பாகிஸ்தானின் அவமானச்சின்னம் – 1971

This entry is part [part not set] of 31 in the series 20060728_Issue

செல்வன்



“இனிமேல் வரும் ஒவ்வொரு பாகிஸ்தானிய அரசும் அதற்கு முந்தைய அரசை விட மோசமானதாகவே இருக்கும்” என்று தனது மறைவுக்கு சில மாதங்களுக்கு முன்பு கணித்தார் ஜின்னா.அவரது வாக்கை மெய்யாக்க பாகிஸ்தானிய அரசுகள் தவறவே இல்லை.பாகிஸ்தானின் புகழ்பெற்ற எழுத்தாளரான கவ்சாஜி சொல்வதுபோல் “ஜின்னா அந்த வரிகளை மிக உறுதியுடனும்,எதிர்காலம் பற்றிய சிறந்த ஞானத்துடனும் சொன்னார்”
காஷ்மீர் குறித்த இரு அரசுகளின் நிலைப்பாட்டை,போர்த்தந்திரங்களை அலசி ஆராய்ந்தால் பாகிஸ்தானின் ராஜதந்திரங்களை இந்திய அரசு எதிர்கொண்டு முறியடித்த கதைகள் தெரியவரும்.இந்தியாவில் மத்திய அரசுகள் மாறி,மாறி வந்தபோதும் காஷ்மீர் குறித்த அவற்றின் கொள்கைகள் மாறுவதே கிடையாது.தமிழக அரசியலை பிடித்திருக்கும் சாபக்கேடான அரசியல் விரோதம் மத்திய அரசியலில் இல்லை என்பது நாம் மகிழ்ச்சி அடைய வேண்டிய விஷயம்.

காஷ்மீரை யுத்தம் மூலம் அடையவே முடியாது என்பது பாகிஸ்தானுக்கு 1965,1971 யுத்தங்கள் முடிந்தபின் தான் தெரியவந்தது என்று சொன்னால் அதிசயமாக இருக்கும்.ஆனால் அதுவரை பாகிஸ்தானிய அரசு அப்படி ஒரு நம்பிக்கையை தான் தன் மக்களுக்கு ஊட்டிக்கொண்டிருந்தது.”1 பாகிஸ்தானிய சிப்பாய் 10 இந்திய சிப்பாய்களுக்கு சமம்” என்று பெருமை பேசி இந்தியாவின் ராணுவ வலிமையை குறைத்து மதிப்பிடும் செயலை பாகிஸ்தான் அரசு செய்தது.மக்களுக்கு தன்னம்பிக்கை ஊட்ட சொல்லப்பட்ட அந்த வாசகத்தை அரசும் ராணுவமும் நம்பியதுதான் பரிதாபம்.1965ல் முதல் ஆப்பை வாங்கிய பாகிஸ்தான் ராணுவம் அதன்பின் அம்மாதிரி சொல்லுவதை குறைத்துக்கொண்டது.

1971ல் நடந்த யுத்தம் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடத்திய முக்கிய காய்நகர்த்தல்.இந்திரா காந்தி அப்போது காட்டிய ராஜதந்திரமும்,விவேகமும் பிரமிப்பை ஊட்டுபவை.பாகிஸ்தான் மிக பலவீனமாக இருந்த நேரத்தில்,பாகிஸ்தான் ராணுவத்தின் பெரும்பகுதி பங்களாதேஷில் இருந்த நேரத்தில் போரை துவக்கி வெறும் பதினாறு நாளில் பாகிஸ்தான் ராணுவத்தை சரணடைய செய்தார்.பாகிஸ்தான் தனது பாதி நிலப்பரப்பை அன்று இழந்தது.

நிலப்பரப்பு போனது என்பதை விட பல சோகங்கள் பாகிஸ்தானுக்கு நிகழ்ந்தன.சீனா உதவிக்கு வரும்,அமெரிக்கா உதவிக்கு வரும் என பாகிஸ்தான் தீவிரமாக நம்பிக்கொண்டிருந்தது.ஆனால் அமெரிக்காவோ சீனாவோ இந்தியாவை தாக்கினால் சோவியத் யூனியன் இந்தியாவின் உதவிக்கு வரும் என்ற உறுதியை இந்திரா பெற்றிருந்தார்.அதனால் அமெரிக்காவின் 7வது கடற்படை பாகிஸ்தானுக்கு உதவிக்கு வரும் என்ற பகல்கனவு தகர்ந்து போனது.

அப்போது எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை எல்லையாக ஏற்க வாயளவில் ஒரு ஒப்பந்தம் இந்திரா,பூட்டோவால் போடப்பட்டு பூட்டோ கெஞ்சியதால் கைவிடப்பட்டது.அதை ஒப்பந்தமாக போடாதது இந்தியா செய்த ஒரு ராஜதந்திர தவறு என்பதை குறிப்பிட்டே ஆகவேண்டும்.வெற்றிக்களிப்பில் இந்திராகாந்தி அந்த தவற்றை செய்தார்.

1971 முடிந்தபின் பாகிஸ்தானில் நிலவிய சோகத்துக்கு எல்லையே இல்லை.அது சாதாரண தோல்வி அல்ல.கம்பர் சொல்லுவதுபோல்

வாரணம் பொருத மார்பும், வரையினை எடுத்த தோளும்,

நாரத முனிவற்கு ஏற்ப நயம் பட உரைத்த நாவும்,

தார் அணி மவுலி பத்தும், சங்கரன் கொடுத்த வாளும்,

வீரமும், களத்தே போட்டு, வெறுங் கையே மீண்டு போனான்

என்பதுபோல் புகழ்,மானம்,வீரம் அனைத்தையும் பங்களாதேஷில் தொலைத்துவிட்டு போர்க்கைதிகளாய் 90,000 படைவீரர் இந்திய சிறையிலிருக்க வளையல் அணிந்த ஒரு பெண்ணிடம் தலைகுனிந்து ஒப்பந்தம் போட்டு கெஞ்சி கூத்தாடி தன் படைவீரரை காப்பாற்றி அழைத்துக்கொண்டு போன அந்த கேவலத்தை பாகிஸ்தானிய அரசால்,அதன் ராணுவத்தால்,அதன் உளவு அமைப்புக்களால் இன்றுவரை மறக்க முடியவில்லை.

இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு,தன் ராணுவம் இந்தியாவுக்கு நிகரில்லை, தான் சர்வதேச அரசியலில் தனிஆள் என்ற நிதர்சனம் பாகிஸ்தானை வாட்டியது.

இந்தியாவுக்கு அடிகொடுக்க வேண்டும்,பங்களாதேஷில் தனக்கு நடந்ததை தான் இந்தியாவுக்கு காஷ்மீரில் செய்ய வேண்டும் என்ற வெறி பாகிஸ்தானிய ராணுவத்திடமும்,உளவு அமைப்புக்களிடமும் அதன்பின் புகுந்தது.

பாகிஸ்தானின் தேசிய அவமானச்சின்னம் – 1971

1971 பாகிஸ்தானின் தேசிய அவமானச்சின்னம் என பாகிஸ்தானிய பத்திரிக்கையான பாக்டுடே தெரிவிக்கிறது.அந்த போரில் தோற்றதற்காக இப்படி சொல்லவில்லை.வங்கதேசத்தவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக பாகிஸ்தானிய ராணுவம் கட்டவிழ்த்து விட்ட இனப்படுகொலை காரணமாகத்தான் அப்படி பாக்டுடே குறிப்பிடுகிறது.

போரில் வெல்வதும்,தோற்பதும் சகஜம்.ஆனால் லட்சக்கணக்கான அப்பவிகளை இன அழிப்பு செய்யும் கேவலம் வன்மையாக கண்டிக்கப்படக்கூடியது.வங்கதேசத்தில் 1971ல் பாகிஸ்தானிய ராணுவம் நடத்திய அட்டூழியங்களை தலைகுனிவுடனும்,வெட்கத்துடனும் பாக்டுடே பின்வருமாறு தெரிவிக்கிறது.

“267 நாட்கள் பாகிஸ்தானிய ராணுவம் பங்களாதேஷில் வெறியாட்டம் ஆடியது.டாக்காவில் மட்டும் 100,000 பங்களாதேஷிகள் கொல்லப்பட்டனர்.குல்னா மாவட்டத்தில் 150,000 பேரும்,ஜெசோரில் 75,000 பேரும்,கோமிலாவில் 95,000 பேரும் சிட்டகாங்கில் லட்சம் பேரும் கொல்லப்பட்டனர்.மொத்தமாக 18 மாவட்டங்களில் 1,247,000( 12.50 லட்சம்) பேர் கொல்லப்பட்டனர்.இது குறைந்த பட்ச கணக்குதான்.உண்மை கணக்கு இதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும்.”

பாக்டுடே இந்த இன அழிப்பை பற்றி மேலும் கூறுவதாவது…

“வங்கதேசத்தில் வாழ்ந்த 25 பேரில் ஒருவர் என்ற விகிதத்தில் இந்த இன அழிப்பு நடந்தது.ஒப்பிட்டால் நாஜி தளபதி ரோமல் 300,000 பேரை மட்டுமே கொன்றான்.ஸ்டாலின்,மாவோ ஆகிய கொலைகார அரசுகள் கொன்று குவித்தவர்களைவிட அதிக படுகொலைகள் செய்த அரசாக -யாகியாகான் அரசு விளங்கியது..” என கண்ணீர் வடிக்கிறது பாக்டுடே.

பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரத்துக்கு எல்லையே இல்லை.இதுவரை வரலாற்றில் நிகழ்ந்த கூட்ட கற்பழிப்புகளில் முதலிடம் வகிப்பது வங்கதேசத்தில் பாகிஸ்தானிய ராணுவம் நிகழ்த்திய கற்பழிப்புகள்தான் என ரேப் ஆப் நான்கிங் புத்தகத்தை எழுதிய ஐரிஸ் சாங் அதிர்ந்து போய் குறிப்பிடுகிறார்.ஜென்டெர்சைட் எனும் பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டிக்கும் இயக்கம் வங்கதேச கற்பழிப்புகளை பற்றி குறிப்பிடுவதாவது.

“..கூட்டம் கூட்டமாக சேர்ந்து வங்கதேச பெண்களை கற்பழிப்பது,அதன் பின் கொலை செய்வது பாகிஸ்தானிய ராணுவத்துக்கு சகஜமாகிவிட்டது.வங்கதேசத்தில் அவர்கள் நடத்திய கற்பழிப்புக்கள் ஜெர்மனி ரஷ்யாவில் உலகப்போரின்போது நடத்தியதற்கு சற்றும் குறைந்ததல்ல.கிட்டத்தட்ட 400,000 பெண்கள் கூட்டமாக கற்பழித்து கொலை செய்யப்பட்டனர்.(2 அல்லது 3 லட்சம் என்றும் தகவல்கள் உண்டு)..”

இந்த கற்பழிப்புகளுக்கு எந்த வயது வித்யாசமும்,மத பாகுபாடும் இல்லையாம்.8 வயது குழந்தை முதல் 75 வயது மூதாட்டி வரை இந்த வேட்டை நாய்களால் குதறப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர் என்கிறது ஜென்டெர்சைட்.பெண்களை கற்பழிப்பதோடு நிறுத்தாமல் அவர்களை ராணுவ முகாமுக்கு தூக்கிப்போய் வேண்டும்போது மீண்டும்,மீண்டும் பலாத்காரம் செய்வது நடந்தது என கண்ணீர் வடிக்கிறது ஜென்டெர்சைட் அமைப்பு.

இந்த கற்பழிப்புக்களை கண்டு கண்ணீர் வடித்த வங்கதேசத்தந்தை முஜிபுர் -ரஹ்மான் கற்பழிக்கப்பட்ட பெண்கள் தேசபக்த வீராங்கனைகள் என அறிவித்து அவர்களை சமூகத்தில் இணைக்க முயற்சித்தார்.ஆனால் பழமையில் ஊறிய வங்கதேச ஆண்கள் அப்பெண்களை ஏற்றுக்கொள்ள முன்வரவே இல்லை என்கிறது ஜென்டெர்சைட் அமைப்பு.

இது முழுக்க,முழுக்க பாகிஸ்தானிய சர்வாதிகாரி தூண்டுதலில் தான் நடந்தது என்கிறது ஜென்டெர்சைட்.”30 லட்சம் பேரை கொல்லுங்கள்” என நேரடியாக அவர் உத்தரவிட்டாராம்.

வரலாற்றசிரியரான ராபர்ட் பெயின் இந்த கொலைகளுக்கும்,இன அழிப்புக்கும் குற்றம் சாட்டுவது அப்போதைய பாகிஸ்தான அரசை நடத்திய அனைவரையுமே.ஜனாதிபதி -யாஹியாகான்,ஜெனெரல் டிக்காகான்,ஜெனெரல் பிர்சாடா,ஜெனெரல் உமர்கான் மற்றும் உளவுத்துறைத்தலைவர் அக்பர்கான் ஆகியோரே இதற்கு பொறுப்பு என்கிறார் ராபர்ட் பெயின்.

இந்தியா வங்கதேசத்துக்கு வாழ்வையும்,விடுதலையையும் மீட்டுத்தந்தது.ஆனால் இந்த படுகொலையை நிகழ்த்திய மிருகங்கள் எந்த தண்டனையையும் அனுபவிக்கவில்லை.ஜெனெரல் அபுதுல்லா நியாசி தன் 84வது வயதில் 2004ம் ஆண்டு தான் இறந்தான்.நியாசி ஒரு அவமானமாக பாகிஸ்தானில் கருதப்பட்டான்.காரணம் அவன் நடத்திய கொலைகள் அல்ல.இந்திய ஜெனெரல் ஜெகஜித்சிங் அரோராவிடம் சரணடைந்து அந்த போட்டோ பத்திரிக்கைகளில் வந்ததுதான் காரணம்.ஜெனெரல் அஷ்ரபும்கான் தற்போது நியூயார்க்கில் சவுக்கியமாக தொழில் செய்து வாழ்க்கை நடத்துகிறாராம்.

References:

http://dawn.com/weekly/cowas/cowas.htm

http://www.rediff.com/news/2001/oct/31pm.htm

http://www.paktoday.com/niazi.htm

http://www.gendercide.org/case_bangladesh.html

Series Navigation

செல்வன்

செல்வன்