மனித வேதனையின் மீதொரு மனசாட்சியற்ற சுரண்டல்

This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue

சின்னக்கருப்பன்


சமீபத்தில் படிக்க நேர்ந்த செய்திகளிலேயே மிகவும் நகைச்சுவையானது பாகிஸ்தான் ராணுவ சர்வாதிகாரி எழுதி வெளிவந்திருக்கும் புத்தகம் பற்றிய செய்தி.. கார்கிலில் பாகிஸ்தான் வென்றது, நவாஸ் ஷெரீ·புக்குத் தெரிந்து தான் கார்கில் படையெடுப்பு நிகழ்ந்தது, கார்கில் திட்டமிடல் பாகிஸ்தான் ராணுவத்தின் தலையில் மகுடம், ஆக்ரா பேச்சு வார்த்தை தோல்விக்குக் காரணம் இந்தியா-பாகிஸ்தான் அல்லாத வேற்று நாட்டின் மிரட்டல் என்றெல்லாம் பல நகைச்சுவைகள் இருந்தாலும் மிக முக்கியமான, ஆனால் சோகமான நகைச்சுவை இது தான்.

பல பத்திரிக்கைகளில் இந்த செய்தி வந்திருந்தாலும் ப்ராவதா பத்திரிக்கை செய்தியை மேற்கோள்காட்டுகிறேன்.

http://english.pravda.ru/news/world/26-09-2006/84674-Musharraf-0

இதில் முக்கியமான பகுதி இது

“We have captured 689 and handed over 369 to the United States. We have earned bounties totaling millions of dollars,” he says without saying how much was provided.

இதனைப்படித்ததும் ஒரு தில்பர்ட் கார்ட்டூன் ஞாபகத்துக்கு வந்தது.

அந்த தில்பர்ட் கார்ட்டூனும் உண்மையில் ஒரு மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியை அடிப்படையாகக்கொண்டே எழுதப்பட்டது.

குவாலிட்டி கண்ட்ரோல் என்னும் பிரிவின் தலைவர் ஒருநாள் அறிவிக்கிறார். மென்பொருளில் இருக்கும் தவறுகளை (bugs) கண்டுபிடிப்பவர்களுக்கு ஒவ்வொரு தவறுக்கும் 20 டாலர் வீதம் போனஸ் வழங்கப்படும். உடனே மென்பொருள் எழுதும் குழுவுக்கும் மென்பொருளில் தவறு கண்டுபிடிக்கும் குழுவுக்கும் இடையே ஒரு கள்ள சந்தை உருவாகிவிட்டது. மென்பொருள் எழுதுபவர்கள் தவறுகளை வைத்து மென்பொருள் எழுதுவார்கள். எங்கே என்ன தவறு இருக்கிறது என்பதை தவறுகளை கண்டுபிடிக்கும் குழுவில் உள்ளவர்களுக்கு தெரிவிப்பார்கள். அவர்களுக்கு கிடைக்கும் 20 டாலர் ஆளுக்கு பாதி பாதி!

வெகுவிரைவிலேயே அந்த திட்டம் அந்த நிறுவனத்தால் கைவிடப்பட்டது!

அது ஒரு தனியார் நிறுவனம். ஆகவே, எங்கே முட்டாள்த்தனம் என்பது உடனே தெரிந்து உடனே நிவர்த்தி பண்ணப்பட்டுவிடுகிறது.

அரசாங்கங்கள் அது போல புத்திசாலிகள் அல்ல. தங்கள் முட்டாள்த்தனங்களை ஒப்புக்கொள்ளவும் ஒரு புத்திசாலித்தனம் வேண்டுமே!

பாகிஸ்தான் அல்குவேதா ஆட்கள் என்று அமெரிக்காவுக்கு ஆட்களை சப்ளை செய்யுமாம். ஒவ்வொரு ஆளுக்கும் இவ்வளவு பணம் என்று அமெரிக்கா கொடுக்குமாம். ஆஹா என்ன பொன் முட்டையிடும் வாத்து என்று பாகிஸ்தான் என்ன செய்யும் என்பதை புரிந்துகொள்ள பிஹெச்டி படித்திருக்க வேண்டாம்.

இதோ தீவிரவாத மதரஸாக்களை மூடுகிறேன், இதோ தீவிரவாதக்குழுக்களை ஒடுக்குகிறேன் என்று அறிக்கை விட்டுக்கொண்டே, பண்ணுங்க சாமி என்று அவர்களை வளர்த்துவிட வேண்டியது. அவர்களில் இளிச்சவாய் கடைநிலை ஊழியர்களை பிடித்து இதோ அல்குவேதா ஆள் என்று அமெரிக்காவுக்கு விற்று டாலர் டாலராக (முஷார·ப் எழுத்தில் மில்லியன் கணக்கில்) பணம் பண்ண வேண்டியது. என்ன ஒரு அருமையான கள்ள சந்தை.

இதில் வெட்கக்கேடு, இதில் கடைநிலை ஊழியராக இருக்கும் பெரும்பாலான மக்கள் விளிம்புநிலை மனிதர்கள். எந்த வேலையுமில்லாது, இஸ்லாம் பற்றி முல்லாக்கள் உதார் விடும் வான வேடிக்கையில் மூளை சலவை செய்யப்பட்டு ஜிஹாத் கனவிலும், வானத்தில் கன்னியர் கனவிலும் ஏகே47 பயிற்சி மேற்கொண்டு ஏதோ செய்யபோய், தனது நாட்டு அரசாலேயே கைது செய்யப்பட்டு அமெரிக்க விஜயம் மேற்கொண்டு குவாண்டனமோ சிறையில் கடுமையாக விசாரிக்கப்படும் நிலை மிகவும் அவலமானது. இதற்கிடையில் இவரை விற்று பாகிஸ்தான் ராணுவ சர்வாதிகாரிகள் மில்லியன் கணக்கில் டாலரை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். என்ன கருமம்டா சாமி!

பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற பாகிஸ்தான் வேடத்தை புரிந்துகொள்ளாமல் அல்லது புரியாதமாதிரி நடித்துக்கொண்டு அமெரிக்கா இருப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அது புஷ் பேசும்போது இத்தனை அல்குவேதா ஆட்களை(!) பாகிஸ்தானிலிருந்து பிடித்து விசாரிக்கிறோம் என்று அமெரிக்காவின் குடியரசுக்கட்சி தொண்டர்களிடம் உதார் விட உதவும்.

எமர்ஜன்ஸி காலத்தில் தமிழ்நாட்டில் குடும்பக்கட்டுப்பாடு அறுவைசிகிச்சைக்கு ஆள் பிடித்த ஆட்களுக்கும் பாகிஸ்தான் சர்வாதிகாரிக்கும் வித்தியாசம் இல்லை. காசுக்காக ஆளைப் பிடிக்க ஆரம்பித்து விட்டால், யாராவது ஒருவரைக் காட்டிவிட்டு இவர்தாம் அல் கெய்தா என்றும் சொல்லிவிடலாம். ஏனென்றால் சி ஐ ஏ விடம் இருக்கிற பட்டியலே பாகிஸ்தான் அளித்ததாய் இருக்க வாய்ப்புண்டு.

**
இந்த சூழ்நிலையில் என்னதான் இந்தியா செய்ய முடியும்?

இந்த அநாகரிக, மனித பண்பாடற்ற விளையாட்டை இந்தியா வெறுமே வாயை மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது.

இதற்கு முன்னால் ஆட்சியிலிருந்த பாரதிய ஜனதா கட்சி அரசுக்கு ஒரு கனவு இருந்தது. அது பாகிஸ்தானுடன் வியாபார உறவுகளை மேம்படுத்தி, அங்கிருக்கும் பணக்காரர்களுக்கு இந்திய பங்குச் சந்தையில் இடம் கொடுத்து அந்த ஆளும் வர்க்கத்துக்கு இந்தியாவில் பயங்கரவாதம் செய்வது அவர்களது முதலீட்டுக்கு ஆபத்து என்ற சுயநலத்தை உருவாக்கி கொடுக்கும் எண்ணம் இருந்தது. இதன் காரணமாகவே நவாஸ் ஷெரீப்புக்கும் பெனசிருக்கும் இங்கு வியாபார உறவுகள் ஏற்படுத்தி தரப்பட்டன. இங்கிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு இடைத்தரகர் போல அரசியல்வாதிகள் பயன்படுத்தப்பட்டனர்.

ஆனால், அங்கிருக்கும் ராணுவத்துக்கு அது ஆபத்தானதாக இருந்தது. பாகிஸ்தானில் ராணுவமும் ராணுவத்தலைவர்களும் வெறும் போர்வீரர்கள் மட்டுமல்லர். ராணுவத்துக்குச் சொந்தமாக சிமிண்ட் ஆலைகளும், உருக்கு ஆலைகளும், பொதுமக்கள் பயன்படுத்தும் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும் இருக்கின்றன. முன்னாள் இந்நாள் ராணுவத்தலைவர்கள் பெரும் தொழிலதிபர்கள். ராணுவம் கைவைத்திருக்கும் தொழில் பிரிவுகளில் அதுதான் மோனோபோலி. ராணுவத்துக்கு எதிராக போட்டி போட்டு எந்த தொழிலதிபரால் தொழிற்சாலை நடத்த முடியும்? இந்த மோனோபோலி காபிடலிஸத்தை தக்க வைத்துக்கொள்ளும் ஆவலே, பாகிஸ்தானில் இருந்த அரைகுறை ஜனநாயகமும் ராணுவத்தால் அழிக்கப்பட காரணமாக இருந்தது.

பாரதிய ஜனதா அரசு கொண்டுவந்த சா·ப்டா என்ற தெற்காசிய பொருளாதார கூட்டமைப்பு இப்படிப்பட்ட ஒரு பொருளாதார உறவுகளை விரிவு படுத்துவதன் மூலம் போராபத்துகளை குறைக்கலாம் என்ற கருத்துத்தான். இதற்கு தெற்காசியாவில் தடங்கல்போடும் ஒரே நாடு பாகிஸ்தான் தான். ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டுக்கு “most favored nation” அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்ற அடிப்படை இருந்தாலும், பாகிஸ்தான் இந்தியாவுக்கு அப்படிப்பட்ட அந்தஸ்தை கொடுக்க மறுத்தே வந்திருக்கிறது. பாகிஸ்தானின் உள்நாட்டு தொழில்கள் இந்தியாவின் மேன்மையான உற்பத்திப்பொருட்களால் அழிந்துவிடும் என்ற பயம் வெளிப்படையாக கூறப்பட்டாலும், உள்ளே இருப்பது ராணுவ மோனோபோலி கேபிடலிஸம் தனது மோனோபோலியை தக்கவைத்துக்கொள்ளும் ஆர்வமே என்பதை உணரலாம்.

பாகிஸ்தானின் உண்மையான அரசு அதிகாரம் ராணுவத்தின் கையில்தான் இதுவரை இருந்தது, இனிமேலும் இருக்கும் என்ற நோக்கிலேயே இந்தியாவின் ஒவ்வொரு அணுகுமுறையும் இருக்க வேண்டும்.
அந்த நோக்கில் பார்க்கும்போது, முஷார·ப் ஒரு முகமே தவிர அவர் பின்னால் அவருக்கு வலு கொடுக்கும் ராணுவத்தலைவர்களின் கூட்டு கருத்தே எல்லா நிகழ்வுகளையும் நிர்ணயிக்கிறது என்பதும் இந்தியாவுக்கு புரிய வேண்டும்.

அவர்களின் ஒவ்வொரு செயல்பாடும், ஒவ்வொரு ஒப்பந்தமும், அவர்களது சுயநலத்தையும், ராணுவத்தின் தொடர்ந்த அரசு அதிகார தக்கவைப்பையுமே குறியாக செயல்படும் என்பதையும் இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த நோக்கில் பார்க்கும்போது, என்னதான் பயங்கரவாதத்துக்கு எதிராக கூட்டு நடவடிக்கை என்று பேசுவதும் வெறும் வேடமே என்பதும், பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் வேலையை இந்தியாவிலும் பாகிஸ்தான் செய்ய தயாராகிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

எந்த காலத்திலும் இந்தியாவுக்குள் நடக்கும் பயங்கரவாதச் செயல்களை பாகிஸ்தானின் செல்ல அமைப்புகள் நிறுத்தாது. அவ்வாறு நிறுத்துவது, பாகிஸ்தானின் ராணுவத்தின் இருப்பை கேள்விக்குள்ளாக்கிவிடும். பயங்கரவாதச் செயல்களே நடைபெறவில்லை என்றால், எந்த காரணத்துக்காக இந்தியா பாகிஸ்தானை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்? பாகிஸ்தானுடன் இந்தியா பேசி ஆக வேண்டும் என்பதன் அடிப்படை காரணமே பாகிஸ்தான் நடத்தும் பயங்கரவாதம் தானே?

நீண்டகால திட்டமாக, பாகிஸ்தான் என்ற கருத்துருவத்தை அழித்து பாகிஸ்தானிய மாநிலங்களை இந்தியாவுடன் சேர்ப்பதுதான் இந்திய மக்களுக்கும் நல்லது இன்று பாகிஸ்தானிய ராணுவத்தின் கீழ் மாட்டிக்கொண்டிருக்கும் மக்களுக்கும் நல்லது.

இந்த குறிக்கோளுடனேயே இந்தியா பாகிஸ்தானை அணுக வேண்டும். ஆனால், இது இன்றைய தேதிக்கு அபத்தமான ஒரு குறிக்கோள் என்பது உண்மை. நடக்க முடியாத நிலையில்தான் இந்த குறிக்கோள் இருந்தாலும், அது குறைந்த பட்சம், மாயமான்களை துரத்திச் செல்வதிலிருந்து இந்தியாவை காப்பாற்றும்.

**
karuppanchinna@yahoo.com

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்