யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -9
நாகரத்தினம் கிருஷ்ணா

·பிரெடெரிக் மின்வியெல் பிரான்சு நாட்டின் வடபகுதியான பிரெத்தாஞ் பிரதேசத்தைத் சேர்ந்த லொரியான் நகரத்தில் பிறந்தவர், செங்கீரைப் பருவம் தொடங்கி தண்டுக்கீரையாகும் வரை- பிரான்சிலிருந்தவர். பச்சைத் தமிழர் என்பதுபோல பச்சை பிரெஞ்சுக்காரர். ஆனால் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி, இனி நீ பிரெஞ்சுக்காரனில்லை என்று பிரான்சுநாட்டின் தற்போதைய வலதுசாரி அரசு அறிவித்துவிட்டது. எதிர்கட்சிகள் குறிப்பாக இடதுசாரிகள் அரசாங்கத்தின் முடிவு பாரபட்சமானது, மனிதருள் வேற்றுமை பாராட்டும் குணம் என கடுமையாக விமர்சிக்கிறார்கள்.
பிரடெரிக் செய்த குற்றம்? ஹாலந்து நாட்டிற்குச் சென்ற அவர் 1997 ம் ஆண்டிலிருந்து தனக்குப் பிடித்த ஒருவரோடு வாழ்ந்தார், அந்த ஒருவரை ஐந்து வருடங்களுக்குப்பிறகு, அதாவது 2003ம் ஆண்டில் முறைப்படி பதிவு திருமணமும் செய்துகொண்டார். ஹாலந்து அரசு தனது நாட்டின் பிரஜையை மணந்தவருக்கு, அந்நாட்டின் சட்டப்படி குடியுரிமையை வழங்கிவிட்டது. பிரெஞ்சு அரசாங்கமும் தனது 26-07-2006 குடியுரிமைச் சட்டம் 21-2 உட்பிரிவின் படி, பிரெஞ்சு குடியுரிமையுள்ள ஒருவர் சில நிபந்தனைகள் பேரில் தனது மனைவிக்கோ அல்லது கணவருக்கோ குடியுரிமை கோர அனுமதிக்கிறது: பிரெஞ்சு குடியுரிமை வேண்டுகிற நேரத்தில் தம்பதிகள் சேர்ந்து வாழ்ந்துகொண்டிருக்க வேண்டும் (1) பிரான்சிலென்றால் குறைந்தது நான்காண்டுகள் (2) வெளிநாடுகளிலென்றால் குறைந்தது ஐந்தாண்டுகள். அதன்படி டிசம்பர் மாதம் 2003 அன்று திருமணம் செய்துக்கொண்ட பிரெஞ்சு பிரஜையான ·பிரடெரிக் தான் திருமணம் செய்துகொண்டவருக்காக குடியுரி¨மையைக் கேட்டு பிரெஞ்சு அரசாங்கத்திடம் விண்ணப்பித்தார். ஆனால் மனுவைப் பரிசீலித்த அரசு, சம்பந்தப்பட்டவருக்கு அதாவது மனுதாரர் மணமுடித்த நபருக்குக் கொடுக்கவேண்டிய பிரெஞ்சு குடியுரிமையை மறுத்ததோடு, மனுதாரருடைய பிரெஞ்சு குடி உரிமையும் பறித்துக்கொண்டது. நடந்தது இதுதான். மனுதாரராகிய ·பிரெடெரிக் ஓர் ஆண், அவர் ஹாலந்தில் ஒரு பெண்ணை மணந்திருந்தால் பிரெஞ்சு அரசின் சட்டப் படி, அவரது மனைவிக்குக் குடியுரிமைக் கிடைத்திருக்கும், மணந்திருப்பது மற்றொரு ஆணை. எனவே அவரது துணைவருக்குக் கொடுக்கவேண்டிய குடியுரிமையை மறுத்ததோடு அல்லாமல் பிரான்சு நாட்டின் நியதிகளை மீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு – விதிப்படி- பிரெஞ்சு அரசாங்கம் ·பிரடெரிக்குடைய குடியுரிமையையும் பறித்துக்கொண்டது.
அரசாங்கத்தின் இம்முடிவுக்கு எதிர்கட்சிகள், மனித உரிமை அமைப்புகளென என பலதரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பவே, பிரெஞ்சு அரசாங்கத்தின் குடியேற்றத்துறை அமைச்சகம், இப்பிரச்சினையை மீண்டும் முறைப்படி பரிசீலிக்க இருப்பதாகவும், ஹாலந்து நாட்டிற்கும்- பிரான்சுக்குமான உறவின் அடிப்படையில் சில விதிகளைத் தளர்த்தி 2009ஆம் ஆண்டு மீண்டும் ·பிரடெரிக்குக்குக் குடியுரிமை வழங்கப்படுமென்றும் உத்தரவாதம் அளித்திருக்கிறது. ·பிரெடெரிக் மின்வியெல், அரசின் இம் முடிவு தனக்குத் திருப்தி அளித்திருப்பதாகவும், ஒரினத் திருமணத்தை அங்கீகரிக்கும் ஹாலந்து நாட்டின் சட்டத்தை பிரெஞ்சு அரசு மதிக்கவேண்டுமென்றும், கேட்டுக்கொண்டிருக்கிறார். கூடுதலாக, நான் கத்தோலிக்கர் பிரிவினைச் சார்ந்தவன், வலதுசாரி, கடந்த ஜனாதிபதி தேர்தலில் சார்க்கோவுக்கு ஓட்டுப்போட்டவனென்று, புலம்பல் வேறு. சர்க்கோ என்று அழைக்கப்படுகிற சர்க்கோஸி தற்போதைய பிரான்சு நாட்டின் ஜனாதிபதி, தேர்தலுக்கு முன்பு எல்லா அரசியல்வாதிகளையும் போலவே நிறைய வாக்குறுதிகளை வாரி வழங்கிவிட்டு பிரெஞ்சு மக்களின் ஏகோபித்த வெறுப்புக்கு ஆளாகியிருப்பவர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்கிற மேற்கத்திய நாடுகளிடையே பல விஷயங்களில் கருத்து முரண்பாடுகள் உண்டு. ஜூலை 26, 2006 தேதியிட்ட பிரெஞ்சு குடியுரிமைச் சட்டத்தின் 21-2 உட்பிரிவு அதற்கொரு நல்ல உதாரணம். பிரெஞ்சு சட்டம் ஓரினத் திருமணத்தை ஏற்பதில்லை. மாறாக ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகளில் ஹாலந்து உட்பட ஸ்பெயின், இங்கிலாந்து, பெல்ஜியம் முதலான நாடுகள் அதனை அங்கீகரிக்கின்றன. பிரெஞ்சு ஜனாதிபதி, தேர்தலுக்கு முன்பு அளித்த தொலைக்காட்சி பேட்டியொன்றில்(செப்-2006), “ஓரினச்சேர்க்கை மனிதருக்கிடையேயான அன்பையும் காதலையும் புரிந்து கொள்ளவேண்டும், அவர்களின் திருமண ஒப்பந்தங்களை நாம் முறைபடுத்துவதன் மூலம், சமூகம் மற்றும் வருமானவரி சார்ந்த பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமென்றார். தேர்தலில் ஜெயித்து ஜனாதிபதியாக வந்த பிறகு, அவரது அரசாங்கம் இதனைக் கவனத்தில் கொள்ளாமலிருக்கிறது. வலதுசாரிகளான அவரது கட்சியினரும் அதற்கு ஆதரவானவர்களல்ல. இதற்கிடையில் பசுமை அமைப்பினர் நிருவாகத்தின் கீழிருந்த நகரசபை ஒன்றின் மேயர், இப்படித்தான் இரண்டாண்டுகளுக்கு முன்பு ஓரினச்சேர்க்கை மனிதருக்கிடையே திருமணத்தை நடத்திவைக்க, அத்திருமணம் சட்டப்படி செல்லாதென்று பிரெஞ்சு நீதிமன்றம் அறிவித்திருந்தது. எனினும் பிரான்சில் 60 சதவீத மக்கள் ஓரினச்சேர்க்கை மனிதர்களுக்கிடையான திருமணத்தை ஆதரிப்பதாகக் சமீபத்திய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது. ஓரினச்சேர்க்கைத் திருமணத்தைக் காரணங்காட்டி பிரெஞ்சு குடியுரிமையை தனது சொந்த மண்ணைச் சேர்ந்த ஒருவருக்கு அரசாங்கம் மறுக்க, களவாய் உழைத்துக்கொண்டிருக்கும் ஆப்ரிக்கத் தொழிலாளர்களுக்கு உழைப்பதற்கான உரிமத்தை வழங்கி – அப்படி வழங்காதுபோனால் அவர்கள் செய்கிற வேலைகளை செய்ய பிரெஞ்சுகாரர்கள் முன் வரமாட்டார்களென்பதால்- மற்றொரு பக்கம் அரசாங்கம் தனக்கேற்பட்டப் பழியைக் துடைத்துக் கொள்ள முயன்று வருகிறது. இப்போதைக்கு அரசு பறித்த பிரெஞ்சு குடியுரிமையை மீண்டும் 2009 திரும்ப அரசு ஒப்படைக்குமென்பது ஆறுதல்.
கடந்த சில ஆண்டுகளாகவே பிரான்சில் அந்நியர் குடியேறுவதைத் தடுக்க பிரெஞ்சு அரசு கடுமையாக நடவடிக்கைகள் எடுத்துவந்த போதிலும், மேற்கத்திய நாடுகளில் அதிக அளவு அந்நியர்கள் வாழ்கிற நாடுகளில் ஒன்றென பிரான்சைக் கருதலாம். அவ்வாறே பிரெஞ்சுக்குடியுரிமைகளுக்கான சட்டங்களும் அத்தனைக் கடுமையானதல்ல. 1999லிருந்து-2004வரை ஐந்து ஆண்டுகளில் குடியேற்ற மக்களில் (ஆசியர்கள், ஆப்ரிக்கர்கள், ஆப்ரிக்க அராபியர்கள்…)பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர்களின் எண்ணிக்கை மாத்திரம் 410 000 என்று சொல்லப்படுகிறது. இதில் இந்திய மற்றும் இலங்கைத் தமிழர்களும் அடக்கம். இந்தியத் தமிழர்களில் 99 சதவீதம் பிரெஞ்சுக் காலணியாகவிருந்த புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சார்ந்தவர்கள். இவர்களில் ஒரு சில குடும்பங்கள் 1881 சிறப்பு ஆணையின்கீழ் வெகுகாலத்துக்கு முன்பு பிரான்சுக்கு குடியேறிவர்கள், இவர்கள் பல தலைமுறைகளாக தாங்கள் தமிழர்கள் என்பது உட்பட எல்லாவற்றையும் மறந்து வாழ்பவர்கள். அடுத்து பிரெஞ்சு அரசு இந்தியாவிடம் தனது காலனிகளை ஒப்படைத்தபோது, பிரெஞ்சு குடியுரிமையை சுவீகரித்து வந்தவர்கள்.
இந்திய அரசாங்கம், நாட்டிற்கு வந்து போகிற இந்திய வம்சாவளியினருக்கென்று ஒரு கொள்கை வைத்திருக்கிறது, அதாவது நீ அரிசியைக் கொண்டுவா, நான் உமியைக் கொடுக்கிறேன் இருவரும் பகிர்ந்து சாப்பிடுவோம் என்பது அக்கொள்கைக்கான எழுதப்படாத விதி. 2005 ஆம் ஆண்டு, அந்நிய நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் கூட்டிய பார்வஸி பாரதிய திவாஸ் மாநாட்டில் கலந்துகொண்டு இந்தியப் பிரதமர் இரட்டைக்குடியுரிமையைப்( Dual Citizenship) பற்றி அறிவித்தார். ஆனால் இந்தியக் குடியுரிமைத் சட்டத்தில் கொண்டுவந்த திருத்தம் திருப்தி அளிக்கும்படியில்லை. இப்போது Overseas Citizenship of India என்ற சொல்லை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். தமிழில் சொல்வதென்றால் கடல் கடந்த இந்தியர் அல்லது அயல்நாட்டு இந்தியர். 1955ம் ஆண்டு இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் திருத்தப்பட்ட மசோதாவில் (ஜூன் 28,2005), இப்புதிய விளக்கத்தின்மூலம் இரட்டைக் குடியுரிமை வழங்கியுள்ளதைப்போல இந்திய அரசு பாசாங்கு செய்திருக்கிறது. ஒருசில நாடுகளைத் தவிர்த்து பிறவற்றில் பல ஆண்டுகளாக வசித்துவரும் இந்திய வம்சா வளியினருக்கு, அவர்களுடைய குடியேற்ற நாடுகளின் சட்டங்கள் அனுமதிக்குமென்றால் OCI அத்தாட்சியுண்டு. பிற நாடுகளில் உள்ளதைப்போன்று இரட்டை குடியுரிமையாக நினைத்துக்கொண்டு OCI வரத்திற்குச் சந்தோஷப்பட முடியாது: முன்பெல்லாம் வெளிநாட்டுக் குடியுரிமையுள்ள எங்களைப்போன்றவர்கள் இந்தியா வருவதென்றால் மூன்றுமாதம், ஆறுமாதம், ஒரு வருடமென்று விசா வாங்கவேண்டியிருக்கும், இப்போது ஆயுள் முழுக்க விசா வாங்காமல் வந்துபோகலாம், அது சம்பந்தப்பட்ட துறையை இந்திய பாஷையில் கண்டுகொள்ளவேண்டிய நிர்ப்பந்தங்கள் இனியில்லை, பெரிய சௌகரியமென்றால் இதுதான். அடுத்து நிதி, தொழில், கல்வித் துறைகளில் (விவசாய நிலங்கள், பண்ணை நிலங்கள் நீங்கலாக) சலுகைகள் என்றபேரில் சில காரட்டுகளைக் கையில் பிடித்திருக்கிறார்கள், நாங்கள் ஓடிவருகிறோம்.
nakrish2003@yahoo.fr
- குளியலறையில் பேய்!
- Last kilo byte – 17 கொக்கு மீனை திங்குமா ?
- காலடியில் ஒரு நாள்
- ஊமச்சி
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 15
- கவிதை
- வாடிய செடி
- மெழுகுவர்த்தி
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் -9
- நினைவுகளின் தடத்தில் – 12
- குங்குமப்பூ
- பட்டமரங்களும் பச்சைமரமும்
- நண்பர்கள் பற்றிய குறிப்புகள்-3 (சிவகுமார்)
- வறுமை
- இழப்பு
- நான் கண்ட தன்வந்திரி
- Last Kilo byte – 15 – காக்கை, குருவி எங்கள் …
- நண்பர்கள் பற்றிய குறிப்புகள்-2 (தனேஸ்குமார்)
- அக்கா
- மென்தமிழ் இணைய இதழ்
- தாகூரின் கீதங்கள் – 35 யாத்திரைப் பயணி நான் !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 11 (சுருக்கப் பட்டது)
- புதுச்சேரியில் தமிழ்க்காவல் இணைய இதழ்த் தொடக்கவிழா
- காற்றினிலே வரும் கீதங்கள் – 23 யாரென் கதையை நம்புவார் ?
- வார்த்தை – ஜூன் 2008 இதழில்
- தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம் – மூன்றாம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம்
- குழந்தைகளுக்கான தோட்டம்!
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அண்டத்தைத் துளைக்கும் அகிலத்தின் மர்மமான நியூடிரினோ நுண்ணணுக்கள் ! (கட்டுரை: 30)
- கவிஞர் கோ.கண்ணனுக்கு சென்னையில் நடந்தேறிய ஒரு எளிய பாராட்டுவிழா!
- மறந்துபோகும் பிறந்த நாள்கள்
- Ramayana for Youth Balakanda Monday July 7 – Friday July 11, 9 a.m. – 12 p.m
- “இலக்கிய உரையாடல்” : எஸ்.பொ எழுதிய “கேள்விக்குறி”
- Call for papers for the fourth annual Tamil Studies Conference, “Home, Space and the Other”
- நீங்கள் விரும்பியதையெல்லாம் வணங்கிக்கொள்ளுங்கள்!
- கமண்டலத்தில் நதி – சுப்ரபாரதிமணியனின் ” ஓடும் நதி ” நாவல் சிறுபான்மையினருக்கு எதிரானதா
- காதலில் தொடங்கிய என் பயணம்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 24 ந.பிச்சமூர்த்தி.
- The launch of the NFSC portal for folklore journals
- மனித இயற்கை குறித்து மூன்றாம் பாலினம் எழுப்பும் புதுக் கேள்வி!