எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது..- கமலா சுரையா

This entry is part [part not set] of 29 in the series 20060915_Issue

இப்னு பஷீர்


கமலா சுரையா சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் அஞ்சாத துணிச்சலான பெண்மணி. அவர் மாதவிக்குட்டியாக இருந்தபோதிலிருந்தே, அவரது எழுத்து, செயல் அனைத்தும் கடுமையாக விமர்சிக்கப் பட்டிருக்கிறது. போதாக்குறைக்கு அவர் இஸ்லாமை வேறு தழுவி, இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் மற்றும் இந்துத்துவ சக்திகளின் அக்னிப் பார்வைக்கும் இலக்காகியிருக்கிறார்.

தஸ்லிமா நஸ்ரினை ஆதாரமாக காட்டி, கமலா சுரையா ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தினால் இன்னும் இஸ்லாமில் ‘மாட்டிக் கொண்டிருப்பது’ போல நேசக்குமார் என்பவர் எழுதியிருந்தார். ‘அப்படி எந்த நிர்ப்பந்தமோ கட்டாயமோ இல்லை’ என்பதையும் பத்திரிக்கைக்காரர்களின் திரிபுவாதம்தான் அது என்பதை சுரையாவே நேரடியாக விளக்கியதை தேஜஸ் இதழ் வெளியிட்டிருக்கிறது. (இக்கட்டுரை அபூசுமையாவின் தமிழாக்கத்தில் திண்ணையில் இந்த வாரம் வந்திருக்கிறது)

இது தவிர, ஆனந்த விகடன் 02-07-06 தேதியிட்ட இதழில் கமலா சுரையாவின் நேரடியான பேட்டி வெளியாகி இருக்கிறது.

அதில் “எனக்கு இஸ்லாம் பிடித்திருக்கிறது. அது சொல்கிற வாழ்க்கை எனக்குத் திருப்தியாக இருக்கிறது. அதே நேரம், இஸ்லாம் சமுதாயத்தில் உள்ள குறைகளையும் தொடர்ந்து சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன்”. என்கிறார் சுரையா.

‘இஸ்லாம் மதம் மடுத்து’ என்பதுதான் அவரது உண்மை நிலைப்பாடாக இருந்தால் இந்துத்துவ சக்திகள் அவரைக் கொல்ல ஏன் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்? மாறாக அவருக்கு போதிய பாதுகாப்பளித்து அவரை இஸ்லாமை விட்டு வெளியேறச் செய்திருக்கலாமே?

இனி அவரது ஆனந்த விகடன் பேட்டியிலிருந்து…

வாசலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ். கடுமையான பாதுகாப்பு. தொலைபேசி அழைப்புகள்கூட சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன. உள்ளே… ஏராளமான புத்தகங்களுக்கு நடுவில், மும்முரமாக எழுதிக்-கொண்டு இருக்கிறார் கமலாதாஸ்.

‘என் கதை’ என்கிற சுயசரிதையின் மூலம் உலகைத் திரும்பிப் பார்க்கவைத்த இந்த மலையாளப் பெண் எழுத்தாளருக்கு கொலை மிரட்டல்கள் இருப்பதால், நீதிமன்றம் இவருக்குப் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருக்கிறது. மாதவிக்குட்டி என்கிற பெயரில் இருந்து கமலாதாஸாக மாறியவர், பின்னர் இஸ்லாம் மதத்துக்கு மாறி, இப்போது கமலா சுரையா!

”நான் பரபரப்புக்காக எழுதுவதில்லை. என் எழுத்தும் பேச்சும் பரபரப்பாக்கப் படுகிறது. நான் மதத்தை நம்புவதில்லை. ஆனால், கடவுளை நம்புகிறேன். இந்த உண்மையைச் சொன்னால், இரண்டு பக்கமிருந்தும் எதிர்ப்பு வருகிறது.எல்லோரும் உண்மை தங்கள் பக்கம் தான் இருப்பதாகச் சொல்கிறார்களே தவிர, உண்மையின் பக்கம் தாங்கள் இருக்க வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை. அதனால்தான் என் பேனாவின் தாக்குதலை ஆயுதங் களால் எதிர்கொள்கிறார்கள்.

வீட்டுக்குள் பாதுகாப்புக் கெடுபிடிகள் இருந்தாலும், என் எண்ணங்களும், எழுத்துக்களும் ஒரு நதியைப் போலப் பாய்ந்துகொண்டே இருக்கின்றன. மூத்த தலைமுறையைச் சேர்ந்த ஒரு படைப்பாளியாக என்னை இந்தத் தலைமுறை மதிக்கிறது. இருபது வயதாகும் ஓர் இளம் பெண் எழுத் தாளர், என் கைரேகையைப் பதித்து, அதையே என் அணிந்துரையாக நினைத்துச் சந்தோஷப்படுகிறாள்.

நான் முஸ்லிமாக வாழ்கிறேன். என் மூத்த மகன் புத்த மதத்தைத் தழுவியிருக்கிறான். என் இளைய மகன், ‘நீதான் எனக்கு மதம், கடவுள் எல்லாமே!’ என்று தாய்மையைக் கொண்டாடுகிறான். எல்லோரும் ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் யாரும் யாரையும் தொந்தரவு செய்வதில்லை. யாரும் யாரையும் தாழ்வாகக் கருதுவதில்லை. என் வீட்டுக்குள் சாத்திய மான இந்த நிலை, என் நாட்டுக்குள்ளும் இருந்தால், இந்த கமலாதாஸ் வேறு ஏதாவது எழுதிக்கொண்டு இருக்கலாம்.”

”உங்கள் எழுத்துக்களால் நிறைய பேர் காயமடைகிறார்களே?”
”யார் காயப்படுகிறார்கள்? பலவீனமானவர்கள் காயப்படுகிறார்கள். பிறரைக் காயப்படுத்த வேண்டும் என்கிற நோக்கம் உடையவர்கள் காயப்படுகிறார்கள். அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. வேண்டுமானால் அவர்கள் திருந்தட்டும். அதுதான் அவர்களுக்கும், இந்தச் சமூகத்துக்கும் நல்லது.”

”இஸ்லாம் மதத்துக்கு நீங்கள் மாறிய பிறகு, நிறைய எதிர்ப்புகளைச் சந்தித்துக் கொண்டு இருக்கிறீர்களே?”
”நான் என் வாழ்நாள் முழுவதுமே எதிர்ப்புகளை எதிர்கொண்டுதான் வருகிறேன். உண்மையைத் தீவிரமாகப் பேசுகிற யாரும் எதிர்ப்புகளைச் சந்தித்தாக வேண்டும். எனக்கு இஸ்லாம் பிடித்திருக் கிறது. அது சொல்கிற வாழ்க்கை எனக்குத் திருப்தியாக இருக்கிறது. அதே நேரம், இஸ்லாம் சமுதாயத்தில் உள்ள குறைகளையும் தொடர்ந்து சொல்லிக்கொண்டு தான் இருக்கிறேன் . அதனால், முஸ்லிம் தரப்பிலும் நிறைய எதிரிகளைச் சம்பாதித் திருக்கிறேன். இன்னொரு பக்கம் இந்துத்துவ சக்திகளும் என்னைக் கொல்ல தொடர்ந்து முயற்சி செய்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், என் சுதந்திர எண்ணங்களைப் பதிவு செய்யாமல் எதற்காக நான் வாழ வேண்டும்? ”

”இந்த எதிர்ப்புகளுக்கு இடையில் மகிழ்ச்சியாக இருக்க முடிகிறதா?”
”நிச்சயமாக மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் எழுத்துக்களுக்கு வருகிற எதிர்ப்புகள்தான் நான் உண்மையாக இருக்கிறேன் என்பதை எனக்கு உணர்த்தும் உரைகல்.

”குடும்ப அமைப்பும் சிதையக் கூடாது; ஆனால், பெண் விடுதலையும் அவசியம் வேண்டும் என்று நீங்கள் சொல்வதே முரண்பாடு என்று பெண்ணிய வாதிகள் பேசுகிறார்களே?”
”பெண்ணியம் பேசுவதாகச் சொல்லிக் கொண்டு, ‘கர்ப்பப் பையை ஆணுக்கும் வையுங்கள்’ என்று கோஷம் எழுப்புவது அறிவு-டைமை ஆகாது. ஆணுக்குச் சில இயல்புகள் இருப்பதைப் போலவே, பெண்ணுக்கும் சில இயல்புகள் உண்டு. இரு தரப்புக்குமான இயல்புகளில் உயர்வு, தாழ்வு இருக்கக் கூடாதே தவிர, இயல்பையே மாற்றுவேன் என்பது விபரீதமானது.

தாய்மையைப் பெண்கள் கொண்டாட வேண்டும். அது ஆண்களால் நினைத்தாலும் பெற முடியாத அற்புதமான விஷயம். என் வாழ்நாளில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த காலம் எதுவென்று கேட்டால், நான் முதன்- முதலாக தாய்மை அடைந்த அந்த நாட்களைத்தான் சொல்வேன். இப்போது நினைத்தாலும் எனக்குள் சிலிர்ப்பு ஏற்படுத்துகிற அனுபவம் அது. அந்த இயல்புக்கு எதிராக நான் ஏன் செயல்பட வேண்டும்? அதனால்தான் பெண்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்-கொள்ள முடியவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு அம்மாவாக இருப்பதால், என் எழுத்துத் திறமை எந்த விதத்திலும் குறைந்துவிடவில்லை. பெண்ணியம் பற்றிய சிந்தனை களில் நமக்கு இன்னும் தெளிவு வேண்டியிருப்பதாகவே கருதுகிறேன்.”

————-
ibnubasheer@gmail.com

Series Navigation

இப்னு பஷீர்

இப்னு பஷீர்