எவ்வாறு ஒரு பிரிட்டிஷ் ஜிஹாதி உண்மை ஒளியைக் கண்டடைந்தார்? – 2

This entry is part [part not set] of 29 in the series 20070510_Issue

எட் உசேன்


(தி இஸ்லாமிஸ்ட் என்ற புத்தகத்திலிருந்து கட்டுரை வடிவில் எடுக்கப்பட்டது. )
செல் தொலைபேசிகளில் இருக்கும் புளூடூத் தொழில்நுட்பம் மூலமாக ஒருவரை ஒருவர் தெரியாத அந்நியர்களுக்கும் போர்னோகிராபிக் அசைபடங்களை பரிமாறிக்கொள்கின்றனர், பெரும்பாலான இப்படிப்பட்ட அசைபடங்கள் சவுதிகளுக்கு நடுவே நடக்கும் ஓரினபாலுறவு காட்சிகள். இவற்றில் பல லெபனானிலும் எகிப்திலும் இளம் சவுதிகள் ஓரினபாலுறவு கூட்டுக்கலவியில் ஈடுபடும் காட்சிகள். சவுதி அரேபியாவில் பாலுறவு பற்றிய பைத்தியமாகும் அளவுக்கு சிந்திப்பது மிகவும் கவலை அளிக்கக்கூடிய அளவுக்கு சென்றிருக்கிறது. ஆண்களும் பெண்களும் பாலுறவு பலாத்காரத்திலும் துன்புறுத்தலிலும் பாதிக்கப்படுவது மிகவும் அடிக்கடி நடக்கிறது. சில மோசமான வழக்குகள் தணிக்கைக்குள்ளாக்கப்பட்ட தேசிய ஊடகங்களில் வரும் அளவுக்கு மோசமானவையாக இருக்கின்றன.

எரிந்து கொண்டிருந்த ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்த சிறுமிகள் பர்தா அணியாமல் இருந்ததாக கருதி அதன் உள்ளே செல்ல தீயணைப்பு படைவீரர்களை முட்டவா என்று அழைக்கப்படும் மதகட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றுகிறார்களா என்று பார்க்க நியமிக்கப்பட்டிருக்கும் போலீஸ் அனுமதி மறுத்துவிட்டது என்பதை என் மாணவர்கள் மார்ச் 2002இல் சொன்னார்கள். இதன் விளைவாக 15 சிறுமிகள் கருகிச் சாம்பலானார்கள். ஆனால், வகாபிஸம் தன் தலையை நிமிர்த்திக்கொண்டு அலைந்தது. ஏனெனில் கடவுளின் கட்டளைகள் பின்பற்றப்பட்டன.
இளம் இஸ்லாமிஸ்ட்டாக நான்கல்லூரியில் இருந்தபோதும், பிரிட்டனில் என் சமூகத்தில் இருந்தபோதும், ஆண்கள் பெண்கள் நிரந்தரமாக பிரிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று நம்பினேன், அதற்கேற்றாற்போலவே நிகழ்ச்சிகளையும் அமைத்திருந்தேன். ஆனால், அப்படிப்பட்ட பிரிவினைக்கு நேரும் தர்க்கரீதியான விளைவுகளை சவுதிஅரேபியாவில் வாழும்போது பார்க்க முடிந்தது.
எனது இஸ்லாமிஸ்ட் நாட்களில் எய்ட்ஸ் மற்றும் பாலுறவு மூலம் பரவும் வியாதிகள் மேற்கில் இருக்கும் ஒழுக்கரீதியான இழிவின் விளைவாகவே வருகின்றன என்று கூறுவதை மிகவும் ரசித்து பேசிக்கொண்டிருந்தேன். பிரிட்டனில் இருக்கும் பிரிக் லேன் இடத்தில் இருந்த விபச்சாரிகளை அடிப்பதையும் திட்டுவதையும், பிரிட்டனில் இருக்கும் விவாகரத்து வீதத்தையும் கருக்கலைப்பு வீதத்தையும் குறிப்பிடுவதையும் ஏராளமான இஸ்லாமிஸ்டுகள் செய்துவந்தார்கள். இதன் உள்ளுறை விஷயம் என்னவென்றால், இஸ்லாமிய ஒழுக்கம் மேற்கு ஒழுக்கத்தைவிட மேலானது என்பதுதான். முன்னெப்போதையும் விட இப்போது நான் இதுவும் ஒரு இஸ்லாமிஸ்ட் பிரச்சாரமே என்பதையும், அது முஸ்லீம் மனங்களில் பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தவும் மேற்குலகை பலவீனப்படுத்தவும் உருவான வெறும் பிரச்சாரமே என்பதை உணர்ந்தேன்.
என்னுடைய இந்த அவதானிப்புகள் வினோதமானவையா என்றும், அலையும் மனத்தின் விளைவா என்பதையும் யோசித்து கவலையடைந்தேன். என்னுடைய இந்த பிரச்னைகளை பிரிட்டிஷ் கவுன்சிலில் வேலை செய்த மற்ற பிரிட்டிஷ் முஸ்லீம்களிடம் உரையாடினேன். வகாபி பிரிவுக்கு சாதகமாக சிந்தித்துக்கொண்டிருந்த என் நண்பர் ஜமால் எனது அவதானிப்புகளோடு முழுதும் இணங்கினார். மேலும், “எட், என்னுடைய மனைவி பிரிட்டனிலேயே முழு அபயாவோடு சென்றிருக்கிறாள். இங்கே அவளைமுறைக்கும் அளவுக்கு அங்கு கூட இந்த அளவு அவள் முறைக்கப்படவில்லை.” என்றார். இன்னொரு பிரிட்டிஷ் முஸ்லீம், சவுதி இளைஞர்கள் தன் மனைவியை முறைத்து பார்ப்பதை தவிர்க்க தனது காரின் ஜன்னல் கண்ணாடிகளுக்கு கருப்பு வண்ணம் பூசினார்.
சவுதி அரேபியாவின் பிரச்னை வெறும் இனவெறியும் பாலுறவு விரக்தியும் மட்டும் அல்ல.
தற்போதைய வகாபிசத்தில் இரண்டு பெரும் பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று சவுதியை ஆளும் சவுதி வமிசத்திற்கு முழுமையாக ஆதரவு தெரிவித்து, அந்த சவுதி அரசாங்கம் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு மத ரீதியிலும் புத்தக ரீதியிலும் ஆதரவு கொடுப்பது. இரண்டாஅது பிரிவு, இந்த சவுதி மன்னராட்சியை வன்முறையின் மூலம் அரசிலிருந்து நீக்கிவிட்டு, அதன் இடத்தில் வகாபி இமாம்களை உட்காரவைக்கவேண்டும் என்று கோருவது.ஒஸாமா பின் லாடன், அல்குவேதா ஆகியவை இரண்டாவது பிரிவின் கீழ் வருகின்றன.
மெக்கா, மெதீனா, ஜெட்டா ஆகிய இடங்களில் ஐரோப்பாவிலிருந்தும், மற்ற இடங்களிலிருந்தும் வந்து வகாபி மதரஸாக்களில் படிக்கும் ஏராளமான கோப முகம் கொண்ட இளைஞர்களை சந்தித்தேன். அவர்கள் எல்லோரும் என்னுடைய பழைய தீவிரவாத நாட்களை ஞாபகப்படுத்தினார்கள்.

சவுதி அரேபியாவுடன் அவர்களது விரக்தியை என்னுடன் பகிரங்கமாக உரையாடினார்கள். “இந்த நாடு போதுமான அளவு இஸ்லாமிஸ்டாக இல்லை.” அவர்கள் முழுவதும் அரச வம்சத்துக்கு ஆதரவாக இருந்தார்கள். அந்த அரசாங்கத்தை ஆதரித்த வகாபி மதகுருக்களுக்கும் ஆதரவாக இருந்தார்கள். முழுவதும் வகாபிஸத்தால் நிரப்பப்பட்டு, பிரிட்டிஷ் மசூதிகளில் இமாம்களாக பணியாற்ற வெகு விரைவிலவர்கள் மேற்குலகுக்கு திரும்பி செல்வார்கள்.

2005இன் கோடைக்காலத்தில் எனக்கும் பயிக்கும் சவுதி அரேபியாவில் இருக்க 8 வாரங்களே இருந்தன. அதன் பின்னர் நாங்கள் பிரிட்டன் திரும்ப வேண்டும். ஜுஉலை 7 ஆம் தேதி வியாழக்கிழமை சவுதி வாரவிடுமுறையின் ஆரம்பம். நான்கு அரசாங்க அமைச்சர்களுக்கு நிதி ஆலோசகராக இருக்கும் சுல்தான் என்ற சவுதி வங்கிநிபுணருடன் உணவருந்த சென்றிருந்தோம். அவரது மனைவி என் மனைவியின் மாணவி. அவரும் அவரது மனைவியும் அவர்களது பிறந்த நாட்டுக்கும் வெளியேயும் இருக்கும் வாழ்க்கையை பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள விரும்பினேன்.
அன்று காலையில் தொலைக்காட்சியில் லண்டன் ஆழ்துளை பாதையில் மின்சார தடைஇருந்ததை பற்றிய செய்தி ஓடிக்கொண்டிருந்தது. கேமராக்கள் கிங்ஸ் கிராஸ், எட்ஜ்வர் ரோடு, அல்ட்கேட், ரஸ்ஸல் ஸ்குயர் ஆகிய இடங்களை காட்டிக்கொண்டிருந்தது. நான் அந்த காட்சிகளை சுவாரசியமாகவும் ஓரளவுக்கு பிறந்த ஊர் ஞாபகத்தினாலும் பார்த்துக்கொண்டிருந்தேன். திடீரென்று அந்த காட்சிகள் மாறி பயங்கரவாதிகளின் தொடர் வெடிகுண்டு செய்திகள் நிறைத்தன.
என்னுடைய ஆரம்ப சந்தேகம் இந்த தொடர் வெடிகுண்டுகளுக்கு காரணம் சவுதிகள் என்பது. அவர்களுடனான என் அனுபவங்கள், முஸ்லீம் அல்லாதவர்கள் மீதான அவர்களது கரை கடந்த வெறுப்புகள், வெறுப்பு நிறைந்து வழியும் அவர்களது பாடப்புத்தகங்கள் ஆகியவை பின்லாடனின் சவுதி போர்வீரர்கள் இப்போது என் சொந்த ஊரையும் தாக்கியிருக்கிறார்கள் என்று என்னை சிந்திக்க வைத்தன.

ஹிஜ்ப் உட் தாஹ்ரிர் அமைப்பு பிரிட்டனுக்குள் ஜிகாது பேசியதன் விளைவுதான் இப்படிப்பட்ட திகிலுக்கு காரணம் என்று என் மனதில் அப்போது ஏதும் தோன்றவில்லை.

அல்ட்கேட் ஸ்டேஷனில் நடந்த தற்கொலை தாக்குதலிலிருந்து நான்கு நிமிடங்கள் காரணமாக என்னுடைய சகோதரி உயிர்தப்பினாள். அதற்கு முந்தின நாள் ஒலிம்பிக் நடத்த நகரங்களுக்கு இடையேயான போட்டியில் லண்டன் வெற்றி பெற்றது. பிரிட்டிஷ் கவுன்ஸிலில் நாங்கள் அதனை கொண்டாடியிருந்தோம்.

தெற்கில் நடந்த இந்த நிகழ்வுகளால், ஸ்காட்லாந்தில் நடக்க இருந்த ஜி-8 உச்சமாநாடு இதனால், தள்ளிப்போடப்பட்டது. டோனி பிளேர் மற்றும் பாப் ஜெல்டோஃப் ஆகியோரின் முயற்சியால் அந்த மாநாடு ஆப்பிரிக்காவில் ஏழ்மையை நீக்க முயற்சி எடுக்க திட்டமிட்டிருந்தது. இப்போது அது இஸ்லாமிய பயங்கரவாதத்தை பற்றி பேச உந்தப்பட்டுவிட்டது. அரபு துயரங்கள் மீண்டும் வறுமை ஒழிப்பு திட்டங்களை கடத்தி சென்றுவிட்டன.

நூற்றுக்கணக்கான ஆப்பிரிக்க ஏழைக்குழந்தைகள் தினந்தோறும் ஆப்பிரிக்காவில் இறந்துகொண்டிருக்கின்றன என்பது ஒரு தீவிர இஸ்லாமிஸ்டுக்கு முக்கியத்துவம் அற்ற செய்தி. தீவிரவாதம் பிடித்த அந்த மனத்தில் கோடிக்கணக்கான ஆப்பிரிக்கர்களது இறப்பை விட துளியோண்டு இருக்கும் பாலஸ்தீன தேசத்தின் துயரமே மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்கள் இறக்கட்டும், அவர்கள் முஸ்லீம் அல்லாதவர்கள் என்பதுதான் பேசப்படாத உரை. ஒரு இஸ்லாமிஸ்டாக, முஸ்லீம்களின் துயரம் மட்டுமே என்னை உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறது. இப்போது சாதாரண மனிதனின் துயரம் எனக்கு முக்கியமாக இருந்தது.. அவர் எந்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும்.

நானும் பயியும் டெலிவிஷனை மணிக்கணக்காக பார்த்துக்கொண்டிருந்தோம். ட்யூப் ஸ்டேஷன்களிலிருந்து என் சக லண்டன்வாசிகள் காயமடைந்து திகிலுடன் அதே நேரத்தில் வைராக்கியமான ஒரு கௌரவத்துடன் உலகை எதிர்கொண்டு வெளியே வருவதை பார்க்கும்போது நான் பிரிட்டிஷ்காரன் என்ற பெருமிதத்தை அடைந்தேன்.

சுல்தானையும் அவரது மனைவியையும் பிரிட்டிஷ் கவுன்ஸிலின் அருகே இருந்த இந்திய உணவகத்தில் சந்தித்தேன். சுல்தானின் வயது ஆரம்ப 30களில் இருக்கும். அவரது மனைவி இருபதுகளின் இறுதியில் இருந்தார். அவர்கள் பல இடங்களை பிரயாணத்தின் மூலம் அறிந்திருந்தார்கள். அவர்கள் நான் சந்தித்த மற்ற சவுதிகளை விட தாராள மனமுள்ளவர்களாக இருந்தார்கள். தற்காலிக தடுப்புச்சுவர்களால் பிரிக்கப்பட்டிருந்த உணவகம் ஒரு தனிமையை கொடுத்திருந்தது. நான் ஆச்சரியப்படும்படி, அவரது மனைவி தனது பர்தாவை கழட்டிவிட்டார்.
நாங்கள் எங்களுடைய பிரயாணங்களை பற்றி பேசினோம்.

தான் லண்டனில் தங்கியிருந்த காலத்தை பற்றி சுல்தான் அன்புடன் நினைவுகூர்ந்தார். Coutts நிறுவனத்தில் அவர் ஒரு பயிற்றுக்கால வங்கியாளராக இருந்ததை அன்புடன் நினைவுகூர்ந்தார். அதன் பின்னர் அப்போது என் மனத்தில் உச்சியில் இருந்த பிரச்னைக்கு சென்றோம். லண்டனில் பயங்கரவாத தாக்குதல்கள் பற்றி. அவர் அதனைப்பற்றி கவலைப்படுபவராக தெரியவில்லை. லண்டனின் அவரது காலத்தை பற்றி அன்புடன் பேசினாலும், அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு அனுதாபமோ, அல்லது அந்த நிகழ்ச்சியை பற்றி ஒரு அதிர்ச்சியோ அவரிடம் இல்லை.

“இதுவும் பின்லாடன் பண்ணியதுதான் என்று அவர்கள் சொல்வார்கள். 9/11க்கு நாம்தான் காரணம் என்று நம்மை குற்றம் சாட்டினார்கள்” என்று சொன்னார்.

அவரது சொல்லை உடனே எடுத்துக்கொண்டு நான் கேட்டேன், “சவுதி அரேபியாவில் நீங்கள் படித்த உங்களது கல்வியை வைத்துக்கொண்டு பார்த்தால், இங்கே குழந்தைகளுக்கு சொல்லித்தரப்படும் இஸ்லாமுக்கும், செப்டம்பர் 11இல் 15 சவுதி ஆண்கள் செய்த செய்கைக்கும் சம்பந்தம் இருப்பதாக நினைக்கிறீர்களா?”

கொஞ்சம் கூட யோசிக்காமல், அவரது சொன்ன உடனடி பதில், “இல்லை இல்லை. ஏனெனில் சவுதிகள் 9/11க்கு பின்னால் இல்லை. விமானத்தை கடத்தியவர்கள் சவுதிகள் அல்ல. ஆயிரத்து இருநூற்று நாற்பத்தி ஆறு யூதர்கள் அன்று வேலைக்கு வரவில்லை. அந்த கொலைகளுக்கு யூதர்கள்தான் காரணம் சவுதிகள் அல்ல என்பதற்கு ஆதாரம் இருக்கிறது”

எத்தனை யூதர்கள் வேலைக்கு வரவில்லை என்பதில் மிகச்சரியான எண்ணிக்கையை அப்போதுதான் நான் கேட்டேன். அங்கு நான் உட்கார்ந்து உண்மையை மறுக்கும் பரந்த அரபு மனத்தையும், வஹாபி ஜிகாதி பயங்கரவாதம் அவர்களுக்கு நடுவேயிருந்து எழுந்து உலகம் முழுவதும் பெரும் அழிவை ஏற்படுத்துவதை ஒத்துக்கொள்ள மறுக்கும் குணத்தையும் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை, சவுதி வேலைவாரத்தின் ஆரம்பநாளான ஞாயிற்றுக்கிழமையில், என்னுடைய வகுப்பில் 60 சவுதிகள் இருந்தனர். ஒரே ஒருவர்தான் லண்டன் குண்டுவெடிப்புகளைப்பற்றி பேசினார்.

“உங்களது குடும்பம் பாதிக்கப்பட்டதா” என்று கேட்டார்.

“என்னுடைய சகோதரி குண்டுவெடிப்பை நான்கு நிமிடங்களில் தவிர்த்தாள். மற்றபடி அவர்கள் நன்றாக இருக்கிறார்கள், நன்றி”

முழு வகுப்புக்கும் முன்னர், அவர் பெருமூச்செறிந்து, சொன்னார், “பயங்கரவாதத்தில் எந்த வித பலனும் கிடையாது. ஏன் மக்கள் அப்பாவிகளை கொல்கிறார்கள்?”

இரண்டு பேர்கள் உடனே அவருக்கு அரபியில் பதில் கூறினார்கள், “அதில் பலன்கள் இருக்கின்றன. நாம் எப்படி உணர்கிறோம் என்பதை அவர்களும் உணர்வார்கள்”

நான் கடுப்பானேன், “எக்ஸ்கியூஸ் மீ, அது எப்படியிருக்கும் என்று யாருக்கு தெரியும்?” என்றேன்

“நாங்கள் உங்களைச் சொல்லவில்லை, நாங்கள் இங்கிலாந்து மக்களைப் பற்றி சொல்கிறோம். நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். அங்கிருப்பவர்களுக்கு எப்படி ஈராக்கியர்களும் பாலஸ்தீனர்களும் உணர்கிறார்கள் என்பதை அறியவேண்டும்”

“பிரிட்டிஷ் மக்கள் ஐ.ஆர்.ஏவால் வருடக்கணக்கில் குண்டுகளால் தாக்கப்பட்டிருக்கிறார்கள்” நான் பதிலிறுத்தேன், “இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரால் லண்டன் மக்கள் குண்டுகளால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். ஈராக் போருக்கு எதிரான மிகப்பெரிய பேரணி லண்டனில்தான் நடந்தது. குண்டுகளால் தாக்கப்பட்டால் எப்படியிருக்கும் என்பதை பிரிட்டிஷ் மக்களுக்கு யாருக்கும் போதிக்கவேண்டிய தேவை இல்லை”

பல மாணவர்கள் அங்கீகரித்து தலையை ஆட்டினார்கள். விவாதம் புரிந்த மற்றவர்கள் அமைதியானார்கள். நான் சொன்னதை அவர்கள் அங்கீகரித்தார்களா? அது சொல்வது கடினமானது.

லண்டன் தாக்குதல்களுக்கு இரண்டு வாரங்களுக்கு பின்னர் இன்னொரு சவுதி மாணவர் தன் கையை உயர்த்தி கேட்டார், “நான் எப்படி லண்டனுக்கு செல்ல முடியும்?”

“நீங்கள் எதற்காக லண்டனுக்கு போக விரும்புகிறீர்கள் என்பதை பொறுத்தது. நீங்கள் அங்கே படிக்கப்போகிறீர்களா அல்லது சுற்றுலா பயணியாக போக விரும்புகிறீர்களா?”

“நான் அடுத்த மாதம் லண்டனுக்கு போக விரும்புகிறேன். லண்டனின் குண்டு, பெரிய குண்டு வைக்க விரும்புகிறேன். நான் ஜிகாத் செய்ய விரும்புகிறேன்”

“என்னது!” என்று அதிர்ந்தேன். இன்னொரு மாணவர் தன் இரண்டு கைகளையும் உயர்த்தி கத்தினார், “நானும்!. நானும்!”:

அவர்களில் பலபேர் சிந்தித்துகொண்டிருப்பதை பேசியவர்களை கரகோஷத்துடன் பாராட்டினார்கள். நான் கோபத்தின் உச்சியிலிருந்தேன். எதிர்ப்பு காண்பிக்கும் விதமாக என்னை கிண்டல் செய்யும் குரல்களுக்கும், விசில்களுக்கும் மத்தியில் அந்த வகுப்பறையிலிருந்து வெளியேறினேன்.

அடிப்படை வாத வஹாபிஸமும் அரசியல் இஸ்லாமான இஸ்லாமிசமும் இணைந்து உலகத்தில் பெரும் அழிவை செய்துகொண்டிருக்கின்றன என்ற என்னுடைய கருத்தை சவுதி அரேபியாவில் இருந்த என் நாட்கள் நிரூபித்தன. கோபங்கள் நிறைந்த இந்த கொள்கைகள், ஒருகாலத்தில் நானே ஆதரித்த இந்த கொள்கைகள், இஸ்லாமுக்கும் முஸ்லீம்களுக்கும் மட்டும் அச்சுருத்தல் அல்ல, உலகத்துக்கே மாபெரும் அச்சுருத்தல்.

என்னுடைய சிறிய அளவில், என்னுடைய மத நம்பிக்கையை கடத்தியவர்களோடு போராடவும், என்னுடைய இறைதூதரை அவமரியாதை செய்தவர்களோடு போராடவும், ஆயிரக்கணக்கான என் மக்களை, மனித குலத்தை சார்ந்தவர்களை, கொன்றவர்களோடு போராடவும் நான் வைராக்கியம் பூண்டேன். ஆகஸ்ட் 5, 2005இல் டோனி பிளேர் பிரிட்டனில் செயலாற்றி வந்த பல இஸ்லாமிய அமைப்புக்களை, அதில் முதன்மையாக ஹிஸ்ப் உட் தாஹ்ரிர், தடை செய்ய அறிவித்தபோது நான் தைரியமுற்றேன்.

அந்த நேரத்தில் நான் பிளேரின் உறுதியால் மகிழ்வடைந்தேன். பல்லாண்டுகளுக்கு முன்பே ஹிஜ்ப் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போது அது எங்களைப் போன்ற பலரது துயரத்தை அது தவிர்த்திருக்கும். ஆனால், கடந்த வருடம் அந்த சட்டம் நிறைவேற்றப்படவில்லை. அதன் காரணம் அதனை தடை செய்வது அதன் மீது இன்னும் பலருக்கு கவர்ச்சியை கொடுக்கலாம் என்ற எண்ணமே. ஆகவே அது இன்னமும் சட்டப்பூர்வமானதாகவும் செயலாற்றியும் வருகிறது. ஆனால், இன்னும் செயல்களுக்கு நேரமாகவில்லை.

(முற்றும்)

Series Navigation

எட் உசேன்

எட் உசேன்

எவ்வாறு ஒரு பிரிட்டிஷ் ஜிஹாதி உண்மை ஒளியைக் கண்டடைந்தார்? – 1

This entry is part [part not set] of 24 in the series 20070503_Issue

எட் உசேன்


(தி இஸ்லாமிஸ்ட் என்ற புத்தகத்திலிருந்து கட்டுரை வடிவில் எடுக்கப்பட்டது. )

ஜெட்டாவில் என் முதலிரண்டு மாதங்களில் , ·பயி-யும் நானும் எங்களது புதிய சொகுசான வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தோம். பளபளக்கும் ஜீப், இரண்டு நீச்சல் குளங்கள், வீட்டு வேலைக்காரி, வரியில்லாத சம்பளம்… நவீன நகரத்தில் அனைத்து வசதிகளுடனும் வாழும் இந்த சொகுசான கூட்டு வாழ்க்கை, செளதி அரேபியாவில் இருக்கும் பயங்கரமான உண்மைகளிலிருந்து என்னை விலக்கி வைத்திருந்தது.

என்னுடைய ஆட்டுத்தாடியும், நல்ல அரபி மொழி திறமையும் என்னை எளிதாக அரபியனாக காட்டியிருக்கும்.

ஆனால் இளம் அரபுபோல இருப்பது மட்டும்போதுமானதாக இல்லை. ஒரு சவுதி போலவே நடைமுறையும், நவுதியாகவே வாழ்வதும் தேவையாக இருந்தது. அங்கே நான் தோல்வியுற்றேன்.
சவுதி கலாச்சாரத்துடன் என் முதல் மோதல், நான் புல்லட் புரூப் ஜீப்பில் சென்றுகொண்டிருந்தபோது வந்தது. நான் ஒரு ஆப்பிரிக்க பெண்கள் கருப்பு அபயாக்களில் உணவுச்சாலைகளுக்கு வெளியே குப்பைகளை நோண்டிக்கொண்டும், வீடுகளுக்கு வெளியே குப்பைகளை நோண்டிக்கொண்டும், இன்னும் சாலைகளில் அலைவதையும் பார்த்தேன்.

நான் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தவரிடம், “ஏன் இத்தனை கருப்பின தோட்டிகள் தெருக்களில் இருக்கிறார்கள்?” என்று கேட்டேன். டிரைவர் சிரித்தார். “அவர்கள் தோட்டிகளல்ல. அவர்கள் ஸ்கவஞ்சர்கள். ஜெட்டா தெருக்களில் இருக்கும் அட்டைகளை சேகரித்து விற்கிறார்கள். இவர்கள் பாட்டில்கள், தகரடப்பாக்கள், பைகளை சேகரிக்கிறார்கள்” என்று சொன்னார்.

“ஏழையான இப்படிப்பட்ட அந்நிய பெண்கள் இப்படிப்பட்ட சுகாதாரமற்ற சூழ்நிலையில் மரியாதைக்குறைவான சூழ்நிலையில் தெருக்களில் அலைவது உங்களுக்கு ஆட்சேபகரமானதாக தோன்றவில்லையா?”

“என்னை நம்புங்கள்.பெண்கள் இதைவிட மோசமான வேலைகளில் இருக்கிறார்கள்”

அதனை ஒத்துக்கொள்வது எனக்கு மிகவருத்தமானதாக இருந்தாலும், டிரைவர் சொன்னது உண்மைதான். சவுதி அரேபியாவில் பெண்கள் மிகவும் மோசமான வேலைகளில் இருந்தார்கள். பெரும்பாலானா ஆப்பிரிக்க பெண்கள் ஜெட்டாவில் கராண்டினா என்றழைக்கப்படும் ஏழைகள் நிரம்பிவழியும் குப்பங்களில் இருந்தார்கள். இவைகளில் வறுமையும், விபச்சாரமும், நோய்களும் நிரம்பி வழிகின்றன.

என் வாழ்க்கையில் நான் சந்தித்த மோசமானவைகளிலேயே மிகவும் மோசமானது காரண்டினாவுக்கு நான் சென்றதுதான். ஆயிரக்கணக்கான மக்கள் சவூதி அரேபியாவில் பத்து இருபது வருடங்களாக வாழ்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு பாஸ்போர்ட் கிடையாது. இவர்கள் குடியுரிமை அற்ற சட்டப்பூர்வமற்ற குடிகள். இவர்கள் உண்மையிலேயே சாலைகளின் கீழே அனாதையாக்கப்பட்டு கிடக்கிறார்கள்.

பிரிட்டிஷ் கவுன்சிலில் நான் சந்தித்த ஒரு சவுதி அல்லாத கருப்பு மாணவர் என்னோடு வந்திருந்தார். “கடந்த வாரமிங்கே ஒரு பெண் குழந்தை பெற்றார்” அங்கேயிருந்த ஒரு அட்டைகளால் உருவாக்கப்பட்ட தடுப்பை காண்பித்துஅவர் சொன்னார்.
சங்கடத்துக்குள்ளான நான், அந்த பெண்கள் சேகரித்த பொருட்கள் விற்பனைக்காக மட்டும் அல்ல, உடை இருப்பிடம் ஆகியவைகளுக்காகவும்தான் என்பதை உணர்ந்தேன்.

அப்படிப்பட்ட ஒரு நிர்வாணமான வறுமையை நான் சவுதி அரேபியாவில் எதிர்பார்க்கவே இல்லை.

அந்த நேரத்தில், நான் பிரிட்டனில் ஏராளமான கருப்பு ஆப்பிரிக்கர்கள் சோமாலியா சூடான் போன்ற நாடுகளிலிருந்து வந்து தங்கியிருப்பதை பார்க்கிறேன். ஒயிட் சேப்பல் என்னுமிடத்தில் கூட்டம் கூட்டமாக தங்கியிருக்கிறார்கள். இவர்களுக்கு அவர்கள் பிரர்த்தனை செய்ய மசூதிகள் இருக்கின்றன. அவர்கள் சுதந்திரமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசாங்கம் தங்க அபார்ட்மெண்டுகளை வழங்கியிருக்கிறது.

முஸ்லீம் சவுதி அரேபியாவில் வாழ்வதை விட முஸ்லீமல்லாத பிரிட்டனில் பல முஸ்லீம்கள் நல்ல வாழ்க்கைத்தரத்துடன் வாழ்கிறார்கள். அந்த நேரத்தில் நான் என் வீட்டுக்கு (பிரிட்டனுக்கு) திரும்பிப்போக ஆசைப்பட்டேன்.

உம்மா பற்றிய என்னுடைய பேச்சுக்கள் குழந்தைத்தனமானவையாக தோன்றின. பிரிட்டன் தரும் வசதியில் இஸ்லாமிஸ்டுகள் ஒரே அரசாங்கம், விரிந்துகொண்டே செல்லும் நாடு, ஒரே முஸ்லீம் தேசம் என்று கவைக்கொவ்வாத கோஷங்களை கொண்டுவரமுடியும். அரபு மனத்தின் இனவெறியின் உண்மை ஒருக்காலும் கருப்பு மக்களும் வெள்ளை மக்களும் சமமானவர்களாக ஒப்புக்கொள்ளவே ஒப்புக்கொள்ளாது.

அந்த நாளில் காராண்டினாவில் நின்றுகொண்டு, நான் எதனை தவறு என்று நினைத்துக்கொண்டிருந்தேனோ அதனை பற்றி யோசித்து ஆச்சரியப்பட்டேன். இனக்கலப்பு, மதக்கலப்பு திருமணங்கள்.அங்கே இருந்த மாணவர்களிடம் , பிரிட்டனில் பல கலாசாரத்து மக்கள் சுதந்திரமாக வாழ்வது பற்றிச் சொன்னேன். ஆனால் அவர்களால் சவூதி இனவாதம் இல்லாத ஒரு சுதந்திர நாட்டைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை..

இனவெறி என்பது சவுதி சமூகத்தின் பிரிக்கமுடியாத அங்கம். என்னுடைய மாணவர்கள் நிக்கர் என்ற வார்த்தையைக்கொண்டு கருப்பின மக்களை குறித்தார்கள். சற்றே கருப்பாக இருக்கும் அரபுகள் வெள்ளையாக இருக்கும் அரபுகளை விட தாழ்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள்.

நான் உலகத்தின் தீவிர முஸ்லீம் நாடாக தன்னை குறித்துக்கொள்ளும் நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இருந்தாலும் அது நான் நினைத்த முஸ்லீம் நாடாக இல்லை. பொதுவில் வகாபிஸம் திணிக்கப்படுவதை கண்டு அதிர்ந்தேன். இத்தனைக்கும், அதனைத்தான் ஒரு இஸ்லாமிஸ்டாக எதிர்பார்த்திருந்தேன்.

இந்த பிராந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதி, பெண்கள் வண்டி ஓட்டக்கூடாது என்றும், அது பெண்கள் காமத்துக்கு அலைவதை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டது. சவுதி ஆண்கள் ·பயியை கண்கொட்டாமல் உற்றுப்பார்த்ததும், சவுதி பெண்கள் என்னை உற்றுப்பார்த்ததும் என்னை அதிர்ச்சியுறச்செய்தது.

·பயி தனது உடையில் எந்தவிதமான குறையும் வைக்கவில்லை. பிராந்திய கலாச்சாரத்துக்கு பொருந்தும்படியே அவளும் நீளமான அபயாவையும் அவளது தலையை ஒரு கருப்பு துணியாலும் மறைத்திருந்தாள். என்னுடைய மனைவியை நான்பார்த்திருந்தபல வருடங்களில் அதனைப்போல மிகவும் டல்லாக அவளை எப்போதும் பார்த்ததில்லை.இருப்பினும் இரண்டுமுறை காரில் செல்லும் அரபு இளைஞர்கள் அவளை தடவினார்கள். இன்னும் ஒரு முறை ஒருவன் என் கார் பின்னால் காரை நிறுத்தி அவனது போன் நம்பரை என் மனைவியிடம் கொடுத்தான்.

சூப்பர் மார்க்கெட்டுகளில் நான் ·பயியை விட்டு சில நிமிஷங்களே நகர்ந்தால் போதும், சவுதி ஆண்கள் கெட்ட வார்த்தைகளை அவளுக்கு கேட்கும் வண்ணம் முனகிவிட்டு சென்றார்கள். பயி தனது அனுபவங்களை பிரிட்டிஷ் கவுன்சிலில் இருக்கும் ஒரு சவுதி பெண்ணிடம் பேசிய போது அவள்”சவுதி அரேபியாவுக்கு நல்வரவு” என்று சொன்னாள்.

ஜெட்டாவில் வசிக்க ஆரம்பித்து ஒருமாதத்தில் ஒரு ஆசிய டாக்ஸி டிரைவர் ஒரு பிலிப்பினோ உழைப்பாளி தன்னுடன் தன் புதிய மனைவியை அழைத்து வந்து ஜெட்டாவில் வசிக்க வந்ததை என்னிடம் சொன்னார். தம்பதியினர் பலாத் ஷாப்பிங் சென்றுவிட்டு வீட்டுக்குச் செல்ல ஒரு டாக்ஸியை பிடித்தார்கள். கொஞ்ச தூரம் சென்றதும், அந்த டாக்ஸியை ஓட்டிக்கொண்டு வந்த சவுதி டிரைவர் கார் ஏதோ பிரச்னை தருகிறது என்று சொல்லி கணவனை வண்டியை கொஞ்சம் தள்ளச்சொன்னார். பிரயாணி அதற்கு இணங்கி வண்டியை விட்டு இறங்கினார்.

வினாடிகளில் அந்த டாக்ஸி டிரைவர் அந்த நபரின் மனைவியுடன் காரை கிளப்பிக்கொண்டு விரைந்து சென்றுவிட்டார். மாதங்கள் ஆகியும் அந்த பெண் என்ன ஆனாள் எங்கிருக்கிறாள் என்ற விபரம் தெரியவில்லை.

பாலுறவு இன்றி பரிதவிக்கும் சவுதி இளைஞர்களால் டாக்ஸிகளில் பெண்கள் கடத்தப்படுவதை பற்றி நிறைய கதைகள் கேட்டோம். என் சவுதி நண்பரின் திருமணத்திற்காக ஜெட்டாவில் இருக்கும் ஒரு ஆடம்பரமான ஹோட்டலில், பெண்கள் தங்களது அறையை விட்டு வெளியே வராமல் இருந்தனர். அங்கே தங்கியிருந்த சவுதி இளவரசரின் காவலாட்கள் அந்த பெண்களை பாலுறவுக்காக கடத்திவிடுவார்கள் என்ற பயமே காரணம்.

ஏன் பர்தாவும், ஆண் பெண்கள் என்று பிரித்து வைப்பதும் இந்த மாதிரி நடவடிக்கைகளை தடுக்கவில்லை? நேர்மாறாக, என்னுடைய சவுதி நண்பர்கள், அதில் பெரும்பாலோனோர் சவுதி பல்கலைக்கழக மாணவர்கள், இப்படிப்பட்ட பர்தாவும், ஆண்கள் பெண்கள் என்று பிரித்து வைப்பதுமே சவுதி இளைஞர்களை இப்படிப்பட்ட பாலுறவு பைத்தியங்களாக ஆக்கியிருக்கிறது என்று கடுமையாக விவாதித்தனர்.

பிரிட்டிஷ் கவுன்ஸிலில் கல்விக்காக இலவச இணைய வசதியை உருவாக்கி கொடுத்திருந்தார்கள். சில நாட்களுக்குள், அங்கு வந்த மாணவர்கள் சவுதி அரேபியாவில் தடை செய்யப்பட்டிருக்கக்கூடிய, ஆனால், பிரிட்டிஷ் கவுன்ஸில் தொலைத்தொடர்பு இணைப்பு மூலம் கிடைக்கக்கூடிய மிகவும் மோசமான ஆபாசமான போர்னோகிராபியை தரவிறக்கினார்கள். ஆண்கள் பெண்கள் என்று பிரித்து வைப்பதும், பர்தா மூலம் அந்த பிரிவினையை மேலும் கடுமையாக ஆக்குவதும், அடக்கப்பட்ட பாலுறவு விரக்தியை உருவாக்கி அது சுகாதாரமற்ற வழிகளில் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.

(அடுத்த இதழில் முடியும்)

Extracted from “The Islamist”, நன்றி டைம்ஸ் ஆன் லைன்

Series Navigation

எட் உசேன்

எட் உசேன்