைத்தது. ஆகவே திராவிட-இஸ்லாமிய கூட்டுப்படை கிளம்பியது””

“ஆங்கிலேயரும்-ஆரியரும் ஒரே இனம்! இனத்தோடு இனம் சேருகிறது! திராவிடரும்-இஸ்லாமியரும் ஒரே இனம்! இனத்தோடு இனம் சேருகிறது! “பெரியார் இராமசமி நாயக்கர் பாகிஸ்தானத்த்துட்பட்டு வாழ்ந்தாலும் வாழலாமே ஒழிய, ஆரியருடன் வாழக் கூடாது எனக் கோவை மாநாட்டில் உரைத்தார்..”

ஆகையால், ஜின்னா பெரியாரை ஏன் குற்றம் சாட்டுகிறார் என்பது மர்மமாகயிருப்பினும், அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. அவர்கள் காங்கிரஸுக்கு எதிராக அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள ஒன்றாகச் செயல்பட்டாலும், பெரியார் “திராவிடஸ்தான்” தனிநாடு கோரிக்கையை 1938ல் வைத்து, 1939ல் தீர்மானத்தையும் மொழிந்தார். ஆகையால், தென்னிந்தியாவில் அல்லது திராவிடருக்கு தாம் தனித்தத் தலைவராக இருக்கமுடியாது என்பதனை, ஜின்னா உணர்ந்திருப்பார். மேலும், ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக, கங்கிரஸுடன் பலவிதமாக பேரம் பேசி வந்தனர். ஒரு கட்டத்தில், இவரது தலமையினையே, முகமதியர் கேள்விக்குறியாக்கிய நிலையினையும் அறிந்திருந்தார். அம்பேட்கருடைய நிலைப்பாட்டையும் அறிந்திருந்தார். ஆகவே ஒரு பக்கம் உலேமாக்களுக்குப்பணிந்து, மறுபக்கம், ஒரு தந்திர அரசியல்வாதியாக, மற்றவர்களுக்கு வாக்க்குரிதிகளை மட்டும் அள்ளி வீசியுள்ளார் எனத்தெரிகிறது. இந்த மாற்றத்தை, அம்பேட்கர் மூலமாக அறியப்படுவதாவது :

“ஜின்னா இதற்கு முன்பு, வெகுஜன மக்களின் மனிதாகயிருந்ததில்லை. அவர் மக்களை பாதித்துள்ளார். அவர்களை அரசியல் அதிகாரத்திலிருந்து வேறுபடுத்தி, ஒரு பெரிய முயற்சிற்கு எடுத்துச் சென்றார். அவர் என்றுமே பக்தியுள்ள, சிரத்தையுள்ள பின்பற்றும் முஸ்லீமாக இருந்ததில்லை. எப்பொழுதெல்லாம், இவர் M.L.A”வாகப் பதவி ஏற்கிறாரோ, அப்பொழுதெல்லாம் குரானிற்கு முத்தமிடுவதோடு சரி, அதில் என்ன உள்ளது, அதன் சிறப்பு யாது என்பதைப் பற்றியெல்லாம் கவலைக் கூடப்பட்டதில்லை. எந்த அல்லது யாதாவது ஒரு பள்ளிவாசலுக்கு ஆர்வத்தூண்டுதல் மூலமோ அல்லது மத வேட்கையினாலோ ஒதுங்கியதாகவோ, சென்றதாகவோ சந்தேகமாகவே உள்ளது. அதேபோல, ஜின்னா என்றுமே முகமதிய மத-அரசியல் கூடுதல்கள்-கூட்டங்களில் இருந்ததில்லை. ஆனால், இன்றோ ஜின்னாவிடம் முழுமையான மாற்றத்தைக் காணமுடிகிறது. இன்று அவர் மக்களின் நாயகன். அவர்களுக்கு மேலேயில்லை என்றாலும், அவர்களில் ஒன்றாகவுள்ளார். மக்களே அவரை தம்மையும் விட உயர்த்தி “காயிதே ஆஜம்” என அழைக்கின்றனர். அவர் இஸ்லாமில் ஒரு நம்பிக்கையுள்ளவராகவர் மட்டுமல்லாது, இஸ்லாத்திற்காக, உயிர் விடவும் தயாராக உள்ளார். இப்பொழுது, அவர் கலிமாவைத் தவிர, இஸ்லாமை அதிகமாகத் தெரிந்துள்ளார். இப்பொழுதெல்ல்லாம் பள்ளிவாசலுக்குச் சென்று “குட்பா” கேட்கிறார், “ஈத்” முதலிய கூடுதல்களில் பங்கு கொண்டு மகிழ்ச்சியடைகிறார். இன்று, அவர்கள் அவரது இருக்கும் நிலையினை உணருகின்றனர். அதன்படியே, இன்று, பம்பாயில் எந்த முகமதிய கூட்டமும் “அல்லா-ஹோ-அக்பர்” மற்றும் “காயிதே-ஆஜம் வாழ்க” என்ற கோஷங்கள் இன்றி ஆரம்பிப்பதும் இல்லை, முடிவதும் இல்லை”. ஆகவே அத்தகைய “நம்பிக்கையுள்ள இஸ்லாமியர்”, எப்படி “காஃபிர்” தலைவர்கள், அதிலும் பெரியார் போன்ற நாத்திகவாதியுடன் உறவு வைத்துக்கொள்ள உலேமாக்கள் சம்மதியளித்திருப்பர்?

பெரியார் அம்பேட்கரை மூன்று முறை சந்தித்துள்ளார்: மேலே குறிப்பிட்டபடி, பெரியார் முதன்முதலாக அம்பேட்கரை 06-01-40, 07-01-40, 08-01-40 தேதிகளில் சந்தித்தார். அப்போது, மூன்று மக்கள் குழுமங்களுக்கு, மூன்று தனி-நாடுகளை உருவாக்க்குவது, அதற்கான கோரிக்கைகளை வைப்பது முதலியன விவாதிக்கப்பட்டன. இரண்டாவது முறை, சென்னையில் 21-09-44 அன்று, வைஸ்ராய் கவுன்சில் அங்கத்தினர் என்ற முறையில் வந்தபோது சந்தித்தார். அப்பொழுது, நீதிகட்சியில் இரண்டு பிரிவுகள் இருந்தன, ஒன்று பெரியாருக்கு எதிராக இருந்தது. மூன்றாவது முறையாக, 05-12-44 அன்று ரங்கூனில் மூன்றாவது பௌத்த மாநாடு நடந்தபோது சந்தித்தார். அப்போது, அம்பேட்கர் தாம் பௌத்தமதத்தைத் தழுவத் தீர்மனித்துள்ளதாகவும், பெரியாரையும் பௌத்தத்தில் இணையுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், பெரியாரோ, தாம் இந்து மதத்திலேயே தொடர்ந்திருப்பதாகவும், அப்பொதுதான், தான் இந்துமதத்தை விமர்சனிக்க முடியும் என்றார்.

பாகிஸ்தான், திராவிடஸ்தான், மஹர்ஸ்தான்: ஆகவே, மூன்று தலைவர்களும், மூன்று மக்கள் குழுமங்களுக்குத் தனித்தனியாக மூன்று நாடுகளை- முஸ்லீம்களுக்கு பாகிஸ்தான், திராவிடர்களுக்கு திராவிடஸ்தான், தீண்டத்தகாதவர்கள்-செட்யூல்ட்-சாதியினருக்கு மஹர்ஸ்தான் / பௌத்தஸ்தான் என- கேட்க முடிவு செய்தது, தீர்மானித்தது திண்ணம். இருப்பினும், அம்மாதிரியான கனவு-நாடுகளில் தம்மக்கள் ஒன்றாகயிருக்கமுடியாது என்பதும் தெரிந்தது.

அம்பேட்கருடைய இஸ்லாம் மற்றும் முஸ்லீமுடைய மனம் பற்றிய அவரது எண்ணங்கள் தெளிவாக இருந்தன:

1. இஸ்லாமிய சட்டப்படி, இவ்வுலகம் தார்-உல்-இஸ்லாம் (இஸ்லாமியரின் வாழும் இடம்) மற்றும் தார்-உல்-ஹரப் (போர் நடக்கும் இடம்) என இரண்டாகப் பிரிக்கப்படுகிறன. முஸ்லீம்கள் ஒரு நாட்டை ஆளும்போது, அது தார்-உல்-இஸ்லாம் ஆகிறது. ஆனால் முஸ்லீம்கள் மட்டும் இருந்து, அவர்கள் அந்நாட்டை ஆளவில்லையென்றால் அது தார்-உல்-ஹரப் ஆகிறது. இஸ்லாமிய சட்டம்(ஷரீயாத்) அவ்வாறு இருக்கும்போது, இந்தியா, இந்துக்கள் மற்றும் முசல்மான்களுக்கு பொதுத் தாய்நாடாக இருக்கமுடியாது .
2. இது ஏதோ படிப்பதற்கு மட்டும் என்று கருதிவிட வேண்டாம், ஏனெனில், அது ஒரு வலுவான செயல்படும் சக்தி மற்றும் முஸ்லீம்களின் நடத்தையை ஊக்குவிக்க வல்லது.
3. இஸ்லாமிய சட்டப்படி, இன்னொரு மதக்கட்டளை – ஜிஹாத் (க்ரூஸேட்) என்ற புனிதபோராகும். அதாவது ஒரு முஸ்லீம் ஆட்சியாளர், இந்த முழு உலகத்தையும் இஸ்லாத்தின் ஆளுகைக்கு வரும்வரை தொடர்ந்து போராடும் போராகும்…..ஆகவே இந்தியாவில் முஸ்லீம்கள் ஜிஹாத் பிரகடனத்தை செய்யாமலிருப்பார்கள் என்று சொல்லமுடியாது………
4. அதுமட்டுமல்லாது, அவர்கள் ஜிஹாத் பிரகடனத்தையும் செய்யலாம், அதன் வெற்றிக்கு, ஒரு அந்நிய முஸ்லீம் நாடு/சக்தியையும் துணை கோரலாம். அதேமாதிரி ஒரு அந்நிய முஸ்லீம்நாடு/சக்தி ஜிஹாத் பிரகடனத்தை செய்தால், அதற்குத் துணைபோகலாம்.
5. மேலும் இஸ்லாம் நாட்டின்-எல்லைகளை மதிப்பதில்லை, எனெனில் அது, எல்லைப் பிணைப்புகளைக் கடந்தது. அது சமூக-மதப்பிணைப்புகளால் கட்டுண்டு இருப்பதால், இஸ்லாம் எல்லைகளைக் கடந்துள்ளது.
6. ஆகையால், இந்திய முசல்மான் தான் முதலில் முஸ்லீம், பிறகு இந்தியன் என்ற நிலையிலுள்ளான்.
7. முஸ்லீம்களைப் பொறுத்தவரையிலும், இந்து ஒரு காஃபிர். அவன் எந்த மரியாதையுமற்ற மதிப்பற்றவன். அவன் கீழ்பிறப்பாளன், மற்றும் அவனுக்கு எந்த தகுதியும் இல்லை. ஆகவேதான், ஒரு நாடு காஃபிர்களால் ஆளும்போது, முசல்மனிற்கு அது தார்-உல்-ஹரப் ஆகிறது. இதனால், முசல்மான் ஒரு இந்து/இந்துக்களால் ஆளப்படுகிற அரசாங்கத்தை மதிக்க/பணிந்து நடக்கமாட்டான் என்று மெய்ப்பிக்க வேறு எந்த அத்தாட்சியும் தேவையில்லை .
8. சமீபத்தில் ஒரு இந்து மாணவன் காந்தியை ஹஸரத் ஈஸா (ஏசு)வுடன் ஒப்பிட்டதும், முசல்மான் மாணவர்கள் எல்லாம் ஒன்றுகூடி தங்களது மதநம்பிக்கையை அவமதிப்பதாகக் கொண்டு எதிர்ப்புத் தெரிவித்ததுடன் கடும் விளைவு நேரிடும் என எச்சரித்தனர். மாணவர் மட்டுமல்லாது, ஆசிரியர்களும் அத்தகைய எதிர்ப்பில் பங்குகொண்டனர் (301).
9. 1923ல் முகமதியர் “மஹாத்மா” என்று யாரையும் மதிக்கலாமா கூடாதா என்ற விவாதம் வந்தபோது, அவ்வாறு கூடாது என்ற முடிவிற்கு வந்தனர்.
10. 1924ல் மொஹம்மது அலி சொன்னதாவது, “திரு. காந்தியின் நடத்தை எந்த அளவிற்குத் தூய்மையாக இருந்தாலும், அவர் எந்த ஒரு முசல்மானையும், அவன் எந்த அளவிற்கு நடத்தைக்கெட்டவனாக இருப்பினும், அவனைவிடத் தாழ்ந்தவர், என்றே என்னுடைய மதரீதியில் என் கண்களுக்குப் தெரியப் படுகிறார்”.

ஜின்னா நிச்சயமாக அம்பேட்கருடைய கருத்துகளை ஜிரணித்துக் கொண்டிருக்க முடியாது. இருப்பினும் டிசம்பர் 1940ல் வெளிவந்த “பாகிஸ்தான் அல்லது இந்தியாவின் பிரிவினை” என்ற புத்தகத்தில் மேற்குறிப்பிடப் பட்டவைத் தவிர, இன்னும் அதிகமாகவே எழுதியுள்ளார். ஆகவே, அம்பேட்கர் பாகிஸ்தானை விமர்சனம் செய்தவுடன், அவரை விட்டு விலகியிருப்பார், உறவையும் துண்டித்திருப்பார். மேலும், ஜின்னாவே காஃபிர்களுடன் சுற்றிவருகிறார், உறவாடிகிறார் என்று அவர் மீது குறைகள்/பழிகள் சுமத்தப்பட்டன. ஆகையால், அத்தகைய குற்றச்சாட்டுகளிடமிருந்துத் தப்பித்துக் கொள்ள மோமின்களின் (நம்பிக்கயுள்ளவர்கள்-இஸ்லாமியர்) நலன்களுக்கு மட்டும் வேலை செய்வது எனத் தீர்மானித்து, காஃபிர்-திராவிடர், காஃபிர்-தீண்டத்தகாதவர், இவர்களை மெதுவாக ஒதுக்கியிருப்பார். இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால், காஃபிர், காஃபிரி வார்த்தைகள் அரேபிய குஃப்ர் அல்லது குஃப்ரு என்ற சொல்லிலிருந்துப் பெறப்பட்டவை. எனவே காஃபிர்கள் சுத்தமற்ற, அசுத்தமான, தகுதியற்ற தாழ்ந்த நிலையிலுள்ளவர்கள், மோமின்கள் (முஸ்லீம்கள்) அவர்களுடன் எந்த உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது. ஜின்னா, காந்திக்கு எழுதிய தனது கடிதங்களில் இக்கருத்தை பல முறை வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார். அதேமாதிரி, பெரியாருக்கு எழுதிய கடிதத்திலும் மறைமுகமாக, அதாவது “தான் முஸ்லிம்களுக்குத்தான் உழைக்கமுடியுமேத்தவிர, திராவிடர்களுக்கு ஆதரவு கொடுக்கமுடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அம்பேட்கர் தான் படித்த சமூக, அரசியல் மற்றும் பொருளாதார சித்தாந்தகளுடன் நம்பிக்கைக் கொண்டிருந்ததால், அரசியல் சட்டத்தின் சரத்துகளுக்குள் போராட முடிவு செய்திருப்பார். ஆகவே, ஆங்கிலேயர் ஆட்சியில், வைய்ஸ்ராய் கவின்சிலில் உறுப்பினராக இருந்ததுடன், சுதந்திரத்துக்குப் பிறகு சட்ட மந்திரியாக இருந்தார். அதாவது, அவர் என்றுமே தனிநாடு கொள்கையை வைத்ததில்லை.

அதேமாதிரி திராவிட கழக வேர்கள், கட்சிகள் மற்றும் பெரியாரின் வழிவந்தவர்கள், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தவுடன், தமது தனிநாடு கோரிக்கயை மறந்துவிட்டனர்.

மூவருக்கும் உள்ள ஒற்றுமைகள்: இவ்வாறான மூன்று தலைவர்கள், வெவ்வேரான சித்தாந்தங்கள், பல வித்தியாசங்களைக் கொண்டவர்களாக இருந்தாலும், அவர்களிடம் இருந்த ஒற்றுமைகள் ஆச்சரியமாக உள்ளன. அவை அடையாளங் கொள்ளப்பட்டு விவாதிக்கப் படுகின்றன:

1. அதிகமாக சாதிக்கத் துடித்தவர்கள்: அம்பேட்கர் தமது உயர்ந்த படிப்புடன் ஒரு மக்கள் விரும்பும் தலைவராக விரும்பினார் என்பது அவரது எழுத்துகள், மற்றும் சாதி-உணர்வுகளை தமக்கு சாதகமாக உபயோகித்துக் கொண்டாரோ எனத்தோன்றுகிறது. வட்டமேஜை மாநாடுகளில் கலந்துகொண்டு, காந்திக்கு எதிராக வாதித்தாலும், ஆங்கிலேயர் அவரை ஒரு தலைவராக உருவாக்கவேண்டும் என்ற முயன்றபோதும் (சுபாஸ் சந்திர போஸ் கூற்றுப்படி), அரசியல் ரீதியில் காந்தியை மீறி அவ்வாறு உருவாக முடியவில்லை. ஒருவேளை, பூனா உடன்படிக்கை (செப்டம்பர் 24, 1932) அவரது அரசியல் ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்தது போலாகியது. ஜின்னாவின் குறிக்கோள் வெளிப்படையாகயிருந்தது. அவர் இஸ்லாமிய வகுப்பு, அடிப்படை மற்றும் மத-வாதங்களை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு தமது அரசியல்-லட்சியத்தைப் பூர்த்தி செய்து கொண்டார். ஒருமுறை, தான் “முகமதிய கோகலேவாக” வேண்டும் என தனது ஆசையை வெளிப்படுத்தினாலும், பாகிஸ்தானின் தந்தையாகி விட்டார்! அவர் நினைத்தபடியே இந்தியாவை இரண்டாக்கி, பாகிஸ்தானின் ஜனாதிபதி ஆனார்! பெரியாருக்கும் அவ்வாறே பெரியத் தலைவராக வேண்டும் என்ற ஆசை இருந்தது, ஆனால், அவரிடத்தேயிருந்த பல முரண்பாடுகள் அவருக்கு எதிராக இருந்தன. இருப்பினும், பிறகு, அவர் “தென்னாட்டு காந்தி” என அழைக்கப்பட்டார்! ஆகவே, ஜின்னாவைத்தவிர, மற்ற இருவரும் அரசியல் மற்றும் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படும் நிலை-சூழ்நிலைகள் இவற்றால் தமது சித்தாந்தங்களை நீர்த்துக்கொள்ள வேண்டியதாகியது.
2. ஒரு குறிப்பிட்ட சமுகத்தினரின் காவலன்: ஜின்னா, அம்பேட்கர் மற்றும் பெரியார் முறையே முஸ்லிம்கள், தீண்டத்தகாதவர்கள் மற்றும் பிரமணரல்லாதோர் மக்களின் காவலராகச் சித்தரிக்கப் பட்டனர்.
3. கம்யூனிஸ-சித்தாந்தத் தாக்கம்: மூவருமே கம்யூனிஸ சித்தாந்தத்திற்குட் பட்டது தெரிகின்றது . பெரியார் ருஸ்யாவின் குடிமகனாக வேண்டும் என்று வரை சென்றதும், ஜின்னா தமது “இரு-நாட்டு சித்தாந்தத்திற்கு” உபயோகப்படுத்தியதும் மற்றும் அம்பேட்கர் “வகுப்புவாரி ஓட்டு உரிமை” தத்துவத்திற்கு பயன் படுத்தியதும், கம்யூனிஸத் தாக்கத்தைக் காட்டுகிறது.
4. காங்கிரஸ்காரர்கள்: முவருமே காங்கிரஸிலிருந்துதான் தமது அரசியல் வாழ்க்கையினைத் துவங்கினர். அவர்கள் காந்தியை வகுப்புவாத-சாடியவாத-மதவாத கொம்பினைக்கொண்டு அடிக்க முயற்சித்தாலும், காந்தியை விட பெரியத் தலைவராக முடியவில்லை. காங்கிரஸை “பிராமணர்கள் கட்சி”, “இந்துக்களின் கட்சி” என்றெல்லாம் குறைக்கூறி விமர்சித்தனர்.
5. சிறுபான்மையினர்-ஆதரவு – பிறகு – முஸ்லீம்-ஆதரவாகமாறியது: பெரியார், அம்பேட்கர் முஸ்லீம்களிடமிருந்து தமக்கு ஆதரவு கிடைக்கும் என, முஸ்லீம்களுடன் உறவு வைத்துக்கொண்டனர். ஆகையால், இருவருமே, “விடுபடும் நாளை” ஆதரித்தனர். அம்பேட்கர், முஸ்லீம்களுடைய மதவாத-பிரிவினைப் போக்கை அறிந்து, அவர்களுக்கு எதிராக எழுதினாலும், முஸ்லீகளுக்கான தனிநாடு கொள்கையினை ஆதரித்தார். பெரியாரோ, அம்பேட்கரைப் போலயன்றி, முகமதியர்களை சாதாரணமாக ஆதரித்தார். இஸ்லாமிய பண்டிகைகளில் கலந்து கொண்டு, இந்து பண்டிகைகளை பழித்தும்-அவதூறு பேசியும் வந்தார். பிராமணர்களை யூதர்களுடன் ஒப்பிட்டு பேசி முஸ்லீம்களின் உணர்வுகளைத் தூண்டி தமக்கு சாதகமாக உபயோகப்படுத்திக் கொள்ளவும் முயன்றார் . பெரியார் ஜின்னாவிடமிருந்து பெரிதாக எதிர்பார்த்தார். அனால், அவர் முழுவதுமாக மறுத்தாலும், முஸ்லிம்-ஆதரவு கொள்கையை கடைபிடித்தார்.
6. காங்கிரஸ் மற்றும் காந்தி எதிர்ப்பு: மூவருமே காங்கிரஸ் மற்றும் காந்தியை தமது பேச்சு, எழுத்து மற்றும் செயல்களால் மிகவும் கடுமையாக, ஏன் கொடுமையாகவும் விமர்சித்தனர். காங்கிரஸில் உள்ளேயும், வெளியேயும் காந்திக்கு மிகுந்த அளவில் தொந்தரவு கொடுத்தனர். 1931ல் அம்பேட்கர், யார் தீண்டத்தகாதவர்களின் நலன்களைக் காப்பவர் என்பது குறித்து காந்தியுடன் மோதி, அவரது தலமையினை அடியோடு எதிர்த்தார். ஜின்னாவின் விஷயத்திலும் அத்தகைய போக்கே இருந்தது. உலேமாக்கள், காந்தி முசல்மான்களுக்குத் தலைவராக இருக்க முடியாது, என பிரகடனம் செய்தவுடன், முஸ்லீம்கள் காங்கிரஸுக்கு வெளி வந்து காந்தியையும், காங்கிரஸையும் சாடினர். காந்தியைத் தாக்கும் முயற்சியில், முதலில் இந்தியப் பாரம்பரிய சின்னங்களை குறிவைத்து எதிர்த்தனர், பிறகு அது இந்து-எதிர்ப்பு முறையாக மாறியது.
7. இந்து-எதிர்ப்பு சித்தாந்தம் மற்றும் எழுத்துகள்: மூவரது எழுத்துகளுமே இந்து-மத எதிர்ப்பாக இருந்தது. ஜின்னா தான் முஸ்லீம் என்ற நிலையில் விமர்சித்தாலும், அம்பேட்கர், பெரியார் மிகவும் மோசமாக எழுத-பேச ஆரம்பித்தனர். அம்பேட்கர் டிசம்பர் 25, 1927ல் மனு ஸ்மிருதியை எரித்தார். அந்நாள், ஜின்னாவின் பிறந்த நாளாக இருந்தது. அம்பேட்கர் பௌத்தமதத்தைத் தழுவத் தீர்மானித்தபோது, பெரியார், இந்துமதத்திலேயே இருந்து கொண்டால்தான், தான் தாராளமாக விமர்சனம் செய்யமுடியும் என்று சொல்லிக்கொண்டார். ஜின்னா “முஸ்லீமாகவும்”, அம்பேட்கர் “பௌத்தனாகவும்”, பெரியார் “நாத்திகனாகவும்” இறந்தனர்!
8. தமது குழுமம் / சமூகம் / மதத்தில் இருந்த எதிர்ப்பு: ஜின்னா “ஷியா” முஸ்லீமாக இருந்து, முதலில் ‘செக்யூலார்” விஷயங்களுடன் இருந்தபோது உலேமாக்கள், அவரை “காஃபிர்” எனச் சாடியது! முஃப்தி கிஃபாயதுல்லா முதலில், அவரை காஃபிர் என கருதி, பிறகு “முஸ்லீமாக” ஏற்றுக்கொண்டார்! ஒருவேளை, உலேமாக்கள் மற்றும் AIUML அவரை அவ்வாறு தொடர்ந்து குறை கூறி வந்ததால், தான் முஸ்லீம் என நிரூபிக்க பாகிஸ்தான் விஷயத்தில் வேகமாக செயல்பட்டார் எனலாம்! பெரியார் சட்டரீதியாக ஒரு இந்துவாக இருந்தாலும் இந்து-எதிர்ப்பு முறையைக் கையாண்டு வந்தார். இருப்பினும் நீதிகட்சி தலைவர்கள் அவரது நாத்திகப் போக்கைக் கண்டு கொள்ளாமல், தங்களது கூட்டங்களை தேவாரம் பாடியே ஆரம்பித்து வந்தனர். அம்பேட்கர் தமது 56வது வயதில் ஒரு பிராமணப்பெண்ணை மணந்து கொண்ட போது எதிர்ப்பு எழுந்தது! மேலும் தனது முதல் மனைவி ரமாபாய் இறந்தபோது, இறுதி சடங்குகள் இந்து முறைப்படியே நடந்தன. அவரும் மொட்டையடுத்துக் கொண்டு, காவியுடையணிந்து சில காலம் திரிந்தார்! விமர்சகர்கள் அவர்களிடையே இருந்த இத்தகைய முரண்பாடுகளை எடுத்துக்காட்டுவர்.
9. ராஜாஜி கண்காணிக்கப் பட்டார்: ராஜாஜி என்ன பேசுவார், எங்கு செல்வார் என அறிய அவர் கண்காணிக்கப்பட்டது தெரிகின்றது. “நான் திரு. ராஜகோபாலாச்சாரியாருடைய திட்டத்தின் மூலம் எவ்வாறு இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவார் என அவரது நடவடிக்கைகளை மிகவும் ஜாக்கிரதையாக பார்த்து வருகிறேன். உமது பம்பாய் வீட்டில் காந்தியை வரவேற்பதும் அறிவேன்…………” என்று, பெரியார் தனது ஆகஸ்டு 9, 1944 தேதியிட்ட கடிதத்தில் குறிப்பிடுகின்றார். இவர் ராஜாஜியின் நண்பர் என்பது, அனைவரும் அறிந்ததே! முஹம்மது இஸ்மாயிலின் சொந்தக்காரர், முந்தைய ராஜ்ய சபா அங்கத்தினர் – ஏ.கே.ரிபாயி குறிப்பிடுவதாவது: செய்யது முட்ஸா ஹஸரத் MLA (தில்லி) 1940ல், திருசியிலுருந்து சென்னைக்கு ரயிலில் வரும்போது, ராஜாஜி மற்றும் டி.எஸ்.எஸ். ராஜன், ஸ்ரீரங்கம் ஸ்டேசனில் ரெயிலில் ஏறுகின்றனர். மேல் படுக்கையில் இருக்கும், செய்யது ஹஸ்ரத், இருவரும் என்ன பேசிக்கொள்கிரார்கள் என மிகவும் ஆர்வத்துடம் ஒட்டுக் கேட்டுக் கொண்டு வந்தார். குறிப்பாக, அவர்கள் முஸ்லீம்களைப் பற்றி பேசுபோது, தூங்குகின்றமாதிரி நடித்து அவைகள் பேசியதைக் கேட்டுக் கொண்டார். சென்னை எழும்பூரில் இறங்கியதும் நேராக இஸ்மாயில் வீட்டிற்குச் சென்று, அவரிடம் தான் ஒட்டுக் கேட்டதை தெரிவித்தார் . இஸ்மாயில் ஜின்னாவை சந்தித்து தான் கேள்விபட்டதை கூறியிருப்பார். ராஜாஜி இந்த திட்டத்தை 1943ல் காந்தியின் ஒப்புதை பெற்று, 1944ல் “ராஜாஜி திட்டம்” என வெளியிடப்பட்டது! பிறகு ஜின்ன்னாவிற்கும் தெரிவிக்கப்பட்ட்டது. அம்பேட்கர் இத்திட்டத்தை விமர்சிக்கின்றார் .

பாகிஸ்தான், ஒரு வெற்றியா? ஜின்னாவின் கனவு பாகிஸ்தான் வெற்றியா எனப் பார்க்கும்போது, “இஸ்லாம்” அந்த நாட்டை ஒன்றாக வைத்துக் கொள்ளமுடியவில்லை எனத்தெரிகின்றது. மதரீதியில் பிரிவினை பேசும் பிரிவினைவாதிகளுக்கு “பங்களாதேசம்” ஒரு பெரிய கேள்வியினை எழுப்புகிறது – ஏன் “இஸ்லாம்” பாகிஸ்தானை ஒன்றாகயிருக்க வைத்திருக்க முடியவில்லை? இதைத் தவிர, பாகிஸ்தான் பல “இஸ்லாமிய” குழுமங்களையே, “காஃபிர்கள்” என பிரகடனம் செய்து, அவர்களது பள்ளிவாசல்களை உடைத்து, நாட்டை விட்டு வெளியேற்றி உள்ளது . சிந்த் மற்றும் பலுச்சிஸ்தான், பாகிஸ்தானிடமிருந்து பிரிந்துபோக யத்தனிக்கின்றன. செப்டெம்பர் 17, 2000ல் சிந்தி, பலுக், மொஜாஹிர் தலைவர்கள் லண்டனில் கூடி, பாகிஸ்தானிடமிருந்து “ஆஜாதி” (விடுதலை) கேட்டுள்ளனர்! எனவே, பாகிஸ்தான் வெற்றியா என்பது, கேள்விக்குறியாக உள்ளது.

திராவிடநாடு ஏன் அடைய முடியவில்லை? அம்பேட்கரே “ஆரியர்-திராவிடர்” இனவாதத்தை ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் தமது புத்தகங்களில், “ஆரிய படையெடுப்பு சித்தாந்ததை” அறவே பொய் என எடுத்துக் காட்டுகின்றார். “பாகிஸ்தானம்”, “ஹிந்துஸ்தானம்” தவிர, எந்த “ஸ்தானமும்” வரமுடியாது என வாதிட்டார். பெரியாரின் பிரிவினை வாதத்திற்கு, நீதிகட்சியிலேயே எதிர்ப்பு இருந்தது. தெலுங்கு, கன்னட, மலையாள மக்கள் தாங்கள் “திராவிடர்” என்றும், மற்றும் அதனால் இந்தியர் / இந்துக்கள் என்பதிலிருந்து வேறுபட்டவர்கள் என்ற கருத்தினையும் ஏற்றுக் கொள்ளவில்லை. முகமதியர் உறுதியாகக் கூறும் அளவிற்கு, பெரியார் எந்த மாநிலத்திலும் திராவிடர் அதிகமாக இருந்தனர் என்று எடுத்துக் காட்ட முடியவில்லை. ஆம்பேட்கரே, பாகிஸ்தான் முஸ்லீம்களுக்கு மற்றும் ஹிந்துஸ்தான் ஹிந்துக்களுக்கு என்றே வாதிட்டார். ஜின்னா தெளிவாவாக தான் முஸ்லீம்களுக்கு மட்டும்தான் பாடுபட முடியும், “முஸ்லீம்-அல்லாதவர்”களுக்கு உதவ முடியாது என்றார். மேலும், இவரது தோழர்கள் தனியாகப் பிரிந்து தனி கட்சித் தொடங்கினர். தேர்தலில் வெற்றிபெற்று, அரசாங்கம் அமைத்த பிறகு, பிரிவினை வாதத்தை மூட்டைக்கட்டி வத்துவிட்டனர்.

Series Navigation

கே. வி. ராமகிருஷ்ண ராவ்

கே. வி. ராமகிருஷ்ண ராவ்

ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 3

This entry is part [part not set] of 42 in the series 20090115_Issue

கே. வி. ராமகிருஷ்ண ராவ்


ஏன் “மஹர்ஸ்தான்” / “பௌத்தஸ்தான்” அடைய முடியவில்லை? முன்னமே குறிப்பிட்டபடி, பூனா ஒப்பந்தம், தாழ்த்தப் பட்டவர்களுக்கு தனி நாடு என்ற சித்தாந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது, அது அம்பேட்கரின் அரசியல் எதிகாலத்தையும் தடுத்தது. தனது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சித்தாந்தங்கள் அத்தகைய தனி-நாடு கொள்கைக்கு ஒத்து வரவில்லை. அவர் தமது வெளியிட்ட வரைபடத்தில், பாகிஸ்தான் மற்றும் இந்துஸ்தான் இடம் பெற்றிருந்தனவேத் தவிர, திராவிடஸ்தான், பௌத்தஸ்தான்கள் இடம் பெறவில்லை. மதரீதியில் கோரிக்கை வைக்க, பௌத்தர்களின் எண்ணிக்கையை உயர்த்த ஒருவேளை, தான் பௌத்ததில் சேர முடிவு செய்திருக்கலாம். 1956ல், பௌதத்திற்கு மாறிய உடனே, அம்பேட்கர் காலமனார். அவராலும், எந்த மாநிலத்தில் “பௌத்தர்கள் / செட்யூல்ட்” மக்கள் அதிகமாக இருந்ததற்கான அத்தாட்சிகளைக் கொடுக்க முடியவில்லை.

தேசிய அளவில் அரசியல் ரீதியில் அவர்கள் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப் பட்டத்தன்மை: அம்பேட்கர் 1941லேயே தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அங்கதினராக நியமிக்கப்பட்டார். பிறகு வைஸிராய் கவுன்சிலில் சேர்ந்து, தொழிலாளர் துறையை ஜூலை 20, 1942ல் ஏற்றுக்கொண்டார். ஆகவே ஆங்கில அரசாங்கத்தின் தொழிலாளர் துறையை எற்றுக்கொண்ட இவர், சுதந்திரத்திற்கு 1947ல் பிறகு சட்ட மந்திரியானார்.

ஜின்னா, பாகிஸ்தானிற்கு உழைத்து, அதனை அடைந்தவுடன், 1947ல் ஜனதிபதியானார்! ஆனால் பெரியாரோ ஆகஸ்டு 15, 1947ஐ “துக்க நாள்” என அறிவித்தார்! ஆகவே, பெரியார் தனிமைப் படுத்தப்பட்டார் எனத்தெரிகிறது. ஜஸ்டிஸ் கட்சி தலைவர்கள், ஆங்கிலேயரிடத்தில் விசுவாசமாக இருந்ததால், அவர்கள் மாநில அளவில் பதவி பெற்றனர். மேலும், ஆங்லிலேயர் பிரச்சினை என்று வந்தபோது, காந்தி, ஜின்னா, அம்பேட்கர் இவர்களுடன் அந்தந்த குழுமங்களின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் என்ற முறையில் பேச்சு வார்த்தைகள் நடத்தினர். ஆனால், பெரியார் அந்த நிலையில் இல்லை. திராவிடர், திராவிட இனம், திராவிடஸ்தான் என்றெல்லாம் பேசி வந்தாலும், தென்னிந்தியாவை முழுவதுமாகக் அவரால் கவர முடியவில்லை, மற்றும் தமிழ்நாட்டிலேயே அதற்கான ஆதரவையும் பெற முடியவில்லை.

மேலும் பெரியாரால் தேசிய அளவில் ஏற்படுகின்ற அரசியல் மாற்றங்களுடன் ஈடுகொடுத்து, மற்றத் தலைவர்களைப்போல தேசிய நீரோட்டத்துடன், செல்ல முடியவில்லை. அவர் எப்பொழுதும் மற்றவரை எதிர்த்தும் அல்லது விமர்சனம் செய்தும் வந்துள்ளார். அவரது வட-இந்தியர்-எதிர்ப்பு, இந்தி-எதிர்ப்பு, இந்துமதம்-எதிர்ப்பு முதலியன, நிச்சயமாகத் அவரை தனிமைப் படுத்தின. ஒரு காலகட்டத்தில் ஹிந்து மஹாசபையும், கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸின் வலது மற்றும் இடது இறக்கைகள் என்று விமர்சனித்து கம்யூனிஸ்டுகளின் கோபத்திற்குள்ளானார் . திமுக தோன்றிய பிறகு, அவரது அரசியல் லட்சியங்கள் முடிவிற்கு வந்தன எனலாம்.

முடிவுரை: மூவரின் சந்திப்பும், அவர்களது விவாதங்களும், எடுத்தத் தீர்மானங்களும், செயல்பட்ட முறைகளும், அவை இந்திய மக்கள், நாடு இவற்றின் மீது ஏற்பட்ட நேர்முக, மறைமுக தாக்கங்கள், மாறுதல்கள் இவ்வாறாக இருந்தன. மொத்த அளவில் அவர்கள் அத்தகைய சந்திப்புகளினால் என்ன சாதித்தனர் என்பது, அவர்கள் அடைந்த முடிவுகளே காட்டுகின்றன, ஏனெனில் ஒவ்வொருவரும் தம்முடைய சித்தாந்தங்களை அரசியல் சூழ்நிலைகளுக்கேற்றபடி மாற்றிக்கொண்டது அல்லது சந்தர்ப்பத்திற்கேற்றபடி நீர்த்ததுபோலத் தோன்றினாலும், தங்களது நிலையினை விட்டுக் கொடுக்கவில்லை என நன்றாகவேத் தெரிகின்றது. நிச்சயமாக இம்மூவர் கூட்டணியில், தனியாக செயல்பட்டு தன்னுடைய மக்களுக்கு-முகமதியருக்குத் தனிநாடு கிடைக்கச் செய்தது ஜின்னாவேயாகும். இந்த விஷயத்தில், இவர் மற்ற இருவரையும் நன்றாகவே பயன் படுத்திக் கொண்டுள்ளது தெரிகின்றது. அம்பேட்கர் அவரது “முஸ்லீம்-மனதை”ப் புரிந்து கொண்டது மாதிரி, பெரியார் அவரைப் புரிந்து கொள்ளவில்லை அல்லது எதோ ஒரு காரணத்திற்காக புரிந்து கொண்டும், தம்மக்கள் நலத்தை விட, முஸ்லீம்களுக்கு ஆதாரவாக பேசி-எழுதியது, தொடர்ந்து அவர்களை ஆதரித்து வந்தது புதிராகவே உள்ளது. அம்பேட்கர் அரசியல் ரீதியில் தான் ஜின்னா-போலவோ, காந்தி-மாதிரியோ மக்கள் நாயகனாக வரமுடியாது என்று அறிந்ததும், ஆங்லிலேயர் மற்றும் சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் ஆட்சிகளில் மந்திரி பொறுப்பில் இருந்து செயல்பட்டார். ஒருவேளை ஜின்னா போலவே “தனி மதம்-தனி நாடு” என்ற கொள்கை ரீதியில், திடீரென்று பௌத்தத்திற்கு மாறினாரா என்பது, அவர் உடனடியாக காலமாகி விட்டதால், தெரியவில்லை. அம்பேட்கர் ஆதரவாளர்களும் பெரியாரின் போக்கை அறிந்து விலகினர். இவ்வாறு, பெரியார் தனிமைப் படுத்தப் பட்டபோது, அரசியல் ரீதியாக, அண்ணாதுரைப் போன்றோரும் விலகி தனிகட்சி ஆரம்பித்தபோது, விரக்தியடைந்தார் என்பது திண்ணம் . எனவே “திராவிடஸ்தான்” கோரிக்கை “திராவிடநாடு” ஆகி, விடுதலைக்குப் பிறகு, திமுக ஆட்சிக்கு வந்து, அதுவும் அரசியல் நிர்ணயச் சட்ட விதிகளுக்குப் புரம்பான சர்ச்சையாகி விட்ட பிறகு, அக்கொள்கை அறவே மறக்கப்பட்டது. ஆனால், பெரியார், அதனை எடுத்துக் கொண்டு அவ்வப்போது கிளர்ச்சி செய்து வந்தார். பிறகு, முழுவதுமாக இந்து-எதிர்ப்பில் – வினாயகர் சிலைகளை உடைப்பது, இந்துக்களை தூஷிப்பது, அவதூறு பெசுவது – முதலிய காரியங்களில் ஈடுபட்டார்.

பாகிஸ்தான் உருவாகியப் பிறகு, ஜின்னா அதற்காக வருத்தப் பட்டாரா, பௌத்ததிற்கு மாறியதும் அம்பேட்கர் ஏன் அவ்வாறு செய்தோம் என நினைத்துப் பார்த்தாரா, பெரியார் தமது இந்துமதஎதிர்ப்பு-நாத்திகத்தைக் கடை பிடித்ததற்காக மனம் வருந்தினாரா என்றெல்லாம் தெரியவில்லை. இருப்பினும், மூவர் பேச்சு, எழுத்து செயல்பாடுகள் இந்துக்களுக்கு எதிராக இருந்ததால், அவர்கள் தாம் ஏன் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளோம் என இந்துக்கள் நினைத்துப் பார்த்திருப்பர்.

மதகலப்புள்ள அரசியல், அரசியலாக்கப்பட்ட சாதித்துவம், சாதித்துவ துவேஷம், அத்தகைய துவேஷத்தில் வளர்க்கப்பட்ட மாநில-மாகாண அமைப்பு-முறை முதலியவை, புதுமுறையான பிரிவினைவாதத்தை வளர்க்க ஆரம்பித்து உள்ளது. சமுக-நடப்புகள் மதசார்பற்றதாக்கும் முறை, நவீனப்படுத்தப்படும் அரசியல் முறைகள், மேற்கத்திய-மயமாக்கும் பொருளாதார வழிகள், இவை அத்தகைய நவீன-பிரிவினைவாத சித்தாந்திகளுக்கு ஊக்க்கமருந்தாகிறது. “இன- சித்தாந்தங்கள்” பொய்-மாயை என்று நிரூபித்த பிறகும் “இனவாதம்” பேசுகிறவர்கள், மொழிப்பற்று என மொழிவெறி பிடித்தவர்கள், சமூக-நலன் என்று வகுப்புவாதம் வளர்ப்பவர்கள், “தேசியவாதம்” என்ற போர்வையில் “நாட்டுபற்று” கொண்டவர்கள், “துணைகண்டம்” பேசி தேசிய-விரோதிகளுக்குத் துணை போகும் புதிய துண்டாடும் தலைவர்கள், முதலியோர், பலர் பலப்பல உருவங்களில், துறைகளில், வழிகளில் எங்கும் நிறைந்து, மறைந்து செயல்படுகின்றனர். இப்பொழுது, அத்தகைய சித்தாந்தவாதிகளிடமிருந்து இந்தியர்கள் தம்மைக் காத்துக்கொள்ள அவசியமாகிறது.

பின்னிணைப்பு-1: முஸ்லீம் லீக் லாகூர் தீர்மானம்-1938

“அனைத்து இந்திய முஸ்லீம் லீக் இந்த மாநாட்டில் தீர்மானிக்கிறது என்னவென்றால், கீழ்கண்ட முறைகளில் அன்றி வேறு எந்த அரசியில் திட்டமுறையில், உத்தேசித்தாலும் அவை இந்நாட்டில் செயல்படுத்த முடியாததால், முஸ்லீம்களுக்கு ஏற்புடையதல்ல, அதாவது பூகோளரீதியில் முஸ்லீம்கள் அதிகமாகவுள்ள தொடர்ச்சியான பகுதிகள், தனியாக அடையாளங் காணப்பட்டு எல்லைகளை வரையறுத்து – உதாரணமாக வடமேற்கு, வடகிழக்குப் பகுதிகள்- எனப் பிரிக்கப்படவேண்டும். அவை, தனித்த இறையாண்மை கொண்ட சுதந்திர நாடாக விளங்குமாறு அமைக்கப்படவேண்டும். இப்பகுதிகளில் அவ்வாறு முஸ்லீம்களை பகுதிவாரி பிரிக்கப்பட முடியவில்லையோ, அல்லது அவர்கள் குறைவாக உள்ளார்களோ, அங்கு அவர்களுக்கு தங்களது மத, கலச்சார, பொருளாதார, நிர்வாக, மற்றும் இதர உரிமைகள் கொடுக்கப்படவேண்டும், அதற்கு அரசியல் சட்டத்தில் பாதுபாப்பும் தரப்படவேண்டும். இம்மாநாடு மேலும் ஒரு செயற்குழுவை அமைத்து, பாதுகாப்பு, வெளியுறவு, நீதித்துறை முதலான அதிகாரங்கள் அப்பகுதிகளுக்கு வரையறுத்து, அதற்கு சாதகமாக ஒரு அரசியல் சட்டத்தை உருவாக்க, அதிகாரம் வழங்குகின்றது”

பின்னிணைப்பு-2: பெரியார் ஜின்னாவிற்கு எழுதிய கடிதம்
ஈரோடு,
ஆகஸ்டு 9, 1944
எனதருமை ஜின்னா அவர்களே,

“நான் திரு. ராஜகோபாலாச்சாரியாருடைய நடவடிக்கைகளை மிகவும் ஜாக்கிரதையாக கவனித்து வருவதால் அவர் தனது திட்டத்தின் மூலம் எவ்வாறு இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவார் எனவும், தாங்கள் திரும்பி வந்ததும், உமது பம்பாய் வீட்டில் காந்தியை ஆகஸ்டு மத்தியில் வரவேற்பதும் அறிவேன். அரசியல் வட்டாரங்களில் அது வரவேற்கப்படுகின்றது. எனக்கு முழு நம்பிக்கை இல்லை என்றாலும், இந்து-முஸ்லிம் பிரச்சினைகளைத் தீர்க்க, குறிப்பாக கிரிப்பினுடைய பரிந்துரை விஷயத்தில், நமது எதிர்ப்பாளர்கள் முன் வந்ததற்கான மாறுதல்களுடன் கூடிய அடையாளச் சின்னங்கள் தெரிகின்றன.

“காங்கிரஸ்காரர்கள் வார்தைகளை திரிப்பதில், அதற்கு ஒரு மாற்று வியாக்யானத்தைத் தர-வல்லவர்கள் என்று நான் சொல்லத் தேவையில்லை. அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லி, அவர்கள் நினைப்பிற்கேற்ற முறையில் என்ன பொருள் வேண்டுமானாலும் கற்பிப்பர். நாம் அவர்களை நம்பி இல்லாமல் இருந்தாலும், நாம் மிகவும் விழிப்புணர்ச்சியுடன், ஜாக்கிரத்தையாக அவரது சமரசங்களில் இருக்க வேண்டும் என்பது உமக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

முஸ்லீம்கள்-இந்துக்கள் மற்றும் ஆரியர்கள்-திராவிடர்கள் முதலியவர்களுக்கான பொது தேர்தல், நமக்கிருவருக்குமே கஷ்டத்தையளிக்கும் என்பது தெளிவாகிறது. நாம் பம்பாய் மற்றும் தில்லியில், பாகிஸ்தான் மற்றும் திராவிடஸ்தான் பற்றிய நமது விவாத-உரையாடல்களையும் மற்றும் இரண்டும் ஒன்றே என்ற ரீதியில் தாம் கோரிக்கை எழுப்புவீர் என தாங்கள் தந்த உத்திரவாதத்தையும் உமக்கு கவனத்தில் கொண்டு வர தயவு செய்து மன்னிக்கவும். இங்கு, தென்னிந்தியாவில் அவை ஒன்றாகவே பாவிக்கப் பட்டு, அப்பிரச்சினையை தீர்க்க, அதற்கான செயல்பாட்டினையும் எனக்குத் திருப்தி அளிக்கும்வரை செய்து விட்டேன்.

“இந்தியாவில் பாகிஸ்தானமும், முஸ்லீம்களுக்குச் சுதந்திரமும் மற்ற இஃதிய நாடுகளுக்கு சுதந்திரம் அடையும் வரை அல்லது கிடைத்தாலொழிய, கிடைக்காது என தாங்கள் நன்றாகவே அறிவீர்.
தங்களுக்கு அன்பான மரியாதை உரித்தாகுக.
தங்கள் விசுவாசமுள்ள,
ஈ.வி.ராமசுவாமி நாயக்கர்.

பின்னிணைப்பு-3: ஜின்னா பெரியாருக்கு எழுதிய கடிதம்
பம்பாய்
ஆகஸ்டு 17, 1944
அன்புள்ள திரு ராமசுவாமி,

உமது ஆகஸ்டு 9 தேதியிட்ட கடித்தைப் பெற்றேன், அதற்கு நன்றி. மதராஸ் மக்களிடம், குறிப்பாக பிராமணரல்லாத 90 சதவீதத்தினரிடம், எப்பொழுதுமே எனக்கு இரக்கம் இருந்து வந்துள்ளது. நான் சொல்வது என்னவென்றால், அவர்கள் அவ்வாறான தங்களது திராவிடஸ்தானை உருவாக்க ஆசைப்பட்டால், அது முழுவதுமாக அவர்களது விஷயமாகிறது, எனவே உமது மக்கள்தாம் அதைப் பற்றித் தீர்மானிக்க்க வேண்டும். நான் இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது, மேலும் உமக்காகவோ உமது தரப்பிலோ பேசவும் முடியாது.

நான் ஒன்றிற்கு மேற்மட்டு இருமுறை சென்னையில் இருந்தபோது உம்மிடமும், உமது நண்பர்களிடமும் எனது நிலைப்பாட்டினை மிகவும் தெள்ளத் தெளிவாக்கி இருக்கிறேன், ஆனால் உமது நடவடிக்கைகள், இது வரையிலும், தீர்மானமற்ற நிலையில் இருந்து வருவதை, நான் கவனித்து வருகிறேன். உண்மையிலேயே, உமது மாகாண மக்கள் திராவிடஸ்தானை அடைய ஆசைப் பட்டால், பிறகு அவர்கள் தான் அதனை உறுதி செய்யவேண்டும்.

“தாங்கள் எனது நிலையை, அதாவது நான் இந்திய முஸ்லீம்களுக்குத் தான் பேச முடியும்- என்பதனை புரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன், தவிர, தென்னிந்திய ஒரு மக்கள் பிரிவினர், குறிப்பாக பிரமணரல்லாதவர்கள் ஏதாவது அத்தகைய சரியான நியாயமான கோரிக்கையை வற்புறுத்தலை வைத்தால், எனக்கு முடியும்போது அந்த விஷயத்தில் எனது ஆதரவு உமக்கு இருக்கும்”.
தங்கள் விசுவாசமுள்ள,
எம்.ஏ.ஜின்னா.

Series Navigation

கே. வி. ராமகிருஷ்ண ராவ்

கே. வி. ராமகிருஷ்ண ராவ்

ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 1

This entry is part [part not set] of 42 in the series 20090115_Issue

கே. வி. ராமகிருஷ்ண ராவ்



சமகால நிகழ்ச்சிகளாகயிருப்பினும், மக்கள் பலவற்றை மறந்து விடுகின்றனர். பல இந்தியத் தலைவர்கள், வேறுபட்ட பின்னணியில் இருந்தாலும், அவர்கள் சந்தித்தது, செயல்பட்டது முதலியன வியப்பாக இருக்கலாம், ஆனால் அவை உண்மையில் நிகழ்ந்துள்ளன. பீமாராவ் ராம்ஜி அம்பேத்கார் (1891-1956), மொஹம்மது அலி ஜின்னா (1876-1948) மற்றும் ஈரோடு வேங்கடப்ப ராமசாமி நாயக்கர் (1879-1973) [இனி இவர்கள் பெயர்கள் ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் எனக்குறிப்பிடப்படும்] இவர்களின் சந்திப்பு ஜனவரி 8, 1940ல் பம்பாயில் நிகழ்ந்தது . இவர்கள் முன்பு ஒருவரையொருவர் சந்தித்ததில்லையன்பதில்லை. பெரியார் அம்பேத்காரை மும்முறை பம்பாயிலும் 06-04-40, 07-04-40 மற்றும் 08-04-40, சென்னையில் 21-09-44, ரங்கூனில் 03-12-54 எனவும், ஜின்னாவை நான்கு முறை பம்பாயிலும், இருமுறை சென்னையிலும், ஒருமுறை தில்லியிலும் சந்தித்துள்ளார். அம்பேத்காரும் ஜின்னாவும் பாம்பேயிலியே இருந்ததால், பலமுறை சந்தித்துள்ளனர் . இச்சந்திப்பு, நன்கு தெரிந்தது போல இருந்தாலும், இன்னும் பலருக்குத் தெரியாமல் இருக்கிறது . சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளில் அவர்களது சந்திப்பு மிகவும் ஆச்சரியமாகவும், விவரமுள்ளதாகவும் முக்கியமனதாகவும் அக்காலக்கட்டத்தில் விளங்குகின்றது. 1929ற்கு பிறகு, நாடு பொருளாதார பிரச்சினையுடன் தடுமாற்றத்துடன் இருக்கும் பொழுது, இந்திய அரசியல், நாட்டுப்பற்று மற்றும் சுதந்திர போராட்ட அமைப்புகளுடன் உத்வேகம் ஊட்டப்பட்டிருந்தது. ஒரு சுதந்திர இந்தியாவை நினைத்துப் பார்க்கும்பொழுது, அதனுடன் பிணைந்திருக்கும் பிரச்சினைகளும் அவர்களது முன்பு எழுந்தன. மக்கள் பல காரணிகளால் பிளவுப் பட்டிருந்தது போல, தலைவரர்களும் சித்தாந்த-குழப்பங்களினால் பிளவுப் பட்டிருத்தனர். படித்த மேனாட்டு அரசியல் முறைகளை அறிந்து, அவை எந்த அளவிற்கு இந்திய சூழ்நிலைகளுக்கு ஒத்துப்போகும் என்று ஆயும்பொழுது, மக்கள் பலவித சமூக-பொருளாதார-அரசியல் நிகழ்வுகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

“ஆங்கிலேயருக்குப்பின்பு இந்தியாவை யார் ஆளவேண்டும்?” என்ற வினா எழுந்தபோது, அத்தகைய சித்தாந்தகளினால் மக்கள் வேறுபடநேர்ந்தது. அரசியல் தலைவர்களது ஆசைகள்-விருப்பங்கள் வெகுஜன மக்களின் நிலையை பாதிக்கும் முறையில் இருக்கவும் செய்தன. அத்தகைய நிலையில், தமது பேராசைகளுக்கு-லட்சியங்களுக்த் துணைப்போக மக்களை அவர்களது மென்மையான உணர்வுகள் மற்றும் உணர்வுப்பூர்வமாகவுள்ள பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு, இயக்கரீதியில் செயல்பட்டனர். இத்தகைய சூழ்நிலையில், ஆராய்ச்சியாளர்கள் அத்தகைய பிரச்சினையை அலசத் தயங்கியுள்ளது அல்லது அறவே தவிர்த்துள்ளனர் எனத்தெரிகிறது. ஆகவே, அந்த மூன்று தலைவர்கள் சந்தித்தது, உரையாடியது, தீர்மானித்தது, செயல்பட்டது அதன் விளைவுகள் முதலியனப்பற்றி இவ்வாய்வுக்கட்டுரையில் விவாதிக்கப்படுகிறது.

சந்திப்பின் பின்னணி மற்றும் ஏற்பாடுகள்: இந்தியாவின் பல பகுதிகளில் பிராமணரல்லாத இயக்கங்கள் 1920களில், குறிப்பாக தென்னகத்தில், ஆரம்பிக்கப்பட்டபோது சில பிராமணரல்லாதவர், முகமதியர் மற்ற தலைவர்கள், சித்தாந்தரீதியில், ஒரு கூட்டணியை தம்முள் உருவாக்கலாம் என தீர்மானித்தனர். அத்தகைய மாற்றங்களில் மதத்தில் ஈடுபாடற்ற, படித்த மேனாட்டு நாகரிகத்தில் ஊறிய ஜின்னா, மதரீதியில் செயல்பட ஆரம்பித்தார். அம்பேத்காரும் மேனாட்டு நாகரிகத்தில் ஈடுபாடுக்கொண்டிருந்தாலும், முதலில் மஹர் என்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போராட ஆரம்பித்து, சிறிது-சிறிதாக முகமதியர்-சித்தாந்தத்திற்கு ஆதரவாக தமது கருத்துகளை வெளிட ஆரம்பித்தார். திராவிட இயக்கமும் பிராமணரல்லாதவர்களின் நலன்களுக்கு மற்றும் அவர்களது மேம்பாட்டிற்கு ஆரம்பித்தாலும், பிறகு பெரியாரின் கொள்கைகளுடன், இந்துக்களுக்கு எதிராக மாறியது. பல நீதிகட்சி தலைவர்கள் முகமதியர் நலன்களுக்கு ஆதரவாக இருந்தாலும், இந்து-எதிர்ப்பு நிலையை வெறுத்தனர் என்பதனை இங்கு நோக்கத் தக்கது . இருப்பினும், பெரியாரைப் பின்பற்றுபவர்கள், முகமதியர்களுக்கிடையே இருந்த தொடர்புகள் 1930-40களுள் நன்றாகவே வளர்ந்தன. ஜின்னா, முகமது இஸ்மாயில் என்பவரை சென்னை மாகாணத்தின் முஸ்லீம் லீக் கட்சியைத் தொடங்கப்பணித்து, அவர் 1936ல் அதற்கு தலைவராகவும் ஆக்கினார். சென்னையில் 1938ல், முஸ்லீம் லீக் கட்சித் தொடங்கியதுடன், பெரியார் ஜின்னவை சந்திக்க ஏற்பாடு செய்திருக்கலாம். பெரியாரின் முகமதியத்தலைவர்களுடான தொடர்புகள் 1920களிலேயேத் தொடர்கின்றன. மூன்றாவது மஜிலிஸ்ஸுல் உலேமா மாநாடு ஈரோட்டில் நடந்தபோது, மௌலானா முஹம்மது அலி, ஹக்கிம் அகமது கான், ஷௌதிர்கலி குஸ்ஸமான் முதலிய மதத்தலைவர்கள் பங்குகொண்டனர், மற்றும் அவைகள் பெரியாரின் வீட்டிலேயேத்தங்கினர் . அலி சகோதரர்களை, பெரியார் தமது தாயார், மனைவிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கும் போது, “இந்த உலகமே காந்தியுடன் இருக்கும்போழுது, அந்த மஹாத்மாவோ, இந்த மௌலானா முஹம்மது அலியின் சட்டைப்பையில் இருக்கிறார்”, என்று சொன்னார்! பெரியார், இஸ்மாயில் சித்தாந்தரீதியில் வேறுபட்டிருந்தாலும் 1920லிருந்து ஒன்றாகயிருந்து, வேலை செய்துள்ளனர், அரசியல் பேசியுள்ளனர் மற்றும் நண்பர்களாகவும் இருந்து வந்துள்ளனர். இவர், முஸ்லீம் லீக் கட்சிக் கூட்டங்களில் பங்கு கொண்டது மட்டுமல்லாது, அவர்களது மீலாது நபி, ரம்ஜான் பண்டிகை-விழாக்களிலும் கலந்துகொண்டுள்ளார்.

அம்பேத்கர் பம்பாயிலேயே இருந்ததால், அவரையும் சந்திக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஜின்னா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்திலிருந்து “விடுபடும் நாள்” என முகமதியர் தீர்மானித்தது, இந்த மூவர்-சந்திப்பின், ஒரு முன்னேற்பாடே எனத்தெரிகிறது:

“காங்கிரஸை சாராத பல ஹிந்துக்கள் மற்றும் நீதிகட்சி தலைவர்கள், செட்யூல்ட் சாதியினர், பாரசீகர் முதலியோரும், “விடுபடும் நாள்” என்ற எங்களது கோரிக்கைக்கு ஆதரவு அளித்தனர் என்பது உண்மை.”

ஜின்னா, ஜனவரி 1, 1940 அன்று இவ்வாறு எழுதுகின்றார், 9வது தேதி, பெரியார், அம்பேத்கார் முதலியோரைச் சந்திக்கின்றார். பெரியார் “திராவிட நாட்டிற்கான” பிரிவு கோரிக்ககையை திசம்பர் 1938ல் நடந்த 14வது S.I.L.Fன் மாநாட்டில் முன்வைத்தார்! பிறகு, 1939ல் சர் ஸ்டஃபோர்ட் கிரிப்ஸை சந்தித்தபோது, “திராவிடத் தனிநாடு” கோரினார். அப்பொது அவருடன் இருந்தவர்கள்: சர் முத்தையாச் செட்டியார், என். எஸ். சாமியப்ப முதலியார், W. P. A. சவுந்திரப்பாண்டியன் . அதற்கான தீர்மானம் 1940ல் நிறைவேற்றப்பட்டது. ஆனால், வேடிக்கையென்னவென்றால் முஸ்லீம் லீக் 1942ல் கிரிப்ஸின் உத்தேசத்தை ஒப்புக்கொள்ளவில்லை.

அம்பேட்கர் மற்றும் பெரியார் 1939ல் “விடுபடும் நாளை” ஆதரித்தது: ஜின்னா டிசம்பர் 22, 1939 நாளை “விடுபடும் நாளாக” (the Day of Deliverance) – அதாவது எல்லா காங்கிரஸ் அரசாங்கங்களும் தொலைந்தன, முஸ்லீகள் விடுதலை அடைந்தனர் என்ற ரீதியில், முகமதியர்களை அனுசரிக்கச் சொன்னார். ஆனால், காங்கிரஸோ “பாராளுமன்ற கூடுதல்” என்ற எண்ணத்தை பிரபலமாக்கி, பாம்பேயில் ஜின்னா, நேருவை சந்திப்பார் என எதிர்ப்பார்த்திருந்தனர் . அம்பேத்கர், முஸ்லீம் லீக் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பங்கு கொண்டு ஆதரவாக பேசினார். சர் கரீம்பாய் இப்ராஹிம் தீர்மானத்தை டிசம்பர் 22, 1939 அன்று முன்மொழிந்தபோது, அம்பேட்கர் வழிபொழிந்தார். அம்பேட்கர் ஜின்னா பெந்தியர்கர் என்ற இடத்தில் நடந்த ஒரு பொதுகூட்டத்தில் சந்தித்துக்கொண்டு ஒருவரைஒருவர் கைகுலுக்கிக்கொண்டனர் என்பதுதான் அன்று முதல் செய்தியாக இருந்தது. பெரியாரும் தமது கட்சி மற்றும் எல்லா திராவிடர்களும் அந்த நாளை “காங்கிரஸிலமிருந்து இந்த நாடு விடுதலைப் பெற்ற நாளாக…………….பெருமளவில் கொண்டாட…………….” அழைப்பு விடுத்தார். உடனே, மேற்குறிப்பிட்டபடி, ஜனவரி 1, 1940 அன்று ஜின்னா காந்திக்கு எழுதுகிறார்: “காங்கிரஸை சாராத பல ஹிந்துக்கள் மற்றும் நீதிகட்சி தலைவர்கள், செட்யூல்ட் சாதியினர், பாரசீகர் முதலியோரும், “விடுபடும் நாள்” என்ற எங்களது கோரிக்கைக்கு ஆதரவு அளித்தனர் என்பது உண்மை.” ஆகவே அவர், அதற்குப் பிறகு பெரியார் அம்பேட்கரை சந்திப்பார் என்பது, நன்கே தெரிந்திருந்தது, என தெளிவாகிறது!

ஜனவரி 8, 1940 ஜின்னா, அம்பேட்கர், பெரியார் சந்திப்பு: சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த, மூவர் – ஜின்னா, அம்பேட்கர், பெரியார் சந்திப்பு ஜனவரி 8, 1940 அன்று நிகழ்ந்தது. மேற் குறிப்பிடப்பட்ட சம்பவங்களிலிருந்து, இத்தலைவர்கள் நேரிடையாகவும், தங்கள் நண்பர்கள் மூலமாகவும் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருப்பர் எனத் தெரிகிறது. ஜனவரி 5, 1940 அன்று காலை, பெரியார் பம்பாயின் பிராமணரல்லாத குடிமகன்களின் அழைப்பை ஏற்று, பம்பாயிற்குப் புறப்பட்டு செல்கிறார். அவருடன், நீதிபதி டி.ஏ.வி.நாதன், பி.பாலசுப்ரமணியம், “சண்டே அப்ஸர்வர்” பத்திக்கையாசிரியர் (நீதிகட்சி சார்புடையது), சி.என்.அண்ணாதுரை, நீதிகட்சியின் பொதுசெயலாளர், டி.பி.என்.பொன்னப்பன், சி.பஞ்சாக்சரம் முதலியோரும் சென்றனர். குமரராஜா முத்தைய்யச் செட்டியார், கலிஃபுல்லா முதலியோர் வழியனுப்பி வைத்தனர். 06-01-40 பத்து மணிக்கு தாதர் ஸ்டேசனை அடைந்ததும், அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட குதிரை-கோட்சு வண்டியில் அழைத்துச்செல்லப்பட்டனர். மாலையில், அம்பேட்கர் இல்லத்தில் அவருடன் பல சமூக-அரசியல் பிரச்சினைகளை மணி 9 முதல் 10,30 வரை பேசி விவாதித்தனர்.

07-01-40 அன்று, அம்பேட்கர், கோகலே கல்வி நிலையத்தில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ததுடன், இரவு உணவையும் ஏற்பாடு செய்தார். எஸ்.சி.ஜோஸி, M.L.C., ஆர்.ஆர். போலே, M.L.A., டி.ஜி.ஜாதவ், M.L.A., முதலியோர் வந்திருந்தனர். அம்பேட்கர், விருந்தினரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

08-01-40 அன்று, அவர்கள் ஜின்னாவின் இல்லத்தில் சந்தித்து, நடப்பு அரசியல் போக்குகளை மாலை 5.30 முதல் 8.30 வரை விவாதித்தனர். டி.ஏ.வி.நாதன், பி.பாலசுப்ரமணியம், கே.எம்.பாலசுப்ரமணியம் முதலியோர் இருந்தனர். காங்கிரஸ்-அல்லாத கட்சிகளின், காங்கிரஸ்-எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பற்றி கீழ்கண்டவாறு விவாதிக்கப் பட்டது:

1. காங்கிரஸிலேயே பிராமணரல்லாத ஒரு எதிர்ப்பு குழுவை ஏற்படுத்த உள்ள சாத்தியக்கூறுகள்.
2. முகமதியர், செட்யூல்ட்-சாதியினர், பிராமணரல்லாதவர், காங்கிரஸை விட்டு வெளியேறி கங்கிரஸ்-அல்லாத கட்சிகளில் சேரத்தூண்டுவது.
3. காங்கிரஸ் அல்லாத கட்சிகள் காங்கிரஸுக்கு எதிராக ஒருமித்து செயல்படுவது.
4. இந்தி-எதிர்ப்பு போராட்டம்.
5. காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை எல்லா விதத்திலும் தர்மசங்கடத்தில் ஆழ்த்துவது.
6. முகமதியர், பிராமணரல்லாதவர், ஒடுக்கப்பட்ட-பிரிவினர் ஒன்றாக சேர்ந்து செயல்பதுவது.
7. மஹர், முகமதியர் மற்றும் திராவிடர்களுக்கு தனிநாடு கேட்பது.
8. பிரிடிஸ்/ஆங்கிலேய-அரசாங்கத்திடம் அவ்வாறே விண்ணப்பம் செய்வது.

பிறகு, கீழ்கண்டவாறு மூவரும் தீர்மானித்தனர்:

1. ஜின்னாவும், அம்பேட்கரும் ஏப்ரல் அல்லது மே 1940ல் தமிழ் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து “திராவிட நாடு” கோரிக்கையை ஆதரித்து பேசுவது (ஏ.பொன்னம்பலம் கூற்றுப்படி).
2. பெரியார் மறுபடியும் பம்பாயிற்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது.
3. பெரியார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முகமதியர்-நலன்களுக்கு ஒன்றாக சேர்ந்து செயல்படுவது, அவர்களை ஆதரிப்பது.
4. அம்பேட்கரும் முகமதிய-நலனுக்கு ஆதரவாக இருப்பார்.
5. எல்லோரும் சேர்ந்து காங்கிரஸுக்கு பெருமளவில் பிரச்சினைகளை கிளப்புவது-ஏற்படுத்துவது.
6. ஆங்கிலேயரிடம் அவ்வாறே முறையிட்டு, அதிகாரம் காங்கிரஸிடம் மட்டும் இருக்கக்கூடாது என வற்ப்புறுத்துதல்.

09-01-40 அன்று அம்பேட்கர், பெரியாருக்கு இரவு உணவு ஏற்பாடு செய்திருந்தார். அதில், கீழ்கண்டவர் பங்குகொண்டனர்:

• ஜெகல், “செந்தினல்” பத்திரிக்கை நிருபர்.
• ராவ், “டைம்ஸ் ஆஃப் இந்தியா”வின் பிரதான நிருபர்
• பல்ஸாரர், ஒரு பத்திரிக்கையாளர்
• பி.என்.ராஜ் போஜ்
• முத்தைய்யா முதலியார், முந்தைய சென்னை மந்திரி.
• சொக்கலிங்கம், வக்கீல், மற்றும் அவரது மகன்
• மற்றும் பலர்

ராத்திரி 11 மணிக்கு கூட்டம் முடிந்தது. என்ன விவாதிக்கப்பட்டது என்பது பற்றி முழு விவரங்கள் தெரியவில்லை என்றாலும், அவைகளது கூட்டம் மற்றும் எடுத்த தீர்மானங்கள் இந்திய அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். ஏனெனில், அன்றிலிருந்து மூன்றே மாதங்களில் “பாகிஸ்தான்” என்ற தனி நாடு கோரிக்கைத் தீர்மானம் அகில இந்திய முஸ்லிம் லீக் மாநாட்டில், லாகூரில் மார்ச் 25, 1940 அன்று, நிறைவேற்றப்பட்டது (பின்னிணைப்பு-1 பார்க்கவும்). ஏழே மாதங்களில், “திராவிடஸ்தான்” கோரிக்கைத் தீர்மானம் ஆகஸ்டு 1940ல் திருவாரூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது .

லாகூர் தீர்மானத்திற்குப் பிறகு, நீதிக்கட்சி, முஸ்லீம் லீக் இடையிலான உறவின் நெருக்கம் மேலும் கூடியது. மதுரையில் மார்ச் 1940ல் நடந்த ஒரு இரு-கட்சி சேர்ந்த கூட்டத்தில், “திராவிடஸ்தான்” உருவாக்க ஜின்னாவின் உதவி பெறப்படும் என்றும், அதற்காக “ஜின்னா பெரியாருக்கு அவ்வாறு வாக்குக் கொடுத்தார்” எனவும் கூறப்பட்டது . இவ்வாறு, இருவரும் நல்ல உறவை வைத்திருந்தனர்.

பெரியார் ஜின்னாவை 1941ல் சென்னையில் சந்திக்கிறார்: முஸ்லிம் லீக்கின் 28வது வருடாந்திர கூட்டம் ஏப்ரல் 11, 1941ல் சென்னையில் “மக்கள் பூங்கா” என்ற இடத்தில் நடந்தது. ஜின்னா பம்பாயிலிருந்து, கூட்டத்தின் துவக்க விழாவிற்கு வந்திருந்தார். ஜின்னாவும், பெரியாரும் மேடையில் இருந்தனர். மற்றவர்கள் – ஆர்,கே.சண்முகம் செட்டி (கொச்சினுடைய திவான்), கே.வி.ரெட்டி, எம்.ஏ.முத்தைய்யா செட்டி, சீ.ஆர்.ஸ்ரீநிவாசன் (சுதேசமித்திரனின் ஆசிரியர்), எம்.சி.ராஜா, என்.சிவராஜ், சர்.ஏ.பி,பட்ரோ, முதலியோரும் மேடையில் இருந்தனர். ஜின்னாவும், அவரது தோழர்களும் வெளிப்படையாக தென்னிந்தியாவில் மற்றொரு சுதந்திர நாட்டை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்தனர். ஜின்னா இங்கு, மூன்றாவதாக, மற்றொரு நாட்டையும் முன் வைக்கிறார் : “இந்தத் துணைக்கண்டத்தில் இரு சமூகங்கள் உள்ளன: ஒன்று முஸ்லீம் சமூகம் மற்றது இந்து சமூகம், இருப்பினும், இந்த இடத்தில், மற்றொரு நாடுள்ளது, அது “திராவிடஸ்தான்” ஆகும். அப்பகுதியைச் சேர்ந்த 3% மக்கள் தேர்தலில் 3% பெற்று பெரும்பான்மை பெறவேண்டும். இது ஜனநாயகமா அல்லது மாயையா, எனத் தெரியவில்லை. ஆகையால், எனக்கு அவர்களிடத்தில் முழுமையான அனுதாபம் உள்ளது, மற்றும் எனது ஆதரவு அந்த பிராமணரல்லாதவருக்கு உண்டு. நான் ஒன்று அவர்களுக்குச் சொல்கிறேன்: “தாங்கள் உங்களுடைய வாழ்க்கையில் முன்னேறி வரவேண்டுமெறால், தங்களுக்குள்ள ஒரே வழி தங்களது கலச்சாரம், மொழி என்ற ரீதியில் செல்வதுதான்”.” இந்த விதமாக, ஜின்னா, “மூன்று-நாடு-சித்தாந்தத்தை”, மூன்று நாடுகளை– ஹிந்துஸ்தானம், பாகிஸ்தானம், திராவிடஸ்தானம் முறையே ஹிந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் திராவிடர்களுக்கு முன் வைக்கிறார். இவ்வாறு சொல்லும்போது, மஹர்கள் மற்றும் செட்யூல்ட் சாதி மக்களை ஒதுக்கி விடுவதோடு, மறந்தும் விடுகிறார்! உண்மையில், முஸ்லீம்களுக்காக தனி நாடு கேட்டு, ஆங்லிலேயரிடத்தே “இருநாட்டு” சித்தாந்தத்தை முன் வைக்கிறாரேத் தவிர, “மூன்று நாடு” அல்லது “நான்கு நாடு” சித்தாந்தத்தையல்ல! (செட்யூல்ட் சாதி மக்களையும் செர்த்து சொல்வதானால்). இந்த “பல நாட்டு” சித்தாந்தக்கொள்கை, லெனின் மற்றும் ரோசாலக்ஸம்பர்க் முதலியோரால் விவாதிக்கப்பட்டது, உருவாக்கப்பட்டது ஆகும்.

பெரியார் ஜின்னாவை 1941ல் சென்னையில் மறுபடியும் சந்திக்கிறார் (?): ஜின்னாவினுடைய ஆகஸ்டு 17, 1944 தேதியிட்ட கடிதத்தின் படி (பின் சேர்க்கை-3, பார்க்கவும்) பெரியார் இவரை சென்னையில் இருமுறைச் சந்தித்து உரையாடியுள்ளார்கள். ஜின்னா பெரியாரிடம் மிகவும் தெளிவாக கூறியுள்ளதாவது , “தான் “திராவிடஸ்தானத்தை” கொள்கை ரீதியில் ஆதரிப்பதாகவும், திராவிடர்தாம் அதற்கு பாடுபடடேண்டும் என்றும், தான் ஒரு முஸ்லீம் என்பதினால், தான் முஸ்லீம் நலத்திற்காகத்தான் வேலை செய்ய முடியுமேத் தவிர, முஸ்லீம்-அல்லாதவர்களுக்கு வேலை செய்ய முடியாது”. பிறகு தனது கடிதத்தில் இதை வெளிப்படையாகவே குறிப்பிடுகிறார்.

பெரியார் ஜின்னாவை 1942ல் (?) தில்லியில் சந்திக்கிறார்: பெரியார் ஜின்னாவை தில்லியில் சந்தித்து பாகிஸ்தான்-திராவிடஸ்தான் பற்றி விவாதித்ததாகத் தெரிகிறது. அப்பொழுது, ஜின்னா, தான் முஸ்லிம்-அல்லாதொருக்காக போராட முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கவேண்டும். பெரியாரும், எப்படி தாங்கள் இந்துக்களிலிருந்து வேறுபட்டவர்கள் என்று தமது சித்தாந்தத்தை விளக்கியிருக்கக்கூடும் . தனது பேச்சுகள், எழுத்துகள் முதலியவற்றை ஆதாரங்களாக எடுத்துக்காட்டியிருக்கலாம். ஆனால், உலேமாக்களின் ஆணைக்குக் கட்டுப்பட்டு திராவிட அரசியலிலிருந்து ஒதுங்கத் தீர்மானித்து இருக்கலாம். இங்கு குறிப்பிட வேண்டியது என்னவென்றால், காந்தியின் தலைமையில் முகமதியர்கள் வேலை செய்வதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில், மாற்றுமதத்தினர்-முகமதியரல்லாதவர், “காஃபிர்கள்” ஆவார்கள், குரானின் படி, முகமதியர் அவர்களுடன் எந்த சம்பந்தமும் வைத்துக்கொள்ளக்கூடாது. அவர்கள், மிகவும் கீழ்நிலையிலுள்ள அல்லது மோசமான ஒரு முகமதியனை விட மிகவும் தாழ்ந்தவர்கள், கேவலமானவர்கள். பெரியார் இதனைப் புரிந்துகொண்டாரா இல்லையா எனத்தெரியவில்லை.

Series Navigation

கே. வி. ராமகிருஷ்ண ராவ்

கே. வி. ராமகிருஷ்ண ராவ்