இஸ்லாம் – மார்க்ஸீயம் – பின்நவீனத்துவம்

This entry is part [part not set] of 41 in the series 20061109_Issue

ஹெச்.ஜி.ரசூல்


இஸ்லாத்திற்கும் மார்க்சீயத்திற்கும் இடையே உள்ள உறவு முறைப்பற்றியும். இரண்டும் வெவ்வேறு துருவங்கள் என்றும் கம்யூனிசம் அது தோற்றுவிக்கப்பட்ட நாட்டிலேயே தோற்றுவிட்டது என்றும் ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இதனை நாம் எல்லாவிதமான கொள்கைகளுக்கும் யாந்திரிகமாக பொருத்திப் பார்த்தால் நிலைமை மோசமாகி விடும். இஸ்லாத்தையோ மார்க்சீயத்தையோ இப்படி ஒற்றைப் பரிமாணப் பார்வையில் பார்த்தல் சரியல்ல என்றே தோன்றுகிறது. நாம் எல்லாவற்றையும் ஒற்றைமாதிரிகளாக பார்க்க முயன்றதன் விளைவே இது.
இஸ்லாமியமும், மார்க்சீயமும், கொள்கையளவில்தோன்றி நடைமுறைக்கு வரும்போது மக்கள் தாங்கள் ஏற்றுக் கொண்டிருந்த பழைய நம்பிக்கைகளை வீசி எறிந்தார்கள் புரட்சியும் மறுமலர்ச்சியும் ஏற்பட்டது. அரபு பழங்குடிகள் மத்தியில் உருவாகி மத்திய காலத்தில் நடைமுறைக் கோட்பாடாக உருவாக்கம் பெற்ற இஸ்லாமியமும், அறவொளிக்கால மரபை ஒட்டி முதலாளித்துவ விமர்சன கோட்பாடாக தன்னை அடையாளப்படுத்திய மார்க்சீயமும் சில ஒத்த பண்பாட்டியல் மதிப்பீடுகளை கொண்டுள்ளதை மறுக்க முடியாது. மனித விடுதலையையும் இவற்றின் அடிநாதமாகவே இருந்தன.
இங்கே சமுதாய மாற்றம் என்பது அரசியல், பொருளாதார, பண்பாட்டு பகுதிகளைக் கொண்டது. புரட்சியும், மறுமலர்ச்சியும் அதிக அளவில் குறிப்பிட்ட ஒரு குழுவின் வர்க்கத்தின் அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டல், பொருளாதார மேலாதிக்கத்தை உருவாக்குதல் கலாச்சார மேலாதிக்கத்தை நிறுவுதல் என்பதாகவே இருந்துள்ளது. இது வர்த்தகக்குழுவோ, விவசாயக் குழுவோ, தொழிலாளி வர்க்கமோ எதுவாகவும் இருக்கலாம்.
பண்பாட்டு மாற்றம் என்பதோ சமயம், மொழி, வழிபாடு, கல்வி, கலை, இலக்கியம், சாதி, குடும்பம், பழக்க வழக்கங்கள் சார்ந்தது குறிப்பாக பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்தல் என்பது நபிகள் நாயகத்தின் காலத்தில் பதூயீன் அரபு பழங்குடியினரிடத்தில் நடைபெற்ற சமூகக் கொடுமை. ஒரு குறிப்பிட்ட பிரிவினர், இன்னொரு பிரிவு மக்கள் மீது தீண்டாமையின் மூலமாக தொடுக்கும் வன்முறை என்பது மற்றொரு வகை. இது ஆண் x பெண், கறுப்பு x வெளுப்பு, பிராமணன் x பஞ்சமன் என பாலாதிக்கமும், நிறவாதமும், சாதீயமுமாக, வன்முறையின் கோரமுகங்களாய் செயல்படும் பெருங்கதையாடல்களை கட்டுடைத்தலாகும்.
கம்யூனிச (பொதுவுடமை) லட்சியம் என்பது மனிதனை மனிதனும், பெண்ணை ஆணும் அடிமைப்படுத்தாத எல்லோரையும் சமமாக மதிக்கிற, வாழ்கிற ஒரு கனவுலகு மொழியில் கருத்தில் படைக்கப்பட்ட இந்தகனவுலகை நடைமுறைப்படுத்த மார்க்ஸீய சிந்தனை வழிமுறைகளை முன்வைக்கிறது. மனிதகுல வரலாற்றியல் பல்வேறு கட்டங்களாக குழுக்களை, குடும்பத்தை, உறவுகளை, பகுத்தாய்வு செய்யும் வரலாற்றில் பார்வையும், இயற்கை பொருள்கள், உலகம் பற்றிய இயக்கவியல் கோட்பாடு குறித்த தத்துவப்பா¡வையும் உழைப்பு, உற்பத்தி, தனிச்சொத்து உருவாக்கம் மற்றும் உபரி மதிப்பு கொள்கை (Surplus theory of value) பற்றியும் பேசுகிறது. 16-18ம் நூற்றாண்டின் காலகட்டத்தில் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் மீதான விமர்சனமும் சோசலிச பொருளாதார கட்டும’னத்தை முன்வைத்தும் இக்கொள்கை பேசப்படுகிறது. இதனை நாம் பொருளாதாரத்தில் சோஷலிசம், (சமத்துவம்) அரசியலில் ஜனநாயகம், பண்பாட்டில் மனிதநேயம் என்கிற அர்த்தப் பரிமாணங்களில் புரிந்து கொள்ள முடியும்.
மார்க்ஸீய கோட்பாட்டை வடிவமைத்தும், செயல்திட்டமாக்கவும் 1847- முதல் உழைத்த மூலவர்கள் கார்ல் மார்க்ஸ, பிரடிரிக் ஏங்கெல்ஸ், சோவியத் யூனியன் நடைமுறைப்படுத்துவதில் முதன்மைப் பங்காற்றிய லெனின், ஆசிய நாடுகளில் சீன மண்ணுக்கேற்றவாறு விவசாயத்தன்மைசார்ந்து மார்க்ஸீயத்தை அர்த்தப்படுத்திய மாவோ பல்கேரியாவின் ஜார்ஜ் டிமிட்ரேவ் கியூபாவில் சேகுவரோ பெடரல்காஸ்ட்ரோ, இந்திய உட்பட பிற ஆசிய ஆப்பிரிக்க நாடுகள் என மார்க்ஸீயம் உலக நாடுகளெங்கும் பிரத்தியேக தன்மைகளை உள்வாங்கிக் கொண்டு சமூக மாற்றத்திற்காகவும், சிந்தனை மாற்றத்திற்காகவும் விஞ்ஞானப்பூர்வமாக ஆற்றிய பங்களிப்பை நிதானமாக பரிசீலிக்க வேண்டியுள்ளது. இதனை நாம் மார்க்ஸீயம், லெனினிசம் ப்ராங்பர்ட் மார்க்ஸீயம், பின்னை மார்க்ஸீயம் என்பதான பன்மை அடையாளங்களாக உற்று நோக்கலாம்.
புதிய சிந்தனைகளை தோற்றுவித்ததில் ஜெர்மனியின் ரோசாலுக்ஸம்பர்க், (1918) இத்தாலியின் அந்தோனியா கிராம்சி (1937) அல்துஸர், மிஷேல் பூகோ (1926-1984) சமகாலத்தில் டெர்ரிஈகில்டன், நோம்சாம்ஸ்கி, எட்வர்சையத் உள்ளிட்ட நவமார்க்ஸீய பின் நவீனத்துவ சிந்தனையாளர்கள் என இதன் தொடர்ச்சி நீளுகிறது. அரசு எந்திர ஒடுக்குமுறை (போலீஸ் ராணுவம்) பற்றி பேசியிருப்பினும் பின்னை மார்க்ஸீயர்கள் கருத்துருவ ஒடுக்குமுறை, ஆதிக்க பண்பாட்டின் கூறுகள் சமூக உளவிலாக மாற்றப்பட்டிருத்தல், நுண் அரசியல், அதிகாரம் பற்றியும் அதிக கவனம் செலுத்தியிருப்பதையும் முக்கியமாய் குறிப்பிட வேண்டியிருக்கிறது.
மேற்கில் அமெரிக்கா செவ்விந்தியர்களின் 800 புராணக்கதைகளை ஆராய்ந்து அமைப்பியல் விமர்சன முறையை உருவாக்கிய லெவிஸ்ட்ராஸில் துவங்கி, சசூல், ழாக்லகான், ரோலான்பர்த் என வளர்ந்து பிரதிகளில் கட்டுடைப்பு விமர்சனத்தை பின்பற்றிய ழாக்தெரிதா எனத்தொடரும் திறனாய்வாளர்கள், தற்போது இனவரைவியல் அடையாளம் சார்ந்து நுண்கதையாடல்கள், (Micro Narrctives) நுண் அரசியல் (Micro politicis) களங்கிலும் இயங்குவதை பரிசீலிக்க வேண்டும்.
அடித்தள இஸ்லாமிய மக்கள் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தும் விடுகதைகள், பழமொழிகள், தாலாட்டு, கும்மி உள்ளிட்ட நாட்டார் பாடல்கள், கதை சொல்லல்கள், புராணீகங்கள், புனைவுகள், பிறப்பு முதல் இறப்பு வரை செய்யும் சடங்குகள் என நுண்கதையாடல்கள் பலவுண்டு. இவற்றின் உள்ளே பொதிந்திருக்கும் வாழ்வுகுறித்த கண்ணோட்டம், உறவுகள் குறித்த மதிப்பீடு, நுண் அரசியல், என பலவற்றை அடித்தளமக்கள் ஆய்வின் மூலம் கண்டறிய முடியும். இந்த வாய்மொழி மரபுக் கதைகளை வரிக்குவரி, வார்த்தைக்கு வார்த்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றோ, ஆன்மீகத்தள நோக்கில் இறைத்தன்மையை நிறுவ வேண்டும் என்றோ அவசியம் இல்லை. அதே சமயம் நவீனத்துவத்தின் கூறான பகுத்தறிவின் வன்முறையால், போலி அறிவு வாதத்தால் வாய்மொழி வரலாற்று மரபுகளை, அடித்தள இஸ்லாமிய மக்கள்சார் சடங்குகளை நிர’கரிப்பது என்பதும் அரஜாகமானது. எனவேதான் இவற்றின் வரலாறு சார்ந்த சாரமும், சமூகத்தன்மையும், உளவியல் விஞ்ஞான அம்சங்களும் முக்கியமானதாக மாறுகிறது.
இஸ்லாம் அறிவுப்புரட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மார்க்கம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. திருக்குர்ஆன் விளக்கவுரையாளர்களெல்லாம், காலந்தோறும் வளர்ந்து வரும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டு திருக்குர்ஆன் வசனங்களுக்கு விஞ்ஞான சொல்லாடல்களை பயன்படுத்துவரை காணலாம். எனினும் இங்கே அறிவு என்பது தொடர்பு நிலையும் (Relative) சார்புத்தன்மையும் (Partisanship) கொண்ட ஒரு சொல்லாடலாகும். அறிவு என்பதற்கு தனித்த ஒரு அர்த்தமும் கிடையாது. காலம், வெளி, சூழல் மக்கள் பிரிவு சார்ந்து இதற்கென புதிய அர்த்தம் உருவாகிறது. வஹாபிகளுக்கு தர்கா மரபுகள் மூடநம்பிக்கை. அஹ்லெகுர்ஆனிகளுக்கு வகாபிகளின் ஹதீஸ் பற்றிய பார்வை மூடநம்பிக்கை. சுன்னிகளுக்கு ஷியாக்களின் கலாச்சார நிகழ்வுகள் மூடநம்பிக்கை. இவர்கள் எல்லோருக்குமே காதியானிகளின் கொள்கை மூடநம்பிக்கை. அறிவின் அணுகுமுறை இவ்வாறெல்லாம் வித்தியாசப்படுகிறது. இந்நிலையில் இந்த எல்லாவித கூற்றுகளையும் மறுவரையறை செய்யவேண்டிய அணுகுமுறையே இன்றைய தேவை.
வெறும் அறிவு அளவுகோல் நாம் அல்லாஹ்வை, வஹியை மலக்குகளை, ஹ¤ருல்ஈன்களை, ஜின்களை, சொர்க்கம், நகரத்தை, மன்னுஸல்வாவை, லெளஹில் மஹ்பூழை, மூஸாநபி, யூனுஸ்நபி, இபுராகீம்நபி, அண்ணல் நபி வாழ்வின் விசித்திர சம்பவங்களை அணுகமுடியுமா? நபிமார்களின் முல்ஜிசாத்துகளை வலிமார்களின் கராமத்துக்களை புரிந்து கொள்ளுதலை .
மேலும் திருமறையின் ஒரு வசனம், சூனியத்தால் துன்பம் நிகழ்கிறது என்பதை ஏற்றுக் கொண்டு, அதிலிருந்து மீட்சி பெற இறையிடம் பாதுகாவல் தேடச் சொல்கிறது. இங்கே பெண் சூது செய்பவளாக காட்டப்பட்டு கண்டிக்கப்பட்டாலும், நபிகள் நாயகத்திற்கு சூனியம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டநிகழ்வு வரலாற்றில் பதிந்துள்ளது.
இறைவனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன். முடிச்சுப்போட்டு ஊதும் (சூதுகாரப்) பெண்களின் தீங்கைவிட்டும் (113:1-5)
இதுபோன்ற மந்திரவாதிகளின் சூனிய வித்தைகளை எதிர்கொள்ளவே மூஸாநபியின் அஸாவிற்கு ஆற்றல் கிடைக்கிறது.
இஸ்லாம் வாய்மொழி மரபுக்கு (Oral Tradition) முக்கியத்துவம் கொடுக்கிறது. மாற்றுமத நம்பிக்கையாளன் ‘கலிமா’ சொன்னதும் முஸ்லிமாகிறான். ‘நிக்காஹ்’ ஓதியதும் திருமண ஒப்பந்தம் நிகழ்கிறது. ‘தலாக்’ சொன்னதும் மணமுறிவு ஏற்படுகிறது. இப்படியாக வாழ்வியல் சார்ந்த நிகழ்வுகள் அனைத்தும் வாய்மொழி மரபுக்கூறுகளை உள்ளடக்கியே இயங்குகிறது.
நபிகள் நாயகத்திற்கு வஹிமூலமாக வேதவசனங்கள் இறங்கியது. நபித்தோழளாகளான ‘காரீ’க்களின் மனனம் வாய்மொழி உரையாடல் முறையிலும் ஒட்டகம், மாடு பிராணிகளின் எலும்பு, தோல், பேரிச்சமரப்பட்டை போன்றவற்றில் எழுதிய முறையிலும் வேத வசனங்கள் பாதுகாக்கப்பட்டன. நபிகள் நாயகம் சொல்லாலோ, செயலாலோ செய்யாத ஒன்றை சமூக வளர்ச்சியின் அடிப்படையில் தேவைகருதி, ஹலரத் உதுமான் காலத்திலேயே திருக்குர்ஆனாக தொகுக்கப்பட்டு இன்றைய வடிவத்தில் கிடைத்தது.
நபிகள் நாயகத்திற்கு பிறகான அரசாட்சிக்கு யார் வரவேண்டும் என்பதில் துவங்கிய கருத்து வேறுபாடு, அண்ணல் நபிகளாரின் மனைவி ஆயிஷாவுக்கும், மருமகனார் ஹலரத் அலிக்கும் நடந்த ஒட்டகப்போர், பனுஹாசிம்கள், குறைஷிகள், அன்ஸாரிகள், பதூயீன்கள் இடையேயான முரண்பாடுகள், காரிஜைட்டுகள் உட்பட்ட பல்வேறு குழுக்களின் கிளர்ச்சிகள் நடந்தன. அபாசித்துகள் உமய்யாக்களின் ஆட்சி அதிகாரப்போட்டி, போர்கள் கொலைகளுக்கிடையே அறிஞர் பெருமக்களால் ஆய்வு செய்யப்பட்டு தொகுக்கப்பட்ட நபிகள் நாயகத்தின் மறைவுக்கு பிறகு நானூறு ஆண்டுகள் கழித்து தொகுக்கப்பட்ட ஹதீஸ்களில் விலக்கப்பட்டவை x ஏற்றுக்கொள்ளப்பட்டவை என்பவற்றில் சார்பு நிலைக்கான சாத்தியப்பாடுகள் தென்படக்கூடும். இன்றும் சிலர் சில ஹதீஸ்களை பலமானது x பலவீனமானது என முத்திரை குத்தி பயன்படுத்துவதும், விலக்குவதும் சார்பு நிலை கொண்ட ஒருவித அணுகுமுறையாகவே உள்ளது. இவற்றை இன்னும் உற்று நோக்கவேண்டியுள்ளது.
தமிழகத்தில் சைவ ஆதிக்கத்தால் சமணர்கள் கழுவிலேற்றப்பட்டதும் சமண ஏடுகள், மருத்துவக்குறிப்புகள், சுவடிகள், இலக்கியங்கள் அழித்தொழிக்கப்பட்டதும் ஒரு வித ஆட்சியதிகார செயல்பாட்டின் உச்சநிலையில்தானே. இஸ்லாமிய ஆட்சியாளர்கள் சூபி மன்சூர்ஹல்லாஜை கொன்றதும், பல சூபிகளை நாடு விட்டு துரத்தியதும் இன்னொரு வகையான அதிகார அரசியல் செயல்பாடுதானே. ஏகத்துவத்தின் பெயர் சொல்லி முகம்மதுபின் அப்துல் வஹாபின் கொள்கை வழிநின்று ஆட்சியாளர் அமீர் சவூதுபின் அப்துல் அஸீஸ் பிரிட்டிஸ் படை உதவியுடன் நபிகள் நாயகத்தின் சமாதியின் மீது எழுப்பப்பட்டிருந்த அடையாளங்களையும், இராக்கின் மீது போர்தொடுத்து கர்பலா களம்கண்ட இமாம் ஹ¤சைனின் சமாதியை தரைமட்டமாக்கி போர் தொடுத்ததும் ஒருவித அரசு பயங்கரவாதம் தானே. மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் அரசியலை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியம் இன்றும் இராக்கை ஆக்ரமித்துள்ளது. எனவேதான் ஒடுக்கப்பட்டவை, விலக்கப்பட்டவை, அழித்தொழிக்கப்பட்டவைகளிலிருந்து ஒரு மாற்று அரசியலை நாம் உருவாக்க வேண்டியுள்ளது.


Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்