நான்கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை – பகுதி 2

This entry is part [part not set] of 36 in the series 20060818_Issue

பிரகஸ்பதி


அன்றைய அரசியல் சூழலைத் திரு. வேதநாயக சாஸ்திரி அவர்கள் கி.பி.1795-ல் எழுதிய இடங்கை, வலங்கையர் வரலாறு என்னும் நூலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார்.

“வடுக ராசாக்கள் நாளிலே ……. முதலாய அனேகங்காடுகளையழித்து நாடாக்கினார்கள். வடுக ராசாங்கத்துக்கு முன்னே மறவரிருந்த காலத்திலே சோழ ராசாங்கமும், பாண்டிய ராசாங்கமுமற்றுப் போன படியினாலே அவனவன் வலுவிலே நினைத்தபடி அந்தந்த இடங்களிலே தன்னையுயர்த்தி சீமை கட்டியாண்டார்கள். மறவர் நினைத்தபடிக்கு யெழுப்பி பாண்டியன் வங்கிஷத்தையழித்து பாண்டி மண்டலஞ், சோழ மண்டலந், தொண்டை மண்டலத்தை யாண்டுகொள்ளத் துணிந்தார்ப் போலே இச்சோழ தேசத்தில் மிச்சமாய்ப் பெருகிப்போயிருந்த (பறையர்) மெழும்பி நந்தநென்கிற ஒரு (பறையரை) ராசாவாக்கி மேலாகச் சொல்லப்பட்ட பட்டுசுரத்துக்குங் கும்பகோணத்திற்கும் நடுவேயிருக்கிற சோழ மாளிகையிலே யிருந்து கொஞ்ச நேரம் ராட்சிய பாரம் பண்ணினான். மறவர் திரண்டு கூடி அவனையும் அழித்துப் போட்டார்கள். பின்னையும் விளாரிலே (பறையர்) போட்டிருந்த கோட்டையை வடுகராசாக்கள் ராட்சியபாரத்தின் காலத்திலே அழித்துப்போட்டார்களென்று சொல்லுகிறார்கள்.” (பக்.51-52).

இருவருணக் கோட்பாடு என்பது மேலே குறிப்பிட்டது போன்ற ஒரு குழப்பமான சூழலிலேயே உருவாகிவிட்டது. ஆனால் திருமதி. சுவீராஜெயஸ்வால் “பண்டைத் தமிழரின் சமூக அமைப்பு குறித்த ஆய்வுகள்” என்ற கட்டுரையில் இருவருணக் கோட்பாட்டிற்கு புதிய விளக்கங்களைக் கீழ்கண்டவாறு கொடுக்கின்றார்.

“தென்னிந்திய சாதி அமைப்பு முறை, வட இந்திய சாதி அமைப்பு முறையின் மறுபதிப்பு அன்றென்றும், சத்ரியர், வைசியர் என்ற இரண்டு பிரிவுகளுள் மக்களைச் சேர்க்கும் முயற்சி ஓரிரு வேளைகளில் நடந்தும் கூட, மேற்குறித்த இரு வருணங்களும் தமிழகத்தில் இருந்ததில்லையென்றும் அவர் குறிப்பிடுவது சரியாக இருக்கக்கூடும். ஆனால் தென்னிந்தியச் சமூகத்தில் மட்டும் ஆற்றல் மிக்க பிராமண வருணம் தோன்றியதற்கான காரணங்களை இன்னமும் ஆழமாக நாம் தேடவேண்டும். பழங்குடியினரை ஊரகச் சாதிசனமாக மாற்றமடையச் செய்ததில், பிராமண வருணத்தவரின் பண்பாட்டுப் பரப்பல் போன்ற அமைதியான வழிமுறைகள் பயனுள்ள வகையில் பங்களிப்பு நிகழ்த்தியிருக்கக் கூடும். பழங்குடித்தலைவர்களான அரசர்களை, அவர்களுடைய வேளிர்கள் மட்டத்திலிருந்து உயர்வடையச் செய்ததில் பிராமணவருணத்தவர் உயரிய நோக்கத்துடன் விஷய ஞானத்தின் துணை கொண்டும் உதவி புரிந்து ஈடற்ற வெற்றி கண்டனர் எனலாம். ஆட்சி புரியும் குழுவினரும் பிராமண வருணத்தவரும் ஒருவரையொருவர் சார்ந்து, பிறரிடமிருந்து தம்மை உயர்த்திக் கொண்டிருக்கக் கூடும். பழங்குடியினரின் குலக் குழுக்களிலிருந்து உருவான ஆட்சியாளர்கள், ஆட்சியதிகாரத்தில் இருந்த பொழுது சத்ரியப் பட்டத்தின் பயனைத் துய்த்துவிட்டு, அரசியல் தலைமையை இழந்தவுடன் தமது தனித்த அடையாளத்தையும் இழந்தனர். தென்னிந்தியாவில் பிராமணீயம் வளர்ச்சியடைந்து வருகிற காலகட்டத்தில் வைசியர்களுக்கும், சூத்திரர்களுக்குமிடையே முன்னர் நிலவி வந்த வேறுபாடு பெருமளவு மங்கிப் போயிருந்தது என்றும், அதன் விளைவாகத் தென்னிந்தியாவில் வைசிய வருணங்கள் தோன்றாமைக்கான காரணங்கள் இவையே”. (சுவீரா ஜெயஸ்வால் பின் நவீனத்துவத்தின் அடிப்படைக் கூறுகள், முதலிய கட்டுரைகள்).

மேலும் இவர், “இந்தியாவின் தீபகற்பப் பகுதியில் அக்காலகட்டத்தில் வருணப் பிரிவினை என்பதே நெகிழ்வான நிலையில் இருந்ததாகத்தான் தோன்றுகிறது”, எனவும் அரசர்கள் “வெள்ளாளருடன் தடையின்றி மண உறவு கொண்டவர்களென்றும்,” தனித்த சாதிக்குரிய குணாதிசயங்களைப் பெறாதவர்களென்றும், குறிப்பிடுகின்றார்.

உண்மையான நிலவரமானது திருமதி. சுவீரா ஜெயஸ்வால் அவர்களின் கருதுகோள்களுக்கு நேர்மாறாகவே உள்ளது என்பதை நாம் கீழே காணலாம். முதலில் வட இந்திய அரச வருணத்தினரின் தூய்மையைப் பற்றி பார்ப்போம். மனுவின் வம்சாவளியினர்தான் வட இந்திய சத்திரியர் என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். சதபத பிராமணம் கூறும் மனுவின் கதையாவது,

“ஒரு நாள் மனு ஆற்றில் இறங்கித் தன் காலை இறைவணக்கத்தைச் (absulutions) செய்து கொண்டிருக்கும் பொழுது அவன் கையில் ஒரு மீன் அகப்பட்டுக்கொண்டது. அந்த மீன் மனுவிடம் தன்னை வளர்க்கும்படிக் கூறியது. மேலும் அந்த மீன், கடவுளர்கள் மனித சமூகத்தின் மீது மிகவும் கோபமாக இருக்கின்றனர் என்றும், பெருவெள்ளத்தை ஏற்படுத்தி மனித இனத்தையும், அனைத்து ஜீவராசிகளையும் அழித்து விடுவதாக உள்ளனர் என்றும், அப்பெருவெள்ளக் காலத்தில் மனுவைத் தான் காப்பாற்றுவதாகவும் கூறியது. மனு மீனை வளர்க்கின்றான். மீன் மிகப் பெரிய அளவில் வளர்ந்தது. உரிய காலத்தில் மனுவை ஒரு பெரிய கப்பலை கட்டும்படி அந்த மீன் கூறியது. இந்த கப்பல் மூலமே, பெரு வெள்ளக்காலத்தில் மனுவினால் தப்பிக்க முடிந்தது. அந்த மீன் மனுவின் கப்பலை வடக்கில் உள்ள மலைக்கு இழுத்துச் சென்றது. தண்ணீர் வற்றியபின் அது மனுவை ஜம்பு தீவிபாவில் (Jambudeviba) மீண்டும் சேர்த்தது. மனு தனி நபரானார். எனவே வேள்விகள் செய்து அதன் மூலம் ஒரு பெண்ணைப் பெற்றார். அவள் பெயர் இடா அல்லது இலா ஆகும். மனு இலா மூலம் தம் வம்சத்தை விருத்தி செய்தார். இந்த வம்சாவளியினர்தான் இந்திய (சத்திரிய) அரச வம்சத்தினராகிய சூரிய, சந்திரகுலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்”.

மேலே கூறப்பட்ட கதையின்படி, மனுவிற்கும், இலாவிற்கும் ஏற்பட்டது கலப்புச் சேர்க்கையாகும். எனவேதான் இலா வேள்வியிலிருந்து உருவானதாகக் கூறப்பட்டுள்ளது.

இதற்குப்பின் மகாபாரதக்காலச் சத்ரியர்களைப் பார்ப்போம். மனுவின் வம்சாவழியில் சந்திர குலக்கிளையில் 91வது தலைமுறை அரசன் சந்தனு மகாராசாவாகும். இந்தச் சந்தனுவுக்கும், கங்காதேவிக்கும் பிறந்தவரே பீஷ்மர் ஆவார். இதுவும் ஒரு கலப்பு மணமே. வட இந்திய இலக்கியங்கள் சூத்திரர்களைப் பொதுவாக “நதிக்குலத்தவர்” என்றே அழைக்கின்றது. சூத்திரர் எனக்கூறிக்கொள்ளும் தமிழக வெள்ளாளர்கள் தங்களைக் கங்கை குலத்தவர் என்று கூறுகின்றனர். எனவே “கங்காதேவி” க்குப் பிறந்த பீஷ்மரையும் நாம் நதிக்குலத்தவராகவே கருத வேண்டியுள்ளது. கங்காதேவிக்கும், சந்தனுவுக்கும் பிறக்கும் பிள்ளைகளைக் கங்காதேவி கொன்று விடுவதாகக் கூறுவதும். பீஷ்மருக்கு அரசப் பட்டம் கிடைக்கப்பெறாமல் போனதும் இக்காரணங்களினாலேயே இருக்கலாம்.

இதன்பின் சந்தனுவிற்கும் மச்சகந்தி என்ற பரதவர் குலப் பெண்ணிற்கும் பிறந்தவர்கள் சித்ராங்கதன், விசித்திர வீரியன் ஆவார்கள். இவர்களில் சித்ராங்கதன் முதலிலேயே இறந்துவிடுகிறான். அரச பதவிக்கு வந்த விசித்திர வீரியனும் குழந்தைகள் இல்லாமலே இறந்து விடுகின்றான். வம்சவிருத்திக்காக அவனுடைய மனைவிகளாகிய அம்பிகை, அம்பாலிகை ஆகியோருக்கும், விசித்திர வீரியனின் தாயாகிய மச்சகந்திக்கு களவில் பிறந்த மகன் வியாசருக்கும் பிறந்தவர்களே, பாண்டுவும், திருதராஷ்டிரனும் ஆகும். இவர்கள் வழி வந்தவர்களே பிற்கால வட இந்தியச் சந்திரகுலத்தவராவர். இதிலிருந்து புராண காலச் சத்திரியர்கள் பல கலப்புகளைக் கடந்தே வந்துள்ளதாகத் தெளிவாகத் தெரிகின்றது.

வட இந்தியச் சரித்திரகால அரசர்களில் “நந்தர்கள்” சூத்திரராகக் கருதப்படுகின்றனர். நந்தர்களைப் “பார்பர்” (நாவிதர்) என அழைக்கும் வழக்கமும் உள்ளது. சந்திரகுப்த மௌரியனுடைய தாய்வழித் தாத்தா ஒரு நாவிதர். ஆனாலும் சந்திர குப்தனுக்குச் சாணக்யன் முடிசூட்டுவதாகக் கதை வழங்குகின்றது. சந்திரகுப்த மௌரியனுக்குப் பழைய சத்திரிய அரசவம்சத்தைச் சேர்ந்த, சிம்மபுரத்து அரசன் விஜயசிம்மன் தனது மகள் சந்திரவதியை மணம் முடித்துக் கொடுக்கிறான். புகழ்பெற்ற கோசாம்பியின் அரசன் (சத்திரியன்) உதயணனும் தனது மகள் துர்த்தரையைச் சந்திரகுப்தனுக்கு மணம் முடித்துக் கொடுத்துள்ளான். இத்தகைய கலப்புக்கு பின்னர் சூத்திர வம்சமாகிய மௌரிய வம்சமும் வட இந்தியச் சத்திரிய வருணத்தில் சேர்க்கப்பட்டு விட்டது.

இந்து மரபுகள் மிலேச்சராகத் கருதிய வெளிநாட்டு அரச குடும்பத்தினரான இந்தோகிரேக்கர், இந்தோபார்த்தியர் (அ) பகல்லவர், சாகர், குசானர் ஆகியோர் கி.மு. 2ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 3ஆம் நூற்றாண்டுவரை வட இந்தியாவில் ஆட்சி புரிந்துள்ளனர். இவர்களும் வட இந்தியச் சத்திரிய வருணத்தில் சேர்க்கப்பட்டுவிட்டனர். நாகர் என்ற இனக்குழுத்தலைவர்களைத் தமிழ்ச் சமூகம் அரச வருணத்தில் ஏற்றுக் கொண்டதில்லை. வட இந்திய இலக்கியங்கள், தாழ்ந்த நிலை சத்திரியர்களான இவர்களை தஷத்திரபந்து என்று கூறுகின்றது. கி.பி. 3ம் நூற்றாண்டிலிருந்து வட இந்தியாவில் புகழ்பெற்ற அரசர்களான குப்தர்களை வரலாற்றாசிரியர்கள் ‘வைசியர்’ என்றே குறிப்பிடுகின்றனர். குப்தர்களும், தங்களுடைய வளர்ச்சிப் போக்கில் பல புகழ்பெற்ற பழைய சத்திரிய வம்சத்தினருடன் திருமண உறவு கொண்டு பிற்காலத்தில் ‘வர்மன்’ என்ற சத்திரியப் பட்டத்துடன் வட இந்திய சத்திரிய வருணத்தில் கலந்துவிட்டனர். இதன்பின்னர் பல புதிய இனக்குழுக்கள் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றும் பொழுது அவர்கள் சில வரையறைக்குட்பட்டு ‘அக்னிகுலச் சத்திரியர்களாக’ ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.

இவ்வாறு புதிதாக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய இனக்குழுக்களுள் ஆபீரர்கள் (Abiras or Abhiras) கூர்ஜரர்கள் (Gurjaras), ஜாட்கள் மற்றும் ஹூனர்கள்(Hunas) ஆகியோரும் அடங்குவர். இவர்களுள் ஆபீரர்கள், கிருஷ்ணன் தொடர்புடைய யாதவக் குலமாகக் கூறிக் கொண்டனர். கூர்ஜார்கள் காலப்போக்கில் ‘கூர்ஜர பிரதிகாரர்’ என்ற பெயருடன் ராஜபுத்திரர் ஆகிவிட்டனர். மிலேச்சராகவோ, சூத்திரராகவோ கருதப்பட்ட வேண்டிய ஹூனர்கள் அக்னி குண்டத்திலிருந்து பிறந்த அக்னிகுல ராஜபுத்திரர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர்.

இவ்வாறு வட இந்திய சத்திரிய வருணம் மட்டுமல்லாது பிராமண வருணமும், காலந்தோறும் நெகிழ்ச்சி தண்மையுடன் இயங்கி வந்துள்ளது. அதன் காரணமாகவே வடஇந்திய பிராமண வருணத்தில் சர்மா, வைத்யா, மிஸ்ரா, சென், திரிபாதி . . . . . போன்ற பல பட்டங்கள் காணக் கிடக்கின்றன. இவ்வாறு நெருக்கடி தோன்றும் பொழுதெல்லாம் வடஇந்திய நான்கு வருண அமைப்பு நெகிழ்வுத் தன்மையுடன் செயல்பட்டதாலேயே அங்கு வருண அமைப்பு இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு நேர்மாறான வாதம் இயக்க மறுப்புக் கோட்பாகும்.

தமிழ்ச் சமூகத்தைப் பொறுத்தவரை, சங்க காலத்திலிருந்து (கி.மு. 500) கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரை வெளி இனத்தவரின் படையெடுப்பு கிடையாது. கி.பி. 250 முதல் கி.பி. 600 வரை ஆட்சி செய்த களப்பிரர் கர்நாடகப் பகுதியிலிருந்து வந்திருந்தாலும் அவர்களைத் தமிழ்ச் சமூகத்துடன் தொடர்புடைய சமூகமாகவே கருத வேண்டும். எனவே ஏறத்தாழ 2000 ஆண்டுகள் தமிழக அரசு வருணத்திற்கு பெரிய நெருக்கடிகள் ஏற்படவில்லை. இந்திய புராணங்களால் அங்கீகரிக்கப்பட்ட 56 தேச சத்திரியர்களில் சேரர், சோழர், பாண்டியர், சிங்களவர் ஆகியோரும் அடங்குவர். தமிழ் வேந்தர் குடியினர் அரச குலத்தினரிடம் மட்டுமே தொடர்ந்து சட்ட பூர்வ திருமண உறவு கொண்டிருந்தனர். தமிழ் கூறும் நல்லுலகத்தில் சங்க காலத்தைப் பொறுத்தவரை வேளிரும், வேந்தருமே சட்டப்பூர்வமான திருமண உறவு உள்ள சமூகமாகத் திகழ்ந்தனர். பிற்காலத்தில் வேளிர் மரபைச் சேர்ந்த சாளுக்கியர்களும், சாண்டார்களும் (Sandar), கங்கர்களும், சிங்களவர்களும், தமிழக அரச வருணத்தவருடன் சட்டப்பூர்வத் திருமண உறவுக் கொண்டு வந்தனர். இம்மரபு தவிர்த்த பிற அரச வம்சத்தவருடன் தமிழக வேந்தர், வேளிர் குடியினர் அதிகாரப்பூர்வ திருமண உறவு கொண்டதில்லை.

இதற்கு நல்ல உதாரணமாக ‘வாணர்’ குலத்தை எடுத்துக் கொள்ளலாம். புராணக்கதைப்படி பார்த்தால், தக்காணப் பகுதியையும், தமிழகத்தையும் ஆட்சி செய்த மாவலி சக்கரவர்த்தியை வென்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியவர்களே தமிழக வேளிர், வேந்தர் குடியினராகும். அந்த மவாலி சக்கரவர்த்தியின் வம்சாவழியினரே தங்களை ‘வாணர்’ என்றும் ‘மாபலி வாணாதிராயர்’ என்றும் ‘பாணர்’ என்றும் அழைத்துக் கொண்டனர்.

சங்க கால இலக்கியங்கள் இவ்வரச வம்சத்தினரை ‘வாணன் சிறுகுடி’ என்றே குறிப்பிடுகின்றது. சங்ககால வேந்தர்களும், வேளிர்களும், பார்ப்பனரும், வணிகரும் பெருங்குடிகளாகும். குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் ஆகிய நான்கு நில உழைக்கும் மக்களும் சிறுகுடிகளாகும். சங்க காலத்தில் வாணர்கள் அரச வருணத்தில் சேர்க்கப்படவில்லை என்பதையே ‘சிறுகுடி’ என்ற அடைமொழி காட்டுகின்றது. இந்த ‘வாணர்கள்’ கி.பி. 12, 13 ஆம் நூற்றாண்டுகளில் பாண்டியனுக்கும், சோழனுக்கும் படைத்தளபதிகளாக இருந்தனர். புராண காலத்திலிருந்து கி.பி. 12 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து போக்குடியாகவே விளங்கி வந்த வாணர்களுக்குக் கிடைத்த சமூக அந்தஸ்தை கீழ்க்கண்ட நிகழ்ச்சிகள் தெளிவாக்கும்.

குலோத்துங்கனால் நாட்டைப் பெற்ற விக்கிரம பாண்டியன் கி.பி. 1190 வரை பாண்டிய நாட்டைக் குலோத்துங்கனுக்குக் கட்டுப்பட்டு ஆண்டான். அதன் பிறகு முதல் சடாவர்மன் குசேகரபாண்டியன் (கி.பி. 1190-1218) அதைப் பெற்று, தொடர்ந்து சோழ அரசுக்குக் கட்டுப்பட்டு ஆட்சி நடத்திக் கொண்டிருந்தான். அந்நாளில் குலோத்துங்கன் கொங்கு நாட்டுக் கருவூரைக் கைப்பற்றி அங்கு ‘சோழ கேரளன்’ என்ற பெயருடன் விசயாபிசேகம் செய்தான். அதன்பிறகு தனக்கு கீழிருந்த பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரையிலும் விசயாபிசேகம் செய்து கொள்ள விரும்பினான். ஆனால் இதற்கு பாண்டியன் குலசேகரன் மறுத்துவிடவே, கி.பி. 1202ல் குலோத்துங்கன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். குலோத்துங்கன் முன் நிற்க மாட்டாது குலசேகரன் போரில் தோல்வியுற்று நாட்டையிழந்து உரிமைச் சுற்றத்தாருடன் மதுரையை விட்டோ டினான். குலோத்துங்கன் தன் படையுடன் மதுரையில் புகுந்து அங்கிருந்த மண்டபங்களையும், மாளிகைகளையும் இடித்தான். தான் எண்ணியவாறே பாண்டியர் தலைநகரான மதுரையில் ‘சோழ பாண்டியன் திரிபுவன வீரதேவன்’ என்ற பெயரில் வீராபிசேகம் செய்து கொண்டான்.

மூன்றாம் குலோத்துங்கன் இவ்விசயாபிசேகத்திற்கும், வீராபிசேகத்திற்கும் முன்பு, தனக்கு மதுரையை வெற்றி கொள்ள உதவிய பாணன் ஒருவனுக்குப் பாண்டியன் என்று பெயர் கொடுத்து பாண்டியர் பட்டத்தைச் சூட்டினான் என்று அவனது மெய்க்கீர்த்தியில் குறிப்பிடுகின்றான்.

பாண்டியனைப் பாண்டியனென்னும் பேர் மாறிவர
நெடும்பரைத் தென்னவர்கெட மதுரை கொண்ட தோள் வலிபாடிய
பாணனைப் பாண்டியனென்று பருமணிப் பட்டஞ் சூட்டினன்.

இச் செயல் பாண்டியனாக பாணனுக்கு முடிசூட்டப்பட்டால் பாண்டியனின் முடி இழிவு பெறும் எனும் நோக்கிலேயே செய்யப்பட்டுள்ளது. சங்க காலத்திலிருந்தே வேற்று மரபு அரசர் குடியாக இருந்த வாணரை அரச வணருணத்தில் ஏற்றுக் கொள்ளாததால் தான் இது போன்று பழி வாங்குவதற்காக வாணர் பயன்பட்டுள்ளனர். இச்செயலுக்கு பழி வாங்கும் முகமாக இது போன்றே ஒரு பாணனுக்கு சோழனாக முடி சூட்டிய நிகழ்ச்சியையும் காணலாம்.

கி.பி. 1216ல் இளவரசுப் பட்டம் கட்டப் பெற்ற சடாவர்மன் குலசேகர பாண்டியனின் தம்பி மாறவர்மன் சுந்தரபாண்டியன், குலோத்துங்கனால் பாண்டிய நாட்டிற்கு ஏற்பட்ட இழிவையும், அழிவையும் பாணன் ஒருவனுக்கு அது அளிக்கப்பட்ட தன்மையையும் எண்ணி கி.பி.1218ல் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். போரில் சோழ மன்னன் தோற்கடிப்பட்டான். தஞ்சையும், உறந்தையும் செந்தழலுக்கு இரையாக்கப்பட்டன. குலோத்துங்கன் மதுரையில் மாட மாளிகையையும், மண்டபத்தையும் இடித்தது போன்று சோணாட்டில் இருந்த மாடமும், மாளிகையும், மண்பமும் இடிக்கப்பட்டன. குலோத்துங்கன், பாண்டியனைப் பாண்டியனென்னும் பெயர் மாற்றிப் பாணன் ஒருவனுக்குப் பருமணிப்பட்டஞ் சூட்டியதை மறக்காத மாறவர்மன் சுந்தரபாண்டியன், சோழமன்னன் முடியைப் பறித்து முதலில் அதை ஒரு பாணனுக்குச் சூட்டி மகிழ்ந்தான். அதன் பிறகே ஆயிரத்தளியில் அபிசேக மண்டபத்தில் வீராபிசேகம் செய்து கொண்டான் என்று அவனது மெய்கீர்த்தி தெரிவிக்கின்றது.

“தநசையும் உறந்தையும் செந்தழல் கொழுத்தி
காவியும் நீலமும் நின்று கவினிழப்ப
வாவியு மாறு மணிநீர் நலனழித்தும்
மாடமு மாளிகையும் மண்டபமும் பலவிடித்துத்
தொழுது வந்தடையா நிருபர்தந் தோகையர்
அழுத கண்ணீ ராறு பரப்பிக்
கழுதை கொண்டுழுது கவடி வித்திச்
செம்பியனைச் சினமிரியப் பொருதுசுரம் புகவோட்டிப்
பைம்பொன் முடி பறித்து பாணனுக்குக் கொடுத்தருளிஔ.

வரலாற்றில் நடந்த இச்சுவையான நிகழ்ச்சிகளுக்கு திருவானைக்காவில் கிடைப்பெற்ற ஒரு கல்வெட்டுப் பாடல் மேலும் சுவையூட்டுவதாக உள்ளது.

“மாவடி வங் கொண்ட மால் சென்று வேண்டவு மன்னொருவன்
மூவடிமா நிலமே முன் கொடுத்தது முத்தமிழ்நூல்
தூவடி வேயெய் சுந்தரபாண்டியன் சோழர் தங்கள்
பாவடி வைய்ய மகுடங் கொடுத்தது பாணனுக்கேஔ.

இப்பாடலுக்கு திருமாலுக்கு நிலம் கொடுத்த மாபலி வழி வந்த பாணனுக்கு மாபலியிடமிருந்து பெற்ற நிலத்தை ஆண்டு வரும் பாண்டியன், மகுடஞ்சூட்டினான் என்று பொருள் கொள்ளலாம். மேலே கூறப்பட்ட நிகழ்ச்சிகள் கீழான தகுதியிலுள்ள வாண அரசர்களுக்கு ஒருநாள் பாண்டியனாகவும், ஒருநாள் சோழனாகவும் முடி சூட்டப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாத மரபு தமிழகத்தில் இருந்தது என்பதையே காட்டுகின்றது.

இங்கு கூற்றுவ நாயனாருக்கு முடி சூட்ட மறுத்து கேரளாவுக்குள் தசைம் புகுந்த தில்லைவாழ் அந்தணர்களின் செயலையும் ஒப்பிட்டுப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும். கூற்றுவ நாயனார் களப்பிர அரச குலத்தைச் சேர்ந்தவர் என்ற கருத்தும் உள்ளது. களப்பிரர் வேளாளரில் ஒரு பிரிவினர் என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

கி.பி.14 ஆம் நூற்றாண்டில் வாணர் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் சோழ ராஜா மூன்றாம் ராஜராஜனின் பப்டது ராணியாகின்றார். மூன்றாம் இராஜ ராஜனின் “சீர்மன்னும் மலர்மகளும்ஔ எனத் தொடங்கும் மெய் கீர்த்தியில், வாணர் குல நிலைவிளக்கு புவனமாதேவி “இயல்வாழ்வும் இசைவாழ்வும்ஔ இமயமலை மகளறத்தின் செயல் வாழ்வும் ராஜராஜன் “திருத்தாலி பெற்றுடையார்ஔ எனக் குறிப்பிடப்படுகின்றாள்.

வேறு எந்த அரசியும் இவ்வாறு திருத்தாலி பெற்றுடையாள் என்ற அடைமொழியுடன் குறிப்பிடவில்லை. அப்படியானால் இதற்கு முன் சோழன் மணம் புரிந்த வாணர் குல பெண்களுக்கு “சிறுதாலிகளேஔ உரியதாக இருந்திருக்க வேண்டும். சிறுதாலி கட்டப்பட்ட அரசிகள் பட்டத்து அரசி ஆக மாட்டார்கள். அவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கு அரசுரிமை கிடையாது. ஆனால் அவர்கள் அரசர்களின் சொந்த பிள்ளையாதலால் பிள்ளை என்ற பட்டத்துடன் ஊராட்சியோ, அரசாங்கத்தில் உயர் பதவிகளோ கிடைக்கப்பெற்றனர். திரு.வெ.வேதாசலம் அவர்கள் எழுதிய “பாண்டிய நாட்டில் வாணாதிராயர்கள்ஔ என்ற நூலில் உள்ள கீழ்க்கண்ட குறிப்புகள் மேலே கூறப்பட்ட கருத்துக்களை உறுதி செய்கின்றன.

1. “அரசனது பட்டத்தரசி அல்லாத மற்ற மனைவியரிடத்துப் பிறந்த பிள்ளைகள் நாட்டில் அமைதியை ஏற்படுத்த ஆங்காங்கே இருந்த சிற்றூர்களுக்கும், பேரூர்களுக்கும் தலைவராய் இருந்து நாட்டின் அமைதியைக் காத்து வந்தார்கள். காரையூர் கல்வெட்டு ஒன்று வாணாதிராயர் பிள்ளை ஒருவனுக்குப் பாடிக்காவல் பிரமாணம் செய்து வைத்ததைத் தெரிவிக்கின்றதுஔ.

2. “பிள்ளை குலசேகரமாவலி வாணாதிராயர் :

இவன் இவ்வீரபாண்டியனின் இருபத்தாறாம் ஆட்சியாண்டு (கி.பி. 1274) சின்னமனூர் கல்வெட்டில் குறிப்பிடப்படுகின்றான். இம்மாவலி வாணாதிராயர் பாண்டிய அரசன் மாறவர்மன் குலசேகரனது தந்தை அல்லது பிள்ளையாக இருக்கவேண்டும் என்பர். புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலைப் பகுதியான கோனாடு இவன் பொறுப்பில் இருந்ததுஔ. (இவ்வாணாதிராயர் குலசேகர பாண்டியனின் பிள்ளையேயன்றி தந்தையாக இருக்க முடியாது.)

“பிள்ளை மகாபலி வாணராயர் அகம்படி முதலிகளில் பெரியான் உய்யவந்தானான விக்கிரம சிங்கத்தேவன்ஔ.

இவ்வாறு பிள்ளைப்பட்டம் பெற்ற வாணாதிராயர்கள், திரு.வெ.வேதாசலம், கருதுகின்றபடி பாண்டிய அரசனின் பட்டத்தரசி அல்லாத மற்ற மனைவியரில் வாணர்குலப் பெண்களுக்கு பிறந்தவர்களாகவே இருக்க வேண்டும்.

புகழ்பெற்ற வாணர் குலப் பெண்களுக்கே பட்டத்தரசி தகுதி கொடுக்கத் தயக்கம் காட்டிய தமிழக வேந்தர் குடியினன் மகட்கொடைக்குரிய வேளாளர் பெண்களுக்கும் பட்டத்தரசி தகுதி கொடுத்திருக்க வாய்ப்பில்லை. உயர்குடி வேளாளரே அரசர்க்கு மகட் கொடைக்குரியோராக நச்சினார்க்கினியர் கூறுகின்றார். வேந்தரின் நிர்ப்பந்தத்திற்கு பணிந்து, மகட்கொடையளித்து மருதநில ஊர்களைப் பெற்ற சீறூர் மன்னர்களே, சங்ககாலத்தில், கிழார்களாக சோழர் காலத்தில் உயர்குடி வேளாளராகினர். வட இந்தியாவில் தாழ்ந்த சத்திரியர்களாகக் கருதப்பட்ட நாக அரசர்களையே தமிழ் சமூகம் சீறூர் மன்னன் என அழைக்கின்றது. சோழர் காலத்தில் சிறுதாலி பெற்ற வாணர் குலத்தவர் சங்க காலத்தில் சீறூர் மன்னராகவே இருந்தனர். எனவே சங்க காலத்தில் மகட்கொடையளித்த சீறூர் மன்னரும் சிறுதாலி உரிமையுடையவராகவே விளங்கினர் எனலாம். இதனையே பிறங்கடை மரபு என சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

திரையனாகிய சோழனும், நாக இளவரசியும் கந்தர்வ மணம் புரிகின்றனர். இவர்களுக்கு பிறந்த இளந்திரையன் வம்சா வழியினரே தொண்டைமான் அரச வம்சத்தவராகும். இத்தொண்டைமானை பெரும்பாணாற்றுப்படை முந்நீர் வண்ணன் பிறங்கடை எனக் கூறுகின்றது. பிறங்கடை என்பது பின்வாசல் என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது. அதாவது நேரடியான சட்டப்பூர்வமான மனைவி (பட்டத்து ராணி) மூலம் அல்லாமல் பிற மனைவியருக்குப் பிறந்த பிள்ளைகள் பிறங்கடை என அழைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் சேரரின் கிளைக்குடி எனக் கூறப்படும் அதியமான் அரச வம்சமும் பிறங்கடை மரபினரே. இவ்விரு அரச வம்சமும் வேளிராகவோ வேந்தராகவோ அங்கீகரிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் எந்த ஒரு தமிழ் வேந்தர் குடியினரும் வேளாளர் பெண்ணை பட்டத்தரசியாக்கியதற்கான வரலாற்றுச் சான்று ஏதும் இல்லை. எனவே தமிழக அரச வருணத்தினர், நான்காம் வருணத்தவராகிய வெள்ளாளருடன் தடையின்றி மண உறவு கொண்டவர்கள் என்று ஆய்வாளர்கள் முன்வைக்கும் வாதம் பொருளற்றதாகி விடுகின்றது.

பாண்டியர்களும், சோழர்களும் வலுவிழந்து போனபின் வாணாதிராயர்கள் குறுநில அரசர்களாக பல இடங்களில் ஆட்சி புரிந்தனர். அந்தச் சமயத்திலும் அவர்கள் தங்களை ராஜகுலமாகக் கூறிக் கொள்ளவில்லை. மாறாக, “ராஜகுல ஸர்ப்பகருடன்” என்றே மெய்க்கீர்த்திகளில் கூறிக் கொண்டனர். இதன் பொருளாவது ராஜகுலமாகிய ஸர்ப்பத்திற்கு, கருடன் போன்ற பகைவன் என்பதாகும். வாணர்களே ஒரு அரச வம்சமாக இருந்தும், தமிழக வேந்தர் குடியினரையே ‘ராஜகுலம்’ என அழைப்பது இங்கு ராஜகுலமானது ஒரு தனி சாதியாகி விட்டது என்பதையே காட்டுகின்றது. இராஜகுலவர்காணிபற்று என்று நிலம் இருந்தது என 2 ஆம் ராஜ ராஜ சோழன் (கி.பி.1150 – 51) கால கல்வெட்டு சுட்டிக்காட்டுகிறது.

இங்கு “ஊத்துமலை பாளையப்பட்டு” வரலாற்றில் கூறப்பட்டுள்ள செய்திகளையும், நாட்டுப்புறக் கதைப்பாடலான ‘ஐவர் ராஜாக்கள்’ கதையில் உள்ள செய்திகளையும் பொருத்திப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும்.

குறுநில மன்னர் அந்தஸ்தில் இருந்த கொண்டையன் கோட்டை மறவரின் தலைவனிடம், மகட்கொடை கேட்டு பிற்கால பாண்டிய மன்னன் ஒருவன் தூது அனுப்புகின்றான். அதற்கு மறுமொழி கூறுமிடத்து, ராஜகுலத்துக்கு தாங்கள் மகட்கொடை கொடுக்க முடியாது என்றும், ராஜகுலமானது பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில்லை எனக்கூறி புராண காலராஜாக்களின் செயல்களை மேற்கோள் காட்டி ஊரார் பேச்சைக் கேட்டு கர்ப்பிணியாக இருந்த தன் மனைவி சீதையை சந்தேகப்பட்டுக் காட்டுக்கு அனுப்பிய ராமனையும், ராஜகுலவர் நிறைந்த அரச அவையில் தன் மனைவியின் துகில் உரியப்படுவதை தடுக்க முடியாமல் நின்ற பாண்டவர்களையும் குறை கூறும் அவர், வள்ளி தங்களுடைய வேட்டுவ குலத்தின் வளர்ப்பு மகள் என்பதாலேயே முருகனுக்குக் கட்டிக் கொடுத்ததாகக் கூறுகின்றனர். எனவே தமிழக வேந்தர், வேளிர் குடியினர் தமிழகத்தின் பிற ஆட்சியாளரிலிருந்து வேறுபட்ட மரபினர் என்பது மீண்டும் நிரூபணமாகின்றது. மேலும், தமிழக பழைய அரசர் குடியினர் தங்களை புராண கால சத்திரியர்களுடன் தொடர்பு படுத்தப்படுவதைப் பிற ஆட்சி மரபினர் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும் தெரிகின்றது. திருமாலின் மருமகனான முருகனையும், கிருஷ்ணனின் மகனான மன்மதனையும் ‘வேள்’ எனக் குறிப்பிடுவது தமிழ் மரபு. இங்கு முருகனை பழைய அரசர் குடியுடன் தொடர்புப்படுத்தியது பொருத்தமானதாகவே உள்ளது.

ஐவர் ராஜாக்கள் கதை

தென்காசிப் பாண்டியனின் இரண்டாவது மனைவியின் அய்ந்து பிள்ளைகளே, இந்த அய்வர் ராஜாக்கள். இவர்களைப் பசைபாண்டியர் என்றும் அழைக்கின்றனர். இவர்களில் மூத்தவனான குலசேகரப் பாண்டியனின் தலைமையில் இவர்கள் வள்ளியூரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்கின்றனர். அக்காலக் கட்டத்தில் நெல்லை மாவட்டம் முழுமையும் ஆட்சி செய்த கன்னடிய ராஜாவின் மகள், குலசேகரப் பாண்டியனின் சித்திரத்தைப் பார்த்து, அவன் மீது காதல் கொள்கின்றாள். மகளின் விருப்பத்தை அறிந்த கன்னடிய ராஜா, குலசேகர பாண்டியனுக்கு தூது அனுப்புகின்றான்.

குலசேகர பாண்டியன், தூதுவர்களிடம் இந்திரனையே போரில் வென்று அவனுடைய முடியையும் உடைத்த பாண்டிய வம்சத்தில் வந்த தான், சாதாரண அரச மரபில் பிறந்த பெண்ணை மணக்க முடியாது எனக் கூறி விடுகின்றான். சினம் கொண்ட கன்னடிய ராஜா, வள்ளியூர் பாண்டியர் மீது போர்த் தொடுத்து குலசேகரப் பாண்டியனை கைதியாகப் பல்லக்கில் ஏற்றி தன் மகளுக்கு மணம் முடிக்க கொண்டு செல்கின்றான். அவமானம் தாங்காத பாண்டியன் உயிர் துறக்கிறான். குலசேகரப் பாண்டியனின் பிணத்தைப் பார்த்த கன்னடியன் மகளும் அவன்மீது விழுந்து உயிர் துறக்கின்றாள். இதுதான் கதையின் சாராம்சம். குலசேகரப் பாண்டியன் (வள்ளியூர் பாண்டியன்) கன்னடிய ராஜாவுக்கு கட்டுப்பட்ட குறுநில மன்னனே. எனினும் தங்களுடைய குல மரபுக்கு எதிராக, கன்னடிய ராஜாவின் மகளை பட்டத்து ராணியாக்க அவனது மனம் இடம் கொடுக்கவில்லை என்பதே இக்கதை கூறும் செய்தியாகும்.

மேலே விவாதித்த அனைத்து விசயங்களையும் உற்று நோக்கும் பொழுது, தமிழக ராஜகுலத்தவர் பிற மரபு அரச வம்சத்தவருடன் மண உறவு மூலம் கலந்திடவில்லை. எனவே இந்திய சாதிய சமூகத்தின் இயங்கியலின்படி, பழைய தமிழக ராஜகுலத்தவர் தனிச்சாதியாக மாறியிருக்க வேண்டும். இவர்களுள் சோழனும், பாண்டியனும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து ஆட்சி புரிகின்றனர். களப்பிரர் கால மாற்றத்திற்குப் பின் பழைய ராஜகுலத்தவரான வேளிரும், பிற சான்றோரும், பாண்டியனிடமும், சோழனிடமும் மூவேந்த வேளான் தலைவாய் சான்றான் போன்ற அதிகாரிகளாகவும், நாடாள்வான், காமிண்டன் போன்ற ஆட்சிக் குடியாகவும் பணிபுரிந்தனர். சோழனின் வலங்கை மகாசேனையும், வலங்கை பழம்படையும் பழைய ராஜகுலத்தவரைக் கொண்டு உருவாக்கப்பட்ட படைகளே. தென்னவன் ஆபத்துதவிகளும், சோழனின் மெய் காப்பாளரும் இக்குலத்தவர் என்றே கருதலாம்.

சுவீரா ஜெயஸ்வால் தமிழ்நாட்டில் பிராமண வருணம் மிகவும் வளர்ச்சியடைந்த நிலையில் உள்ளதாகக் கூறுகின்றார். இந்தியாவின் பிறபகுதிகளின் பிராமணர்களைவிட தமிழ்நாட்டின் பிராமணர்களே தர்ம சாஸ்திரங்களை சிறப்பாகக் கடைப்பிடித்து ஒழுகுகின்றனர் என்பதை அனைத்து ஆய்வாளர்களும் ஒப்புக் கொள்வர். தமிழக சூத்திர வருணமாகிய வேளாளர் சிறப்பாக வளர்ந்துள்ளது யாவரும் அறிந்ததே. இது அல்லாமல் தமிழகத்தில் வைஸ்ய வருணமும் மிகவும் பலமுடனேயே உள்ளது. வைஸ்ய வருணத்தில் ஒரு பிரிவினரான தன வைஸ்யர் செட்டி என்ற சாதியாக பரிணமித்துள்ளனர். செட்டிகள் தங்களை ஆயிர வைசியர் என்றும், ஆரிய வைஸ்யர் என்றும் அழைத்துக் கொள்கின்றார்களே தவிர, ஒருபொழுதும் சூத்திரராகக் கூறிக் கொள்வதில்லை. வெள்ளாளர்களோ தெளிவாக சூத்திரர் என்றும், நாலம் சாதி என்றும் கூறிக் கொள்கின்றனர். இந்தியாவிலேயே வடநாட்டு பனியாக்களும் தமிழ்நாட்டு செட்டியார்களும் தான் வலுவான அடித்தளத்தைக் கொண்ட வணிக சாதிகளாகும். பனியாக்களைப் போலவே தமிழக செட்டிகளும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டவராவர். பொனிசிய வணிக அரச வம்சத்தவரே தமிழக வணிகராக பரிணமித்தனர் என்ற கருத்தும் ஏற்புடையதாகவே உள்ளது. பனியாவுக்கும் (பொனியா) வணிகருக்கும் (பணிகர்) பொனீசிய வணிக அரசுகளே மூலமாகலாம். தமிழக செட்டிகள் வேளாளரைவிட உயர்ந்த சாதியாகவே தங்களைக் கருதிக் கொள்கின்றனர்.

இவ்வாறு பிராமண (பார்பார்), வைஸ்ய (வணிகர்) சூத்திர (வேளாளர்) வருணங்கள் இந்தியாவின் பிற பகுதிகளைக் காட்டிலும் வலுவாக உள்ள தமிழகத்தில் இரண்டாம் வருணமாகிய அரச வருணமும் தனித்த சாதியாகவே பரிணமித்திருக்க வேண்டும். வருணம் என்ற வடமொழி சொல், நிறத்தை குறிப்பதாக உள்ளதேயன்றி, பகுப்பை சுட்டவில்லை. ஆனால் பழந்தமிழ் சொல்லான ‘பால்’ பகுப்பை சுட்டுவதாக உள்ளதும் இங்கு ஆழ்ந்து சிந்திக்க வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், சங்ககாலம் முதல், நாயக்கர் ஆட்சிகாலம் வரை தமிழ்ச் சமூகத்தில் நான்கு வருணத்திற்கான சாதிகளும் இருந்தன என்பதே உண்மை. இன்று யார் அரச சாதி என்ள கேள்வியை தனியான ஆராய வேண்டுமேயன்றி, அதன் இருத்தலையும், நான்கு வருண பகுப்பு முறை தமிழ் சமூகத்தில் நிலவியிருந்தது என்பதையும் மறுப்பது விடையாகாது.

(9/ஆகஸ்டு/2006-ம் தேதி சேலம் நகரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் படிக்கப்பட்ட கட்டுரை.)

brahaspathy@gmail.com

Series Navigation

பிரகஸ்பதி

பிரகஸ்பதி

நான்கு வருணக் கோட்பாடு, தமிழகம் ஒரு சிறப்புப் பார்வை – பகுதி 1

This entry is part [part not set] of 36 in the series 20060811_Issue

பிரகஸ்பதி


தென்னிந்தியாவைப் பற்றிய சமூக ஆய்வுகளில் சுவாரசியமான சில விவாதப் பொருட்களில், தமிழகத்தின் வருணப் பாகுபாடு குறித்த விவாதமும் முக்கியமான ஒன்றாகும். தற்காலத் தமிழ்ச் சமூகத்தில் பிராமணர், பிராமணர் அல்லாதார் என்று இரு பிரிவுகளே காணக்கிடைக்கின்றன. வட இந்தியாவில் இன்று வரை பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு வருணங்கள் சமூகத்தில் உள்ளன. இன்றைய தமிழகத்திலோ, பிராமணர் அல்லாத எல்லோரையும் சூத்திரர் எனக் கருதுவதால் இங்கு பிராமணர், சூத்திரர் என இரண்டு வருணப் பாகுபாடே உள்ளதாகக் கருத வேண்டியுள்ளது. வட இந்திய வராலாற்றாசிரியரான திருமதி சுவீரா ஜெயாஸ்வால் எழுதிய Caste (சாதி) என்ற நூலில், தமிழகத்தின் இரு வருணக் கோட்பாட்டிற்கு ஆதரவாகப் புதிய விளக்கத்தையே அளித்துள்ளார்.

இது குறித்துச் சமூக ஆய்வாளர்களிடையே இருவேறு கருத்துக்கள், காணப்படுகின்றன. பண்டைக் காலந்தொட்டே தமிழ்ச் சமூகத்தில், வட இந்திய சமூகத்தில் காணப்படுவது போன்ற நான்கு வருண பாகுபாடு வழக்கில் இல்லை என்று ஒரு சாரர் கருதுகின்றனர். இவர்களை இருவருணக் கோட்பாட்டாளர்கள் என நாம் அழைக்கலாம். இவர்களின் கருத்துப்படி நான்கு வருணக் கோட்பாடென்பது தமிழ்ச் சமூகத்திற்கு உரியது அல்ல. இது ஆரியப் பார்ப்பனரான தொல்காப்பியனால் வட இந்திய நடைமுறையைப் பின்பற்றி தமிழ்சமூகத்தின் மீது ஏற்றிக் கூறப்பட்டுள்ளது, அல்லது தொல்காப்பியம் மரபியலில் கூறப்பட்டுள்ள செய்திகள் இடைச்செருகல்களாகும். தமிழகத்தில் பல ஆய்வாளர்களும் இதே கருத்தையே கொண்டுள்ளனர். இவர்களின் கூற்றைப் பார்க்கும் பொழுது நான்கு வருணம் பற்றி தொல்காப்பியத்தில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது போலவும், பிற இலக்கியங்கள், கல்வெட்டுகள் போன்றவற்றில் இப்படியான குறிப்புகள் எதுவும் இல்லை என்றும் எண்ணத் தோன்றுகிறது. உண்மையில் காலந்தோறும் உள்ள இலக்கியங்கள், நிகண்டுகள், மற்றும் கல்வெட்டுகளிலும் நான்கு வருண முறை பற்றிய குறிப்புகள் தெளிவாகவே உள்ளன. எனினும் இரு வருணக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே தமிழ்ச் சமூகத்தை மதிப்பிடும் முறையே இன்று நிலவி வருகின்றது. தமிழ்ச்சமூக வரலாறு குறித்த புதிய தகவல்கள் மற்றும் புதிய விளங்கங்களின் அடிப்படையில் இப்பிரச்சனையை ஆய்வு செய்யும் முகமாகவே இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

கி.பி. 2-ஆம் நூற்றாண்டில் சுமதிபார்கவா என்பவரால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் மனுதர்ம சாஸ்திரம் கீழ் கண்டவாறு நான்கு வருணக் கடமைகளைப் பட்டியலிடுகின்றது.

அந்தணர் அறுதொழில்கள் : 1. வேதம் ஓதுதல், 2. வேதம் ஓதுவித்தல், 3. வேள்வி புரிதல், 4. வேள்வி செய்வித்தல், 5. ஈதல், 6. ஈதலை ஏற்றல்.

அரசனது தொழில்கள் : 1. பிரஜா பரிபாலனம் (குடிகாவல்), 2. ஈகை, 3. வேள்விகள் புரிவது, 4. வேதம் பாராயணம் செய்விப்பது, 5. விஷய சுகங்களில் மனத்தை அலையவிடாமல் உறுதியாக நிற்பது.

வைசியருக்கான தொழில்கள் : 1. ஆநிரைகாத்தல், 2. தானம் கொடுத்தல், 3. கடலாரம், மலையாரம், கனிப்பொருள், விளைபொருள், தானியங்கள் இவற்றை வியாபாரம் செய்தல், 4. வட்டிக்கு விடுதல், 5. பயிர்த் தொழில் செய்தல்.

சூத்திரர்களுக்கான தொழில்கள் : ஏவலரான இவர்கள் மேலே சொன்ன மூவர்க்கும் பொறாமையின்றிப் பணிபுரிதல் ஒன்றையே முதன்மையாகக் கொள்ளக் கடவரென்றும் ஈதல் முதலிய சத்கருமங்களும் அவர்களுக்கு உண்டென்றும் பணித்தார்.

மேலே கூறப்பட்ட நெறி முறைகள் தமிழ்ச் சமுதாய மரபுகளுக்குப் பொருந்துகின்றனவா எனக் கீழே ஆராயப்படுகின்றது.

கி.பி. 2 அல்லது 3-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும், தமிழ் மொழியின் முதல் இலக்கண நூலாகிய தொல்காப்பியம், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நான்கு வருணங்களுக்குரிய உரிமைகளையும், தொழில்களையும் கீழ்கண்டவாறு தெளிவாக இலக்கணப்படுத்தியுள்ளது.

அந்தணர்க்கு உரிய மரபுகள் :
நூலே, கரகம், முக்கோல், மனையே,
ஆயும் காலை, அந்தணர்க்கு உரிய.
(மரபியல் : 71)

பொருள் : (நூல்) பூணூல், கமண்டலம், முக்கோல், இருக்கை மணை, ஆகிய நான்கும் ஆயும் காலத்து அந்தணர்க்கு உரியவை.

அரசர்க்கு உரிய மரபுகள் :
படையும், கொடியும், குடையும், முரசும்
நடைநவில்புரவியும், களிறும், தேரும்,
தாரும், முடியும், நேர்வன பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க்கு உரிய.
(மரபியல் : 71)

அந்தணாளர்க்கு உரியவும் அரசர்க்கு
ஒன்றி வரூஉம் பொருளுமார் உளவே.
(மரபியல் : 73)

பொருள் : அந்தணர்க்கு உரியன என்று முன்னே கூறப்பட்டவற்றுள் அரசர்க்கும் உரியனவாக ஒன்றிவரும் பொருளும் உண்டு.

அரசர்க்கு உரியன சில அந்தணர்க்கு இல்லை :
பரிசில், பாடாண் திணைத் துறைத் கிழமைப் பெயர்
நெடுந்தகை, செம்மல் என்று இவை பிறவும்
பொருந்தச் சொல்லுதல் அவர்க்கு உரித்தன்றே
(மரபியல் : 74)

வைசிகன் பெறுவன :
வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை
மெய்தெரி வகையின் எண் வகை உணவின்
செய்தியும் வரையார் அப்பாலான.
(மரபியல் : 78)

பொருள் : எண்வகை உணவாவன : நெல், காணம், வரகு, இறுங்கு, தினை, சாமை, புல், கோதும்பை இவற்றை உண்டாக்குகின்ற உழவுத் தொழிலும் வைசியர்க்குரியதாகும்.

வேளாண் மாந்தர் இயல்பு :
வேளாண் மாந்தர்க்கு உழுதூண் அல்லது
இல் என மொழிப – பிறவகை நிகழ்ச்சி
(மரபியல் : 81)

பொருள் : வேளாளருக்கு உழுது உண்ணும் வாழ்க்கை அல்லாது வேறு வகையான வாழ்க்கை இல்லை என்று கூறுவர் அறிஞர்.

வேந்துவிடு தொழிலின் படையும் கண்ணியும்
வாய்த்தனர் என்ப – அவர் பெரும் பொருளே
(மரபியல் : 82)

பொருள் : வேந்தரால் ஏவப்பட்ட தொழிலால் படைக்கலம் கண்ணி (தலைமாலை) ஆகியவை வேளாளர்கள் பெறும் பொருள்கள்.

மேலே கூறப்பட்டுள்ள தொல்காப்பிய நூற்பாக்களால், சங்க காலத்தில் நான்கு வருணக் கோட்பாடு மனுநீதி அடிப்படையில் தெளிவாக வரையறுக்கப்பட்டு விட்டது என்பது நிரூபணமாகின்றது. சங்க இலக்கியங்கள் முழுவதிலும் எந்த இடத்திலும் மேலே கூறப்பட்ட இலக்கண முறைக்கு மாறான மரபுகளைக் காண முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் பாடிய ஒரு புறநானூற்றுப்பாடல் தமிழ்ச் சமுதாயத்தில் அன்று வழக்கிலிருந்த நான்கு வருண பாகுபாட்டைக் குறிப்பிடுகின்றது.

வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழப்பாலொருவன் கற்பின்
மேற்பா லொருவனு மவன்கட் படுமே
(மரபியல் : 183)

சங்க காலத்தைத் தொடர்ந்து களப்பிரர் காலத்தில் (கி.பி. 250 – கி.பி. 590) இயற்றப்பட்டதாகக் கருதப்படும் மணிமேகலையும் நான்கு வருணத்தைக் கூறுகின்றது.

அருந்தவர்க் காயினும் அரசர்க்காயினும்
ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க்காயினும்
நால்வேறு வருணப் பால்வேறு காட்டி.
(மணிமேகலை : 6 சக்கரவாளக் கோட்டம் உரைத்த காதை : 7)

கி.பி. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலப்பதிகாரமும் நால்வகை வருணங்களைக் குறிப்பிடுகின்றது.

கனக பாதமுங் களங்கமும் வந்துவும்
நால்வகை வருணத்து நலங்கே மொழியவும்
(சிலம்பு-14-180-82)

பால்வேறு தெரிந்த நால்வேறு தெரு (சிலம்பு-22-110)

பால்வேறு தெரிந்த நால்வேறு வீதி (சிலம்பு ஊர் காண்காதை-212)

இடம் கெட ஈண்டிய நால்வகை வருணத்து
அடங்காக் கம்பலை உடங்கு இயைந்து ஒலிப்ப
(சிலம்பு கடலாடு காதை. 6-8-164-165)

புறப்பொருள் வெண்பா மாலை வேளாண் வாகைப் பற்றிக் கூறுவதாவது :

மேல் மூவரும் மனம் புகல
வாய்மையான் வழியழுகின்று
(வாகைத்திணை -10-165)

இங்கு மேல் மூவரும், வேளாளரும் சேர்த்து நான்கு வருணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் வேளாளராகிய சேக்கிழாரால் எழுதப்பட்ட பெரியபுராணம் பல இடங்களில் வேளாளரை நாலாவது குலம் எனக் குறிப்பிடுகின்றது.

குறியின் நான்கு குலத்தினராயினும்
நெறியின் அக்குலம் நீங்கினராயினும்
(குலச்சிறையார்.4)

நாலாங் குலத்திற் பெருகு நலம் உடையார் வாழும் ஞாயிற்றின்
மேலாங் கொள்கை வேளாண்மை மிக்க திருஞாயிற்றுக் கிழார்.
(29. ஏயர்கோன் – கலிக்காமநாயனார்)

வேத நெறியின் முறை பிறழாமிக்க ஒழுக்கத் தலைநின்ற
சாதி நான்கு நிலை தழைக்குந் தன்மைத் தாகித்தடமதில் சூழ்
(37. சுழற்றியார்.4)

ஓங்கிய நாற்குலத் தொஏவாப் புணர்வில் தம்மில்
உயர்தனவும் இழிந்தனவும் ஆன சாதி
தாங்குழுமிப் பிறந்த குலபேதம் எல்லாம்
(19. திருக்குறிப்புத் தொண்டர் நாயனார். செ.103)

கி.பி. 9-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட திவாகரம் நிகண்டு, நான்கு வருணத்தாருக்குரிய பெயர்களையும், அவர்களுடைய தொழில்களையும் கீழ்க்கண்டவாறு கூறுகின்றது.

பார்ப்பார் பெயர் :

அய்யர், வேதியர், இருபிறப்பாளர்,
மெய்யர், மிக்கவர், இறையோர், பூசரர்,
அந்தணர், நூலோர், அறுதொழிலாளர்,
செந்தீ வளர்ப்போர், உயர்ந்தோர், ஆய்ந்தோர்,
ஆதி வருணர், வேத பாரகர்,
வேள்வியாளர், விப்பிரர், தொழுகுலத்தோர்
முப்புரி நூலோர், முனிவர், என்று இவை
தப்பு இல் பார்ப்பார் தம் பெயர் ஆகும்.
(திவா : 167)

அந்தணர் அறு தொழில் :

ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல்,
ஈதல், ஏற்றல் என்று இவை ஆறும்
ஆதி காலத்து அந்தணர் அறு தொழில்.
(திவா : 2365)

அரசர் பெயர் :

புரவலன், கொற்றவன், பெருமாள், காவலன்,
அரசன், ஏந்தல், கோவே, குரிசில்,
தலைவன், மன்னவன், வேந்தன், முதல்வன்,
நிருபன், பூபாலன், நரபதி, பார்த்திபன்,
இறைவன், அண்ணல், எனப்பதி னெட்டும்
அரசர் தொல் பெயர் ஆகும் என்ப.
(திவா : 178)

அரசர் அறு தொழில் :

அரசர் அறுவகைச் செய்தொழில் ஓதல்,
விசையம், வேட்டல், ஈதல், பார்புரத்தல்,
(கரை இல்) படைக்கலம் கற்றல் ஆகும்
(திவா : 2366)

செட்டிகள் பெயர் :

இப்பர், பரதர், வயிச்சியர், கவிப்பர்,
எட்டியர், இளங்கோக்கள், ஏர்த்தொழிலர், பசுக்காவலர், (ஒப்பு இல்) நாய்க்கர்,
வினைஞர், வணிகர் என்று (அத்தகு) சிலேட்டர்,
செட்டிகள் பெயரே.

வணிகர் அறு தொழில் :

வணிகர் அறுதொழில் ஓதல், வேட்டல்,
ஈதல், உழவு, பசுக்காவல், வணிகம்
(திவா : 2367)

வேளாளர் பெயர் :

வினைஞர், சூத்திரர், பின்னவர், சதுர்த்தர்,
வளமையர், வேளாளர், மண்மகள் புதல்வர்,
வார்த்தைத் தொழிலோர், (வண்) களமர், உழவர்,
(சீர்த்த) ஏரின் வாழ்நர், காராளர்.

வேளாளர் அறுதொழில் :

வேளாளர் அறு தொழில் உழவு, பசுக்காவல்,
(தெள்ளிதின்) வாணிகம், குயிலுவம், காருகவினை, (ஒள்ளிய)
இருபிறப்பாளர்க்கு ஏவல் செயல்.

திவாகரத்தில் கூறப்பட்டுள்ள நான்கு வருணத்தாருக்குரிய தொழில்கள் மனுநீதியிலிருந்து சிறிது மாறுபடுகின்றது. வைசியருக்குரிய பசுக்காவல், வாணிகம் முதலியன வேளாளருக்கும் கூறப்பட்டுள்ளது. களப்பிரர் காலச்சமூக மாற்றத்திற்குப் பின் வேளாளரில் ஒரு பிரிவினர் இத்தொழிலுக்குரியோராகியுள்ளனர்.

கி.பி. 10ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட பிங்கலத்தை என்னும் பிங்கல நிகண்டில் காணப்படும் நான்கு வருணத்தாரைப் பற்றிய குறிப்புகளைக் கீழே பார்ப்போம்.

பார்ப்பார் :

அறவோர் பூசுர ரறு தொழி லாள
ரிருபிறப் பாள ரெரிவளர்ப் போரே
யாதி வருணர் வேதிய ரந்தணர்
வேள்வியாளர் மறையவர் விப்பிரர்
மேற்குலத் தோர்முற் குலத்தோ ரையர்
வேத பாரகர் முப்புரி நூலோர்
தொழுகுலர் பார்ப்பார் தொல் பெய ராகும்.
(பிங் : 726)

அறவோர், பூசுரர், அறுதொழிலாளர், இருபிறப்பாளர், எரிவளர்ப்போர், ஆதிவருணர், வேதியர், அந்தணர், வேள்வியாளர், மறையவர், விப்பிரர், மேற்குலத்தோர், முற்குலத்தோர், ஐயர், வேதபாரகர், முப்புரிநூலோர், தொழுகுலர்.

அந்தணர் அறுதொழில் :

ஓத லோதுவித்தல் வேட்டல் வேட்பித்த
லீத லேற்ற லென்றிவை யாறு
மாதிக் காலத் தந்தணர் தொழிலே.
(பிங் : 729)

அந்தணர் மாலை : கமலம்
அந்தணர் கொடி : வேதம்
மாலை கமல மறை கொடியாகும் (பிங் : 730)

அந்தணர்க்குரிய பொருள் :

தருப்பை, முஞ்சிப்
புல், சமித்து தருப்பையு முஞ்சியுஞ் சமித்து
மவர்க்கே
(பிங் : 731)

அரசர் :

பார்த்தி பரிறைவர் காவலர் பதிகள்
கோக்கள் வேந்தர் கொற்றவர் புரவலர்
பொருநர் மன்னர் பூபாலர் நிருபர்
முதல்வ ரேந்தல் குரிசின் மகிபாலர்
தலைவ ரரசர் தம்பெய ராகும்.
(பிங் : 733)

(பார்த்திபர், இறைவர், காவலர், பதிகள், கோக்கள், வேந்தர், கொற்றவர், புரவலர், பொருநர், மன்னர், பூபாலர், நிருபர், முதல்வர், ஏந்தல், குரிசில், மகிபாலர், தலைவர்.)

எண்வகை மாலை :

வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி
நொச்சி யுழிஞை தும்பை வாகை யென்
றித்தொடை யெட்டு மரசர்க்காமே.
(பிங் : 734)

(வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை.)

அரசர்கள் படை : அறுவகைத் தானை
அரசர்கள் கொடி : சிங்கம்

படையறு வகைத்தானை கொடி சிங்கமாகும் (பிங் : 735)

அரசர் அறு தொழில் :

ஓதல், பொருதல், உலகுபுரத்தல், ஈதல்,
வேட்டல், படை பயிறல்.
ஓதல் பொருத லுலகு புரத்தல்
ஈதல் வேட்டல் படை பயிற லறு தொழில்.
(பிங் : 767)

வைசியர் பெயர் :

தாளாளரிப்பர் தருமக் கிழவர்
வேளா ரிளங் கோக்கள் வைசியர் பொதுப் பெயர்
(பிங் : 773)

(தாளாளர், இப்பர், தருமக்கிழவர், வேளார், இளங்கோக்கள்)

வைசியர் முத்தொழில் :

கோக்களாக் காத்தலு மாப்பொரு ளீட்டலு
மேர்த் தொழின் மூன்று வைசியர் தந் தொழிலே.
(பிங் : 774)

(கோக்களைக் காத்தல், பொருளீட்டல், ஏர்த்தொழில்)

தளவைசியர் :

நாய்கர், எட்டியர், வணிகர், பரதர்

நாய்க ரெட்டியர் வணிகர் பரதர்
தாமும் பிறவுந் தனவை சியர்க்கே
( பிங் : 776)

பூவைசியர் :

உழவர், மேழியர், காராளர், இளங்கோ, பூபாலர்

உழவர் மேழியர் காராள ரிளங்கோ
புகல் பூ பாலர்பூ வைசியர் பெயரே.
(பிங் : 777)

பூவைசியர் அறு தொழில் :

ஓதல், வேட்டல், உபகாரம், வாணிகம், பசுக்காவல், உழவுத் தொழில்.

ஓதல் வேட்ட லுபகார மன்றியும்
வாணிகம் பசுக்காவ லுழவுத் தொழி லெனப்
புகன்றவை யாறும் பூவைசியர் தொழிலே.
(பிங் : 778)

சூத்திரர் :

பின்னவர், சதுர்த்தர், பெருக்காளர், வளமையர், முத்தொழிலர், மண்மகள் புதல்வர், உழவர், ஏரின் வாழ்னர், காராளர், வினைஞர், மேழியர், வேளாளர்.

பின்னவர் சதுர்த்தர் பெருக்காளர், வளமையர்,
மன்னமுத் தொழிலர், மண்மகள் புதல்வர்,
உழவ, ரேரின் வாழ்னர், காராளர்,
வினைஞர், மேழியர், வேளாளரென்றிவை,
தொகுபெய ரெல்லாஞ் சூத்திரர் பெயரே.
(பிங் : 780)

வேளாளர் பத்துவகைத் தொழில் : ஆணைவழிநிற்றல், மாண்வினை தொடங்கல், கைக்கடனாற்றல், குற்றமனத்தின்மை, சுற்றம் போற்றல், நீங்காத முயற்சி, மன்னிறை தருதல், ஒற்றுமை கோடல், ஒழுக்கம், விருந்து புறந்தருதல்.

ஆணைவழி நிற்றல் மாண்வினை தொடங்கல்
கைக்கட னாற்றல் கரிலகத் தின்மை
யக்கல் போற்ற லோவா முயற்சி.
மன்னிறை தருத லொற்றுமை கோட
றிருந்திய வொழுக்கம் விருந்து புறந் தருதல்
வேளாண் மாந்தர் செய்கை டூரைந் தே.

கி.பி. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிங்கல நிகண்டு, மனு நீதியிலிருந்து விலகிச் சென்ற திவாகரத்தின் வரையறைகளை ஒழுங்கு படுத்தியுள்ளது. இந்த காலக்கட்டத்தில் சூத்திரராகிய வேளாளரில் உயர்குடியினர் பூவைசியர் என்ற தகுதியை அடைந்துவிடுகின்றனர். பூவையருக்குரிய தொழிலில் ஓதலும், வேட்டலும் இடம் பெற்று விடுகின்றன.

இக்கால கட்டத்திலிருந்துதான் பிராமணரும் அரச வருணத்தினரும் வகித்து வந்த அமைச்சர் பதவி பெருவாரியாக உயர்குடி வேளாளருக்குக் கிடைத்து வந்தது. கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அஏவையாரின் தனிப்பாடல் ஒன்று ஒருபடி மேலே சென்று வேளாளரே அமைச்சர் பதவிக்கு உகந்தவர் எனக் கூறுகின்றது.

நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெசைமராம்
கோலெனிலோ ஆங்கே குடிசாயும் – நாலாவான்
மந்திரியும் ஆவான் வழிக்குத் துணையாவான்
அந்த அரசே யரசு.

இப்பாடலின் பொருள்,

நூலெனிலோ கோல் சாயும் – பார்ப்பனர் மந்திரி ஆனால் நெளிவு சுழிவு இல்லாத ஆலோசனை வழங்குவர். எனவே அங்கு அரசனின் செங்கோல் சாயும்.

நுந்தமரேல் வெசைமராம் – உன்னுடைய அரச வர்ணத்தான் மந்திரியானால் ஓயாத போரினைத் தூண்டுபவனாக இருப்பான். எனவே நாட்டின் பொருளாதாரம் சீர் கெட்டு, அமைதி கெடும்.

கோலெனிலோ ஆங்கே குடிசாயும் – துலாக்கோல் பிடிக்கக் கூடிய வணிகன் (வைசிய வருணத்தவன்) மந்திரியானால், குடிகளிடமிருந்து அதிகவரி பெற்றுக் கஜானாவை நிரப்புவதிலேயே குறியாக இருப்பான். எனவே அங்குக் குடிசாயும்.

நாலாவான் மந்திரியும் ஆவான் வழிக்குத் துணையாவான் அந்த அரசே யரசு – நாலாம் வருணத்தானாகிய வெள்ளாளன் நல்ல மந்திரியாகவும், எல்லா வழிக்கும் நல்ல துணையாகவும் இருப்பான். அப்படிப்பட்ட வெள்ளாளனை மந்திரியாகப் பெற்ற அரசே சிறந்த அரசு.

இத்தனை மாற்றங்கள் ஏற்பட்ட பின்னரும் கி.பி. 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த நச்சினார்க் கினியரும் கி.பி. 14ம் நூற்றாண்டைச் சேர்ந்த இளம் பூரணரும் தொல்காப்பியத்தின் கீழ்க்கண்ட பாடலுக்கு உரை எழுதும் பொழுது தெளிவாக நான்கு வருணப் பாகுபாட்டை ஏற்று எழுதுகின்றனர்.

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே
(தொல் : பொருள் : கற்பியல் : 142)

நச்சினார்க்கினியர் உரை :

முற்காலத்து நான்கு வருணத்தாருக்கும் கரணம் ஒன்றாய் நிகழ்ந்தது என்பதாம். அ·து இரண்டாம் ஊழி தொடங்கி வேளாளருக்குத் தவிர்த்தது என்பதூஉம். தலைச் சங்கத்தாரும் முதனூலாசிரியர் கூறிய முறையே கரணம் ஒன்றாகச் செய்யுள் செய்தார் என்பதூஉம் கூறிய வாறாயிற்று … …….. . ……

இளம்பூரணர் உரை :

மேற்குலத்தாராகிய அந்தணர், அரசர், வணிகர் என்னும் மூன்று வருணத்தாருக்கும் புணர்த்த கரணம், கீழோ ராகிய வேளாண் மாந்தருக்கு ஆகிய காலமும் உண்டு என்றவாறு.

கி.பி. 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில் கூறுவதாவது:

நாற்பெரும் பண்ணும் சாதி நான்கும் பாற்படுதிறனும் பண்ணெனப்படுமே. இம்மரபுப்படி,

அந்தணருக்கு – வெண்பா
அரசருக்கு – ஆசிரியப்பா
வணிகருக்கு – கலிப்பா
வேளாளருக்கு – வஞ்சிப்பா
ஆகும்.

நச்சினார்க்கினியரும், இளம் பூரணரும், அடியார்க்கு நல்லாரும் நான்கு வருணப் பாகுபாட்டை இயல்பாகக் கூறுகின்றனர். எனவே தமிழ்ச் சமூகத்தில் 13, 14ம் நூற்றாண்டுகளிலும் நான்கு வருணப் பாகுபாடு தெளிவாக நிலவியது புலப்படுகின்றது.

இவ்வாறு நான்கு வருணத்தவர் யார் யார் என்றும் அவர்களுடைய இயல்புகள் பற்றியும் ஏராளமான இலக்கியக் குறிப்புகள் உள்ளன. தமிழ்ச் சமூகத்தில் இல்லை எனக் கருதப்படும் அரசர் மற்றும் வைஸ்ய வருணத்தாருக்கு உரியதாக இத்தனை விரிவான வரையறைகளை தமிழ் இலக்கண நூல்களும் நிகண்டுகளும் காலம்தோறும் கூறவேண்டிய தேவை என்ன ஏற்பட்டது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதன் பின்னரும் கி.பி. 16ஆம் நூற்றாண்டு வரை இயற்றப்பட்ட நிகண்டுகளான உரிச் சொல் நிகண்டு (கி.பி. 14ம் நூற்றாண்டு), கயாதரம் (கி.பி. 15ம் நூற்றாண்டு), பாரதி தீபம் (கி.பி. 15ம் நூற்றாண்டு), சூடாமணி நிகண்டு (கி.பி. 16ம் நூற்றாண்டு), அகராதி நிகண்டு (கி.பி. 1594) ஆகியவைகளும் ஏறக்குறைய இதே மாதிரியான சமூகச் சித்திரத்தையே கொடுக்கின்றன.

கி.பி. 1700 ல் இயற்றப்பட்ட வட மலை நிகண்டிலும் (பல் பொருள் சூடாமணி), கி.பி. 1732ல் வீரமாமுனிவரால் இயற்றப்பட்ட சதுரகராதியிலும் நான்கு வருணச் சமூகச் சித்திரத்தில் பெரிய மாற்றம் தெரிகின்றது.

வடமலை நிகண்டின் சமூகச் சித்திரம் :

அந்தணர் : முனிவர், பார்ப்பார்
அரசன் : பிரகஸ்பதி, மன்னன்
வேளாளர் : தனவைசியர், தியாகி, பூவைசியர்.

சதுரகராதி காட்டும் சமூகச் சித்திரம் :

அந்தணர் : பார்ப்பார், முனிவர்
அரசன் : இராசா, எப்பொருட்கு மிறைவன், வியாழன்
வேளாளர் : ஈகையாளர், பூவைசியர்

இவ்விரு நிகண்டுகளிலும் வைசியருக்குப் பொருள் கூறப்படவில்லை. வடமலை நிகண்டில் பூவைசியருடன் சேர்த்து தனவைசியரும் வேளாளரில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதாவது வைசிய வருணம், சூத்திரவருணமாகிய வேளாளரில் சேர்க்கப்பட்டு விட்டது.

அரசருக்குரிய பெயரில் மன்னன் என்ற பட்டம் மட்டுமே கூறப்பட்டுள்ளது. மேலும் அரசர்க்குரிய தொழில்களும் கூறப்படவில்லை. நிகண்டுகளில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள், அன்றைய கால கட்டத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைக் குறிப்பதாகவே உள்ளன. இக்கால கட்டத்தில் பழைய அரச சாதியினரில் பாண்டியர் மட்டுமே தென்பாண்டி நாட்டில் திருநெல்வேலி, தென்காசி, கரிவலம் வந்தநல்லூர், வள்ளியூர் போன்ற இடங்களில் குறுநில மன்னர்கள் போல் ஆட்சி செய்து வந்தனர். மதுரையை ஆண்ட நாயக்கர்கள் தமிழ்நாட்டின் பெரும் பகுதியை 72 பாளையங்களாகப் பிரித்து ஆண்டு வந்தனர். மதுரை நாயக்கர்கள் விஜய நகர மன்னர்களின் அகம்படிகளாக இருந்தவர்கள். 72 பாளையக்காரர்களில் ஒருவர் கூடப் பழைய அரச சாதியைச் (வம்சங்களை) சேர்ந்தவர்கள் அல்ல. அதாவது, இக்காலக்கட்டத்தில் இருபிறப்பாளர் அல்லாத சாதியினரே தமிழகத்தின் மிகப் பெரும்பான்மையான நிலப்பகுதிகளை ஆண்டு வந்தனர். எனவேதான் இக்காலக்கட்டத்தைச் சேர்ந்த நிகண்டுகளால் அரசர்க்குரிய பழைய பட்டங்களையும், தொழில்களையும் கூற முடியவில்லை. மேலும் இந்நிகண்டுகளில் அரசர்க்குரிய தொழில்கள் வரையறுக்கப்படாததால், இவைகள் கூறும் அரசர் என்ற பதம் இரண்டாம் வருணத்தைக் குறிப்பதாகவும் கொள்ளமுடியவில்லை. இச்சூழலில்தான் பிராமணர் தவிர பிற வருணத்தவர் அனைவரையும் ஒரே வருணமாக, சூத்திர வருணமாகக் கருதும் நிலை உருவாகி விட்டது. வரலாற்றில் அன்று ஏற்பட்ட மயக்கம்தான் இன்றுவரை தொடர்கின்றது.

(தொடரும்)

brahaspathy@gmail.com

Series Navigation

பிரகஸ்பதி

பிரகஸ்பதி