அணுகுமுறை

This entry is part [part not set] of 32 in the series 20070531_Issue

இரா.பிரவீன்குமார்


மே திங்கள் 9 (09/05/2007) அன்று,சிங்கை இந்தியத் தூதரகத்திடம் இருந்து ஒரு மின்னஞ்சல், என் மின்னஞ்சல் முகவரியை அலங்கரித்தது. “ஆந்திர முதலமைச்சர் அழைக்கிறார்” என்ற தலையஅங்கத்தை ஏந்தி நின்ற அந்தச் செய்தியைப் படிக்க விளைந்தேன்,ஆந்திர முதல்வர் திரு.ராஜசேகர ரெட்டி அவர்கள் சிங்கை அரசையும்,சிங்கை தொழில் அதிபரையும் தொழில் தொடங்க ஆந்திரா அழைக்கிறார் எனவும்,அதற்காக ஒரு சந்திப்பு மே திங்கள் 11இல் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும்,இந்த நிகழ்வில் கலந்து கொள்ள மே திங்கள் 8 தேதிக்குள் பதிவுசெய்ய வேண்டும் என்று மே திங்கள் 9 அன்று எனக்குத் தகவல் அனுப்பி இருந்தனர். காலம் கடந்து வந்த செய்தியாயினும் ஆந்திர முதல்வரின் அனுகுமுறையைக் காணவேண்டி,நிகழ்ச்சி நெறியாளரிடம் விண்ணப்பித்தேன் அனுமதி கிடைக்கவில்லை.பின் தொலைக்காட்சி மூலமாகவும்,செய்தித்தாள் மூலமாகவும் விவரம் அறிந்தேன்.அவற்றை என் சகாக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியதன் விளைவே இந்தக் கட்டுரையின் பிரசவம்.

ஆந்திர முதல்வர் திரு.ராஜசேகர ரெட்டி அவர்கள் சிங்கை பிரதமரையும்,சிங்கை தொழில் முனைவர்களையும் சந்தித்து ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கலந்துரையாடினார்.இந்த சந்திப்பின் விளைவு சிங்கை அரசு ஒரு குழுவை ஆந்திரா அனுப்பி அங்கு தொழில் தொடங்கும் சாதக நிலையை அறிய முடிவெடுத்தது.அதுமட்டும் அல்லாமல் சிங்கையின் மூத்த அமைச்சர் திரு.கோ சோக் டோங் (Mr.Goh chow tong)அவர்கள் ஆந்திரா வரும் அக்குழுவிற்கு அங்கு அந்நாட்டின் இயற்கைவளம்,தொழில் தொடங்கும் சாதகநிலையைப் பற்றிய ஒரு பயிலரங்குப் பட்டறை ஒன்றை நடத்தும் படிக் கேட்டுக்கொண்டார்.அதை ஏற்றுக்கொண்ட முதல்வர், ஆந்திரா வரும் அந்த குழுவிற்கும்,மற்ற வெளிநாட்டு வர்த்தகர்களுக்கும் உதவவும் தனி அமைச்சு அமைக்கப்பட்டுள்ளது எனும் தகவலையும் அந்த அமைச்சுக்குத் தற்போதைய சுற்றுலாத் துறை அமைச்சர் திருமதி..கீதா ரெட்டி அவர்கள் தலைமை வகிப்பதாகவும் கூறினார்.

ஆந்திராவின் வளத்தையும்,அதன் தகவல் தொடர்புத் துறையின் வளர்ச்சியையும் விவரித்து அவர் கூறுகையில்,இந்திய மாநிலங்களிலேயே மென்பொருள் துறையில் 51% வளர்ச்சி கண்ட மாநிலம் ஆந்திரா எனவும், மென்பொருள் துறை ஹைதராபாத் நகரில் மட்டுமல்லாமல் புறநகரங்களான விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா போன்ற நகரங்களுக்கும் பரவியுள்ளது எனவும்,பன்னாட்டு விமான நிலையம் ஒன்று விரைவில் விசாகபட்டினம் வர இருப்பதாகவும்,மேலும் உணவுப்பொருட்கள் தயாரிப்பு,மருத்துவத்துறை மற்றும் ஆடைதயாரிப்பு போன்ற துறைகளில் மாநிலத்தின் பங்கு போன்ற வளர்ச்சி பணிகளைப் பட்டியலிட்டார் முதல்வர் திரு.ராஜசேகர ரெட்டி அவர்கள்,உள்நாட்டில் அவருடைய அரசின் பேரில் பல ஊழல் புகார் இருப்பினூம்,அவரின் இந்த அனுகுமுறை நல்லதொரு பயனைத்தரும் என்று நம்புவோம்.

சற்றே பின்நோக்கி சிங்கையின் அனுகுமுறையையும் காண்போம்,ஒரு சிறு மீன்பிடித்துறைமுகமாயிருந்த சிங்கை இன்று வளர்ந்த நாடுகளின் வரிசையில் தனக்கொரு இடத்தைப் பிடித்துள்ளது.இந்த நிகழ்வுக்குப் பெறும் காரணமாக இருந்தது தற்போதைய மதியுரை அமைச்சர், அன்றைய பிரதமர் திரு.லீ குவான் யூ எனும் மந்திரசொல். அவருடைய வித்தியாசமான அனுகுமுறையே சிங்கையின் சீர்மிகும் வளர்ச்சிக்குப் பெரும் காரணம்..அதற்கு ஒரு சிறு உதாரணம், தற்பொழுது சிங்கைமுழுவதும் நிறைந்து கிடக்கும் பசுமையான புல்வெளிகளும் பூங்காக்களும் அன்று இல்லை,ஆனால் சிங்கையில் தொழில் தொடங்கும் ஆய்விற்கு வரும் குழுக்கள் சாங்கி விமானநிலையத்தில் சிறப்பாக வரவேற்கப்பட்டு அவர்கள் தங்கும் விடுதிக்கு அழைத்துச் செல்லப்படுவர். விமான நிலையத்தில் இருந்து விடுதிக்கு இட்டுச்செல்லும் சாலைகளின் இருபுறங்களிலும்,இடையிலும் வண்ணமயமான பூக்களின் அணிவகுப்பு பார்ப்பவர்களின் இதய பறிக்கொடுப்பிற்கு வித்தானது.பின் அந்தக் குழுக்கள் பிரதமரின் அலுவலகத்தில் சிறப்பு ஏற்பாட்டுடனான அறையில் கலந்துரையாடும்.ஆக சிங்கை வந்திறங்கியவுடனும் அதன் பின் நடக்கும் வரவேற்புகளும் அந்த குழுக்களின் மனதளவில் உற்சாகத்தை ஏற்படுத்தி இங்கு தொழில்த் தொடங்கும் எண்ணத்தை உறுதிப்படுத்தும் நிலைக்கு இட்டுசெல்லும்.இந்த மனரீதியான அனுகுமுறை நல்ல பலனைக் கொடுத்தது.அடுத்து,ஆசியாவின் மற்ற நாடுகள் கையாண்ட குறைந்த ஊதியம் கொண்ட ஊழியர்கள் எனும் அனுகுமுறையை பின்பற்றாமல், சிறந்த பயிற்சியைக் கொண்ட ஊழியர்கள் எனும் அனுகுமுறையை கையாண்டார் திரு.லீ.அதற்காக பயிற்சிப் பட்டரைகள் தொடங்கி அதன் மூலம் ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப் பட்டது.இந்த அனுகுமுறையும் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. இப்படி, பல வித்தியாசமான அனுகுமுறையால் சிங்கை இன்று மிளிர்ந்து நிற்கிறது. சிங்கையின் புகழ்பாட இந்த உதாரணங்களை கையாளவில்லை,நம்மவருக்கும் தெரியப்படுத்தவே இது கையாளப்பட்டுள்ளது.

நம் கழகத்தின் ஆட்சியில் இத்தகையதொரு அனுகுமுறையை பார்க்கமுடிவதில்லை.பாவம் அவர் தன் வாரிசுகளைப் பலப்படுத்தவே அத்தகைய அனுகுமுறையை கையாளுகின்றார் போலும். தனிப்பட்ட கட்சி விரோத செயல்களில் ஈடுப்பட்டாரோ, இல்லையோ, ஆனால் அந்த அமைச்சர் மூலம் தகவல் தொழில்நுட்பத் துறை வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்றது உண்மை,ஆனால் அந்த வளர்ச்சியையும் தடைசெய்தது கழகத்தின் மற்றுமொரு சாதனை.அந்தத் துறைக்குப் புதிதாக பதவி ஏற்ற அமைச்சர் பத்திரிக்கையாளரை சந்திக்கையில் “என் முதலமைச்சர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் செய்வேன் என்கிறார். “தன் தலைவன் சிந்தனையே தன் சிந்தைனை என நினைத்து சுயசிந்தனையைத் தொலைத்த” மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்களவை உறுப்பினர்.கழகத்தின் அனுகுமுறையை மாற்றி தமிழகத்தை நல்வழிநோக்கி பயணப்படுத்துவாரா நம் தமிழினத்தலைவர்?

ஆந்திர முதல்வர் திரு.ராஜசேகர ரெட்டி அவர்களின் இந்த அனுகுமுறை நல்லபல பயனைத்தரட்டும்,அதே வேளையில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களுக்காகவும் அவருடைய வித்தியாசமான அனுகுமுறை வேண்டும்.
பணக்காரன் மேலும் பணக்காரனாக ஆகிறானோ இல்லையோ,ஏழை நிச்சயம் நடுத்தரவர்க்கமாகவோ அல்லது பணக்காரனாகவோ மாற்றப் படவேண்டும் என்பதே நம் எண்ணம். 2007ல் நடந்த ஒரு கருத்துக் கணிப்பில் இந்தியாவில் 40 பேர் பில்லியனர் (பில்லியனர் எனில் 4000 கோடி ரூபாய் சொத்து உள்ளவர்கள்).இந்த எண்ணிக்கை ஜப்பான் (24),சீனா (17),பிரான்ஸ்(14),இத்தாலி(14), என்ற வளர்ந்த நாடுகளின் எண்ணிக்கையை விட அதிகம்.ஆனால் நாம் இன்னும் வளர்ந்து வரும் நாடு. இந்த 40 சீமான்களின் மொத்தச் சொத்து மதிப்பு 7 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய்,இந்திய அரசின் 91 பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவானது.ஆக பணம் ஒருவரிடத்திலே குவிக்கப் படுவது நியாயமற்ற செயல்.அது அனைவரிடத்திலும் சென்றடைய வேண்டும்.

2020ல் இந்தியா வல்லரசுநாடாகும் என சூளுரைத்தார் நம் முதல்குடிமகன்.அந்த சூளுரையின் விளக்கம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி,விஞ்ஞான வளர்ச்சி மட்டும் அல்ல, அடிப்படைத் தேவைகள் அனைவரையும் சென்றடைவதும்,ஆகும்.
ஆம், வறுமைக்கோட்டை முற்றிலும் அழித்து, அது இருந்ததற்கான எந்த ஒரு சுவடும் இல்லாமல் செய்வதே நம் நோக்கம்.
அதற்கான அனுகுமுறையைக் கையாள்வோம்.

இதமுடன்
இரா.பிரவீன்குமார்

Series Navigation

இரா.பிரவீன் குமார்

இரா.பிரவீன் குமார்