உள்அலைகளும் புனித குரானும்

This entry is part [part not set] of 32 in the series 20061116_Issue

பேராசிரியர். வில்லியம் ஹே


வில்லியம் ஹே நிலவியல் பேராசிரியர் மற்றும் கொலராடோ பல்கலைக்கழகத்தின் சமுத்திரவியல் கண்காட்சியக பொறுப்பிலும் இருப்பவர். இதோ இனி பேரா.வில்லியம் ஹே.

“… அது 1983 அல்லது 1984 என்று நினைக்கிறேன். இரண்டு சவூதிக்கள் அமெரிக்க நிலவியல் கழகத்தை அணுகினார்கள். குரானுடன் தொடர்புடைய நிலவியல் சம்பந்தமான சில விடயங்களைக் குறித்து பேசுவதற்காக என்று கூறினார்கள். அதாவது ஒரு காலத்தில் அராபியாவில் அறிவியல் செழித்தது போல மீண்டும் செழிக்க வைக்க தடையாக இருக்கும் மதவாதிகளை எதிர்கொள்வதற்காக இவ்வாறு அணுகுகிறார்கள் என்பது இது தொடர்பாக எங்கள் எண்ணமாக இருந்தது. சவூதி அரச குடும்பம் இதற்காக ஒரு “புனித மனிதர்” ஒருவரை அனுப்பியிருந்தது. ஷேக் ஸிந்தானி என்பது அவர் பெயர். இது தொடர்பாக நான் சவூதிக்கு அனுப்பப்பட்டேன். ஜெத்தாவில் இறங்கிய நான் ஒரு வாரத்தில் முக்கால்வாசி நேரம் ஷேக்குடனேயே கழிக்க வேண்டியிருந்தது.

எனக்கு அளிக்கப்பட்ட கேள்விகளில் ஒன்று குரானில் ஒரு பகுதி. அப்பகுதி அண்மையில்தான் கண்டுபிடிக்கப்பட்டதாக கருதப்படும் சமுத்திரத்தின் உள் அலைகள் குறித்து கூறுவது போன்றதாக இருந்தது.

நான் இந்த கேள்விக்கு முகமது ஒரு அறிவாளியான மனிதர் என்பதால் அவர் கூர்ந்து நோக்கும் பண்பு கொண்டவராக இருந்திருப்பார். எனவே ஒரு கடல் பயணத்தின் போது இந்த நிகழ்வினை அவர் கடல் பயணம் ஏதாவது மேற்கொண்டிருக்கும் போது அறிந்திருக்கலாம் என கூறினேன். உங்களுக்கு தெரிந்திருக்க கூடும். தூய இஸ்லாமியவாதிகள் முகமது படிப்பறிவும் எழுத்தறிவும் அற்றவர் என நம்புகின்றனர். அவரை மிகுந்த அறிவுடையவராக கூறுவது அங்கு மதக்குற்றமாகும். மேலும் அங்கு (என்னோடிருந்த ) ஷேக்கும் அவரது சகாக்களும் முகமது கடலையே கண்டதில்லை என சாதித்தனர் (இத்தனைக்கும் மெக்காவும் மதீனாவும் செங்கடலுக்கு ஏறக்குறைய பார்வைக்கெட்டிய தூரத்திலேயே உள்ளன. இந்த மறுப்புக்கு பிறகு நான் ஒருவேளை முகமதுவின் நண்பர்கள் எவரேனும் கூர்த்த பார்வை கொண்ட கடல் பயணிகளாக இருக்கலாம் என கூறினேன். இதுவும் மதக்குற்றமாகத்தான் கருதப்பட்டது. ஆக ஒரு நீளமான மதியத்தில் ஒரு படகில் கடும் சூரிய உஷ்ணம் தகிக்கையில் நான் அளித்த அனைத்து ஜாக்கிரதையான விளக்கங்களும் மறுக்கப்பட்ட நிலையில் இறை வெளிப்பாட்டு ஞானமாக விஷயம் விடிந்தது! ஆக எனது ஐயமான நிலைபாடு இந்த பதிவில் பிரதிபலிக்கவே இல்லை. அதே பயணத்தின் போது ஜெதா பல்கலைக்கழகத்தில் உரையாற்ற நான் அழைக்கப்பட்டேன். அங்குள்ள ஆசிரியர்களிடம் பேசிய போது எனக்கு அறிவியல் தேடலை மிகவும் பத்திரமாகக் கொண்டு செல்ல செய்யப்படும் முயற்சி என்பதாக எனக்கு தோன்றியது.

நான் அமெரிக்கா திரும்பியதும் இந்த உள் அலைகளை பற்றிய அறிவு எத்தனை பழமையானது என ஆராயலானேன். நிச்சயமாக பழைய வைகிங்களுக்கு இந்த உள்அலை நிகழ்வு விளைவுகள் குறித்து நல்ல அறிவிருந்தது. கிரேக்க ரோமன்களுக்கு இது குறித்து தெரிந்திருந்தால் நான் ஆச்சரியமடைய மாட்டேன். மிகச்சிறந்த கடல் பயணிகளான அராபியர்கள் நிச்சயமாக இந்த நிகழ்வினைக் குறித்து அனுபவமடைந்திருப்பார்கள். நடைமுறையில் படகு ஒரு கூர்மையான சந்திப்பை நீரின் மேல்பரப்பிற்கு அடியில் பெறுகின்றன. இந்த நீருடனான சந்திப்பே படகின் இயங்கியலை மேல் காணும் அலைகளுக்கும் நீர் சுழல்களுக்கும் அப்பால் நிர்ணயிக்கிறது.

சுமார் இரண்டு வருடங்களுக்கு பின்னர் இஸ்லாமாபாத்தில் ஷேக் சிந்தானி ஒரு மாநாட்டைக் கூட்டினார். அவர் ஏற்கனவே சந்தித்திருந்த இஸ்லாமியரல்லாத அறிவியலாளர்களைக் கொண்ட மாநாடு அறிவியலாளர்களான எங்களிடம் இந்த மாநாட்டில் வாசிக்க ஆய்வுத்தாள்கள் கேட்கப்பட்டன. எனது கட்டுரை சமுத்திரத்தின் உள் அலைகள் குறித்த பண்டைய அறிவு குறித்தது. அந்த கட்டுரை அம்மாநாட்டு கட்டுரை தொகுப்பு வெளியீட்டில் வரவில்லை என்பதனை நான் சொல்ல தேவையில்லை. இதற்கு பின்னர் இந்த உள்-அலை குறித்து இன்னமும் எளிய ஒரு விளக்கம் எனக்குள் எழுந்தது. நல்ல சூரிய வெளிச்சத்தில் எந்த நீர் நிலையை கூர்ந்து பார்த்தாலும் நீர் உட்செல்கையில் அதன் ஒளிச்சிதறலில் குறுகிய பிரகாசமான மற்றும் இருண்ட கோடுபோன்ற அமைப்பு இருக்கும். ஆனால் இவற்றினை உருவாக்கும் மேல்தள பரப்பின் அலைகளுக்கு தொடர்பற்று இருக்கும். இவையும் உள்-அலைகளாக இருக்கக்கூடும்.

எனக்கு அராபிக் தெரியாது. நான் வாசித்ததெல்லாம் ஷேக் சிந்தானி அளித்த மொழிபெயர்ப்பினைக் கொண்டுதான். இஸ்லாமிய மத அறிஞர்களின் மதநம்பிக்கை குரான் ஒரு வார்த்தை கூட மாற்றப்படாதது என்பதாகும் என நான் அறிவேன். ஆனால் வார்த்தைகளின் பொருள் கட்டாயமாக மாறி வருகிறது என்பதனை நான் அறிவேன். உதாரணமாக ஷேக்ஷ்பியரின் நாடகங்கள் பிபிசியில் காட்டப்படும் போது நவீன ஆங்கில பொருள் தலைப்புகள் (subtitle) போடுவது போல. சில சமயங்களில் இந்த பொருள் படு வித்தியாசமாகக் கூட இருக்கும். அராபிய மொழி பொருள் கொள்ளுதலுக்கும் கூட இதே கதிதான் ஏற்பட்டிருக்க வேண்டும் என கருதுகிறேன். எனில், குரானில் சில பகுதிகளுக்கு நவீன விளக்கம் அளிக்க முற்படும் இந்த முயற்சி வீணான ஒரு விஷயமே ஆகும். “

வில்லியம் ஹே.
-Nov 16, 2006 1:53 AM
(ஜாகீர் நாயக் என்பவர் ‘குரானும் நவீன அறிவியலும்’ என ஒரு நூல் எழுதியிருக்கிறார். அதில் அவர் வில்லியம் ஹே எனும் புகழ் பெற்ற கடலியளாளரை தமது சாட்சியாக (அதாவது குரானுக்கு சாட்சியாக) அழைத்துள்ளார். வில்லியம் ஹேயை தொடர்பு கொண்டால் அவர் தரும் விளக்கம் வெகு வித்தியாசமாக இருக்கிறது. மேலும் எப்படி அறிவியலாளர்களிடம் சவூதி அரசு ‘சாட்சியத்தை’ வாங்கி பிரச்சாரத்திற்கு பயன்படுத்தி வருகிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவும் அமைந்துள்ளது. பல அலுவல்களுக்கு நடுவே பொறுமையாகவும் விரிவாகவும் பதில் அளித்த பேரா. ஹேக்கு மனமார்ந்த நன்றி – அரவிந்தன் நீலகண்டன். )

பேரா.வில்லியம் ஹே தரும் விளக்கம்

Series Navigation

பேராசிரியர். வில்லியம் ஹே

பேராசிரியர். வில்லியம் ஹே