அலெக்ஸாந்தர் சொல்ஸ்-ஹெனி-ஸ்ட்ஸின் (Aleksandr Solzhenistsyn)

This entry is part [part not set] of 45 in the series 20080814_Issue

நரேந்திரன்



Harm no other being; They are your Brothers and Sisters.
– Buddha.

அலெக்ஸாந்தர் சொல்ஸ்ஹெனிட்ஸின் மரணச் செய்தி (ஆகஸ்ட், 4) கண்டபோது மனம் சிறிது சஞ்சலமடைந்தது. அன்றைய சோவியத் யூனியனில் பாலும், தேனும் ஓடுகிறது என்கிற அண்டப்புளுகை முதன் முதலில் உடைத்தெறிந்தவர் சொல்ஸ்ஹெனிட்ஸின். இந்தியா போன்ற நாடுகளில் இன்றளவும் மாபெரும் தலைவர்களாகச் சித்தரிக்கப்படுகின்ற லெனின் மற்றும் ஜோசப் ஸ்டாலினின் கொடூர முகத்தை உலகின் கவனத்திற்குக் எடுத்துச் சொன்னவர் அவர். 1974-ஆம் வருடம் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற சொல்ஸ்ஹெனிட்ஸின் இழப்பு ஒரு ஈடு செய்யவியலாத ஒன்று. அவரின் “One Day in the Life of Ivan Denisovich” மற்றும் “The Gulag Archipelago” போன்ற புத்தகங்கள் உலகப்புகழ் பெற்றவை.

சர்வாதிகார மனோபாவம் படைத்த ஜோசப் ஸ்டாலினின் ஆட்சிக்காலத்தில் ஏறக்குறைய 29 மில்லியன் ரஷ்யர்கள், எவ்விதமான காரண காரியங்களும் இன்றி, ஸ்டாலினின் ஒற்றர்களாலும், NKVD எனப்பட்ட ரகசியப் போலிசாராலும் கைது செய்யப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டனர். ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர், முதியோர் என்ற பாகுபாடின்றி கைது செய்யப்பட்டு, மனிதர்கள் வாழ இலாயக்கில்லாத சைபீரியப் பகுதிகளுக்கு அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்டு, உறைய வைக்கும் கடுங்குளிரில் காடுகளை அழித்து இரயில் பாதைகளைப் போடுவதற்குப் பணிக்கப்பட்டனர். தாங்கவொண்ணாக் கடுங்குளிரும், சித்திரவதைகளும் தாளாது பெரும்பான்மையோர் இறந்து போயினர். Gulag எனப்படும் சித்திரவதை முகாம்கள் முதலில் லெனினினால் வடிவமைக்கப்பட்டு, ஸ்டாலினால் விரிவு படுத்தப்பட்டது. லெனினின் நண்பர்கள் பலர்தான் முதன் முதலின் அதனை அனுபவித்து அறிந்தவர்கள்.

அவ்வாறு கைது செய்யப்பட்டு சைபீரியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒருவர்தான் சொஸ்ஹெனிட்ஸின். ரஷ்ய ராணுவத்தில் கேப்டனாகப் பணிபுரிந்து வந்த அவர் செய்த ஒரெ குற்றம், தனது நண்பருக்கு எழுதிய கடிதமொன்றில் “அந்த மீசைக்கார மனிதன் (That mustached man)” எனக் குறிப்பிட்டு எழுதியது மட்டுமே. அதற்காக அவருக்குப் பத்தாண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டு சைபீரியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இரண்டாம் உலகப்போரின் போது, ஹிட்லரின் நாஜிக்களுக்கு எதிராக பல வெற்றிகளை ஈட்டித் தந்த சொல்ஸ்ஹெனிட்ஸினுக்கு ஸ்டாலின் அளித்த பரிசு அது. அவருக்கு மட்டுமல்ல. அவருடன் பணிபுரிந்த, நாட்டுப்பற்று மிக்க ரஷ்ய ராணுவத்தினரில் பலருக்கும் அந்த கதியே ஏற்பட்டது. எதனையும், எவரையும் சந்தேகக் கண்கொண்டே பார்க்கப் பழகிய சர்வாதிகாரியான ஸ்டாலினிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

சைபீரிய Gulag-இல் செங்கல் சூளையில் பணிபுரிந்த சொல்ஸ்ஹெனிட்ஸின், அதனை அடிப்படையாக வைத்து எழுதிய நாவல்தான் மேற்கூறிய One Day in the Life of Ivan Denisovich. ஸ்டாலினின் மரணத்திற்குப் பின் சோவியத் அதிபராகப் பதவியேற்ற நிகிடா குருஷ்ச்சேவ், ஸ்டாலினின் தவறுகளைக் களைய முயன்றார். அரசாங்கத்திற்கெதிரானவை என்று கருதப்படும் புத்தகங்கள் சோவியத் யூனியனில் பிரசுரிக்கப்படுவதில்லை. ஆனால் ஒரு விதி விலக்காக 1962-ஆம் வருடம் சொல்ஸ்ஹெனின்ட்ஸினின் One Day in the Life …. பிரசுரிக்கப்பட்டது (குருஷ்ச்சேவின் ஆட்சிக்காலத்தில்). சோவியத்தில் பிரசுரிக்கப்பட்ட, அரசாங்கத்தை விமரிசித்து எழுதப்பட்ட முதலும் கடைசியுமான புத்தகம் அது ஒன்று மட்டுமே.

Gulag-களில் நிகழ்ந்த அநீதிகளைப் பற்றி மிகுந்த ஆதாரத்துடன் எழுதப்பட்ட The Gulag Archipelago சோவியத் யூனியனில் பிரசுரிக்கப்படவில்லை. மாறாக, பழுப்பேறிய தாள்களில் டைப் செய்யப்பட்ட அந்தப் புத்தகம் சோவியத் யூனியனில் பலராலும் ரகசியமாகப் படிக்கப்பட்டது. பின்னர் சோவியத்தை விட்டு கடத்திக் கொண்டுவரப்பட்டு பிரசுரிக்கப்பட்ட அந்தப் புத்தகம் சொல்ஸ்ஹெனிஸ்ட்ஸினுக்கு நோபல் பரிசு பெற்றுத் தந்தது. அதன் காரணமாக சொல்ஸ்ஹெனிட்ஸின் ரஷ்யக் குடியுரிமை பறிக்கப்பட, அவர் ஜெர்மனிக்கு குடும்பத்துடன் நாடு கடத்தப்பட்டார். சோவியத் யூனியன் சிதறுண்ட பிறகு 1990-ஆம் வருடம் சொல்ஸ்ஹெனிஸினுக்கு ரஷ்யக் குடியுரிமை மீண்டும் அளிக்கப்பட்டது. கார்ப்ச்சேவிலிருந்து, போரிஸ் எல்ட்ஸின், விளாதிமீர் புடின் என்று பலரும் சொல்ஸ்ஹெனிஸ்ட்ஸினைக் கொண்டாடினர். KGB-யின் பழமையான ஆவணங்கள் மீண்டும் திறக்கப்பட்டுச் சரிபார்க்கையில் சொல்ஸ்ஹெனிஸ்ட்ஸின் எழுதியிருந்தவைகள் பெரும்பாலும் உண்மையேயென உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இறுதிக் காலத்தில் ரஷ்ய அரசியலில் நுழைந்து சிறிது கோமாளித்தனம் செய்தாலும், சொல்ஸ்ஹெட்ஸின் இழப்பு ஈடு செய்யவியலாத ஒன்றே.

***

வழக்கம் போல தமிழ் பத்திரிகைகள் ‘சினிமா நடிகையின் சீமந்தம்’ போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளைக் கொட்டை எழுத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்க, மலையாள மனோரமா (ஆன்லைன்) முதல் பக்கத்தில் சொல்ஸ்ஹெனிட்ஸின் மரணச் செய்தியை வெளியிட்டிருந்தது. தமிழ் எழுத்தாளர்களில் பலர் “மார்க்ஸியச் சிந்தனையில்” ஊறியவர்கள். அல்லது அது போல நடித்துக் கொண்டிருப்பவர்கள். சொல்ஸ்ஹெனிட்ஸின் போன்றவர்களை அவர்கள் படித்திருப்பார்கள் என்று நம்ப இடமில்லை.

உண்மையில் மார்க்ஸியம் (aka கம்யூனிஸம்) ஒரு மரணித்துப் போன சித்தாந்தம். மார்க்ஸியம் காலடி வைத்த இடமெங்கும் பேரழிவுகளே நிகழ்ந்தன. உலக நன்மைக்கு மார்க்ஸியம் இதுவரை எதுவும் செய்ததில்லை. மாறாக இலட்சக்கணக்கான அப்பாவிகளைக் கொன்று குவித்தது மட்டுமே மார்க்ஸியத்தின் ஒரே சாதனை. கலாச்சாரப் புரட்சி என்ற பெயரில் கோடிக்கணக்கான சீனர்களை பட்டினியில் தள்ளிக் கொன்ற மாவோவையும், படுகொலைகள் மூலம் கம்போடியாவை அழிவில் தள்ளிய போல் பாட்டும் (Pol Pot), தனது குடிமக்களை மாறாத துன்பத்திலும், துயரத்திலும் உழல வைத்துக் கொண்டிருந்த ·பிடல் காஸ்ட்ரோவும், புல் பூண்டுகளைத் தின்று ஜீவிக்கும் நிலைக்கு வட கொரிய மக்களைத் தள்ளிய கிம்-இல்-ஜங்கும், 29 மில்லியன் ரஷ்யர்களைக் கொன்று குவிக்கக் காரணமாக இருந்த லெனினும், ஸ்டாலினும் மார்க்ஸியர்களே. அடிப்படையில் மார்க்ஸியம் ஒரு சாதாரண உயிர் காக்கும் மருந்தைக் கூட இவ்வுலகிற்கு அளித்ததில்லை என்பதே உண்மை. இனியும் அளிக்கப் போவதில்லை. இத்தனைக்குப் பின்பும் மார்க்ஸியத்தை தூக்கிப் பிடிக்கும் தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் விசித்திரமானவர்கள்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக கம்யூனிஸ்டுகள் ஆட்சி புரியும் மேற்கு வங்கத்தில் பாலும், தேனுமா பெருக்கெடுத்து ஓடுகிறது? பெரும்பாலும் மார்க்ஸிஸ்டுகளே ஆண்ட நமது அண்டை மாநிலமான கேரளத்தின் இன்றைய தேக்க நிலைக்கு யார் காரணம்?

மார்க்ஸ், லெனின், ஸ்டாலின் எனப் (புனை) பெயரிட்டுக் கொள்பவர்கள் இன்றைக்கும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்பதனைக் காண்கையில் மிகுந்த ஆச்சரியமேற்படுகிறது. இவ்வாறு பெயரிட்டுக் கொள்பவர்களில் பெரும்பாலர் மெத்தப் படித்தவர்களாக தங்களைக் காட்டிக் கொள்கிறவர்கள் என்பது இன்னுமொரு ஆச்சரியம். மார்க்ஸிய, கம்யூனிச, சோசலிஸ, மாவோயிஸ வரலாறுகளை இவர்களில் பெரும்பாலோர் அறிந்திருக்க மாட்டார்கள் என்ற முடிவிற்கே வரவேண்டியிருக்கிறது. அறிந்திருப்பின் அப்பெயர்களை இட்டுக்கொள்ள நாணியிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

எண்பதுகளில் எனது ஆதர்ச எழுத்தாளராக இருந்த ஜெயகாந்தன் சோவியத் யூனியனின் சுபிட்சம் குறித்து கட்டுரைகள் எழுதித் தள்ளிக் கொண்டிருந்தார். ஆங்கிலம் அறிந்த, உலக நடப்புகள் அறிந்த, சுயமாகச் சிந்திக்கத் தெரிந்த ஜெயகாந்தனுக்கு அங்கு நடந்து கொண்டிருந்தவை பற்றித் தெரியாமலா இருந்திருக்கும்? (வித்தாலி ·பூர்ணிக்காவ் என்ன ஆனார் ஜே.கே?) பின் எதற்காக அப்படி எழுதிக் கொண்டிருக்க வேண்டும்? வறட்டுப் பிடிவாதம் காரணமாக இருந்திருக்குமோ? யானறியேன். இன்றைக்கு அவர் தன் கருத்துக்களை மாற்றிக் கொண்டிருக்கலாம்.

மார்க்ஸிஸ கிணற்றுத் தவளைகள் ஒருமுறையேனும் சொல்ஸ்ஹெனிட்ஸினைப் படிக்கும்படி வேண்டுகிறேன்.

லால் சலாம்.


Series Navigation

நரேந்திரன்

நரேந்திரன்