சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் – 3

This entry is part [part not set] of 33 in the series 20070913_Issue

வெங்கட் சாமிநாதன்


சற்று முன்னர் முப்பதுக்களில் மலர்ந்த ஒரு மறுமலர்ச்சியின் ஆதர்ச புருஷராக வ.ரா. இருந்தார் என்று சொல்லியிருக்கிறேன். அது அம்மறுமலர்ச்சியின் இலக்கியம் சார்ந்த அங்கத்தை மனதில் கொண்டாகும். ஈ.கிருஷ்ண அய்யரும் ருக்மிணி அருண்டேலும் தமிழ் நாட்டின் நீண்ட பாரம்பரியம் கொண்டிருந்த ஒரு நாட்டிய மரபு தேய்ந்து மறைந்து கொண்டிருந்த காலத்தில் அதை மீட்டெடுத்து புதுப்பித்து வாழ்வு கொடுத்த காரியமும் இம்மறுமலர்ச்சியின் மற்றொரு அங்கம் தான். தமிழ் நாட்டின் மேடைக் கச்சேரிகளில் தமிழில் பாடுவதே அரிதாகிக் கொண்டிருந்த காலத்தில் தமிழிசை மரபை நினைவுறுத்தி அதற்கு உரிய இடத்தைப் பெற்றுத்தர எழுந்த தமிழிசை இயக்கமும் இந்த மறுமலர்ச்சியின் அங்கம் தான். இவையெல்லாம் தேசம் முழுதும் சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் நாடு பெற்ற விழிப்புணர்வின் விளைவுகள் தாம். தேசீய விழிப்புணர்வின் விளைவாகவே வங்காளத்தில் புதிய பாணி ஓவிய முயற்சிகள் தோன்றியது போல. நான் இப்போதைய சந்தர்ப்பத்தில் இலக்கியத்தோடு நின்றுகொள்கிறேன். தமிழ் நாட்டில் முப்பதுகளில் தோன்றிய இலக்கிய மறுமலர்ச்சி, தேசீய எழுச்சியும் சுதந்திர உணர்வையும் மக்களிடையே பரப்புவதற்கென்றே, சுதந்திரப் போராட்ட வீரர்களால் தோற்றுவிக்கப்பட்ட மணிக்கொடி பத்திரிகையைச் சுற்றியே மலர்ந்தது. முன்னரே சொன்ன வ.ரா. தவிர பி.எஸ்.ராமையா, சி.சு.செல்லப்பா, புதுமைப் பித்தன் போன்றோரையும் சேர்த்துச் சொல்லவேண்டும். இவர்களில் சி.சு.செல்லப்பாவும் பி.எஸ்.ராமையாவும் தீவிரமாக சுதந்திரப் போராட்டத்தில் இயங்கியவர்கள். சிறை சென்றவர்கள். இப்போது 86 வயதாகும் செல்லப்பா ஒருவர் தான் சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக இருந்த எழுத்தாளர்களில் இப்போதும் நம்மிடையே வாழ்பவர். அவரை இன்னமும் நம்மிடையே பெற்றிருக்கும் பாக்கியம் நமக்கு. முப்பதுக்களின் சுதந்திர போராட்ட காலத்ததிய அன்றைய வாழ்க்கையைச் சொல்லும் 1700 பக்கங்களுக்கு விரிந்துள்ள சுதந்திர தாகம் என்ற மூன்று பாகங்கள் நீளும் ஒரு நாவலை அவர் தன் வாழ்வின் அந்திம காலத்தில் எழுதியிருக்கிறார். அது ஒரு ஆவணமும் ஆகும். அது உண்மையில் சுமார் ஏழாண்டு கால(1927-1934) நடப்புகளைத்தான் விவரிக்கிறது. காந்தியின் ஆணையைத் தலைமேற் தன் கல்லூரிப் படிப்பை பாதியிலேயே துறந்து சத்தியாகிரஹியாகி சிறை சென்ற நடப்புகள் அவை. இந்த பிரம்மாண்ட நாவல் என்னவோ மதுரையையும் அதைச் சுற்றியும் நிகழும் சம்பவங்களை மட்டுமே விவரித்தாலும், (செல்லப்பா சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் அதற்கு மேல் இட விஸ்தாரம் பெறவில்லை), அதன் உணர்வுகள் நாடு முழுதும் கொந்தளித்துக்கொண்டிருந்த சுதந்திரப் போராட்டத்தையே பிரதிபலித்தன. புதுமைப் பித்தன் (1907-1947) ஒரு தனி பிறவி. அவர் எந்தப் போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவரில்லை. மக்கள் கூட்டம் கூட்டமாக ஈடுபடும் எந்த செயலிலும் தன்னையும் அதில் ஒருவராக இணைத்துக்கொள்ளும் இயல்பு அவரிடம் இல்லை. அவர் ஒரு தீவிர தனி நபர் வாதி. தன் தனித்வத்தை அதன் எல்லைவரை இட்டுச் செல்பவர். ஆனால் ஆளும் ப்ரிட்டீஷ் அரசாங்கம், அதற்கு சேவுகம் செய்வதில் பெருமை கொள்ளும் கருப்பு நிற அதிகார வர்க்கம், சரிகைத்தலைப்பாகைகள் மீது அவருக்கு இருந்த ஆக்கிரோஷ வெறுப்பு அத்தனையும் அவருடைய எழுத்துக்களில் வந்து கொட்டும். சந்தர்ப்பம் இருக்கிறதோ இல்லையோ, தேவை உண்டோ இல்லையோ, எழுதும் போக்கில் ஆங்கில அரசின் குட்டி தேவதைகளுக்கு எதிரான அவர் தனது சீற்றத்தையும் , கிண்டலையும் போகிற போக்கில் உதிர்த்துக் கொண்டே போவார். அவரது எழுத்து முழுதிலுமே இத்தகைய கிண்டலும் வெறுப்பும் தெளித்திருக்கக் காணலாம். அடிமைப் பட்டுக்கிடந்த இந்தியாவில், தமிழ் நாட்டில் ஒரு சுதந்திர ஜீவி இருந்தாரென்றால் அது அவர் தான். எந்த அதிகாரத்தையும், அது வெளிநாட்டிலிருந்து வந்ததோ அல்லது உள்நாட்டிலேயே பிறந்து வந்ததோ, அவர் மதித்ததில்லை.

கடைசியாக அந்நாட்களின் வரலாற்றைப் பதிவு செய்தவர்களைப் பற்றிச் சொல்லவேண்டும். எல்லோருக்கும் முதலாக, ‘உலகம் சுற்றிய தமிழர்’ என்றே அறியப்பட்ட ஏ.கே.செட்டியாரைப் பற்றி. அவரது உலகப் பயணங்கள் பற்றி அவர் எழுதியது போக, காந்தி பற்றி அவர் எடுத்துள்ள செய்திப் படம். இது தான் இந்தியாவிலேயே காந்தி பற்றி எவரும் எடுத்துள்ள முதல் செய்திப் படமும் ஆகும். அந்நாட்களின் சுதந்திர போராட்டச் செய்திகளை, காந்தி பற்றிய செய்திகளை அரசு செய்திப் படங்களில் பார்க்கும்போது, ஒரு பெரிய திறந்த வெளியில் நூற்றுக்கணக்கில் சரிவர உடைகூட உடுத்தியிராத ஏழை ஸ்திரீகள், வயதானவர்கள் உட்பட உட்கார்ந்து கைராட்டினம் சுற்றி நூல் நூற்றுக்கொண்டிருக்கும் காட்சியைப் பார்த்திருக்கிறோமே, அது ஏ.கே.செட்டியார் காந்தி பற்றிய செய்திப்படத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட காட்சிதான். செட்டியார் தன் உலகப் பயணத்தில், எங்கெங்கோ தொலைவில் உள்ள நாடுகளில் கூட காந்தியின் பெயர் எழுப்பும் உத்வேகமும் வரவேற்பும் பற்றி வெகு உற்சாகத்துடன் எழுதுகிறார். இன்னும் பலர் அந்நாட்களைப் பற்றி எழுதியிருக்கின்றனர். கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை என் சரிதம் என்று எழுதியுள்ள சுயசரிதம்,. அவர் காலத்தில் நடந்த சுதந்திர போராட்ட நிகழ்வுகளையும், அவரது சரிதத்தையும் சொல்லும். தி.சு.சு.ராஜன் எழுதியுள்ள புத்தகம் ராஜாஜி தலைமையில் வேதாரண்யம் வரை நடை பயணம் சென்ற உப்பு சத்தியாக்கிரஹ நிகழ்ச்சிகளையே பெரும்பாலும் விவரிக்கும். திரு.வி.க வின் வாழ்க்கைக் குறிப்புகள் என்னும் சுயசரிதம், அறுபது ஆண்டு கால தொழிற்சங்க வரலாற்றையும், சுதந்திர போராட்டமாக விரியும் தேசீய அரசியலையும் பதிவு செய்துள்ளது. தனது வயதின் தொன்னூறுகளில் இறந்த ம.பொ.சிவஞான கிராமணியார், சுதந்திர போராட்டத்தில் தீவிர மாக இயங்கியவர் ‘விடுதலைப் போரில் தமிழகம் என்று ஒரு பிரம்மாண்ட நூலில் தமிழ் நாட்டின் சுதந்திரப் போராட்ட வரலாற்றை மிக விஸ்தாரமாக, விவரங்கள் செறிந்த வகையில் உணர்ச்சிப் பெருக்கோடு சொல்லிச் செல்கிறார். இப்பங்களிப்பைப் பற்றி ம.பொ. சிவஞானம் அவர்கள் அளவுக்கு விஸ்தாரத்திலும் விவரப் பெருக்கிலும் உணர்வு பூர்வமாகவும் பதிவு செய்துள்ள வரலாற்று நூல் வேறு ஒன்று தமிழில் இல்லை. சுமார் 1200 பக்கங்களுக்கு விரிந்துள்ள இந்த வரலாறு முழுதும் ம.பொ.சி அவர்களால் வாய் மொழியாகவே நினைவிலிருந்து சொல்லச் சொல்ல பதியப்பட்டுள்ளது.

—————————————————————————————————————

1997-ல் இந்திய சுதந்திரத்தின் 50-ஆண்டு நிறைவை ஒட்டி தில்லியில் மத்திய செயலக நூலகம் (Central Secretariat Library) நடத்தின் சுதந்திர போராட்டத்தில் எழுத்தாளர்கள் என்ற கருத்தரங்கில் பேசியது.

(இதற்கு முன்குறிப்புகளாக நான் உரையைத் தொடங்கும் சொன்னவற்றையும் இங்கு சொல்வது அவசியம்: அக்குறிப்புகள் இதோ:)

“இந்த உரையை உங்களுக்குச் சமர்ப்பிக்கும் முன் இவ்வுரை தனக்குள் வகுத்துக் கொண்டுள்ள எல்லைக் கோட்டின் வட்டத்தைப் பற்றிச் சொல்லவேண்டும். இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளவர்கள் தந்துள்ள 1900-1947 கால கட்ட வரையறை. அடுத்து இக்கருத்தரங்கு இலக்கியப் பங்களிப்பை மாத்திரமே கருத்தில் கொண்டுள்ளது. சீரிய இலக்கிய மாணவர்களுக்கெல்லாம் தெரியும், எந்த பெரிய நிகழ்வைப் பற்றியுமான ஆழமான சிருஷ்டி கர இலக்கியப் பதிவு அது நிகழ்ந்து முடிந்து அந்நிகழ்வின் தாக்கத்தின் சூடு ஆறிய பிறகு, எழுத்தாளன் தன்னை அதனிலிருந்து விலக்கி எட்டி நின்று, அந்நிகழ்வின் உணர்வுகளின் அழுத்தமும், சூடும் தன்னை பாதிக்காது அதன் குணத்தை அறிய முடிகிற போது தான் சாத்தியமாகிறது.

எனவே, ஒரு வேளை கருத்தரங்கை அமைத்துக் கொடுத்தவர்களின் நோக்கம், அத்தகைய ஆழ்ந்த சிருஷ்டி பூர்வ பதிவுகளின் இலக்கிய ஆராய்வு அல்ல, மாறாக, போராட்டம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே அதன் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் எழுத்தாளர்களின் பங்களிப்பைப் பற்றி பேசுவது என்று தோன்றுகிறது. எனவே இங்கு நான் செய்துள்ளது போராட்ட கால கட்டத்திலேயே தமிழ் எழுத்தாளர்கள் அதை எப்படி எதிர்கொண்டார்கள், என்ன பதிவு செய்தார்கள், அது போராட்டத்திற்கே எத்தகைய பங்களிப்பைச் செய்தது என்பதேயாகும். இத்தகைய அவ்வப்போதைய கால கட்டத்தின் ஆவேச உற்சாகங்களையும் உணர்ச்சிப் பெருக்கையும் மீறி, எவை இன்று ஆழந்த இலக்கியங்களாக காலத்தை மீறி வாழ்கின்றன எவை சீரிய இலக்கிய சாதனைகளாகியுள்ளன என்று கணிப்பதல்ல..

மேலும், இலக்கியத்திற்கு அப்பால் மற்ற துறைகளில், வாழ்வுத் தளங்களில், தொடர்பு சாதன வடிவங்களில் போராட்டத்திற்கு உதவியவர்கள், அவர்களின் சாதனைகளைப் பற்றிப் பேசவில்லை. நாடக மேடையில், திரைப்படத் துறையில் ஈடுபட்டிருந்தவர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள், பொம்மலாட்டக்காரர்கள், பிச்சைக்காரர்கள், தெருப்பாடகர்கள் போன்றோரையும் விட்டு விட்டேன். ஆமாம், பிச்சைக்காரர்களும், தெருப்பாடகர்களும் தான்.

கற்பனை செய்து பாருங்கள். ஒரு பத்து வயது சிறுமி, எண்ணையற்ற பிசுக்கேறிய தலையும், அழுக்குச் சட்டை பாவாடையுமாக ஓடும் ரயிலில் ஒவ்வொரு பெட்டியாக இறங்கி ஏறி வருகிறாள். அடித்தொண்டையைக் கிழித்துக்கொண்டு உச்ச ஸ்தாயியில், பாடிக்கொண்டே பெட்டி பெட்டியாக நகர்ந்து கொண்டே,

பண்டித மோதிலால் நேருவை பறி கொடுத்தோமே,
பறிகொடுதோமே, பரிதவித்தோமே….

மோதிலால் நேரு மட்டுமல்ல, திலகரை பறிகொடுத்ததும், கஸ்தூரிபாவின் தியாகங்களும் அவளுக்குப் பிச்சையெடுக்க உதவும் பாட்டுக்களாக மட்டுமல்ல அவள் அலறல், ரயில் பயணிகளின் உள்ளத்தையும் தொடும். ஒரு நாள் பயணத்தில் தமிழ் நாட்டின் ஒரு கோடியிலிருந்து மறு கோடி வரை அவள் பயணம் செய்துவிடுவாள். எத்தனையோ ஆயிரம் பயணிகளுக்கு அவள் கதறல் போய்ச் சேரும். அவள் சற்று தூரத்தில் இறங்கி விட்டால் மற்றொரு சிறுமி அவள் இடத்தில் தோன்றுவாள்.. ஆங்கில அரசின் கரங்கள் திரைப்படங்களை, நாடகங்களை, புத்தகங்களை, பொதுக் கூட்டங்களை, புத்தகங்களை, பாரதியின் கவிதைகளை தடை செய்துவிட முடியும். ராஜாஜியை, மகாத்மா காந்தியை கைது செய்து சிறையில் அடைத்து விட முடியும். ஆனால் அந்த சூரியன் அஸ்தமிக்காத பகாசுர அரசு, தன் தொண்டை கிழிய கத்திப் பாடும் இந்த பிச்சைக்கார சிறுவர் சிறுமியரை அந்த அரசின் அதிகாரத்தை அறியாது மீறும், பணியாத இக்குரல்களை, அரசுக்கு எதிராக ஆயிரக் கணக்கான பயணிகளின் உணர்ச்சிகளைக் கொந்தளிக்கச் செய்யும் இந்த அழுக்குச் சட்டைப் பாவாடைகளை என்ன செய்ய இயலும்? இவர்களும் சுதந்திரப் போராட்டதிற்குப் பங்களித்தவர்கள் தான். காலத்தின் கதியில் நாம் மறந்து விட்ட, மறக்கப்பட்டுவிட்ட இப் பங்களிப்புகள் எல்லாம் உடனுக்குடன் பாதிப்பை ஏறுபடுத்தியவை. வெடிமருந்தைப் போல பயங்கர விளைவுகளையும் ஏற்படுத்தியவை. காட்டுத் தீயைப் போல படர்ந்து பரவும் குணத்தவை. ரயில் பெட்டிகளில் பாடிப் பிச்சையெடுக்கும் இச்சிறுமிகளுக்குக் கிடைத்துள்ளவர்கள் தயாராகக் காத்திருப்பவர்கள் (captive audience)- இருந்த இடத்தில் ந்கராது கேட்பவர்கள். மனது நெகிழ்வதற்குக் காத்திருப்பவர்கள். அரசியல் வாதிகளும், எழுத்தாளர்களும் மக்கள் மனதில் பாதிப்பைக் காண் தம் திறைமையெல்லாம் திரட்டி சாகஸங்கள் செய்யவேண்டும். இனி என் உரை..

…. தமிழ் இலக்கியத்துள் நிகழ்ந்துள்ள…..

வெங்கட் சாமிநாதன்/23.8.07

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்

சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள்

This entry is part [part not set] of 37 in the series 20070830_Issue

வெங்கட் சாமிநாதன்


(1)

நவீன தமிழ் இலக்கியத்தில் நிகழ்ந்துள்ள நாம் கொண்டாடும் எந்த மாற்றத்தையும் புதிய திருப்பங்களையும் போல, சுதந்திர உணர்வின் கிளர்ச்சியும் அதன் போராட்ட வெளிப்பாடும் ஒரு தொடர்ந்த இயக்கமாக வெளிப்படுவதை நாம் சுப்ரமண்ய பாரதியிலிருந்து தான் ஆரம்பம் பெறுவதைக் காண்கிறோம். உண்மையில் பார்க்கப்போனால், இன்றைய தமிழ் இலக்கியத்தின் வரலாறே பாரதியிடமிருந்து தான் தொடங்குகிறது. ஜி.சுப்பிரமணிய ஐயர் என்னும் அந்நாளைய அரசியல் தலைவரும் சுதந்திரப் போராட்டக் காரருமான ஜி.சுப்ரமணிய ஐயர் தன் ஆசிரியத்வத்தில் நடத்திவந்த தமிழிலேயே வெளிவந்த முதல் தமிழ் செய்தி நாளிதழுமான சுதேசமித்திரனில் 1905-ல் உதவி ஆசிரியராக வேலைக்கமர்வதே அன்றைய தேசிய அரசியல் களத்தில் குதிக்கும் காரியம் தான். அந்நாளில் திலகரின் அத்யந்த பக்தரான பாரதிக்கு தேசீய போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதென்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் பாரதிக்கு விடுதலை என்பது நிறைய அர்த்தங்களைக் கொண்டுள்ள ஒரு கருத்து. அவருக்கு விடுதலை என்பது அரசியல் விடுதலையோ பொருளாதார விடுதலை மட்டுமோ இல்லை. அவரது சிந்தனையில் விடுதலை என்பது, சமூக ஏற்றத்தாழ்வுகளிலிருந்து விடுதலை, ஜாதி, மத பேதங்களிலிருந்து விடுதலை, வெற்றுச் சடங்குகளிலிருந்தும், காலம் கடந்த பழம் மரபுகளிலிருந்தும் விடுதலை, உண்மையில் சொல்லப்போனால், இன்று வரை நாம் நமக்குள் வாதிட்டுக் கொண்டிருக்கும் ஆனால் அடையமுடியாது கனவு கண்டு கொண்டிருக்கும் லக்ஷ¢யங்கள் கொண்ட கருத்தாக்கங்களுக்கான விடுதலை. இவையெல்லாம் பற்றித்தான் அவன் கவிதைகள் பேசுகின்றன. ஒரு ஆவேச நிலையில் பாரதி எழுதிக்குவித்துள்ள அத்தனை கதைகள் கட்டுரைகளும் பேசுவதும் இவை பற்றித் தான். ருஷ்ய புரட்சி வெற்றியடைந்து, ஜார் அரசன் வீழ்ச்சியுற்றதைக் கொண்டாடி வரவேற்று கவிதை எழுதிய முதல் கவிஞன், இந்திய துணைக்கண்டத்திலேயே முதல் கவிஞன் பாரதிதான் என்று நான் நினைக்கிறேன். அதே சமயம் புரட்சிக்குப் பின் வந்த லெனினின் கம்யூனிஸ்ட அரசு ருஷ்ய மக்களை அடக்கியாளக் கையாண்ட வன்முறைக் கொடுங்கோன்மையையும் எதிர்த்துக் குரல் எழுப்பிய முதல் இந்தியக் கவிஞனும் பாரதிதான் என்றும் நான் நினைக்கிறேன். இதன் பிறகு பாரதி 1921-ல் இறந்த போது அவனுக்கு வயது 39. இரண்டு வருடங்களுக்கு முன் 1919-ல் ருஷ்யாவை அரசாள வந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையின் உண்மை குணத்தை அறிந்து கொள்ள ஐரோப்பிய அறிஞர்களுக்கும் தத்துவ மேதைகளுக்கும், அரசியல் தலைமைகளுக்கும் எவ்வளவு காலம் பிடித்தது என்பதை நான் சொல்லவேண்டாம். நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள். இதையெல்லாம் நான் சொல்ல வந்த காரணம், பாரதியின் சிந்தனையில், விடுதலை என்பது ஒரு முழுமைபெற்ற கருத்தாக்கம் என்பதை வலியுறுத்தத்தான். பாரதி மொழிபெயர்த்தவற்றிலிருந்து இரண்டே இரண்டு படைப்புக்களைப் பற்றி மாத்திரம் குறிப்பாக எடுத்துக் காட்டிப் பின் மற்றவர்களைப் பற்றிப் பேசுகிறேன். ஒன்று பங்கிம் சந்திரரின் வந்தேமாதரம் என்னும் கீதம். இரண்டாவது, ஒரு காவியமாக விரிந்த பாஞ்சாலி சபதம்- இது 1912-ல் எழுதப்பட்டது. இது மகாபாரதக் கதை ஒன்றைத் திரும்பச் சொல்வதல்ல. பாரதி அதைச் செய்ய வேண்டியதில்லை. இக்காவியத்தில், பாஞ்சாலி, பாரத நாட்டையே, பாரதத் தாயை அடையாளப்படுத்துகிறாள். பாஞ்சாலியின் துகிலுரிதல் பாரதம் அடிமைப் பட்டுக்கிடக்கும் நிலைக்கான படிமம் ஆகிறது. அவனது காவியம் நாட்டின் பட்டி தொட்டிகளில் வாழும் கல்வியறிவற்ற மக்களையெல்லாம் சென்றடையவேண்டும் என்ற எண்ணத்தில் இதை ஒரு நாடக வடிவில், கிராமிய மெட்டுக்களில் எழுதிவைத்தான்.

பாரதியின் பாடல்கள் எல்லாம் கிராமிய மெட்டுக்களிலும், கர்நாடக ராகங்களிலும் இசையமைக்கப்பட்டவை. அவை அரசியல் பொதுக்கூட்டங்களிலும், பண்டிகைக் கூட்டங்களிலும், விழாக்களிலும், நாட்டுப்புற நாடக மேடைகளிலும் பாடுவதற்கென்றே அமைந்தவை. அரசியல் கூட்டங்களிலும் பொது மேடைகளிலும் பாரதியே கூட உரத்த குரலில் தன் பாட்டுக்களைப் பாடுவார். பிபின் சந்திர பால் சென்னை வந்து மரீனா கடற்கரையில் பேசிய கூட்டத்தில் பாரதி தன் தேசீய கீதங்களைப் பாடினார். அவருடைய பாடல்களை சிறு துண்டுப் பிரசுரங்களாக 15,000 பிரதிகள் அச்சிட்டு இலவசமாக மக்களுக்கு வழங்கினார் வசதி படைத்த ஒரு பெரிய மனிதர். தான் கைது செய்யப்படலாம் என்று தெரிந்ததும், பாரதி புதுச் சேரிக்குத் தப்பிச் சென்றார். பின்னர் அங்கு அரவிந்தரும் வந்து சேர்ந்தார். அங்கு பாரதிக்குக் கிடைத்த இன்னொரு சகா வ.வே.சு. அய்யர் (1881-1925). இந்தியன் சிவில் செர்வீஸில் சேரும் எண்ணத்தோடு லண்டன் சென்ற வ.வே.சு. அய்யர், அங்கு வீர் சாவர்க்காருக்கு வலது கையானார். இந்திய விடுதலைக்கான வன்முறைப் புரட்சிக்கு இளைஞர்களுக்குப் பயிற்சி அளிக்கும் ஹோம் ரூல் லீக்- ஐ உருவாக்கும் முயற்சியில் வீர் சவர்கருக்கு அவர் உதவி வந்தார். அங்கும் தான் சிறைபிடிக்கப்படலாம் என்ற நிலை வந்ததும், லண்டனிலிருந்து தப்பினார். லண்டனிலிருந்து தப்பி வராகநேரி வேங்கட சுப்பிரமணிய அய்யர் என்னும் V.V.S. வீர் விக்ரம் சிங்காகி புதுச் சேரி வந்த கதை ஒரு துப்பறியும் கதை சொல்லும் சாகசங்களும், தந்திரங்களும், திகிலும் நிறைந்தது. ஆனால் வ.வே.சு. அய்யர் ஒரு இலக்கிய ரசிகர். மற்றும், லத்தீன், ·ப்ரென்ச், சமஸ்கிருதம், தமிழ், ஆங்கிலம் மொழிகளை நன்கு அறிந்தவர். கம்பனையும், மில்டனையும் ஒப்பிட்டு காவிய ஆராய்வு எழுதியவர். தமிழுக்கு சிறுகதை வடிவத்தையும், விமர்சனம் என்ற துறையையும், இலக்கிய ஆராய்வையும் அறிமுகப்படுத்தியவர். கரிபால்டி, குரு கோவிந்த் சிங் என விடுதலைக்காக போராடிய வீரர்களின், சரித்திர புருஷர்களின் வாழ்க்கைச் சரிதங்களை, இளைஞர் மனதில் விடுதலை உணர்வை எழுப்பும் நோக்கத்தோடு எழுதினார். ரூஸோவின் சமுதாய ஒப்பந்தம் என்னும் நூலையும் மொழிபெயர்த்தார்.

புதுச்சேரியில் பாரதியின் நெருங்கிய வட்டத்தைச் சேர்ந்தவர் இன்னும் பலர் இருந்தனர். கவிஞர் பாரதி தாசன் (1891-1964) அவர்களில் ஒருவர். அவர் பாரதியாலேயே கவிஞராக முடிசூட்டப் பெற்றவர். பாரதி தாசன் என்ற அவர் தன்னை அழைத்துக் கொண்டார். கவிஞராக மட்டுமே அவர் பாரதிக்கு நெருக்கமாக இருக்கவில்லை. பிரிட்டீஷ் இந்தியாவிலிருந்து புதுச்சேரிக்கு வந்து அடைக்கலம் புகுந்துள்ள தேசீய வாதிகளின் நடவடிக்கைகளை உளவறிய வரும் போலீஸையும் அவர்களுக்கு உள்ளூரில் உளவு சொல்பவர் களையும் கண்காணிப்பதும் அவர்கள் ரகசிய திட்டங்களை உளவறிந்து அவர்கள் விரிக்கும் வலையில் விழாது எச்சரிக்கையாக இருப்பதுமான பல பொறுப்புகளை பாரதி தாசன் தன் மேற்கொண்டிருந்தார்.

வ.ரா (1889-1951) என்று அறியப்பட்ட அவர் காலத்திய இளம் எழுத்தாளர்களுக்கெல்லாம் பிதாமகர் போன்றவர். தமிழ் மொழியை, தமிழ் உரைநடையை வரண்ட பண்டிதத்தனத்தின் பிடியிலிருந்து மீட்டவர். எளிய சாதாரணத் தமிழே, மிக சக்தி வாய்ந்ததாகவும் அழகாகவும் அழுத்தம் கொண்டதாகவும் இருக்கமுடியும் என்பதைத் தன் உரைநடையால் நிரூபித்தவர். எல்லா பழமைவாதங்களுக்கும் எதிராகக் குரல் எழுப்பியவர். சுதந்திரப் போராட்டத்தின் ஒரு அங்கமாக பிரசுரங்களை வினியோகிப்பதும், பணம் சேர்ப்பதுமான காரியங்களுக்காக அலைந்து கொண்டிருந்தவர் பாண்டிச்சேரிக்கும் ஒரு புனித யாத்திரை மேற்கொண்டார். அத்தோடு புதுச்சேரியில் இடம் பெயர்ந்து வாழும் தேசீயவாதிகளோடு தொடர்பு கொள்வதும் அவர் நோக்கம். பாரதி என்ற மனிதரைப்பற்றியும் கவிஞரைப்பற்றியுமான ஒரு வாழ்க்கைச் சரிதத்தை முதலில் எழுதியவரும் வ.ரா. தான். இன்று வரை பாரதியைப் பற்றி அறியக் கிடைக்கும் ஒரு முக்கிய புத்தகங்களில் அதுவும் ஒன்று. பின்னர் முப்பதுக்களில், மணிக்கொடி என்னும் இலக்கிய பத்திரிகையைச் சுற்றி எழுந்த தமிழ் இலக்கியத்தில் ஒரு மறுமலர்ச்சி இயக்கத்துக்குக் காரணமாக இருந்தவர்களில் முக்கிய புருஷர்களில் ஒருவர் வ.ரா.

பாரதியாலேயே கவிஞர் என்று முடிசூட்டப்பட்டவர் என்ற பெருமைக்கும் கர்வத்துக்கும் உரிய மற்றொரு கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு சென்னை மாகாண காங்கிர அரசால் தமிழ் ஆஸ்தான கவிஞராக பிரகடனப் படுத்தப்பட்டவர். வங்காள பிரிவினையின் காரணமாக எழுத்த தேச கொந்தளிப்பில், கல்லூரிப் படிப்பை உதறி விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர். காங்கிரஸில் சேர்ந்தார். ராஜாஜி தலைமையில் வேதாரண்யத்தை நோக்கிப் புறப்பட்ட உப்பு சத்தியாக்கிரகிகள் தங்கள் நடை பயணத்தில் பாடிச் சென்ற பாட்டு, நாமக்கல் கவிஞர் எழுதிய, ‘கத்தியின்று ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது..’ தான். நாமக்கல்லார் ஒரு காந்தி பக்தர்.

சுதந்திரப்போராட்டத்தில் காந்தி சகாப்தம் ஆரம்பிக்கும் முன் இருந்த தேசீயவாதிகளைப் பற்றி நான் பேசியிருக்கவேண்டும். சுப்ரமண்ய சிவா (1884-1925) வாழ்ந்தது 41 வருட காலமே. அதில் 19 வருடங்களை அவர் சுதந்திர போராட்ட வீரராக சிறையில் கழித்தவர். மனைவியைத் துறந்து, போராட்ட வாழ்வில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட அவர், நாட்டுக்குழைக்க தன்னை முழுமையாக அர்ப்பணம் செய்து கொள்ள சன்னியாச வாழ்வை மேற்கொண்டவர். ராஜதுரோகக் குற்றம் சாட்டப்பட்டு, கோர்ட்டில் நிறுத்தப்பட்ட அவரை ‘அரசியல் கிளர்ச்சிகளில் ஈடுபடும் நீங்கள் எந்த மாதிரி சன்னியாசி?” என்று கோர்ட்டில் அவர் கிண்டலாகக் கேள்வி கேட்டனர். “ஆமாம், நான் சன்னியாசி தான். என் ஆத்மாவின் சுதந்திரத்திற்காக மட்டுமில்லை. என் நாட்டின் சுதந்திரத்திற்காகவும் நான் பாடுபடுகிறேன்” என்றாராம் அவர். சுதந்திரப் போராட்டத்தில் தன் கருத்துக்களை வெளியிடவும், தமிழ்மொழியின் எழுத்துச் சீர்த்திருத்ததிற்கும், தூய தமிழ் இயக்கத்திற்கும், ஞானபானு (1913-16), பிரபஞ்ச மித்திரன் (1916-17) என்னும் இரு பத்திரிகைகளை அவர் தன் ஆசிரியத்வத்தில் வெளியிட்டார். அவர் காந்தீய வாதி அல்லர். மாறாக காந்தீய வாதமும், காந்தியவாதிகளும் அவர் கண்டனத்திற்கும் கேலிக்கும் உள்ளானார்கள். மேற்கத்திய நாகரீகத்தினாலும், மேற்கத்திய கல்வி முறையினாலும் இந்தியப் பெண்களுக்கு விளைந்து வரும் தீமைகளைச் சித்திரிக்கும் முகமாக நளின சுந்தரி என்னும் ஒரு நாவலையும் அவர் எழுதியுள்ளார். அவர் ஒரு சுயசரிதமும் எழுதியிருக்கிறார். அதில் அவர் பெரும்பாலும் விவரித்திருப்பது அவர் சிறை வாழ்க்கையைத் தான். 1908-ம் வருடம் வ.உ. சிதம்பரனாரும் சுப்ரமணிய சிவாவும் சேர்ந்து 1908-ல் நடத்திய தூத்துக்குடி மில் தொழிலாளர் வேலை நிறுத்தம் இந்தியாவிலேயே நிகழ்ந்த முதல் தொழிலாளர் வேலை நிறுத்தமாகும். பின்னர் 1920-ல் மதராஸ் டிராம் தொழிலாளர் வேலை நிறுத்தமும் முக்கியமானதாகும். தொழிலாளர் இயக்கமாகக் கொள்ளப்படும் கம்யூனிஸ்ட் கட்சி என ஒன்று அப்போது இந்தியாவில் இருந்திருக்கவில்லை. இந்த வேலை நிறுத்தத்தில் அவருடன் ஒத்துழைத்த வ.உ.சிதம்பரம் பிள்ளை ஒரு வக்கீல், தமிழறிஞர், இலக்கியவாதி. தூத்துக்குடி வாசி. அவரும் ஒரு சுதேசி கப்பல் போக்குவரத்துக் கம்பெனியை ஆங்கிலேயருக்குப் போட்டியாகத் துவக்கியவர். இப்போட்டியை விரும்பாத ஆங்கிலேயர் தம் பிரயாண, சரக்கு போக்குவரத்துக் கட்டணத்தைக் குறைத்து வ.உ.சியின் சுதேசி கப்பல் கம்பெனி நஷ்மடையச் செய்து ஒழித்தனர். வ.உ.சிதம்பரம் பிள்ளையும், சுப்பிரமணிய சிவாவும் திலகரின் விசுவாசிகள். வ.வு.சி செய்யுள் நடையில் எழுதியுள்ள சுய சரிதம் அவரது போராட்டங்களை விவரிக்கிறது. சுதந்திர போராட்டத்தில் காந்தி யுகம் ஆரம்பிப்பதற்கு முந்திய காலத்தில், தமிழக அரசியல், இலக்கிய அரங்கில் மிக முக்கிய பாத்திரங்கள் இவ்விருவரும்.


vswaminathan.venkat@gmail.com

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்