கோபம்—————இது ஆணுக்கு மட்டும் சொந்தமானதா?

This entry is part [part not set] of 42 in the series 20090115_Issue

ஸ்ரீரஞ்சனி


‘ஆம்பிளை என்றால் கோபம் வரத்தான் வேண்டும். கோபம் வராவிட்டால் அவன் ஆம்பிளை இல்லை. பொம்பிளை என்றால் எதற்கும் பொறுத்துத்தான் போக வேண்டும்……’ இப்படிப் பல ஏட்டில் எழுதப்படாத, கல்லில் பொறிக்கப்படாத ஆனால் பழகிப்போன பல வாசகங்களை நாம் இன்னும் கேட்டுக் கொண்டுதான் இருக்கி;றோம். இவை நம் கலாச்சாரத்துக்கு மட்டும் அல்ல. அனைத்து கலாச்சாரங்களுக்கும் சொந்தமானவையாகத் தான் இன்றும் இருக்கின்றன. கடந்து போன மனித வரலாற்றினைப் பார்த்தோமானால் அனைத்து சமூகங்களிலும் அது வீடாக இருந்தால் என்ன அல்லது வேலைத் தலமாக இருந்தால் என்ன, ஒரு காலத்தில் ஆண் தான் அதிகாரத்தின் பிரதிநிதியாக அங்கீகரிக்கப்பட்டு இருந்திருக்கின்றான். இதனால் பெண்கள் தமது நியாயப்படுத்தப்படக் கூடிய கோபத்தைக் கூட தகுந்த வழியில் வெளிப்படுத்த முடியாமல் ஆண் மையப்படுத்தப்பட்ட சமூக அமைப்பிற்கு பழக்கப்பட்டிருந்தார்கள்.

இன்று நிலைமை மாறி பெண்ணும் ஆணுக்கு சமமாக அறிவைப் பெற்று, தொழில் செய்தாலும் கூட பழைய பண்பாட்டுக் கோலங்கள் மீண்டும் அவளைத் தன் வட்டத்துக்குள் வலோற்காரமாக இழுக்கின்றன. இச் செயற்பாடு சமூகத்தில் பெரும் முரண்பாடுகள் வளரக் காரணமாகின்றது. ஏதோ ஒரு வகையில் பெண் ஆணில் தங்கி வாழும் நிலையிருந்தால் அவளுக்கு அதனுடன் இழுபட வேண்டிய கட்டாயமும் உண்டு. அப்படி இல்லாவிடின் வாழ்க்கை போராட்டம் தான்.

அண்மையில் ஒரு தமிழ் வானொலிக் கலந்துரையாடலின் போது கேட்ட ‘கோபம் வராவிட்டால் ஆம்பிளை இல்லை’ என்ற அசட்டுக் கருத்துப் பற்றி ஒரு இலக்கியச் சந்திப்பில் நான் குறிப்பிட்ட போது, “நமது தமிழ் இலக்கியம் பெண்களின் கோபம் பற்றி அல்லவா அதிகமாகக் கதைக்கிறது. கண்ணகிக்கு, பாஞ்சாலிக்கு வந்த கோபம் பற்றி……” எனச் சில ஆண்கள் குறிப்பிட்டுக் காட்டினார்கள். அப்படிப் பார்க்கும் போது நமது முன்னோர் பெண்களின கோபத்தை ஏற்றிருக்கிறார்கள். அன்று பெண்ணுக்கு கோபம் வரக்கூடாது என எங்கும் சொல்லி வைக்கவில்லை. காலப்போக்கில் கோபம் ஆண்களின் குண இயல்பாக எப்படியோ திரிபடைந்து விட்டது. பெரும்பாலான ஆண்கள் கோபத்தை தமது வாழ்க்கையின் ஒரு பகுதியாக நினைக்கிறார்கள். சில பெண்கள் அதற்கு ஒத்து ஊதுகிறார்கள்.

கோபம் கொண்ட மனிதன் தன் கோபத்தின் அளவைப் பல வேறுபட்ட பரிமாணங்களில் வெளிப்படுத்துகின்றான். அது பெரும்பாலும் அமைதியான புறக்கணிப்பாகவோ அல்லது விலங்குகள் போல பலத்த சத்தம் எழுப்பி, பல்லை நெருமி, உறுமலைக் காட்டும் பயமுறுத்தலாகவோ அல்லது பலாத்காரத்தின வெளிப்பாடான உடைத்தல், அடித்தல், துன்புறுத்தலாகவோ இருக்கிறது. கோபம் பழிவாங்கும் கட்டத்துக்குப் போனால் பலாத்காரத்தின் உச்சமான கொலையாக முடிகிறது. இவை யாவும் ஏற்றுக்கொள்ள முடியாத சம்பந்தப்பட்ட அனைவரையும் மிகவும் பாதிக்கும் வெளிப்பாடுகள் ஆகும். ஆராட்சிகளின் படி பெண்களைவிட அதிக எழைடநவெ டிநாயஎழைச காட்டுபவர்கள் ஆண்கள். அனேகமான பெண்கள் மனதுக்குள் கோபத்தை வைத்து குமைகின்றார்கள்.

கோபம் வருவது மனித இயல்பு. ஆனால் தமிழ் வானொலி ஒன்றில் ஒலிபரப்பான ஒரு தமிழ் நாடகத்தில் வந்தது போல் ஆம்பிளை என்றால் அப்படித்தான் என்று பலாத்காரத்தைப் பொறுத்துக் கொண்டு அடி வாங்கிய பின்பும் உடலுறவில் ஈடுபட்டு, நீ அப்படிச் செய்ததால் தானே உன்னை அடித்தேன் என ஆண் தனது நடத்தைக்கு தான் பொறுப்பேற்காமல், அதுவும் பெண்ணின் பிழையே என குற்றம் சாட்ட, அதையும் கூட பெண் நம்புவது மிகவும் வேதனைக்குரியது. சில பெண்கள் அப்படியான கதைகளைக் கேட்டுக் கேட்டு அதை நம்பி விடுகிறார்கள். அந்த நம்பிக்கையால் அவர்கள் மனத் தகைப்புக்குள்ளாகி மன நோயாளியாகின்றனர். அல்லது தமது கோபத்தை வெளிக்காட்ட முடியாமல் தம் மனத்துக்குள் மூட்டை கட்டிக் கட்டி மனநோயாளியாகின்றனர். இன்னும சிலர் தமது ஆற்றாமையை தமது பிள்ளைகளின் மேல் காட்டி பிள்ளைகளின் மனதைப் பாழடிக்கின்றனர். அல்லது பிள்ளைகளின் நடத்தைச் சீர்கேடுகளுக்கு காரணமாகிறார்கள். பின்னர் பிள்ளைகளை வீணாக நோகடித்த பரடைவல உணர்வில் தம்மைத்தாமே தண்டித்துக் கொள்கிறார்கள். அத்தோடு கோபத்தை மனதில் வைத்துக் கொண்டு, பலாத்காரத்தின் வலியை உணர்ந்து கொண்டு உடலுறவில் ஈடுபடுவது மிகப்பெரிய மனத்தகைப்பு என்பது வேறுவிடயம்.

கோபத்தால் வரும் மன வலி சம்பந்தப்பட்ட அனைவரையும் பாதிக்கும் உடல் சித்திரவதையோ உறவை விட்டுத் தூர ஓட வைக்கும். இப்படியான சூழலில் உள்ள பிள்ளைகள் பெற்றோர்களை வெறுக்கின்றார்கள். ஆனால் வழியின்றி அடக்குமுறைக்கு அடங்கிப் போகின்றார்கள். ஆனால் தருணம் பார்த்து குடும்ப அமைப்பை உடைத்தெறிந்து விலகி ஓடத் தவிக்கும் பல சிறுவர்களை நான் அறிவேன். சிலவேளைகளில் பிள்ளை வளர்ப்பில் வன்முறையை பாவிக்கும் பெற்றோர் தாம் வளர்த்த முறை அது, பிள்ளை ஒழுங்காக வளர உதவும் முறை அது என நம்புகிறார்கள். ஆனால் அது தமது கோபத்தால் ஏற்பட்ட மன வலியின் பிரதிபலிப்பு என உணர்வதில்லை.

இதற்கு கோபம் வருவது பிழையல்ல. நியாயமான கோபம் குழந்தைகளுக்கு கூட வரலாம் என்ற விளக்கமும், அதை எப்படி யாரும் ஏற்கக்கூடிய, மனம் புண்படாத வழியில், வெளிப்படுத்தலாம் என்று அறிவும் தேவை. தேகப்பியாசம் செய்தல், காலாற நடத்தல், சிநேகிதருடன் மனம் விட்டு கதைத்தல், உணரும் உணர்ச்சிகளை ஒரு கடதாசியில் எழுதல் என்பன அந்த நேரக் கோபத்துக்கு ஒரு ஆறுதலைப் பெற உதவும். ஆனால் பின்னர் பாதித்த நிகழ்வு அல்லது செயற்பாடு பற்றி குற்றம் கூறும் தொனியில் கதையாமல் அது குறிப்பிட்டவரை, குறிப்பிட்ட உறவைப் பாதிக்காமல் இருப்பதற்கான முயற்சி என்ற தொனியில் சம்பந்தப்பட்டவருடன் மனம் விட்டுக் கதைப்பது அவசியம். அப்படிக் கதைக்க முடியாத கட்டத்துக்கு இருவரும் வந்தால் counseling மிகவும் உதவி செய்யும். அல்லது அது வடிகால் தேடி வேறு உறவுகளின் சேர்க்கை அல்லது தற்கொலை, கொலை என வேறு பல தரப்பட்ட அழிவுகளில் வளர்தோரில் முடிவடைய பிள்ளைகள் போதைப்பொருள், மது, குழு வன்முறை என தம்மைத் தாமே அழிக்கும் துர்ப்பாக்கிய நிலை வரும். எனவே குடும்பத்தில் உள்ள ஒருவரின் கோபம் குடும்பத்தில் ஏதோ ஒரு வகையில் அழிவை அல்லது சூழ இருப்போரில் குழப்பத்தை உள்ளாக்கினால் அதற்கென பயிற்சி பெற்றவர்களின் உதவியை நாடவேண்டும்.

அதற்காக பெண்கள் அதீத கோபம் கொண்டு வன்முறையில் ஈடுபடுவது இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் ஒப்பீட்டளவில் குறைவு என்றே சொல்ல வேண்டும். எங்கள் சமுதாயத்திலேயே நடக்கும் பல விபரீதங்கள் அனைவருக்கும் தெரிந்ததுதான். பிரச்சினை இல்லாதவர் என யாருமில்லை. அதை எப்படிக் கையாளுவது என்பதும் கையாள முடியாவிட்டால் அதிலிருந்து எப்படி மீள்வது என்பதும் தான் முக்கியம்.

அத்துடன் தமிழ் ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் நடத்தலும் மிக இன்றியமையாதது. ஊரில் அரைத்த மாவை மீண்டும் அதே வழியில் இங்கும் அரைப்பது மேலும் அனர்த்தங்களுக்கே வழி கோலும். கனடா மனித நேயமிக்க தனிமனித சுதந்திரத்துக்கு மதிப்புக் கொடுக்கும் நாடு எனவே பெண், ஆண் எனப் பாகுபாடு பாராது அனைவரும் மனிதர் எனப் பார்த்தல் உறவுகளின் செம்மைக்கு மிகமிக அவசியம்.


Series Navigation

ஸ்ரீரஞ்சனி

ஸ்ரீரஞ்சனி