ஹெச்.ஜி.ரசூல் மீதான ஊர்விலக்கமும் எழுத்துக்களின் உடனான உரையாடலும்

This entry is part [part not set] of 29 in the series 20070823_Issue

மன்சூர்ஹல்லாஜ்


கவிஞர் ரசூல் ஊர்விலக்கம் செய்யப்பட்ட தக்கலை ஊரின் லளித மஹால் திருமண மண்டபத்தில் ஆகஸ்ட் 15 2007 அன்று ஹெச்.ஜி.ரசூல் எழுத்துக்கள் மீதான ஒரு உரையாடல் சிறப்பு நிகழ்வு நடைபெற்றது.
நாவலாசிரியர் பொன்னீலன் தலைமைவகித்து ரசூலின் படைப்புலகம் குறித்து அறிமுகப்படுத்தினார்.தாமரை ஆசிரியர் சி.மகேந்திரன் ரசூலின் எழுத்து மற்றும் இயக்க இலக்கியச் செயல்பாடுகள் இன்று அவருக்கு நேர்ந்துள்ள பிரச்சினைகள் அவர் மீது ஏவப்பட்ட ஒடுக்குமுறைகள் குறித்தும் இதிலிருந்து மீள்வதற்கான தமிழகம் தழுவிய இயக்கம் பற்றியும் வெளிப்படுத்தினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில செயலாளர் தமிழ்செல்வன் பூட்டிய அறை,மைலாஞ்சி
கவிதைநூல்கள் குறித்துஒரு ஒப்பீட்டாய்வினை மேற்கொண்டார். நவீனத்துவ கவிதைகுரல் எப்படி ரசூலிடம் சிறுபான்மை முஸ்லிம் சார்ந்த அடையாள அரசியலாய் உருமாறியுள்ளது என்பதையும் அவர் கோடிட்டு காட்டினார்.
முனைவர் பட்ட ஆய்வாளர் அருணா ரசூலின் இஸ்லாமியப் பெண்ணியம் நூல் குறித்து ஆய்வுரை நிகழ்த்தினார்.இஸ்லாமியப் பிரதிகளிலும் திருக்குரான் வசனங்களிலும் நிகழ்த்தப்பட்ட பெண்ணிய வாசிப்பு
குறித்த மறுவாசிப்பை பலதாரமணம், தலாக்,ஜீவனாம்சம்,ஆடைவிதிகள்,சாட்சி,தர்கா கலாச்சாரம் உள்ளிட்ட கருத்தாக்கங்களில் நிகழ்த்தியிருப்பதை விவாதப்படுத்தினார்.
முனைவர் முத்துமோகன் ரசூலின் அரபுமார்க்சியம் நூலின் மீதன தனது கருத்துக்களைப் பதிவுசெய்தார்.நபிமுகமது முன்வைத்த உம்மத் கருத்தாக்கம் இன்றைய ஜமாத்துகளில் அதிகாரமையங்களாய்
உருமாறியிருப்பதை விமர்சித்தார்.
திறனாய்வாளர் சொக்கலிங்கம் ரசூலின் எழுத்துக்களின் சாத்தியங்கள் மற்றும் எழுத்துரிமை பற்றியும்
பேசினார்.
முனைவர் இரா.காமராசு ரசூலின் திறனாய்வு முறையியல் குறித்து பதிவுகளை முன்வைத்தார்.
கவிஞர் இன்குலாப் ரசூலின் ஆய்வுகளில் அடித்தளமுஸ்லிம்கள் என்னும் பொருள் குறித்தும்
விரிவாக உரையாற்றினார்.
இந்த உரையாடலில் கலந்து கொண்ட அனைத்துப் படைப்பாளிகளும் ஆய்வாளர்களும் உயிர்மையில் வெளிவந்த இஸ்லாத்தில் குடிகலாச்சாரம்-மெளனங்கள் உற்பத்தி செய்யும் அர்த்தங்கல் கட்டுரைக்காக கன்னியாகுமரி மாவட்ட ஜமாத்துல் உலமாசபை கவிஞர்ரசூலை காபிர்-இஸ்லாத்திலிருந்து விலக்கப்பட்டவர்
என்று அறிவித்ததையும் அஞ்சுவன்னம் பீர்முகமதியா முஸ்லிம் அசோசியேசன் ஜமாத் கவிஞர் ரசூலையும் அவர் மனைவி இருகுழந்தைகளையும் ஊர்விலக்கம் செய்திருப்பதையும் கண்டனம் செய்தனர்.எழுத்துரிமையை மதித்தும் கட்டுரையின் அடிப்படை நோக்கத்தை புரிந்து ஊர்விலக்கத்தை வாபஸ் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இக்கூட்டத்தில் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் மீதான ஊர்விலக்க நடவடிக்கையை திரும்பப் பெறக் கோரி தமிழகத்தின் அறுபதுக்கு மேற்பட்ட எழுத்தாளர்கள் சுப்ரபாரதிம்ணியன்,பா.செயப்பிரகாசம்,களந்தைபீர்முகமது,புதியபார்வை இணை ஆசிரியர் மணா நாவலாசிரியர் ஜாகிர்ராஜா உள்ளிட்டோரின் கண்டன அறிக்கைகள் இக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டன.
ஏலாதி இலக்கியக்குழுவும், தமிழ்நாடு கலைஇலக்கியப் பெருமன்றமும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.

குறிப்பு:
ஹெச்.ஜி.ரசூலின் பிரச்சினை குறித்து தங்கள் கருத்தைதெரிவிக்க விரும்புவோர் கீழ்கண்ட இ.மெயில் முகவரியை பயன் படுத்த வேண்டுகிறோம் mansurumma@yahoo.co.in

Series Navigation

மன்சூர்ஹல்லாஜ்

மன்சூர்ஹல்லாஜ்