சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 15. இலக்கியம்

This entry is part [part not set] of 35 in the series 20060922_Issue

குமரிமைந்தன்


மேற்சாதியினர் தமிழில் மூவகை இலக்கியங்களை விரும்பிப் போற்றுகின்றனர். சங்க இலக்கியம் போன்ற தேசியத் தன்மை கொண்ட இலக்கியங்கள், இராமாயணம் போன்ற தரகுத் தன்மை கொண்ட இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் ஆகியவை அவை. இவை அனைத்தும் எழுதப்பட்ட இலக்கியங்கள். இவற்றைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் பட்டிமன்றங்கள் நடத்துவதுமாக இருப்பார்கள் அவர்கள். அதே வேளையில் கீழ்ச்சாதியினர் வாய்மொழியாக எண்ணற்ற இலக்கிய வடிவங்களைக் காலங்காலமாகப் பேணி வருகின்றனர். இவ்வாய்மொழி இலக்கியங்கள் அனைத்தையும் திரட்ட முடியுமாயின் அவற்றின் அளவு மேற்சாதியினரின் இலக்கியங்களைப் போல் பல நூறு மடங்குகள் தேறும்.

மேலே கூறிய இலக்கியங்கள் தமிழ் இலக்கியங்கள் மட்டுமே. ஆனால் தமிழகத்தில் பிறந்த, தமிழ்நாடு சார்ந்த இலக்கியங்களை விட மேற்சாதியினர் சங்கத இலக்கியங்களையே விரும்பிக் கற்பர் அல்லது கற்றது போல் காட்டிக்கொள்வர். அவற்றையே போற்றிப் புகழ்வர். பகவத் கீதையில் இல்லாதது எதுவும் இல்லை என்பர். இயன்ற போதெல்லாம் அதிலிருந்து மேற்கோள் காட்டுவர். அடுத்துத் தமிழ் இலக்கியம் என்று வந்தால் கம்பராமாயணமே தமிழிலுள்ள மிகச் சிறந்த இலக்கியம் என்று அதற்கு இல்லாத பெருமையெல்லாம் சேர்ப்பர். கம்பனுக்கு அடுத்த புலவனாகப் பாரதியைப் போற்றுவர். அரசியல் கட்சி சார்பில் கம்பனையும் பாரதியையும் வானளாவப் புகழ்வதிலும் உலகமெலாம் அவர்கள் புகழைப் பரப்புவதிலும் பொதுமைக் கட்சியினரை மிஞ்சியவர் யாரும் கிடையாது. அதிலும் சீவானந்தம் போன்ற தலைவர்களுக்கு எல்லாம் இன்னும் கொஞ்சம் வாய்ப்புக் கிடைத்திருந்தால் பொதுமைக் குமுகம் பற்றிய தன் படிமத்தை மார்க்சு கம்பனைப் படித்தே உருவாக்கினார் என்று கூறியிருப்பார். நல்ல வேளை மார்க்சு பிழைத்தார். இதற்குக் காரணம் கம்பன் கங்கைக் கரையினனான இராமனைப் பாடினான் என்பதும் பாரதி தில்லியின் தலைமையைக் கொண்ட இந்திய விடுதலைப் போராட்டத்தைப் போற்றினான் என்பதுமே. அரசியல் விடுதலைப் போரில் இந்தியர் வெற்றி பெற்றுவிட்டனர் என்பதும் இனிமேல் விடுதலை பெற்ற இந்தியா சோவியத்தை விட்டு அகலக்கூடாது என்பதுமே அவர்களது அரசியல் நிலைப்பாடு.

கம்பன் மாலியக் காப்பியமான இராமாயணத்தைப் பாடினான். அவனுக்கு முன்பு வாழ்ந்த சிவனியக் குரவர்களோ இராமனின் எதிரியாகிய இராவணனுக்கு அருள் செய்தான் எனச் சிவனைப் போற்றுகின்றனர். இது சமயப் போட்டியாக வெளிப்பட்டாலும் இதில் தேசிய உணர்வுகளுக்கும் தரகு உணர்வுகளுக்கும் இடையிலுள்ள மோதல் வெளிப்படுகிறது.

இந்த நூற்றாண்டில் தமிழ்த் தேசிய உணர்வை ஊட்டிய மேற்சாதியினர் கழக இலக்கியங்களையும் ஐம்பெரும் காப்பியங்களையும், குறிப்பாகச் சிலப்பதிகாரத்தையும் திருக்குறளையும் சிவனிய இலக்கியங்களையும் பாரதிதாசன் எனப்படும் கனகசுப்புரத்தினத்தையும் போற்றினார். பகுத்தறிவாளர்கள் சிவனிய இலக்கியங்களுக்கு மதிப்பளிக்கவில்லை. சமய இலக்கியங்களைக் கொண்டிருப்பதால் தமிழைக் “காட்டு விலங்காண்டி மொழி” என்று கூறக்கூடப் பெரியார் தயங்கவில்லை. ஆனால் குன்றக்குடி அடிகளார் போன்ற சமயத் தலைவர்களைத் தன் மேடையிலேற்றுவதற்கும் அவர் தயங்கவில்லை. இவ்வாறு திரிபடைந்த ஒரு தேசிய உணர்வுக்கும் பகுத்தறிவுக்கும் இடையில் அவர் தடுமாறினார்.

மொழி பற்றிக் குறிப்பிடும் போது வட இந்தியா வெளி நாட்டாரின் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில் சங்கதத்தில் இலக்கியங்கள் உருவாயின என்று கூறப்பட்டது. அச்சூழ்நிலையில் அவ்விலக்கியங்களை உருவாக்கியோர், குறிப்பாகச் இராமாயணத்தை எழுதிய வான்மீகர் வெளி நாட்டாரை விடத் தென்னாட்டினரையே எதிரிகளாகக் கருதினார் என்று தெரிகிறது. புத்த சாதகக் கதைகளில் ஒன்றான தசரத சாதகம் என்பதில் இராமன் தன் தங்கையான சீதையைத் திருமணம் புரிவதற்கு முன்பே அவளுடன் காட்டுக்குச் சென்று திரும்பிவிட்டதாகக் கூறுவதுடன் அதில் இராவணனைப் பற்றியோ சீதை சிறைப்படுத்தப்பட்டது பற்றியோ குறிப்பேதுமில்லை. அதுமட்டுமல்ல இராமனின் தலைநகரம் இன்று சமய-அரசியல் போட்டிகளின் நிலைக்களனாக விளங்கும் அயோத்தியே அல்ல; வாரணாசி எனப்படும் காசி தான். ஆனால் வான்மீகமோ இந்தியாவின் தென்கோடி கடலுக்கு அப்பால் இருந்தவனான இராவணன் என்பவனைக் காட்டி அவனை இராமன் தோற்கடித்ததாகக் கூறுகிறது. அவனையும் அவன் சுற்றத்தாரையும் பெயரிலும் பண்பிலும் இழித்துக் கூறுகிறது. கடலையே அறியாத இராமாயண ஆசிரியர், ஆற்றைப் படகில் கடக்கும் இராமன் கடலைக் கற்களைப் போட்டு அதன் மீது நடந்து கடந்தான் என்கிறார். இவற்றிலிருந்து கங்கைக் கரைக்கும் காவிரி, கோதாவரி, கிருட்டினை, பொருனைக் கரைகளுக்கும் இருந்த பகைமை வெளிப்படுகிறது. இதன் வெளிப்பாடு அன்றிலிருந்து இன்று வரை இலக்கியத்திலும் மொழியிலும் பண்பாட்டிலும் அரசியலிலும் பொருளியலிலும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. கடல் வாணிகத்திலிருந்து தோன்றிய தென்னிந்தியப் பண்பாட்டுக்கும் வேளாண்மையிலிருந்து தோன்றிய வட இந்தியப் பண்பாட்டுக்கும் இடையிலான முரண்பாடு வேறெரல்லா முரண்பாடுகளையும் விழுங்கி நிற்கிறது.

எழுத்திலிருக்கும் இந்த இலக்கியங்களுக்குப் புறம்பான ஓர் இலக்கிய வகை நாட்டுப்புற மக்களின் எழுதப்படாத இலக்கியங்களாகும். பழமொழிகள், விடுகதைகள், சிறுகதைகள், குழந்தைக் கதைகள், புதிர்கள், ஏசல்கள், தாலாட்டுகள், ஒப்பாரிகள், வாழ்த்துகள், ஊசல்கள், அம்மானைகள், வள்ளைப் பாட்டுகள், கும்மிகள், கதைப்பாடல்கள் என்று எண்ணற்ற வகையினவாக இவ்விலக்கியங்கள் திகழ்கின்றன.
சங்கத மொழியில் பஞ்சதந்திரக் கதைகள் போன்ற கதைத் தொகுதிகளும் இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் காணப்படும் துணைக்கதைகளும் போன்று தமிழில் மக்கள் கதைகளின் தொகுப்பு அருகியே காணப்படுகிறது. தொகுத்தோர் பற்றி முன்பு குறிப்பிடப்பட்ட சூழ்நிலையே இதற்குக் காரணமாக இருக்க வேண்டும். வெள்ளையர் சிலர் அரும்பாடுபட்டுச் சேர்த்த இத்தகைய இலக்கியங்களில் பலவற்றைப் பின்னர் பதிப்பிக்கும் பொறுப்பேற்ற தமிழ் “அறிஞர்” சிலர் அழித்த கொடுமையும் இங்கு உண்டு. இன்று ஒருசில வெளியீடுகள் வந்திருந்தாலும் அவற்றிலும் வெளியிடுவோரின் “திருவிளையாடல்கள்” உண்டு. இத்தகைய நூற்களை வெளியிடும் போது நியூ செஞ்சுரி புத்தக நிலையம் போன்ற “முற்போக்கு”ப் பதிப்பாளர்கள் அவற்றில் தமது கருத்துக்குப் புறம்பானவற்றைக் கழித்துக்கொண்டே வெளியிடுகின்றனர்.

புலவர்களைப் போலவே உழைக்கும் மக்களும் தமக்கு ஏற்படும் அனைத்து வகை உணர்ச்சிகளையும் வெளியிட்டு இலக்கியங்களைப் படைக்க வல்லவர்கள். வெள்ளையராட்சியிலும் அதற்கு முன்னரும் பின்னரும் தம் மீது தொடுக்கப்பட்ட கொடுமைகளையும் கூடப் பாடல்களாக்கிப் பாடும் திறம் படைத்தவர்கள் அவர்கள். அவர்களுடைய பாடல்களிலிருந்து இறுத்தெடுக்கப்பட்டவையே இலக்கணங்களும் அவற்றுக்குட்பட்ட செய்யுள்கள் அனைத்தும். எனவே மரபுச் செய்யுள்களுக்கும் மக்கள் பாடல்களுக்கும் ஒரு தொடர்பு என்றும் உண்டு.

மரபுச் செய்யுள்கள் மேற்சாதியினரிடம் அல்லது பார்ப்பனியம் எனப்படும் வெள்ளாளக்கட்டு மேற்கொண்ட கீழ்ச்சாதியினரிடம் சிக்கும்போது இறுக்கம் பெற்று நின்று விடுகின்றன. மக்களைத் தட்டியெழுப்ப மக்களை நோக்கி அல்லது பலர் கூடிப்பாட எழுதப்படும்போது பாடல்கள் நெகிழ்ச்சி பெறுகின்றன. உணர்ச்சிக்கேற்ற இலக்கண வடிவத்தை இயல்பாகவே பெற்று மரபுச் செய்யுள்களின் தன்மையும் பெறுகின்றன. பாரதியார், கனகசுப்புரத்தினம் ஆகியோர் பாடல்கள் இத்தகையவே. இறுக்கம் பெற்ற மரபுப் பாடல்களுக்கு எதிராக முன் வைக்கப்பட்ட (புதுக் கவிதைகள்) மரபுக் கவிதைகளைப் போன்றே தனிப்பட்டவர்களால் அல்லது படித்துச் செருக்கேறியவர்களால் அப்படிப்பட்டவர்களுக்காகச் செய்யப்பட்டவையே. அப்பாடல் நூல்களைக் கையில் வைத்திருப்பதையே பெருமை என்று நம் நாட்டு “முற்போக்காளர்கள்” ஒரு காலத்தில் கருதினர். அவர்களுக்கு அத்தகைய உணர்வூட்டி ஆட்கொண்ட வைரமுத்துவும் காமராசனும் இன்று இருக்கும் இடங்களைப் பார்த்து இவர்கள் தலைகுனிந்து திரிகிறார்கள். அத்துடன் ஒரு முகாமையான செய்தியையும் தெரிந்துக் கொள்வோம். கழக காலத்துப் பாடல்களாக நமக்குக் கிடைத்திருப்பவற்றில் பெரும்பாலானவை இலக்கண அமைப்பில் இன்றைய “புது”ப் பாடல்களோடு ஏறக்குறைய ஒத்தவையே.

நம் நாட்டில் உண்மையான முற்போக்கு எழுத்தாளர்களுக்குப் பெரும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் அத்தகைய எழுத்தாளர்கள் இருந்தாலும் அவர்களை ஏற்றுக்கொள்ளும் திறனாய்வாளர்களும் பதிப்பாளர்களும் இல்லை. திராவிட எழுச்சிக் காலத்தில் அவ்வியக்கத்தில் தோன்றிய தில்லை வில்லாளன், வாணன், இராதாமணாளன் போன்றோரின் எழுத்துகளின் அளவு எழுதத்தக்க எழுத்தாளர்களைக் கூட இங்குள்ள பொதுமை இயக்கத்தால் பெற முடியவில்லை. பொன்னீலன் போன்றோர் சில நல்ல படைப்புகளைத் தந்திருந்தாலும் அவ்வியக்கத்தின் பார்ப்பனியப் போக்கால் அவர்களால் ஓரளவுக்கு மேல் நடப்பிய இலக்கியத்தை (Realist Literature) கொண்டு செல்ல முடியவில்லை. திரிபுற்ற பாலுணர்வுகளைக் கருப்பொருளாக்கி எழுதிய செயகாந்தனைப் பிடித்துக்கொண்டு ஒரு காலத்தில் அழுதார்கள். இப்போது திராவிட இயக்கத்துக்கு எதிராகவும் பார்ப்பனியத்துக்கு முட்டுக் கொடுக்கவும் தோன்றிய “எழுத்து” சி.சு.செல்லப்பாவைக் கட்டிக்கொண்டு அழுகின்றனர் இன்னொரு பிரிவினர். அவர்கள் தம் பாவலர் என்று பறைசாற்றிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தினால் இவர்களின் இயக்கத்தை விட உண்மையில் பயனடைந்தவர் ம.கோ.இராமச்சந்திரனே. இறுதியில் காலங்கடந்து போன இந்தியத் தேசியப் போராட்டத்தின் கலம்பகப் புலவர் பாரதியும் சாதியப் புலவன் கம்பனுமே இவர்களுக்குப் புகலிடம். இலக்கியங்களின் குமுகவியல் திறனாய்வு என்ற பெயரில் எழுதுவோர் யாரும் திராவிட இயக்கத்தால் உருவாக்கப்பட்ட இலக்கியங்களைத் தொடாமல் விட்டுச் செல்வதில் குறியாயிருக்கின்றனர். இது நம் நாட்டுப் பொதுமை இயக்கத்தின் காட்டிக் கொடுக்கும் தன்மையையும் திராவிட இயக்கத்தினர் தாம் முன்பு படைத்த இலக்கியங்களைக் கண்டே நடுக்குறும் அளவுக்கு இழிந்துவிட்டதையும் சுட்டுகிறது. இவ்வாறு எத்திசையிலும் வரண்டு கிடக்கும் இற்றைத் தமிழிலக்கிய உலகுக்கு ஆக்க முறையில் எந்த இலக்கியத்தையும் படைக்க இயலாத கூட்டங்கள் கலை இலக்கியத்தின் பெயரால் என்ன செய்கிறார்களென்று தெரியவில்லை.

இன்றுவரை மேலை உலக இலக்கிய வளர்ச்சியின் தாக்கத்தால் மட்டும் உருவாகியிருக்கும் நம் நாட்டு இன்றைய இலக்கியத்துக்குப் புத்துயிர் ஊட்டுவது எவ்வாறு? இங்கும் நம் நாட்டுப்புற மக்களின் இலக்கியங்கள் தாம் கைகொடுக்க முடியும். இதற்காக நாட்டுப்புற இலக்கியங்களைத் திரட்டி அவற்றின் பல்வேறு வடிவங்களையும் உத்திகளையும் பிரித்துத் தொகுத்து அவற்றிலிருந்த புதிய இலக்கியங்களை, இலக்கிய வடிவங்களை உத்திகளை உருவாக்க வேண்டும். வடிவமும் உத்தியும் இருந்தால் மட்டும் போதாது. இலக்கியக் கரு எங்கிருந்து உருவாகும்? தேங்கி, முடங்கிப் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் இன்றைய குமுகத்திலிருந்து எழுச்சியான புரட்சிகர இலக்கியங்கள் எப்படி எழ முடியும்?

இன்று கீழ்த்தர(ஆபாச) இலக்கியங்களே உருவாகின்றன என்று கூறி அதனை எதிர்த்துக் குரல் எழுப்புவோர் ஏராளம். ஆபாச இலக்கியங்களுக்கு மாற்றாக இவர்கள் புரட்சிகர இலக்கியங்களைப் படைக்கிறார்களா என்றால் இல்லை. இலக்கியம் என்பது குமுகத்தின் எதிரொளிப்பாகத்தான் இருக்க முடியும். இன்றைக் குமுகத்தில் நிலவும் குழப்ப நிலையைத் தான் இன்றைய இலக்கியங்களும் திரைப்படங்களும் எதிரொளிக்கின்றன. பொய்ம்மையும் காட்டிக்கொடுத்தலும் கூட்டிக் கொடுத்தலும் கோலோச்சும் குமுகத்தில் அவற்றுக்குச் சரியான எதிர் இயக்கம் உருவாகாத நிலையில் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? நாட்டுப்புற மக்கள் திரைப் படங்களில் காட்டப்படும் ஒழுக்கக் கேடுகளையோ இருபொருட் பேச்சுகளையோ பாடல்களையோ அறியாதவர்களில்லை. எனவே அவற்றால் அவர்கள் ஒன்றும் கெட்டுப்போகப் போவதில்லை. ஆனால் நகர்ப்புறங்கள் பேணிவந்த போலி ஒழுக்கத்தின் பொய்ம்மைகள் அம்பலமாவது பற்றியே இவர்களுக்கு ஆத்திரம். வீட்டினுள் அடைத்து வைத்திருந்த பெண்ணைப் பணத் தேவையினால் கல்வி கற்பித்து வேலைக்கு அனுப்ப வேண்டியிருக்கிறது. அதனால் முன்பிருந்ததற்கு மாறான சூழ்நிலையில் புதுவகை உறவுகளுக்கு அவள் ஆளாக வேண்டியுள்ளது. இவற்றையே கீழ்த்தரமானவை என்று கூறப்படும் இன்றைய கதைகளும் திரைப்படங்களும் காட்டுகின்றன. இந்தக் குமுக மெய்ம்மையை மாற்றாத வரை, மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாத வரை இலக்கியங்களில் இவற்றின் எதிரொலிப்புகள் இருந்துகொண்டே இருக்கும். பொருளியலில் மேம்பாடடைந்த பெண் குமுக நிலையிலும் மேம்பாடடைய வேண்டும். வேலைவாய்ப்பு ஒரு சலுகையாயிருப்பது உரிமையாகும் நிலை ஏற்பட வேண்டும். அதற்கு நாட்டின் பொதுப் பொருளியல் உயர வேண்டும். அதற்கு ஊற்றுக் கண்ணான நாட்டுப்புறங்கள் வளம் பெற வேண்டும். அதற்கான முயற்சிகளிலும் போராட்டங்களிலும் இருந்துதான் புரட்சிகர குமுக மெய்ம்மைகளும் (Realities) புரட்சிகர நடப்பிய (Realist) கலை இலக்கியங்களும் உருவாக முடியும்.

இன்றைய கலை இலக்கியங்களில் குறிப்பாகத் திரைப் படங்களில் நாட்டுப்புற மக்களுக்கும் பெண்களுக்கும் மிகவும் தீங்கானவை தெய்வத்தையும் விதியையும் கருப்பொருட்களாக்கும் கதைகளைக் கொண்டவையும் பெண்களைத் தன்னம்பிக்கை இழக்க வைக்கும் பட்டிக்காடா பட்டணமா, மௌன கீதங்கள் போன்றவையுமான திரைப்படங்களே. ஆனால் இவற்றுக்கெதிரான திரைப்படங்களை உருவாக்குவதோ அல்லது ஒரு போராட்டத்தைத் தொடங்குவதோ இன்றைய நிலையில் எதிர்பார்க்க முடியாத ஒன்று. ஒரு எழுச்சியடைந்த குமுகப் பின்னணியில் திராவிட இயக்கத்தினர் அத்தகைய திரைப்படங்கள் ஒன்றிரண்டை உருவாக்க முடிந்தது. (எ-டு) ரத்தக் கண்ணீர், அந்தமான் கைதி. அதுபோன்ற ஒரு குமுக எழுச்சியை உருவாக்காமல் புதிய கலை இலக்கியம் பற்றிப் பேசுவோர் அனைவரும் ஏமாற்றித் திரியும் வேலையற்ற எத்தர்களே.

(தொடரும்)

குமரிமைந்தன்
kumarimainthan@sify.com
htpp://kumarimainthan.blogspot.com

Series Navigation

குமரிமைந்தன்

குமரிமைந்தன்

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 14. கலை

This entry is part [part not set] of 31 in the series 20060908_Issue

குமரிமைந்தன்



“கலை கலைக்கா கலை வாழ்வுக்கா” என்ற கேள்வி பல காலமாகக் கேட்கப்படும் கேள்வியாகும். குமுக மாற்றத்தை விரும்புவோர் கலைகளின் மூலம் தம் கொள்கைகளைப் பரப்ப முற்படும்போது இந்தக் கேள்வி எழுப்பப்படும். கலை என்பது அதன் சுவைக்காகவே இருக்க வேண்டும்; அது வேறு குறிக்கோள்களையோ கருத்துப் பரப்பல்களையோ கொண்டிருக்கக் கூடாது என்று பழமையைக் காக்க விரும்புவோர் கூறுவர். முற்போக்காளர்களோ மக்கள் செய்யும் எதுவும் மக்களுக்காவே இருக்க வேண்டும்; எனவே கலை மக்களுக்குப் பணிபுரிவதாக இருக்க வேண்டும் என்பர். அதே போல் ஒரு குமுக இயக்கம் இல்லாத வேளைகளிலும் கூட கலை இருவகை நோக்கங்களையும் நிறைவேற்றுகிறது. உழைக்கும் மக்களுக்குக் கலை வாழ்வாகிறது. உழைக்கும் போது பாடும் பாடல், உழைப்பு இல்லாத போது நிகழ்த்தப்படும் ஆடல் பாடல் ஆகியவை அவர்களது வாழ்வின் இன்ப துன்பங்களையும் தம் தொழிலின் ஏற்ற இறக்கங்களையும் சித்தரித்துக்காட்டவும் பல வேளைகளில் தம் உழைப்பின் பாங்கை மேம்படுத்தவும் பயன்படுகின்றன. ஓவியம், சிற்பம் போன்ற நுண்கலைகள் அவர்கள் செய்யும் பயன்படு பொருட்களில் மிளிர்கின்றன. அவர்கள் செய்யும் விளையாட்டுப் பொருட்கள் கலை வடிவமாகவே காட்சியளிக்கின்றன. ஆனால் அவர்களது வயிற்றுப் பிழைப்பை நடத்துவதற்காகவே அவை உருவாக்கப்படுவதால் அவற்றில் அடங்கியுள்ள கலையழகின் விலையோ மதிப்போ அவர்களுக்குக் கிடைப்பதில்லை. வெறும் உழைப்பின் மதிப்பு கூடக் கிடைப்பதில்லை. உழைப்பாற்றலின் மதிப்பு (Value of labour power) அதாவது அவர்கள் உயிர்வாழ்வதற்குத் தேவையான மதிப்பு மட்டும் அவர்களுக்குக் கிடைக்கிறது. அவர்களது உழைப்பின் மிகுதி மதிப்பு அல்லது மீத்த மதிப்பு(Surplus Value) கலை மதிப்புடன் சேர்ந்து வாணிகர்களாலும் பிறராலும் சுரண்டப்படுகிறது. ஏழைப் பெண்களுக்கு வாழ்வழிக்கிறோம் என்று கூறிக்கொண்டு இத்தகைய கைவன்மைத் தொழில்களில் (Handicrafts) அவர்களை ஈடுபடுத்தி செய்பொருட்களை உள்நாட்டுப் பணக்காரர்களுக்கும் வெளிநாடுகளிலும் விற்றுப் பணம் சேர்க்கும் உள்ளூர் வாணிகர்களும் அவர்களோடு கூட்டுச் சோந்து நிற்கும் “காதிகிராப்ட்” போன்ற அரசு நிறுவனங்களும் ஒருபுறம்; வெளிநாடுகளிலிருந்து பணத்தை அனுப்பிக் கொள்ளையடிக்கும் “மக்கட்பணி” அமைப்புகள் இன்னொரு புறம்.

அதே வேளையில் வாழ்வோடு தொடர்பில்லாத வெறும் ஆடல், பாடல், ஓவியம், சிற்பங்களைக் காட்டிப் பாராட்டும் பணமும் குவிக்கின்றனர் மேற்சாதியினர். சொற்களின் தேவையின்றி நடிப்புகள், மெய்ப்பாடுகள், அடைவுகள், முத்திரைகளைக் கொண்டது பரத நாட்டியம். மனிதன் தொடக்க காலத்தில் பேச்சு மொழி வளர்ச்சியுறாத நிலையிலும் உரக்கப்பேசக் கூடாத சூழ்நிலையிலும் கையாண்ட செய்கை (சைகை)களே இவ்வாறு முத்திரைகளிலும் அடைவுகளிலும் நடிப்புகளிலும் மெய்ப்பாடுகளிலும் இடம் பெற்றுள்ளன என்பது ஒரு விந்தையாகும். சரியான கண்ணோட்டத்தோடு அணுகினால் தமிழ் எழுத்து வடிவங்களுக்கும் இந்த அடைவுகள் முத்திரைகளுக்கும் ஒரு ஒத்திசைவு இருப்பதைக் காண முடியும் என்று தோன்றுகிறது. அதேச்போல் கேட்போருக்குப் புரியாத பிற மொழிச் சொற்களிலமைந்த இசைப் பாடல்களில், சொற்களே இல்லாத வெற்று இசைக் கருவிகளில் தம் கலைத் திறனைக் காட்டும் கலைவாணர்களைப் போற்றிப் புரப்பவர் மேற்சாதியினர். அவ்வாறே ஓவியம் சிற்பம் முதலியவற்றில் “தேர்ச்சி” பெற்றுக் கண்காட்சிகள் நடத்திப் பெரும் பொருளும் புகழும் சேர்க்கும் மேற்சாதிக் கலைஞர்களும்.

மக்களின் மொழியாகிய தமிழில் இசையரங்குகளில் பாட வேண்டு மென்பதற்காக இங்கு ஓரு பெரும் இயக்கம் நடைபெற்றும் அது இன்னும் குறிப்பிடத்தக்க வெற்றி பெறவில்லை என்பதும் நம் கவனத்துக்குரியதாகும்.

நம் நாட்டில் கலை இவ்வாறு இருவேறு பண்பாடுகளைச் சேர்ந்தவையாகப் பிளவுண்டது பழங்காலத்திலேயே நடைபெற்றுவிட்டது. வேத்தியல், பொதுவியல் என அது இருவகையாக முதலில் பிளவுண்டது. (வேந்து = அரசன்; வேந்து g வேத்து + இயல் = வேத்தியல்). பின்னர் அந்தணர், அரசர், வாணிகர், வேளாளர் எனக் கலை வகைகள் பிரிக்கப்பட்டன. ஆனால் நடைமுறையில் என்றும் முதல் பாகுபாடே உடையோர் இல்லாதோர் என்ற இரு வகுப்பினரிடையில் விளங்குகிறது.

மேலையுலகில் நாட்டுப்புறவியல் என்ற துறை பொதுமக்களிடமுள்ள அனைத்துக் கலை வடிவங்களையும் தொகுப்பதாகத் தோன்றியது. ஆனால் அத்துறை இங்கு செயற்பட்டாலும் உழைப்பை வெறுக்கும் வெள்ளாளக்கட்டாளர்களாகிய பார்ப்பனியர்களிடையில் சிக்கிக் கிடப்பதால் ஒரு சில வாய்மொழி இலக்கியங்களைத் திரட்டுவதற்கு மேல் அது செல்லவில்லை. இன்றைய பல்கலைக் கழக ஆய்வுகள் பண்டை இலக்கியங்களிலிருந்து மக்கள் இலக்கியங்கள் என்ற அளவுக்குச் சென்றுள்ளனவே தவிர மக்களின் கலைகளையும் அவற்றோடு ஒன்றி நிற்கும் பொருளியல் வாழ்க்கையையும் சரியான கண்ணோட்டத்தோடு இன்றும் தொடவில்லை. அவற்றை ஆய்வதும் திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் போன்றவற்றால் அவை அழிவதிலிருந்து காத்து உயிர்ப்பிப்பதும் நமது கடமைகளாகும். ஆனால் அத்தகைய கலை மீட்புப் பணியைத் தனியாகச் செய்ய முடியாது. மக்கள் தங்களது பொருளியல் மேம்பாட்டு இயக்கத்தில் நேரடியாகப் பங்கேற்கும் போது தான் இத்தகைய கலைப் பணிகளைச் செய்ய முடியும்.

கலை-இலக்கியத்தின் நோக்கம் பற்றிய கேள்வி ஓர் அடிப்படைக் கேள்வியாகும். இன்றைய நாகரிக வளர்ச்சி நிலையில் கலை-இலக்கியம் என்பதன் நோக்கம் மக்களை மகிழ்விப்பதாகும். அதாவது அது ஒரு பொழுதுபோக்கு வகை துறையாகும். ஆனால் மாந்த நாகரிகத் தொடக்கக் காலத்தில் அவ்வாறு இருக்கவில்லை. முந்தியல் மாந்தர்கள் தங்கள் வேட்டை, உணவு திரட்டல், வேளாண்மை போன்ற உழைப்பு வடிவங்களைப் போலச்செய்வதாகவே தொடக்கக்கால கலைநிகழ்வுகள் இருந்தன என்று சியார்சுதாம்சன் போன்ற ஆய்வர்கள் கருதுகின்றனர். சிலப்பதிகார உரையில் கூத்துகள் பற்றிய குறிப்பினும் தொழில்களோடு உள்ள தொடர்பு காணப்படுகிறது. இவ்வாறு மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் உழைப்பிலிருந்து உருவாகி அவ்வுழைப்பை மேம்படுத்தப் பயன்பட்ட கலைவடிவங்கள், மக்களின் இவ்வுழைப்புச் செயல்முறையிலிருந்து ஒட்டுண்ணிகளால் அயற்படுத்தப்பட்டு இறுத்தெடுக்கப்பட்டவையே “தூய” கலைகள். இத்தூய கலைகள் நிலவுகின்ற குமுக உறவுகளையும், மதிப்பீடுகளையும் இயல்பாகவே எதிரொளித்து அவற்றுக்கு வலிமையும் நிலைப்பும் தேடித்தருகின்றன. கலைகளும் இலக்கியமும் இவ்வாறு பொழுதுபோக்குத் தன்மை பெற்றுவிட்டதால் குமுக உறவுகளையும் மதிப்பீடுகளையும் மாற்றவிழைவோர் தங்கள் இயக்கத்தின் ஒரு கூறாக இக்கருவியைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாது. அவ்வாறு கலை இலக்கியங்களைப் பயன்படுத்தும் போது பழமையர் எழுப்பும் எதிர்ப்பிலிருந்து தான் “கலை கலைக்கா? கலை வாழ்க்கைக்கா?” என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இந்தக் கருத்து மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே மக்கள் பழமையரைக் கைவிட்டு மாற்றம் காணப் பாடுபடுவோரின் பக்கம் சார்ந்து நிற்கின்றனர். அவ்வாறு கலை வாழ்க்கைக்குத் தான் என்பதை அவ்வப்போது மக்கள் நிலைநிறுத்துகின்றனர்.

இந்தக் “கலை கலைக்கா? கலை வாழ்க்கைக்கா?” என்ற கேள்வியை முற்போக்கு முகமூடியுடன் சிலர் முன் வைக்கின்றனர். குமுக மாற்றத்தை முன் வைக்கும் கலை இலக்கியங்களைப் பரப்பல் (பிரச்சாரக்) கலை இலக்கியங்கள் என்றும் பழமை சார்ந்த இலக்கியங்களை “தூய” அல்லது “உயர்தர” இலக்கியங்கள் என்றும் வகைப்படுத்துகிறார்கள். பரப்பல் கலை இலக்கியங்கள் நிலைத்து நில்லா என்பது இவர்களது வாதம்.

அது உண்மைதான். பரப்பல் இலக்கியங்கள் பொதுவாக நிலைத்து நிற்பதில்லை. ஆனால் இது அதற்கு ஒரு குறையுமல்ல. பரப்பல் இலக்கியங்களின் நோக்கமே குமுக மாற்றம் தான். அக்குமுக மாற்றத்தை முன் வைத்து மக்களிடையில் ஒரு வலிமையான இயக்கம் செயல்படும் கால கட்டத்தில் பரப்பல் கலை இலக்கியங்கள் பெறும் வலிமையும் அவை ஆற்றும் மக்கட்பணியும் உலகில் காலங்காலமாகத் தோன்றிய “உயர்தர”க் கலை இலக்கியங்கள் அனைத்தும் சேர்ந்தாலும் ஆற்ற முடியாது. சராசரிப் பொழுது போக்கு இலக்கியங்கள் அன்றாட உணவு என்றும் “உயர்தர” இலக்கியங்கள் விருந்தென்றும் கொண்டால் பரப்பல் இலக்கியங்கள் மருந்து போன்றவையாகும். நோய் தாக்கி உருக்குலைந்து சாவை நோக்கி நிற்கும் உடலுக்கு மருந்து அன்றாட உணவை விட எவ்வாறு இன்றியமையாததோ அதுபோல தேக்கமடைந்து நெருக்கடிக்குள்ளாகி நிற்கும் குமுகத்துக்கு அதன் மருத்துவனான புரட்சிகர இயக்கங்களின் கையில் கலை இலக்கியங்களும் இன்றியமையாதவை.

இனி “உயர்தர”க் கலை இலக்கியத்தின் சிறப்புக் கூறாகக் கூறப்படுவது என்ன வென்று பார்ப்போம். இச்சிறப்புக் கூற்றை அழகியல் என்றும் முருகியல் என்றும் அழைப்பர். Aesthetics என்ற ஆங்கிலச் சொல்லுக்கோ அதன் தமிழாக்கங்களான மேலே கூறப்பட்ட சொற்களுக்கோ இன்று வரை தெளிவான, இறுதியான வரையறை கூறப்படவில்லை. ஆனால் வரையறையையும் தன் பெயரிலேயே பெற்றுள்ள ஒரு துறையாக இது தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் காணப்படுகிறது. அதுதான் மெய்பாட்டியல். மெய்ப்பாடு எனப்படுவது நகை, அழுகை எனத் தொடங்கும் எட்டு வகை உணர்ச்சிகளின் வெளிப்பாடாகும். ஒரு கலை அல்லது இலக்கியப் படைப்பாளி தன் படைப்பின் மூலம் அதனைச் சுவைப்போர் உள்ளத்தில் எத்தகைய உணர்ச்சிகளை எழுப்ப வேண்டும் என்று விரும்புகிறானோ அதில் அவன் பெறும் வெற்றிதான் மெய்ப்பாடு. தான் ஒரு கலைப்படைப்பை உருவாக்கும்போது தான் எழுப்பப் விரும்பும் மெய்ப்பாட்டுக்கு முதலில் தன்னை அவன் உட்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போது தான் அவனது கலைப்படைப்பில் தான் விரும்பும் மெய்ப்பாட்டை வெளிப்படுத்த முடியும். இதில் அவன் வெற்றி பெற்றுவிட்டால் அப்படைப்பைச் சுவைக்கும் மக்களிடையிலும் அதே மெய்ப்பாட்டை உருவாக்க முடியும். அவ்வாறு சுவைப் போரிடத்தில் தான் விரும்பும் மெய்ப்பாட்டைத் தோற்றுவிப்பதில் அடிப்படை வெற்றி பெற்றுவிட்டால் அது ஒரு சிறந்த கலைப்படைப்பாகக் காலத்தை வெல்வதாக அமைகிறது.

நம் குமுகத்தில் இதுபோன்ற சிறந்த கலைப்படைப்புகளுக்கு வாய்ப்பிருப்பதாகக் கூற முடியாது. இன்று பெரும் புழகத்தில் இருக்கும் நிகழ்த்து கலைகளும் நுண்கலைகளும் ஆகம வடிவத்திலுள்ளவை. ஆங்கிலத்தில் இதனை Formalism என்பர். கோவில்களிலும் சமயங்களின் தொடர்பாகவும் நிகழ்த்தப்படுபவை அல்லது படைக்கப்படுபவை. இப்பழமைத் தொடர்பை அறுத்துக்கொண்டு அவற்றால் முழுமையாக விடுபட முடியவில்லை. அவை எவ்வளவு தான் திரைப்படம், தொலைக்காட்சி (தொ.கா.) போன்ற மிக முன்னேறிய ஊடகங்களின் வழியாக வெளிப்பட்டாலும் வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் அவை பழைமையின் தொடர்ச்சியாகவே இருக்கின்றன. இக்கலை வடிவங்களில் மெய்ப்பாடுகள் ஆகம விதிகளின் கட்டுப்பாட்டுக்குள் வருவதால் படைப்பாளிக்குக் கற்பனை உரிமை இல்லை. எனவே அவையனைத்தும் விதிகளுக்குட்பட்ட, பண்டங்களைப் படைக்கும் தொழில்நுட்பங்களாகவே இருக்கின்றன.

இவற்றை மீறி ஒரு சில வடிவ மாற்றங்களை தனி மாந்தர்கள் முன்றாலும் அவர்கள் பழைமைச் சிந்தனைகளை உடைக்க விரும்பாதவர்கள். அத்துடன் இன்றைய குமுகத்தில் நிலவும் தேக்க நிலையும் ஒரு புரட்சிகர மக்கள் இயக்கம் இல்லாமையும் இப்புதிய வடிவ முயற்சிகளைக் கைக்கொண்டு புதிய உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் கலை இலக்கியப் படைப்புகளை உருவாக்கும் ஒரு தலைமுறை உருவாக முடியாமைக்குக் காரணங்கள்.

நம் பண்டை வரலாற்றில் அன்று நிலவிய பழமையை அனைத்துத் துறைகளிலும் உடைத்தெறிந்து வரலாறு படைத்த ஒரு கலைப் படைப்பு சிலப்பதிகாரமாகும். கழக (சங்க) இலக்கியத் தொகுப்பு என்ற வடிவில் மறைக்கப்பட்ட தமிழர்களின் தொல் பழம் வரலாற்றுத் துணுக்குகளை, குறிப்பாகக் குமரிக் கண்ட வரலாற்றின் அடிப்படை உண்மைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஐந்நிலங்களுக்குரிய கலை வடிவங்களை நமக்கு எடுத்துரைக்கிறது. ஐந்திரம்-அகத்தியம் என்ற தமிழ் இலக்கணக் கோட்பாடுகளின் மோதலில் வீழ்த்தப்பட்ட அகத்தியத்தின் பக்கம் நின்று ஐந்திரக் கோட்பாட்டின் செல்வாக்கினால் வழக்கிலிருந்து அகற்றப்பட்ட சகரக் கிளவிகளைக் கையாள்கிறது. நாடுகளுக்கிடையிலான உறவுகளில் தொல்காப்பியப் புறப்பொருள் வகுத்த எல்லைகளை உடைத்து அன்று உண்மையில் நிலவிய அரசதந்திர உத்திகளை எடுத்துக் காட்டியது. தமிழ் மண்ணின் இசை நாடக மரபுகளைப் பேணித் தந்தது. தமிழக வாழ்க்கையின் பல்வேறு முகப்புகளைக் காட்டும் கலைக் களஞ்சியமாகத் திகழ்கிறது. கதை சொல் உத்திகள் தாம் எத்தனை? தன்னுள் மறைத்து வைத்துள்ள செய்திகள் தாம் எத்தனை? செய்யுள் வடிவங்கள் தாம் எத்தனை? இவ்வளவுக்கும் மேலாக அதில் வெளிப்படும் மெய்ப்பாடுகள் தாம் எத்தனை. இத்தனை சிறப்புகள் இருந்தும் மயக்கர்களும் சாதி வெறியர்களும் சுவைக்குதவாத மதப் பிதற்றல்களுக்குக் கழகங்களும் மாநாடுகளும் கூட்டி கட்டுப்பாட்டுடன் ஆர்ப்பரிக்கின்றனரே! என்னே கொடுமை!

ஆட்சியாளர்கள், பார்ப்பனியர்கள் என அனைவரும் திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்தாலும் சிலப்பதிகாரம் நின்று நிலவுகின்றதென்றால் அதன் மெய்ப்பாட்டு வெற்றி தான் காரணம். எனவே தான் அதற்கு “நெஞசையள்ளும் சிலப்பதிகாரம்” எனும் அடைமொழி கிடைத்தது.

அது தோன்றிய காலத்தில் தமிழகத் தேசியத்துக்கு எழுந்த அறைகூவலை தமிழகம் எதிர்கொள்வதில் அது எவ்வளவு துணை நின்றது என்பது ஆய்வுக்குரிய ஒன்றாகும். புறச்சூழல், மக்களின் மனநிலை, மக்களியக்கங்கள், அவற்றின் தலைவர்கள் என்ற இயங்குதிணைகளின் இடைவினைப்பாடு தான் அதனை முடிவு செய்யும். ஆனால் அவற்றை இன்றும் புரிந்து கொள்வதற்கான தடையங்களைக் கொண்ட ஓர் ஒப்பற்ற கருத்துப் பரப்பல் இலக்கியமாகும் சிலபப்பதிகாரம். கருத்துப் பரப்பல் எனும் போது புரட்சிகரக் கருத்து பரப்பலையே கொள்ள வேண்டும். பரப்பல் இலக்கியத்தில் உயர்தரம் கொண்டது சிலப்பதிகாரமாகும்.

கலை-இலக்கியத்துக்கும் மெய்ப்பாட்டுக்கும் உள்ள உறவைக் கூறும்போது இன்று ஒடுக்கப்பட்டோர் பற்றியவையாக் கூறப்படும் தலித் கலை-இலக்கியப் படைப்புகளைப் பற்றியும் கூறியாக வேண்டும்.

மெய்ப்பாடு என்பது இயல்பாக மக்களிடையில் தோன்றும் மெய்ப்பாடுகளையும் அவை தோன்றும் சூழ்நிலைகளையும் அம்மெய்ப்பாடுகளின் விளைவுகளையும் தடம் பிடித்துக் காட்டுவதாகும். அந்தவகையில் எங்கோ கண்ணுக்கெட்டாத நாட்டுப்புறத்தில் ஒடுக்கப்பட்டோரிடையில் நடைபெறும் வாழ்வியல் நடப்புகளை நகரத்தில் வாழும் மேல்தட்டு மேற்சாதிக் கலைஞன் வெளிப்படுத்தும்போது உண்மை வெளிப்படாது என்பது உண்மையே. ஆனால் அந்தக் கலையைச் சுவைக்கும் மக்களில் பெரும்பான்மையினரும் அக்கலைஞன் வெளிப்படுத்துவதாகக் கருதப்படும் சூழ்நிலைகளிலிருந்து அயற்பட்டோரே. அதாவது கலைஞன் வெளிப்படுத்தும் சூழல் இயற்கைக்கு முரணானது என்ற உண்மையை அறியாதவர்கள். எனவே அக்கலைப் படைப்பு கஞைர்களின் மனதில் கலைஞன் எழுப்ப நினைத்த மெய்ப்பாட்டை எழுப்பினாலே அது வெற்றியாகிவிடுகிறது.

அதே வேளையில் ஒடுக்கப்பட்டோரிலிருந்து உருவாகும் ஒரு கலைஞன் தான் கலைஞனாக உருப்பெரும் சூழ்நிலையினால் தான் தோன்றிய சூழ்நிலையிருந்து விலகிச் சென்றாலும் அதன் தாக்கங்களிலிருந்தும் படிமங்களிலிருந்தும் அயற்படாமலிருப்பானாகில் அதேநேரத்தில் தான் விரும்பும் மெய்ப்பாடுகளைச் சுவைஞர் மனதில் எழுப்பும் ஆற்றலும் பெற்றிருப்பானாகில் அவனால் தான் உயர்ந்த ஒடுக்கப்பட்டோர் கலைப்படைப்பைப் படைக்க முடியும்.

(தொடரும்)

குமரிமைந்தன்
kumarimainthan@sify.com
htpp://kumarimainthan.blogspot.com

Series Navigation

குமரிமைந்தன்

குமரிமைந்தன்

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 13. மொழி

This entry is part [part not set] of 41 in the series 20060901_Issue

குமரிமைந்தன்


மேற்சாதியினர், கீழ்ச்சாதியினர் ஆகிய இரு தரப்பாரும் பேசும் மொழி தமிழேயாயினும் இரண்டுக்கும் பெருத்த வேறுபாடுண்டு. மேற்சாதியினரின் மொழியில் சங்கத(சமற்கிருத)க் கலப்பு உண்டு. சங்கதம் கலந்து பேசுவதை இவர்கள் பெருமையாகக் கருதுகிறார்கள். இதுவரை எழுந்த தனித்தமிழ் இயக்கங்களெல்லாம் இந்த மேற்சாதியினரின் கலப்பு மொழியை எதிர்த்தே நடத்தப்பட்டன. இதற்கு மாறாகக் கீழ்ச்சாதி மக்களின் மொழி இயல்பாகவே தூய்மையானது. சிவனிய மலர்ச்சிக் காலத்திலும் பள்ளு, குறவஞ்சி போன்ற பிற்காலத் தேசிய எழுச்சி முயற்சிகளின் போதும் கீழ்ச்சாதி மக்களின் தூய வழக்கு தமிழுக்கு அவ்வப்போது உயிர் கொடுத்து வந்துள்ளது. சங்கதத்தின் துணையின்றித் தமிழ் தனித்தியங்க முடியும் என்று கால்டுவெலார் கூறியதற்கு அடிப்படையானதும் பாவாணரின் தனித்தமிழ் ஆக்கங்களுக்கும் சொல்லியல் ஆய்வுகளுக்கும் ஊற்றுக் கண்ணாக நின்றதும் கீழ்ச்சாதி மக்களின் தூய தமிழேயாகும்.[1]

ஒருவேளை, மொழித் தொடர்பான பூசல் மிக நீண்ட காலம் நடைபெற்று வரும் நாடு உலகிலே தமிழ்நாடாகத்தான் இருக்கும். மொழிப் பூசல் தடயங்கள் தொல்காப்பியத்திலேயே காணப்படுகின்றன. பின்னர் சிவனியக் குரவர்கள் காலத்தில் இப்பூசல் ஒரு வன்முறைப் பூசலுடன் கலந்து எழுந்தது. முதலில் வேதியர்களால் கோயில்களில் புகுத்தப்பட்ட சங்கதம் பின்னர் புத்த, சமண சமயத்தவரால் மக்களிடையிலும் புகுத்தப்பட்டது. அதை எதிர்த்துக் கிளம்பிய எழுச்சிக்கு இரையானவர்கள் சமணர்களே என்பது வரலாறு காட்டும் உண்மை. முசுலீம்கள் மற்றும் நாயக்கர்கள் ஆட்சிக் காலத்திலும் மொழியைத் துணைகொண்டு ஓர் எழுச்சி தோன்றியிருக்கிறது. பள்ளு, குறவஞ்சி என்ற பெயர்களில் தோன்றிய கீழ்ச்சாதி மக்களோடு தொடர்புடைய இலக்கிய வகைகள் இவ்வெழுச்சியோடு தொடர்புடையவை. பின்னர் வெள்ளையர் வருகையால் அம்முயற்சி வெற்றி பெற முடியாவிட்டாலும் சமயப் பணிக்காக உள்நாட்டு மக்களின் மொழியைக் கற்க வேண்டும் என்ற தேவையால் வெள்ளையரால் தமிழ்க் கல்வி ஆக்கம் பெற்றது. அதன் விளைவாகக் கால்டுவெலாரின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் உருவானது. மனோன்மணியம் சுந்தரனார், பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் என்று அந்த மரபு வளம் பெற்று இன்று எதிர் நிற்க முடியா ஆற்றலாக வளர்ந்துள்ளது.

சங்கதம் புகுத்தப்பட்ட அடிநாளிலிருந்து ஊர்ப் பெயர்களை எல்லாம் மொழிபெயர்க்கும் வேலை இடைவிடாமல் நடைபெற்றுள்ளது. அடிபணியாத ஊர் அல்லது அடைக்கலம் தரும் ஊர் எனப் பொருள் தரும் தஞ்சாவூரை (தஞ்சாமை + ஊர்; தஞ்சுதல் – அடிபணிதல் அடைக்கலம் தருதல்)த் தன் சாவு ஊர் எனப் பிரித்துச் சுயமரணபுரி என்று மாற்றிச் சுயமரணபுரியைத் தமிழர்கள் தஞ்சாவூர் என மொழிபெயர்த்துக் கொண்டனர் என்று கூசாமல் கூறுகின்றனர். இப்படித் தமிழகத்தின் மூலை முடுக்குகளிளெல்லாம் பெயர் மாற்றம் நடைபெற்றிருக்கிறது. தம்மைத் தமிழ்த் தொண்டர்கள் எனக்காட்டிக் கொள்ள இங்கு ஆட்சி புரிந்த, ஆட்சி புரியும் திராவிட மரபுக்கட்சிகள் சில ஊர்ப் பெயர்களை மாற்றியிருக்கின்றன. மாயூரம் என்ற ஊர்ப்பெயர் மயிலாடுதுறை என அண்மையில் மாற்றம் பெற்றுள்ளது. மாயூரம் என்பதும் மயில் என்பதும் தமிழ்ச் சொற்களே. மயில், குயில் என்பவை முறையே மை+இல், கூ+இல் எனப் பிரிந்து பொருள் தரும். மையில் என்றால் கருமை இருக்குமிடம், கூயில் என்றால் கூவுதல் இருக்குமிடம் அல்லது உருவாகுமிடம். அது போல் மை + ஊர் = மையூர் என்றாலும் கருமையின் உறைவிடம் என்றே பொருள் தரும். ஈற்று ஒற்றெழுத்தை உயிர் மெய்யாக்கி மயூர என்றால் அது சங்கதச் சொல் போன்ற தோற்றம் தருகிறது.

ஆங்கிலேயர் ஒருவர் பெயரால் சென்னையில் ஆமில்ட்டன் வாராவதி எனும் பாலம் ஒன்றுண்டு; அது நாளடைவில் மக்கள் நாவில் அம்பட்டன் வாராவதியாகி அதிலிருந்து Barber’s Bridge என்று ஆங்கிலச் சொல் உருப்பெற்றது என்ற கதை எல்லோருக்கும் தெரியும். அதைவிடவும் வேடிக்கையாகச் சங்கதக்காரர்களின் முயற்சிகள் இருந்துள்ளன என்பதற்கு தஞ்சாவூர் ஒரு சான்று. இன்னொரு சான்று வேதாரண்யம் எனப்படும் திருமரைக்காடு. மரை என்றால் சதுப்பு நிலங்களில் வாழும் ஒருவகை மான். Marshdeer என்று இது ஆங்கிலத்தில் வழங்கப்படும். காவிரியின் கயவாயை அடுத்திருக்கும் இக்காடுகளில் இம்மான்கள் மிகுந்திருந்ததால் அதனை மரைக்காடு என்றனர் நம் முன்னோர். ரகரத்துக்கும் றகரத்துக்கும் வேறுபாடு தெரியாமல் மரை என்பதை மறை என்று கருதி திருமறைக் காடாக்கி அதனை வேதாரண்யம் என மொழி பெயர்த்தனர் சங்கதக்காரர்கள். வேதங்கள் மரங்களாக நின்றதால் அப்பெயர் வந்தது என்ற கதையையும் கட்டிவிட்டனர்.

நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் சாமியாடுவோரைக் கோமரத்தாடி எனச் சிலர் வழங்குகின்றனர். இதன் பொருள் புரியாமல் கோமரம் என்றால் என்ன மரம் எனக் குழம்புகின்றனர் தமிழாசிரியர்கள். சங்கதக்காரர்களின் உத்திகளைப் புரிந்து கொண்டால் இது எளிதில் விளங்கும். தெய்வமேறியாடுவதை வேலனாட்டம், முருகாட்டம், முருகேறுதல் என்றெல்லாம் வழங்குவது மரபு. முருகன் g குமரன். எனவே முருகாட்டத்தை குமராட்டம் எனலாம். குமரம் சங்கதத்தில் கௌமாரம் என்ற வடிவம் பெறும். எனவே முருகாட்டத்தைக் கௌமாரத்தாட்டம் என்றும் அவ்வாறு ஆடுபவனைக் கௌமாரத்தாடி என்றும் மொழி பெயர்ந்துள்ளனர். இன்று கோமரத்தாடியாகி எந்த மரம் எந்தத் தாடி என்று தமிழாசிரியர்களைக் குழப்புகிறது. இப்படிச் சங்கதக்காரர்கள் நடத்தியுள்ள விந்தைகள், வேடிக்கைகள், கோமாளித்தனங்கள், குரங்குத் தனங்கள், குழறுபடிகள் தாம் எத்தனை, எத்தனை, சொல்லிமாளாது… அவற்றைப் பார்க்கும் போது நமக்குச் சிரிப்பும் வரும், சினமும் வரும், ஏளனமும் வரும், தாங்கொணாத ஆத்திரமும் வரும்.

அறியா வகையில் நாட்டுப்புற மக்களிடையே புகுந்துள்ள ஒரு சில சொற்கள் தவிர அவர்கள் தூய்மையான தமிழைச் சிறிது திரிந்த நிலையில் பேசுகின்றனர். ஆனால் அவர்களது அந்தத் தூய சொற்களைக் கேட்டால் மேற்சாதியினருக்கும் பார்ப்பனியரெனும் வெள்ளாளக்கட்டினருக்கும் கசக்கும். ஏளனம் பிறக்கும். சாதம் என்னாமல் சோறு என்றாலும் சிறுநீரை மூத்திரம் என்னாமல் மோள் என்றாலும் முகம் மழிப்பதைச் சவரம் என்னாம சிரைப்பு என்று கூறினாலும் அவர்களுக்குப் பிடிக்காது. இவ்வாறு மேற்சாதியினருக்கு மட்டும் இவ்வளவு உவப்பைத் தரும் இந்தச் சங்கத மொழி எங்கிருந்து வந்தது? இங்கு ஒரு பெரும் உலக வரலாற்று முடிச்சு விழுந்து அவிழ்க்க முடியாதபடி சிக்கிக் கொண்டுள்ளது.

ஐரோப்பியர்கள் முதன் முதலாக இந்தியா வந்து இங்குள்ள நாகரிகத்தை ஆய்வு செய்ய முற்பட்ட போது முதலில் அவர்களுக்கு சங்கத இலக்கியங்கள் தாம் கிடைத்தன. அம்மொழிக்கும் ஐரோப்பிய மொழிகளுக்குமுள்ள சில ஒற்றுமைகள் அவர்களுக்குப் பளிச்சென்று தெரிந்தன. அவற்றை அணுகி ஆராய்ந்தவர்கள் செருமானியரே. அதிலும் மாக்சுமுல்லர் என்ற மொழியறிஞர்தான் இம்மொழி ஒற்றுமையிலிருந்து ஒரு புனைகோளை (Hypothesis) உருவாக்கினார். அதுதான் ஆரிய இனக் கோட்பாடு. எங்கோ நடு ஆசியாவிலிருந்து கி.மு.2000 அளவில் ஒரு மனித இனம் திடீரென்று நாலாபுறமும் புரவியதாகவும் அது ஐரோப்பா, ஆசியா முதலிய கண்டங்களில் தங்கி அங்கு தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியதாகவும் இந்தியப் பார்ப்பனர்கள் அவ்வாறு இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர்களேயென்றும் அவர் உண்மையென்று கருதிய சில மொழியியற் சான்றுகளைக் கொண்டு நிலைநிறுத்த முயன்றார். அவரது இந்தப் புனைகோளுக்கு உலகின் நாலாபுறங்களிலுமுள்ள அறிஞர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவற்றை எதிர்கொள்ள முடியாமல் அவர் தன் கருத்தைக் கைவிட்டுவிட்டார். ஆனால் அன்று செருமானியிலிருந்த அரசியல் சூழலில் அவரது புனைகோள் ஆழமாக வேர் கொண்டுவிட்டது. உலகை வெற்றி கொள்ளக் கிளம்பிய ஐரோப்பியர்களுக்கு எழுச்சியூட்டக்கூடியதாகவும் தம் முதல் எதிரிகளான அரேபியர்களுக்கும் முகம்மதியர்களுக்கும் எதிராகவும் இப்புனைகோள் பயன்பட்டதால் முதலில் முழு ஐரோப்பாவும் இப்புனைகோளை ஏற்றுக்கொண்டது. பின்னர் இது யூதர்களுக்கெதிராகவும் பிற ஐரோப்பிய நாடுகளுக்கெதிராகவும் செருமானியரே தூய ஆரியர் என்ற வடிவில் ஒரு வலிமையான கருத்தியல் ஆயுதமாகச் செருமானியருக்குப் பயன்பட்டது.[2] இதை எதிர்கொள்ள பிற ஐரோப்பியர்கள், குறிப்பாக ஆங்கிலேயர்கள் ஒரு மாற்று தேடினர். அதற்குக் கால்டுவெலாரின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் கைகொடுத்தது. ஐரோப்பாவில் எவ்வாறு அரசியல் நோக்கங்களுக்காக இப்புனைகோள்கள் பயன்பட்டனவோ அதேபோல் இந்தியாவிலும், குறிப்பாகத் தமிழ்நாட்டிலும் அவை பயன்பட்டன. ஐரோப்பிய மேலாதிக்கத்தை முறியடிக்க விரும்பிய வட இந்தியத் தேசிய அறிஞர்களில் சிலர் ஐரோப்பியர்களின் மூதாதையரோடு தொடர்புடையவர்கள் எனக் கருதப்பட்ட இந்திய ஆரிய நாகரிகத்திலும் சிறந்தது இந்தியா முழுவதும் பரவியிருந்த. திராவிட நாகரிகமே என வாதிட்டனர். பார்ப்பனர்களுக்கும் அவர்களின் எதிர்ப்பாளர்களுக்கும் இப்புனைகோள்கள் பயன்பட்டமையால் இங்கும் அவை வலிமையாக வேர் ஊன்றின.

ஆனால் இவை வரலாற்று உண்மைகளைச் சிறிதும் கவனத்தில் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட முடிவுகளாகும். கி.மு ஆறாம் நுற்றாண்டிலிருந்து கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை இந்தியாவின் வடபகுதி, குறிப்பாக அதன் வடமேற்கும் நடுவடக்கும் ஒருவர் பின்னொருவராக பாரசீகர்கள், கிரேக்கர்கள், உரோமர்கள், சீனர்கள் ஆகியோரின் ஆதிக்கத்தினுள் இருந்துள்ளன.[3] இவ்வாறு எட்டு நூறாண்டுக்கால அரசியல் தொடர்பினால் ஏற்பட்ட மொழி ஒற்றுமைகளை எந்த வரலாற்றாசிரியரும் கணக்கிலெடுக்கவில்லை. இரு நூறாண்டுக் கால ஆங்கிலேயராட்சி தமிழ் போன்ற நெடுங்கால இலக்கிய இலக்கணங்களுள்ள மொழியில் நிகழ்த்தியிருக்கும் மாறுதல்களோடு ஒப்பிட்டால் அவ்வாறு எதுவுமே உருவாகாத நிலையிருந்த வட இந்திய மொழிகள் இந்த எண்ணூறாண்டுக் காலத்தில் எவ்வளவு தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் என்பதனை வரலாற்றாய்வாளர்கள் கருதிப் பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தால் இனத் தொடர்பால் ஏற்பட்டதாகக் கூறப்படும் மொழித் தொடர்பு வெறும் அரசியல் தொடர்பால் ஏற்பட்டதாகி விடுகிறது.

அத்துடன் இன்னொன்றையும் பார்க்க வேண்டும். சங்கதத்துக்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும் இருப்பனவாகக் கூறப்படுபவற்றை விட அடிப்படைச் சொற்களைப் பொறுத்தவரை ஐரோப்பிய மொழிகளுக்கும் தமிழுக்கும், சங்கதத்துக்கும் தமிழுக்கும் அதிக நெருக்கம் உண்டு. இதை எந்த இனக் கோட்பாட்டால் விளக்குவது? தென்னையையும் பனையையும் ஐரோப்பாவிலும் மேற்காசியாவிலும் அறிமுகப்படுத்தியவரும் சிவந்த நிறமுள்ள செம்படகுகளில் கடல் வாணிகம் செய்தவரும் கிரேக்கருக்குப் பதினாறு எழுத்துகளை (அவ்வெழுத்துகள் அ-வில் தொடங்கி ன-வில் முடிந்தன)க் கற்பித்தவரும் மாழையியலை[4] அவர்களுக்கு அறிமுகம் செய்தவரும் கார்த்தீசினியரென்றும் அசிரியர்களென்றும் அழைக்கப்பட்டவர்களுமான பினீசியர்களால் ஐரோப்பிய மொழிகளுக்கும் தமிழுக்கும் இந்தத் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம். கண்ணாடியையும் வெடிமருந்தையும் முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள் அவர்களே என்றும் கூறப்படுகிறது.[5] சியார்சுத் தாம்சன் கூறுகின்ற செய்திகளின் ஐரோப்பிய நாகரிகத்தின் அடித்தளத்தை இட்டவர்களே இந்தப் பினீசியர்கள்தாம்.[6] இவ்வாறு மொழித் தொடர்பை அடிப்படையாகக் கொண்ட இந்த ஆரிய இனக் கோட்பாடு ஆவியாகி விடுகிறது. அதுமட்டுமல்ல இன்றுவரை உலகில் ஆரிய நாகரிகத்துக்குரியதென்று கூறத்தக்க அகழ்வாய்வுக் களம் ஒன்று கூடக் கண்டுபிடிக்கப்படவில்லை.[7]

அப்படியாயின் சங்கதத்தின் தோற்றம் எவ்வாறு நிகழ்ந்தது? உலகில் தோன்றிய செயற்கை மொழிகளில் நெடுநாள் நிலைத்திருப்பது சங்கதம், அதாவது அது ஒரு செயற்கை மொழி என்பது அறிஞர்கள் முடிவு.[8] இந்தியாவில் வழக்கிலிருந்த மொழிகளிலும் வெளியிலிருந்து வந்த தொடர்பு மொழிகளிலும் உள்ள சொற்களையும் இலக்கண அமைப்புகளையும் கொண்டு எளிய மக்கள் எளிதில் கற்க முடியா வகையில் செய்யப்பட்ட மொழியாகும் சங்கதம். மனைவி எனப் பொருள் தரும் வெவ்வேறு சொற்களுக்கு ஆண்பால், பெண்பால், அலிப்பால் என்று இயற்கைக்கு ஒவ்வாத பால் இலக்கணம் உடைய விந்தையான மொழி. ஆளும் வகுப்பினர்க்கென்றே உருவாக்கப்பட்டது; “இருவினையுமற்ற”, இம்மொழியைக் கற்பதும் ஓதுவதும் தவிர வேறு வேலை இல்லாத ஒட்டுண்ணிப் பார்ப்பனர்களால் பேணிகாக்கப்படுவது. சங்கதத்திலும் அதற்கு முந்திய வேத மொழியிலும் உள்ள சில சொற்களைப் பார்போம்.

வேதத்தில் இரு மதுவகைகள் கூறப்பட்டுள்ளன. சோமபானம், சுரபானம் என்பவை அவை. சோமபானம் என்பதற்குச் சோம என்ற ஒரு வகைப் பூண்டின் வேரிலிருந்து எடுக்கப்படும் மது என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது. அந்தப் பூண்டு எதுவென்று இன்றுவரை யாராலும் கண்டுடிக்க முடியவில்லை.

சோம்புதல், சோமை என்பவை செயலற்று, செயலிழந்திருக்கும் நிலையைக் குறிக்கும். மயக்கத்தைக் தருவது நிலா எனப்படும் மதி. ஆங்கிலத்தில் பித்தர்களை Lunatics என்று அழைப்பது வழக்கம். நிலவைக் குறிக்கும் Luna என்பதிலிருந்து இச்சொல் பிறந்தது. அதுபோல் மதி என்பதிலிருந்து மது வந்தது. மயக்கத்தைத் தருவதால் மதியைச் சோமன் (சோம்பலை, சோமையைத் தருபவன்) என்ற அழைத்தனர். எனவே சோமன் என்ற அடியிலிருந்து சோம பானம் பிறந்தது. சோம பானம் என்பதன் நேர்ப்பொருள் மது என்பதே. அதாவது இன்று சிறுதெய்வக் கோயிற்கொடைகளின் போது அரிசி மாவிலிருந்து செய்து படைக்கப்படும் அதே மதுதான்.

அதேபோல் சுரபானம் என்றால் என்னவென்று யாரும் இன்றுவரை கூறவில்லை. சுரக்கின்ற பானம் சுரபானம். பனம்பாளையிலிருந்து சுரக்கும் பனங்கள்ளே சுரபானமாகும். சுரபானம் தெய்வங்களுக்குப் படைக்கப்பட்டதாகவும் சோமபானம் மனிதர்களால் பருகப்பட்டதாகவும் வேதங்கள் கூறுகின்றன.[9]

சங்கதத்தில் சு என்ற எழுத்து பல சொற்களுக்கு முன்னொட்டாக வருகிறது. சொந்த, நல்ல என்ற பொருளில் இச்சொல் வருகிறது. தமிழில் சொந்தம், சொம்மு, சொத்து, சொக்காரன் போன்ற சொற்கள் சொம் என்ற வேரடியாகப் பிறந்தவை. இவ்வேர்ச்சொல் சுயம் என்று திரிக்கப்பட்டு சங்கதத்தில் இடம்பெற்றுள்ளது. சு என்ற வடிவில் சுதந்தரம், சுதேசி, சுசாதி, முதலியன இவ்வகையின. அதேபோல் எள் + நெய் = எண்ணெய். எண்ணெய் பொதுப் பெயராகியபோது பிற நெய்களிலிருந்து எள்ளின் நெய்யைப் பிரிக்க நல்ல என்ற அடைமொழியை அது ஏற்றது. செவிலித்தாயிலிருந்து பிரித்தறிய பெற்றதாய் நற்றாய் எனப்படுகிறாள். குமரி மாவட்டத்தில் மிளகு நல்ல மிளகென்றும் மிளகாய் கொல்லமிளகென்றும் அழைக்கப்படுகின்றன. மா மரம் நல்லமா என்றும் முந்திரி மரம் கொல்லமா என்றும் அழைக்கப்படுகின்றன. எனவே மூலமானது அல்லது சொந்தமானது என்ற பொருளில் நல்ல என்ற சொல் பயன்படுகிறது. எனவே சொந்தத்தைக் குறிப்பதற்காகக் கையாளப்பட்ட சு நல்ல என்ற பொருளிலும் கையாளப்பட்டுள்ளது. சுகந்தம், சுகுணம், சுநீதி போன்றவை சான்றுகளாகும்.

சொம் g சொந்தம்
சொம் g சுயம் g சு
நல்ல g சொந்த
நல்ல g சு

மை என்றால் கருமை என்பது பொருள். கரு என்றால் உடல் என்று பொருள். எனவே பிணத்தை மையம் என்பர். இடுகாடு மையவனமாகி மயானமாகி சுமசானம் என்றாகியது. இது சங்கதம்.

மை என்றால் கரு. கரு என்றால் நடு. எனவே நடுவுக்கு மையம்.
மை என்றால் கருமை. இருமை என்றால் கருமை. எனவே மை g இருமை.
மை என்றால் தன்மை. (எ-டு) “ பெருமை, அணிமை.
எனவே மை g இரண்டு g த்வம்(சங்கதம்) = தன்மை (எ-டு) முதலாளித்வம், பிரபுத்வம்.
மை = இருமை, இருமை g எருமை = கரிய விலங்கு g மையிடம் (கருமையின் இருப்பிடம்) எ-டு. குயில், மயில். மையிடம் g மகிசம் (சங்கதம்) = எருமை.

இச்சொற்கள் பல்பொருள் ஒரு சொல் (Homophones) என்ற உத்தியைப் பின்பற்றி உருவானவை. இவ்வாறு திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சங்கதச் சொற்கள் மிகப் பல.

சங்கதத்தை வட இந்திய மொழி என்றும் திராவிடத்தைத் தென்னிந்திய மொழி என்றும் கூறுவர். ஆனால் இந்தியா முழுவதுமுள்ள மொழிகளை எடுத்து ஆய்வு செய்தால் மேற்சாதியினரிடையில் சங்கதச் செல்வாக்கு மிகுதியாகவும் கீழ்ச்சாதிகளிடையில் அதற்குப் புறம்பான ஒரு மொழியின் செல்வாக்கு மிகுதியாகவும் இருப்பதைக் காணலாம். இதற்கு ஆரிய-திராவிட இன வேறுபாட்டைக் காரணமாகக் காட்டுவர். உண்மையில் ஒட்டுண்ணிகள் தங்கள் நலனுக்காக உருவாக்கிய சங்கதத்தின் செல்வாக்கினுள் மேற்சாதிகள் விழுந்தமையால் ஏற்பட்டதே இவ்வேறுபாடு.

சங்கதம் கூட நேரடியாகப் பார்ப்பனர்களால் ஏற்பட்டதல்ல. வாணிகர்கள் தங்கள் குழூஉக் குறியாகப் பயன்படுத்திய ஒரு மொழியிலிருந்தே உருவாக்கப்பட்டது. அதனால்தான் சிந்து சமவெளி எழுத்துக்களைப் பற்றி இருவேறு கருத்துகள் கூறப்படுகின்றன. அவை வாணிகர்களின் குழூஉக்குறி என்றும் அதில் ஒரு சொல் பல்பொருள் உத்தி பயன்பட்டிருக்கிறதென்றும் தமிழிலிருந்து அல்லது திராவிட மொழியிலிருந்து அவை உருவாயின என்றும் ஒரு சாரர் கூறுகின்றனர்.[10] இன்னொரு சாரார் சிந்து சமவெளி எழுத்திலிருந்துதான் வேத மொழியும் சங்கதமும் (வேத மொழிக்கும் சங்கதத்துக்கும் வேறுபாடுகள் உண்டு) தொன்மங்களும் தோன்றின என்றும் கூறுகின்றனர்.[11] இவ்விரு சாரரும் கருதுவது போல் இதில் தீர்க்க முடியாத முரண்பாடு எதுவும் இல்லை. மக்கள் மொழியிலிருந்து உருவான வாணிகக் குழூஉக் குறி பின்னர் சங்கதத்தின் வளர்ச்சிக்கு உதவியிருக்கிறது என்பதற்கு இக்கருத்துகள் ஆக்கம் தருகின்றன.

எனவே மக்களிலிருந்து முதன் முதலில் அயற்பட்ட வாணிகர்களோடு மக்கள் மொழியிலிருந்து அயற்பட்ட குழூஉக்குறி தோன்றியது. அவர்களையும் அடிப்படுத்திய ஒட்டுண்ணிகளாகிய அரசர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் பயன்படுவதற்காகச் சங்கதம் உருவாக்கப்பட்டது. இவ்வாறு இயல்பாகவே ஒட்டுண்ணிகளின் மொழியாகவும் குமுக உயர்வைக் குறிப்பதாகவும் சங்கதம் விளங்கியது.

வல்லின எழுத்துகளாகிய க, ச, ட, த, ப ஆகியவற்றுக்கு நான்கு வகை ஒலிகள் இந்திய மொழிகளில் மட்டுமே உள்ளன. இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததெனத் தவறாக (இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்ற கருத்தமைப்பே தவறானது)க் குறிப்பிடப்படும் சங்கதத்திலும் இந்த எழுத்துமுறை உண்டு. இது எந்த ஐரோப்பிய மொழியிலும் இல்லாத ஒன்று. எனவே இந்த எழுத்துமுறை சங்கதத்திலிருந்து பிற மொழிகளுக்குச் சென்றது என்பதைவிட இந்திய மொழிகளிலிருந்து சங்கதம் உருவாக்கப்பட்டு எழுத்து வடிவம் பெற்றபோது சேர்க்கப்பட்டது என்பதே பொருத்தம். வேதங்கள் நெடுங்காலம் எழுதாக் கிளவியாக எழுதப்படாமலே இருந்தன என்ற உண்மையாலும் இது உறுதிப்படுகிறது. இந்த எழுத்துக்கள் இல்லாமல் ஒரே விதிவிலக்காக இருப்பது தமிழே. ஆனால் வரிவடிவம் எனப்படும் வரியன்களில் ஒவ்வொன்றாக இருக்கும் இவ்வல்லெழுத்துகளுக்குக் குறைந்தது நான்கு ஒலியன்களாவது உண்டு. எடுத்துக்காட்டாகக் காகம் என்பதிலுள்ள முதல் எழுத்துக்கு க ஒலியும் இரண்டாவது எழுத்துக்கு H ஒலியும் உண்டு. காக்கை என்பதில் கைக்கு க2 ஒலியும் தங்கை என்பதிலுள்ள கைக்கு க3 ஒலியும் ஆக நான்கு ஒலியன்கள் உண்டு. இதுபோன்றே பிற வல்லின எழுத்துகளும். பிற மொழிகளில் உள்ள நான்காவது ஒலி தமிழில் இல்லை. ஆனால் ற கரத்துக்கு இரண்டு ஒலியன்கள் குற்றம், குறம் என்ற சொற்களில் வருவது போல் உள்ளன. இது பிற மொழிகளில் இல்லை. நடபடி, குடபுலம் போன்ற சொற்களில் பகரத்திற்கிருக்கும் ஒலி பிற மொழிகளில் இல்லை.

நான்காவது ஒலியன் அந்தணர் மறைகளில் உள்ளதாகவும் அதைத்தான் தவிர்ப்பதாகவும் தொல்காப்பியர் கூறுகிறார்.

எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளர்ந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியிற்
பிறப்பொடு விடுவழி யுறழ்ச்சி வாரத்து
அகத்தெழு வளியிசை அரில்தப நாடி
அளவிற் கோடல் அந்தணர் மறைத்தே
அஃதிவண் நுவலா(து) எழுந்துபுறத் திசைக்கும்
மெய்தெரி வளியிசை யளபுநுவன் றிசினே
(தொல்., எழுத்து, 102)

இந்த நிகழ்முறையின் போது தமிழின் எழுத்துகளின் எண்ணிக்கை சுருக்கப்பட்டு 30 முதலெழுத்துகளும் 3 சார்பெழுத்துகளும். (முதலெழுத்துகள் அ முதல் ஒள வரை 12 உயிரெழுத்துகளும் க முதல் ன வரை 18 மெய்யெழுத்துகளும் சார்பெழுத்துகள் குற்றியலுகரம் குற்றியலிகரம் ஆய்தம்) சேர்ந்து 33க்குள் அடக்கப்பட்டன. இம்முயற்சியில் நிகழ்ந்த ஒரு பிழை நகரத்தில் தோன்றுகிறது. தகரத்துக்கு முந்திய ஒற்றெழுத்தாக வரும் ஒலிப்பு மட்டுமே உடைய நகரம் (தந்தை, பந்து) மொழிக்கு முதல் எழுத்தாகவும் பயன்படுத்தப்பட்டு ஒரு முரண்பாடாக நிற்கிறது. ஒரே எழுத்தே நகரம் னகரம் இரண்டின் பணியையும் ஆற்ற முடியும். அதேபோல் றகரம், ரகரம் ஆகிய எழுத்துகளும் ஒன்றுக்குப் போலியாய் இன்னொன்று செயற்படுவதையும் ளகரமும் ழகரமும் கூடச் சில வேளைகளில் இடம்மாறி வருவதும் கண்கூடு.

ஒரு வேளை அதன் பிறகே அதுவரை இருந்த மொழி நடையிலிருந்து தமிழ் மாறியிருக்க வேண்டும். இந்த மாற்றம் ஒரு வேளை முந்திய இலக்கியங்கள் தொகுக்கப்படாமைக்கு அல்லது அழிக்கப்பட்டமைக்குக் காரணமாகவும் இருக்கலாம். இது எத்தகைய குமுக முரண்பாடுகளிலிருந்து தோன்றியிருக்கும் என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும். உழைக்கும் மக்களின் மொழி நடையிலிருந்து மாறுபட்ட, அதாவது வெவ்வேறு உழைப்புச் செயல்முறைகளின் போது எழுப்பபப்படும் வெவ்வேறு சிறப்பு ஒலிகளையும் சிறப்புச் சொற்களையும் தவிர்த்துப் “பொதுவாக” ஒரு மொழியை இறுத்தெடுக்கும் ஆளும் வகுப்புகளின் முயற்சியாகவும் இது இருக்கலாம். ஆனால் வரலாற்று விந்தையாக இது பார்ப்பனர்களின் மேலாண்மையையும் அவர்களது கருவியாகிய சங்கதத்தையும் எதிர்க்கும் ஒரே கருவியாக, இந்தியாவிலுள்ள ஒரே கருவியாக இன்றளவும் பயன்பட்டு வருகிறது.

அண்மைக் காலங்களில் கணிப்பொறி வல்லுநரும் தமிழ் எழுத்தாளருமான திரு. சுசாதா தமிழ் எழுத்து முறையின் மேன்மை பற்றி தனக்குள் எழுந்த வியப்பைப் பல அரங்குகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். கணிப்பொறி ஆணைகளைப் பதிவதற்கு உலகிலுள்ள பிற மொழிகளைவிடத் தமிழ் எழுத்துமுறை மிகச் சிக்கனமாகவும் சிறப்பாகவும் இருக்கிறதென்ற உண்மையே அவரை அவ்வாறு வியப்படைய வைத்துள்ளது.

விண்வெளியில் சென்று ஆங்காங்குள்ள கோளங்கள், விண்மீன்களை நேரடியாகக் கண்டு வந்தவர்கள் போல் செய்திகளைச் சொல்வாருமுளர் என்றொரு புறநானூற்றுப் பாடல் கூறுகிறது. தமிழர்கள் அவ்வாறு விண்வெளிப் பயணங்கள் மேற்கொண்டிருக்கலாம் என்பதைக் காட்டும் தடயங்கள் எத்தனையோ உள்ளன. அப்படியானால் இன்றுபோல் கணிப்பொறியை ஒத்த ஒரு கருவியின் தேவைகளுக்காகத் தமிழ் எழுத்துகள் மாற்றப்பட்டுமிருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது.

கழகக் காலத்திலேயே மதுரையில் மறை ஓசையும் வேள்விப் புகையும் நிரம்பியிருந்தன என்று மதுரைக் காஞ்சி போன்ற நூல்கள் கூறுகின்றன. சேரனின் வஞ்சியில் சிவன் கோயிலுள்ளிருந்து பார்ப்பனப் பூசாரி தலைநீட்டுவதைச் சிலப்பதிகாரம் காட்டுகிறது. இது கோயிலுக்குள் சங்கதம் அப்போதே நுழைந்து விட்டதை ஐயத்திற்கிடமின்றிக் காட்டும் சான்றாகும். ஆட்சியிலும் நுழைந்திருந்ததா என்பது மட்டும் ஆய்வுக்குரியது.

தமிழகத்தில் புதியதாகத் தோன்றிய பல்லவ அரசுதான் முதன் முதலில் சங்கதத்தை ஆட்சி மொழியாக்கிற்று என்று தோன்றுகிறது. சங்கதப்படுத்தல் அல்லது பார்ப்பனியம் எனப்படும் வெள்ளாளக்கட்டு பற்றிய தெளிவில்லாத வரலாற்று ஆசிரியர்கள் பல்லவர்களைத் தமிழகத்தின் வெளியே, ஆந்திரத்திலிருந்தும் இன்னும் சிலர் அவர்களைப் பாரசீகத்திலிருந்தும் வரவழைக்கிறார்கள். சங்கதத்தை ஆட்சிமொழியாக அவர்கள் கையாண்டதாலேயே இவ்வித மயக்கம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. உண்மையில் சோழரோடு உறவுள்ள திரையர் எனப்படும் ஒரு மரபே தம் பெயரைப் பல்லவர் என மொழிபெயர்த்துக் கொண்டு தோன்றியுள்ளது. கழகக் காலத்திலேயே மூவேந்தரும் பார்ப்பனர் மேலாண்மையையும் அவர்களது வேள்வியையும் சங்கதத்தையும் ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு இறையிலியாக (முற்றூட்டாக) ஊர்களையும் நாடுகளையும் அளித்துச் சங்கதப்படுத்தலுக்கான விதைகளை ஊன்றினர். அதன் எதிர்விளைவே களப்பிரர் எழுச்சிக்கு உறுதுணையாக இருந்தது. சங்கதப்படுத்தல் அவர்களையும் தாக்கியது. அவர்கள் தமிழகத்துக்கு வெளியிலிருந்து பார்ப்பனர்களை இறக்குமதி செய்து உள்நாட்டுப் பார்ப்பனர்களிடமிருந்து முற்றூட்டுகளைப் பிடுங்கி அவர்களுக்கு அளித்தனர். எனவே அவர்கள் காலத்தில் மீண்டும் தலைதூக்கிய திரையர்கள் தம் பெயரைப் பல்லவர் (பல்லவம்-திரை-கடல் அலை, கடல்) என மொழி பெயர்த்துக் கொண்டனர். பல்லவம் என்ற சொல்லும் தமிழ் வேரிலிருந்து தோன்றியதே. பல் அலை போல் மேடுபள்ளங்களை உடையது. அலைப்பாங்கான அமைப்பை ஆங்கிலத்திலும் Indentations என்பர். (Dentis = பல்)

அன்றிலிருந்து புதிதாக மேனிலைக்கு வரும் ஒவ்வொரு குழுவும் சங்கதப்படுத்தலுக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டது. முன்பு அதிகாரத்திலிருந்த குழுவினரின் ஏற்பைப் பெறுவதன் மூலம் மக்களின் ஏற்பைப் பெறுவதைத் தன் முதல் நோக்கமாகக் கொண்டது. பழைய குழுவினரிடம் மணவுறவு கொள்வதற்காகப் பெண் கேட்டது. மறுத்தபோது அவர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டது. அவர்கள் நாட்டை விட்டு அல்லது இருப்பிடத்தை விட்டுப் பெயரவேண்டியதாயிற்று. இந்நிகழ்முறைத் தொல்காப்பியத்தில் மகட்பாற் காஞ்சி எனப்பட்டது.

இப்படிப் புதிய மன்னர்கள் (விருந்தின் மன்னர்) பெண் கேட்பதும் அதற்கு உடன்படாது பழைய ஆட்சி மரபினர் இடம்பெயர்வதும் நம் நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுள்ளது என்பதற்குச் சாதி வரலாறுகளில் நிறையச் சான்றுகள் உள்ளன. பூம்புகார்ச் சோழன் பெண் கேட்டான் என்பதற்காக அந்நகரையே தீக்கிரையாக்கி விட்டுத் தாம் வெளியேறி விட்டதாகச் செட்டியார்களின் வரலாறு கூறுகிறது.[12] கள்ளர்கள் பெண் கேட்டதால் தாங்கள் வெளியேறி விட்டதாக மதுரையிலுள்ள மூப்பனார்கள் எனும் சாதியினர் கூறிக்கொள்கின்றனர்.

ஆந்திர நாட்டில் முகம்மதியர்கள் படையெடுத்தபோது அங்குள்ள மக்களிடம் பெண்கள் கேட்டதாகவும் அதனால் தாங்கள் தமிழ் நாட்டுக்கு ஓடி வந்ததாகவும் தமிழ் நாட்டிலுள்ள தெலுங்கு பேசும் பல குழுக்களிடையில் கதைகள் வழங்குகின்றன. தமிழ் பேசும் மக்களிடையிலும் முகம்மதியர்களைப் பற்றிய இதுபோன்ற பல கதைகள் உள்ளன. இந்த நிகழ்முறையை, அதாவது முகம்மதியர்கள் பெண் கேட்டதை மட்டும் தனிமைப்படுத்தி, நம் குமுகத்திலுள்ள ஒரு நிகழ்முறையின் தொடர்ச்சியே இது என்பதைச் சுட்டாமல் சிலர் இந்நிகழ்ச்சிகளைப் பெரிதுபடுத்தி இரா.சே.ச.வின் (R.S.S.) மதவெறி பரப்பலுக்குத் துணை நிற்கிறார்கள். இந்துக்களின் காப்பாளர் எனப் புகழப்படும் விசயநகரத்தாரின் வழித்தோன்றல்களான நாயக்கர்களில் பலர் பெண் கேட்டுத் தமிழகத்திலுள்ள மக்கள் இடம் பெயர்ந்திருக்கிறார்கள். திருமலை நாயக்கன் பேரில் இத்தகைய கதைகள் பல வழங்குகின்றன.[13] தம் பெண்களைக் கொள்ளுமாறு பழைய மரபினரைக் கட்டாயப்படுத்தவும் செய்துள்ளனர். இங்குள்ள சாதிகளில் பார்ப்பனர் தவிர்த்தோர் பிறசாதிப் பெண்ணை ஏற்றுக் கொள்வர். ஆனால் பார்ப்பனர் மட்டும் பெண் கொடுத்தாலும் எடுக்க மாட்டார். அதேபோல் கன்னட அரசர்களில் ஒருவன் ஒரு பாண்டியச் சிற்றரசனைப் பெண் எடுக்குமாறு வற்புத்தியதால் ஏற்பட்ட போரைக் குறிப்பிடுகிறது ஐவர் ராசாக்கள் கதை. இக்கதையைப் பற்றிக் கருத்துக் கூறிய பேரா.நா. வானமாமலை ஓர் இந்திய இயக்கமாக வளர்ந்த விசயநகரப் பேரரசின் ஆதிக்கத்துக்கு அடிபணிய மறுத்ததின் மூலம் பாண்டியச் சிற்றரசன் இந்தியத் தேசிய வளர்ச்சிக்கு இடையூறாக நின்றான் என்று கூறுகிறார். அவர் கூறும் “இந்தியத் தேசிய உணர்ச்சி” விசயநகரப் பேரரசர்களுக்கும் அல்லது அவர்களின் பேராளர்களாய்த் தமிழகம் வந்தவர்களுக்கும் கொஞ்சம் கூட இருந்ததாக வரலாறு காட்டவில்லை. மாறாக வல்லரசியர்களுக்கு வழக்கமான கொடுமையையும் பேராசையையுமே அவர்களது வரலாறு காட்டுகிறது. இக்கருத்துக் கூறலின் மூலம் வானமாலையாரின் தில்லித் தரகு மனப்பான்மையும் வெளிப்படுகிறது. இந்தியப் பொதுமையினரின் பிறவிக் குணங்களில் இதுவும் ஒன்று.

மகட்கொடை மறுப்பது என்பது புதிய அதிகாரத்துக்கு அடிபணிய மறுப்பதற்கு அடையாளமாக மக்கள் கைக்கொண்ட ஒரு குமுகியல் நடைமுறையாகும். காட்டிக் கொடுக்கும் கூட்டத்தார் தம் பெண்களைக் கட்டிக் கொடுப்பதன் மூலம் புதிய கூட்டங்களுக்கு ஒத்துப்போய்த் தங்களை நிலைப்படுத்திக் கொண்டனர். மறுத்தவர்கள் அரசியல், பொருளியல் மற்றும் குமுகியல் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாயினர். மேலிருந்த சாதியினர் தாழ்வடைவதற்கும் கீழிருந்தோர் உயர்நிலை அடைவதற்கம் இந்த அரசியல் நிகழ்வுகள் பெரும் பங்காற்றியுள்ளன. குமுக வரலாறு எழுதுவோர் இத்தகைய அரசியல் நிகழ்வுகளைச் சாதிகளின் வரலாற்றின் துணைகொண்டு ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு மேல்நிலையாக்கம் என்று நம் மேற்சாதி அறிஞர்கள் கூறும் சங்கதப்படுத்தலின் விளைவாகத் தமிழில் பெருமளவு சங்கதக் கலப்பு ஏற்பட்டது. தரகுத் தன்மை கொண்டிருந்த அரசோடும் அதன் சமயமாக விருந்த சமணத்தோடும் முரண்பட்ட தமிழகத்து உடைமை வகுப்புகள் மக்களின் துணையைப் பெறுவதற்காகவும் தேசிய உணர்வுகளைத் தட்டியெழுப்பவும் தனித்தமிழ் இயக்கத்தைச் சிவனிய இயக்கத்தோடு இணைத்தன. முன்பு சுட்டிக்காட்டியது போல் வெள்ளையர் வரும் நேரத்திலும் இத்தகைய முயற்சியொன்று நடைபெற்றது. பின்னர் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இறுதியாக அவ்வியக்கம் உயிர்பெற்றது. அதைத் தொடங்கி வைத்தவர்கள் பார்ப்பனரும் பிற மேற்சாதியினரும், குறிப்பாக வெள்ளாளர்களும் ஆவர். நாயக்கர் ஆட்சிக் காலத்தில் ஆதிக்கம் பெற்று உள்நாட்டுத் தமிழ் பேசும் பார்ப்பனர்களை இழிவாக மதித்த பிறமொழிப் பார்ப்பனர்களை எதிர்த்துச் சில தன்மானமுள்ள தமிழ்ப் பார்ப்பனர்கள் நடத்திய ஆய்வு முயற்சிகள் மறைமலையடிகள் போன்றோருக்குப் பெரும் தூண்டுகோலாகவும் ஊன்றுகோலாகவும் இருந்தன.

மறைமலையடிகளின் வரலாற்றியல் மற்றும் மெய்யியல் நோக்குகள் சில வகைகளில் பிற்போக்குடையவையே. பலதார மணம் ஆண்களுக்கு இன்றியமையாதது என்றது, வெள்ளாளரே உண்மையான தமிழர் என்றது, ஆவியுலகம் பற்றிய அவரது கருத்துகள் முதலியவை அவற்றில் சில. ஆனால் அவரிடம் காணப்பட்ட ஒரு முற்போக்குக் கூறு மேற்சாதியினரான பார்ப்பனரை எதிர்ப்பதற்காகக் கீழ்ச்சாதியினரோடு (தமிழர்கள், திராவிடர்கள் என்ற பெயரில்) தன்னை ஒன்று சேர்த்துக் கூறக் கூச்சப்படாமையே. நம் நாட்டுச் சாதியமைப்பில் பார்ப்பனருட்பட அனைவரிடமும் உள்ள ஓர் இயல்பு ஓர் இரட்டைத் தன்மையாகும். தமக்குக் கீழிருக்கும் சாதியினருடன் தோழமை கொள்வதை விடத் தமக்கு மேலிருக்கும் சாதியினருக்குக் குனிந்து கொடுப்பது மேல் என்பது ஒன்று, தமக்குக் கீழிருப்போரை அணைத்துச் சென்றாவது மேலிருப்போரை எதிர்ப்பது என்பது இன்னொன்று. இதில் முதல் வகையினரைப் பிற்போக்கர் என்றும் பின்னவரை முற்போக்காளர் என்றும் நாம் கொள்கிறோம். அந்த வகையில் தான் மறைமலையடிகளின் தனித்தமிழ் முயற்சியையும் பார்ப்பன எதிர்ப்பினையும் நாம் வரவேற்கிறோம். மறைமலையடிகளின் தனித்தமிழ் இயக்கத்தைக் குறை கூறுவோர், குறிப்பாக, ஈழத்துக் கைலாசபதியும் சிவத்தம்பியும் அவர் மீது சுமத்தும் குற்றச்சாட்டு அவர் உயர்சாதியான வெள்ளாளர் என்பதாகும். ஆனால் அவர்கள் இருவருமே தமிழகத்து வெள்ளாளரைவிடப் பல்மடங்கு சாதி வெறியும் சாதித் திமிரும் கொண்ட ஈழத்து (யாழ்ப்பாணத்து) வெள்ளாளர்களே. தான் சார்ந்திருந்த இயக்கமாகிய பொதுமைக் கட்சியைச் சேர்ந்த கீழ்ச்சாதித் தலைவர்களைக் கூடத் தன் வீட்டிலுள் நுழையவிடாதவரென்று பெயரெடுத்தவர் “தோழர்” கைலாசபதி. இவர்கள் மறைலையடிகளை எதிர்த்ததே வெள்ளாளக்கட்டு எனும் நிகழ்முறையின் ஒரு கூறான சங்கதம் போற்றுதல் என்பதைக் கைவிட்டு அதைத் தூற்றிப் பொதுமக்கள், அதாவது கீழ்ச்சாதியினர் மொழியான தமிழைப் போற்றுகிறாரே என்பதுதான். பெரும்பான்மை வெள்ளாளர் மற்றும் சிறுபான்மைப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்திலிருந்த இந்தியப் பொதுமைக் கட்சியின் தமிழகக் கிளை பெரியாரை வரிந்து கட்டிக்கொண்டு எதிர்த்தது ஏன்? கீழ்ச்சாதியினருக்குத் தேவை குமுகியல் உரிமையா வயிற்றுக்குக் கஞ்சியா என்று கேட்டு வயிற்றுப் போராட்டமான பொருளியல் போராட்டத்தைக் குமுகியல் போராட்டத்திலிருந்து பொதுமைக் கட்சியினர் பிரித்தது ஏன்? வெளிப்படையாக இல்லையாயினும் உள்ளுணர்விலாயினும் அவர்களுக்கிருந்த உயர்சாதி மனப்பான்மையே இதற்குக் காரணம்.

இவ்விரு வெள்ளான அறிஞர்களின் உள்ளக்கிடக்கையும் அவர்கள் தனித்தமிழ் இயக்கம் பற்றி எழுதியுள்ள ஆய்வுரைகளிலிருந்து தெளிவாய்ப் புலப்படுகிறது. எப்படி யென்றால் இருவரும் தம் “ஆய்வுரைகளை” மறைமலையடிகளோடு நிறுத்திக் கொண்டுள்ளனர். இவர்கள் இவ்வாய்வுரைகளை எழுதியபோது வலுப் பெற்றுவிட்ட தேநேயப் பாவாணர் கீழ்ச்சாதியினர். அவர் பள்ளச்சாதித் தாய்க்கும் மறச்சாதித் தந்தைக்கும் பிறந்தவர். பாவாணர் தான் பள்ளச் சாதியைச் சேர்ந்தவர் என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அவரது தந்தையின் உறவினர் இவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் நெல்லை மாவட்டத்து நாட்டுப்புறத்தில் பிறந்து வளர்ந்தவர் அவர். நாட்டுப்புற மக்களின் பேச்சு மொழியிலிருந்தே அவர் தன் மொழி நடையை வகுத்துக் கொண்டார். இப்படித் தனித் தமிழ் இயக்கம் புதுப்பாதையில் நடைபோட்டபின் ஒன்று நன்றாக விளங்குகிறது. இலக்கியத் தமிழ் எனப்படுவதும் நாட்டுப்புறத் தமிழ் என்பதும் ஒன்றே என்ற உண்மைதான் அது. அத்துடன் நம் நாட்டில் தொகுக்கப்பட்ட கழக இலக்கியங்களிலும் அகராதிகளிலும் இல்லாத எத்தனையோ தனித்தமிழ்ச் சொற்கள் இன்றும் நாட்டுப்புறங்களில் உயிருடன் வாழ்ந்து வருகின்றன என்ற உண்மையும் இன்று புலப்பட்டு வருகிறது. நாட்டுப் புறங்களில் நிலவும் அனைத்துச் சொல் வழக்குகளையும் திரட்டினால் தமிழில் தோன்றியுள்ள எந்த அகராதிகளையும் போல் பன்மடங்கு பெரிய அகராதி ஒன்றை உருவாக்க முடியும் என்பதும் இன்று பலருக்கு விளங்கத் தொடங்கியுள்ளது.

கைலாசபதியும் சிவத்தம்பியும் தேவநேயப் பாவாணரைத் திறனாய்வு செய்யாமல் விட்டுவிட்டது இதனாலேயே. மறைமலை அடிகளின் செயற்பாடு பார்ப்பனர்களுக்கெதிராகவும் மேற்சாதியினருக்கெதிராகவும் கீழ்ச்சாதியினரைத் திரட்ட முயன்றதை அவர்களது மேற்சாதி உணர்வால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பாவாணரின் முயற்சிகள் அவரது சாதிப் பின்னணிக்குப் பொருத்தமானது என்று அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம்.

வெள்ளாளக்கட்டு மேற்கொள்வோர் செய்யும் செயல்களிலொன்று தம் சாதி மொழி வழக்குகளையும் நாட்டுப்புற மொழி வழக்குகளையும் இழிந்தவையாகக் கருதி அவற்றைக் கைவிட்டு மேற்சாதி மொழி வழக்கான கலப்புத் தமிழைக் கைக்கொள்வதாகும். மறைலை அடிகள் மேற்சாதியினராதலால் கீழ்ச்சாதி மக்களின் மொழி வழக்குகளை அறியாதவரானார். பாவாணர் சாதித்தாழ்வு மனப்பான்மைக்கு உட்பட்டவராயிருந்ததால் கீழ்ச்சாதி மக்களின் மொழியே தனித்தமிழ் என்பதை வெளிப்படையாக வலியுறுத்திக் கூறாமல் விட்டார். அண்மையில் வெளியிடப்பட்டிருக்கும் அவரது ஆக்கமான செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகர முதலி முதல் மடல முன்னுரையில் கால்டுவெலார் அன்றே கண்டு சொன்ன இந்த உண்மையை மேற்கொள்ளுவதோடு விட்டுவிட்டார். எனவே முன்னவர் மேற்சாதியினரை நோக்கித் தன் இயக்கத்தை நடத்தினார்; பின்னவர் பார்ப்பனியம் எனும் வெள்ளாளக்கட்டு மேற்கொண்ட கீழ்ச்சாதியினரை நோக்கிச் செலுத்தினார். தனித்தமிழ் இயக்கத்தின் வகுப்பு நோக்கு (Class orientation) அறிந்து கொள்ளக் கடமைப்பட்டவர்கள் மார்க்சியர்களே. அவ்வடைமொழி தாங்கியோரோ இன்றுவரை பார்ப்னர்களுக்கு நாணயமாகப் பணியாற்றுவதே மார்க்சியத்தின் நோக்கம் என்பது போன்ற குறிக்கோளை வகுத்துக்கொண்ட மேற்சாதியினரும் வெள்ளாளக்கட்டின் மீது மீளாக் காதல் கொண்ட கீழ்ச் சாதியினருமே.

உண்மையான பண்பாட்டுப்பணி மேற்கொள்ளவேண்டுமென்று கருதும் மார்க்சியர்கள் தனித்தமிழ் இயக்கத்தை ஆதரிப்பது மட்டுமல்ல, கீழ்ச்சாதி மக்களிடையிலிருக்கும் தனித்தமிழ்ச் சொற்களை இனம்கண்டு தாம் கற்றுக் கொள்வதுடன் அவற்றின் சிறப்புகளை அம்மக்களுக்கு விளக்கி அவற்றைத் திருத்தமுறப் பயன்படுத்தும் பயிற்சியையும் ஊட்டுவதேயாகும்.

தனித்தமிழ் இயக்கத்தைப் பற்றிக் கூறும்போது “சிவனியத்தையும் தமிழையும்” சேர்த்து வளர்ப்பவையாகக் கூறப்படும் சிவனிய மடங்களின் செயற்பாட்டை நாம் பகுத்தாய வேண்டும். இராசராசன் காலந்தொட்டு சிவனியம் முழுத் தரகுத்தன்மை பெற்றிருந்தது. கழுவேற்றலினாலும் கலகத்தாலும் துடைத்தெறிய முடியாத சமணத்தை எதிர்கொள்ள ஆயிரம் பார்ப்பனரைக் காசியிலிருந்து இறக்குமதி செய்து காவிரியின் மிக வளமுள்ள படுகை நிலங்களை அவர்களுக்கு முற்றூட்டாக வழங்கினான் இராசேந்திரன். பிற்காலச் சோழர் ஆட்சி தன் தொடக்கத்திலேயே சங்கதத்தை ஓட்டியே தோன்றியது. தமிழுணர்வைப் பயன்படுத்தி வளர்ந்த சோழப் போரரசு இவ்வாறு தமிழர்களைக் காட்டிக் கொடுத்தது. மக்களைக் கவரவும் சமணத்தை எதிர்கொள்ளவும்தான் இராசராசன் தேவாரத் திருமறைகளைத் தில்லைப் பார்ப்பனர்களிடமிருந்து மீட்க வேண்டிவந்தது. இவ்வாறு சிவனியம் தொடக்கத்திலிருந்தே இரட்டை உருத்தாங்கியே வந்தது.

சிவனிய மடங்கள் ஆற்றியுள்ள “தமிழ்ப் பணிக்”குச் சிறந்த ஓர் எடுத்துக்காட்டு உ.வே.சாமிநாதையர் வாழ்க்கையாகும். தன் வாழ்க்கை வரலாற்றில் தம் ஆசிரியர்களான மீனாட்சி சுந்தரனாரும் திருவாவடுதுறை ஆதினத் தலைவர் சுப்பிரமணியத் தேசிகரும் தாம் அறிந்திருந்தும் அவருக்குக் கழக இலக்கியங்களையும் ஐம்பெருங் காப்பியங்களையும் கற்பிக்கவில்லை. அவர்கள் அவற்றைப் படித்திருக்கவில்லை என்றே சாமிநாதர் கருதினார். சேலம் இராமசாமி முதலியார் என்பவர் கொடுத்த சிந்தாமணிப் படியே அவர் முதன்முதல் படித்த பழந்தமிழ் நூல். இந்நூலைப் பற்றித் தேசிகரிடம் சாமிநாதர் கூறிய போது மீனாட்சி சுந்தரனார் எழுதி வைத்திருந்த சீவகசிந்தாமணிப் படியை எடுத்து அவர் சாமிநாதரிடம் கொடுத்தார். மீனாட்சி சுந்தரனாரும் தேசிகரும் ஏன் அதனை முதலிலேயே கொடுக்கவில்லை? சமண இலக்கியமான சீவகசிந்தாமணிமையையும் சிவனியத்துக்குப் புறம்பானவையாகக் கருதப்பட்ட கழக இலக்கியங்களையும் பயில்வதும் பயிற்றுவிப்பதும் சிவனியத்துக்கு எதிரான செயல்களாகக் கொள்ளப்பட்டன. சீவக சிந்தாமணி பதிப்பிக்கப்பட்ட பிறகு அதற்குச் சிவனியர்களிடமிருந்து வந்த எதிர்ப்பு பெரிது. இவற்றுக்கு அஞ்சியே மீனாட்சி சுந்தரனாரும் சுப்பிரமணியத் தேசிகரும் தாம் அந்நூலைப் படித்ததையோ தம்மிடம் அந்நூற் சுவடி இருந்ததையோ மறைந்து வைத்திருந்தனர்.[14] சாமிநாதர் என்ற ஒருவர் தற்செயலாகப் பதிப்புத் துறையில் இறங்கியிராவிட்டால் இந்நூற்கள் என்று பதிப்பிக்கப்பட்டிருக்குமோ அறியோம்.

வைணவம் எனப்படும் மாலியம் தமிழோடு ஒன்றி நின்ற காலம் சிறிதேயாம். வடக்கில் உருவான பதின்தோற்றரவு (தசாவதார)த் திருமாலை விடத் தமிழ் நாட்டில் பிறந்த ஆழ்வார்களை அதிகமாகப் போற்றும் ஒரு குழலில் தான் மாலியத்தால் தமிழ் சிறிது ஆக்கம் பெற்றது. பின்னர் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அது தமிழையும் தமிழக மக்களையும் ஒடுக்கும், முற்றிலும் தரகுத்தன்மை பெற்ற, சமயமாகிவிட்டது. அதே சமயத்தில் சிவனியத்தைக் கைக்கொண்ட மேற்சாதியினரின் கொடுமையால் துயருற்ற கீழ்ச்சாதி மக்களிடையிலும் அதன் செல்வாக்குப் பரவியதற்கான தடயங்கள் சில காணப்படுகின்றன. நம் நாட்டிலுள்ள குமுக விந்தைகளில் இதுவொன்று. வடக்கிலுள்ள மார்வாரிகளால் புரக்கப்பட்டு இங்குள்ள பார்ப்பனர்களால் பேணப்படும் இந்து மத மீட்பியக்கம் இன்று மேற்சாதிப் பிற்போக்காளர்களாலும் ஒடுக்கப்படும் கீழ்ச்சாதியினராலும் ஒருங்கே தழுவப்படுவதைப் போன்றதொரு பிற்போக்குச் சூழல் அது.

சமயங்களுக்கும் தமிழ் மொழிக்குமுள்ள உறவு காலத்துக்குக் காலம் மாறி வந்துள்ளது. பெரும்பாலும் புதிய சமயங்கள் மேல்வகுப்பாரையே முதலில் ஈர்க்கின்றன. வள வாழ்வுக்கு மதமாற்றம் உதவும் என்பதற்காக அவர்களே முதலில் மதம் மாறுகின்றனர். தமக்கு எளிய, பெரும்பான்மை மக்களின் பின்னணி வேண்டும் என்ற சூழ்நிலையில் தான் அவர்கள் கீழ்ச்சாதி மக்களின் மொழியை மதிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். ஆட்சி தம் கைகளுக்கு வந்நதும் மீண்டும் அயல் மொழியைப் பற்றிக் கொண்டு மக்களிலிருந்து அயற்படுகின்றனர். சிலப்பதிகாரத்தின் கதைத் தலைவர்கள் சமணர்கள்(“சாவக நோன்பிகள் அடிகளாதலின்……”- அடைக்கலக் காதை). சமணம் வெளிச் சமயம் என்பதைச் சுட்டிக்காட்டும் சான்றுகளை இளங்கோ அடிகளே காட்டுகிறார். ஆனால் அவரைப் பொறுத்தவரை எளிய மக்களின் இலக்கிய வடிவங்களைக் கையாண்டு தமிழ்த் தேசிய உணர்வுகளைக் காட்டுகிறார். பின்னர் எழுந்த சமண இலக்கியங்கள் அயல் அரசர்களின் கதைகளைக் கூறுவனவாகவே இருந்தன. புத்த சமய இலக்கியமான மணிமேகலை உள்நாட்டுக் கதையைக் கூறினாலும் ஆள்பெயர்கள், இடப்பெயர்களை மொழிபெயர்ப்பதில் பெரும்பங்காற்றியுள்ளது. கிறித்துவம் முதலில் தமிழை வளர்ப்பதில் பெருந் தொண்டாற்றினாலும் இன்று கிறித்தவர்கள் எனப்படும் வேதக்காரர்கள் அதிலும் குறிப்பாக, ஆங்கிலேயருடைய சமயமான சீர்திருத்த சபை வேதக்காரர்கள் தமிழையும் தமிழ் கற்றோரையும் இழிவாகக் கருதுவதில் பார்ப்பனரையும் மிஞ்சி நிற்கின்றனர். முகம்மதியர்கள் மதப் பரவலுக்காகச் சில தமிழ் நூல்களை எழுதி இருந்தாலும் “உருது பேசுபவனே உண்மை முசுலீம்” என்று இன்று முழங்குகின்றனர். 1967க்குப் பின், அரபு நாடுகளில் உருவான கல்லெண்ணெய்க் காசு நடமாட்டத்தின் பின் உருவானதே இந்நிலை. அத்துடன் சமய நிகழ்ச்சிகளில் அரபு மொழியே முழு ஆதிக்கம் செலுத்துகிறது.

பார்ப்பனர்களோடு தமக்கு ஏற்பட்ட பிணக்கில் வெற்றிபெறத் தமிழைத் தூக்கிப் பிடித்த சிவனியர்களான வெள்ளாளர்கள் இன்று அப்போட்டியில் பார்ப்பனர்களுடன் ஓர் உடன்பாடு ஏற்பட்டதும் மீண்டும் தமிழ் அழிப்புப் பணியில் இறங்கிவிட்டனர். இன்று இருவரும் சேர்ந்து எளிய மக்களை ஏமாற்றுகின்றனர். அவர்களுடன் பார்ப்பனியம் எனப்படும் வெள்ளாளக்கட்டை மேற்கொண்டு விட்ட கீழ்ச்சாதியினரும் சேர்ந்து கொண்டுள்ளனர்.

தமிழ்மொழியின் இலக்கண இலக்கியச் சிறப்புகள் பற்றியோ சங்கதத்தின் சிறப்பின்மை பற்றியோ இங்கு ஆயப்படவில்லை. மக்கள் பேசும் அனைத்து மொழிகளும் சமமானவை; அவற்றை ஒன்றோடொன்று ஒப்புமை காட்டிப் பேசுவது இயலாது, சரியாகாது என்பது மொழிநூலாரின் முடிவு. மொழிகள் அவற்றைப் பேசும் மக்களின் பருப்பொருட் சூழல் அதாவது நிலச்சார்வு அதன் அடிப்படையாக உருவாகும் பொருளியல் வாழ்வு, பண்பாடு ஆகியவற்றிற்கேற்ப அமைகின்றன. அவ்வாழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்பத் தம்மைத் தகவமைத்துக் கொள்ளும் திறனுடையன என்பது அவர்கள் கொள்கை. ஆனால் தமிழையும் சங்கதத்தையும் பொறுத்தவரையில் ஓர் அடிப்படை வேறுபாடுள்ளது. தமிழ் மக்கள் பேசும் மொழி, சங்கதமோ மக்கள் பேசாத, மக்கள் பேசக் கூடாது என்ற நோக்கத்துடன் குமுகத்தை உறிஞ்சி வாழும் ஒர் சிறு ஒட்டுண்ணிக் கூட்டத்தின் மொழி. அதனாலேயே அக்கூட்டம் அதே வேலையாய் அக்குமுகத்தில் அகத்திலும் புறத்திலும் ஏற்படும் மாற்றங்களையும் புதுமைகளையும் உட்செரித்துக் கொண்டு அம்மொழியை மக்கள் மொழிகளின்றும் உயர்ந்த தெய்வமொழி என்றும் தமிழையும் பிற மக்கள் மொழிகளையும் கீழ் (நீச) மொழிகளென்றும் சொல்லிச் வந்திருக்கின்றது. இதன் எதிரொலியாகத் தமிழ் மக்கள் தம் மொழியைச் சங்கதத்தினின்றும் உயர்ந்ததென்று வாதிட்டு வந்திருக்கின்றனர். அதன் வரலாறு சுவையுடையதாகும்.

தமிழைப் பழித்த குயக்கோடன் என்பானை நக்கீரர்,

“ஆரிய நன்று தமிழ்த் தெனவுரைத்த
காரியத்தாற் காலக் கோட் பட்டானைச் – சீரிய
அந்தண் பொதியி லகத்தியனா நாணையாற்
செந்தமிழே தீர்க்க சுவா”

என்று சாகப் பாடினார் என்று ஒரு வரலாறு. – 2ஆம் நூற்றாண்டு.

“கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை
மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப்படக் கிடந்ததா என்னவும் படுமோ”

“தொண்டர் நாதனைத் தூ திடை விடுத்ததும் முதலை
யுண்ட பாலனை யழைத்தது மெலும்புபெண் ணுருவாக்
கண்ட தும்மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித்
தண்ட மிழ்ச்சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்”

இவை திருவிளையாடற் புராணத்திலுள்ள பாடல்கள். – 16ஆம் நூற்றாண்டு.

“மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி
யிறையவர்தம் பெயரை நாட்டி யிலக்கணஞ் செய்யப் பெற்றே
யறை கடல் வரைப்பிற் பாடை யனைத்தும்வென் றாரியத்தோ
டுறழ்தரு[15] தமிழ்த்தெய்வத்தை யுண்ணினைந் தேத்தல் செய்வாம்”

இது சீகளாத்திப் புராணத் தமிழ் வாழ்த்து – 17 ஆம் நூற்றாண்டு.

“வடமொழியைப் பாணிணிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
தொடர்புடைய தென்மொழியை உலகமெலாந் தொழுதேத்துங்
குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனிற்
கடல்வரைப்பி லிதன்பெருமை யாவரே கணித்தறிவார்

“இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர் இயல்வாய்ப்ப
இருமொழியும் வழிப்படுத்தார் மூனிவேந்தர் இசைபரப்பும்
இருமொழியும் ஆன்றவரை தழிஇயினார் என்றாலிவ்
விருமொழியும் நிகரென்னும் இதற்கையம் உளதேயோ”

என்று இணக்கம் கூறியவர் சிவஞான முனிவர் – 18ஆம் நூற்றாண்டு.

இவை யாவற்றிலும் தமிழின் தெய்வத்தன்மை கூறப்பட்டிருப்பது சங்கதம் தேவ மொழி என்பதன் மறுப்பாகவே.

19ஆம் நூற்றாண்டில் மனோன்மணியம் சுந்தரனார்,

“ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே”

“சதுமறையா ரியம்வருமுன் சகமுழுது நினதாயின்
முதுமொழிநீ யனாதியென மொழிகுவதும் வியப்பாமே”

“பத்துப்பாட் டாதிமனம் பற்றினார் பற்றுவரோ
எத்துணையும் பொருட்கிசையும் இலக்கணமில் கற்பனையே”

“வள்ளுவர்செய் திருக்குறளை மறுவறநன் குணர்ந்தோர்கள்
உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி”

“மனங்கரைந்து மலங்கெடுக்கும் வாசகத்தில் மாண்டோர்கள்
கனஞ்சடையென் றுருவேற்றிக் கண்மூடிக் கதறுவரோ”

என்று உணர்ச்சி வயப்பட்டுக் கூறியிருக்கிறார்.[16]

மேலே சுட்டியவற்றுள் சுந்தரனாரைத் தவிர பிறரனைவரிலும் ஒருவர் இலக்கணச் சீர்மை பற்றிக் குறிப்பிடுவது தவிர (திருவிளையாடற் புராணம்)த் தமிழின் தெய்வத் தன்மையையே குறிப்பிடுகின்றனர். சுந்தரனார் மட்டும் மொழியின் பிற கூறுகள் பற்றியும் கூறியிருக்கிறார். ஆனால் எவரும் தமிழ் மொழி பொதுமக்களின் மொழி என்ற சிறப்பைக் கூறவில்லை. சுந்தரனார் சங்கதம் ஆரியர் என்ற கற்பனையான மக்கள் இனத்தின் மொழியாக இருந்ததென்ற தவறான அடிப்படையில் அதனை வழக்கொழிந்த மொழி எனக் குறிப்பிடுகிறார். இன்றும் தனித்தமிழ் பற்றிக் குறிப்பிடுவோர். குறிப்பாகச் சிவனியராகிய வெள்ளாளர்கள் தமிழின் தெய்வத் தன்மையை மட்டுமே குறிப்பிட்டுத் தமிழின் மக்கள் தழுவிய தன்மையை மறைக்கின்றனர்.

சங்கதம் மக்கள் மொழியாக இல்லாமையாலும் மக்களை மடைமையிலும் வரண மயக்கத்திலும் ஆழ்த்துவதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு நிலையான பிற்போக்குக் கூட்டத்திற்காக உருவாக்கப்பட்டு அவர்களால் பேணி வளர்க்கப்பட்ட ஒரு மொழியாகவும் இருப்பதால் அதிலுள்ள படைப்புகள் பொதுவாகத் தரத்தில் குறைந்தவையாகவே உள்ளன. அதில் உள்ள அறிவியல் நூல்கள் எனப்படுபவை அதனைப் பேச்சு மொழியாகக் கொண்ட மக்களின்மையால் வேறு மொழி பேசும் மக்களின் உழைப்பினால் உருவான அறிவியலிலிருந்து தோன்றியவையாக அல்லது அம்மக்கள் பேசும் மொழிகளிலுள்ள படைப்புகளின் மொழிபெயர்ப்பாகத் தான் இருக்க முடியும். எடுத்துக்காட்டாக ஆகம நூல் என்ற பெயரில் சங்கத்தில் இருக்கும் நூல்களில் கையாளப்பட்டிருக்கும் தொழில்நுட்பச் சொற்களனைத்தும் தமிழ்ச் சொற்கள் என்றும் அவை சங்கத மொழியில் இல்லாதவை என்றும் காட்டியிருக்கிறார் சுரேசுப் பிள்ளை எனும் ஆய்வாளர். அதேபோல் விந்தியத்துக்கு வடக்கே இல்லாத பரத நாட்டியத்தை விளக்கும் பரத நூலைக் காசுமீரத்திலிருந்த பரத முனிவர் என்பவர் இயற்றினார் என்பதும் பொருந்தப் பொய் கூற வேண்டும் என்ற கவலை கூட இல்லாத கூட்டத்தின் செல்வாக்கிலுள் பொதுத் தொடர்புக் கருவிகளெல்லாம் சிக்கிக் கிடப்பதன் விளைவே.

மொழி மக்கள் கருத்தறியும் ஒரு கருவியே என்ற ஒரு கருத்து அடிக்கடி கூறப்படுகிறது. இதை மார்க்சியர்கள் எனத் தம்மைக் கூறிக்கொள்வோர் கூறுவது தான் கொடுமை. மொழி என்பது வெறும் கருத்தறியும் கருவி மட்டுமல்ல, இன்றைய நம் நாட்டில் உயர் பதவியும் வளமனையும் மகிழுந்தும் வைப்பாட்டியும் கூடத் தரும் வல்லமையுடையது. அத்தகைய பதவிகள் தங்கள் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டு மென்பதற்காகத்தான் பெற்றோர் எவ்வளவு செலவானாலும் கவலைப்படாமல் ஆங்கிலப் பள்ளிகளில் அவர்களைப் படிக்க வைக்கின்றனர். ஆங்கிலக் கல்வி பெரும் தொழிலாகிக் கல்விக் கூடங்கள் பணத்தைக் கொள்ளை அடிக்கும் தொழிற் கூடங்களாக மாறுவதற்குக் இதுதான் காரணம். இந்தியை ஆட்சி மொழியாக்கிவிட்டோம் என்று மார்தட்டும் இந்தி மாநிலங்களிலும் கூட இந்த ஆங்கிலப் “பித்தை” அகற்ற முடியாததற்குக் காரணம் மொழி வெறும் கருத்தறிகருவி என்பதை விட மேலும் பல பணிகளையும் செய்கிறது என்பதுதான். இந்தியாவை விட அதிக ஊதியம் பெறுவதற்காக வெளிநாடுகளில் வேலை தேட உதவும் என்ற எண்ணமே இந்த “ஆங்கிலப் பித்தின்” காரணம். அடிப்படுத்தப்பட்ட நாட்டை அடக்கியாளவும் ஒரு நாட்டு மக்களைத் தன்னுணர்வு, நாட்டுணர்வுகளை மங்க வைக்கவும் மொழி பயன்படுத்தப்படுகிறது. முன்னோரிடத்தில் பகுத்தறிவாளர்களின் மூடநம்பிக்கை பற்றிக் குறிப்பிடப்பட்டது. அவர்களிடத்திலுள்ள இன்னொரு மூடநம்பிக்கை மொழி கருத்தறிவிக்கும் ஒரு கருவியே என்பது. அதனாலேயே அவர்கள் மொழிக்கலப்பைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. மொழி ஒரு கருத்தறிவிக்கும் கருவி என்பது ஓர் அறிவியல் உண்மை எனப்படுகிறது. ஆனால் எந்த அறிவியல் உண்மையும் உறவியலானதே (Relative) என்பது மார்க்சிய நிலைப்பாடு. அத்துடன் மொழியின் மக்கள் சார்பு பற்றிய தெளிவும் மார்க்சியத்துக்கு உண்டு. பகுத்தறிவாளர்கள் உறவியல் உண்மைக்கும் அப்பட்ட உண்மைக்கும் (Absolute truth) வேறுபாடு தெரியாதவர்களாயிருந்தால் நம்மால் அவர்களைக் குறை சொல்ல முடியாது. ஆனால் மார்க்சியர்கள் அப்படி இருப்பதேன்? அவர்களது உயர்சாதி மனப்பான்மை அல்லது வெள்ளாளக்கட்டு தானே காரணம்?

தமிழ் நாட்டு மக்களின் பேச்சு மொழி என்பதாலும் அம்மக்களின் தேசிய உணர்வுகளைக் கட்டிக்காத்து அவர்களது விடுதலைக்கு ஒரு கருவியாகும் தகுதி உடையது என்பதாலும் ஓர் ஒட்டுண்ணிக் கூட்டத்தால் உருவாக்கப்பட்டு உழைக்கும் மக்களை ஏமாற்றவும் அடிமைப்படுத்தவும் இழிவுபடுத்தவும் கருவியாகப் பயன்பட்டு வந்திருப்பதும் எந்த மக்களாலும் என்றும் தாய்மொழியாகப் பேசப்படாததுமான சங்கதத்தை விடத் தமிழ் மேலானது என்பதே சரி. ஆனால் உயிரோட்டமுள்ள ஒரு மக்கள் கூட்டத்தினால் பேசப்படும் வேறெந்த மொழிக்குமில்லாத சிறப்புரிமை தமிழுக்குக் வேண்டாம்; சம உரிமையே போதும். ஆனால் சம உரிமை கட்டாயம் வேண்டும்.

மொழிகளில் உயர்ந்தவை தாழ்ந்தவை இல்லை என்பது அப்பட்டமான உண்மை அல்ல. அவ்வம்மொழி பேசும் மக்களின் நாகரிக வளர்ச்சிக்கேற்பத் தம் பங்கை ஒவ்வொரு மொழியும் சிறப்பாக நிறைவேற்றுகின்றன என்பதே அதன் பொருள். ஆனால் அவ்வம்மொழி பேசும் மக்களின் நாகரிக வளர்ச்சிக்கேற்ப மொழிகள் தம்முள் வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாகச் சீனம், தமிழ், ஆங்கிலம் ஆகிய உலகின் மூன்று பெருமொழிகளையும் எடுத்துக் கொள்வோம். சீனம் அசை நிலை (Isolating) மொழி என வகைப்படுத்தப்படும். ஒவ்வொரு கருத்தையும் தெரிவிப்பதற்கென்று தனித்தனி அசைகளாக எழுத்துகள் உள்ளன. அவற்றைத் தனித்தனியே அடுக்கி சொற்றொடர்கள் உருவாக்கப்படுகின்றன. இம்மொழியில் சொல்லுக்கும் எழுத்துக்கும் வேறுபாடு கிடையாது. படவெழுத்து எனப்படும் வகை எழுத்தாகும் இது. ஒவ்வொரு சொல்லுக்கும் ஒவ்வொரு எழுத்தாக அவை மிகப்பெரும் எண்ணிக்கையுடையவை. அசைச் சொற்களிலிருந்து தனி எழுத்துகளாக இறுபடுமுன் (Abstraction) அம்மொழிக்கு எழுத்து வடிவம் அமைந்துவிட்டதே இதற்குக் காரணம் என்பர். மிகப்பழங்காலத்திலிருந்தே எழுத்து வடிவில் மாற்றமில்லாமல் இருந்து வந்திருக்கிறது இம்மொழி. இன்றைய தேவைகளுக்காக இவ்வெழுத்து வடிவங்களில் மாற்றம் எதுவும் செய்வது தம் பண்பாட்டுப் பெருமைக்கு இழுக்காகும் என்று கருதி அங்குள்ள பொதுமைக் கட்சி அரசு அவ்வெழுத்து முறையை அப்படியே பாதுகாக்கிறது. அவ்வரசின் அளவுக்கு மிஞ்சிய தேசிய உணர்வை சரியாகச் சொன்னால் அதன் தேசிய வெறியைக் காட்டுகிறது இது.

இதை மீறிச் சீனமொழியின் சிறப்பு என்னவென்பதும் கருதத்தக்கது. சீனம் மிகப்பரந்து விரிந்த நாடு. உலகில் மிகப் பெரிய மக்கள் தொகையுள்ள நாடு. இப்பெரும் நிலப்பரப்பிலும் மக்கள் குவிவிலும் பல திசைமொழி வழக்குகள் உண்டு. ஆனால் சீன எழுத்துகள் ஒவ்வொன்றும் ஒரு பொருளை உணர்த்துவதால் ஒரே எழுத்து வெவ்வேறு திசைமொழி பேசும் மக்களால் அவ்வெழுத்து குறிப்பிடும் சொல்லுக்குரிய ஒலியால் படிக்கப்படுகிறது. எனவே மொழிச் சிக்கல் என்பது எழுத்து வடிவில் உருவாக வாய்ப்பில்லை. ஒலி வடிவில் தான் சிக்கல் வர வாய்ப்புள்ளது. ஓர் உலக மொழியை அமைக்க சீன மொழியின் எழுத்துமுறை ஒரு சிறந்த வழிகாட்டியாக அமையலாம்.

அடுத்து தமிழை எடுத்துக் கொள்வோம். சொல்லமைப்பு வகையில் தமிழைக் கொளுவுநிலை மொழி (Agglutinative) என்பர். இதில் சொற்களிலுள்ள அசைகள் ஒன்றோடொன்று கொளுவிக் கொண்டு பிரித்தறிய முடியாமல் இருக்கும். எழுத்துகள் அசைகளாக இல்லாமல் அசைகளிலிருந்து இறுத்தெடுக்கப்பட்ட ஒலி வடிவங்களைக் கொண்டிருப்பது தமிழ். இவ்வாறு இறுத்தெடுக்கப்பட்ட ஒலியன்கள் (ஒலி வடிவங்கள்) உயிர் எழுத்துகளெனவும் மெய்யெழுத்துகளெனவும் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர், மெய் வேறுபாடு இந்திய மொழிகள் அனைத்திலும் இருந்தாலும் தமிழில் போல் பிற மொழிகளில் அவ்வளவு முழுமையாய் இல்லை. “ரு” போன்ற உயிரல்லா எழுத்துகளும் பிற மொழிகளில் உயிரெழுத்து வரிசையில் இடம் பெற்றுள்ளன. உயிரெழுத்துகளும் மெய்யெழுத்துகளும் சேர்ந்த தொகுதியைக் குறுங்கணக்கு (Alphabet) என்பர். அத்துடன் உயிர்மெய் எழுத்துகளும் சேர்ந்தால் அதனை நெடுங்கணக்கு என்பர். தமிழ் நெடுங்கணக்கு மொழி. உயிர் மெய் எழுத்துகள் தவிர கூட்டெழுத்துகள் என்று ஒரு வகையும் உண்டு. தமிழில் அவை அண்மைக் காலத்தில் தான் வழக்கொழிந்தன. இதன் மூலம் தமிழின் நெடுங்கணக்கு எளிமையானது. மலையாளத்தில் கூட்டெழுத்துகளின் எண்ணிக்கைச் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் குறைக்கப்பட்டு எளிமையாக்கப்பட்டது.

கிரேக்கம், இலத்தீன், பிற ஐரோப்பிய மொழிகள் சொல்லமைப்பில் கொளுவு நிலை மொழிகளாகும். எழுத்தமைப்பில் உயிர்மெய் எழுத்துகள் இல்லாத குறுங்கணக்கு மொழிகளாகும். எழுத்துகளின் எண்ணிக்கை இதன் மூலம் குறைகிறது.

தமிழை ஆங்கிலத்தோடு ஒப்பிட்டுக் குறை சொல்வது இன்று கற்றோரிடையில் பரவலாகக் காணப்படும் ஒரு போக்காகும். தமிழில் மாற்றமே கூடாது என்று அதனை மறுப்பாரும் உள்ளனர். ஆனால் தமிழ் என்றும் மாறாமல் நிலையாக அல்லது முடங்கிக் கிடக்கவில்லை. அம்மொழி வாழ்ந்து வந்திருக்கும் பொருளியல், குமுகவியல், அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப அது மாற்றங்களை ஏற்று வந்துள்ளது. அதே வேளையில் வெளியாட்களால் வலிந்து புகுத்தப்பட்ட மாற்றங்களை அது தொடர்ந்து உதறி எறிந்து கொண்டே வந்திருக்கிறது. அவ்வாறு அது இன்றும் உள்ளே ஏற்றுக் கொள்ள மறுப்பது ஸ, ஹ, ஷ, ஜ எனும் கிரந்த எழுத்துகளையே. இவ்வெழுத்துகள் மூலம் பல தமிழ்ச் சொற்கள் வெளியேற்றப்பட்டுப் பிறமொழிச் சொற்கள் புகுத்தப்பட இடமேற்பட்டது; பல தமிழ்ச் சொற்கள் சங்கதச் சொற்கள் போல் திரிக்கப்பட்டன. எ-டு வேட்டி g வேஷ்டி; சோடி g ஜோடி. இத்தகைய மாற்றங்களை எதிர்த்து நிற்பது தேவையாகும். ஏனென்றால் தமிழகத்தின் தனிப்பட்ட சூழ்நிலைகள், அதாவது மேற்சாதியினர் எனும் தரகு வகுப்பினர் இம்மக்களின் தனித்தன்மையை அழித்து வெளி ஆற்றல்களுக்கு அடிமையாக்குவதன் மூலம் தொடர்ந்தும் அம்மக்களைத் தங்கள் அடிமைகளாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அதேபோல் இம்மக்களை அடிமைப்படுத்த அல்லது அவ்வடிமை நிலையைத் தொடர விரும்பும் வெளியாற்றல்களுக்கும் ஆதாயம் உண்டு. உண்மையிலேயே மொழியில் அத்தகைய மாற்றங்கள் தேவைப்பட்டால் தமிழக மக்கள் அரசியல், பொருளியல், குமுகியல் நிலைகளில் சார்பு நிலை இன்றி முழு விடுதலை பெற்ற ஒரு நிலைமையில் தான் அதைச் செய்ய வேண்டும்.

குறிப்பாக தமிழில் சில குறிப்பிட்ட ஒலிகள் இன்னும் குறிப்பாக சங்கதம், ஆங்கிலம் போன்ற மொழிச் சொற்களையும் பெயர்களையும் ஒலிபெயர்த்தெழுத (Transliterate)ப் பொருத்தமான எழுத்துகள் இல்லை என்பது தமிழ் மீது கூறப்படும் ஒரு குறைபாடு. உலகிலுள்ள எந்த மொழியும் எல்லா ஒலிகளையும் கொண்டிருக்கவில்லை. பிறமொழிச் சொற்களையும் பெயர்களையும் ஒலிபெயர்ப்புச் செய்யும் போது ஆங்கிலம் உட்பட எல்லா மொழிகளும் அம்மொழி பேசும் மக்களின் நாப்பழக்கத்துக்கிசைய மாற்றவே செய்கின்றன. தமிழ்நாட்டு ஊர்ப் பெயர்களை ஆங்கிலேயர் எவ்வாறு அடையாளம் தெரியாமல் மாற்றி வைத்திருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும். மதுரையை Majura என்றும் தஞ்சாவூரைத் தாஞ்சூர் என்றும் யாழ்ப்பாணத்தை Jafna என்றும் மட்டக்கிளப்பை Baticola என்றும் சிதைத்து வைத்துள்ளனர். தமிழும் பிறமொழிச் சொற்களையும் பெயர்களையும் அவ்வாறு இம்மக்களின் நாப்பழக்கத்திற்கும் மொழிமரபுக்கும் ஏற்ப மாற்றியே வழங்கி வந்துள்ளனர். இலட்சுமணன் என்பதை இலக்குவன் என்றும் அயோவனர் என்பதை யவனர் என்றும் John என்பதை யோவான் என்றும் இவ்வாறு நம் மொழிக்கும் ஒரு மரபு உண்டு.[17] பிற மொழியை அறியாத நாட்டுப்புற மக்களின் நாவில் தான் அச்சொற்கள் அத்தகைய இயல்பான மாற்றத்தைப் பெறுகின்றன. ஆங்கிலேயரின் கீழ் ஏற்பட்ட அடிமைத் தனத்தின் விளைவாக அடிமைப்பணி செய்யவென்று தொடங்கி இன்று அனைத்து அடிமைத் தனங்களுக்கும் அடையாளமாக விளங்கும் ஆங்கிலங்கற்ற அடிமைகள் அவ்வாறு கல்லாத நாட்டுப்புற மக்கள் மற்றும் உழைக்கும் மக்களை இழிந்தவராகக் கருதித் தம்மையும் தம் பிறமொழியறிவையும் உயர்வாகக் கருதிக் கொள்வதாலும் அடிமைக்கே இயல்பாகத் தன் மீது ஏற்படும் தாழ்வுணர்ச்சியாலும் தம் தாய்மொழிக்கு மட்டும் பிறமொழிகளுக்கில்லாத குறைபாடுகள் இருப்பதாகக் கருதி அதைச் “சீர்செய்ய” முற்படுகிறார்கள்.

ஆங்கிலத்தில் ஒலிக் குறைபாடுகள் மட்டுமல்ல ஒலிப்புக் குறைபாடுகளும் நிறைய உண்டு. ஆங்கிலம் கற்போருக்குப் பெரும் இடையூறாயிருப்பது இதுவே. இந்தக் குறையை ஆங்கில அறிஞர்களில் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். அறிஞர் பெர்னாட்சா இந்த ஒலிப்புக் குறைபாடுகள் இல்லாத ஒரு மொழியை உருவாக்குவதற்கென்று ஓர் அறக்கட்டளையையே நிறுவியுள்ளார். இவ்வளவு இருந்தும் ஆங்கிலம் இன்று கொடிகட்டிப் பறப்பதேன்? இரண்டு காரணங்கள். ஒன்று அம்மொழி பேசும் மக்களால் அல்லது அதன் இயல்புடைய மொழிகள் பேசும் மக்களால் உருவாக்கப்பட்ட இன்றைய அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குறியீடுகள். இன்னொன்று அம்மொழி பேசும் மக்களிடம் உலகத்தின் பெரும்பகுதி அரசியலில் அடிமைப்பட்டுக் கிடந்ததும் இன்று வரை பொருளியலில் அடிமைப்பட்டுக் கிடப்பதும்.

பொருளியலிலும் அரசியலிலும் முழு விடுதலை பெற்று நிற்கும் நாடுகள் இன்று ஆங்கிலத்தின் சார்பின்றியே தம் பொருளியல், அரசியல், அறிவியல் தேவைகளுக்கேற்பத் தம் மொழிகளை வளர்த்துள்ளன. எ-டு சப்பான், சோவியத்து முதலியன. எனவே மொழியில் உண்மையான வளர்ச்சியும் அடிமைப்படுத்தாத மாற்றமும் செய்ய வேண்டுமானால் முதலில் அம்மொழி பேசும் மக்கள் அரசியலிலும் பொருளியலிலும் அறிவியலிலும் தன்னுரிமையுடையோராக, தற்சார்புடையோராக மாற வேண்டும். தமிழை மேம்படுத்த மனமார விழைவோர் அத்தகைய தன்னுரிமை, தற்சார்புடைமைக்குரிய முயற்சிகளில் இறங்குவது தான் முறை. தமிழில் நாம் விரும்பும் மாற்றங்கள் அல்லது வளர்ச்சிகள் ஏற்படாமைக்கு காரணம் அதிலுள்ள “குறைபாடுகள்” அல்ல, தமிழ் பேசும் மக்களின் அரசியல், பொருளியல் அடிமைத்தனங்களே.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

[1] தனித்தமிழ் பற்றிய நம் நாட்டு “மார்க்சியரின் கண்ணோட்டம் அவர்களது மக்கட்பகைப் போக்கைத் தெள்ளென விளக்கும். அவர்களது நிலைப்பாடு “தூய பார்ப்பனிய மேற்சாதிச் சார்பானது. மறைமலையடிகள் பார்ப்பன மேலாண்மையை எதிர்த்த ஒரு மேற்சாதி அறிஞர் என்ற உண்மையைக் காரணமாகக் காட்டிக் கீழ்ச்சாதி மக்களின் மொழியை நோக்கிய அவரது முயற்சியைக் கொச்சைப்படுத்தினர். தனித்தமிழ் இயக்கத்தின் அரசியற் பின்னணி என்ற சிறுநூலில் பேரா.கா. சிவத்தம்பி தனித்தமிழ் இயக்கத்தை எவ்வளவு கொச்சைப்படுத்த முடியுமோ அவ்வளவு கொச்சைப்படுத்தியுள்ளார். பாவாணரின் முயற்சிகளைக் காட்டினால் தன் குட்டு வெளிப்பட்டுவிடும் என்று தெரிந்தே நூல் எழுதிய காலத்தில் பெரும் வலிமை பெற்றுவிட்ட அவரது வினைப்பாடுகளைக் காட்டாமல் மறைமலை அடிகளோடு தன் நூலை முடித்துக்கொண்டார். இது குறித்து இந்நூல் ஆசிரியர் 1982ஆம் ஆண்டில் பொதுமை இதழில் “கா. சிவத்தம்பியின் அரசியல் பின்னணி” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையைப் பார்க்க.
[2] வி.ஆர். இராமச்சந்திர தட்சிதர், Orgin and spread of Tamils, P.17
[3] D.N. Jha, Ancient India – An Introductory Note.
[4] மாழையியல் – உலோகவியல்
[5] வி.எசு.வி. இராகவன், ஏரோடோட்டசு.
[6] சியார்சுத் தாம்சன், Athens and Aeschille
[7] Joseph Camphell, Masks of Gods-Primitive Mythology
[8] அ. கோந்திரத்தோவ், Soonds and Signs
[9] மேலே சுட்டப்பட்ட தேவிப் பிரசாத் சட்டோபாத்தியாயவின் நூல்.
[10] Scandinarian Institute of Asian Studies.
[11] S.R.Rao.
[12] எட்கார் தர்சுட்டன். Castes and Tribes of Southern India. இந்நிகழ்ச்சி மணிமேகலையின் கதையை ஒத்திருக்கிறது. கோவலனாகிய வாணிகனின் மகளான மணிமேகலையின் கதையை கூலவாணிகனான சாத்தனார் கூறியிருப்பது இக்கருத்துக்கு அரண் செய்கிறது.
[13] இராசபாளையம் பகுதியில் வாழும் சாலியர் எனப்படும் தாழ்த்தப்பட்டோரிடையில் இத்தகைய கதையொன்று வழங்குகிறது.
[14] இ.மு. சுப்பிரமணிய பிள்ளை. வள்ளுவர் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் – ஐந்தாம் பகுதி
[15] உறழ்தரு – மாறுபடுகின்ற
[16] இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் செய்யுட்கள் வடமொழி வரலாறு எனும் நூலில் பாவாணர் மேற்கொண்டவை.
[17] John என்ற சொல் யூதமொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். அம்மொழியில் (ஈபுரூ மொழி என்று இதனை அழைப்பர்) யோச்சனான் என்னும் பெயரே ஆங்கிலத்தில் இவ்வடிவம் பெற்றுள்ளது. உருசிய மொழியில் இச்சொல் இவான் என்ற வடிவம் பெற்றுள்ளது. ஈபுரூ உருசியன் ஆகிய மொழிகளில் J ஒலி கிடையாது.

Series Navigation

குமரிமைந்தன்

குமரிமைந்தன்

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 12. திருநாட்கள்

This entry is part [part not set] of 36 in the series 20060818_Issue

குமரிமைந்தன்



திருநாட்கள் எனப்படும் பெருநாட்கள் ஆண்டின் குறிப்பிட்ட நாட்களில் மக்களில் பெரும்பாலோரால் கொண்டாடப்படும் பண்டிகை எனப்படும் திருநாள்களே ஆகும். தமிழ்நாட்டில் இன்று பெருமளவில் கொண்டாடப்படுபவை தைப்பொங்கல். சித்திரைப் பிறப்பு, ஆடிப்பிறப்பு, ஆடி முழுக்கு, பிள்ளையார் சதுர்த்தி, ஆயுத பூசை எனப்படும் பூசையெடுப்பு, திருக்கார்த்திகை, தீபாவளி, மார்கழி நோன்பு மற்றும் மாதந்தோறும் கார்த்திகை, வெள்ளுவா, காருவா நாட்கள் முதலியவாகும். இவற்றில் தமிழகத்தில் உள்ள மேல்சாதியினர் சித்திரைப் பிறப்பு, பூசையெடுப்பு, தீபாவளி, மார்கழி நோன்பு, பிள்ளையார் சதுர்த்தி மாதந்தோறும் கார்த்திகை, வெள்ளுவா, காருவா நாட்கள் முதலியவற்றில் அதிக நாட்டம் செலுத்துகின்றனர். நாட்டுப் புறங்களிலுள்ள கீழ்ச்சாதி மக்கள் தைப்பொங்கல், ஆடிப்பிறப்பு, ஆடி முழுக்கு, திருக்கார்த்திகை ஆகிய திருநாள்களைக் கொண்டாடினாலும் முதன்மை கொடுப்பதில் வேறுபாடு உண்டு. இவை தவிர வேளாளர்கள் போன்ற சில குறிப்பிட்ட சாதியினர் கார்த்திகை நோன்பு போன்ற திருநாட்களைக் கடைப்பிடிக்கின்றனர்.

மேற்சாதியினர் கொண்டாடும் திருநாட்களாகிய சித்திரைப் பிறப்பு பொதுவாக வாணிகர்களுக்குப் பயன்படுகிறது. பழைய கணக்கை முடித்துப் புதுக் கணக்கைத் தொடங்குவதற்கு இந்நாள் பயன்படுகிறது. அதே வேளையில் ஆடி இறுதியை ஆண்டு இறுதியாகக் கணக்கிட்டு துணி வாணிகர்கள் “ஆடிக்கழிவு” விற்பனை என்ற பெயரில் அண்மைக் காலத்தில் தொடங்கி உள்ளனர். கேரளத்தில் உள்ள கொல்லம் ஆண்டு ஆவணி மாதத்தில் பிறப்பதால் அதைப் பின்பற்றி இதைச் செய்கிறார்கள் போலும். மேலும் தமிழர்களுக்கு ஆங்கில ஆண்டு போன்று தொடர்ச்சியான ஓர் ஊழிக் கணக்கு இல்லாமல் வெறும் அறுபதாண்டுச் சுழற்சியே இருப்பதால் புதிதாகத் தோன்றி இருக்கும் இந்து மத இயக்கங்கள் இந்த மலையாளக் கொல்லம் ஆண்டைப் பிடித்துள்ளன. தமிழ்நாட்டுப் புலவர் குழு ஆய்வு செய்து அரசாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள தை மாதத்தில் தொடங்கப்படும் திருவள்ளுவர் ஆண்டைக் கடைப்பிடிப்பதை விட வெளியிலிருந்து வரும் ஆண்டே இவர்களுக்கு உகந்ததாய் இருக்கிறது.

இது தவிர ஆடி மாதப் பிறப்பிலும் ஒரு திருநாள் கொண்டாடப்படுகிறது. இது தை மாதம் தொடங்கும் ஆண்டோடு தொடர்புடையதாகும். கதிரவனின் வடபாற் செலவின் தொடக்கத்தையும் ஆண்டுப் பிறப்பையும் தை முதல் நாள் குறிப்பிடுவது போல் அதன் தென்பாற் செலவை இத்திருநாள் குறிக்கிறது.

பூசையெடுப்பு எனவும் நவராத்திரி எனவும் வழங்கப்படும் தொள்ளிரவுப் நாட்டுப் புறங்களில் எளிமையாகவும் நகர்ப்புறங்களில் பார்ப்பனர்களாலும் வேறு சில சாதியாராலும் குறிப்பாகத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராதவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தியத் தேசிய இயக்கத்தின் தோற்றத்தின் பின் உருவான தொழிற்சங்கங்களைப் பின்பற்றி ஆயுத பூசை என்ற பெயரில் எல்லா அலுவலகங்களிலும் இது அரசு விழாப் போலக் கொண்டாடப்படுகிறது. அலுவலகங்களிலுள்ள அலுவலக உதவியாளர்கள் எனப்படும் கடை நிலை ஊழியர்கள் குறிப்பேடு போட்டு பணம் திரட்டி இவ்விழாவைக் கொண்டாடி மிகுந்த பணத்தைத் தமக்குள் பங்கிட்டுக் கொள்வதால் இப்பணத்துக்காக இவ்விழா விடாமல் ஆண்டுதோறும் அலுவலகங்களில் கொண்டாடப்படுகிறது. அங்கு இது தொள்ளிரவு (நவராத்திரி) என்று வழங்கப்படுவதற்குப் பகரம் பதினிரா (கருநாடகத்தில் தசரா, வங்காளத்தில் விசயதசமி) என அழைக்கப்படுகிறது. ஒரு வேளை இந்தப் பத்தாவது இரவு பின்னால் சேர்க்கப்பட்டதாயிருக்க வேண்டும். சரசுவதி பூசை எனப்படும் கலைமகள் வழிபாட்டோடு துர்க்கை எனப்படும் கொற்றவை வழிபாடும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். விசயநகரப் பேரரசனாகிய கிருட்டினதேவராயரால் இத்திருநாள் சிறப்புப் பெற்றதாகத் தெரிகிறது.

தொள்ளிரவு அல்லது பதினிரா எனப்படும் பூசையெடுப்பு பெண் தெய்வங்களை வழிபடுவதாகவே உள்ளது. பெண்ணாட்சி ஒழிக்கப்பட்டு ஆடவராட்சி நிலைப்பட்ட பின்னரும் அவ்வப்போது பெண் எழுச்சி இயக்கங்கள் உருவாகி உள்ளன. புதிய குமுக இயக்கங்கள் உருவாகும் காலங்களில் மக்கட்தொகையில் சரிபாதியினரான பெண்களின் துணையையும் ஆதரவையும் திரட்டுவதற்காக அவர்களது உரிமைகளை ஏற்றுக் கொள்வதற்கு அறிகுறியாக இவ்வணக்கங்கள் அவ்வப்போது உயிர்ப்பிக்கப்பட்டுள்ளன. பெண்பாலரான காரைக்காலம்மையார் எனும் புனிதவதியார் தான் சைவம் எனப்படும் சிவனியத்தின் தாய் எனுமளவிற்கு சிவனியக்குரவர்களில் மூத்தவர். (வாணிகர் குலத்தவரான இவரால் இவ்வியக்கம் வளர்ச்சி பெற்றதும் சம்பந்தர் போன்றோர் பூம்பாவை போன்ற வணிகர் குலத்தாரோடு இணங்கிச் சென்றதும் பின்னர் வாணிகர் சமயம் எனப்படும் சமணத்தை அது அழிக்கக் கிளம்பியதும் ஆன நிகழ்ச்சிகளின் பொருளியல் அரசியல் பின்னணிகளை வரலாற்றாசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.) அதே போல் ஆண்டாள் வைணவம் எனப்படும் மாலியத்துக்குக் கொடுத்த ஊக்கமும் உயர்வும் பெண்கள் அரசியல், குமுக இயக்கங்களில் அவ்வப்போது ஆற்றிய பங்கை நமக்குக் காட்டுகின்றன.

தீபாவளி என்பதற்கு விளக்குகளின் வரிசை என்பது பொருள். எனவே இதனை விளக்கணி விழா எனவும் அழைப்பர். ஆனால் உண்மையில் விளக்குக்கும் இதற்கும் தொடர்பேதும் இல்லை. இவ்விழாவின் தோற்றம் பற்றி பல கதைகள் உண்டு. சமண சமயத் தீர்த்தங்கரரான மகாவீரர் வீடு பேறடைந்த நாள் அது என்று சமணர்கள் கூறுகின்றனர். நரகாசுரன் என்பவனைக் கண்ணன் மனைவியும் நரகாசுரனின் தாயும் நிலத்தாயின் தோற்றரவுமான சத்தியபாமா கொன்ற நாள் என்று “இந்துப்” புராணம் கூறுகிறது. இந்தத் திருநாளில் மேற்சாதியினர். குறிப்பாகப் பார்ப்பனரும் தமிழைத் தாய் மொழியாகக் கொள்ளாதோரும் அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர். புத்தாடை புனைவதுடன் எண்ணெய் முழுக்கிட்டு வான வேடிக்கைகள் நடத்துவது இதில் சிறப்புக் கூறு. மேற்கூறிய சாதிகளில் திருமணத்திற்குப் பின்வரும் தலை தீபாவளி அன்று மணமக்களை விருந்துக்கு அழைத்து அவர்களுக்குப் புத்தாடையும் பிற சீர்வரிசைகளும் கொடுப்பது வழக்கம்.

மார்கழி நோன்பும் மேற்சாதிகளிடையில்தான் பெரும்பாலும் கொண்டாடப்படுகிறது. இது முன்பு தை மாதத்தில் கொண்டாடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் திருமணமாகாத பெண்கள் நல்ல கணவன் தங்களுக்கு வாய்க்கப் பெற வேண்டுமென்று வேண்டி பாவை ஒன்று சமைத்து அதன் முன் நோன்பிருப்பதால் பாவை நோன்பு என்றும் அழைக்கப்படும். வாணிகம், அரசூழியம் ஆகியவற்றின் வளர்ச்சியால் வேணாண்மையிலிருந்து விடுபட்டு வெளிச்சம் போட்டு வாழும் வாழ்க்கை சிலருக்கு வாய்க்கப் பெற்ற காலத்தில்தான் இத்தகைய நோன்பு உருவாகி இருக்க முடியும். எனவே இது மேற்சாதியினரிடம் மட்டுமே இருப்பதில் வியப்பில்லை. பிற்காலத்தில் பெண்கள் கண்ணனைக் கணவனாக அடைவதற்காக நோன்பிருப்பது போலவும் சிவனை அடைய நோன்பிருப்பது போலவும் முறையே திருப்பாவை, திருவெம்பாவை என்ற சமயப் பாடல்களை உருவாக்கினர். அதற்கு முன்பும் பாவைப் பாடல்கள் இருந்திருக்க வேண்டும். அவை இந்தப் பாவைப் பாடல்களால் வழக்கிழந்தனவா என ஆராய வேண்டும்.

பிள்ளையார் சதுர்த்தியைப் பற்றிக் குறிப்பிடும் முன் பிள்ளையாரின் வரலாற்றைக் கூறுவோம். பிள்ளையார் என்ற சொல் முதலில் தமிழகத்தில் முருகனையே குறித்தது. மூத்த தாயாகிய கொற்றவை (கொற்றம் + அவ்வை = கொற்றவை. கொற்றம் = வெற்றி; கொற்றவை = வெற்றியைத் தரும் அல்லது வெற்றி பெறுபவளாகிய தாய்)யின் மகனாகையால் அவனை முதியோள் குழவி என்றனர். இம் முதியொள் பின்னர் மூத்த தேவி எனப்பொருள்படும் மூதேவி எனப்பட்டாள். மூதேவி என்பது சிடுமூஞ்சியாயிருப்பவர்களை குறிக்கும் இழிவான அடைமொழியாக இன்று ஆகிவிட்டது. போர் வெற்றி குமுக மதிப்பிற்கு அடையாளமாக இருந்த காலத்தில் மூதேவி போற்றப்பட்டாள். பணம் மனிதனை இயக்கும் பொருளாகிப் போரில் சினந்து வெல்வதை விடப் பணத்தால் சிரித்து வெல்வது பெருமையுடையதாகக் கருதிய ஒரு குமுகத்தில் வெற்றித்தாய் மூதேவியென்றும் திருமகள் எனப்படும் செல்வத்தாய் சீதேவி என்றும் அழைக்கப்பட்டனர். திருவள்ளுவரும் முதேவியை இழிவாகவே குறிப்பிடுகிறார்.

“அவ்வித்(து) அழுக்காறு (உ)டையானைச்
செய்யவள் தவ்வையைக் காட்டிவிடும்”

மனம் கசப்புறும் அழுக்காறு உடையவனைச் செய்யவளாகிய திருமகள் தனக்கு மூத்தவளாகிய மூதேவியிடம் சேர்த்துவிடுவாள் என்பது இதன் பொருளாகும்.
இடைக்காலத்தில், குறிப்பாகப் பிற்காலச் சோழர்களின் காலத்தில் மூதேவி மூத்த தேவி என்ற பெயரில் மீண்டும் வணங்கப்பட்டிருக்கிறாள். அக்காலத்தில் கட்டப்பட்ட கோயில்களில் கையில் மலராத தாமரை மொட்டுடன் அவளது உருவச்சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்பு மனிதனின் மிகப் பழைய ஆயுதமான கல்லாலான குண்டாந்தடி(கதை) உருமாற்றப்பட்டுத் தாமரை மொட்டாகியிருக்கிறது என்பது தெளிவு. ஆனால் நம் “முற்போக்கு” ஆய்வாளர்கள் இத்தாமரை மொட்டு இனப்பெருக்கத்தைக் குறிக்கும்; எனவே மூதேவி வழிபாடு வளமை வழிபாடு என்று கூறிப் பிடிவாதம் பிடிக்கின்றனர்.

இந்த மூத்தோளின் மகனான முருகன் வழிபாடு மகன் வழிபாடு என்று மாந்த நூலில் கூறப்படும் வகையில் அடங்கும். குமுகத்தில் தாய் வழியில் தலைமகனுரிமை, கேரளத்திலிருப்பது போல், தோன்றியமையையும் இவ்வழிபாட்டின் தோற்றம் குறிக்கும், தமிழ்நாட்டில் குறிப்பாகத் தென் மாவட்டங்களில் வணக்கப்படும் இசக்கி எனப்படும் இயக்கியும் தலைமகன் வழிபாட்டின் எச்சமே. ஒரு குடும்பத்திலுள்ள பெண்களில் யாருக்கு முதன்முதல் ஆண்மகவு பிறக்கிறதோ அவள் அடுத்த தலைவனின் தாய் என்ற பெருமைக்குரியவளாய் வணங்கப்பட்டதன் தொடர்ச்சியே இயக்கி வணக்கம்.

இயக்கியைப் பற்றிய கதையைக் காண்போம். இவளைப் பழவூர் இயக்கி என்று தென் மாவட்டங்களில், குறிப்பாகக் குமரி, நெல்லை மாவட்டங்களில் குறிப்பர். பழவூர் என்பது நெல்லை மாவட்டத்திலுள்ள ஓர் ஊர். பிற மாவட்டங்களில் பழையனூர் நீலி என்பர். பழையனூர் தென்னாற்காடு மாவட்டத்திலுள்ளது. இவ்வூர்கள் இரண்டில் ஏதோவொன்றில் இக்கதை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. கதைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்கள் உள்ளன. ஒன்றின் படி ஒரு வாணிகன் தன் காதற்கிழத்திக்கு மனைவி இடையூறாக இருக்கிறாள் என்பதற்காக அவளைக் காட்டு வழியில் அழைத்துச் சென்று கொன்று விட்டான்; இறந்த பெண் பேயாக அக்காட்டில் அலைந்து கொண்டிருந்தாள்; ஒருமுறை அவன் அக்காட்டின் வழியே செல்லும் போது அவள் மனித வடிவில் ஒரு கைக்குழந்தையுடன் அவனைத் தொடர்ந்து சென்றாள். அருகிலிருந்த ஊரை அடைந்தவுடன் அவ்வூராரிடம் தன் கணவன் தன்னைக் குழந்தையுடன் கைவிட்டு வந்து விட்டதாகவும் தன்னை அவனுடன் சேர்த்து வைக்குமாறும் வேண்டுகிறாள். ஊரார் அவ்வாறே அவனை வற்புறுத்துகின்றனர். அவள் பேய் என்று வாணிகன் மறுத்துக் கூறியும் பயனில்லாத நிலையில் தன்னுயிர்க்கு அவ்வூரிலுள்ள 64 தலைக்கட்டு வேளாளர்களும் தம்முயிரைப் பிணையாக்க வேண்டுமென்கிறான். அவ்வாறே அவர்கள் ஒப்புக் கொள்ள அவன் அப்பேயுடன் ஊர் விடுதியில் தங்குகிறான். பேய் அவனைக் கொன்று போட்டு விட்டுப் போய் விடுகிறது. மறுநாள் காலை அவன் இறந்திருப்பதை அறிந்த 64 தலைக்கட்டுக்காரர்களும் தீயில் குதித்துத் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

இன்னொரு கதையின்படி நீலி வாணிகனின் மனைவியல்ல; அவனது காதற் கணிகை. அவளிடம் அவள் தன் பொருளனைத்தையும் இழந்து வறியவனாகிவிட்ட நிலையில் நீலியின் தாய் அவனைத் துரத்தி விடுகிறாள். வாணிகனைப் பிரிய மனமில்லாத நீலியும் அவனைப் பின் தொடர்ந்து காட்டு வழியில் அவனை அடைகிறாள். வழியில் இரவில் தன் மடி மீது தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்த நீலியைத் தரையில் இறக்கிக் கிடத்துகிறான். எதிர்கால வாழ்வை நோக்கி அஞ்சியவனாக அவள் தலையில் கல்லைப் போட்டுக் கொன்று தானும் இறந்து போகிறான். மறு பிறவியில் வாணிகனாக அக்காட்டிலுள் வரும் போதுதான் நீலியின் பேய் அவனைத் தொடர்கிறது என்கிறது இக்கதை.

காதல் இதழில் அரு. இராமநாதன் எழுதிய கதையில் கிணற்றில் தள்ளி கொலை செய்யப்பட்ட வாணிகனின் மனைவி நீலி நிறை சூலி. அவள் கிணற்றிலுள் முழுகி இறக்கு முன்பே குழந்தையும் பிறந்து அவளோடு இறந்ததாகக் கூறப்பட்டுள்ளது. முதல் கதையில் வாணிகனின் மனைவி என்று காட்டிக் கொள்வதற்காகக் கள்ளிச் செடியொன்றின் கொழுந்தைக் கிள்ளிக் குழந்தையாக்கிக் கொண்டது பேய் என்று கூறப்படுகிறது. எனவே குழந்தை இருந்ததா என்பது தெரியவில்லை. ஆனால் 64 தலைக்கட்டினர் மாண்ட பின்னர் அவ்வூரினர் பல்வேறிடங்களுக்குக் குடிபெயர்ந்து சென்றனர். அவர்கள் இன்றும் இக்கதையைக் கூறுவதுடன் நீலியை வழிபட்டும் வருகின்றனர். எனவே இக்கதையில் ஏதோ ஓர் உண்மை இருக்கக் கூடும். கொல்லப்பட்டவளாகக் கருதப்பட்ட நீலி உயிர் பிழைத்திருந்து தன் கணவனை அப்பிறவிலேயே பழிவாங்கியிருக்கக் கூடும்.

இவ்வாறு கணவனைப் பெண்கள் கொலை செய்வது நம் இலக்கியங்களில் ஒன்றும் புதிதில்லை. மலையிலிருந்து பிடித்துத் தள்ளிக் கொல்ல இருந்த தன் கணவனைத் தானே முந்தித் தள்ளிக் கொன்றாள் தமிழிலுள்ள ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசியின் கதைத் தலைவி.[1] இதனால் அவள் “தற்கொல்லியை முற்கொல்லி” என்ற பட்டமும். பெற்றாள். அதே போல் நீலி என்ற பெயரும் நமக்குப் பழக்கமானதே. நீலி, காளி, துர்க்கை, குமரி எனப்படுபவை கொற்றவையின் பெயர்கள். அத்துடன் சிலப்பதிகாரத்தில் கோவலனின் முற்பிறப்பில் அவனைச் சபித்தவளாகக் கூறப்படுபவள் பெயரும் நீலியே.

பழையனூர் நீலி மறுபிறவியில் பெண்ணாகப் பிறந்து சமணத் துறவியாகி சமயப் பணியாற்றியதாக நீலகேசி காப்பியம் கூறும்.

பழையனூர் கதையில் கூறப்பட்டிருக்கும் குழந்தை தென் மாவட்டங்களில் காணப்படும் இயக்கியின் உருவத்தில் காணப்படும் குழந்தை உருவத்துக்கு ஏற்பப் புனையப்பட்டதாக இருக்க வேண்டும். இவ்வுருவங்கள் ஓட்டை உருவங்கள் எனப்படும். மண்ணால் உள்ளே பொள்ளலாகச் செய்யப்பட்டு சுடப்பட்ட இவ்வுருவங்கள் ஆங்கிலத்தில் Terra cotta எனப்படும் சுடுமண் உருவங்களாகும். கையிடுக்கில் ஒரு குழந்தையை இடுக்கிக் கொண்டு மறு கையைத் தலைக்கு மேல் தூக்கியது போல் இது அமைந்திருக்கும். கைகள் மணிக்கட்டோடு முடிந்திருக்கும். தலைமீது தூக்கிய கையில் ஆயுதம் ஒன்றைத் தூக்கிய சாயல் தெரியும். இந்த ஆயுதம் நாம் முன்பு மூதேவியின் கையிலிருப்பதாகக் குறிப்பிட குண்டாந்தடியாக இருக்கவேண்டும். தலையில் மலைவாழ் மக்களைப் போன்ற தலை அலங்காரம் தெரியும். எனவே இது கொற்றவையின் அதாவது தலைமகன் தாயாகிய வெற்றித் தெய்வத்தின் உருவாகவே இருக்க வேண்டும். பழந்தமிழர் இயக்கியைக் கொடியவளாகக் காணவில்லை. “பூங்கண் இயக்கி” என்கிறார் இளங்கோடிகள் (அடைக்கலக்காதை 116). கொற்றவையையும் அவ்வாறே தாய்மையும் கொடுமையும் ஒருங்கே படைத்தவளாகக் காட்டுகிறார் (வேட்டுவ வரி 54-74). பெண் தம் வழியினரைக் காக்கும் தெய்வமாகவும் மாற்றாரையும் எதிரிகளையும் கொன்று இரை ஆக்கும் நரவுண்ணியாகவும் (Cannibal) இருந்தமையையே இது காட்டுகிறது.

மேலும், இவ்வியக்கிக் கோயில்களில் குழந்தை வேண்டி வழிபடுவோர் குழந்தை பிறந்தால் தொட்டில் கட்டுவதாக நேர்ந்து குழந்தை பிறந்த பின் கட்டிய தொட்டில்கள் ஏராளமாகக் காணப்படும். எனவே குழந்தைக்கும் இத்தெய்வத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது புலப்படும். இவ்வாறு தலைமகனையும் தாயையும் ஒருசேரக் குறிப்பிடும் மிகத் தொன்மையான இந்த வழிபாட்டுடன் நீலி வழிபாடும் எப்போதோ இணைந்திருக்க வேண்டும்.

இயக்கி சமண சமயத்தில் நான்கு காவல் தெய்வங்களுள் ஒன்று. எனவே சமண சமயத்தில் பின்னர் தோன்றிய நீலியும் அத்துடன் இணைந்திருக்க வேண்டும். ஒவ்வொரு சமயமும் தனக்கு முன்பிருக்கும் மக்கள் தெய்வங்களைத் துணைத் தெய்வங்களாக்கி மக்களை ஈர்ப்பது நடைமுறை. அவ்வாறே இயக்கி, சாத்தன் முதலிய தெய்வங்கள் தமிழகத்தில் ஊன்றிய சமயங்கள் அனைத்திலும் இடம் பெற்றுள்ளன. குழந்தையோடுள்ள தாய்த் தெய்வத்தின் எச்சமாகவே உரோமில் மேரி வணக்கம் உருவாக்கப்பட்டதாகவும் கூறுவர்.

இவ்வாறு தலைமகன் வழிபாட்டைக் குறிப்பிடும் கொற்றவை மகனாகிய முருகன் பின்னர் பெண் தலைமை ஒழிக்கப்பட்டு ஆண் தலைமை ஏற்பட்ட போது சிவன் மகனாக்கப்பட்டான். தாயின் வயிற்றில் அன்றி ஆற்றில் அல்லது பொய்கையில் சிவனின் விந்து சிந்தியதால் பிறந்தான் என்ற கதையும் தாய்மையின் தலைமையை வீழ்த்த எழுந்ததே.

பெண் தலைமை முறியடிக்கப்பட்ட பின் வழிபாட்டு முறைகளில் மாற்றம் ஏற்பட்டாலும் சில எச்சங்கள் இன்றும் நிலவுகின்றன. சில கோயில்களில் பூசாரிகள் சேலை உடுத்திக் கொண்டுதான் பூசை செய்கின்றனர். இன்றும் நாட்டுப்புற அம்மன் கோயில்களில் பூசாரிகள் சிவப்பு உடை உடுத்தியே பூசை செய்கின்றனர்.

இந்தச் சிவப்பு ஆடை பெண்களின் மாதவிடாய்க் குருதி பட்ட சேலையைக் குறிக்கும். பெண் தலைமைக் குமுகத்தில் மாதவிடாய் தெய்விகமானதாகவும் மாதவிடாய்க் காலத்தில் பெண் தெய்வத் தன்மையுடையவளாகவும் கருதப்பட்டாள். எனவே தான் இன்றும் இவ்வம்மன் கோயில்களில் அம்மனுக்குச் சிவப்புச் சேலை வாங்கிச் சார்த்தி அதைத் திரும்பப் பெற்று வீட்டில் வைத்து வணங்குகின்றனர். பழங்காலத்தில் இவ்வம்மன்களை மாதவிடாயிலிருக்கும் பெண்களே பூசை செய்தனர். பெண் மாதவிடாயிலிருக்கும் போது தெய்விகமானவளாகக் கருதப்பட்டதால் அவளுடன் உடலுறவு கொள்வதும் தவிர்க்கப்பட்டது; இன்று அதற்கு நேர் எதிரான காரணத்தால் அது தவிர்க்கப்படுகிறது. இன்று ஆண், பெண் வேறுபாடின்றி “இந்துக்கள்” நெற்றியில் இட்டுக் கொள்ளும் குங்குமப் பொட்டு முன்பு மாதவிடாய்க் குருதியை நெற்றியில் இட்டதின் எச்சமே. மஞ்சள் நெய் எனப்படும் சிவப்பான குழம்புக்கும் இதே குறிதகவு தான். புகழ் பெற்ற குமரி மாவட்ட முப்பந்தல் இயக்கிக் கோவிலில் மஞ்சள் நெய் வழங்கப்படுகிறது.

இப்படி மகன் வழிபாட்டைக் குறிக்கும் முருகன் பிள்ளையார் எனப்பட்டான். பின்னர் வாதாபிப் போரின் போது வாதாபிக் கோட்டை வாயிலிலிருந்து பரஞ்சோதியால் கொண்டு வரப்பட்ட ஆனை முகனும் சிவனின் பிள்ளையாகக் கூறப்பட்டதால் அவனை மூத்த பிள்ளையார் என்றும் முருகனை பிள்ளையார் என்றும் அழைத்தனர். பின்னர் பிள்ளையார் என்ற பெயர் முற்றிலும் ஆனைமுகனுக்கே உரிமையானது.

இன்று பிள்ளையார் எனப்படும் வினாயகனுக்கு கணபதி, விக்கினேசுவரன் என்ற பெயர்களும் உண்டு. இப்பெயர்க் காரணங்களையும் அவை காட்டும் வரலாற்றுச் செய்திகளையும் காண்போம்.

கணபதிகள் என்று ஒன்றுக்கு மேற்பட்ட தெய்வங்கள் இருந்திருக்கின்றன. கணங்கள் எனப்படுபவை குக்குலங்களின் உட்பிரிவுகளுக்குரிய பெயராகும். அக்கணங்களின் தலைவர்கள் கணபதிகள் எனப்பட்டனர். கணங்களில் தலைவர்கள் கணங்களின் தோற்றக்குறி (Totem) எனப்படும் விலங்குகளின் வடிவிலும் பின்னர் மனித விலங்கு வடிவிலும் (Theriomorphic) பின்னர் மனித வடிவிலும் (Anthropomorphic) வணங்கப்பட்டனர். இக்குறிகள் அதே வடிவில் அதற்குரியோரின் ஆட்சியில் அவர்கள் கொடியாகவும் பயன்பட்டன. மீன், வேங்கை, பன்றி, காளை, சிங்கம் எனப்படும் அரிமா, யானை, கோழி போன்றவை இக்குறியிலிருந்து தோன்றிய கொடிகளே. உறையூர் எனப்படும் கோழியூரில் யானை ஒன்றைச் சேவல் ஒன்று எதிர்த்து வெற்றி கொண்டது என்று தமிழ் இலக்கியங்களில் கூறப்படுகிறது.

“முறஞ்சிறை வாரணம் முன்சமம் முருக்கிய
புறஞ்சிறை வாரணம்……….”

என இதைக் குறிக்கிறார் இளங்கோவடிகள்.[2] இவ்விரண்டு உயிரிகளையும் கொடிகளாகக் கொண்ட படைகள் இவ்வூரில் போரிட்டமையே இக்கதையால் குறிக்கப்பட்டது.

மகதப் பேரரசு போன்ற பேரரசுகள் உருவான போது அவற்றின் வளர்ச்சிக்குக் குக்குல வாழ்வு நிலையிலிருந்த கணங்கள் பெரும் இடையூறாயிருந்தன. எனவே அவற்றை அடக்கி ஒடுக்கி அழிப்பது அவர்களது முகாமையான பணியாயிருந்தது. அர்த்தசாத்திரம் எனப்படும் பொருள் நூலை எழுதிய சாணக்கியர் கணங்களை உட்புகுந்து குலைத்து வலுவிழக்கச் செய்யும் உத்திகளைத் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு குக்குலங்களைத் தாக்கிய பேரரசினர் அவர்களது தெய்வங்களாகிய கணபதிகளை விக்கினங்களாக அதாவது தடைகளாகக் கருதினர், எனவே அவற்றை விக்கினேசுவரர் என்று இழிவுபடுத்தினர். இவ்வாறு கணபதிகள் இழிவு படுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டனர்.

பேரரசுகள் எழுவதும் அழிவதும் வரலாற்றில் நடைபெற்று வரும் தொடர் நிகழ்ச்சி, அவ்வாறு புதிதாகத் தோன்றிய ஒர் அரசை உருவாக்கிய மக்கள் தம் கணபதியாகிய ஆனைமுகத்தானாகிய மனித விலங்கு வடிவக் கடவுளைப் போற்றினர். தக்காணத்தில் தோன்றிய ஒரு பேரரசே அதுவாகும். சாளுக்கிய அரசனான இரண்டாம் புலிகேசியின் கொடி பன்றியாயிருந்தாலும் அவனது படையில் யானைகளின் எண்ணிக்கையே பெரும் வலிமை. இவ்வாறு கணபதியாக மட்டுமல்ல படைக் கருவியாக, போரில் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணி என்ற வகையிலும் யானை வணக்கத்துக்குரியதாகிறது. ஆனை முகத்தானின் இரண்டு கொம்புகளில் ஒன்று ஒடிந்திருப்பதைக் காணலாம். இதற்குப் பல தொன்மச் சாக்குப் போக்குகள் கூறப்படுகின்றன. வியாசர் சொல்ல மகாபாரதத்தை எழுதத் தொடங்கிய ஆனைமுகன் மேருவை ஏடாகக் கொண்டு எழுத்தாணிக்குத் தன் கொம்புகளிலொன்றை ஒடித்தெடுத்துக் கொண்டாராம். போரில் எதிரியின் கோட்டையைத் தாக்கும் போது கொம்பு முறிந்த யானையை இது குறிக்கிறதென்பதே சரியான விளக்கமாகும். கழக இலக்கியத்திலும் கொம்பு முறிந்த யானை பற்றிய இது போன்ற காட்சிகள் பல உண்டு.

இவ்வாறு தான் குதிரையும் இந்தியப் பண்பாட்டில் இடம் பெறுகிறது. உழைப்புக்கு மாட்டையே பயன்படுத்தும் நம் நாட்டில் குதிரையை ஐரோப்பாவைப் போல் உழைப்புக்குப் பயன்படுத்தாமல் போருக்கு மட்டுமே பயன்படுத்தி இருக்கிறார்கள். முரட்டுத்தனம் மிக்க குதிரை மீதமர்ந்து உயிரைப் பணயம் வைத்து எதிரி மீது பாய்ந்து அழிப்பதற்கு அது நல்ல கருவியாகப் பயன்பட்டது. ஆண்மையையும் வீரத்தையும் வெற்றியையும் குறிப்பதாகக் கருதப்பட்ட அதன் உடலுடன் மகப்பேற்றுக்கான புத்திரகாமேட்டி யாகத்தில் அரசிகள் உடலுறவு கொண்டனர். ஒருவன் பேரரசனாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்காகச் செய்யப்படும் அசுவமேதயாகம், இராச சூய யாகம் முதலியவற்றில் குதிரை மாற்றார் நாடுகளில் அவன் படைகளுக்கு முன்னால் நடத்திச் செல்லப்பட்டது. தேர்களில் பூட்டப்பட்ட இரட்டைக் குதிரைகள் அசுவனி தேவர்கள் என்ற தெய்வ வடிவமும் பெற்றன. இந்த இரட்டைக் குதிரைகளைத் தேவர்களின் மருத்துவர்கள் எனவும் போற்றினர். மாட்டு வேள்வி முறியடிக்கப்பட்ட நிலையில் அரசர்களால் புதுப்பிக்கப்பட்ட வேள்வியைப் பற்றி வடமொழி நூலென்று குறிப்பிடுவதாவது”

“யாகம் ‘நான் இனி உங்களுக்கு உணவாக மாட்டேன்’ என்று கூறிக் கடவுள்களை விட்டகன்றது. ‘கூடாது, நீ எங்கள் உணவாக இருக்க வேண்டும்’ என்றனர் கடவுள்கள். கடவுள்கள் அதனைத் தகர்த்தார்கள்; அவ்வாறு பிய்த்தெடுக்கப்பட்டதால் யாகம் அவர்களுக்குப் போதியதாயிருக்கவிலலை. ‘பிய்த்தெடுக்கப்பட்ட யாகம் நமக்குப் போதியதல்ல் எனவே வாருங்கள், யாகத்தை மீண்டும் ஒன்றாக்குவோம்’ என்றனர் கடவுள்கள். மற்றவர்கள் ‘அப்படியே ஆகட்டும்’ என்றனர். அவர்கள் அதை ஒன்று சேர்த்தனர். ஒன்று சேர்த்த பின் அசுவினிகளைப் பார்த்து ‘இதைக் குணப்படுத்துங்கள்’ என்றனர்; அசுவினிகள் கடவுள்களின் மருத்துவர்களாவர், எனவே அவர்கள் இருவரும் கடாரத்தில் (கொப்பரையில்) அவற்றைத் திரட்டினர், ‘பிரமனே நாங்கள் பிரவர்கியா பலியிடத் தொடங்குகிறோம் ……..’ என்றனர்.[3]

எனவே மாட்டு நாகரிகம், குதிரை நாகரிகம் என்பவற்றை முறையே திராவிட நாகரிகம், ஆரிய நாகரிகம் எனப் பிரிக்க முடியாது. மாறாக இரண்டு நாகரிகக் கட்டங்களைக் குறிப்பனவாகவே அவற்றைக் கொள்ள வேண்டும்.

விக்கினங்கள் எனப்படும் தடைகளை உண்டாக்குபவன் என்று ஒதுக்கப்பட்டு இழிவு படுத்தப்பட்ட கணபதி பின்னர் விக்கினங்களை அகற்றுபவன் என்று புகழ்ந்தேத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி மூதேவியைப் பற்றிக் குறிப்பிட்டதற்கு நேர் எதிரானது. அங்கு புகழ்பெற்ற ஒரு தெய்வம் இழித்து ஒதுக்கப்படுகிறது.

சாளுக்கியனான இரண்டாம் புலிகேசியின் தலைநகரான வாதாபியிலிருந்து ஆனைமுகன் கொண்டு வரப்படு முன்பே நம் நாட்டில் ஒருவகை யானை வழிபாடு இருந்தது. இந்திரனின் ஊர்தியான வெள்ளை யானைக்குப் புகார் நகரில் கோயிலிருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. அது மட்டுமல்ல குறிஞ்சித் தெய்வமான முருகனின் ஊர்தி யானையாக இருந்தது.

“பிணிமுக(ம்) மேற் கொண்டவுணர் பீடழியும் வண்ணம்”
(சிலம்பு, குன்றக்குரவை, செய்யுள் 8, நாட்டார் உரை)

என்ற அடிகளுக்கு உரை எழுதும் போது ‘சேயுயர் பிணிமுகம் ஊர்ந்து (அ)ம(ர்) உழக்கி’ என்புழிப் பரிமேலழகரும், ‘ஓடாப் பூட்கைப் பிணமுகம் வாழ்த்தி’ என்புழி நச்சினார்க்கினியரும் பிணிமுகம் முருகக் கடவுள் வரும் யானை என்பர். முருகற்கு யானையும் ஊர்தியாதல் பரிபாடல், பதிற்றுப்பத்து முதலியவற்றால் அறியப்படும் என்று ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் கூறுகின்றார். ஒரு தெய்வத்துக்கு ஊர்தியாக விளங்கும் ஏதோ ஒரு விலங்கு அத்தெய்வத்தை வணங்கும் மக்களின் தோற்றக் குறியாக இருக்க வேண்டும் அல்லது அம்மக்களால் வெல்லப்பட்ட இன்னொரு மக்களின் தோற்றக் குறியாக இருக்க வேண்டும். கோழியூரைப் பற்றிய கதையில் நாம் குறிப்பிட்டது போல் கோழிக் கொடியைக் கொண்டிருந்த ஒரு படை யானைக் கொடியைக் கொண்டிருந்த இன்னொரு படையை வென்றதன் விளைவாக கோழிக் கொடியை உடைய முருகனுக்கு யானை ஊர்தியாகியிருக்கலாம். இன்னொரு வகையில், வள்ளி திருமணம் பற்றிக் கூறப்படுவதிலிருந்து யானையை முதன்முதல் வசக்கியவன் என்பதற்கு அறிகுறியாக அது அவன் ஊர்தியாகியிருக்கலாம். ஆனால் வாதாபி கணபதி தமிழகத்துக்கு வந்து அவன் சிவனின் மூத்த மகன் என்ற பொருளில் “மூத்த பிள்ளையார்” என்று அழைக்கப்பட்ட பின்னர் தம்பிக்கு அண்ணன் ஊர்தியாயிருக்க முடியாதாகையால் தம்பியின் ஊர்தி மயிலாயிற்று. பிணிமுகம் மயில் என்று உரை கூறப்பட்டது.

இவ்வாறு பிள்ளையார் என்றழைக்கப்பட்ட முருகனிலிருந்து பிரித்தறிவதற்காக மூத்த பிள்ளையார் என்றழைக்கப்பட்டுப் பின்னர் பிள்ளையார் என்ற பெயருக்கு முழு உரிமையும் பெற்றது ஆனைமுகத் தெய்வம். மூத்த பிள்ளையார் இரட்டை மணிமாலை என்றொரு நூலும் கூட இயற்றப்பட்டுள்ளது. நாளடைவில் பிள்ளையார் தமிழகத்தின் புலவர்களைக் கவர்ந்த தெய்வமானார். நூல் எழுதுவோர் அனைவரும் “கணபதி துதி” “வினாயகர் துதி”, “பிள்ளையார் வாழ்த்து”க் கூறியே தம் நூலைத் தொடங்கினர். நாட்டுப்புறப் பாடல்களைப் பாடியோரும் “தொந்திக் கணபதி”யை வாழ்த்தியே தம் பாடல்களைப் பாடுகின்றனர். இத்தகைய புகழுக்குக் காரணம் யாது?

ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு. முதலாவது காரணம், பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் தொழத் தடை செய்யப்படாத தெய்வம் பிள்ளையார் மட்டும் தான். தெய்வீகமாகக் கருதப்பட்ட மாதவிடாய்க் காலம் ஒதுக்கப்படத்தக்கதாக மாறிய நேரத்தில் பெண்களிடையில் பிள்ளையார் இவ்வாறு செல்வாக்குப் பெற்று கிணற்றின்கரை, குளக்கரை, ஆற்றின்கரை ஆகிய குளியல் துறைகளில் இடம் பெற்றார். இரண்டாவது காரணம், சாதி வேறுபாடின்றி வணங்கத் தக்க தெய்வமாகவும் பிள்ளையார் இருந்தது. மூன்றாவது காரணம் “உள்ளூர் தெய்வத்துக்கும் வெளியூர்க் குளத்துக்கும் அஞ்ச வேண்டும்” என்பதற்கு ஏற்ப வெளிநாட்டிலிருந்து வந்த பிள்ளையார் அச்சந்தரும் தெய்வமல்ல. எனவே கண்ட இடங்களில், குறிப்பாக பொது நிலங்களைக் கைப்பற்றுவதற்காகப் பிள்ளையார் சிலையை நிறுவுவதற்காக இன்னோரிடத்தில் இருந்து சிலையைத் திருடவும் எங்கு வேண்டுமானாலும் வைக்கவும் வழியிருந்தது. பிள்ளையார் எவருக்கும் குல தெய்வமாகவோ குடும்பத் தெய்வமாகவோ இல்லாததால் அவரை இவ்வாறு கையாள்வதில் சிக்கல்கள் எழவில்லை. அத்துடன் கோட்டைகள் எனும் தடைகளாகிய “விக்கினங்களை”த் தகர்த்துப் படைக்கு முன் நடந்து வெற்றியைக் கைப்பற்ற உதவிய யானையை “கணபதி” என்ற கருத்துருவின் வடிவமாகவும் விக்கினங்கள் எனும் தடையாயிருந்து இப்போது அவற்றைத் தகர்த்து வழி காட்டும் விக்கினக் கடவுளாகவும் கொண்டனர். அதனால் தான் ஆனைமுகனை நோக்கி நம் நாட்டுப்புறக் கதைப் பாவலர்கள் “முன் நடவாய்” என்று வேண்டுகின்றனர். எந்த நிகழ்ச்சியிலும் பிள்ளையார் பிடிப்பதும், எழுதும்போது கூட பிள்ளையார் சுழிபோடுவதும் வழக்கமாகி விட்டன. “ஓம்” என்ற வடிவத்துக்குக் கூடப் பிள்ளையார் வடிவத்தை மூலமாக்கிக் கூட்டுகின்றனர்.

திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பிள்ளையார் என்ற பெயரில் சாணியையோ அரைத்த மஞ்சளையோ பிடித்து வைக்கின்றனர். இது ஒருவேளை ஆனைமுகன் வரவுக்கு முந்திய பழக்கமாய் இருக்கலாம். “பிடித்தால் பிள்ளையார், பிடிக்கா விட்டால் சாணி” என்றொரு பழமொழியும் உண்டு. முன்பு இலிங்க வடிவத்தைப் பிடித்து வைத்தது பின்னர் பிள்ளையார் என வழங்கப்பட்டுமிருக்கலாம்.

பிள்ளையார் நான்காம் பிறை நிலவின் நிழலைத் தண்ணீரில் கண்டு உடைத்த தேங்காய் என்று அதை எடுக்க முயலும் போது நிலவு அவரைப் பாhத்துச் சிரித்ததாகவும் பிள்ளையார் சினங்கொண்டு “நான்காம் பிறையைப் பார்ப்பவர்களுக்குத் தீங்கு நேரட்டும்” என்று சாவித்ததாகவும், நிலவு இரந்து வேண்டிக் கொண்டதன் பேரில் “பிள்ளையார் சதுர்த்தியன்று நிலவைப் பார்ப்பவர்களுக்கு நன்மை உண்டாகட்டும்” என்று கூறியதாகவும் ஒரு கதை பிள்ளையார் சதுர்த்தியைப் பற்றிக் கூறப்படுகிறது.
முகம்மதியர்களின் ஆட்சியில் பிள்ளையார் சதுர்த்தியன்று இந்துக்கள் பிள்ளையாரை யாரும் அறியாமல் வழிபட்டு மறுநாட் காலையில் ஆற்றிலோ, கிணற்றிலோ, குளத்திலோ எறிந்துவிடுவது வழக்கமாம். அதன் நினைவாகப் பாலகங்காதர திலகர் என்ற பழமைத் தலைவர் மராத்தி மாநிலத்தில் உயிர்ப்பித்த இந்த இயக்கம் வளர்ந்து இந்தியத் தேசியப் பேராயக் கட்சியாலும் தொழிற் சங்கங்களாலும் தமிழகத்தில் பரவலாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிள்ளையார் சதுர்த்தி ஒரு மேற்சாதிப், பார்ப்பனிய, வெள்ளாளக்கட்டினர் விழாவாக விளங்குகிறது. கீழ்ச் சாதியினர் அதைச் சிறப்பாகக் கொண்டாடுவதில்லை.

மாதந்தோறும் ஒன்றோ பலவோ நோன்புகள் இருப்பது மேற்சாதியினரின் வழக்கம். அவ்வாறு நோன்பிருப்பது உடல் நலனுக்கு உகந்தது என்று கூறப்படுகிறது. நோன்புச் இருப்போர் பகலில் உணவைத் தவிர்த்து இரவில் மட்டும் உண்பர். ஆனால் அவ்வாறு உண்ணும் போது வடை, பாயசம் எனப்படும் அக்கார வடிசில் ஆகியவற்றுடன் பிற நாட்களுக்கும் அதிகமாகவே உண்பர். இவ்வாறு நோன்பு இருப்பவர்கள் எவ்வித நோயில் இருந்தும் விடுபட்டவர்களாகத் தெரியவில்லை. மாறாக அன்றாடம் உழைக்கும் கீழ்ச்சாதி மக்களுக்கு நோன்பு தேவையில்லை. அவர்களது உழைப்பும் வறுமையும் அதிகத் தீனியினால் ஏற்படும் நோய்களாகிய இரத்ததக் கொதிப்பு, இருதய நோய் எனப்படும் நெஞ்சாங்குலை நோய், நீரிழிவு, நீரில் அதிக உப்பு முதலிய நோய்களிலிருந்து அவர்களைக் காக்கின்றன. இருந்தாலும் கோயில்களில் நேர்த்திக் கடன் செலுத்தும் போது மட்டும் புலால் உணவு போன்றவற்றை விலக்கி அவர்கள் நோன்பு இருக்கிறார்கள்.

இவற்றிற்கு மாறாகக் கீழ்ச்சாதி மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் திருநாட்களில் தைப்பொங்கல் முகாமை ஆனது. தமிழகத்தின் பெரும்பான்மை மக்களான நாட்டுப்புற மக்கள் அனைவரும் விதிவிலக்கின்றிக் கொண்டாடும் திருநாள் இது. ஓராண்டில் வேளாண்மை முடிந்து அறுவடை செய்து தவசங்களும் (தானியங்களும்) கரும்பும் மஞ்சளும் இஞ்சியும் களத்துக்கு வந்து வீட்டை அடைந்த நிலையில் புத்தரிசி அல்லது புதுச் சோறு உண்ணும் நாளாக இது அமைகிறது. அத்துடன் கதிரவன் வடபால் பயணத்தைக் குறிக்கும் ஆண்டுப் பிறப்பாகவும் அது முற்காலத்தில் இருந்திருக்கிறது. நம் நாட்டில் பெரும்பாலான மக்கள் அப்போது தான் புத்தாடை புனைகிறார்கள்; மாடுகளைக் கொம்பு சீவி வண்ணமிட்டு வண்டிகளைச் சோடித்து மாட்டுவண்டிப் போட்டிகள், சல்லிக்கட்டு முதலியவை நடத்துவர். தெருக்கூத்து, நாடகங்கள், ஆடல்கள், பாடல்கள் நடத்துவர். உறவினர்களையும், நண்பர்களையும் கண்டு வருவர்.

இவ்வாறு கீழ்ச்சாதி மக்களால் கொண்டாடப்படுவதால் நிலக்கிழார்களாகிய மேற்சாதியினரும் அதனைக் கொண்டாட வேண்டியுள்ளது. முற்றிலும் நகர்ப்புறங்களில் வாழும் மேற்சாதியினர், குறிப்பாகப் பார்ப்பனரும் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிறரும்தான் இதைப் பெருமளவில் கொண்டாடுவதில்லை. மாறாகத் தைப்பொங்கலுக்கு முந்திய நாளைச் சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். கதிரவனின் தென் பால் பயணத்தின் இறுதி நாள் என்ற பெயரில் அதைக் கொண்டுகிறார்கள். அத்துடன் சிவன் விலைமகள் இல்லம் சென்றதாக ஒரு கதை கட்டி சிவனைப் பழித்து அத்துடன் சங்கராந்தியை இணைத்துள்ளனர். இது புரிந்து கொள்ளத்தக்கதே. தமிழ்நாட்டை வரலாற்றின் இறுதிக் காலத்தில் வெள்ளையருக்கு முன் கைப்பற்றி ஆண்டவர்கள் தெலுங்கர்களான விசயநகரப் பேரரசினரும் அவர்களிலிருந்து கிளைத்த நாயக்கர்களுமே. அவர்கள் வைணவத்தைத் தழுவியவர்களாய் இருந்ததால் இங்கு தேசிய உணர்வுகள் சைவ மத வடிவாக வெளிப்பட்டன. எப்போதும் இங்குள்ள பெரும்பான்மை மக்களுக்கு எதிராக வெளியாருடன் கூட்டுச் சேரத் தயங்காத பார்ப்பனர்களும் வெள்ளாளக்கட்டு மேற்கொள்ளத் தயங்காத பார்ப்பனியர்களும் வெளிப்பண்பாட்டுக் கூறுகளை இறுகத் தழுவி உள்நாட்டுப் பண்பாட்டை இழிவுபடுத்துவது போலவே இதுவும் நடைபெற்றது.

தைப்பொங்கல் கதிரவனை வழிபடுவதாகும்; கதிரவனை வணங்குவோர் ஆரியர்களாகும்; திராவிடர் நிலவை வணங்குவோராகும்; எனவே தைப் பொங்கல் ஆரியர்களுக்குரியது என்று ஒரு சிலர் கூறகின்றனர். என்னவோ நிலவு உலகின் ஒரு பகுதியினர்க்கும் கதிரவன் இன்னொரு பகுதியினர்க்கும் மட்டும் சொந்தமானவை போல் இவர்களுக்குத் தோன்றுவது வியப்பே. முதன் முதலில் தேய்வு வளர்ச்சி என்ற வகையிலும் கண்ணால் எளிதில் பார்க்கத்தக்கதுமான நிலவையே மனிதன் காலக் கணிப்புக்குப் பயன்படுத்தினான். காலத்தைக் கணிக்க, மதிக்கப் பயன்பட்டதாலேயே நிலவு மதி எனப்பட்டது. அது காட்டிய காலம் மாதம் என்றும் திங்கள் என்றும் அழைக்கப்பட்டது. பின்னரே கதிரவனின் இயக்கம் நோட்டமிடப்பட்டு அத்துடன் நிலவு மாதங்கள் ஏதோவொரு வகையில் பிணைக்கப்பட்டு புதிய மதிகதிர் ஆண்டுகள் (Lunar year – நிலவாண்டு; Solar year – கதிராண்டு; Lunisolar year – மதிகதிர் ஆண்டு) உருவாயின. உலகிலுள்ள பெரும்பான்மையான ஆண்டுகள் ஏதோ ஒரு வகையில் மதிகதிர் ஆண்டுகளே. சித்திரை மாதத்தில் பிறக்கும் தமிழாண்டாயிலும் சுமார்த்த ஆண்டெனப்படும் தெலுங்காண்டானாலும், சக ஆண்டானாலும் எல்லாமே ஏதோ ஒரு வகையில் மதிகதிர் ஆண்டுகளே. முகம்மதியர்களின் ஆண்டு மட்டுமே முழுமையான நிலவு ஆண்டாகும். எனவே நாகரிகங்களை நிலவு நாகரிகங்கள், கதிரவ நாகரிகங்கள் எனப் பிரிப்பதற்குப் பகரம் கதிரவ வழிபாட்டுக்கு முற்பட்ட நாகரிகங்கள், அதற்குப் பிற்பட்ட நாகரிகங்கள் என்று பிரிப்பதுதான் முறை. குதிரையை பற்றி முன்போரிடத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆரிய இனக் கோட்பாட்டின் போலிமையை விளக்க இங்கு நாம் முற்படவில்லை. தமிழ்நாட்டில் வேறெந்தத் திருநாளை விடவும் பெரும்பான்மையாகவும் பெருமளவிலும் கொண்டாடப்படுவதால் தைப்பொங்கல் தமிழர் திருநாள் எனும் அடைமொழிக்கு உரிமை பெறுகிறது.

தைப் பொங்கலிலும் ஓரளவு தீபாவளியிலும் வெளிப்படும் சில பழைய பொருளியல் உறவுகளின் வெளிப்பாடுகள் நம் நாட்டுப் பண்பாட்டின் சில தீய கூறுகளாக இன்று நிலவுகின்றன. பொங்கல் இனாம், தீபாவளி இனாம் என இவை வழங்கப்படுகின்றன. ஊர்ப்புறங்களில் இவை பொங்கல்படி, தீபாவளிப்படி என வழங்கப்படுகின்றன. இத்திருநாட்களில் ஊரிலுள்ள பண்ணையார்களிடம் ஏழை மக்கள் வந்து பணமாகவோ, தவசமாகவோ ஏதாவது பெற்றுச் செல்கின்றனர். சில இடங்களில் துணிமணிகளும் வழங்கப்படுகின்றன. கொத்தடிமை அல்லது பண்ணையடிமைகள் (பண்ணையாட்கள்) அறுவடைக் களத்தில் பெறும் அவர்கள் பங்குத் தவசத்துக்குக் கொத்து என்று பெயர். கொத்தடிமை என்ற சொல்லுக்குக் காரணமும் இதுதான். இன்று நாட்டுப்புறத்தில் கூலியாக அளக்கப்படும் தவசத்துக்குக் கொத்து என்ற சொல்லே வழங்கப்படுகிறது. அத்தகைய கொத்தடிமைகளுக்கு வழங்கப்பட்ட பணம் துணிமணி ஆகியவையே இன்று இனாம் என்ற பெயரில் குறிக்கப்படுகிறது. பண்ணையார் அல்லது நிலக்கிழார் வீட்டுத் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள், பண்ணையாட்களின் வீடுகளில் நடைபெறும் அதே வகை நிகழ்ச்சிகள் ஆகியவற்றின் போதும் பண்ணையாட்களுக்கு இத்தகைய “சீர்கள்” வழங்கப்படும். மணமாகிக் கணவன் வீடு சென்ற பெண்களுக்குப் பெற்றோர் அல்லது உடன்பிறந்தோரிடமிருந்து இதே போன்று சீர்கள் செய்யப்படும்.

பெண்களுக்கு இவ்வாறு செய்யப்படும் சீர் ஒரு நீண்ட வரலாற்றுப் பின்னணியின் புதைபடிவமாகும். பெண் கணவன் வீட்டுக்குச் செல்லும் போது அவளோடு அசையாச் சொத்துகளாகிய நிலம், வீடு ஆகியவற்றைப் பெயர்த்தெடுத்துச் செல்ல முடியாது. அதனால்தான் அவளுக்கு அசையும் சொத்துக்களாகப் பாத்திரம் பண்டங்கள், நகைகள், பணம் ஆகியவை சீதனமாகக் கொடுக்கப்பட்டன. ஆனால் அவளுக்கு மறுக்கப்பட்ட நிலவுடைமையின் மீது அவளுக்கிருந்த உரிமையின் அடையாளமாகவே தாய் வீட்டிலிருந்து வேளாண் விளைபொருட்களான சீர்கள் வழங்கப்படுகின்றன. தனிக்குடும்பச் சொத்தாக நிலம் நிலவிய காலத்தில் இது பொருத்தமானதே. அதே வேளையில் வேளாண்மை முதலாளிய வடிவத்தை அடைகிறதென்று வைத்துக் கொள்வோம்; அதாவது பெரும்பெரும் வேளாண் பண்ணைகள் பங்கு மூலதனத்தில் நடத்தப்படும் நிலை ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது குடும்பங்களின் சொத்து என்பது பங்கு ஆவணங்களாக மாறிவிடும். அந்நிலையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பங்காவணங்களாகப் பிரித்துக் கொடுத்து விடலாம். இப்போது இயற்றப்பட்டிருக்கும் பெண்கள் சொத்துரிமைச் சட்டம் அசையும் பொருளாகிவிட்ட பெண்ணுக்கும் அசையாச் சொத்துகளுக்கும் ஒரு முரண்பாட்டை உருவாக்கியிருக்கிறது.

நாட்டுப்புறங்களில் நிலவும் பொங்கல், தீபாவளி இனாம்களின் எச்சமாக இன்று அலுவலகங்களிலுள்ள கடைநிலை ஊழியர் முதலிய கீழ்நிலை ஊழியர்கள் பொங்கல், தீபாவளிகளின் போது அலுவலகத்தின் பிற ஊழியர்களிடம் இருந்தும் துறைக்குத் தொடர்பான பொதுமக்களிடமிருந்தும் இனாம் தண்டுவதுண்டு. அதிகாரிகளும் மேல்நிலை அலுவலர்களும் துறை “வாடிக்கையாளர்”களிடமிருந்து இனாம் தண்டுவர்-சிலர் கேட்காமலே கொடுப்பர். பெருநாட்களின் போது அலுவலகங்களில் இனாம் பெறுவதும் கொடுப்பதும் தடங்கலின்றி நடைபெறும் ஒரு நிகழ்முறையாகும்.

அண்மைக் காலத்தில் “இனாம்” தண்டுவதில் புதுப் புது உத்திகளெல்லாம் தோன்றியுள்ளன. “சபரிமலைக்கு மாலை போட்டுள்ளேன், செலவுக்கு வேண்டும்” என்று ஐயப்பன் பெயரைக் கூறிப் பெரும் பணம் தண்டிவிடுகின்றனர் சில “திறவோர்”. கொடுப்பவருக்கு ஐயப்பனின் அருள் கிடைக்கவில்லையாயினும் “இரு முடி” தாங்கும் ஐயப்பன் கருணையாவது கிட்டுமே என்ற ஆறுதல். திருப்பதியான் கோயில் செல்வதற்காகவும் இது போல் “காணிக்கை” தண்டுவதுண்டு.

ஊழல் இவ்வாறு நம் குமுகத்திலும் சமயத்திலும் இரண்டறக் கலந்து ஒன்றையொன்று தாங்கி ஒன்றையொன்று ஊக்கி வந்துள்ளது, ஊக்கி வருகிறது. இறைவனுக்குக் காணிக்கை செலுத்தினால் அவன் அருளுவது (என்பது நம்பிக்கை) போல் அதிகாரியும் அருளுவான் (இது நடப்பு); காணிக்கை பெற்றால் அதிகாரி அருளுவது போல் இறைவனும் அருளுவான் என்று இவை ஒன்றையொன்று சார்ந்திருக்கின்றன. (தமக்குள் மறைந்திருக்கும் திறமைகளும் தற்செயல் நிகழ்ச்சிகளுமே தம் வெற்றிக்குக் காரணம் என அறியாத, வாழ்வில் வெற்றி பெற்ற பலர் ஏதோ சில தெய்வங்களின் அருளால் தான் அந்த வெற்றி கிட்டியது என்று மனமார நம்பிக் காணிக்கைகள் செலுத்துவதும் உண்டு.)

ஆடிப் பிறப்பு கதிரவனின் தென்பால் செலவின் தொடக்கத்தைக் குறிப்பிடுகிறது. எனவே இது தைப்பொங்கலோடு தொடர்புடையது. இதைக் கீழ்ச்சாதியினரும் மேற்சாதியினரும் கூட ஏதோ ஒரு வகையில் கொண்டாடுகின்றனர். ஆடி மாதத்தில் கருவுற்ற குழந்தை சித்திரை மாதத்தில் பிறக்கும்; சித்திரை வெய்யிலின் கொடுமையால் அம்மை போன்ற நோய்களுக்காளாகிக் குழந்தை தொல்லைப்படும் என்பதால் கணவனும் மனைவியும் பிரிந்திருக்க வேண்டும் என்று மனைவியைத் தாய்வீட்டுக்கு அனுப்புவதும் உண்டு. வெளியூர் சென்று தங்கியிருப்போர் ஆடித் தங்கல் என்ற பெயரில் ஊருக்குத் திரும்பி விட வேண்டும் என்ற நம்பிக்கையும் உண்டு.

ஆடி முழுக்கு எனப்படுவது பதினெட்டாம் பெருக்கு எனவும் வழங்கப்படும். ஆனி, ஆடி மாதங்களில் மேற்கு மலைத் தொடரில் மழை பெய்து அங்கிருந்து புறப்பட்டுக் கிழக்கிலிருக்கும் தமிழ்நாட்டினுள் ஓடி வரும் ஆறுகளில் வெள்ளம் பெருகிக் குளங்களையும், வாய்க்கால்களையும் நிரப்புவதால் உழவு வேலையின் தொடக்கத்தைக் குறிக்கும் விழாவாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இதுவும் உழவுத் தொழில் அடிப்படையானது.
கரிகாலன் மகள் ஆதிமந்தியின் கணவனும் பெரும் ஆடல் வல்லோனும் பின்னாளில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என்று புகழ் பெற்றோனுமாகிய ஆட்டனத்தி இத்தகைய பதினெட்டாம் பெருக்கில் காவிரி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு மாருதி எனும் மீனவப் பெண்ணால் மீட்கப்பட்டு ஆதிமந்தியிடம் ஒப்படைக்கப்பட்டான் என்று கழக (சங்க)ப் பனுவல்கள் கூறும்.

சோழ அரசர்கள் பெருங்கொண்ட வேளாண்மையை வளர்த்தவர்கள். எனவே அவர்களும் இப்பதினெட்டாம் பெருக்கு விழாவில் நேரடியாகக் கலந்து கொண்டார்கள். பின்னாளில் அரசர்கள் உழைப்பையும் விளைப்பையும் சிதைக்கும் வெறும் ஒட்டுண்ணிகளாக மாறிவிட்ட காலத்தில் இவ்விழா கீழ்ச்சாதிகளிடம் மட்டும் தங்கிவிட்டது.

ஆடிப்பெருக்கிலிருந்து தொடங்கும் வேளாண்மைச் செயல்முறையைச் சீவகசிந்தாமணியில் நாமகள் இலம்பகம் விரிவாகக் கூறுகிறது. ஊர்ப் பணியாளர்கள் பறை முதலியவற்றை அறைந்து ஊர் மக்களைத் திரட்டி ஆறுகளுக்கும் சிற்றாறுகளுக்கும் சென்று அணை (மட்குரம்புகள்) கட்டி நீரை வயல்களுக்குத் திருப்பிப் பயிர்த்தொழில் செய்வதைக் காப்பியச் சுவையுடன் திருத்தக்கத்தேவர் நமக்கு வடித்துத் தந்துள்ளார்.

ஆடிப் பெருக்கில் ஏட்டுச் சுவடிகளை எறிவதென்ற தீய பழக்கம் இன்று கூடப் பின்பற்றப்படுகிறது. தமக்கு வேண்டிய நூல்களைப் படியெடுத்து விட்டு மீந்தவற்றை ஆற்றில் விடும் இந்தப் பழக்கத்தால் விலை மதிப்புப் பெற்ற பல தமிழ் நூல்கள் அழிந்தன.

திருக்கார்த்திகை, நடைமுறையில் விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி எனும் விளக்கணி விழாவென்றே கருத இடமிருக்கிறது; ஏனென்றால் திருக்கார்த்திகை மாதத்தில்தான் நாள்தோறும் வீட்டின் முன் திண்ணையிலும் வாயிற்படிகளிலும் காரை வீடாயின் கைப்பிடிச்சுவரிலும் மதிற்சுவரிலும் சிறு அகல்களை ஏற்றி வரிசையாக வைக்கிறார்கள். நாட்டுப் புறங்களில் இதை வேறொரு வகையாகவும் கொண்டாடுகிறார்கள். திருக்கார்த்திகை அன்று சொக்கப் பனை கொளுத்தல் என்ற விழா நடைபெறுகிறது. முழுப் பனைகளை வெட்டி நட்டு அதன் உச்சியில் தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். இது தவிர குமரி மாவட்டத்தில் வேறொன்றும் நடைபெறுகிறது. புன்செய்க் காடுகளில் வளரும் பொரிஞ்சை எனப்படும் ஒருவகைப் பூண்டுகளை வேரோடு பிடுங்கி நன்றாக உலர்த்தி அதனைக் கழிகளில் சுற்றி முழு நீளத்துக்கும் கட்டி வைத்து அதில் தீ வைக்கிறார்கள். அது படபடவென்று பொரிந்து கொண்டு எரிகிறது. அத்துடன் ஆண் பனை மரத்தின் (அலகுப் பனையின்) உலர்ந்த பாளையைக் கருக்கித் தூளாக்கித் துணியில் கிழியாகக் கட்டி அரளிச் செடியின் முக்கவைக் கணுவொன்றின்[4] நடுவில் வைத்து இறுகக் கட்டி அதன் அடிப்புறத்தில் நீண்ட கயிற்றைக்கட்டிக் கரிக்கிழிக்குத் தீ வைத்துக் கயிற்றைத் தலைக்கு மேல் விசையாகச் சுற்றினால் மத்தாப்புப் போல் பூச்சொரியும். இவ்வகை மாத்தாப்பும் கொளுத்தி விளையாடுகிறார்கள். இவை இரண்டிலும் சிறுவர்கள் முழு மூச்சுடன் ஈடுபடுகின்றனர்.[5]

பொரிஞ்சை போன்ற செடிகளைக் கட்டிக் கொளுத்து தான் உண்மையான சொக்கப் பனை. சொக்கன் என்ற சொல் போலி என்ற பொருளில் குமரி மாவட்டத்தில் வழங்குகிறது. மதுரையில் உண்மையான அதிகாரம் உள்ளவளாகக் கூறப்படும் பெண் தெய்வம் மீனாட்சியின் கணவனான சொக்கனாதனுக்கு அப்பெயர், அவன் அதிகாரமில்லாத போலி என்ற கருத்திலேயே வழங்குகிறது போலும். அல்லது அப்பெயரிலிருந்து சொக்கன் என்ற சொல்லுக்குப் போலி என்ற பொருள் வந்திருக்கலாம்.

கார்த்திகை மாதத்தோடு தமிழகத்தில் வடகிழக்குப் பருவக்காற்று மழை முடிகிறது. காராகிய மழை முடிவதால் அதாவது திகைவதால் (திகைதல் = நிறைவு பெறுதல்) அம்மாதம் கார்த்திகை (கார் + திகை) எனப்பட்டது. “கார்த்திகைக்குப் பின் மழையுமில்லை கர்ணனுக்குப் பின் கொடையுமில்லை” என்பது பழமொழி. கார்த்திகை மாதத்தோடு மழை நின்றுவிடுவதால் அதுவரை கீழேயுள்ள குளங்களுக்குத் தண்ணீர் செல்வதற்கென்று திறந்து வைக்கப்பட்டிருக்கும் மேலேயுள்ள குளங்களின் மறுகால் குத்துக்கல்களையும் மடைகளையும் மார்கழி மாதப்பிறப்பை ஒட்டி வரும் டிசம்பர் 15 அன்று அடைத்து விடலாம் என்பது அரசும் பொதுப் பணித்துறையும் கடைப்பிடித்து வரும் நடைமுறையாகும். அத்துடன் புரட்டாசியின் பருவக் காற்று, தென்மேற்கிலிருந்து வடகிழக்குக்கு மாறி வீசத் தொடங்கும் போது தொடங்கி ஐப்பசி, கார்த்திகை மாதம் முடிய இடைவிடாது பெய்யும் மழையால் கணக்கற்ற புல்பூண்டுகள் வளர்ந்துவிடும். அவற்றோடு பலவகைப் புழுக்களும் பூச்சிகளும் வண்டுகளும் பெருகிவிடும். அதனால்தான் “கார்த்திகை என்றால் கல்லும் புழுக்கும்” என்ற பழமொழியும் தோன்றியுள்ளது. நெற்பயிர் போன்ற உணவுப் பயிர்களில் பொதி எனப்படும் பூத்தோன்றி விதைகளில் பால் பிடிக்கும் போது இப்புழு பூச்சிகள் மற்றும் வண்டுகளால் அவை அழிக்கப்படும். இதனைத் தடுக்கவே அப்பூண்டுகளைப் பிடுங்கித் தீவைக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்க வேண்டும். இப்படிப் பூண்டுகளைப் பிடுங்கி விட்டால் மட்டுமே சிக்கல் தீர்ந்து விடாது. பூண்டுகளில் தங்கியிருந்த பூச்சிகள் நேரடியாக பயிர்களைத் தாக்கும். எனவே தான் இரவில் தீயை வளர்த்து அதனால் கவரப்படும் பூச்சிகள் அதில் விழுந்து மடியச் செய்யும் விளக்கணி விழாவாகிய தீபாவளியும் திருக்கார்த்திகையும் தோன்றியிருக்க வேண்டும்.

விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி என்ற பெயருக்கும் உண்மையிலேயே விளக்குகளின் வரிசை வைத்துக் கொண்டாடப்படும் திருக்கார்த்திகைக்கும் உள்ள இந்தத் தொடர்பு தவிர இன்னொரு நெருக்கமாக உறவும் இவ்விரு திருநாட்களுக்கும் இடையில் உண்டு. தீபாவளி ஐப்பசி மாதத்தின் காருவா நாளில் வருகிறது. திருக்கார்த்திகை அடுத்த மாதமான கார்த்திகை மாதத்தில் வெள்ளுவா நாளில் வருகிறது. ஐப்பசி மாதத்தில் இரண்டு காருவா நாட்களோ அல்லது கார்த்திகையில் இரண்டு வெள்ளுவா நாட்களோ வரும் ஒரு சில ஆண்டுகள் நீங்கலாகப் பெரும்பாலும் தீபாவளிக்கும் திருக்கார்த்திகைக்கும் இடையில் பதினைந்து நாட்கள்தான் உண்டு. இதிலிருந்து நாம் இன்னொன்றையும் அறிந்துகொள்ள முடிகிறது.

பூச்சிகளை அழிப்பதற்கு ஒரு நாள் போதாது. எனவே தீபாவளி தொடங்கி புல் பூண்டுகளைப் பிடுங்கி உலர்த்தும் பணியும் புஞ்சை நிலங்களில் தீ வளர்த்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கும் பணியும் தொடங்கப்பட்டு திருக்கார்த்திகை அன்று அது நிறைவு பெறுவதாகவும் இருக்கும் சொக்கப்பனை கொளுத்தல் முதலியவை நடைபெறுவதாய் இருக்க வேண்டும். சிறுவர் முதல் பெரியவர் வரை விளையாட்டுப் போலவே இவற்றைச் செய்வதால் பெருமளவு மனித உழைப்பு மிக எளிதில் திரட்டப்பட்டு விடுகிறது. புழு பூச்சிகளின் முட்டைகள் இந்த இடைவெளியில் பொரித்து வளர்ச்சியடைந்தால் அவை மீண்டும் முட்டையிடத் தேவைப்படும் காலத்தினுள் அழிக்கப்பட்டு விடுகின்றன. இன்று பல்வேறு வகைக் கடுமையான நச்சுப் பொருட்களை உருவாக்கியும் பூச்சிகள் புழுக்களை அழிக்க முடியாமல் அப்பூச்சி புழுக்கள் அந்நஞ்சுகளை எதிர்த்து வாழும் ஆற்றலைப் பெற்றதுடன் அந்நஞ்சினை உண்டும் வாழப் பழகிவிட்டதைக் கண்டுத் திகைத்து விட்ட மேலை நாட்டு அறிவியலார் மின்சார விளக்குகளால் பூச்சிகளைக் கவர்ந்து கொல்லும் முறையைக் கருத்துரைக்கின்றனர். பல்லாயிரம் ஆண்டுக்காலப் பட்டறிவின் பயனாய் இதை மின்சாரம் இன்றியே நம் நாட்டினர் செய்து வருகின்றனர். அத்துடன் தீயை நோக்கி வரும் பூச்சிகள் அத்தீயிலேயே விழுந்து மடிந்தும் விடுகின்றன. மின்சார மின் விளக்கில் இது முடியாது.

இவ்வாறு ஒரே தொடராக இருந்த ஒரு விழாவில் தொடக்கம் தீபாவளியும் முடிவு திருக்கார்த்திகையுமாக இருந்த நிலைமாறி தீபாவளி மேற்சாதியினர் திருநாளாகவும் திருக்கார்த்திகைக் கீழ்ச்சாதியினர் திருநாளாகவும் மாறியிருப்பது தெரிகிறது. அவ்வளவு செல்வாக்கு இல்லாமாலிருந்த தீபாவளியை இந்தியத் தேசிய விடுதலைப் போராட்டக் காலத்தில் தலைமையேற்ற பார்ப்பனர்கள் பரவலாக்கத் தங்கள் தாளிகைகளை (பத்திரிகைகளைப்) பயன்படுத்தினர். பார்ப்பனியர்கள் எனப்படும் வெள்ளாளக்கட்டினரும் அதனைப் பற்றிப் பிடித்துக் கொண்டனர்.

திருக்கார்த்திகையை மேற்சாதிக்காரர்களும் விட்டு வைக்கவில்லை. திருவண்ணாமலைத் தீபம் என்ற பெயரில் அதைக் கொண்டாடுகிறார்கள். கார்த்திகை நோன்பு என்ற பெயரில் மாதம் முழுவதும் “நோன்பு” இருக்கிறார்கள். அது மட்டுமின்றி மாதந்தோறும் கார்த்திகை நாண்மீன் அன்று வேறு கார்த்திகை நோன்பு கடைப்பிடிக்கிறார்கள். தீபாவளிக்குத் திருமாலைத் தொடர்புபடுத்திக் கதை கூறப்படுவது போல் திருக்கார்த்திகைத் தீபத்துக்குச் சிவனைத் தொடர்புபடுத்தும் கதை ஒன்றும் உண்டு. சிவனின் அடிமுடிகளைத் திருமாலும் பிரமனும் தேடியதாக நாம் கேள்விப்படும் கதைதான் அது.

பழைய இராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரிடத்திலிருந்து பூசையெடுப்பு (நவராத்திரி) தொடங்கப்படும் நாளில் ஒரு தெய்வத்தின் படிமம் பல மைல்கள் தொலைவிலிருக்கும் இன்னொரு கோவிலுக்குக் கொண்டு சென்று பூசையில் வைக்கப்பட்டு திருக்கார்த்திகை முடிந்த பின் மீண்டும் பழைய கோயிலில் கொண்டு நிறுவப்படும் வழக்கம் உள்ளது. இக்காலம் தென்மேற்குப் பருவக்காற்று முடிந்து வடகிழக்குப் பருவகாலம் தொடங்கியதிலிருந்து முடிவது வரையான காலமாகும்.

அத்துடன் சில சாதியினர் குறிப்பாக வெள்ளாளர்கள் கார்த்திகையை முருகனுடன் தொடர்புபடுத்துவர். கார்த்திகைப் பெண்கள் எனப்படும் ஆறு பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் எனப்பட்டான் முருகன்; எனவே கார்த்திகை நோன்பு முருகனுக்கு உகந்தது என்று இவர்கள் கூறுவர். ஆறு தனித் தனித் தெய்வங்களின் இணைவானவன் ஆறுமுகன் எனப்படும் முருகன். ஒருவேளை இந்த ஆறு தெய்வங்களை வணங்கியோரின் ஒரு கூட்டணி உருவானதை இந்த ஆறுமுகக் கடவுளின் தோற்றம் சுட்டிக் காட்டலாம். கார்த்திகை மாதத்தில் ஆறு விண்மீன்களின் கூட்டமாகிய கார்த்திகை எனப்படும் நாண்மீனில் வெள்ளுவாவன்று நிலவு வருகிறது. எனவே கார்த்திகை (கார் + திகை)யான மாதத்தின் நாண்மீனான ஆறு விண்மீன்களின் கூட்டம் கார்த்திகை எனப்பட்டது. எனவே ஆறு முகங்களைக் கொண்ட தெய்வமும் கார்த்திகையோடு தொடர்பு படுத்தப்பட்டது.

இவ்வாறு கீழ்ச்சாதி மக்கள் கொண்டாடும் திருநாட்கள் முற்றிலும் அவர்களது உழைப்பு மற்றும் விளைப்புச் செயல்முறைகளோடு நேரடியாகத் தொடர்புடையன. மேற்சாதியினர் அவற்றைப் பழித்தோ அல்லது உருமாற்றியோ வந்திருக்கின்றனர். மேற்சாதியினர் கொண்டாடும் திருநாட்களோ ஒட்டுண்ணி வாழ்க்கையிலிருந்து தோன்றியவை அல்லது அதற்கேற்ப உருமாற்றப்பட்டவை என்பது தெரிகிறது.

இன்று பாசனத்துக்கு அமைப்புகள் கட்டவும் நீரை முறைப்படுத்திப் பாய்ச்சவும் நாடு தழுவிய அமைப்பாக பாசனத் துறைச் செயற்படுகிறது. இருந்தாலும் சிறு அமைப்புகளைப் பேண மக்களின் நேரடி நடவடிக்கையாகக் குடிமராமத்து என்று ஒரு முறையும் உள்ளது. இதன்படி நில உடைமையாளர்கள் ஏக்கருக்கு இத்தனை பேர் என்று இப்பணியில் தம் சொந்தச் செலவில் ஆட்களை ஈடுபடுத்துவர். இன்று நிலங்கள், உண்மையில் இல்லையாயினும் ஆவணங்களின்படிப் போலியாகவேனும், பங்கிடப்பட்டுவிட்டதால் இவ்வாறு ஆட்களைத் திரட்ட முடியவில்லை. எனவே இம்முறை இப்போது முறையாகச் செயற்படவில்லை. இருந்தாலும் இன்றியமையா நிலைகளில் மக்கள் இதைச் சிலவிடங்களில் செய்து வருகிறார்கள். சரியான பாசன அமைப்புகள் இன்றும் உருவாகாத இடங்களில் சிற்றாறுகளின் குறுக்கே, சிலவேளைகளில் காவிரி ஆறு போன்ற பேராறுகளின் குறுக்கே கூட, ஊர் மக்கள் பறைகொட்டித் திரட்டப்பட்டு மட்குரம்பு (ஆங்கிலத்தில் இதே சொல் Mud Kurambu என்று அழைக்கப்படுகிறது. தமிழில் மண் + குரம்பு = மட்குரம்பு) கட்டி நீரைத் திருப்புவது இன்றும் நடைமுறையிலிருக்கிறது.

திருக்கார்த்திகை விழாவில் புல் பூண்டுகளைப் பிடுங்கும் பழக்கம் கூட இன்று அருகிவிட்டது. பருவ மழை சிறிது சிறிதாக மாற்றம் பெற்று வருவதும் அடிக்கடி பொய்த்துப் போவதும் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். அதை ஏதோ ஒரு வகையில் மீட்டெடுத்தல் நம் வேளாண்மைக்கு ஆக்கம் தருவதாக அமையும்.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

[1] மந்திரிகுமாரி என்ற திரைப்படத்தின் கதைக் கரு இதிலிருந்து பெறப்பட்டதே. காப்பியக் காலத்தில் கணவனைக் கொன்ற பெண் துறவு மேற்கொண்டு சமயப்பணி செய்ததாகக் காட்டப்பட்டாள். ஆனால் இருபதாம் நூற்றாண்டின் கலைஞர்களுக்கு அந்தத் துணிச்சல் வரவில்லை. அவளைச் சாகடித்து விட்டனர். இந்நூல் பக். பார்க்க.

[2] சிலம்பு, நாடுகாண் காதை, 247 – 48

[3] Keith A.B., Rig-Veda Brahmanas, P.121, Cambridge 1925, as quoted in Lokayatha, Debiprasad Chattobadhyaya, P. 611s
[4] அரளிச்செடி ஒவ்வொரு கணுவிலும் மூன்று இலைகளைக் கொண்டுள்ளது. அந்த இலைகளின் அடியிலிருந்து கிளைகள் கிளைப்பதுண்டு. அவை மூன்று கவைகளையுடைய கணுக்களாகின்றன.

[5] இன்று மழைவளம் குன்றிய குமரி மாவட்டத்தில் இந்தப் பூண்டும் இல்லை. அதனால் அதைக் கொளுத்தி விளையாடுவதும் இல்லை.

குமரிமைந்தன்
kumarimainthan@sify.com
htpp://kumarimainthan.blogspot.com

Series Navigation

குமரிமைந்தன்

குமரிமைந்தன்

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 11. சடங்குகள்

This entry is part [part not set] of 36 in the series 20060811_Issue

குமரிமைந்தன்


சடங்குகள் எனப்படுபவை மனித வாழ்வில் நிகழும் இயற்கை நிகழ்ச்சிகளோடு தொடர்புடையன. குழந்தைப் பிறப்பு, பெண் பூப்பெய்தல், திருமணம், சாவு ஆகியவை நிகழும் போது அவை தொடர்பாக வெளிப்படையான காரண காரியத் தொடர்பில்லாமல் பழக்கத்தால் கடைப்பிடிக்கப்படும் சில நடைமுறைகள் சடங்குகளாகும். வேளாண்மை தொடர்பாக ஏர் பூட்டுதல், விதைத்தல், நடுதல், அறுவடை போன்ற நிகழ்ச்சிகளின்போதும் இதுபோன்ற சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றில் குமுக வளர்ச்சிக் கட்டங்களின் வரலாறு, பழைய பொருளியல் உறவுகள், குமுக ஆட்சிமுறைகள், ஆண் பெண் உறவு நிலைகள், மருத்துவம், உளவியல் போன்ற அறிவியல் கூறுகள் ஆகியவை அடங்கியுள்ளன. இவற்றில் பல மேற்சாதி, கீழ்ச்சாதி என்ற இருசாரருக்கும் பொதுவாக இருந்தாலும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மட்டும் சில வேறுபாடுகள் உள்ளன. மேற்சாதியினர், குறிப்பாகப் பார்ப்பனர்கள் முழுமையான பெண்ணடிமைத் தனத்தைக் குறிக்கும் வகையில் தம் சடங்குகளை அமைத்துக் கொண்டுள்ளனர். பெண்ணுக்குப் பரியம் கொடுக்காமலிருப்பது, சீதனத்தை வரதட்சிணை என்று குறிப்பிடுவது, பெண்ணை வலியக் கொடுப்பதாகப் பொருட்படும் காசி யாத்திரை போன்றவை இந்த நிகழ்ச்சிகளாகும். இவற்றில் சிலவற்றைப் பிற மேற்சாதியினர் சிலரும் கைக்கொண்டுள்ளனர்.

வேளாண்மைச் சடங்குகளில் பல தொழில் நுணுக்கங்கள் அடங்கியுள்ளன. சடங்குகள் என்றோ ஒரு நாள் காரணத்தோடு நடைபெற்ற நிகழ்ச்சிகளின் நிழல்களாகவே மக்கள் நடுவில் ஒட்டிக்கொண்டுள்ளன. இவற்றில் பல நாளடைவில் வழக்கொழிந்துவிடும். இருந்தாலும் கற்பனைக் கெட்டாத காலத்தில் இருந்தே மாறுபடாமல் நிலைத்து நின்றுவிடும் மரபுகளும் உண்டு. இவை குமுக வரலாற்றில் எழுதப்படாத பதிவுகளாக நின்று நிலவுகின்றன. பார்ப்பனரை வைத்து மந்திரம் ஓதி இந்நிகழ்ச்சிகள் நடைபெறும்போது இச்சடங்குகள் மாற்றப்பட்டு வரலாறு மறைக்கப்பட்டு நிலைமைகளுக்குப் பொருத்தமற்ற சடங்குகள் புகுத்தப்படுகின்றன. ஆனால் கீழ்ச்சாதிகளில் இன்றும் அவை உயிரோட்டமுடன் விளங்குகின்றன.

மேற்சாதிக் குடும்பங்களைக் கூர்ந்து நோக்கினால் அங்கு ஒரு வகைப் பெண்ணாட்சி நடைபெறுவதைக் காணலாம். திருமணமான பெண் தனக்கு வேண்டியவற்றுக்காகப் பெற்றோரையோ உடன்பிறந்தாரையோ நெருக்கிப் பெற்றுக் கொள்கிறாள். தன் பிறந்த வீட்டில் நடப்பவற்றிலெல்லாம் தன் உடன்பிறந்தோரின் மனைவியருக்குப் போட்டியாக நின்று தன் தாயுடன் சேர்ந்து நாத்தனார்களைக் கொடுமைப்படுத்துகிறாள். இதே கொடுமைகளைப் புகுந்த வீட்டில் மாமியார் நாத்தனார்களிடம் தானும்படுகிறாள். இவற்றிலெல்லாம் ஆண்கள் தலையிட்டு எதுவும் செய்ய முடிவதில்லை. இவ்வாறு மேற்சாதிக் குடும்பங்களில் பெண்டிராட்சி நிலவினாலும் சடங்குகளில் இது காணப்படுவது இல்லை. அவர்கள் பரியம் கொடுப்பது இல்லை. சீதனத்தை வரதட்சிணை என்ற பெயரில் வழங்குகிறார்கள். பார்ப்பனர் உட்பட மணப்பெண்ணின் பெற்றோரால் வழங்கப்படும் பணம் தவிர்த்த ஏனைய அசையும், அசையாச் சொத்துகள் அனைத்தும் அவளுக்கே உரியன. (கீழ்ச் சாதிகளில் மணப்பெண்ணின் பெற்றோரால் வழங்கப்படும் பணத்துக்கு ஈடாக மணமகன் வீட்டாரால் ஓர் அசையாச் சொத்து மணமகள் பெயருக்கு எழுதி வைக்கப்படுவது பழைய வழக்கம்.) அவளது உடன்பாடு இன்றி அவற்றை மணமகனோ அல்லது அவனது குடும்பத்தாரோ எதுவும் செய்ய முடியாது. வல்லந்தமாக வேண்டுமானால் கவர்ந்து கொள்ளலாம். இருந்தும் வரதட்சினை (மணமகனுக்கு வழங்கப்படும் காணிக்கை) என்ற பெயரிலேயே இதனை அழைக்கிறார்கள். பெண்ணை மணமகன் வீட்டார் வந்து கேட்டு மண முடித்தாலும் “காசி யாத்திரை” என்ற சடங்கு மூலம் மணமகளின் தந்தை பெண்ணை மணமகனுக்குத் தானே முன்வந்து (வலிய வந்து) “தானம்” செய்வதாகக் காட்டுகிறார்கள். இங்கு ஆணின் மேலாண்மையை நிலைநிறுத்துவதற்காகச் சடங்கு பருப்பொருளியல் மெய்ம்மைக்கு முன் சென்று விட்டது. வரலாற்றளவில் பார்த்தால் பார்ப்பனர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன் தம் சாதியில் பரியம் கொடுப்பதைத் தடை செய்திருப்தைக் காணலாம்.

மாறாகக் கீழ்ச்சாதிகளிடையில் பழைய பருப்பொருளியல் மெய்ம்மைகளைக் காட்டுவனவாகவும் பெரும்பாலும் அவற்றுக்கு இசைவாகவுமே இவை அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக “மாப்பிள்ளை மறிப்பு” எனும் சடங்கைக் குறிப்பிடலாம். மணமகள் வீட்டினுள் மணமகன் நுழையும்போது மணமகளின் முறை மாப்பிள்ளைகள் அவனை வழிமறிக்கின்றனர். அவர்களுக்குப் பணம் வழங்கிய பின் அவர்கள் ஒதுங்கி விடுகின்றனர். இன்னும் சில சாதியினரிடையில் முறை மாப்பிள்ளைக்கு அவன் விரும்பும் அளவுக்கு அல்லது உறவினர்கள் அவனுடன் கலந்து முடிவு செய்யுமளவுக்குப் பணம் ஈடு கொடுத்த பின்னர் தான் வேறு மணமகனைப் பார்த்து மணமகள் வீட்டார் மணம் பேசவே இயலும். வேறு சில சாதியினரிடையில் சுருள் வைத்தல் எனும் சடங்கு மூலம் இந்த முறை கழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் பார்ப்பனர்களிடையிலும் அவர்களைப் பின்பற்றுவோர்களிடையிலும் இத்தகைய சடங்குகள் பல ஒழிக்கப்பட்டுவிட்டன. மாறாக அவற்றின் இடத்தை மணமகள் மணமகனுக்கு மனைவியாகுமுன் யார் யாருக்கு உடலுறவுக்கு உரிமையாகிறாள் என்பதைப் பட்டியலிட்டுக் காட்டும் காட்டுவிலங்காண்டி நிலையைக் கொண்ட மந்திரங்களும், அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல் போன்ற சடங்குகளும் பிடித்துக் கொண்டுள்ளன. சிலப்பதிகாரக் காலத்திலேயே இச்சடங்குகள் நிலைகொண்டு விட்டன.

இந்தச் சடங்குகளைப் பொறுத்தவரையில் முறை மாப்பிள்ளை தவிர்த்த பிறருக்குப் பெண்ணைக் கொடுக்கும் பழக்கம் மிகுதியாகுந்தோறும் இந்தச் சடங்குகள் தேவை இல்லை. ஆண் பெண் தமக்குள் விரும்பித் திருமணம் செய்யும் குமுகத்தை அமைப்பதற்கு இந்த உறவினர்களின் தலையீடு பெரும் தடையாகவே இருக்கும். எனவே இந்த மக்களின் பொருளியல் அடித்தளத்தை மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் வேளையில் இதனை மாற்றிக் கொள்ளலாம். நாமறிந்த வரையில் மிக எளிதாக மாற்றங்களைப் புகுத்தத் தக்கப் பண்பாட்டுக் கூறு இத்தகைய சடங்குள் தாம், அதிலும் குறிப்பாகத் திருமணச் சடங்குகள் தாம். தமிழ்த் திருமணம் என்றும் சீர்த்திருத்தத் திருமணம் என்றும் திருமணத் துறையில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது இதற்குச் சான்றாகும்.

அதே வேளையில் சாவுச் சடங்குகளில் மாற்றம் செய்வது அவ்வளவு எளிதாயில்லை. இருந்தாலும் அவற்றிலும் மாற்றங்கள் நிகழாமல் இல்லை. ஒருவர் இறந்து விட்டால் கருமாதி எனப்படும் பதினாறாம் நாள் சடங்கில் தலைமகன் தலை மழிக்கப்பட்டு “உருமால் கட்டுதல்” எனப்படும் சடங்கு நடைபெறும். இதைச் சில சாதியினர் “பட்டங்கட்டுதல்” என்றும் அழைக்கின்றனர். பெண்வழிக் குமுகங்களில் “தாய்க்குத் தலைமகன், தந்தைக்கு இளைய மகன்” என்ற மரபும் நிலவுகிறது. இந்த வழக்கம் தலைமகனுரிமை (Male Primogeniture) எனப்படும். இதில் ஆண் வழி அல்லது தந்தை வழித் தலைமகனுரிமை (Patrilineal male Primogeniture) பெண் வழி அல்லது தாய் வழித் தலைமகனுரிமை (Matrilineal male Primogeniture) என்று இரு வகையுண்டு. இங்கிலாந்து அரச குடும்பத்தில் தந்தைவழி தலைமகனுரிமை வழக்கில் உள்ளது. ஆண்மகவு இல்லாவிடில் தலைமகளுரிமை உண்டு. ஆனால் அங்குள்ள சீமான்கள் (Lords) குடும்பத்தில் தலைமகனுரிமை மட்டுமே உண்டு. மலையாளத்து நம்பூதிரிகள் குடும்பத்தில் ஆண்வழித் தலைமகனுரிமையும் நாயர்கள் குடும்பத்தில் பெண்வழித் தலைமகனுரிமையும் நிலவுகின்றன. தமிழர்களிடையில் முன்பு பெண் வழித் தலைமகனுரிமையிலிருந்து பின்னர் ஆண்வழித் தலைமகனுரிமையாக மாறியமைக்குச் சான்றுகள் உள்ளன. சில மலைவாழ் மக்களிடையில் தவிரத் தமிழகத்தில தலைமகளுரிமைக்குத் தடையங்கள் இல்லையென்றே கூற வேண்டும்.

இன்று தலைமகன் உரிமையோ தலைமகளுரிமையோ இல்லையென்று தான் கூற வேண்டும். ஆனால் அதன் எச்சமாகச் சில சடங்குகள் நிலவுகின்றன. அதுதான் மூத்த மகனுக்கு உருமால் கட்டுதல் என்பது. இது கூட மாற்றமடைந்து வருகிறது. பெற்றோரின் சொத்தில் சம உரிமை இருப்பதால் ஆண் மக்கள் அனைவருக்கும் இந்த “உருமால் கட்டுதல்” நடைபெறுகிறது.

சாவுச் சடங்கில் மாற்றம் பற்றிக் குறிப்பிடும் போது பகுத்தறிவு இயக்கத்தில் ஈடுபட்டிருந்த சிலருக்கு ஏற்பட்ட நிலையைக் குறிப்பிடுவது நல்லது. ஒருவர் தன் திருமணத்தில் எந்த வித மாற்றமும் செய்து கொள்ளலாம். பிடிவாதம் பிடித்து நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால் தன் பிள்ளைகளின் திருமணத்திலோ அல்லது தன் சாவிலோ அதைச் செய்ய முடியாது. பெரியாருக்கு மிக நெருக்கமாயிருந்த சிற்றுண்டிச் சாலை உரிமையாளரான ஒரு பகுத்தறிவாளர் தன் திருமணத்தை எப்படி நடத்தினார் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவர் மகளின் திருமணத்தின் போது முதலில் மாதா கோவிலில் சமய முறைப்படித் திருமணத்தை முடித்து விட்டுப் பின்னர் பெரியார் தலைமையில் “சீர்த்திருத்தத் திருமண” நாடகம் ஆடியிருக்கிறார். பின்னர் அதை அறிந்த பெரியார் மனம் வருந்தியிருக்கிறார். அந்த அன்பர் செத்த போது மத எதிர்ப்பாளரான அவரது பிணத்தை மாதா கோயில் இடுகாட்டில் வைக்க மதகுரு மறுத்துவிட்டார். மருமகனின் செல்வாக்கைப் பயன்படுத்திப் பின்னர் அப்பிணம் மாதா கோயில் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டது. இது ஓரளவு நாட்டுப் புறத்தில் நிகழ்ந்தது. நாட்டுப் புறத்தில் நிலமுள்ளவர்களில் பெரும்பாலோர் சொந்த நிலத்தில் கல்லறை அமைப்பதுண்டு. நாம் குறிப்பிட்ட பெரியார் அன்பருக்குச் சொந்த நிலங்களும் இருந்திருக்கும், ஏனென்றால் அவர் ஓரளவு செல்வம் படைத்தவர். ஆனால் அவரது குடும்பத்தார்க்குப் பகுத்தறிவுச் சிந்தனையோ தந்தையின் தன்மானத்தைப் பற்றிய கவலையோ இல்லாததால் தன் வாழ்நாளில் ஓரளவு தன்மானத்துடன் (தன் மகள் திருமணத்தின் போது உறவினர்களின் நெருக்குதலுக்கு ஆளாகிச் சமய முறையில் திருமணம் நடத்த ஒப்புக்கொண்டதால் ஒரளவு என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டியுள்ளது) வாழ்ந்த அவரது பிணம் மத குருக்களின் காலடியில் மண்டியிட வேண்டியதாயிற்று. எனவே சடங்குகளில் மாற்றம் செய்யும் போது அதற்குரிய பொருளியல், குமுகச் சூழல் உருவாகாமல் தனித்துச் சிலர் மட்டும் மேற்கொள்ளும் முயற்சிகள் பயனளிக்காது. ஆனால் தலைமகனுக்கு மட்டும் சொத்தின் உரிமையிருந்த நிலைமாறி அனைதது ஆண் மக்களுக்கும் சம உரிமை என்ற நிலை வந்தபோது சிறுகச் சிறுக உருமால் கட்டும் சடங்கிலும் எளிதாக மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நாட்டுப் புறங்களில் நடக்கும் சடங்குகளில் இன்றும் ஒரு சிறப்புக்கூறு உண்டு. அவற்றில் ஒருவகைப் பொதுவுடைமைச் சாயல் தென்படும். இவற்றுக்கு எடுத்துக்காட்டாக “மாற்றுக் கொடுத்தல்”, (மாற்று விரித்தல் அல்ல, அது அரசால் ஒவ்வொரு சாதிக்கும் வழங்கப்பட்ட “விருது” ஆகும். இந்தச் சிறப்புரிமையைப் பெறுவதும் இடங்கை – வலங்கைப் போராட்டங்களின் நோக்கங்களில் ஒன்றாகும்[1]) நிகழ்ச்சி வீட்டுக்கு ஊரார் சீர் செய்தல், மொய் எழுதுதல் முதலியன ஆகும்.

மாற்றுக் கொடுத்தல் என்பது ஒரு பெண் பூப்பெய்தியதும் அவளுக்கு வண்ணார் தான் வெளுத்து வைத்திருக்கும் அவ்வூரார் துணிகளில் ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்து அந்தப் பெண் அணிந்திருந்த துணியை வெளுப்பதற்காக எடுத்துப் போவதாகும். இதற்காக அவருக்குப் பூப்பெய்தல் சடங்கின்போது சிறப்புச் செய்வதுண்டு. அதுபோல் ஓர் ஆணுக்கோ பெண்ணுக்கோ குறிப்பாக பெண்ணுக்குத் திருமணத்தின் போது மணமகன் கொண்டு வரும் புத்தாடையை உடுத்தும் முன் அவளுக்கு வண்ணார் மாற்று அளிக்கப்படுகிறது. புத்தாடையை இந்த வண்ணார் மாற்றைக் களைந்தே அவள் உடுத்துகிறாள். மணமகனுக்கும் இதுபோல் வண்ணார் மாற்றைக் களைந்தே புத்தாடை உடுத்தப்படுகிறது. இவ்விழாச் சடங்குகள் தவிர பல நாட்டுப்புற பெண்கள் மாதவிடாய் வந்து துணி மாற்றும் போது வண்ணார் மாற்றைப் பெற்றே மாற்றுகிறார்கள். இதில் மாற்றுக் கொடுத்தல் என்பதன் பொருளியல் அடிப்படையும் நம் நாட்டு மக்களின் ஏழ்மை நிலையும் அதை அவர்கள் எதிர்கொண்ட முறையும் புலப்படுகிறது. முன்பு குறிப்பிடப்பட்டதுபோல் ஒரு நேரத்தில் ஒரே சேலையை வைத்து ஒரு பெண் காலங்கழித்து விட முடியும். குளிக்கும்போது சேலையின் ஒரு பகுதியை உடலில் சுற்றிக் கொண்டு மீதிப் பகுதியைத் துவைத்துவிட முடியும். அதுபோல தான் துணியை உலர்த்துவதும். வயலில் வேலை செய்து குளித்து விட்டுத் திரும்பும் பெண்கள் இணையாகத் தத்தம் சேலைகளில் ஒரு முனையை உடலில் சுற்றிக் கொண்டு மறு முனையை மற்றவர் கையில் கொடுத்து உலர்த்திக் கொண்டே வழிநடப்பதை நாம் பார்க்கலாம். இப்படி ஒரே சேலை வைத்திருந்தால் அல்லது ஒரேயொரு மாற்றுச்சேலை மட்டும் இருந்து அது சலவைக்குப் போயிருந்தால் அவ்வூரிலுள்ள இன்னொரு பெண்ணின் சேலை மாற்றாகப் பயன்படுகிறது. அதற்குரிய சலவைக் கூலி வண்ணாருக்கு வழங்கப்பட்டு விடுகிறது. இதுபோல் ஆண்களும் திடீர்த் தேவைகளுக்கு சலவைக்கூலி கொடுத்து “மாற்று”ப் பெறுவதுண்டு. இவ்வாறு துணியுடைமையில் ஒரு பொதுவுடைமை நிலவுகிறது. பூப்பெய்தல் சடங்கில் இந்தப் பொதுவுடைமை தான் செயற்படுகிறது.

திருமணங்களில் நடைபெறும் “மாற்றுக் கொடுத்தல்” இதேபோன்று பொதுவுடைமையைக் குறித்தாலும் அது ஒரு குமுக வரலாற்றுக் கட்டத்தையும் குறிக்கிறது. பெண் திருமணமாவதற்கு முன் தன் பழைய ஆடைக்குப் பகரம் ஒரு மாற்றுச் சேலையை அணிவதன் மூலம் தன் உடை தான் பிறந்த ஊருக்குப் பொதுவுடைமை ஆனது எனவும் அதைத் தான் விட்டு விட்டு மணமகன் வீட்டார் அல்லது ஊரார் வழங்கும் உடையுடனேயே அங்கு செல்ல வேண்டும் என்பதும் புலப்படுகிறது. சொத்துக்கு உடைமை என்று இருக்கும் பெயர் உடை என்ற சொல்லோடு தொடர்புடையதாய் இருப்பதைக் கொண்டு உடை தான் முதன் முதலில் தனி மனிதனின் உடைமையாக இருந்ததோ என்று கருதத் தோன்றுகிறது. அத்தகைய உடையே பொதுவுடைமையாகிவிடும் நிலையை நாம் இச்சடங்கில் காண்கிறோம்.

மணமகனுக்கு “மாற்றுக் கொடுத்தல்” நிகழ்ந்தாலும் அவன் தன் வீட்டார் வழங்கும் உடைகளையே மணவிழாவுக்கு அணிகிறான். இப்போது கணவன் இல்லத்தில் பெண் வாழச் செல்லும் “கணவன் வீட்டு வாழ்வில்” (Virilocal) இது பொருந்தலாம். இப்போது மணப்பெண் கணவன் வீட்டுக்குச் செல்லும்போது தாய் வீட்டிலிருக்கும் தன் பழைய உடைகளைத் தன்னுடன் எடுத்துச் சென்றாலும் பழைய வரலாறு சடங்கு வடிவத்தில் நிலைத்து நிற்கிறது. ஆனால் மணமகனுக்கு மாற்று வழங்குவது அதற்கு முந்திய ஒரு வரலாற்றுக் கட்டத்தைக் காட்டுகிறது. அவன் திருமணத்துக்குப் பின் மனைவி வீட்டுக்குச் சென்று வாழும் “மனைவி வீட்டு வாழ்வை” அது காட்டுகிறது.

இன்று செல்வம் படைத்த குடும்பங்களில் நடைபெறும் மணவிழா போன்றவற்றில் தம் வீட்டுத் துணியையோ அல்லது விழாவுக்கு உரியவரின் துணியையோ தான் மாற்றாகத் தர வேண்டுமென்று வண்ணாரிடம் வற்புறுத்திப் பெற்றுக் கொள்கிறார்கள்.

ஊரார் விழா நடத்தும் வீட்டினருக்குச் செய்யும் சீர்கள், திருமண வீட்டிற்கு அரிசியும் பெண் திருமணமாயின் அத்துடன் முறுக்கு போன்ற சில பண்டங்களும் பூப்பெய்தல், கருமாதி முதலியவை நடக்கும் வீடுகளுக்கு அரிசியும் எண்ணெய்யும் வாழைப் பழக்குலை, முறுக்கு முதலியனவும் எல்லா விழாக்களுக்கும் மொய்ப் பணமும் கொடுக்கிறார்கள். இதனால் விழா எடுப்போர் அதற்காக பெரும் பொருளோ, பணமோ ஆயத்தப்படுத்தி வைத்திருக்கத் தேவையில்லாமல் போகிறது. விழாவன்று அல்லது அதற்கு முதல் நாளே எல்லா வீடுகளிலிருந்தும் அரிசி முதலியவை வந்து விடுவதால் அரிசி வாங்குவதற்கு என்று பணம் தேவை இல்லை. அப்படியே விலைக் கொடுத்து வாங்கினாலும் ஊராரிடம் இருந்து வரும் அரிசியை விற்று அப்பணத்தை ஈடுகட்டி விடலாம். கடன் வாங்கியிருந்தால் அடைத்து விடலாம். அவ்வாறே காய்கறிகள், பிற செலவுகளை மொய்ப் பணத்தைக் கொண்டு சரிக்கட்டி விடலாம். எனவே நினைத்த நேரத்தில் திருமணம் முதலியவற்றை ஏற்பாடு செய்வதில் பொருளியல் இடர்பாடு இல்லை. அதே போல் எதிர்பாராமல் நிகழும் பூப்பெய்தல், சாவு முதலியவற்றையும் பொருள் வகையில் பெரும் தொல்லை இன்றி எதிர்கொள்ள முடியும். சாவு நிகழ்ச்சியில் பிணம் எடுப்பதற்கு முன் வாய்க்கரிசி என்ற பெயரில் கொடுக்கப்படும் பணம் அந்நாட் செலவை ஈடுகட்டப் பயன்படுகிறது. வாய்க்கரிசி என்ற சொல் முன்பு அரிசியாகக் கொடுத்தது பின்னர் காசாக மாறியிருக்கிறது என்று காட்டுகிறது. பிணம் எடுக்கும் நாளன்று நாவிதர், வண்ணார், குருக்கள் என்று பல்வகையினர் செய்யும் பணிகளுக்கு அரிசியே வழக்கமாக (இதை சுதந்தரம் என்றும் சுவாதந்திரியம் என்றும் மாமூல் என்றும் வழங்குவர்)க் கொடுக்கப்பட்டது என்பதற்கு இச்சொல் சான்றாக நிற்கிறது.

இவை தவிர திருமணத்தின்போது வழக்கிலிருந்த நடைமுறை நம்மை வியப்பிலாழ்த்துவதாக இருக்கும். சில காலம் முன்பு வரை நாட்டுப்புறங்களில் திருமண விழாக்கள் ஏழுநாட்கள் தொடர்ந்து நடைபெறும். அந்நாட்களில் மணவீட்டில் ஊரார் அனைவரும் கூடி விருந்துண்டு மகிழ்வர். ஏசல், ஊஞ்சல், மஞ்சள் நீர் தெளித்தல் முதலிய சடங்குகளில் இரு வீட்டாரும் ஈடுபட்டு ஊரே பெரும் களியாட்டமாக இருக்கும். தத்தம் வீடுகளிலிருந்து அரிசி முதலியவை கொடுத்தும் மொய்ப்பணம் கொடுத்தும் உண்டாட்டு நடத்தும் ஊர்த் திருவிழாவாகவே ஒவ்வொரு திருமணமும் நடைபெறும். இந்த மணவிழா நாட்களின்போது ஊரில் யாரும் வேலைக்குச் செல்வதில்லை. இத்தகைய விழாக்கள் இன்று நின்றுபோன வெற்றிடத்தை நிரப்பத்தான் இன்றைய திரைப்படங்கள் பயன்படுகின்றன என்று சொல்லலாம்.

இன்று ஊரார் மனமுவந்து நின்று மன நிறைவோடு செய்யும் இத்தகைய நிகழ்ச்சிகள் அருகி வருகின்றன. குமுகக் கட்டமைப்பில் ஓர் உடைவு ஏற்பட்டுவிட்டது. அத்துடன் பழைய சாதி உறவுகளிலும் உடைவு ஏற்பட்டு வருகிறது. புதிதாக ஒரு குமுக நெருக்கத்தை உருவாக்கும் வகையில் அனைவரும் கலந்து ஆடிப்பாடி மகிழத் தக்க நிகழ்ச்சிகளை வளர்த்தெடுக்க வேண்டும்.

திருமணங்களுக்குச் சில மாதங்கள் உகந்தவை அல்ல என்று விலக்கப்பட்டுள்ளன. அம்மாதங்கள் வேளாண்மை தொடர்பான பணிகளுக்காக மக்கள் பெருமளவில் ஈடுபடும் மாதங்களாகும். அதேபோல் திருமணத்துக்கு உகந்தவை என்று ஒதுக்கப்பட்டுள்ள மாதங்கள் வேளாண்மைப் பணிகள் இன்றி ஓய்வுள்ள மாதங்களாகும். அவ்வோய்வை களிப்புறச் செலவிடுவதற்கும் இத்திருமண விழாக்கள் முன்பு அவ்வோய்வு மாதங்களில் நடத்தப்பட்டன. மாதங்களுக்கிடையில் இத்தகைய வேறுபாட்டுக்குக் கணிய (சோதிட) அடிப்படை எதுவுமில்லை. அது மட்டுமல்ல எந்த வித உழைப்பிலும் ஈடுபடாத பார்ப்பனர்கள் விலக்கப்பட்ட மாதங்களிலும் திருமணம் நடத்துகின்றனர் என்ற உண்மை இந்தக் கணியக் கருத்துக்குச் சான்று பகர்கிறது. அத்துடன் திருமணம் இல்லா இம்மாதங்களில் அனைத்துப் பொருட்கள் மற்றும் பணிகளின் செலவும் மிகக் குறைவாக இருப்பதால் அவர்கள் அம்மாதங்களையே தேர்ந்தெடுக்கின்றனர். இப்போது திருமணச் சடங்குகள் மிகவும் சுருங்கி விட்டதால் அனைவரும் அனைத்து மாதங்களிலும் திருமணச் சடங்குகளை வைத்துக் கொள்ளலாம்.

வேளாண்மைச் சடங்குகளில் ஒன்றிரண்டைக் குறிப்பிட வேண்டும்.

வெற்றிலை என்ற தலைப்பிலமைந்த ஒரு நூலில் வெற்றிலைக் கொடிக்காலில் நடவுக்கு முன்பு கோழிக் குருதியையும் குயவர் சூளைச் சாம்பலையும் கலந்து தெளிக்கும் சடங்கு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அந்நூலாசிரியர் இதனை “வளமைச் சடங்கு” என்று விளக்கம் தருகிறார். கோழிக் குருதி பெண்ணின் மாதவிடாய்க் குருதியைக் குறிக்கிறதாம். மாதவிடாய்க் குருதி இனப்பெருக்கத்தின் அறிகுறி; எனவே வளமையின் அறிகுறி என்று விளக்குகிறார். அதனால் மாதவிடாய்க் குருதி இனப்பெருக்கத்தைத் தருவதுபோல் மண்மீது தெளிக்கப்பட்ட இந்தக் கோழிக் குருதி நல்ல விளைச்சலைத் தரட்டும் என்று தெளிக்கிறார்களாம். குக்குல மக்களிடையில் வழங்கும் அளவ[2] மந்திரம் (Imitation magic) தான் இது என்று ஓங்கி அடிக்கிறார்.

ஆசிரியர் பல “முற்போக்கு” நூல்களைப் படித்ததன் விளைவுதான் இது. ஆனால் நம் நாட்டு நடப்புகளைச் சற்று கூர்ந்து நோட்டமிட்டிருப்பாராயின் இதுபோன்ற “முற்போக்கு” முடிவுகளுக்கு அவர் வந்திருக்க மாட்டார். கோழிக் குருதி ஒரு நச்சுயிர்க் கொல்லியாக (Antibiotic)ப் பயன்படுகிறது. கண்ணில் காயம்பட்டால் கோழிக் குருதியை ஊற்றுகிறோம். புதுமனைகளில் புகு முன்னர் கோழிக் குருதியைத் தெளிக்கிறோம். நம்மூர்க் கோயில் திருவிழாக்களும் கொடை விழாக்களும் அம்மை, கக்கல் – கழிச்சல் (வாந்திபேதி) போன்ற கொள்ளை நோய்கள் தொடர்பாகவே தோற்றம் கொண்டவை. ஓர் ஊரில் கொள்ளை நோய் தாக்கினால் உயரத்தில் ஏற்றப்பட்ட கொடி மூலம் வெளியூரினர்க்கு எச்சரிக்கை செய்வர். உள்ளூரினர் வெளியேறுவதும் புதியவர் எவரும் ஊருள் நுழைவதும் தடுக்கப்படும். கொடியேற்றப்பட்டவுடன் ஊரைச் சுற்றிக் கோழிக் குருதி தெளிக்கப்படும். இவ்வகைப் பயன்பாடுகளில் இருந்து கோழிக் குருதியின் நச்சுயிர்க் கொல்லிப் பண்பை நம்மால் உய்த்துணர முடிகிறது. இவற்றை ஆய்வு செய்து உண்மைகளைக் கண்டறியும் எண்ணம் நம் நாட்டுக் கற்றோர் மனதில் தோன்றாமலிருக்கவே இவற்றுக்கு அந்த மந்திரம் இந்த மந்திரம் என்று புதிய புதிய பெயர்களைக் கற்பித்துள்ளனர் மேலை “முற்போக்கினர்”. அவற்றை இம்மி பிசகாமல் கடைப்பிடித்துத் திரட்டித் தருகின்றனர் நம் நாட்டு “முற்போக்கு” ஆய்வர்கள்.[3]

அதுபோல் கோயில் கொடைகளில் மதுக் குடம் எடுத்தல், மானோம்பி ஆடு வளர்த்துக் காவு கொடுத்தல் போன்ற சடங்குகள் செய்யப்படுகின்றன.

மதுக் குடம் என்பது அரிசி மாவைப் புளிக்கச் செய்து பெறப்படும் ஒரு மதுவாகும். இதன் செய்முறை பீர் என்ற மதுவின் செய்முறையை ஒத்ததென்று அதை விரிவாக ஆய்ந்துள்ள பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் அவர்கள் விளக்கியுள்ளார். இந்த மதுக் குடத்தில் உள்ள மது நன்றாகப் பொங்கி வழிந்தால் அந்த ஆண்டு விளைச்சல் நன்றாக இருக்கும் என்பது நம்பிக்கை.

மதுக் குடம் பொங்குவதற்கு அதாவது நொதிப்பதற்குத் துணை செய்வது ஈற்று (Yeast) எனப்படும் நுண்ணுயிரி. இது காற்றுவெளியில் மிகுந்திருந்தால் மதுவின் நுரைப்பு மிகும். நாம் ஆய வேண்டியது என்னவென்றால் காற்றில் கலந்து இருக்கும் ஈற்றின் அளவுக்கும் பயிர்களின் மகரந்தச் சேர்க்கைக்கும் உள்ள தொடர்பு.

ஆடுகளை நேர்ச்சைக்காக வளர்ப்பது வழக்கம். அந்த ஆடுகளைத் தம் விருப்பம் போல் மேயவிட்டு விடுவார்கள். யாரும் தடுக்கவோ துரத்தவோ மாட்டார்கள். கொடை விழா நிறைவின்போது அந்த ஆட்டின் தலையை வெட்டி ஒரு மேடையில் வைத்து அதன் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். வெட்டப்பட்ட அந்தத் தலை வாய் திறந்து நீரை அருந்தினால் நல்ல மழை இருக்கும். இல்லை என்றால் மழை இருக்காது என்பது ஒரு நம்பிக்கை. வெட்டப்பட்ட ஆட்டுத் தலையின் இந்தச் செயலுக்கும் காற்று வெளியிலுள்ள ஈரிப்பு விகிதம் அல்லது தூசு இருப்பு போன்ற மழைக் காரணிகளுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பதையும் நாம் ஆய்வு செய்யலாம்.

இவ்வாறு சடங்குகள் எந்த வடிவத்தில் இருந்தாலும் நாம் அவற்றை அனைத்துக் கோணங்களிலுமிருந்து ஆய்வு செய்து நம் முன்னோரின் நடவடிக்கைகளினுள் மறைந்து கிடக்கும் அரசியல், குமுகியல், அறிவியல், தொழிலியல் நுட்பங்களை வெளிப்படுத்த வேண்டும்.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

[1] மாற்று விரித்தல் என்பது இடுகாட்டில் வண்ணார். நாவிதர் போன்ற ஊர்ப் பணியாளர்களுக்குரிய ஊதியத்தை வழங்கும் போது ஊரார் அமர்ந்து கொள்ள வண்ணார் தாம் வெழுத்த துணியை விரித்தல்.

[2] அளவம் என்ற சொல் ஒருவன் செய்வது போல் இன்னொருவன் செய்து காட்டி கேலி செய்வதைக் குறிக்கும் ஒரு வழக்குச் சொல். அளவம் காட்டுதல் என்று இதனைக் குறிப்பிடுவர்.

[3] குயவர் சூளைச் சாம்பல் என்பதற்கு ஆங்கிலம் Potash எனக்கொண்டால் ஆங்கிலத்தில் Pot ash என்ற, வேளாண்மையில் உரமாகப் பயன்படும் வேதிப் பொருளின் பெயர் Pot ash என்ற சொல்லிருந்தே பெறப்பட்டது என்பதுடன் Potassium என்ற தனிமத்தைக் கூட டேவி என்ற அறிவியலாளர் 1807இல் பானைச் சாம்பலிருந்து பிரித்தெடுத்தார் என்ற உண்மை வெளிப்படுகிறது. பார்க்க: Chambers Twentieth Century Dictionary,1972.

குமரிமைந்தன்
kumarimainthan@sify.com
htpp://kumarimainthan.blogspot.com

Series Navigation

குமரிமைந்தன்

குமரிமைந்தன்

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 10. நம்பிக்கைகள்

This entry is part [part not set] of 33 in the series 20060804_Issue

குமரிமைந்தன்


நம்பிக்கைகள் எனும் தலைப்பில் எண்ணிலடங்காத இனங்களைக் கொண்டுவர முடியும். இவற்றில் மேற்சாதிகள், கீழ்ச்சாதிகள் இருசாரருக்கும் பெரும் வேறுபாடு இருப்பதாகக் கூற முடியாது. ஆனால் பொருளியல் பற்றிய ஒரு நம்பிக்கை இவ்விரு சாரரையும் வேறுபட்ட அடிப்படைப் பிரிவினராக ஆக்குகிறது. பணத்தைச் சேர்த்து வைத்தால் நோய் நொடிகள் ஒழுக்கக் கேடுகள் போன்ற இன்னல்களால் அப்பணத்துக்கு எப்படியாவது செலவு வந்துவிடும்; எனவே பணம் சேரச் சேர அதைச் செலவழித்து விட வேண்டும் என்ற ஆழமான நம்பிக்கையுடையவர்கள் கீழ்ச்சாதியினர். எனவே திருநாட்கள், திருவிழாக்கள், மண விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் தம் ஆற்றலுக்கு மிஞ்சிய ஆடம்பரத்துடன் நடந்துகொள்கின்றனர். “வளர்ச்சி குன்றிய” உலக மக்கள் பலரிடையில் இந்த மரபு நிலவுகிறது; பணத்தைச் சேர்த்து வைத்திருப்பவர்கள் அதைச் சமய நிகழ்ச்சிகளில் முற்றிலும் செலவழித்து விடுவதே பெருமை என்ற குமுக வழக்கம் அப்படிப்பட்ட மக்களிடம் உள்ளது. செல்வத் திரட்சியினால் குமுகச் சமநிலை குலைந்துவிடாமலிருப்பதற்காக அந்த மக்கள் வகுத்துக் கொண்ட வழி இது என மாந்தநூலார் இதற்கு விளக்கம் தருகிறார்கள்.

இந்தப் போக்குக்கு மாறாக மேற்சாதியினர் பணம் திரட்டுவதே வாழ்வின் நோக்கமும் பயனும் என்று கருதுகின்றனர். பணத்தால் அனைத்தையும் அடைய முடியும், மேலுலகத்தில் சொகுசான வாழ்வைக் கூடப் பெறலாம்; எனவே பணம் சேர்ப்பதே வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கு ஒரே வழி என்ற நம்பிக்கை அவர்களுடையது.

மூட நம்பிக்கைகள் எனப்படுபவை உலகிலுள்ள அனைத்து மக்களிடையிலும் நிலவி வருபவை. நம் நாட்டிலும் இத்தகைய மூடநம்பிக்கைகள் நிறைய உண்டு. உண்மையில் எந்த மூடநம்பிக்கையும் தொடக்கத்திலிருந்தே “மூட” நம்பிக்கையாயிருப்பதில்லை. ஒரு காலத்தில் மிகக் குறுகிய காலத்துக்கேனும் நம்பத் தக்க நம்பிக்கையாயிருந்தவையே பின்னொரு நாளில் மூடநம்பிக்கைகளாகி விடுகின்றன. எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டை மேற்கொள்வோம்.

நாய் ஊளையிட்டால் யாருக்கோ சாவு வரப்போகிறது என்பது நம் நாட்டில் நிலவும் ஒரு நம்பிக்கை. இதை வெறும் மூடநம்பிக்கை என்றே பலர் கருதுகின்றனர். இன்னும் சிலர் நாய்கள் ஆவிகளின் நடமாட்டத்தைக் காணும் திறனுள்ளவை; அவை எமதூதர்கள் வருவதைக் கண்டு ஊளையிடுகின்றன என்று கூறுகின்றனர். ஆனால் சிறிது ஆழ்ந்து சிந்தித்தால் இந்த நம்பிக்கையின் அடிப்படை விளங்கும். கொல் விலங்குகளில் பொதுவாக நாய்க் குடும்பம், பூனைக் குடும்பம் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. அவற்றில் நாய்க் குடும்பத்தைச் சேர்ந்த ஓநாய், நரி, குள்ளநரி ஆகியவை கூட்டமாகவே சென்று இரையாகிய விலங்கைத் தாக்கிக் கொல்லும். அவை மோப்ப ஆற்றல் மிகுந்தவையாகையால் இரையை மோப்பம் பிடித்தே கண்டுபிடிக்கின்றன. குறிப்பாக நோய்வாய்ப்பட்டு செத்துக் கொண்டிருக்கும் விலங்குகளை மோப்பம் பிடித்தால் அவை விரைந்து செல்கின்றன; ஏனென்றால் தாக்கப்படும் போது அவ்விலங்குகளால் ஓடவோ எதிர்த்துத் தாக்கித் தப்பிக்கவோ முடியாது.

இவ்விடத்தில் இன்னொன்றையும் கூற வேண்டும். உயிர் என்பது உடலை விட்டு நீங்கும் ஒரு பொருளல்ல. உயிர் என்பது ஓர் உயிரியின் உடலின் ஓர் இயக்கமே. உயிரியக்கம் என்பது உணவு முதலியவற்றை உட்கொண்டு செரித்தல் – எச்சங்களைகக் கழித்தல், கண்ணறைகள் (செல்கள்) அழிதல் – புதியன தோன்றல், தன்னைக்காத்தல் – இனப்பெருக்கத்தின் மூலம் தன் இனத்தை நிலைபெறச் செய்தல் என்ற இயங்கியல் எதிரிணைகளைக் கொண்டது. உயிர் பிரிதல் என்பது அந்த உயிரியின் உடலின் உயிரியக்கம் நின்று வேறு வகையான சிதைவு இயக்கம் தொடங்குவதே. இயல்பாக முதுமையாலோ நோய்வாய்ப்பட்டோ சாகும் எந்த விலங்கும், மனிதன் உட்பட, ஒரு நொடியில் சாவதில்லை, சிறுகக் சிறுக உயிரியக்கம் நின்று சிதைவியக்கம் தொடங்கி முன்னேறுகிறது. அச்சிதைவு இயக்கத்தால் ஏற்படும் நாற்றம் அல்லது வீச்சமே நாய்க் குடும்ப விலங்குகளுக்கு மோப்பத்தின் மூலம் புலப்படுகிறது. இவ்வாறு ஒரு விலங்கின் மரண வீச்சத்தை நாய்க் குடும்ப விலங்கு அறியும் போது தன் கூட்டத்தைச் சேர்ந்த பிற விலங்குகளை அழைப்பதற்காக ஊளையிடுகிறது. பொதுவாக காட்டில் நரி ஊளையிட்டால் அந்தப் பக்கம் செல்வதை நம் நாட்டுப்புற மக்கள் தவிர்ப்பார்கள்; ஏனென்றால் ஊளையிடும் நரியுடன் வேறு நரிகள் வந்து சேர்ந்து தாக்கக் கூடும் என்ற அச்சம் தான்.

இவ்வாறு முன்பு காட்டு விலங்காக இருந்த நாய் தான் வேட்டையாடித் திரிந்த காலத்தில் மரண வீச்சத்தை முகர்ந்து ஊளையிட்ட இன உணர்வில் இப்போதும் ஊளையிடுகிறது. செத்துக் கொண்டிருப்பது மனிதனா வேறு விலங்கா என்பதில் வேறுபாடில்லை; எனவே பல வேளைகளில் நாய் ஊளையிடும் போது அந்தப் பகுதியில் மனிதர் எவரும் சாகிறார்களா என்று பார்க்க முடியாது.

அதே நேரத்தில் இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். குமுதம் இதழில் ஒரு கதை வெளியாகியது. ஒரு தெருவில் ஒருவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கிறார். ஓர் இரவில் நோய் மிகக் கடுமையை எய்துகிறது. அதே வேளையில் தெரு நாய் ஒன்று ஊளையிடத் தொடங்கி தொடர்ந்து ஊளையிடுகிறது. வீட்டிலுள்ளோர் பதறுகின்றனர். இவற்றை விளக்கிக் கொணடிருக்கும் கதையின் ஆசிரியர் திடீரென்று ஒரு சரக்குந்து ஏறி நாயே மாண்டு விட்டதாகக் கதையை முடிக்கிறார். நாயின் “நுண்ணுணர்வுக்கு” யாரோ சாவது தெரிந்தது போலவும் அது தானே என்பது தெரியாமல் அது ஊளையிட்டது போலவும் கதையை நடத்தி நாம் மேலே விளக்கியதற்கு மாறாக அந்த நம்பிக்கையின் மூடப்பக்கத்தை அவர் பற்றுகிறார்.

இன்னொரு நம்பிக்கை, காக்கை கரைந்தால் வீட்டுக்கு விருந்தினர் வருவர் என்பது. இது இன்று வெறும் மூடநம்பிக்கைதான்; அதுவும் குறிப்பாக நகரத்துக்கு. ஆனால் ஒரு காட்டு வழியை எடுத்துக் கொள்வோம். அது ஒரு குறிப்பிட்ட இடத்துக்குச் செல்வதாக இருந்து அவ்விடத்தில் ஒன்றிரண்டு வீடுகள் மட்டுமே இருப்பதாக வைத்துக் கொள்வோம். அவ்விடத்தை நோக்கி ஒரு சிறு கூட்டம் செல்வதாக வைத்துக் கொள்வோம். மனிதனையே அண்டி வாழ்ந்து அவனிடமிருந்தே பெரும்பாலும் தன் உணவைத் தேடிக் கொள்ளும் காக்கை தன் பட்டறிவால் இந்தச் சிறு கூட்டம் அந்தச் சிறு குடியிருப்பை நோக்கித்தான் செல்லுகிறது என்பதைப் புரிந்து கொள்ளும். இந்தக் கூட்டம் அங்கு சென்றவுடன் விருந்து நடைபெறும்; தனக்கு நிறைய எச்சில் கிடைக்கும் என்பதையும் அது புரிந்து கொள்கிறது. எனவே தன் இயல்புக்கேற்பத் தன் கூட்டத்தைக் கூப்பிடுவதற்காக அந்தச் சிறு குடியிருப்பை அடைந்து அங்கிருந்து அது கரைகிறது. இப்போது நகரத்தில் யார் எங்கு செல்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாத சூழ்நிலையில் ஏதோ இரையைக் கண்டு ஒரு காகம் கரைந்தால் அதைக் கேட்டு நாம் விருந்தினர் வருவார்கள் என்று எதிர்பார்த்தால் அது மூட நம்பிக்கையாகிறது.

பூனை பற்றி நிலவும் ஒரு மூடநம்பிக்கையையும் ஆய்வோம். பூனை குறுக்கே ஓடுவது கெடுதி என்பது அந்த நம்பிக்கை. ஆனால் பூனையின் நடவடிக்கையைக் கூர்ந்து கவனிப்பவர்க்கு ஒன்று புரியும். பூனை மிகச் கூச்சமுடைய ஓர் உயிரி. எனவே அது தெருவோரங்களில் பதுங்கிப் பதுங்கித் தான் செல்லும். இன்றியமையாத போது தான் கண்ணிமைக்கும் நேரத்தில் குறுக்கே பாய்ந்து ஓடும்.

அதுபோல் காட்டிலுள்ள ஒரு கொடிவழியில் நாம் சென்று கொண்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்போது திடீரென்று ஒரு பூனை அவ்வழியைத் தாண்டி ஓடுகிறதென்று வைத்துக் கொள்வோம். இதற்கு இரு காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று ஏதோவோர் இரையைத் துரத்திக் கொண்டு அது ஓட வேண்டும். அல்லது ஒரு கொடு விலங்கு அதைத் துரத்திக் கொண்டு வர வேண்டும். இதில் எதற்காகப் பூனை ஓடுகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் சிறிது காத்திருக்க வேண்டும். எதுவும் பூனையைத் தொடர்ந்து வரவில்லையெனில் அது ஏதோ இரையைத் துரத்திச் செல்கிறதென்று தெரிந்து நாம் நம் செலவைத் தொடரலாம். அவ்வாறின்றி ஏதேனும் துரத்தி வந்தாலும் அது சென்ற பின் நாம் பாதையைத் தொடரலாம். இதன் தொடர்ச்சியாகத் தான் நகர்ப்புறங்களிலும் பூனை குறுக்கே ஓடினால் நம் மக்கள் நின்று தண்ணீர் குடித்து விட்டுச் செலவைத் தொடர்கிறார்கள்.

இதைப் போலவே காட்டில் வாழ்ந்த மனிதன் தன்னைச் சுற்றி வாழும் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் நடத்தையைக் கண்காணித்து தன்னைப் பாதுகாக்கத் தன் பட்டறிவால் சிலவற்றை அறிந்து வைத்திருந்தான். அவை அவன் முன்பு வாழ்ந்த காட்டுச் சூழல் மாறிய பின்னரும் நம்பிக்கைகளாக அவனைத் தொடர்ந்தன, அவையே மூடநம்பிக்கைகளாயின. கழக (சங்க) காலத்தில் அரசர்கள் படையெடுத்துச் செல்லும் போதுகூட புள் நிமித்தம் முதலிய நிமித்தங்களைப் பார்த்தது இத்தகைய மூடநம்பிக்கையின் விளைவே.

மூடநம்பிக்கைகளைப் பற்றிக் கூறும்போது மூடநம்பிக்கையை ஒழிக்கக் கிளம்பிய அல்லது தம்மிடமிருந்து ஒழித்து விட்டதாகக் கருதும் “பகுத்தறிவாளர்கள்” சிலரிடம் நிலவும் சில மூடநம்பிக்கைகளையும் தொட்டுப் பார்ப்பது சுவைதரும். எடுத்துக்காட்டாக, எந்த ஒரு மனிதனுடைய நடத்தையும் முற்றிலும் அவனுடைய சூழலினாலேயே முடிவு செய்யப்படுகிறது என்பது பகுத்தறிவாளர் சிலரது நம்பிக்கை. எல்லாக் குழந்தைகளும் ஒரே வகையான தூண்டுதலுக்கு ஒரே வகையான எதிர் வினையைத் தருவதில்லை என்பது குழந்தைகளைக் கூர்ந்து கவனிப்போர்க்குத் தெரியும். ஊர்ப்புறத்தில் ஒரு தெருவிலுள் புதிதாக ஒரு மகிழுந்து வந்தால் சில குழந்தைகள் அதைப் பார்த்து மலைத்து நின்று விடுகின்றன; வேறு சில குழந்தைகள் அதை நோக்கி ஓடி வருகின்றன. இன்னும் சில குழந்தைகள் அலறி அழுது கெண்டு ஓடுகின்றன. ஒவ்வொரு குழந்தையும் தன் முதாதையர்களிடமிருந்து பல உடலியல், உளவியல் இயல்புகளையும் கருவிலிருக்கும் போது தாயின் மனநிலை, உடல்நிலை ஆகியவற்றின் தாக்கங்களையும் கொண்டு பிறக்கின்றன. அந்த இயல்புகளோடு குழந்தை வளரும் சூழ்நிலையும் இடைவினைப்பட்டு புதியதொரு ஆட்பண்பு (Personality) உருவாகிறது. அதனால் தான் ஒவ்வொரு மனிதனும் ஒரு தனித்தன்மையுடையவனாக இருக்கிறான். ஒவ்வொரு ஆட்பண்பும் மரபு. தகவமைப்பு (Heridity and adoptation) என்ற எதிரிணைகளின் இயங்கியல் முரண்பாட்டின் விளைவேயாகும்.

பகுத்தறிவாளர்களில் சிலபேர் மனத்தின் எல்லையில்லா ஆற்றலில் வைத்திருக்கும் நம்பிக்கையைப் பற்றி முன்னோரிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது போலவே சிலவகை நோய் தீர்க்கும் முறைகள் பற்றியும் பகுத்தறிவாளர்கள் அவை அனைத்தும் வெறும் பொய்ப் புரட்டுகள் என்று ஒதுக்கி விடுவதும். பேயோட்டுதல் என்று ஒன்று நம் நாட்டில் நடைபெறுகிறது. இப்பேய் பிடித்தல் பெரும்பாலும் பெண்களுக்கே ஏற்படும் நோய். தன் மனக்கிடக்கையை, குறிப்பாகப் பாலுறவு தொடர்பானவற்றைக் குறிப்பிடும் உரிமையற்ற பெண்ணுக்கு ஏற்படும் மன அழுத்தங்களும் குமுகச் சூழலால் அவளை அறியாமலே அமுக்கி வைக்கப்படும் உணர்வுகளால் அவளை அறியாமலே அவள் உடல் நிலையிலும் நடத்தையிலும் ஏற்படும் தடுமாற்றங்களும் நம் நாட்டில் பேய் பிடிப்பதால் ஏற்படுவனவாகக் கருதப்படுகின்றன. இதைப் போக்கச் செய்யப்படும் மருத்துவம் பேயோட்டுதல் எனப்படுகிறது. இதில் உடுக்கை அல்லது வேறு வகை இசைக் கருவி இசைக்கப்பட்டு அவள் ஆட்டுவிக்கப்படுகிறாள். பேயோட்டியோடு சேர்ந்து ஆடுகிறாள். அடித்துத் துன்புறுத்தவும் படுகிறாள். இதன் மூலம் அவளது பாலியல் அழுத்தம் சிறிது தளர்கிறது. சில பெண்கள் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி விடுவதும் உண்டு. இது போன்ற பழக்கத்துக்கு அடிமையாவதை மசோக்கியம் (Masochism) என்பர்.

இதே போன்ற நடைமுறை நம் கழக இலக்கியங்களிலும் விளக்கப்படுகிறது. அதை வேலனாட்டம், முருகாட்டம், வேலன் வெறியாட்டம் என்று கூறுவர். தன் துன்பத்துக்குக் காரணம் தன் காதலனைக் கூடாமையே என்பதை உணர்ந்திருந்த பெண்கள், தன் துன்பத்தைப் போக்க வேலனாட்டத்துக்கு ஏற்பாடு செய்யும் தாயையும் வேலாட்டம் ஆட வருபவனையும் அவன் மீது ஏறி ஆட்டுவிப்பவனாகக் கருதும் வேலனாகிய முருகனையும் எள்ளி நகையாடும் காட்சிகளும் நம் அகத்துறை நூல்களில் உண்டு; சிலப்பதிகாரத்திலும் உண்டு.[2]

பேயோட்டுவது பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட நாளில் தான் நடைபெறுகிறது. அப்படி நடைபெறும் போது ஒரே நேரத்தில் பலர் சேர்ந்து ஆடுவர் அல்லது பண்டுவம் (சிகிச்சை) பெறுவர். இதில் இன்னொரு வகை செயல்முறையும் நிகழ்கிறது. குழுப் பண்டுவம் (Group therapy) என்று மேலைநாடுகளில் செய்யப்படும் உளவியல் பண்டுவம் தான் அது. உளவியல் மருத்துவரோ, மருத்துவமனைகளோ அருகிய நம் நாட்டில் தொன்றுதொட்டு தாம் அறியாமலே நம் மக்களால் கையாளப்பட்டு வரும் உளவியல் மருத்துவங்கள் தாம் அவை.

பேயோட்டுதல் எனும் இந்த காலத்துக்கொவ்வாத “பண்டுவம்” முடிவுக்கு வர வேண்டுமாயின், உளவியல் மருத்துவர்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றை வேண்டிய எண்ணிக்கையில் உருவாக்கி மக்களுக்கும் விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். இவ்வாறு நம் நாட்டு “மூட”நம்பிக்கைகள் ஒவ்வொன்றும் ஆராயப்பட வேண்டிவை. அடுத்து நாம் முன்பு கூறிய பணம் பற்றிய நம்பிக்கைக்கு வருவோம். பணம் சேர்த்து வைத்திருந்தால் நோய்நொடிகள், பிற துன்பங்கள் வரும். தீயோர் நட்பும், தீய ஒழுக்கங்களும் ஏற்படும். எனவே பணத்தைச் சேரச் சேரச் செலவழித்து விட வேண்டுமென்பது நாட்டுப்புற மக்களின் குறிப்பாக உழைக்கும் மக்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையின் தோற்றம் பற்றிச் சிறிது பார்ப்போம். குக்குல வாழ்வில் இருந்த மக்களிடையில் முதன் முதலில் பணம் புகுந்தபோது ஏற்பட்ட சீரழிவுகள் பெரிது. அச்சீரழிவுகளிலிருந்து குமுகத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகப் பணத்தைச் சேர்த்து வைத்திருப்போர் அப்பணம் முழுவதையும் தம் வாழ்நாளிலேயே செலவழித்து விட வேண்டுமென்ற மரபு ஏற்பட்டது. இதனால் உலகில் பல குக்குல மக்களிடம் இன்றும் பணம் படைத்தோர் அதனை ஏதாவொரு சமய நிகழ்ச்சியில் முற்றிலும் செலவு செய்து வறுமை எய்துவது பெருமை என்ற நம்பிக்கை நிலவுகிறது. அந்நிகழ்முறை நம் நாட்டிலும் நடைபெற்றுள்ளது. புத்த சமண சமயங்கள் செல்வர்கள் பலரைத் தங்கள் செல்வமனைத்தையும் கொடை அளித்து விட்டு இரந்து உண்ண வைத்துள்ளன. உலகில் எங்கும் இல்லாத அளவு நம் நாட்டில் இரந்துண்பதையே பெருமையாகக் கருதும் சாதிகளின் எண்ணிக்கை மிகுதி. “பஞ்சத்தாண்டி பரம்பரை ஆண்டி” என்ற மரபு பற்றியும் நாமறிவோம். ஆனால் குக்குல வாழ்விலிருந்து முற்றிலும் விடுபடாத ஒரு குமுகத்தில் ஏற்பட்ட இந்த மரபு பெரும் நிலக்கிழார்களும், மடங்க கோயில்களும் மடத்தடிகளும் வாணிகர்களும் ஒட்டுண்ணிகளும் பெருகிவிட்ட பின்னரும் ஒட்டிக்கொண்டிருப்பது தான் பெரும் கேடு. ஏழைகளையும், உழைப்பாளிகளையும் என்றும் தம் நிலையில் உயர முடியாதவர்களாக, உயர எண்ணாதவர்களாக இந்த நம்பிக்கை ஆக்கிவிட்டது; தாம் சேர்த்ததோடு கடனும் எடுத்து சமய நிகழ்ச்சிகளையும் பயணங்களையும் மேற்கொள்ளும் அளவுக்குச் செய்துவிட்டது. அத்துடன் வருண, சாதி அடிப்படையில் இன்னின்ன உணவு தான் உண்ண வேண்டும், இன்னின்ன உடைகள் தாம் உடுத்த வேண்டும், இன்னின்ன வகை வீடுகள் தாம் கட்ட வேண்டும் என்று கீழ்ச்சாதி மக்களைக் கட்டுப்படுத்தியதும் இத்தகைய ஊதாரித்தனத்துக்குக் காரணமாகும். சமய நடவடிக்கைகள் மட்டுமின்றி குடித்தல், திரைப்படம், பரிசுச்சீட்டு என்று புதிய தீய பழக்கங்களும் தோன்றிவிட்டன.

இன்று அது போன்ற கட்டுப்பாடுகள் இல்லை. எனவே நிலைத்து விட்ட பழைய ஊதாரிப் பண்பாட்டை உடைக்க வேண்டும். உணவு, உடை, உறையுள் அகியவற்றில் தம் சேமிப்பைச் செலவு செய்யும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.

இப்பழக்கம் ஏற்படாமலிருக்க ஆட்சியாளரும் பொதுமைக் கட்சியினரும் கூட பெரும்பாடு படுகிறார்கள். இலவச வீட்டுமனை வழங்கல், இலவச வீடுகள் கட்டித் தருதல், குழந்தைகளுக்கு இலவச உணவு அளித்தல் என்று பிறர் கையை நாடித் தற்சார்பு இழந்து தன்மானம் இழக்கும் நிலையிலேயே அவர்களை அமிழ்த்தி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சாதி இழிவுகளிலிருந்து கீழ்ச்சாதி மக்கள் விடுபட வேண்டுமாயின் முதலில் இந்த இலவசங்களை அவர்கள் புறக்கணிக்க வேண்டும். தற்சார்பும் தன்மானமும் பெற வேண்டும். அவர்களின் நம்பிக்கையைப் பெற்று விட்ட இயக்கங்கள் தற்சார்பும் தன்மானமும் தான் சாதி இழிவுக்கு முடிவு கட்டும் என்ற உண்மையை உணர்த்த வேண்டும்.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

[1] செல்லும் கூட்டம் குடியிருப்பிலுள்ளோருக்கு எதிரிகளையிருந்தால் சண்டை நடைபெறும்; அதனாலும் காக்கைக்குத் தீனி கிடைக்க கூடும்.
[2] சிலம்பு, குன்றக்குரவை, பாட்டு மடை 10 – 14 செய்யுள்கள், நாட்டடார் உரை

குமரிமைந்தன்
kumarimainthan@sify.com
htpp://kumarimainthan.blogspot.com

Series Navigation

குமரிமைந்தன்

குமரிமைந்தன்

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 9. தொழில் நுட்பம்

This entry is part [part not set] of 31 in the series 20060728_Issue

குமரிமைந்தன்


மேற்சாதியினர் தொழில்களைச் செய்வதிலிருந்து விடுபட்டவர்கள். இறக்குமதியான இன்றைய தொழில்நுட்பம் தவிர அவர்களுக்கென்று சொந்தத் தொழில் நுட்பம் எதுவும் கிடையாது. ஆனால் தரத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் கீழ்ச்சாதியினர் அனைவருக்கும் ஏதோவொரு தொழில் நுட்பத்தில் தேர்ச்சி உண்டு.

அறிவியல் பற்றிய ஆய்வை மேற்கொள்ளும் போது கூடவே தொழில்நுட்பம் பற்றியும் கூறப்பட்டுவிட்டது. இருந்தாலும் மேற்சாதி கீழ்ச்சாதிகளிடையில் தொழில்நுட்பத்தைப் பொறுத்த அளவில் உள்ள வேறுபாடுகளை இன்னொரு முறை சொல்வது பயனுள்ளது எனக் கருதுவதால் கூறியது கூறல் என்ற குறை ஏற்படாது எனக் கருதுகிறோம்.

இற்றை நாள் மேலைநாட்டுத் தொழில் நுட்பங்களைப் பயின்று அதன் மூலம் உயர்பதவி பெற்றிருப்போர் அறிந்த ஏட்டுத் தொழில்நுட்பம் தவிர மேற்சாதியினரிடையில் தொழில்நுட்பம் ஏதும் இல்லை. உண்மையில் அவர்கள் உழைப்பையும் தொழிலையும் வெறுப்பவர்கள். தொழில் செய்வோரைப் பழித்து ஒதுக்குபவர்கள். அதனால் இவர்கள் தொழில்நுட்பங்களைக் கல்லூரிகளில் கற்றாலும் அவற்றைத் தாமே கையாண்டு பார்ப்பதில்லை. மேற்பார்வை செய்தல், ஏவுதல் என்ற வகையில் பழைய மேட்டுக்குடி மனப்பான்மையிலேயே செயற்படுகின்றனர். அதனால் அவர்கள் அறிவியர்களாகவோ தொழில்நுட்பர்களாகவோ விளங்குவதில்லை. வெறும் அலுவலர்கள் அல்லது அதிகாரிகள் என்ற தரத்திலேயே செயற்படுகின்றனர். அதையும் மீறி எவராவது களத்தில் இறங்கி ஆய்வுப் பணி மேற்கொண்டாலோ நம் நாட்டு ஒட்டுண்ணி அதிகார வகுப்பும் அரசியலாளரும் அவர்களை முடக்கி இருந்த இடம் தெரியாமல் செய்துவிடுவர். எனவே மீண்டும் மீண்டும் பணக்கார நாடுகளின் தொழில் நுட்ப இறக்குமதியும் அந்த இறக்குமதிக்கு ஏற்பாடு செய்யும் ஆட்சியாளர்களுக்குத் தரகும் தொடர்கதைகளாகின்றன.

இங்குள்ள சிலர் பன்னாட்டு மட்டத்தில் புகழ் பெற்ற ஆய்வாளர்களாக விருதுகளைப் பெறுகின்றனர். இவ்விருதுகள் வெளிநாட்டு அரசுகள் அல்லது அமைப்புகளாலேயே வழங்கப்படுகின்றன. இவர்களின் அருஞ்செயல்களும் ஆய்வுகளும் உள்நாட்டுக்குப் பயன்படுவதை விட இவர்களுக்கு விருது வழங்கிப் பெருமைப்படுத்தும் நாடுகளுக்கே பயன்படுகின்றன.

இவை தவிர இந்திய அரசும் அவ்வப்போது விருதுகளை வழங்குகிறது. ஆனால் இந்த விருது வழங்கல் வெறும் கண்துடைப்பே. அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கும் புதுப்புனைவுகளுக்கும் ஆட்சியாளர்கள் என்றுமே மதிப்பளிப்பதில்லை. அதனால் மிகப்பெரும்பாலோர் வெளிநாடுகளுக்கு ஓடி அந்நாடுகளுக்கே பணியாற்றுகின்றனர். இவ்வறிஞர்களின் கண்டுபிடிப்புகளும் புதுப்புனைவுகளும் அவ்வெளிநாட்டினர்க்கு ஆதாயத்தையும் அவற்றை இறக்குமதி செய்யும் நம் ஆட்சியாளர்களுக்குத் தரகையும் பெற்றுத் தருகின்றன.

அதே நேரத்தில் கீழ்ச்சாதியினரிடையில் ஒரு குமுகத்துக்குத் தேவையான தொழில் நுட்பங்கள் அனைத்தும் உள்ளன. சாதிக்குச் சாதி இத்தொழில்நுட்பத்தின் படித்தரம் மாறுபடலாம். ஆனால் அனைவரிடமும் ஏதோவொரு வகைத் தொழில் நுட்பம் உண்டு. மேலை நாட்டுத் தொழில்நுட்பம் மேலோங்கிவிட்டது போன்ற ஒரு பொய்த் தோற்றம் இருந்தாலும் கூட இன்றும் நம் பழைய தொழில்நுட்பம் பரவலாக செயற்பட்டே வருகிறது. மேலையர் தம் தொழில்நுட்பங்கள் பலவற்றின், குறிப்பாக உணவு விளைப்புத் துறையில், எதிர் விளைவுகளை எதிர்கொள்ள மாட்டாமல் பன்னூறாண்டு காலம் “வெற்றிகரமாகச் செயற்பட்ட” மரபு முறைகளை நோக்கி வரத் தொடங்கியிருக்கிறார்கள். வழக்கம் போல் நம் நாட்டு அறிவர்களும் அவர்களைப் “போலச் செய்வதற்கு”க் காத்திருக்கிறார்கள். முன்பே கூறியது போல் மேலையர்களால் இன்னும் சரிவரப் புரிந்து கொள்ள முடியாத பல நுட்பங்கள் நம்மிடம் நிலவுகின்றன. அவற்றின் அடிப்படைக் கோட்பாடுகளை நாமும் இன்னமும் புரிந்து கொள்ளவில்லை. அவற்றை எவ்வளவு விரைவில் நாம் புரிந்து கொள்கிறோமோ, அவ்வளவு விரைவில் நாம் மேலையர்களை முந்திச் செல்லும் வாய்ப்பு உள்ளது.

இன்றைய மேலைத் தொழில்நுட்பம் காட்டியுள்ள வழிகாட்டலின் உதவியுடன் நம் மரபு முறைகளை மக்களின் செயற்பாடுகளிலிருந்தும் கிடைக்கும் நூல்களிலிருந்தும் திரட்டி நம்பிக்கையுடன் ஆய்வுகளைச் செய்வதன் மூலம் இந்த வாய்ப்பை மெய்ம்மையாக்கிக் காட்டலாம்.

(தொடரும்)

குமரிமைந்தன்
kumarimainthan@sify.com
htpp://kumarimainthan.blogspot.com

Series Navigation

குமரிமைந்தன்

குமரிமைந்தன்

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 8. அறிவியல்

This entry is part [part not set] of 20 in the series 20060721_Issue

குமரிமைந்தன்


தமிழகத்தில் அறிவியலே கிடையாது; இருப்பவையனைத்தும் மூட நம்பிக்கைகளே என்று கூறும் “பகுத்தறிவாளர்”களும் இங்குள்ள அனைத்தும் தூய அறிவியலிலிருந்து தோன்றின என்று கூறும் மயக்கச் சிந்தனையாளர்களும் இங்கு உண்டு. நம்மிடையில் நூல்களின் வடிவிலும் நடைமுறைகளாகவும் நிலவும் பலவேறு அறிவியற் கூறுகளை ஒரேயடியாக ஒதுக்கித் தள்ளிவிடுகின்றனர் பகுத்தறிவாளர்கள். அதே நேரத்தில் ஓமம் வளர்ப்பதால் எல்லாமே இயலுமென்று கூறுகின்றனர் ஏமாற்றுக்காரர்கள். உள்நாட்டு அறிவியல் வளர்ச்சியை ஏற்றுக் கொள்ளும் பகுத்தறிவாளரில் பெரும்பான்மையோர் மேல்சாதி மெய்யியலான யோகம் என்பதை ஏற்றுக் கொண்டு சித்தர்களைத் தம் தொடக்கப்புள்ளியாகக் கொள்வர். கடவுள் இல்லை; எனவே உலக நிகழ்ச்சிகளுக்கு கடவுள் காரணமல்ல; மனிதன் அனைத்து ஆற்றல்களும் உள்ளவன்; அவன் மன ஆற்றல் எல்லையற்றது என்ற நுண்பொருளியக் கோட்பாட்டை இவர்கள் கொண்டுள்ளனர். ஐம்புலன்களையும் ஒடுக்கி மனதை இயற்கையாற்றல்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளச் செய்து இயற்கையின் அனைத்து மறைபொருட்களுடன் சித்தர்கள் இரண்டறக் கலந்து அவற்றைப் புரிந்து கொண்டனர்; அவர்கள் எதையுமே கையாலோ கருவியாலோ அளந்து பார்த்ததில்லை என்று கூறும் அளவுக்கு இவர்கள் சென்று விடுகின்றனர். வேதிய மதத்துக்கு எதிராகச் சித்த சமயத்தைப் பிடிப்பதாகக் கருதிக் கொண்டு இப்படி அவர்கள் கூறுகின்றனர். சித்தர்களில் சிலர் தாங்கள் கூறுவன வெற்றூகங்கலிருந்து தோன்றியவையல்ல; செயல்முறையிலும் கருவிகள் (இயந்திரங்கள்) உதவியாலும் சரிபார்க்கப்பட்டவையே என்று கூறியிருப்பதை[1] அவர்கள் அறியவில்லை. இவர்களது இந்த “ஆன்மீக” அணுகு முறையால் சித்த மருத்துவம் போன்ற நம் அரும்பெரும் அறிவியல் படைப்புகளின் உண்மையான அறிவியல் முறையை நம்மால் அறிந்துகொள்ள இயலாமல் இருக்கிறது. இவர்களது இந்தத் தவறான விளக்கத்தால் “மேனிலைத் தியானம்” போன்ற மோசடிகளுக்கு மெய்யியல் சான்று கிடைத்து விடுகிறது. கடவுள் மறுப்புக் கொள்கையிலிருந்து தொடங்கிய பலர் இராமகிருடினர், இரமணர், சாயிபாபா, பங்காரு அடிகள் போன்றோரைக் கடவுள்களாகவே காணத் தொடங்கிவிட்ட இழிநிலை தற்செயலானதல்ல, சித்தர்களைப் பற்றிய தவறான இந்தக் கண்ணோட்டத்தின் தவிர்க்க முடியாத விளைவே இது.

மேலே கூறிய “மகான்”களை வழிபடுவோர் வெறும் மெய்யியல் தவறுகளினால் மட்டும் வழிநடத்தப்படவில்லை என்பதையும் இங்கு குறிப்பிட்டுக் காட்ட வேண்டியுள்ளது. இந்த வழிபாட்டில் ஈடுபட்டிருப்போர் பெரும்பாலும் உயர் அதிகாரிகளும் பெரும் வாணிகளர்களும் தொழில் முதலாளிகளுமே. இந்த “மகான்”கள் இவர்களது பொருளியல் வாழ்வின் பாதுகாப்புக்கும் மேம்பாட்டுக்கும் இடைத்தரகர்களாகவும் தொடர்பாளர்களாகவும் செயற்படுகின்றனர். கல்லூரிகளில் பிள்ளைகளுக்கு இடம் பிடித்தல், பதவி உயர்வு, தொழில் – வாணிகத் தொடர்பு, குற்றச் செயல்களின் விளைவுகளிலிருந்து தப்புதல் ஆகியவை இந்த “மகான்”களின் மூலமாகவும் இந்த வழிபாட்டு அமைப்புகளில் கிடைக்கும் நேரடித் தொடர்புகளாலும் நடைபெறுகின்றன. உண்மையில் இந்த வழிபாட்டு அமைப்புகள் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இயங்கும் தம்மூப்பு அமைப்புகளான “மாபியா” போன்றவையே. இந்த அமைப்புகளின் தலைமையிலிருக்கும் “மகான்”களின் “தெய்வீக ஆற்றல்” இதற்கு மூடுதிரையாகப் பயன்படுகிறது. இந்த வகையில் இந்த வழிபாட்டு அமைப்புகள் மேலை நாடுகளின் தம்மூப்பு அமைப்புகளைப் போல் எளிதில் இனங்கண்டு பிடிக்க முடியாதவை; எனவே எளிதில் அழிக்க முடியாதவை.

இந்த மெய்யியலுக்கு அடிப்படை என்ன? மனித மனதில் புறமனம், உள்மனம் என இரண்டு பகுதிகள் உள்ளன. புறமனம் புலனறி புலனங்களைப் (Informations) பகுத்தாய்ந்து தன்னுணர்வுடன் முடிவுகளை எடுக்கிறது. புலன்கள் மூலம் சென்று ஆனால் புற மனத்தில் பதியப் பெறாது நேரடியாக உள் மனத்தில் தங்கிடும் செய்திகள் பல உள்ளிருந்து கொண்டே மனிதனைப் பல வழிகளில் இயக்குகின்றன. இதனை உள்ளுணர்வு என்று நாம் கூறுகிறோம். விலங்குகளின் பெரும்பாலான செயல்கள் உள்ளுணர்வின் தூண்டுதலாலே இயக்கப்படுகின்றன. மனிதனுக்கும் இந்த உள்ளுணர்வு தனது பழைய விலங்குநிலை வாழ்வின் தொடர்ச்சியாகவே உள்ளது.

புலன்களைச் செயலிழக்கச் செய்வதன் மூலம் உள் மனத்துடன் நேரடித் தொடர்பு கொள்வதும் அதன் மூலம் பிறரது உள் மனத்துடன் தொடர்பு கொள்வதுமே யோகம் போன்றவற்றால் ஏற்படும் விளைவு. புலன்கள் செயலிழப்பதற்கு நேரடியாக பயிற்சியும் இசை, ஆடல் போன்ற துணைச் செயல்களும் உதவுகின்றன. தெய்வமாடுதல், பேயாடுதல் போன்றவற்றில் இவ்வுத்தி பயன்படுகிறது. குறி சொல்வோர் உடுக்கையடிப்பதன் மூலம் ஓரளவு இந்த நிலையை எய்துகின்றனர். இன்றைய அறிவியலில் வசியம் (இப்னாட்டிசம்) இதனையே செய்கிறது. இதிலிருந்து சிறிது மாறுபட்ட அளவில் செப்பிடு வித்தைக்காரன் செயற்படுகிறான். இந்த நோக்கில் பார்க்கும் போது நாம் மேலே கூறியோர் போன்ற “மகான்”கள் பணக்காரர்களின் முன் தொழில் நடத்தும் வெறும் செப்பிடு வித்தைக்காரர்களே. (அண்மையில்[2] மதுரையில் பங்காரு அடிகள் நடத்திய மாநாட்டில் பெருமளவில் மணமான அழகிய இளம் பெண்கள் கலந்து கொண்டனர். அரங்குகளில் வசியம் கையாளப்படுகிறது என்ற பேச்சு அடிப்பட்டதால் கணவன்மார்கள் தங்கள் மனைவிகளை மிக விழிப்பாகக் கண்காணிக்க வேண்டியிருந்தது என்று பரவலாகப் பேசப்பட்டது).

“இந்து” நாளிதழில் “பேரானந்தம்” பற்றி ஒரு துறவி (அவர் பெயரில் தொடக்கத்தில் “சுவாமி” என்றும் இறுதியில் “ஆனந்தர்” என்றும் அடைமொழிகள் இருந்ததால் “துறவி” என்று குறிப்பிடுகிறேன்) ஒரு சிறு கட்டுரை எழுதியிருந்தார். தன்னை மறந்து பரம்பொருளுடன் ஒன்றி விடுவது தான் உயிருக்குப் பேரின்பம்; அதனை இடைவிடாத யோகப்பயிற்சி மூலம் பெற முடியும். கஞ்சா போன்ற பொருட்களின் மூலமும் பெற முடியும் என்று அவர் கூறியிருந்தார். எனவே அவரது கூற்றுப்படி பார்த்தால் கஞ்சா மூலம் பெறத்தக்க “அறிவியலை”ச் சித்தர்கள் தம் “சித்து விளையாட்டுகள்” மூலம் கஞ்சா இன்றியே (இதிலும் கருத்து வேறுபாடு உண்டு. சித்தர்கள் கஞ்சாவைப் பயன்படுத்தினர் என்று கருதுவாரும் உளர்) எய்தினர் என்று சித்தர்களைக் கொச்சைப் படுத்துவதாக ஆகிவிட்டது. பழங்குடி மக்களிடையில் நோய் தீர்ப்பதற்கென்று ஒருவகைப் பூசாரிகள் உள்ளனர். இவர்களைச் சாமன்கள் (Shamans) என்று அழைப்பர். இவர்களால் மக்களுக்கு நோய்கள் மற்றும் பிற தீமைகளை உண்டாக்கவும் முடியும் என்ற நம்பிக்கை நிலவுவதால் குமுகத்தில் வலிமையான செல்வாக்கு இவர்களுக்கு உண்டு. இந்த சாமனின் பணி நம் நாட்டுப்புறத்தில் தொழிற்பிரிவுக்குட்பட்டு மருத்துவன், குறிசொல்வோன், மந்திரிப்போன், மந்திரவாதி, செப்பிடு வித்தைக்காரன் என்று பிரிந்துவிட்டது. இது ஒரு வகைக் குமுக வளர்ச்சி நிலையைக் காட்டுகிறது. ஆனால் அதே சாமனியம் ஏறக்குறைய தன் பழைய வடிவில் மேற்சாதிகளிடையில் செல்வாக்குச் செலுத்துவதையே நாம் மேலே சுட்டிக் காட்டிய மயக்கங்கள் காட்டுகின்றன.

கீழ்ச்சாதியினரிடையில் இத்தகைய மயக்கங்களுக்கு இடமில்லை. அவர்களது அறிவியல் அவர்களது தொழில் நுட்பங்களினுள்ளும் நம்பிக்கைகளினுள்ளும் மறைந்து கிடக்கிறது. வழி வழியாகத் தொடர்ந்து வரும் தொழில்நுட்ப அறிவிலிருந்தும் நம்பிக்கைகளிலிருந்தும் அவர்களது அறிவியல் மண்டலத்தைப் பிரித்து அறிய முடியாமலிருக்கிறது.

அறிவியல் மண்டலம் என்பது ஆங்கிலத்தில் System of Science என்று கூறுவதற்கு இணையானது. ஓர் அறிவியல் மண்டலத்தில் கோட்பாடுகள், கோட்சுட்டு மண்டலங்கள் (Reference Systems) எண் வரிசை, சரிபார்க்கும் முறைகள், கையாளும் முறைகள் போன்ற பிரிவுகள் அடங்கும். இன்றைய அறிவியலில் அளவுகள் புவியின் அளவுகளோடு ஒப்பிடப்படுகின்றன; புவியின் இயக்கம் கோட்பாட்டு மண்டலமாகிறது; பத்தடிமான (Decimal) எண் மண்டலத்திலிருந்து இரண்டடிமான (Binary) எண் மண்டலம் செல்வாக்குப் பெற்று வருகிறது; ஆய்வகச் சரிபார்க்கும் முறை பெரும் பங்கு ஏற்கிறது. நுட்பமான வாய்ப்பாடுகளைக் கையாளும் திறவோர்களால் மட்டும் கையாளத்தக்கனவாக இன்றைய கையாளும் முறைகள் உள்ளன. மாறாக நம் பண்டை அறிவியல் மண்டலத்தில் கோட்பாடுகள் பற்றித் தெளிவாக எதுவும் கூற முடியவில்லை. வான மண்டலத்தை கோட்சுட்டாகக் கொண்டுள்ளதற்குத் தடயங்கள் தென்படுகின்றன. அதனால் தான் ஐம்பூதங்களில் நாம் எளிதில் புலனுணர்ந்து கொள்ளத்தக்க நிலம், நீர், காற்று, தீ ஆகியவற்றுடன் நேரடித் தொடர்பு காணப்படாத வான்வெளியும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது பண்டை மேலை நாட்டுப் பூதப்பிரிவிலும் (Principal elements) வட இந்தியப் பூதப் பிரிவிலும் இல்லாத ஒன்றாகும். இரண்டடிமானமும் பத்தடிமானமும் கலந்த ஓர் எண் வரிசை பயன்பட்டதாகவும் தெரிகிறது; சரி பார்க்கும் முறையைப் பற்றித் தெளிவாக எதுவும் விளங்கவில்லை. சிறிய அளவில் ஆய்வக முறையும் பெருமளவில் களக்கையாளலும் பயன்பட்டிருக்கக் கூடும். ஆனால் எவரும் எளிதில் கையாளத்தக்க ஒரு கையாளும் முறை இருந்திருக்கிறது. இந்தத் தரவுகளை வைத்து நம் பண்டை அறிவியலை மீட்டெடுக்க முயலலாம்.

வான் வெளியிலுள்ள கோள்கள், நாள்மீன்கள், மேகத்தின் தன்மை, பறவைகள், விலங்குகளின் நடத்தைகள் ஆகியவற்றிலிருந்து மழை வரவை முன்னறிவது, திட்டவட்டமான சூத்திரங்களிலிருந்து எழுந்த விகிதங்களின் அடிப்படையில் கட்டிடத்தின் பரிமாணம் என்ற வரையளவின் துணை கொண்டு தனித்தனியாகச் சுவரையும் கூரைப் பணியையும் செய்து பொருத்தல், வண்டிகள், தேர்கள் சமைத்தல், கூர்மையும் தி(நு)ட்பமும் உடைய கருவிகளைச் செய்தல் பல்வேறு வகை மருத்துவ முறைகளையும், மருந்துகளையும் கையாளல் என்று அன்றாட வாழ்வில் அவர்களது அறிவியல் புதைந்து கிடக்கிறது. இன்று மேனாட்டுக் கல்வி முறையில் நம் நாட்டில் அறிவியல் பயில்வோர் நம் நாட்டில் நிலவும் தொழில்நுட்பத்திலிருந்து நம் அறிவியலை இறுத்தெடுக்கும் எண்ணம் சிறிதும் இல்லாதவர். மாறாகப் பள்ளியினுள் நுழைந்தவுடன் இம்மாணவர்களின் சிந்தனை தம் சுற்றுச் சூழலிலிருந்து அயற்படுத்தப்பட்டு மேற்சாதிப் பார்ப்பனிய, அதாவது வெள்ளாளப் பண்பாட்டினுள்ளும் மேலை நாட்டுத் தரகுச் சிந்தனையுள்ளும் சிறைப்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக வேளாண்மையில் வெள்ளைக்காரர்களின் உத்திகள் நம் நாட்டுக் கற்றோரின் மூலம் புகுத்தப்பட்டபோது உள்நாட்டு முறைகளின் உண்மையான தன்மைகள் சிறிதும் ஆராயப்படாமல் அவை தூக்கியெறியப்பட்டன. ஆனால் இம்மேனாட்டு உத்திகள் வைரசுத் தாக்குதல் போன்ற சில நிலைமைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல் போனபோது மீண்டும் வேப்பம் பிண்ணாக்கைத் தேடி ஓடி வர வேண்டியிருக்கிறது. இருந்தாலும் இன்றும் உள்நாட்டு மரபு வேளாண்மை பற்றிய ஒரு தெளிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டுமென்ற எண்ணம் எந்த “அறிவியல் அறிஞரு”க்கும் தோன்றவில்லை. அதுபோன்றே நச்சு முறிவுக்கு மந்திரித்தல், பேயாட்டுதல் போன்ற செயல்முறைகளைப் பற்றியும் ஆற்றல் மிக்க எண்ணற்ற மருந்துகளைப் பற்றியும் எவரும் முறைப்படியான ஆய்வுகள் செய்ததில்லை.

இதைக் கூறும் போது தமிழகத்தில் இருந்தவற்றை எல்லாம் அப்பழுக்கற்ற அறிவியல் தன்மையுடையவை என்று நாம் கட்சி கட்டுவதாகப் பொருளில்லை. நம் நாட்டில் நாம் பெருமைப்படத்தக்க அறிவியலும் தொழில் – நுட்பமும் இருந்தன என்பதை நம்மால் மெய்ப்பிக்க முடியும். நீர், நீராவி, மின்சாரம், அணு ஆகிய ஆற்றல் மூலங்களைக் கையாள்வதே நமக்கு முற்றிலும் புதியவையாக இருக்கக்கூடும். இந்த வகையில்தான் மேலை அறிவியல் வேறுபடுகிறது; இதனாலேயே மேம்படுகிறது. எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டைச் சுட்டிக் காட்ட முடியும். காவிரியில் (உண்மையில் காவிரியின் குறுக்கே இவ்வணை கட்டப்படவில்லை. காவிரி நீர் வடக்குக் கரையில் உடைத்துக் கொண்டு உள்ளாறு வழியாகக் கொள்ளிடத்தினுள் போய் விடுவதைக் கட்டுப்படுத்தவும் அதே நேரத்தில் தேவையான சமயங்களில் தேவையான அளவு அவ்வாறே அந்த நீரை வெளியேற்றவும் வடக்குக் கரையில் அந்த அணை கட்டப்பட்டுள்ளது) கட்டப்பட்டுள்ள கல்லணை நேர்கோட்டில் கட்டப்படவில்லை. பாம்பு போல் வளைந்து நெளிந்து அது கிடக்கிறது. இப்படி ஏன் வளைத்துக் கட்டப்பட்டது என்ற கேள்வியே யாருக்கும் எழவில்லை. இதைப் புரிந்து கொள்வதற்கு அண்மைக் கால அறிவியல் கண்டுபிடிப்பு ஒன்று உதவும். ஆறுகளில் அணைக்கட்டுகள் கட்டி (மேட்டூர் போன்ற நீர்த் தேக்கங்கள் அல்ல, சோடர்பாளையம் போன்ற திருப்பு அணைகள்) அவற்றிலிருந்து மதகுகள் மூலம் வாய்க்கால்கள் எடுக்கும் போது ஆற்றின் அடிப்பரப்பில் நகர்ந்து வரும் மணல் வாய்க்காலினுள் புகுந்து விடுவது இன்று வரை பாசனப் பொறியாளர்களுக்குப் பெரும் தலைவலியாக இருக்கிறது. இதைத் தடுப்பதற்கு முழுமையான ஒரு தீர்வை உலகிலுள்ள பொறியாளர்களால் உருவாக்க முடியவில்லை. இந்நிலையில் சோவியத்திலுள்ள ஆய்வாளர்கள் அணைக்கட்டைக் குதிரைக் காற்பரளை (லாடம்) வடிவத்தில் கட்டி இருமுனைகளிலிருந்தும் வாய்க்கால்கள் எடுத்தால் வாய்க்காலினுள் மணல் செல்லாது என்பதைக் கண்டறிந்திருக்கிறார்கள். நம்நாட்டில் சிற்றோடைகளில் வெள்ளைக்காரர்களுக்கு முன் கட்டப்பட்ட அணைக்கட்டுகளில் பெரும்பாலானவை மேல் நோக்கி வளைத்து அல்லது மடித்துக் கட்டப்பட்டிருப்பதைப் பார்த்தால் சோவியத்து அறிஞர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளதை நம் நாட்டார் முன்பே அறிந்திருந்தனர் என்பது தெரியவரும். ஆனால் கல்லணை கட்டப்படும் போது வளைத்துக் கட்டுவதன் அடிப்படைக் கோட்பாட்டுணர்வு மறைந்து அணைக்கட்டுகளை நேராகக் கட்டக்கூடாது என்ற மரபு மட்டும் நிலவியதால் இப்படி வளைத்து நெளித்துக் கட்டினர். இல்லையானால் ஒரே வளைவாக வில்போலக் கட்டியிருப்பர். அடிப்படை அறிவியல் உணர்வைப் பேணும் சூழல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் அழிந்து போயிற்று என்றும் அதன் சிதைவுகளாகச் சில எச்சங்கள் நம்மிடையில் இன்றும் நிலவி வருகின்றன என்றும் இதிலிருந்து நம்மால் அறிய முடிகிறது. இந்த எச்சங்கள் இன்று அல்லது வெள்ளையர் வரும்போது வெறும் மூடநம்பிக்கைகள் எனக் கருதும் அளவுக்குச் சிதைந்து போய்விட்டன. இந்த எச்சங்களிலிருந்து நம் பழைய அறிவியலை வெளிக்கொணர்வதற்கு மேலை அறிவியலின் துணையின்றி இயலாத அளவுக்கு நம்மிடையில் அறிவியலுணர்ச்சி கிட்டத்தட்ட முற்றிலும் அழிந்து போய் விட்டது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.

மேலை அறிவியலார் இன்று தான் ஒத்து கொள்ளத் தொடங்கியிருக்கும் நம் நாட்டாரின் சில “நம்பிக்கைகள்” பற்றியும் நம் அறிவியலார் சிந்திப்பதில்லை. எடுத்துக்காட்டாக முழுநிலா, அமாவாசை ஆகிய உவா நாட்களில் (முழுநிலா = வெள்ளுவா, அமாவாசை = காருவா) மழை வாய்ப்புகள் அதிகமென்பதும் அந்நாட்களில் உடல்நலம், மனநலம் குன்றியோர்க்கு அத்துன்பங்கள் மிகுமென்பதும் நம் நாட்டினரின் நம்பிக்கை மட்டுமல்ல நடைமுறையில் காணும் உண்மை. இவற்றை மேலை அறிவியலார் இப்போதுதான் ஒவ்வொன்றாக ஏற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். அல்லது மீளக் கண்டுபிடித்துள்ளனர். (காப்பர்நிக்கசின் சூரிய மண்டலம் பற்றிய கண்டுபிடிப்பு முதல் மேலே கூறப்பட்டுள்ளது வரை நம்மைப் பொறுத்தவரை மீளக் கண்டுபிடிப்புகளே). ஆனால் நம் நாட்டிலுள்ள “பகுத்தறிவு”ச் சிந்தனையுள்ள அறிவியலார் பலர் இதனை அப்படியே புறக்கணிக்கின்றனர்; பழமை விரும்பிகளான அறிவியலாரோ சோதிடத்தின் துல்லியத்தன்மை அல்லது வேள்வியின் அனைத்து வல்லமை அல்லது மனுச்சட்டத்தின் மேன்மை இதன் மூலம் நிறுவப்பட்டது எனக் கூறுகின்றனர். உலகும் அதில் வாழும் உயிர்களும் வான்வெளிப் பொருட்களின் இடைவினைப்பாடுகளால், இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால், புவிக்கும் நிலவுக்கும் உள்ள இடைவினைப்பாட்டால் பாதிக்கப்படுகின்றன என்ற அறிவியல் உண்மையினடிப்படையில் இதை யாரும் பார்ப்பதில்லை என்றே கூற வேண்டும். உயிரின் தோற்றத்தில் கூட நிலவின் பங்கு பெருமளவு இருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது. சிற்றுயிர்களில் பல வெள்ளுவா நாட்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. பேருயிர்களில் பூப்பெய்தல் (மாதவிடாய் தோன்றுதல்) உவா நாட்களில் பொருந்தி வரவில்லையாயினும் அந்த இடைவெளி (ஏறக்குறைய 28 நாட்கள்) கிட்டத்தட்டப் பொருந்தி வருகிறது. ஒருவேளை தொடக்கத்தில் நிலவின் சுழற்சி இந்த 28 நாட்களாகக் கூட இருந்திருக்கலாம் (இப்போது ஏறக்குறைய 29½ நாட்கள்). தென்னை மரம் ஆண்டுக்குப் பதின்மூன்று அதாவது 28 நாட்களுக்கு ஒன்று வீதம் ஓலைகளையும் பூக்களையும் வெளிக் கொணருகிறது. இந்த அடிப்படையிலிருந்து நோக்கினால் பிற கோள்கள், விண்மீன் கூட்டங்கள் ஆகியவற்றால் புவியில் நிகழும் நிகழ்ச்சிகளையும் நம்மால் கணிக்க முடியும். நம் மருத்துவம், இசை, நாட்டியம் போன்ற துறைகள் கோள்கள் மற்றும் விண்மீன்களுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளன. மருத்துவ நூல்கள் எழுதியுள்ள நம் பண்டை அறிஞர்களில் விதிவிலக்கின்றி அனைவரும் கணிய (சோதிட) நூல்களும் இயற்றியுள்ளனர். எனவே இவற்றை அணுகி நுணுகி ஆய்ந்தால் நம் பண்டை அறிவியல் மண்டலத்தின் அடிப்படை அணுகலை கூட அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டு.

அதேபோல் மொழியியலிலும் மெய்ப்பாட்டியலிலும் (Aesthetics) இலக்கியத், திறனாய்விலும் மாந்தனியலிலும் தொல்காப்பியம் காட்டுகின்ற வளர்ச்சி நிலையைத் தாண்டி மேலை அறிவியலின் இத்துறைகள் இன்னும் செல்லவில்லை என்ற உண்மையை, அவற்றை ஒப்பிட்டுப் பயில்வோர் நாள்தோறும் கண்டு வருகின்றனர்.

இப்போது உள்நாட்டு அறிவியலையும் தொழில் நுட்பத்தையும் வளர்ப்பது என்ற பெயரில் நம் நாட்டில் சில இயக்கங்கள் தோன்றியுள்ளன. ம.நா.அ.தொ (மக்கள் நாட்டுப் பற்று அறிவியலும் தொழில்நுட்பமும் – P.P.S.T. People’s Patriotic Science and Technology) குழுவினர் இத்தகைய ஓர் இயக்கமாகும். இவர்களில் பெரும்பாலோர், குறிப்பாகத் தமிழ்நாட்டிலுள்ளோர் இரண்டு கோடிகளிலுள்ள நிலைகளில் நிற்கின்றனர். ஒரு புறம் மேலை அறிவியலில் தீங்கான கூறுகள் மட்டுமே உள்ளன என்று கூறுகின்றனர், அதே வேளையில் உள்நாட்டு அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் பற்றி மேலை நாட்டு ஆசிரியர்களிடமிருந்து மேற்கோள்கள் காட்டுவதைத் தவிரத் தாமே இதுவரை ஒன்றைக் கூட இனம் காண இவர்களால் இயலவில்லை. அத்துடன் வெள்ளையர் வருவதற்கு முன் இங்கு எல்லாமே சிறப்பாக இருந்தது எனவும் வெள்ளையன் வந்த பின்னரே எல்லாம் கெட்டுவிட்டன எனவும் இரா.சே.ச. (இராட்டிரிய சுயம் சேவா சங்கம் R.S.S.)-வுக்குப் பக்கமேளம் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை என்ன? வரலாற்றுக் காலத்துக்கு முன்பும் அல்லது அதன் தொடக்கத்திலும் பின்னர் சில குறுகிய இடைவெளிகளின் போதும் தமிழகத்தில் பெரும் அறிவியல் – தொழில் நுட்ப வளர்ச்சி இருந்தது. ஒட்டுண்ணி வகுப்புகளாகிய அரசும் சமயத் தலைவர்களான பார்ப்பனர்களும் மடத்தடிகளும் நீண்ட நெடுங்காலமாக வலிமையான ஒரு கூட்டணியாகச் செயற்பட்டு அவற்றை அழித்துச் சிதைத்தனர்; அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களைக் கையாணடவர்களை ஒடுக்கினர், கீழ்ச்சாதிகளாக்கி இழிவுபடுத்தினர்; அவ்வாறு ஒடுக்கப்பட்ட தொழில் நுட்பச் சாதியினர் தலைமை தாங்கி நடத்திய வலங்கை இடங்கைப் போராட்டத்தை வெறும் சாதிப் போராட்டமாகத் திசை திருப்பினர். இவ்வாறு இடைவிடாத தாக்குதலுக்குள்ளான நம் அறிவியலும் தொழில்நுட்பமும் சிதைந்து குலைந்து ஊர்ப்புறங்களுக்குள் சென்று பதுங்கி மூடநம்பிக்கைகளாகத் திரிவுண்டன. இவ்வாறு பதுங்கிய அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் நாமாகவே இனம் கண்டு கொள்ளும் நிலையில் இன்னும் கூட நம் “அறிஞர்கள்” இல்லை. அதற்கு வெள்ளையர் வளர்த்தெடுத்துள்ள இற்றை[3] அறிவியலின் துணையும் சரியான வரலாற்றறிவும் கோட்பாட்டுணர்வும் தேவைப்படுகின்றன. இந்த வகையில் வெள்ளையர் இந்தியாவில் ஆற்றிய ஆக்கப் பணி, அதாவது அழிவுப் பணி பற்றிய மார்க்சின் கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதே. அந்த அழிவிலிருந்து புதிய ஒன்றைப் படைப்பது நம் நாட்டு அறிவர்களின் பணியாகும். அத்துடன் நம் அறிவியலும் தொழில் நுட்பமும் சீர்குலைவதற்குக் காரணமாயிருந்த குமுக நிலைமைகளை, அதாவது குறிப்பாக உழைப்பையும் உழைப்போரையும் இழிவுபடுத்துவதையும், ஒடுக்குவதையும் முடிவுக்குக் கொண்டுவந்து அவர்களை ஊக்குவது இவை எல்லாவற்றையும் விட முதன்மையானது.

இங்கு ஒட்டுண்ணிகளுக்கும் சுரண்டுவோருக்கும் இடையிலுள்ள வேறுபாட்டைப் பிரித்துணர வேண்டுவது இன்றியமையாதது. ஒரு முதலாளியோ வாணிகனோ ஓர் உழைப்பாளியின் உழைப்பின் பயனில் வரம்பு மீறிய பங்கைப் பெறும் போது அவன் சுரண்டுவோன் ஆகிறான். தொழிலை நடத்துவதற்கு, அல்லது பொருளை விற்பதற்கு உழைப்பாளிக்கு உதவுகிறவன் என்ற வகையில் அதற்குரிய பங்கை மட்டும் பெறும் போது அவனும் உழைப்பாளியாகிறான். தெருவில் காய்கறி விற்கும் ஒரு பெண் வாணிகம் செய்வதால் சுரண்டுபவளாக மாறி விட முடியாது. அதே போல் மிதிவண்டி பழுது பார்க்கும் சிறு கடை வைத்திருக்கும் ஒருவன் தன்னிடம் கூலிக்கு வேலை பார்க்கும் சிறுவனிடம் பெரும் சுரண்டல் நடத்துவதாகக் கூற முடியாது. அதே நேரத்தில் ஒரு பெரும் முதலாளியோ வாணிகனோ தன்னிடம் வேலை பார்க்கும் அல்லது செய்பொருளை விற்கும் உழைப்பாளியைப் போல் பல்மடங்கு வருவாய் பெறும் போது அவன் சுரண்டுவோனாகிறான். அதே நேரத்தில் மக்கள் மீதான வரி விதிப்பிலிருந்து பெறப்படும் சம்பளத்திலும் கையூட்டிலும் வாழும் ஓர் அரசு அதிகாரியையோ அல்லது மக்கள் வழங்கும் காணிக்கை, கோயில் மற்றும் மடங்களின் சொத்துக்களைக் கொண்டு வாழ்க்கை நடத்தும் சமயத் தலைவரையோ சுரண்டுவோராகக் கூற முடியாது. அவர்கள் தான் ஓட்டுண்ணிகள். வாணிகர்களை ஓட்டுண்ணிகளாகக் கருதும் போக்கு பல “மார்க்சியர்”களிடம் உள்ளது. அது சரக்குக்கும் வாணிகத்துக்குமுள்ள உறவைப் புரிந்து கொள்ளாமையின் விளைவேயாகும். பண்டம் அல்லது செய்பொருள் எப்போது சரக்காகிறது? அது படைப்போனின் நேரடி நுகர்ச்சிக்காகவன்றி அவனறியாத அவனால் அறிய முடியாத வேறுயாரோ ஒருவனின் நுகர்ச்சிக்காகப் படைக்கப்படும் போதுதான். அவ்வாறு படைப்போன் தான் படைக்கும் பொருளை இன்னொருவன் படைத்த பொருளோடு பண்டமாற்றுச் செய்யும்போது பண்டம் சரக்காகிறது, படைப்போன் வாணிகனாகிறான். கருநிலையில் பண்டமாற்றாக நிலவிய வாணிகம் படைப்பிலிருந்து விடுபட்ட முழுமையான வாணிகனின் தோற்றத்தினால் முழுமை பெறுகிறது. சரக்குப் படைப்பு தெளிவான தோற்றம் பெறுகிறது; முதலில் பண்டமாற்றுக்காவும் பின்னர் விற்பனைக்காகவும் படைக்கப்பட்ட சரக்குக்கு வாணிகன் இன்றி வாழ்வில்லை, இயக்கமில்லை. எனவே வாணிகன் சரக்குப் படைப்பின் பிரிக்க முடியாத உறுப்பாகிறான். எனவே அவனின்றி சரக்குமில்லை. ஆகையால் சரக்கு விளைப்புமில்லை. ஆகவே அவன் சுரண்டுவோனாக முடியுமே தவிர ஒட்டுண்ணியாக முடியாது. சில நிலைமைகளில் ஒட்டுண்ணியின் தன்மையை அவன் கொண்டிருக்கலாம். சரக்கு விளைப்பிலிருந்து குமுகம் வகுப்புகளாகப் பிளவுண்டது என்பது மார்க்சிய நிலைப்பாடு. இதை ஏற்றுக் கொள்வதாயின் இதன் மறுதலையாக வாணிகத்திலிருந்து குமுகம் வகுப்புகளாகப் பிளவுண்டது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வாணிகம் இன்றி சரக்கு அதாவது விற்பனைக் கென்றே படைக்கப்பட்ட பண்டம், இருக்க முடியாது. எனவே விற்பனைக்கென்று படைக்கப்பட்ட, அதனால் படைப்போரின் தேவையை மிஞ்சிப் படைக்கப்பட்ட, அதாவது மிகுதியான சரக்கும் அதை வாங்குவோரிடத்திலுள்ள பற்றாக்குறையும் சேர்ந்து உருவானது வாணிகமும் அதன் தொடர்ச்சியான தனி உடைமையும். வெறும் மிகுதி மட்டும் தனிவுடைமையை உருவாக்க முடியும் என்று மார்க்சு கூறியது மீளாய்வுக்குரியது. ஏனென்றால் தனிப்பட்ட ஒரு குமுகத்தின் பொது உழைப்பிலிருந்து, எனவே குமுகத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபடாத எவராலும் குமுக உழைப்பைத் தனதாக்கிக் கொள்ள முடியாது. ஒன்றுக்கு மேற்பட்ட குமுகங்கள் பண்டமாற்று மூலமாகவோ அல்லது போர்களின் மூலமோ இடைவினைப்படும் போது அதிலிருந்து தவிர்க்க முடியாமல் பிறக்கின்ற, எல்லாக் குமுகங்களிலிருந்தும் விடுபட்ட ஒரு குழுவினாலேயே இதைச் செய்ய முடியும். அது படையாக அமைந்த வாணிகக் குழுவாயிருக்கலாம் அல்லது அடக்குமுறையிலிருந்து உருவான படையின் தலைவர்களாயிருக்கலாம். முதல் வகைக்குப் பினீசியர்களையும் இரண்டாம் வகைக்குப் பாரசீகர்களையும் வரலாற்றுச் சான்றுகளாகக் காட்ட முடியும்.

இவ்வாறு சரக்கு விளைப்போடு அதாவது படைப்பு விற்பனை என்ற இரண்டோடும் நேரடித் தொடர்பு கொள்ளாமல் படைப்புச் செயல்முறையிலிருந்து விடுபட்டு குமுகத்திற்கு மேலே நிற்கும் அரசும் சமயமும் தான் ஒட்டுண்ணிகள். இந்த ஒட்டுண்ணிகள் உலகில் எங்கும் காண முடியாத அளவில் நம் நாட்டில் முழுமையான வளர்ச்சியைப் பெற்றுவிட்டனர், எனவே தன்னுணர்வோடு செயற்படுகின்றனர். தமக்கு உலை வைக்கும் ஆற்றல் முதலாளி வகுப்புக்கும் வாணிக வகுப்புக்கும் உண்டென்பதைத் தெளிவாகப் புரிந்து வைத்திருந்து அவற்றின் வளர்ச்சியை விழிப்பாகக் கண்காணித்து வந்தனர். தமக்கு அச்சமூட்டும் அளவுக்கு அவற்றின் வளர்ச்சி செல்லக் கூடும் என்று தோன்றிய போதெல்லாம் சிறிதும் தயங்காமலும் காலந்தாழ்த்தாமலும் அவற்றை அழிக்க இவ்வொட்டுண்ணிகள் என்றும் தயங்கியதில்லை. நாம் முன்பு கூறியது போல் படைப்புச் செயல்முறையின் எல்லா உறுப்புகளிலிருந்தும் முற்றிலும் அயற்பட்ட இந்த ஒட்டுண்ணிக் கூட்டத்தின் “படைப்பே” “இருவினை நீக்கும்” மெய்யியல்.

வாணிக வகுப்பின் ஆற்றலுக்கு தொழிற் புரட்சியின் முன்பும் அதன் போதும் ஐரோப்பா, குறிப்பாக பிரிட்டன் மறுக்க முடியாத சான்றாக நிற்கிறது. அங்கு அது நல்ல வளர்ச்சி பெற்ற போது வாணிக முதலைத் தொழில் முதலாக்கி முதலாளியத்தை வளர்த்தது. அரசு, சமயம் இரண்டையும் தனக்குப் பணிபுரிய வைத்தது. இங்கு அரசும் சமயமும் தன் முழு ஓட்டுண்ணித் தனத்திலிருந்து வாணிகத்துக்கும், எனவே பண்டப் படைப்புக்கும் உதவும் கருவிகளாக மாறின.

மாறாக நம் நாட்டில் இன்று இந்த இரு ஒட்டுண்ணிகளும் முதலாளிய மற்றும் வாணிக வகுப்புகளை வளரவிடாமல் செய்ததன் மூலம் அவற்றைத் தரகுத் தன்மையுடையவையாய் நீண்டகாலமாக வைத்திருக்கின்றன. இங்கு ஒட்டுண்ணிகளாகிய இவ்விரு வகுப்புகளுக்கும் படைப்பு வகுப்புகளாகிய இரு வகுப்புகளும் அடிமைப்பட்டு நிற்கின்றன. ஒட்டுண்ணி வகுப்புகளின் நலனைக் காப்பதற்கும் அவற்றை நிலைப்படுத்துவதற்கும் உள்நாட்டு நலனை அடகு வைத்து நாட்டின் வளங்களைச் சுரண்டி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய உதவும் கருவிகளாகி நிற்கின்றன. இந்த இருவகை நிலைமைகளை மார்க்சியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மீண்டும் உருவாகாமல் தீர்ந்து போகின்ற ஆற்றல் மூலங்களாகிய நிலக்கரி, கல்லெண்ணெய் (பெட்ரோல்) அணு எரிபொருள் போன்றவற்றுக்குப் பகரம் (பதிலாக) திரும்பத் திரும்பக் கிடைக்கத் தக்க காற்று, வெயில், நீர்விழ்ச்சி, கடலலை, நிலைத்திணைகள், கால்நடைகள், அவற்றின் கழிவுகள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டுமென்பது காந்திய நிலைப்பாடு. அவற்றில் சிலவற்றை அண்மைக் காலங்களில் மேலை நாடுகள் மீண்டும் கையாளத் தொடங்கியுள்ளன. இதை நாமும் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் சிலர், குறிப்பாகப் பொறியாளர் இரா. கணேசன் போன்றோர் பழைய கலப்பையையே மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்கின்றனர். ஆனால் இந்த முயற்சி வெற்றி பெறப் போவதில்லை. ஏனென்றால் இது வரலாற்று உருளையைப் பின்னோக்கித் திருப்புவதாகும். உழவர்கள், குறிப்பாக புஞ்சைப் பகுதியிலுள்ளோர் உழுவுந்தின் வரவுக்குப் பின்னர் மரபுக் கலப்பையை விரும்புவதில்லை. அதைப் போல் ஆழ உழ முடியாதது மட்டுமல்ல அதிக உழைப்பும் தேவைப்படுகிறது. எனவே மாடுகளால் இழுக்கப்படும் புதிய வகைக் கலப்பைகளை உருவாக்க முடியுமா என்று முயன்று பார்க்கலாம். இரண்டு மாடுகளுக்குப் பகரம் நான்கு, ஆறு அல்லது எட்டு மாடுகளைப் பூட்டிய வண்டியின் அமைப்பினுள்ள இயந்திரத்தின் பின்புறம் கொழு, கலப்பை ஆகியவற்றைப் பொருத்தி உழுவுந்து போல் கையாண்டு பார்க்கலாம். இது போன்று மரபு முறைகளையும் இற்றை அறிவியல் – தொழில்நுட்பங்களையும் இணைக்கும் முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்களின் குமுகப் பயன்கள் குமுக, அரசியல், பொருளியல் நிலைமைகளுக்கேற்ப நன்மை தருவனவாகவும் தீமை புரிவனவாகவும் மாறுகின்றன. இன்று தனியுடைமையின் மட்டுமீறிய வளர்ச்சியால் அறிவியல் – தொழில்நுட்ப வளர்ச்சி உலகையே அல்லது குறைந்தது அவ்வறிவியல் தொழில் நுட்பத்தைக் கொண்டிருக்கும் குமுகங்களையாவது அழிக்கும் வகையில் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. தனியுடைமையை அழிக்கும் என்ற நம்பிக்கையில் உருவான சோவியத்தும் நட்பு, பகை பற்றிய தெளிவை இழந்துவிட்டன. சீனமும் கூட அதே விதிக்கு உள்ளாகிவிட்டன. இதன் விளைவாக பொருளுடைமையில் மட்டுமல்ல, அறிவியல் தொழில்நுட்ப அறிவுடைமையிலும் மக்களுக்கிடையில் பெரும் ஏற்றத்தாழ்வு உள்ளது. அதுவே பொருளுடைமை ஏற்றத்தாழ்வை இன்னும் கூர்மையாக்குகிறது. இவ்வாறு ஒரு பகுதியில் உருவாகி விட்ட அச்சந்தரும் வளர்ச்சி அந்தந்த மக்களாலோ அல்லது ஒன்றையொன்றோ மட்டுப்படுத்திக் கொள்ள அல்லது அழித்துக் கொள்ள வேண்டியிருக்கும். எனவே இந்த வளர்ச்சியோடு போட்டி போட வேண்டும் என்று முயலாமல் மக்களிடையில் அறிவியல் – தொழில்நுட்ப அறிவில் பெரும் ஏற்றத்தாழ்வுகள் உருவாகாதவாறு நமது அறிவியல் எளிமையாக இருக்க வேண்டும். நம் நாட்டின் மரபுத் தொழில்நுட்பத்தில் அத்தகைய ஒரு எளிமை இருந்தாலும் இறுக்கமான சாதியமைப்பினுள் அது சிக்கிக் கொண்டு தானும் சீரழிந்து குமுகத்தின் வளர்ச்சிக்கும் தடையாக நின்றுவிட்டது. இந்த நிலைமையை மாற்றியமைத்து சாதி வரம்புகளின் சிறையிலிருந்து நமது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை மீட்பது பண்பாட்டுப் பணியாளர்களின் மாபெரும் பொறுப்பாகும்.

மரபுத் தொழில்நுட்பத்தை மீட்பது என்ற பெயரில் வல்லரசுகள், போர்டு அறக்கட்டளை போன்ற பன்னாட்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகளின் உதவியுடன் நம் நாட்டில் செயற்படும் “தொண்டு நிறுவனங்கள்” எனப்படும் தன்னார்வக் குழுவினர் ஒவ்வொரு ஊரிலும் செயற்படுகிறார்கள். இங்கு மக்களிடையில் நிலவும் சடங்குகள், பொருளியல் நடவடிக்கைகள், என்று ஒவ்வோரணுவும் நோட்டமிடப்பட்டு திரட்டப்படுகிறது. நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு என்ற பெயரில் பல்கலைக்கழகங்களுக்கு நல்கைகள் அளித்தும் இவ்வொற்றறிதல் நடைபெறுகிறது. அத்துடன் வல்லரசு நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்கள் இங்குள்ள பல்கலைக்கழகங்களுக்கு நல்கைகள் வழங்கி தமக்கு வேண்டிய துறைகளில் இங்குள்ள மாணவர்களை ஆய்வு செய்ய ஊக்குகின்றன. அவ்வாறு பெறப்படும் ஆய்வேடுகளிலிருந்து தமக்கு வேண்டிய செய்திகளைத் திரட்டிக் கொள்கின்றன. அவ்வாறு ஆய்வில் ஈடுபடும் உள்ளூர் ஆய்வாளர்களில் நேர்மையும் உழைப்பும் உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து இங்குள்ள நிறுவனங்களில் நல்ல பதவிகளைக் கொடுத்தோ அல்லது தனி நிறுவனங்களை உருவாக்கியோ அவர்களின் திறமைகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த நடவடிக்கைகளில் இந்திய அரசு பன்னாட்டு முதலைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறது.

இவ்வாறு மரபுத் தொழில் நுட்பத் தரவுகளைத் திரட்டும் போது சடங்குகளின் வடிவில் கையாளப்படும் தொழில்நுட்பங்களை வளமைச் சடங்குகள் என்றும் மந்திரச் சடங்குகளென்றும் விளக்கம் கூறிப் போய்விடுகின்றனர். இதற்கான கோட்பாட்டு விளக்கங்களை சியார்சு தாம்சன் போன்ற “மார்க்சியர்கள்” வழங்குகின்றனர். கல்வியே சலுகையாய் நிலவும் நம் குமுகத்தில் உயர் கல்வி படித்த சிலருக்கு நம் நாட்டினர் இன்றும் குக்குல நிலையிலேயே இருக்கின்றனர் என்று கூறும் சியார்சு தாம்சன் போன்றோரின் அதுவும், அவர்கள் “மார்க்சியர்கள்” எனப்படும் போது, அதனால் தங்களுக்குக் கிடைக்கவிருக்கும் முற்போக்குப் பெருமையும் சேரும் போது இங்குள்ள படிப்பாளிகளுக்குப் பெரும் மயக்கம் ஏற்பட்டுவிடுகிறது.

இவ்வாறு சடங்குகள் என்ற பெயரில் அல்லது நாட்டார் வழக்காறு என்ற பெயரில் களவாடப்பட்டு நம்மிடமிருந்து பறி போய் நமக்குப் பரவலாக அறியப்பட்டது வேப்பமரப் பொருட்களின் பல்துறை மருத்துவப் பயன்கள். நாமறியாமல் எத்தனை போயினவோ? காட் ஒப்பந்தம் தான் விடை கூற வேண்டும்.

இங்குள்ள படித்தோர், குறிப்பாக அலோபதி மருத்துவர்கள் சித்த மருத்துவத்தை ஒரு போட்டித் தொழிலாக மதிப்பிட்டு இழிவு படுத்துகிறார்களேயன்றி அதிலுள்ள தொழில் நுணுக்கத்தையும் அறிவியல் கூறுகளையும் ஆய வேண்மென்று சிறிதும் நினைப்பதில்லை.

கலைக் கல்லூரிகளில் நிலைத்திணையியல் மாணவர்கள் மனதில் இங்குள்ள மூலிகைகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை யாரும் ஏற்படுத்த முயலவில்லை. ஆனால் தனியார்வலர்கள் சிலர் இம்முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அத்துடன் சித்த மருத்துவக் கல்லூரியிலும் பெயருக்கு மூலிகைத் திரட்டும் பயிற்சி வழங்கப்படுகிறது.

வர்மாணியம், வாயுப்பிடிப்பு எடுத்தல் என்று உள்ளூர் மருத்துவ முறைகள் எத்தனையோ உள்ளன. இவையெதுவும் முறையான ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இவற்றை ஆய்ந்தால் இன்றைய மேலை அறிவியலுக்கு எட்டாத பல செய்திகள் நமக்குக் கிடைக்கலாம்.

கோயில்களில் கடைப்பிடிக்கப்படும் ஆகம முறைகள் அனைத்தும் அறிவியல் – தொழில்நுட்பங்களின் பிழிவுகளே. அவற்றிலிருந்து பார்ப்பனிய வெள்ளாளக்கட்டு மேற்போர்வையை மட்டும் கிழித்தெறிந்து கட்டுமானம், மண்பொறித்துறை, கூவ(நீல நீர்) நூல், கழிவகற்றுதல், கட்டிடக்கலை, சிற்பக்கலை, சமையல், உணவு பதப்படுத்தல், சிற்பங்களையும் கட்டிடங்களையும் பராமரித்தல், மரச்சிற்பக்கலை, அவற்றைப் பராமரித்தல், ஒப்பனைக்கலை, ஒவியக்கலை, நடனக்கலை, இசைக்கலை என்று வாழ்வின் அனைத்துக் கூறுகளின் தொழில் நுட்பங்களும் அவற்றில் அடங்கியுள்ளன. இவற்றில் கலைகள் என்பவை உண்மையில் தொழில் நுட்பங்களே, ஏனெனில் இக்கலைகளில் ஈடுபடுவோர்க்குத் தம் தனித்தன்மையைக் காட்டும் எல்லை மிகமிகக் குறுகியது. ஆகமங்கள் கூறும் விதிகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. எனவே ஆகமமாக்கபட்ட இக்கலைகள் (Formalised arts) உண்மையில் திட்டவட்டமான விதிகளுக்குட்பட்ட தொழில்நுட்பங்களாக உறைந்து போய்விட்டன. அத்துடன் குறிப்பிட்ட சாதியினர் மட்டும் இப்பணிகளில் ஈடுபடுத்தப்படுவதாலும் இவை குடும்பத் தொழில்களாக நடைமுறையில் உள்ளன.

இவ்வாறு மேலை அறிவியலின் துணையோடு நம் மரபுத் தொழில் நுட்பங்களைத் தோண்டியெடுத்து வகைப்படுத்தி அவற்றிலிருந்து நம் பண்டை அறிவியலை இறுத்தெடுத்து அதனை அதே மேலை அறிவியலுக்கு எதிராக நிறுத்தி நம்மை வல்லரசியத்தின் கொடும்பிடியிலிருந்து விடுவிடுப்பது ஒன்றும் இயலாததல்ல.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

[1] Lokayatha, Devi Prasad Chattobathyaya பார்க்க.
“தியான”த்தின் மூலமே உலகின் மறையங்களனைத்தையும் புரிந்து கொள்ள முடியுமென்ற மெய்யியல் பள்ளிக்கு மயக்கவியம் Mysticism என்று பெயர். தெளிவில்லாமல் தனக்கும் புரியாமல் கேட்பவர்க்கும் புரியாமல் பேசுவதையும் செயற்படுவதையும் கூட இதே சொல்லால் குறிப்பதுண்டு. நாம் இங்கு குறிப்பிடுவது முதல் வகையே. சிலர் மயக்கவியத்தையும் அறிவியலையும் ஒன்றாகக் காண்கிறார்கள். மயக்கவியத்துக்கும் அறிவியலுக்கும் உயிரியக்கமான தொடர்புண்டாயினும் இரண்டும் இரு கோடியிலுள்ளவை; எனவே எதிரெதிரானவை. தனக்குக் கிடைத்த புலனங்களை வைத்து உள்மனம் தனக்குள் அலசிச் சில முடிவுகளை வெளிப்படுத்தும் போது அங்கு மயக்கவியம் செயற்படுகிறது; அவற்றைச் செய்முறைகளால் சரிபார்த்துத் தள்ளத்தக்கன தள்ளப்பட்டுக் கொள்ளத்தக்கன கொள்ளப்படும் போது அது அறிவியலாகிறது.

[2] இது 1980-களின் தொடக்கத்தில் எழுதப்பட்டது.

[3] இற்றை ← இன்றைய → நவீன

குமரிமைந்தன்
kumarimainthan@sify.com
htpp://kumarimainthan.blogspot.com

Series Navigation

குமரிமைந்தன்

குமரிமைந்தன்

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 7. மெய்யியல்

This entry is part [part not set] of 30 in the series 20060707_Issue

குமரிமைந்தன்


மேற்சாதியினர் வினை – விளைவுக் கோட்பாட்டில் ஊறித் திளைத்திருக்கின்றனர். இளமையில் ஆட வேண்டிய ஆட்டமெல்லாம் ஆடித் தீர்த்து விட்டு அவ்வாறு ஆட முடியாது முதுமை வந்தபோது “போகிற இடத்துக்குப் புண்ணியம்” தேடுவதற்காக எத்தனைப் பித்துக்குளித்தனங்கள் உண்டோ அத்தனையும் செய்கின்றனர். இவ்வாறு முன்பு ஆடிய இளமைத் திருவிளையாடல்களை மறு உலகத்திலும் ஆடலாம் என்று அவர்களுக்கொரு நைப்பாசை.

மாறாக நாட்டுப்புறத்துக் கீழ்ச்சாதி மக்களிடையில் விதி, கொடுப்பினை என்ற கோட்பாடுகள் நிலைத்து நிற்கின்றன. ஆண்டவன் தங்களுக்கு விதித்தது தான் கிடைக்கும், தம் கொடுப்பினை இவ்வளவுதான் என்று அமைந்து விடுகின்றனர் அவர்கள். மேலுலகம் பற்றி மேற்சாதியினர் போன்று அவ்வளவு ஆழமான நம்பிக்கை அவர்களுக்கு இல்லை.

மேற்சாதியினரின் மெய்யியல் வினை – விளைவுக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது என்று மேலே கூறினோம். ஆனால், ஒன்று அதன் எதிரானதாக மாறுதல் என்ற இயங்கியல் விதிக்கு இந்த மெய்யியல் வலிமையான ஒரு சான்றாக விளங்குகிறது. வினையும் விளைவும் என்ற கருத்து புத்த சமயக் கோட்பாட்டிலிருந்து தோன்றியது. ஆன்மா என்று ஒன்று இல்லை என்பதும் சமண, புத்த மதங்களின் அடிப்படை. எனவே அவற்றை ஆன்மா இல்லாத மதங்கள் (அனாத்ம மதங்கள்) என்று வேதியம் (வைதிகம்) கூறும். இந்த அடிப்படையில் தோன்றிய புத்த சமயத்தில் இடைக்காலத்தில் ஒரு முரண்பாடு தோன்றி அதைத் தீர்க்க முடியாமல் தடுமாறியது அம்மதம். உலகிலுள்ள எதுவும் நிலையானதல்ல (மாயையானது, மாயை மாயத்தக்கது) என்ற புத்த சமய முடிவு அனைத்தும் இடைவிடாது மாறுவதால் மாயை என்ற பொருளிலிருந்து அனைத்தும் பொய்த் தோற்றம் என்ற மாயக் கோட்பாட்டுக்கு இட்டுச் சென்றது. இந்த இரண்டுக்கும் இடையிலுள்ள இடைவெளி மிக மெல்லியதாகும். பொருட்களின் மாற்றத்தை எல்லை கடந்து விரிக்கும்போது மாறும் தோற்றத்தையே பொய்த் தோற்றத்துக்குச் சான்றாகக் காட்ட முடியும். இந்த நொடியில் இருக்கும் பொருள் அடுத்த நொடியில் வேறாகி விடுகிறது என்றவாறு மாற்றம் முழுமைப்படுத்தப்பட்டது. நொடிக்கு நொடி மாறும் மேகக் கூட்டத்துக்கும் பன்னூறாண்டுக் காலத்தில் தான் கண்ணுக்குப் புலப்படத்தக்க மாறுதலைக் காட்டும் மலைக்கும் வேறுபாடின்றி இந்த மாற்றக் கோட்பாடு விரிக்கப்பட்டது. பருப்பொருளிய[1] இயங்கியல் அகமை நுண்பொருளியமாக மாறியது. இது ஒரு நிலை. அதைப் போலவே முன் பிறவிகளில் செய்த வினையின் விளைவுகளைப் பின் பிறவிகளில் நுகர வேண்டுமென்ற புத்தமதக் கோட்பாடும், குமுகம் முழுவதையும் எடுத்துக்கொண்டால் முன்பிறவி பின்பிறவி என்பவை ஒன்றுக்கொன்று எல்லை காணப்பட முடியாமல் தொடர்ந்து வரும் தலைமுறைகளைக் குறிப்பதாக அமையும். அப்போது ஆன்மா என்ற ஒன்று இல்லாமலேயே இந்தக் கோட்பாட்டை விளக்க முடியும். ஆனால் தனி மனிதர்களைப் பொறுத்தவரை முன்பிறவி, பின்பிறவி என்பவற்றை ஆன்மா என்ற ஒன்று இல்லாமல் விளக்க முடியவில்லை. இவ்வாறு குமுக முழுமைக்காகக் கூறப்பட்ட கோட்பாட்டைத் தனி மனிதர்களை வைத்து விளக்க முற்பட்ட போது புத்தமதம் பெரும் நெருக்கடிக்குள்ளானது. அதன் விளைவாக அந்த மதம் ஆன்மிகச் சேற்றினுள் மீள முடியாமல் சிக்கிக் கொண்டது. ஆன்மாவை மறுத்த புத்தர் சாதகக் கதைகள் மூலம் எண்ணற்ற பிறப்புகள் எடுத்து உழலும் தண்டனைக்கு ஆளானார். இது இன்னொரு நிலை. நல்வினையால் நன்மையும் தீவினையால் தீமையும் விளையும் என்பதால் நல்லது எது தீயது எது என்று பகுத்தறியும் அறிவு பற்றிக் குறிப்பிடுவது புத்த அறிவுக் கோட்பாடு. புலன்கள், பொறிகள், பூதங்கள், மனம் ஆகியவற்றின் இடைவினைப்பட்டால் அறிவு தோன்றுகிறது என்று கூறகிறது புத்த அறிவுக் கோட்பாடு. மனிதனின் புலனறிவிலும் மனத்திலும் உள்ள பிழைகளைப் போக்கித் தூய உண்மையை அறிவதற்குக் காமம் (விருப்பு). வெகுளி (வெறுப்பு) மயக்கம் (இதுவோ அதுவோ என்ற ஐயமும் ஒன்றை மற்றொன்றாகக் காணும் திரிபும் இருப்பதை இல்லையென்றும் இல்லாததை இருப்பதென்றும் கருதும் மயக்கமும்) ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று கூறகிறது புத்தம். ஆனால் காமம் என்பது பெண்மேல் ஏற்பட்ட காமம் என்றும் (பெண்ணுக்கு ஆண்மேல் ஏற்படும் காமத்தை யாரும் குறிப்பிடுவதில்லை; ஏனென்றால் பெண் தனக்கெனக் காமம் கொள்ளத் தகுதியில்லாத அடிமை) வெகுளியைச் சினம் என்றும் (இது பொதுவான கூற்றாயிலும் கொடுமை கண்டு கொதித்தெழும் நேர்மையாளர்களை அடக்குவதற்காகவும் அவர்களைப் பழிப்பதற்காகவும் பயன்பட்டது, பயன்படுகிறது) மயக்கம் என்பதற்கு நிலையா வாழ்வை நிலையானது என்று ஏங்கும் மயக்கம் என்றும் பொருள் கூறப்பட்டது. இந்த காமம் மற்றும் நிலையாமை பற்றிய கருத்துப் பரப்பலை இடைவிடாது செய்யும் மதவாணர்; குறிப்பாக மடத்தலைவர்கள் (திரு.வி.க. மொழியில் கூறுவதாயின் மடத்தடிகள்) தான் காமத்தை அணு அணுவாகவும் இடைவிடாமலும் இறுதிவரையும் சுவைக்க வேண்டும் என்பதற்காகப் பொன்னீறு (தங்க பற்பம்) உண்பவர்கள் ; அதன் மூலம், அதன் மூலம் மட்டுமே வாழ்வின் நிலையாமையைத் தாங்கள் அறிந்து கொண்டதைக் காட்டிக் கொள்பவர்கள். புத்தம் அதன் தொடக்கத்தில் மார்க்சிய இயங்கியலின் அடிப்படை மூலக்கருத்துகளின் கருவைத் தன்னகத்தே கொண்டிருந்தது. நாளடைவில் அது சீரழிந்து ஆன்மா இல்லாமல் விளக்க முடியாத இழிந்த அகமை நுண்பொருளியமாக மாறியது. எனவே இதிலிருந்து பதி (இறைவன்) – பசு (ஆன்மா) – பாசம் (பற்று அல்லது கட்டு) என்ற சைவக் கோட்பாடு உருவாக அதிகத் தொலைவு செல்ல வேண்டியிருக்கவில்லை.

ஆன்மா எனும் ஆதன் உடலிருந்து வேறான தனி இருப்பைக் கொண்டது. எண்ணற்றவையாக ஆதன்கள் அண்டவெளியில் உலவி வருகின்றன. அவற்றை ஐம்பூங்களாகிய நிலம், நீர், தீ, காற்று, விண்வெளி ஆகியவை தம் மாயையில் கவர்ந்து உயிர்ப் பொருட்களாக்குகின்றன. ஐம்பூதங்களால் கட்டுண்ட ஆதன் வினைகளைப் புரிந்து கறைபடுகிறது. அக்கறையினால் அதைப் போக்க மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறது. இப்பிறப்புச் சுழலிலிருந்து விடுபட்டு ஐம்புலக் கட்டை அறுத்துக் கொண்டு பேராதனாகிய (பரமாத்மாவாகிய) இறைவனிடம் சென்று சேர்ந்து அதனுடன் இரண்டறக் கலப்பதே இப்போது ஆதனின் ஓரே குறிக்கோளாகி விடுகிறது. இதற்கு ஒரே வழி நன்மை, தீமை ஆகிய இரு வினைகளையும் செய்யாமல் வாளாவிருப்பது தான். நல்வினை செய்தால் அதன் நற்பயனை நுகர மீண்டும் பிறவி எடுக்க வேண்டிவரும்; எனவே நல்வினைகளில் கூட ஈடுபடக் கூடாது. ஆனால் இத்தகைய ஒரு பக்குவ நிலையை எய்துவதற்கு எத்தனைப் பிறவிகளின் முயற்சி தேவைப்படும் என்று கூற முடியாது. அதை ஒரே பிறவியில் எய்துவதற்குக் குறுக்கு வழி யோக முறையாகும் என்று கபிலன் வகுத்த சாங்கியத்திலிருந்து இந்த இடைமாற்றம் தொடங்கியது. யோகம், தவம் முதலியவற்றால் உடலை வருத்த வேண்டியதில்லை. நெருப்பு, சிவன், திருமால், காளி, முருகன், பிள்ளையார் போன்ற தெய்வங்களைச் சரணடைந்தாலே பாசமாகிய கட்டிலிருந்து பசுவாகிய ஆதன் விடுபட்டுப் பதியாகிய பேராதனுடன் (அதாவது முறையே மேலே கூறிய தெய்வங்களுடன்) இரண்டறக் கலந்து பேரின்பம் எய்த முடியும் என்று முறையே வேதியம், சிவனியம், மாலியம், சத்தியியம் (சாக்தம்), குமரம், கணபதியம் ஆகிய அறுமதங்கள் கூறின. இந்த அடிப்படையில் தான் மேற்சாதியினர் கோயில்களைச் சுற்றிச் சுற்றி வருகின்றனர். முன்பு கூறியது போல், வளமான வாழ்வின் பயனாக நுகர்ந்த, அவர்கள் மொழியில், “சிற்றின்பங்களை” முதுமை தடைசெய்து விட அத்தகைய தடையின்றி அதே சிற்றின்பங்களை பரம்பொருளாகிய இறைவனிடம் இரண்டறக் கலப்பதன் மூலம் நுகரும் “பேரின்பத்துக்கு” எங்கி இவர்கள் தங்கள் சொத்துக்கள் முழுமையும் கோயில்களுக்குக் கொடுத்துவிடக் கூடத் தயங்குவதில்லை.

இதைச் சொல்வதால் கோயிலுக்கு நிலம் எழுதிவைப்போர் அனைவரும் மறுமை (மறு வாழ்வாகிய பேரின்ப வாழ்வு) கருதியே அதனைச் செய்கின்றனர் என்று கருதி விடத் தேவையில்லை. குறிப்பாக மத நிறுவனங்களுக்கு நில உச்ச வரம்பிலிருந்து அளிக்கப்பட்டிருக்கும் விதிவிலக்கைப் பயன்படுத்துவதற்காகத் தம் நிலங்கள் கிடக்கும் பகுதிகளிலெல்லாம் கோயில்கள் எழுப்பி அதன் பெயரில் தன் சொத்துகளை எழுதித் தன்னையும் தன் வழியினரையும் தக்காராக்கித் தப்பித்துக் கொள்வதுடன் ஊர் மக்களிடையில் பத்திமான் என்று பெயரும் பெற்றுவிடுவோர் இன்று ஏராளம், ஏராளம்.

கீழ்ச் சாதியினரிடையில் மறுபிறவியைப் பற்றிய நம்பிக்கை ஆழமாகப் பதிந்திருந்தாலும் வினை – விளைவுக் கோட்பாட்டோடு அது அவ்வளவு இறுக்கமாகப் பிணைந்திருக்கவில்லை. அப்படிப் பிணைந்திருந்தாலும் இரு வினையறுப்பு அதாவது செயலற்றிருத்தல் என்னும் பித்துக்குளித்தனத்தின் எல்லைக்கு அது செல்லவில்லை. நன்மை செய்தால் மறு பிறவியில் நன்றாக வாழலாம் என்ற வகையில் அவர்களிடம் அது நிலவுகிறது. ஆனால் தம்மால் அறிய முடியாததாகிய விதியே தம்மையும் தமது வாழ்வையும் ஆட்டிப் படைத்து நன்மை தீமைகளுக்குக் காரணமாகிறது என்ற நம்பிக்கையே அவர்களிடம் பெரும் ஆட்சி புரிகிறது. தமக்கு விதித்த பங்கு தான் கிடைக்கும் என்பது அவர்களது மெய்யியல். இது குமுகக் கூட்டு விளைப்பு முறையில் முன்பு சீட்டுக் குலுக்கல் அல்லது தாயக்கட்டை (தாயம் = தாயின் சொத்திலுள்ள உரிமை. இச்சொல் தாயபாகம் என்று இந்தியா முழுவதும் வழங்கப்பட்டு இந்துச் சட்டத்திலும் ஏறியுள்ளது) முறையில் நிலப்பங்கு நடைபெற்ற மிகத் தொல்பழங்கால நடைமுறையிலிருந்து எழுந்த நம்பிக்கையாகும். பாக்கியம் என்ற சொல் கூட பகு → பாக்கு → பாக்கியம் என்று பங்கையே குறிக்கிறது. அத்துடன் பிரம்மன் ஒவ்வொருவரையும் படைக்கும் போது தன் முதுகுக்குப் பின்னால் வைத்துக் கொண்டு அவர்கள் தலையில் அவன் எழுதுவது போல் அவர்களது வாழ்வு அமையும்; தான் எழுதியது என்னவென்பதை அவனே அறியான்; அப்படி அறிந்தால் கூட அவனால் அதை மாற்றி எழுத முடியாது என்பது அவர்களிடையிலுள்ள ஒரு நம்பிக்கை. கட்டுக்கடங்கா குமுக விதிகளின் செயற்பாடும் அடக்கியாள முடியா இயற்கை ஆற்றல்களின் தாக்குதல்களும் அவர்களது முயற்சிகளைப் பயனற்றதாக்கிவிட்ட நிலையில் உருவான கையறு நம்பிக்கை இதுவாகும். ஆனால் இந்தக் கையறு நிலையிலும் அவர்கள் சோம்பியிருப்பதில்லை. இருக்கவும் முடியாது. மேற்சாதியினர் போல் அவர்கள் நாளும் கோளும் பார்த்துக் கொண்டிருப்பதுவுமில்லை; இருக்கவும் முடியாது. மழை பெய்தால் அடுத்த நாள் உழவு செய்தாக வேண்டும். கோயில் திருவிழாக்களை இதற்காகத் தள்ளிப் போடுவதற்கு அவர்கள் தயங்குவதில்லை. அவர்களது மெய்யியல் இவ்வாறு முற்றிலும் இவ்வுலக வாழ்வைப் பற்றியதே. குமுக விதிகளைப் பற்றிப் புரிந்து கொண்டு தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கும் நோய்நொடிகளிலிருந்து பாதுகாப்பளிக்கும் குமுகத்தை அமைத்துக் கொள்வதற்கும் இயற்கையின் சீற்றங்களால் எளிதில் தாக்குதலுக்குள்ளாகும் தனிமை வாழ்வினை[2] ஒழிப்பதற்கும் பயிற்சி பெறுந்தோறும் இருக்கின்ற மூடநம்பிக்கைகளிலிருந்து அவர்களை விடுவிக்க முடியும். சுரண்டலுக்கெதிரான போராட்டமே இந்த அறிவை, ஒற்றுமையை, பாதுகாப்பு முயற்சியை உருவாக்கும்.

மேற்சாதியினரின் மெய்யியலில் மறுபிறப்பு பற்றிய கருத்துகளை நாம் அறிவியல் வெளிச்சத்தில் அலசிப் பார்க்கலாம். அறிவியலாரில் பொரும்பாலோர் மறுபிறப்பென்பது மனிதனுக்கு இல்லை என்றே கூறுகின்றனர். ஆனால் அதுவல்ல உண்மை. மனிதனுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் மறுபிறப்பு உண்டு. ஆனால் இந்த மறுபிறப்பு ஆதனோடு (ஆன்மாவோடு) தொடர்புடையதல்ல, முற்றிலும் உடலுடனும் உயிருடனும் தொடர்புடையது. உலகிலுள்ள உயிர் ஒவ்வொன்றுக்கும் பிறப்பு, வாழ்வு, இறப்பு என்பவை உண்டு; அவை பிறந்து இறப்பதற்கு முன் தம் வாழ்நாளில் தமக்குத் தொடர்ச்சியாகத் தம் போன்ற ஒன்றோ பலவோ புதிய உயிர்களை உருவாக்குகின்றன. முந்திய உயிர் அழிந்து போனாலும் அது படைத்த பிறங்கடைகளாகிய (வாரிசுகளாகிய) உயிர்கள் தொடர்ந்து வாழ்கின்றன. புல் பூண்டுகள் சில வகை மீன்கள் போன்ற கீழ்நிலை உயிர்கள் தம் பிறங்கடைகளாகிய விதைகள், முட்டைகள் ஆகியவற்றை உருவாக்கிய உடனேயே கூட இறந்து விடுகின்றன. ஆனால் அவை ஒரே நேரத்தில் எண்ணற்ற பிறங்கடைகளை உருவாக்கி விடுகின்றன. அதே நேரத்தில் மேல்நிலை உயிர்கள் தொடர்ந்து தம் வித்துக்களை உருவாக்கி நீண்ட காலம் வாழ்கின்றன. இவ்வாறு மறுபிறவி எடுக்கும் போதே இறப்பனவும் மறுபிறவி எடுத்தபின் இறப்பனவுமாகத் தான் உயிர்கள் உள்ளனவேயன்றி நம் மதவாணர்கள் குறிப்பிடுவது போன்று இறந்த பின் மறுபிறவி எடுப்பதில்லை. காடுகளில் வளரும் புல்பூண்டுகள் பூத்துக் காய்த்த பின் கோடை காலத்தில் செத்தழிந்து விடுகின்றன. அடுத்த மழையில் விதைகள் முளைக்கின்றன. குளங்குட்டைகளில் வாழும் மீன்கள் கோடையில் குளத்தில் நீர் வற்றும் முன் முட்டையிட்டு விட்டு நீர் வற்றும்போது செத்து மடிந்து விடுகின்றன. மழை பெய்து குளத்தில் நீர் பெருகியதும் அம்முட்டைகள் பொரித்து மீண்டும் மீன்களாகின்றன. இத்தகைய சிற்றுயிர்களுக்கே,

உறங்குவது போலும் சாக்காடு (உ)றங்கி
விழிப்பது போலும் பிறப்பு

என்று திருவள்ளுவர் கூறுவது பொருந்தும். ஆனால் மனிதனுக்கும் பிற உயர் உயிர்களுக்கும் இது பொருந்தாது. ஒரு வகையில் மனிதன் இறப்பதேயில்லை. அவனது ஒரு பகுதி இளமை பெற்று வளர்ந்து வரும் போது இன்னொரு பகுதி முதுமை பெற்று மறைகிறது. சாவும் பிறப்பும் ஒன்றோடொன்று பிரித்துப் பார்க்க முடியாதவாறு பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. ஓர் ஆணின் விந்தும் பெண்ணின் முட்டையுமாகத் தனித்தனியாக இருந்து ஒன்று கூடி மனித வாழ்வின் தொடர்ச்சி நிகழ்கிறது. எனவே இந்த வகை மறுபிறப்பென்பது ஒரு நாளும் தனிமனிதனின் மறுபிறப்பாக இருக்க முடியாது. குறைந்தது ஓர் ஆணுணும் ஒரு பெண்ணுமாக இணைந்து தான் மறுபிறப்பெடுக்க முடியும்.

ஆணின் விந்திலும் பெண்ணின் முட்டையிலும் உலகில் உயிர் தோன்றிய நாள் தொட்டு தொடர்ந்து செயற்பட்ட திரிவாக்க (பரிணாம) வளர்ச்சியின் போது நடைபெற்ற நிகழ்ச்சிகளும் தாக்கங்களும் பதியப்பட்டு இரண்டு பகுதிகளிலிருந்தும் புதிதான பண்புகளோடு ஒரு குழந்தை பிறக்கிறது. அக்குழந்தையின் உள்ளமைப்பு தன் பெற்றோரிடம் வெளிப்பாடாகாத பல முந்தையப் பிறப்புகளின் பட்டறிவுகளைச் கொண்டுள்ளது. இந்தப் பட்டறிவுகளோடு அக்குழந்தை வாழும் இயற்கைச் சூழல், குமுகச் சூழல்கள் ஆகியவை இடைவினைப்பட்டு ஒரு புதிய ஆட்பண்பு (Personality) உருவாகிறது.

இத்தகைய பிறப்பை மனிதர்கள் அறுக்க வேண்டுமாயின் அவர்கள் எதிர் பாலர் எவரையும் புணரக்கூடாது அல்லது அவர்கள் முழுமையான கருத்தடை உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும் அல்லது அவர்கள் தன்பால் புணர்ச்சியைக் (Homosexual and lesbianism) கடைப்பிடிக்க வேண்டும் அல்லது காயடிக்கப்பட வேண்டும் அல்லது பிறவியிலே மலடாயிருக்க வேண்டும். (காயடித்தல் என்பதற்கு நலம்பிடித்தல் என்ற நல்ல ஒரு சொல்வழக்கு குமரி மாவட்டத்தில் உள்ளது). இதனால் தான் போலும் வீடுபேறென்னும் பிறப்பறுப்புக்குத் துறவைச் சிறந்த வழியாக நமது சமயங்கள் வற்புறுத்துகின்றன. ஆனால் துறவு பூண்டவர்களாகக் கூறப்படும் நம் மடத்தடிகள் சட்டப்படி “பிறவி” எடுப்பதில்லையே தவிர பெரும்பாலோர் பல “பிறவி”கள் எடுக்கின்றனர். தமிழகத்திலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் செல்வாக்குடன் திகழும் ஒரு மடத்தின் மடத்தடிகள் பருவமடையுமுன்பே துறவியாக்கப்பட்டு நலம் பிடிக்கப்படுவதாகவும் கேள்வி. அது உண்மையானால் அம்மடத்தடிகளால் உண்மையிலேயே “பிறப்பறுக்க முடியும். பெண்களோடு சில்லரை விளையாட்டுகளை விளையாடினாலும் அவர்களால் “பிறப்பெடுக்க முடியாது. மொத்தத்தில் “பிறப்பறுப்பு”க் கோட்பாடென்பது ஒரு மலட்டுக் கோட்பாடே.

நன்மை தீமை எனும் இருவினையையும் செய்யாமலிருப்பது பிறப்பறுக்க வழி என்பது நம் நாட்டுக்கே உரிய ஒரு மெய்யியலாகும். பிற நாடுகளில் உழைக்காத ஒட்டுண்ணிகள் வாழ்ந்தாலும் நம் நாட்டில் போல் ஒட்டுண்ணித்தனம் வேறு எங்கும் முழுமை பெறவில்லை. குறிப்பாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நின்று நிலைத்துவிட்ட பார்ப்பனர் என்ற ஒட்டுண்ணிச் சாதியின் தவிர்க்கமுடியாத விளைவே இந்த இருவினை மறுப்புக் கோட்பாடு. மக்களிலிருந்து அயற்பட்டு மக்களுக்கெதிராக மக்களை ஒடுக்கும் அரசுக்கு மேலே நிற்கும் இந்த ஒட்டுண்ணி உருவாக்கம் மனித வரலாற்றிலே ஒப்பற்றது (ஆங்கிலத்தில் கூறுவதாயின் Unique ஆனது). எனவே இந்த ஒட்டுண்ணிகளால் உருவாக்கப்பட்ட இருவினை மறுப்புக் கோட்பாடும் உலகில் ஒப்பற்றது.

பெருங்கோயில்களை நிறுவி அவற்றிற்கு முற்றூட்டாக நிலங்களை அளித்து சமயப் பற்றைக் காட்டி மக்களின் ஆதரவைத் திரட்டத் தொடங்கப்பட்ட செயல்முறை பின்னர் ஆளுவோர் குடிமக்களின் அரசியல் பொருளியல் உரிமைகளைக் கைப்பற்றும் நோக்கத்துடன் நிலங்களைக் கவர்வதற்காகவே கோயில்களைக் கட்டி அவற்றிற்கு முழுப் பொருளியல், குமுகியல், படையியல், அரசியல் அதிகாரங்களை அளித்துப் பார்ப்பனரைத் தலைமை தாங்க வைப்பதாக உருமாறியது. கோயில் நிலங்களில் குத்தகையாளராகக் குருதி சிந்தி விளைவித்த மக்களிடமிருந்து வாரமாகப் பெறப்பட்ட தவசங்களையும் தொழில் புரிவோரிடமிருந்து வரியாகப் பெறப்பட்ட செல்வத்தையும் எந்த உழைப்புமின்றி உண்டு செழித்திருந்த ஒட்டுண்ணிப் பூசாரியர் மற்றும் மடத்தடிகளின் இந்த ஒட்டுண்ணி வாழ்க்கையை மேம்பட்டதாகக் காட்டுவதற்கே இந்த வினையறுப்புக் கோட்பாடு பயன்பட்டது. இன்றும் கூட இந்தக் கோட்பாட்டை நேரடியாகவும் மறைமுகமாகவும் உயர்த்திப் பேசும் “கற்றறிந்த” பெருமக்கள் உள்ளனர். பெரும்பாலான தாளிகைகள் இப்பணியைச் செய்கின்றன. வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் போன்ற பொதுத் தொடர்புக் கருவிகளும் உள்ளன. ஆனால் இவற்றுக்கு எதிராகச் செயற்படுவோர் யாரும் இல்லை. எளிய மக்களோ இப் “பெரியோர்” போன்று “வினையறுக்க” முடியாத தம் தலைவிதியை நொந்தும் அப்படி “வினையறுத்து” வாழும் பேறு பெற்ற “பெரியோரை” வியந்தும் மயங்கி நிற்கிறார்கள்.

இந்த வினையறுப்புக் கோட்பாட்டின் ஒரு செயல் வடிவம் “குண்டலினி”க் கோட்பாடு. புலித்தோல் அல்லது மான்தோலின் மீது (புலியை அல்லது மானைக் கொன்றால் தானே தோல் கிடைக்கும்? அதைக் கொல்பவர் யார்? அவருக்கு வினையறுப்புக் கோட்பாடு பொருந்தாதா?) சப்பணமிட்டு அமர்ந்து மூச்சுக் காற்றை சுழியறிந்து – வலது, இடது அல்லது இரண்டு மூக்குத் துளைகள் மூலமாக மூச்சு விடுவது – செலுத்தி ஊழ்கத்தில் (தியானத்தில்) இருந்தால் மூலத்திலிருந்து மூலாதாரம் என்ற சூடு கிளம்பி வயிறு, தொப்புள், நெஞ்சகம், தொண்டை வழியாக உச்சந்தலை ஏறி அண்ட வெளியில் கலக்குமாம். அதன் மூலம் இயற்கையின் மறையங்களை எல்லாம் அமர்ந்த நிலையிலேயே அறிந்து கொள்ளலாமாம். இதே விளக்கம் நமசிவாய என்ற ஐந்தெழுத்துக்கும் ஓம் எனும் மந்திர ஒலிக்கும் தோற்றுவாயாகவும் தரப்படுகிறது.

சங்கதத்தில் (சமற்கிருதத்தில்) தலையிலிருந்து வெளிப்படும் ஆற்றலுக்கு ஆக்ஞை (ஆணை என்ற தமிழ்ச் சொல்லின் சங்கத வடிவம்) என்ற சொல் கையாளப்படுகிறது. இச்சொல்லே இந்நிகழ்முறையில் அனைத்து நுணுக்கங்களையும் விளக்கி விடுகிறது. தலையை இருப்பிடமாகக் கொண்ட மூளையிலிருந்து ஆணை பிறந்து செயலுக்குத் தேவையான ஆற்றலை வழங்கும் வகையில் குருதி ஓட்டத்தை மிகுக்க நெஞ்சகத்தை அடைந்து அங்கிருந்து பிறக்கும் ஆற்றல் நுரையீரலை இயக்கி வளியை வெளிப்படுத்திக் கண்டம் குரல்வளை, நாக்கு, உதடு, அண்ணம், மூக்கு ஆகியவற்றின் இயக்கங்களால் ஒலி நாம் விரும்பிய வடிவம் பெற்று வெளிப்படுகிறது. ஒலிக்குத் தேவையான வளியை நெஞ்சகத்திலிருந்து வெளியேற்றும் முயற்சியில் வயிறாகிய உந்திப் பகுதியும் மூலமாகிய ஆசனவாயும் கூடச் சுருங்கி உதவுகின்றன.

ஓம் என்றொலித்தாலும் நாம் என்றொலித்தாலும் நமசிவாய என்றாலும் நாயே என்றாலும் நிகழ்முறை இதுதான்.

உந்தி முதலா முந்து வளி தோன்றித்
தலையிலும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண்முறை நிலையான்
உறுப்புற் றமைய நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் சொல்லுங் காலைப்
பிறப்பின் ஆக்கம் வேறுவே றியல
திறம்படத் தெரியுங் காட்சி யான (தொல். எழுத்து. பிறப்பியல்)

இந்தத் தொல்காப்பிய நூற்பாவில் பங்கேற்பதாகச் சொல்லும் உறுப்புகள் தாம் மேலே நாம் விளக்கியவை.

வேதமே முதற்பொருள், அதனைப் பிழையின்றி ஒலிப்பதே வழிபாடு என்பது வேதியக் கோட்பாடு. (எழுதாக் கிளவியான வேதங்களை பிழையின்றி ஒலிப்பது இன்றியமையாததாகும்.) ஒலி வடிவானவனே சிவன் என்பது சிவனியம். ஆக இரண்டும் ஒரே கோட்பாட்டின் இரு வடிவங்கள் தாம். ஆணையாகிய ஒலியை எழுப்புபவனான ஒட்டுண்ணியே முதன்மையானவன் என்பதே இதன் வகுப்புப் பொருளாகும்.

இவ்வாறு மூக்கின் நுனியை அல்லது, லெனின் இந்தியத் துறவிகளைப் பற்றி கிண்டல் செய்வது போல், தொப்புள் குழியைப் பார்த்துத் ‘தனக்குள்’ அடங்கியிருக்கும் சோம்பேறிப் பொய்யர்களே மக்களில் உயர்ந்தவர்கள், பிறரனைவரும் தாழ்ந்தவர், இழி பிறவியினர், மீள முடியாமல் மீள மீளப் பிறந்து அல்லலுற வேண்டியவர் எனப் பெருஞ்சுமையை எளிய உழைக்கும் மக்களின் மனதில் ஏற்றி வைத்திருக்கும் இவ்வொட்டுண்ணிகளையும் அவர்களின் இந்த ஒட்டுண்ணிக் கோட்பாட்டையும் ஒழிக்கும் நாள் தான் நம் மக்களின் உண்மையான விடுலை நாள்.

இனி, ஓம் என்ற சொல்லுக்கு வருவோம். ஓம் என்பது ஆம் என்று பொருள்படும் ஒரு தமிழ்ச் சொல். ஈழத்து வழக்கில் ஆம் என்பது ஓம் என்றும் ஆமாம் என்பது ஓம் ஓம் என்றும் வழங்கப்படுவதை நாம் காணலாம். குமரி மாவட்டத்து மீனவர்கள் ஆமா என்பதை ஓமா என்றே கூறுகின்றனர். மலையாளத்திலும் குமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு வட்டங்களிலும் ஆம், சரி, அப்படியா என்ற பொருளில் ஓ என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர்.

இந்த ஓம் என்ற சொல்தான் “இந்து” சமயத்தின் அடிப்படை ஒலியாக, குறி ஒலியாகக் கைக்கொள்ளப்பட்டுள்ளது.

கிறித்துவத்தில் வழக்கிலிருக்கும் ஆமென் என்ற சொல்லுக்கு “அப்படியே ஆகட்டும்” என்பது பொருள். இது சரி என்ற சொற்பொருளுக்கு இணையானது. முகம்மதியத்தின் “ஆமின்” என்ற சொல்லும் இப்பொருளுடையதே.

இவ்வாறு தமிழிலுள்ள ஆம் என்ற சொல் நாட்டெல்லைகளைத் தாண்டி கிறித்துவத்துக்கும் முகம்மதியத்துக்கும் வழிபாட்டுக் குறிச் சொற்களாக, அடிப்படையான வழிபாட்டுச் சொற்களாக வடிவம் பெற்றுள்ளது. அதே போன்றே ஓம் என்ற அதே சொல்லின் இன்னொரு வடிவமும் “இந்து” சமயத்தின் அடிப்படைச் சொல்லாக மூலச் சொல்லாக இடம் பெற்றிருக்கிறது.

இந்த “ஓம்” என்ற ஒலியைப் பற்றி எழுதப்பட்டிருக்கும் ஆக்கங்களைச் சேர்த்தால் அவை இமயமலையளவு இருக்கும். நம் மெய்யியல் சோம்பேறிகள் வளர்த்துவிட்ட மாயைகள் எத்தனையோ அரும் ஆய்வாளர்களின் சிந்தனையைக் குழப்பி அவர்களது – அருமருந்தன்ன நேரத்தையும் உழைப்பையும் வீணடித்துள்ளமைக்கு இந்த “ஓம்” என்ற சான்றே போதும்.

வினையற்றிருப்பதே மேன்மை என்று மூளைக்குள் அடித்துச் செலுத்தப்பட்டுள்ள இந்த நச்சுக் கருத்து நம் மக்களின் வளர்ச்சியின்மைக்கு மூல காரணமாக நெடுங்காலம் இருந்து வருகிறது. இதைச் சுட்டிக் காட்டி நாட்டின் உள்ளும் புறமும் உள்ள அறிஞர்கள் இடித்துரைத்துள்ளார்கள். ஆனால் இந்த இடித்துரைகள் மக்கள் மன்றத்தில் முறைப்படி வைக்கப்படவில்லை. ஆனால் முழுமை பெற்றுவிட்ட ஒட்டுண்ணிகளின் வினைமறுப்புக் கோட்பாடு புதுப்பொலிவுடன் பரப்பப்படுவது பொதுத் தொடர்புக் கருவிகளின் வாயிலாக முழு மூச்சுடன் நடைபெறுகிறது.

முழுமை பெற்று விட்ட இந்த ஒட்டுண்ணிகளின் வினைமறுப்புக் கோட்பாட்டை மக்கள் மன்றத்தில் வைத்து முறியடிக்க வேண்டிய பொறுப்பு மக்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபடுபவர்களின் முன்பு உள்ளது.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்

[1] பருப்பொருள், நுண்பொருள் என்பவை முறையே ஆங்கிலத்தில் matter, idea என்பவற்றுக்கு இணையாகத் தமிழில் வழங்கும் மரபுச் சொற்கள். எனவே Materialism என்பதைப் பருப்பொருளியம் எனவும் Idealism என்பதை நுண் பொருளியம் எனவும் குறிப்பது பொருத்தமுடையது.

[2] இன்று செல்வமுடையோர் மேட்டுப்பாங்கான இடத்தில் வீடுகள் கட்டிக்கொள்ள. ஏதுமற்ற மக்களோ ஆற்றுப் படுகைகள். குளக்கரைகள் என்று பள்ளங்களில் குடியிருக்கின்றனர். எனவே சிறு மழை பெய்தாலும் அவர்கள் வீடுகள் அடித்து செல்லப்படுகின்றன. கோடை வெய்யிலில் அட்டைகளாலும் செத்தைகளாலும் வேயப்பட்ட குடிசைகள் எளிதாகத் தீப்பிடித்துக் கொள்கின்றன. அரசுக்குத் திடீரென்று வெறிபிடித்தால் அவர்களது வீடுகள் பிய்த்தெறியப்படுகின்றன.

குமரிமைந்தன்
kumarimainthan@sify.com
htpp://kumarimainthan.blogspot.com

Series Navigation

குமரிமைந்தன்

குமரிமைந்தன்

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 6. சட்டங்களும் அரசியலும்

This entry is part [part not set] of 39 in the series 20060630_Issue

குமரிமைந்தன்


தமிழகத்தில் எழுதப்பட்ட சட்டங்களென்று எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. மனுச் சட்டத்தைக் கொண்டு தமிழகத்தில் ஆட்சி செய்ய முயற்சிகள் நடந்துள்ளன. ஆனால் அது மக்களிடமிருந்து இடைவிடாத எதிர்ப்புகளைக் கிளப்பிக் கொண்டே இருந்தது; இடங்கை வலங்கைப் போராக அது வெடித்துக் கிட்டத்தட்ட எண்ணூறு ஆண்டுக்காலம் தமிழகத்தைக் கலக்கியது. ஆங்கிலேயர் இங்கே நிலை கொண்ட பின்னரே அந்தப் போராட்டம் அடக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட கீழ்ச்சாதி மக்கள் அடங்கிக் கிடக்க வேண்டியதாயிற்று.

எழுதப்படாத சட்டங்களாகச் சாதி மரபுகள் இன்றும் நிலவுகின்றன. இத்தகைய மரபுகளில் மேற்சாதியினருக்கும் கீழ்ச்சாதியினருக்கும் ஒரு வேறுபாட்டைக் காணலாம். பிற சாதிகளுடன் உள்ள உறவுகள் குறித்து காணப்படும் அளவுக்கு சாதியினுள் நடைபெறும் அன்றாட வாழ்வில் மேற்சாதியினரிடையில் ஒரு குமுகக் கட்டுப்பாடு இல்லை என்பது இன்றைய நிலை. மாறாகக் கீழ்ச்சாதியினரிடையில் அன்றாட வாழ்வில் ஒவ்வொரு நடவடிக்கையையும் குமுகத்தால் கட்டுப்படுத்த முடியும்.

முன்பு மேற்சாதியினர் வாழ்ந்த பகுதிகளில் அமைந்திருந்த பெருங்கோயில்களில் அவர்களது அரசியல் நடவடிக்கைகள் நிலைகொண்டிருந்தன. இன்று இந்த அமைப்பு தகர்ந்துவிட்டது. இன்று தேர்தல் அரசியல் தவிர அவர்களுக்கு வேறொன்றும் இல்லை என்றே கூற வேண்டும். ஆனால் நாட்டுப் புறங்களிலுள்ள கீழ்ச்சாதியினரிடம் அவர்களுக்குரிய அம்மன் கோயில்கள் அல்லது வேறு சில கோயில்கள் அவர்களது அரசியல் அரங்கங்களாகச் செயற்படுகின்றன. இந்த ஆட்சிமுறை இன்றும் அவர்களிடையில் செல்வாக்குச் செலுத்துகிறது.

ஒவ்வொரு சிற்றூருக்கும் அல்லது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் வாழும் ஒவ்வொரு சாதிக்கும் ஓர் ஊர்க் கோயில் உண்டு. அந்த ஊர்க் கோயிலில் அதைச் சேர்ந்த மக்கள் மாதத்துக்கொரு முறை கூடுவர். கூடி ஊரின் நடைமுறைகள் பற்றியும் அன்றாடச் சிக்கல்கள் பற்றியும் கலந்துரையாடுவர். வழக்குகளும் இவ்வூர்க் கூட்டங்களில் மூதலித்துத் தீர்ப்பளித்துத் தண்டனைகள் உண்டாயின் நிறைவேற்றப்படும். இவ்வூர் மன்றத்தின் தலைவராக அம்பலக்காரர், மூப்பனார், சேர்வை, நாட்டாண்மை போன்ற பட்டங்களைக் கொண்ட ஊர்த் தலைவர்கள் செயற்படுவர். நிலப் பகுதிகள் அல்லது சாதிகளுக்கு ஏற்றாற்போல் இப்பட்டங்கள் மாறுகின்றன. திருமணங்களிலும் பூப்பெய்தல், சாவு போன்ற நிகழ்ச்சிகளிலும் வீட்டார் ஊருக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்கள் இம்மன்றத்தால் தண்டப்படுகின்றன. கோயில் திருவிழா போன்றவற்றை நடத்துவதற்கு வரி விதிக்கப்படுகிறது. வரி கட்டுவோர் ஒவ்வொருவரும் ஒரு வரி எனக் கணக்கிடப்படுகின்றனர். வரிகளின் எண்ணிக்கை, பொதுவாக அகவை அடைந்த ஆண்களின் எண்ணிக்கையாக அமைகிறது. மணமாகாதவன், மணமானவன் என்ற அடிப்படையில் சில இடங்களிலும் வேலைக் கூலி அடிப்படையில் அரை ஆள் முழு ஆள் என்று சில இடங்களிலும் வரி விதிக்கப்படுகிறது. சிலவிடங்களில் குடும்பத் தலைவருக்கொன்றாகத் தலைக்கட்டு வரி தண்டப்படுகிறது.

இவ்வூர்மன்றங்களில் பணப்பண்டுகளும் நடத்தப்படுவதுண்டு. அதன் மூலம் ஏலச்சீட்டுகள் நடத்துவதும் வட்டிக்குக் கடன் கொடுப்பதும் உண்டு. வரி விதிப்புக்குத் தகுதியான ஒவ்வொருவரும் ஊர்க்கூட்டங்களில் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறு கலந்து கொள்ளத் தவறுவோர்க்குப் பிழை (தண்டம்) போடப்படும். குடி மராமத்து எனப்படும் பொதுப்பணிகளில் மக்களைத் திரட்டி குளக் கரைகளைச் சீர்படுத்தல், வாய்க்கால்களைத் தூர் எடுத்தல் சாலைகளைப் பழுது பார்த்தல் முதலிய வேலைகளையும் இவ்வூர் மன்றங்கள் செய்கின்றன.

ஆனால் இந்த ஊராட்சி முறை இன்று கோயில் திருவிழாக்கள், திருமணம் போன்ற வாழ்வுச் சடங்குகள் என்ற வகையில் தன் ஆட்சியைச் சுருக்கிக் கொண்டுவிட்டது. சில வழக்கு உசாவல் நடவடிக்கைகளை இன்றும் இந்த ஊர் மன்றங்கள் கையாளுகின்றன.

கீழ்ச்சாதிகளின் சட்டங்கள் மற்றும் அரசியல் செயற்பாட்டில் மேற்சாதியினரோ அல்லது கீழ்ச்சாதியினரில் தோன்றிய பார்ப்பனியர்களோ (அதாவது செல்வப் பெருக்கால் பார்ப்பனியம் எனும் வெள்ளாளக்கட்டு மேற்கொண்டவர்களோ) இன்று தலைமை தாங்கி அவற்றை உருக்குலைத்து வைத்துள்ளனர். தங்கள் கைக்கூலிகள் மற்றும் அடியாட்களின் துணை கொண்டு பெரும்பான்மை மக்களை அடக்கி ஒடுக்கி வைக்க முயலுகின்றனர். இதுவே இவ்வாட்சி முறை சுருங்கி விட்டதற்குக் காரணம்.

இந்த வழக்கு உசாவல்களில் பெரும் கொடுமைகள் நிகழ்ந்தன. ஊரில் வல்லாண்மை பெற்றோர் தம் எதிரிகளையும் தம் அதிகாரத்துக்கு எதிராகக் குரல் எழுப்பியவர்களையும் தண்டிப்பதற்கு இந்த வழக்கு உசாவல்களைப் பயன்படுத்தினர். தங்களுக்கு வேண்டாதவர்கள் மீது கைக்கூலிகளை வைத்துப் பொய்க்குற்றம் சுமத்தி குற்றச்சாட்டு பொய் என்று நிறுவுவதற்கு கொதிக்கும் எண்ணையில் கையைவிட்டு அல்லது நெருப்பைக் கையில் எடுத்து அதனால் புண் ஏற்படாமல் இருக்க வேண்டுமென்று கூறப்பட்டது. அதுபோல் குற்றஞ்சாட்டப்பட்டவன் தனக்கு வேண்டியவனாக இருந்தால் வழக்கைத் திருப்பிக் குற்றம் சுமத்தியவனையே குற்றவாளியாக்கித் தண்டம் கட்ட வைப்பது அல்லது குற்றமற்ற ஒருவன் மீது வேண்டுமென்றே குற்றம் சுமத்தி அவனைத் தண்டம் கட்ட வைக்கும் “கட்டைப் பஞ்சாய. முறையும் இவ்வூர்ப் பஞ்சாயங்களில் நடைபெற்றன. இந்தக் காரணங்களால் தான் மக்கள் நய(நீதி)மன்றங்களை நாடவேண்டியதாயிற்று. இன்றும் சட்டம் எட்டமுடியாத மூலை முடுக்குகள் இருக்கின்றன. அங்கெல்லாம் இத்தகைய கொடும் பஞ்சாயங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

உருக்குலைந்து நிற்கும் இந்த ஊராட்சிமுறை இன்றைய வாக்குச் சீட்டு ஊராட்சிகளை விடத் தரத்தில் பன்மடங்கு உயர்ந்தது. இங்கு அகவையடைந்த ஒவ்வொரு ஆண்மகனும் கலந்து கொள்கிறான். அவனுக்குத் தெரியும்படியாக அனைத்து ஊராட்சி அலுவல்களும் நடைபெறுகின்றன. மாறாக, வாக்குச்சீட்டு ஊராட்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஊராட்சியின் அலுவல்களில் பங்கு கொள்கின்றனர். நடைமுறையில் அதுகூட முறைப்படி நடைபெறுவதில்லை. ஊராட்சி மன்றத் தலைவரும் எழுத்தரும் அல்லது செயற்பாட்டு (நிர்வாக) அதிகாரியும் சேர்ந்து உருவாக்கும் தீர்மானங்கள் பதிவேட்டில் எழுதப்பட்டு உறுப்பினர்களின் ஊடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒப்பம் பெறப்படுகின்றன. கணக்கில் காட்டப்படும் செலவுகளில் அவரவர்களுக்கு உரிய “பங்கு” சென்று சேர்ந்து விடுகிறது. ஒரு சாலையோ வாய்க்காலோ குளமோ சீர் செய்யப்பட்டதாகத் தீர்மானம் எழுதப்பட்டு கணக்கில் செலவு காட்டப்பட்டு பணம் பங்கு போடப்பட்டால் அது அவ்வூர் மக்கள் எவருக்கும் தெரியாது; அப்படித் தெரிவிக்க வேண்டிய கடமை சட்டப்படி ஊராட்சி மன்றத்தைச் சேர்ந்த யாருக்கும் கிடையாது; அவ்வாறு காட்ட வேண்டுமென்று கேட்கும் உரிமை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் தவிர்த்த எந்தக் குடிமகனுக்கும் கிடையாது. இவ்வாறு மக்களைத் தேர்தலின் பெயரால் ஏமாற்றி அவர்களை அப்பால் துரத்திவிட்டு நடத்தும் கொள்ளையே அரசு நடத்தும் வாக்குச்சீட்டுத் தேர்தல் முறையாகும். இதனை மாற்றிப் பழைய முறையில் ஆனால் வழிவழியாக வரும் நாட்டாண்மைக்குப் பகரம் (பதிலாக) தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்களைக் கொண்டு மக்கள் நேரடிப் பங்கேற்று நடத்தும் ஊராட்சி அமைப்பை உருவாக்குவது புதிய அரசியல் முறையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு சட்டங்களையும் அரசியல் அமைப்பையும் மட்டும் தவிர்த்தும் நேரடியாகவும் மாற்றும் முயற்சிகள் வெற்றி பெற மாட்டா. இது பட்டறிவு நமக்குக் காட்டும் படிப்பினை. இம்மாற்றங்களைச் செய்ய முற்படுவோர் பெரும்பான்மை மக்களின் அசைக்க முடியா நம்பிக்கையைப் பெற்றோராக இருக்க வேண்டும். பல திசைகளிலிருந்தும் அன்றாடம் நாட்டுப்புறக் கீழ்ச்சாதி மக்களின் வாழ்வைக் கொத்திக் குதறிக் குருதியைக் குடிக்கும் நகர்ப்புறத் தரகுச் சுரண்டல்களிலிருந்து அவர்களைத் தற்காத்துக் கொள்ள அவர்களுக்கு வழிகாட்டி வழிநடத்திச் செல்லும் ஓர் இயக்கத்தால் தான் இந்தப் பண்பாட்டு மாற்றங்களை மேற்கொள்ள முடியும். இந்தச் சுரண்டலுக்கெதிரான போராட்டத்தின் தேவைகளுக்காகவும் பழைய முறையிலுள்ள குறைகள் இப்போராட்டத்திற்குத் தடைக் கற்களாக நிற்பதை மக்கள் தம் நேரடிப்பட்டறிவின் மூலம் உணரும் போதுதான் இம்முயற்சிகள் வெற்றி பெறும்.

அரசியலைப் பற்றிக் குறிப்பிடும் போது வரலாற்றினுள் சற்றுப் பின்னோக்கிச் செல்வது பயன்தரும். பிரிட்டனில் வரிவிதிப்புகளுக்கு மக்களின் படிநிகராளிகளின் (பிரதிநிதிகளின்) ஒப்புதலைப் பெறுவதற்காகத் தான் முதன்முதலில் அவ்வப்போது நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து பேராளர்கள் தலைநகருக்கு வரவழைக்கப்பட்டனர். இந்தப் பேராளர்கள் செல்வர்களாயில்லாத போது அவர்களுக்குப் போக்குவரத்துச் செலவை அரசு வழங்கியது. இதுவே பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளமாக உருவெடுத்தது. பின்னர் பூரிய வகுப்பினர் தலைமையேற்ற போது பாராளுமன்றம் மட்டுமே அதிகாரங்களை வளர்த்துக் கொள்ள உள்ளூர் அரசியல் சிதைந்து மறைந்தது. இதற்கு நேர்மாறாகத் தமிழகத்தில் வெள்ளையர் வரும்போது உண்மையான நடுவணரசென்று ஒன்று இல்லை. உள்ளூர் ஆட்சியே இருந்தது. திருடர்கள் மற்றும் அயலார்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள உள்ளூர் மக்களே காவலர்களை அமர்த்தியும் (இக்காவலர்கள் பின்னர் மரபு வழியில் கடமை ஏற்றனர்) எதிரிகளைத் தடுப்பதற்காக மக்கள் தாங்களே ஆயதமேந்திப் போராடியும் வந்தனர். இந்த நிலைதான் வெள்ளையர் எளிதில் இங்கு காலூன்றக் காரணமாயிருந்தது. பின்னர் வெள்ளையர் நடுவப்படுத்தப்பட்ட அரசை அமைத்த போது நிலைமை தலைகீழானது. உள்ளூர் ஆட்சி என்று பெயருக்கு இருந்தாலும் தற்காப்புக்காகவும் தம் நலனுக்காகவும் மக்கள் போராடும் நிலை முற்றிலும் அகன்றது. தமிழக மக்கள் கோழைகள் என்ற நிலைமை இன்று உருவாகி நிற்கிறது. எனவே உள்ளூர் ஆட்சிக்கும் நடுவப்பட்ட அரசுக்கும் ஒரு நயமான சமநிலை உருவாகும் வகையில் உள்ளூர் ஆட்சி உயிர்ப்பிக்கப்படல் வேண்டும்.

“தேர்தலை ஒழிப்போம்”, “தேர்தலைப் புறக்கணிப்பீர்” என்ற “புரட்சியாளர்” களின் கூக்குரல் அடிக்கடி நம் செவிகளில் விழுகிறது. இப்படிக் கூறுவோர் இதற்கு மாற்றாக வைக்கும் முறை என்ன? முற்றதிகாரத்தை (சர்வாதிகாரத்தை)ப் பரிந்துரைக்கிறார்களா அல்லது அரசே இல்லாத காட்டாட்சியை (அராசகத்தை) முன் வைக்கிறார்களா என்பது யாருக்கும் தெரியாது. மக்களாட்சியை விரும்புவார்களாயின் மக்களின் கருத்தை அறியத் தேர்தல் தவிர வேறு வழி என்ன வைத்திருக்கிறார்கள்? பூரியப் (பூர்சுவா) பாராளுமன்றத் தேர்தலுக்கும் பாட்டாளிய மக்களாட்சிக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு என்ன? இவற்றை இவர்கள் விளக்குவதில்லை. இந்த வேறுபாடு தான் என்ன? பூரியப் பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் பங்கேற்பதாக ஓர் ஏமாற்று மட்டும் நடைபெறுகிறது. உண்மையான ஆட்சியை அதிகாரக் கும்பலும், காவல்துறையும், நீதிமன்றங்களும் படைத்துறையும் அரசியலாளர்களும் நடத்துகின்றனர். உண்மையான மக்களாட்சியில் மக்கள் தங்கள் பேராளர்களைத் தேர்ந்தெடுப்பதோடு அமையாமல் தம் வாழ்வின் அன்றாட அரசியல், குமுக நிகழ்ச்சிகளை நேரடியாக நடத்துவர். வெறும் ‘பார்வையாளர்களாகவும் அரசின் ஏவலர்களாகவும் அடிமைகளாகவும் இன்று வாழும் மக்கள் தங்கள் ஆட்சியைத் தாமே மேற்கொள்ளுவோராக மாறுவதற்கு அவர்களை ஒன்றுதிரட்டி ஒரே அமைப்பில் கொண்டுவரத்தக்க குமுக வினைப்பாடுகளான போராட்டங்களைப் பெரும்பான்மை மக்களும் நடத்துமாறு முதலில் அவர்களை ஒன்றுதிரட்ட வேண்டும். நினைத்துப் பார்க்க முடியாத அளவு கடுமை வாய்ந்த இப்பணியைச் செய்யத் துணிவில்லாத போலிப் புரட்சியாளர்கள் தான் இக்குரலை எழுப்புவோர் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.’

புரட்சி முன்னோக்கிச் செல்லும்போது பூரியத் தேர்தல்களில் பங்கெடுப்பது பற்றி ஏங்கெல்சு கூறிய கருத்தையும் லெனின் கூறிய கருத்தையும் இங்கு சுட்டிக் காட்டுவது நமக்குத் தெளிவு தருவதாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட வருங்காலத் திட்டத்தை வைத்துப் போராட மக்களைத் திரட்டும் ஓர் இயக்கம் அம்மக்களின் மனநிலையை அறிவதற்குப் பூரியப் பாராளுமன்றத் தேர்தல் பயன்படுமென்றார் ஏங்கல்சு. அத்துடன் புரட்சிக் கட்சித் தன் கருத்துகளை இயலும் எல்லா அரங்குகளிலும் முழங்கவும் பூரியப் பாராளுமன்றத்தின் ஏமாற்றையும் கையாலாகாத்தனத்தையும் மக்களுக்கு எடுத்துக்காட்டவும் சட்டத்துக்குட்பட்ட முறையில் நேரடியாக மக்கள் முன் தங்கள் திட்டங்களையும் கொள்கைகளையும் வெளியிடுவதற்கு ஒரு வாய்ப்பாகவும் பாராளுமன்றத்தைப் பயன்படுத்த வேண்டுமென்று லெனின் கூறினார். ஓர் இயக்கம் தேர்தலில் பங்கு கொள்வதற்கும் அது முற்றிலும் தேர்தல் நோக்கிய கட்சியாக இழிவதற்கும் உள்ள வேறுபாட்டை அறியாதோரும் தேர்தலின் பங்கு கொண்டால் அந்தத் தேர்தல் முறையின் சேற்றுப் பகுதிக்குள் முழுகிவிடுவோமோ என்று அஞ்சும் தன்னம்பிக்கையில்லாதோரும் புரட்சிகரப் போராட்டத்தோடு சட்டத்துக் குட்பட்ட இயக்கங்களை இணைக்க வழி தெரியாதோரும் தான் இந்த வகையிலான எதிர்நிலை அணுகுமுறையை முன் வைப்போர், புரட்சிகர நடவடிக்கைக்குப் பகரம் (பதிலாக) வெற்று முழக்கங்களை எழுப்புவோர்.

இவ்வாறு பூரியப் பாராளுமன்ற (அல்லது சட்டமன்ற)த் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானால் என்ன செய்வது? இருக்கின்ற அரசியல் சட்டத்தையும் அரசுப் பொறியையும் கைப்பற்றி இன்றைய ஏமாற்றுக்காரர்கள் சென்ற பாதையில் செல்வதா என்ற கேள்வி எழும். அப்போது தான் புரட்சிகரச் செயற்பாடு தேவைப்படும். இருக்கின்ற அரசியல் சட்டத்தை நீக்கிவிட்டு நம் செயல்திட்டத்தில் வகுத்தவாறு புதிய அரசியல் சட்டத்தை வகுக்க வேண்டும். அரசுப் பொறியையும் அகற்றி புதியவொன்றை அமைக்க வேண்டும். இதற்கு ஆளும் கும்பல்கள் இடம் தராது. இந்தக் கட்டத்தில் நாம் மக்களைத் திரட்டிப் போராட்டங்களை நடத்தி மக்களை உண்மையான மக்களாட்சியை நோக்கி நடத்தி சென்று அவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும்.

(தொடரும்)

குமரிமைந்தன்
kumarimainthan@sify.com
htpp://kumarimainthan.blogspot.com

Series Navigation

குமரிமைந்தன்

குமரிமைந்தன்

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 5. உடை

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

குமரிமைந்தன்


தமிழகத்தின் வரலாற்றில் மக்கள் அணியும் உடைக்கும் சாதிக்கும் ஓர் உறவுண்டு. பண்டைக் காலத்தில் செருப்பணிதல், குடைபிடித்தல், வாள் போன்ற படைக் கலங்கள் வைத்திருத்தல், சிவிகை, குதிரை, யானை போன்ற ஊர்திகளில் செல்லுதல், தலைப்பாகை கட்டுதல் போன்றவற்றுக்கு அரசனின் இசைவு வேண்டும். இவ்வகை இசைவு விருது எனப்பட்டது. அரசர்கள் வலுவிழந்து பின்னர் இல்லாது மறைந்து போய்விட்டாலும் இந்த முறை இன்றும் சாதிகளிடையில் நிலவுகிறது. மேற் சாதியினரின் தெருக்களில் நடமாடும் போது கீழ்ச் சாதியினர் இன்னின்ன உடைகளை அணியக்கூடாது என்ற கட்டுப்பாடு இன்றும் பல இடங்களில் நிலவுவதை நாமறிவோம்.

பெண்கள் அணியும் உடைவகைகளைப் பற்றி ஆய்ந்தால் சில விந்தையான செய்திகளை அறிய முடியும். தமிழகம் முழுவதும் பெருவழக்காக நிலவும் சேலை எப்போது இங்கு புகுந்ததென்று தெளிவாகத் தெரியவில்லை. சோழர் காலச் சிற்பங்கள், ஓவியங்களில் காணப்படுவது உடலின் மேற்பகுதியில் ஒரு கச்சு அல்லது இரவிக்கை எனப்படும் குப்பாயம், இடையில் பாவாடை போன்ற ஓர் ஆடை, மார்பின் குறுக்கே ஒரு துண்டு இவைதான். இன்றைய சேலையைத் தெலுங்குச் சேலை என்று கூறுவர். வலது தோளில் முந்தானையிட்டுச் சேலையைத் தாழ்ப்பாய்ச்சி முதிய பார்ப்பனப் பெண்களைப் போல் கட்டுவது தான் தெலுங்குச் சேலை என்று சிலர் கூறகின்றனர். தெலுங்கு பேசும் துப்புரவுத் தொழில் செய்வோரில் பலர் வலது தோளில் தான் முந்தானை இடுகின்றனர்.

பரத நாட்டியத்தில் நாம் இன்றைய சேலை முறையைக் காணலாம். இராசராசன் காலத்தில் ஆந்திரத்திலிருந்து அவன் கொண்டு வந்த தளியிலாப் பெண்டிர் மூலம் இச்சேலை முறை தமிழகத்தில் பரவியிருக்கலாம். ஒற்றைத் துணியில் உடல் முழுவதையும் மறைக்க இயல்வதாலும், துவைத்துக் குளித்து உலர்த்துவதற்குக் கூட மாற்றுத்துணி தேவையில்லாததாலும் சிக்கனம் கருதி ஏழைகளுக்கும் பொருந்தியதாலும் அது விரைவில் பரவியிருக்க வேண்டும்.

கேரளத்தில் இன்றும் பெண்கள் பழந்தமிழ் ஆடையாகிய இரவிக்கை, அரையாடை, மேல்துண்டையே அணிகின்றனர். முகம்மதியத்துக்கு மாறியோரிடையில் முதிய பெண்கள் இன்றும் ஏறக்குறைய இதுபோன்ற ஆடையையே அணிகின்றனர். மேலே அணியும் இரவிக்கையைக் குப்பாயம் என்றே அவர்கள் அழைக்கின்றனர். அது மட்டுமல்ல, பழந்தழிழ் அணியாகிய மேகலை போன்ற ஓர் இடையணியையும் அவர்கள் அணிகின்றனர்.

சென்ற நூற்றாண்டில் குமரி மாவட்டத்தில் தெலுங்குச் சேலை என்று கூறப்படும் இன்றைய தமிழ்நாட்டு உடைக்கும் பழந்தமிழ் உடையான மலையாள உடைக்கும் ஒரு மோதல் நடைபெற்றது. இதற்குத் தோள் சீலைப் போராட்டம் என்று பெயர். இரு மக்களிடையில் நடைபெற்ற போராட்டத்தின் பண்பாட்டு வடிவங்களில் ஒன்றாகும் இது.

இன்று தமிழ்நாட்டில் ஏறக்குறைய எல்லாப் பெண்களும் ஒரே வகையில் சேலையை அணிந்தாலும் நகர்ப்புறப் பெண்களுக்கும் நாட்டுப் புறத்திலுள்ள கீழ்ச் சாதிப் பெண்களுக்கும் ஒரு வேறுப்பாட்டைப் பார்க்க முடியும். வயல்களில் வேலை செய்யும் போது பெரும்பாலான பெண்கள் முந்தானையை இடுப்பில் சுற்றிக் கொண்டு வெறும் இரவிக்கையோடிருப்பதை நாம் பார்க்க முடியும். முதிய பெண்களில் பலர் மார்பை மறைப்பதைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படுவதில்லை. வேலை செய்யும் பெண்கள் முழங்காலுக்குக் கீழேயும் மறைப்பதில்லை. சேலை இந்த வகையிலும் ஒரு நெகிழ்மை பெற்றுள்ளது.

உடையைப் பொறுத்தவரை இன்று மேற்சாதி, கீழ்ச்சாதிகளிடையில் உள்ள சில வேறுபாடுகளை முன்பு நாம் சுட்டிக் காட்டினாலும் அவற்றுள் ஒற்றுமைக் கூறுகளே மிகுதி. நம் நாட்டுப் பெண்கள் அணியும் சேலை, உடுத்தும் முறையிலும் விலை மதிப்பிலும் பெரும் பணக்காரர்களுக்கும் மிக ஏழைகளுக்கும், உழைக்காத சொகுசுப் பெண்களுக்கும் உழைக்கும் பெண்களுக்கும் பொருந்துமாறு நெகிழத்தக்கது. இருந்தாலும் இன்று நகரங்களில் சில கல்வி நிலையங்கள் வற்புறுத்தும் சீருடைகளாலும் மிதிவண்டி போன்ற ஊர்திகளில் செல்ல வேண்டியிருப்பதாலும் மேலை நாட்டு நாகரிக வீச்சாலும் மேலே சட்டையும் கீழே குறும்பாவாடையும் அணியும் பழக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த உடை உழைக்கும் பெண்களுக்கும் பொருத்தமாகவே இருக்கும். ஆனால் விலை, தையல் கூலி ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது சேலையே மலிவானது. அதே போல் தலைமயிரை வெட்டி விடுவதை விட நாட்டுப்புறத்துப் பெண்கள் போன்ற கோடாரிக் கொண்டையோ மணிக் கொண்டையோ மலிவானது. அதே வேளையில் தேவையும் வாய்ப்பும் கிடைக்கும் போது விரும்பும் வகையில் தலை அலங்காரம் செய்து கொள்ளவும் முடியும்.

அண்மையில் நகர்ப்புறங்களில் விரைவாகப் பரவி வரும் வட நாட்டு உடையாகிய சல்வார்-கம்மீசு உழைக்கும் பெண்களுக்குப் பொருந்தாது. இந்த உடையின் வரவால் உடலுழைப்பில் ஈடுபடும் பெண்களுக்கும் பிறருக்கும் வெவ்வேறு வகை உடைகள் நடைமுறைக்கு வரலாம்.

ஆண்களின் அணியைப் பொறுத்தவரை பூணுலைப் பற்றிய வரலாறு கவனத்துக்குரியது. பூணூல் அணியும் பழக்கம் எப்படித் தோன்றியது, அது முதலில் எதைக் குறிப்பதற்காக அணியப்பட்டது என்பவற்றுக்கான விடையை நம்மால் திட்டவட்டமாக அறிய முடியவில்லை. ஆனால் ஒருவேளை அது நெசவோடு தொடர்புடையதாக இருக்கலாம். நூல் நூற்போர் தம் தொழிலைக் காட்ட இதை முதன்முதலில் பயன்படுத்தியிருக்கலாம். என்றோ ஒரு நாள் நெசவுத் தொழில் குமுகச் செல்வாக்குப் பெற்றிருந்த நாளில் மக்களின் ஆட்சி அவர்கள் கைகளிலிருந்திருக்கலாம். அவ்வாறு தலைமையைக் குறிக்கும் அடையாளமாக பூணூல் பயன்பட்டிருக்கலாம். இன்றும் பல சாதிகளில் இழவுச் சடங்கின் போது தலைமகன் பூணூல் அணிந்து பரிவட்டம் கட்டுவதைக் காணலாம். இறந்தவரின் பின் குடும்பத் தலைமையை ஏற்பதாக இச்சடங்கு பொருள் தருகிறது. அதுபோல் திருமணத்தின் போது மணமகனும் பூணூல் அணிந்து கொள்கிறான். திருமணமாகும் போது ஆடவன் ஒரு குடும்பத் தலைவனாகிறான். இன்று இவ்விரு சடங்குகளும் ஒரே மனிதனின் வாழ்வின் இருவேறு கட்டங்களில் நடந்தாலும் உண்மையில் அவை இரண்டும் நம் குமுகத்தின் இருவேறு வளர்ச்சி நிலைகளின் தொல்பொருள் தடையங்களாகப் பதிந்துள்ளன.

மனுச்சட்ட ஆட்சி முறை தமிழ்நாட்டில் முயலப்பட்ட போது கீழ்ச்சாதி மக்களுக்குக் குடும்பம் வைத்திருக்கும் உரிமை, சொத்து வைத்திருக்கும் உரிமை ஆகியவற்றை மறுக்கும் முகமாகப் பூணூல் அணிவதின்றும் தடுக்கப்பட்டனர். அதனை எதிர்த்து உருவான போராட்டம் வலங்கை-இடங்கைப் போராட்டத்தின் பகுதியாக உருவெடுத்தது. இப்போராட்டம் முதலில் தெளிவான பொருளியல் முழக்கங்களைக் கொண்டிருந்தது. குறிப்பாக மக்களை வாட்டியெடுத்த வரிச் சுமையிலிருந்து மீள்வதற்காக உருவாகிய இப்போராட்டம் பூணூல் அணிதல், பட்டம் கட்டுதல், திருமணம், சாவு ஆகியவற்றின் போது சங்கூதுதல், குடைபிடித்தல் போன்ற விருதுகளை நிலைநிறுத்தும் போராட்டமாகத் திசை திருப்பப்பட்டது. விருதுகள் பெரும்பாலும் புற அணிகளே. குடைபிடித்தல், செருப்பணிதல், தலைப்பாகை கட்டல், வாள் வைத்திருத்தல், விளக்கு கொண்டு செல்லல், சிவிகையில் செல்லல், சாமரம் வீசுதல் போன்ற 72 விருதுகள் மன்னர்களால் தனிப்பட்டவர்களுக்கும் குழுக்களுக்கும் வழங்கப்பட்டன. இவ்விருதுகளுக்காக மக்கள் வலங்கை 98 சாதியினர், இடங்கை 98 சாதியினர் என்று பிரிந்து நின்று தம்முள் ஓயாத சண்டை இட்டுக் கொண்டனர். அரசும் பார்ப்பனர்களும் ஒரு புறத்தாருக்கு மட்டும் புதுப்புது விருதுகளை வழங்கி இச்சண்டையை முடுக்கிவிட்டனர். இதனால் அவர்களது “மேன்மை நிலை” காப்பாற்றப்பட்டது. ஆனால் நாடு என்புருக்கி நோயால் தாக்குண்டவன் போன்று உருக்குலைந்தது. உள்நாட்டினுள் மொகலாயர்களும் கடற்கரையில் அரேபிய ஐரோப்பிய வணிகர்களும் நம் நாட்டைத் தாக்கிய போது எதிர்த்து ஈடுகொடுக்க முடியாமல் சிதைந்து நொறுங்கியது.

இந்தப் பூணூலைத் தமக்கு எப்போதும் அணிந்து கொள்ளும் உரிமையைப் பார்ப்பனர் வைத்துக் கொண்டுள்ளனர். ஆண்டுக்கொரு முறை ஆவணி அவிட்டம் நாளில் பூணூலைப் புதுப்பித்துக் கொள்வதைப் பெரும் விழா போன்று பெருமையுடன் கொண்டாடுகிறார்கள். பதின்மூன்று வயதிற்குள் இப்பூணூல் அணியப்பட வேண்டுமென்பது மரபு. பூணூல் அணிந்த பின் அதை அணிவோர் புதிய ஒரு பிறப்பு எய்துவதாக இச்சடங்குக்குப் பொருள் கூறப்படுகிறது. எனவே பூணூல் அணியும் உரிமை பெற்றவராகிய பார்ப்பனர் இருபிறப்பாளர் எனப்படுகின்றனர். முதன்முதல் பூணூல் அணியும் சடங்கை உபநயனம் என்று கூறுவர். பூணூல் அணிந்தவன் காயத்திரி என்ற மந்திர அறிவுரை பெற்றுப் புதுப்பார்வை பெறுகிறான் என்பது இதன் பொருள். முன்பு குடும்பத் தலைமை, குமுகத் தலைமையைக் குறிக்க அணிவிக்ப்பட்ட பூணூல் பின்னர் மெய்யியல் தெளிவு பெற்றோரைக் குறிப்பதாக மாறிப் பின்னர் ஒரு குறிப்பிட்ட சாதியாரின் தனிவுடைமையாகிய கதை இது.

இந்தச் சடங்குக்குத் தீக்கை (தீட்சை) பெறுதல் என்ற பெயரும் உண்டு. அதாவது ஒரு ஆசானிடம் அறிவுரை பெற்று இறைப்பணி புரேகிதம் அல்லது ஆசிரியப்பணி செய்ய ஏற்புப் பெறுவது என்பதே இதன் பொருள் அதாவது ஒருவகையான உரிமத்தின் அடையாளம்.

இது போன்ற இருபிறப்புக் கோட்பாடு முந்துநிலை (Primitive) மாந்தர்களின் தீக்கை (Initiation)ச் சடங்கின் எச்சமேயாகும். இதுபோன்ற முந்துநிலைப் பழக்கங்களை நம் நாட்டின் பிற மக்கள் கைவிட்ட பின்னரும் அனைவரிலும் நாகரிகத்தில் உயர்ந்தோராகத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் பார்ப்பனர் இந்த விலங்கு மாந்தக் காலத்து மரபை இன்றும் பெருமையாகக் கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதும் அவர்களைப் பார்த்துப் பிற சாதிப் பணக்காரர்கள் தாங்களும் பூணூல் அணிய முண்டியடித்துக் கொண்டிருப்பதும் நம் நாட்டு விந்தைகளில் ஒன்றாகும்.

பழங்குடி மக்களிடையில் வாழும் சாமன்கள் (Shamans) இதுபோல் ஒரு ஆன்மீக மறுபிறவி எடுப்பதாகக் கருதப்படுகிறார்கள். இந்த “மறுபிறவி” எடுப்பதற்காக அவர்கள் கிட்டத்தட்ட தற்கொலை என்று கருதத்தக்க அளவில் உடலை வருத்தித் தம் மனஆற்றலை வளர்த்துக் கொள்வதாகக் கூறப்படுகிறது. நம் தொன்மங்களில் (புராணங்களில்) வரும் முனிவர்கள் தவமியற்றும் போது கைக்கொள்வதாகக் கூறப்படும் உடல்வருத்த முறைகளும் இவையும் பொருந்தி வருகின்றன. அவர்கள் பெற்றதாகக் கூறப்படும் ஆற்றல்களும் சாமன்களின் ஆற்றல்களாகக் கூறப்படுபவையும் இணைகின்றன. இவ்வாறு பழைய சாமனியமும் குமுகத் தலைமையைக் குறிக்கும் ஓர் அணியாகிய பூணூலும் சேர்ந்ததே இருபிறப்பு எனப்படும் உபநயனம். இவ்வாறு இந்தச் சடங்கை விடாமல் வைத்திருப்பதன் மூலம் நம் பண்பாட்டை எவ்வளவு காட்டுவிலங்காண்டி (காட்டுமிராண்டி) நிலையில் பார்ப்பனர்கள் அழுத்திப் பிடித்து வைத்துள்ளார்கள் என்பது விளங்கும்.

பூணூல் அணிவது பற்றி நம் நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும் இயக்கங்களும் கணக்கற்றவை. வலங்கை இடங்கைப் போராட்டங்கள் தவிர இராமனுசரின் இயக்கமும் குறிப்பிடத்தக்கது. அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கூட பூணூலணிவித்து வைணவர்களாக்கினார். ஆனால் வேதாந்த தேசிகர் தலைமையில் இதற்கெதிராகத் தோன்றிய வடகலை இயக்கம் இதை ஏற்றுக் கொள்ள மறுத்தது. எனவே தென்கலையினர் வடகலையினரை விட இழிந்தவர்கள் என்ற நிலை இன்றும் கூட நிலவுகிறது.

சைவம் எனப்படும் சிவனியம் பூணூல் சிக்கலுக்கு ஒரு தீர்வு கண்டு வைத்துள்ளது. அது முற்றிலும் பொருளியல் அடிப்படையிலமைந்தது. பார்ப்பனர்கள் பிறவியிலேயே இருபிறப்புக்கு உரிமையுள்ளவர்கள். அவர்கள் திருமணம் புரிந்து கொண்டும் பூணூல் அணிந்து கொள்ளலாம். ஆனால் பார்ப்பனர் அல்லாதார் பூணூல் அணிந்து கொள்ள வேண்டுமாயின் திருமணம் புரியக்கூடாது. அத்துடன் ஒரு குருவின் வழிகாட்டலின் கீழ் கிரியை (பணிவிடை செய்தல்) சரியை (உருவமைத்து வழிபடல்) யோகம் (தியானம் எனப்படும் ஊழ்கப் பயிற்சி) ஞானம் எனும் நான்கு படிகளைக் கடக்க வேண்டும். அவற்றில் இறுதி இரண்டு நிலைகளையும் எய்துவதற்குப் பெருஞ்செலவில் பூசை, கொடை முதலியவை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு பணக்காரர்கள் மட்டுமே பூணூல் அணியத் தகுதி பெறுவர். இதன் மூலம் பூணூல் அணிவது செல்வச் செழுமைக்கு அடையாளமாக வேளாளர்களின் சிவனியம் ஆக்கியது. எனவே இப்பார்ப்பனியத்தை வெள்ளாளக் கட்டு என்று சொல்வது எவ்வளவு பொருத்தம்!

அத்துடன் பூணூல் அணிந்த பார்ப்பனரல்லாத பிற சாதியினர் சில ஒழுக்கங்களைத் தவறாமல் கைக்கொள்ள வேண்டுமென்று வேறு விதித்துள்ளர்கள். அன்றாடம் காலை குளித்து ஈர உடையுடன் தெய்வ உருவப்படத்தின் முன் மந்திரம் ஓதிப் பூச்சொரிந்து பூசை செய்தல், மாலையில் சந்தியாவந்தனம் எனப்படும் மாலைத் தொழுகை மேற்கொள்ளல், முன்னோர்க்குத் திவசம் கொடுத்தல் என்ற பெயரில் பார்ப்பனர்க்குக் கொடையளித்தல், குறிப்பிட்ட நாட்களில் நோன்பிருத்தல், வேதம் படித்து ஓதல், முதலிய பணக்காரர்கள் மட்டுமே மேற்கொள்ளத் தக்க ஒழுக்க விதிகள் சிலவாகும். இதனால் பணக்காரர்களாகிய சில கீழ்ச்சாதியினர் இந்த ஒழுக்க விதிகளை மேற்கொண்டு பூணூல் அணிந்துள்ளனர். சிவகாசி, விருதுநகர், அகத்தீசுவரம் போன்ற ஊர்களில் வாழும் “மேற்சாதி” நாடார்கள் இத்தகைய பார்ப்பனியம் எனும் வெள்ளாளக்கட்டை முழுமையாக மேற்கொண்டோரில் தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வரலாற்றை உருவாக்கியவர்கள்.

சிலப்பதிகாரத்தில் கண்ணகியால் மதுரை எரியுண்டதாகக் கூறப்படுவது உண்மையில் பொற்கொல்லர்களின் தலைமையில் நடைபெற்ற ஒரு மக்கள் எழுச்சியே என்று ஒரு கலந்துரையாடலில் கருத்து வெளியிடப்பட்டபோது அதில் பங்கு கொண்டோரில் குமுகத்தை நன்கு நோட்டமிட்டு வைத்திருக்கும் ஒருவர் பொற்கொல்லர்கள் அத்தகைய போராட்ட உணர்வுக்குப் புறம்பானவர்கள் என்ற கருத்தைத் தெரிவித்தார். இன்றைய நிலைமையில் அக்கருத்து உண்மைதான். பார்ப்பனியம் எனும் வெள்ளாளக்கட்டினுள் முற்றிலும் அவர்கள் கரைந்து விட்டிருக்கிறார்கள். ஆனால் நகர்ப் புறத்தில் உள்ள அளவு நாட்டுப் புறத்தில் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. எப்படி இருந்தாலும் குறைந்தது எட்டு நூற்றாண்டுகளாக நடைபெற்ற வலங்கை-இடங்கைப் போராட்டத்தில் இடங்கையினருக்குத் தலைமை தாங்கி நடத்தியவர்கள் அவர்களே என்பதையும் இன்றும் பார்ப்பனர் தவிர எப்போதும் பூணூல் அணிந்து கொள்ளும் “உரிமை” பெற்றவர்களும் அவர்களே என்பதையும் கருத்தில் கொண்டால் ஓர் உண்மை நமக்குப் புலப்படும். ஒரு நீண்ட எட்டு நூற்றாண்டுக் காலப் போராட்டத்தைத் தலைமை தாங்கி நடத்தியவர்கள் தமக்கு மட்டும் தம் பின்னால் அணி திரண்ட மக்களுக்குக் கிட்டாத சில சிறப்புரிமைகள் கிடைத்தவுடன் தம்மை ஒடுக்கியவர்களின் வாலாகிவிட்டார்கள் என்பது ஒரு வரலாற்று விதியாக இங்கு செயற்பட்டுள்ளது. அச்சிறப்புரிமையின் பயனாக இன்று அவர்கள் தம்மை “விசுவகர்மர்கள்” என்றும் “விசுவப்பிரம்மர்கள்” என்றும் “விசுவப்பிராமணர்கள்” என்றும் அழைத்துக் கொள்கின்றனர்.

இவர்களில் சிலர் திருமணத்தில் அணியும் பூணூலைக் கழற்றாமல் தொடர்ந்து அணிந்து வருகின்றனர். ஆவணி அவிட்டத்தின் போது பூணூலைப் புதுக்குவதும் உபநயனம் நடத்துவதும் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுகிறது.

ஐந்தொழிற் கொல்லர்களாகிய விசுவகர்மர்கள் குறித்த இன்னொரு செய்தியும் உண்டு. ஆச்சாரியர் என்ற பட்டம் சூட்டிக்கொள்ள பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரிமையுண்டு; கொல்லர்கள் அப்பட்டத்தைச் சூட்டிக் கொள்ளக்கூடாது என்று நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடைபெற்றதாகவும் அதன் முடிவில் அவர்களும் அப்பட்டத்தைச் சூட்டிக் கொள்ளலாம் என்று தீர்ப்புக் கூறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆசாரியன் என்றால் ஆசிரியன் என்று பொருள் கூறுவர். ஆசாரி என்பது கொல்லர், தச்சர்களுக்கு மக்கள் கொடுத்துள்ள குலப்பெயர். ஆசு எனப்படும் அச்சு அல்லது சட்டத்தை அரிகிறவன் என்று இதற்கு விரித்துப் பொருள் கொள்ளலாம். வழக்கில் எவ்வாறு விளக்கம் கூறினார்கள் என்பது நமக்குத் தெரியாது.

வலங்கை-இடங்கைப் போர்களைப் பற்றிய தெளிவான செய்திகளோ ஆய்வுகளோ மேற்கொள்ளப்படவில்லை. வரலாற்று ஆய்வு என்ற பெயரில் இடிந்து கொண்டிருக்கும் கோயில்களைப் புதுப்பிக்கப் பரிந்துரைக்கும் முயற்சிகளேயன்றி உண்மையான குமுகியல் வரலாற்றாய்வு மேற்கொள்ளயாருமில்லை. மார்க்சியர்கள் எனப்படுவோர் தம் முன் விரிந்து கிடக்கும் தமிழக வரலாறு என்ற பரந்த களத்தை வெறும் கால ஆராய்ச்சியாகக் குறுக்கி வரலாற்றாசிரியர்களைப் பயனற்ற வீண் வழக்காடல்களில் சிக்க வைத்துத் திருப்பி விட்டிருக்கிறார்கள். இருந்தாலும் ஆங்காங்கு தெறித்து விழும் சில செய்திச் சிதறல்கள் சில செய்திகளை நமக்கு மறைமுகமாகத் தருகின்றன.

12ஆம் நூற்றாண்டில் தெக்காணத்தில் கன்னட நாட்டில் விச்சலன் என்றொரு அரசன் இருந்தான். அவன் பத்மாவதி எனும் பார்ப்பனப் பெண்ணை மணந்தான். அவள் உடன்பிறந்தவனான பசவன் என்பவனை முதலமைச்சனாகவும் படைத் தலைவனாகவும் அமர்த்தினான்.

இந்தப் பசவன் சிறு அகவை முதல் பார்ப்பனியத்தை வெறுத்தவன். வேதங்களின் தலைமையையும் பூணூலையும் சாதி அமைப்பையும் சிறார் மணம், கைம்மை ஆகியவற்றையும் மறுத்து லிங்காயதம் எனும் புதிய சமய ஒழுக்கத்தைப் பரப்பியவன். மன்னனான விச்சலன் சமண சமயம் சார்ந்தவன். அவனது அதிகாரிகளும் அச்சமயத்தையே சார்ந்திருந்தனர். பசவன் அவர்களை மாற்றித் தன் ஆட்களை அமர்த்தினான். இதில் அரசனுக்கும் பசவனுக்கும் ஏற்பட்ட மோதலில் விச்சலன் பசவனால் கொல்லப்பட்டான். பசவன் அதிகாரத்தைக் கைப்பற்றினான். ஆனால் நெடுநாள் அவனால் அதிகாரத்திலிருக்க முடியவில்லை. விச்சலனின் மகன் ராயமுராரி சோவி பசவனைத் துரத்திக் கொண்டேயிருந்தான். இனித் தப்பமுடியாது என்ற நிலையில் பசவன் ஒரு கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டான். இது ஒரு செய்திப் பொறி.

ஒரு பார்ப்பனனாக இருந்து கொண்டு பார்ப்பன மேலாண்மைக்குக் கருவிகளான பூணூல், வேதங்கள், சாதியமைப்பு ஆகியவற்றை எதிர்த்து ஒரு சமயத்தை உருவாக்கியவன் என்ற வகையில் பசவன் இந்திய வரலாற்றில் சிறப்பிடம் பெறத் தக்கவன். அத்துடன் இந்தக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதற்கு அவன் வன்முறையை நாடினான் என்பது அவனைத் தனித்துக் காட்டுகிறது. ஒருவேளை இதனால் தான் வரலாற்றாசிரியர்கள் இவனுக்கு உரிய இடத்தைத் தராமல் இருட்டடிப்புச் செய்கிறார்களோ என்றும் ஐயுற வேண்டியுள்ளது. லிங்காயதச் சமய நூல்கள் சங்கதக் கலப்பில்லாத பழங்கன்னடத்தில் உள்ளன என்பதும் கருதத்தக்கது.

பசவனின் சமயத்தைத் தழுவியர்களை வீரசைவர் என்று அழைக்கின்றனர். இவர்கள் புலால் உண்பதில்லை. பார்ப்பனியப் பண்பாட்டை முற்றிலும் ஒழிக்காத ஒரு நிலையையே இது காட்டுகிறது. பெரும்பான்மையினரான கீழ்ச் சாதியினரை இச்சமயத்திலிருந்து ஒதுக்க இதுவே போதும்.

14-ஆம் நூற்றாண்டில் தோன்றியது விசயநகரப் பேரரசு. இதைத் தோற்றுவித்தவர்கள் அரிகரன், புக்கன் என்ற இரு உடன்பிறந்தோர். வாரங்கல்லிலும் பின்னர் கம்பிலியிலும் உள்நாட்டு அரசர்களிடம் பயணியாற்றியவர்கள். முசுலீம்களால் கம்பிலி கைப்பற்றப்பட்ட போது சிறைபிடிக்கப்பட்டு தில்லிக்குக் கொண்டு செல்லப்பட்டனர். முகமதிய சமயத்தைத் தழுவி சுல்தான் முகம்மது பின் துக்களக்கிடம் பணியாற்றினார்கள்.

முசுலீம்கள் சமயத்தின் பெயரால் மக்களைக் கொள்ளையடித்துக் கொடுமைப் படுத்தினார்கள். இந்தக் கொடுமையை எதிர்த்துக் குரல் கொடுத்தது பசவனின் புதிய சிவனியம். இந்த வீரசிவனியர் தங்கள் கோட்பாடுகளை ஏற்காதவர்களை இறைமறுப்பாளர்கள் என்று வெறுத்தார்கள். இவர்களின் இயக்கத்தில் பங்கு கொண்ட உள்நாட்டு அரசர்கள் நாட்டின் பல பகுதிகளை முகம்மதிகளிடமிருந்து விடுவித்தார்கள். எதுவுமே செய்ய இயலாதிருந்த சுல்த்தானின் கம்பிலி ஆளுனன் தன் நிலையைச் சுல்த்தானுக்கு அறிவித்தான். நிலைமையச் சீர் செய்ய சுல்த்தான் அரிகரனையும் புக்களையும் கம்பிலிக்கு அனுப்பினான்.

தென்னகத்துக்கு வந்த அரிகரனுக்கும் புக்கனுக்கும் தம்முன் விரிந்து கிடந்த ஒரு நல்வாய்ப்பு நன்றாகப் புலப்பட்டது. பார்ப்பனராகிய வித்தியாரண்யர் என்பவரை ஆசானாக ஏற்று இந்து “தர்மத்தை”க் காப்பதற்காக ஓர் அரசை நிறுவினர். இதுதான் விசயநகரப் பேரரசு.

இப்பேரரசை நிறுவி ஆண்ட முதலாம் அரிகரன் சில சீர்திருத்தங்களைச் செய்தான். அவற்றில் ஒன்று ‘கர்ணம்’ என்ற ஊராட்சி அலுவல் செய்துவந்த பொற்கொல்லர்களையும் வெலமர்களையும் அகற்றி அவ்விடங்களில் பார்ப்பனர்களை அமர்த்தினான். இந்தச் செய்தியைப் போகிறபோக்கில் சொல்லிச் செல்கிறார் தென்னிந்திய வரலாறு ஆசிரியர் நீலகண்ட சாத்திரி. ஆனால் வலங்கை-இடங்கைப் போருடன் இதனை இணைத்துப் பார்த்தால் ஓர் உண்மை தெரியும்.

நாம் ஏற்கனவே குறிப்பிட்ட விருதுகள் எனப்படுபவை ஒரு குழு மக்களுக்கு அரசியல் வினைகளில் ஈடுபடுவதற்குரிய உரிமையின் அடையாளங்கள். அத்தகைய உரிமைகள் வாணிகம் மற்றும் செய்தொழில் வகுப்புகளுக்கு மறுக்கப்பட்டமையால் தோன்றியவையே வலங்கை-இடங்கைப் பூசல்கள். இந்தச் சூழ்நிலையில் பொற் கொல்லர்களாகிய செய்தொழில் வகுப்பினர் ஊராட்சிப் பொறுப்பிலிருந்தனரென்றால் அது வலங்கை-இடங்கைப் போரில் அவர்கள் வெற்றி பெற்றிருந்ததைக் காட்டும் ஒரு தடயமே.

அதே போல் இன்னொரு தடயம் பார்ப்பனர்கள் மீதும் பிற மேல் சாதியினர் மீதும் ஆந்திரத்து மடிகர்கள் எனப்படும் கீழ்ச் சாதி மக்கள் பெற்றிருந்த வெற்றியைக் குறிப்பதாகும். மடிகர்கள்[1] எனப்படுவோர் தமிழகத்திலுள்ள சக்கிலியச் சாதியினருக்கு இணையானவர்கள். இவர்கள் இப்போதுள்ள துப்புரவுத் தொழிலினர் அல்ல. மாடு, குறிப்பாக எருமை மாடு மேய்ப்பதும் தோல் தொழில் செய்வதும் இவர்கள் தொழில்கள்.

ஆந்திரத்தில் கள ஆய்வுகளை மேற்கொண்டு தற்கால இந்து சமயத்தில் திராவிடத் தெய்வங்கள் என்ற நூலை எல்மோர் என்பவர் எழுதியுள்ளார். அந்நூலில் அவர் காட்டியுள்ள தெய்வ வழிபாடுகள் பலவற்றில் இம்மடிகர்கள் பார்ப்பனர்களையும் பிற மேற்சாதியினரையும் அரசர்களையும் வென்ற நிகழ்ச்சிகளின் தடயங்கள் வழிபாட்டு முறைகளில் மறைந்து கிடப்பதைக் காண முடிகிறது. பார்ப்பனர்கள் எருமையைக் கொன்று கறி சமைத்து மடிகர்களுக்கு விருந்து வைப்பது, பார்ப்பனப் பூசாரியைக் காவு கொடுப்பது போன்ற சடங்குகள் என்று வகை வகையான தடயங்கள் உள்ளன.

பசவனின் புதுச்சமயம், இடங்கையினரின் வெற்றிகள் போன்றவற்றின் எதிர்வினையே விசயநகர “இந்து”ப் பேரரசின் தோற்றத்தின் உடனடிக் காரணமேயன்றி முகம்மதியர்களிடமிருந்து இந்துக்களைக் காப்பதல்ல என்பதை அடுத்து நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளிலிருந்து காணலாம்.

இவற்றில் எதுவும் இங்குள்ள பண்பாட்டு(கலாச்சாரப்)ப் புரட்சியாளர்கள் கவனத்தில் வருவதில்லை.

இவ்வாறு விருதுகள் எனப்படும் அணிமணிகள் தொடர்பான பூசல்கள் இன்று மங்கிவிட்டன. இருந்தாலும் பூணூல் இன்றும் அறுபடவில்லை. பறைச்சிறுவன் ஒருவனுக்குப் பூணூல் கட்டிவிட்டார் என்பதால் அதைப் பாரதியார் செய்த புரட்சியாகக் கூறும் இன்றைய “மார்க்சியார்கள்” பூணூலைக் கழற்றி எறிந்த வ.ரா.வை அந்த அளவுக்குப் பாராட்டுவதில்லை. அப்படிப் பாராட்டினாலும் அவர் பூணூலை அறுத்தெறிந்த செய்திக்கு விளம்பரம் தருவதில்லை. பட்டு நூல்க்காரர்கள் எனப்படும் சௌராட்டிரர்களால் தொடங்கி வைக்கப்பட்டு ஐந்தொழிற் கொல்லர்களால் வளர்ந்து வரும் பூணூல் பண்பாட்டுக்கு ஒரு முடிவு காணுவது சாதியத்தை ஒழிக்கும் பண்பாட்டுப் புரட்சியின் ஒரு இன்றியமையாக் கூறு ஆகும்.

இவ்வாறு பூணூல் எனப்படும் ஒருமுழ நூல்த்துண்டு நம் குமுகத்தைத் தொடர்ந்து அலைக்கழித்து வருகிறது. இத்துண்டு நூலை அணிவதாலேயே தாம் உயர்ந்தவர்கள் என்று இறுமாந்து திரிகிறது ஒரு சிறு கூட்டம். அப்படி அணிய முடியவில்லையே என்று பிறர் எல்லோரும் ஏங்கவில்லையாயினும் அவர்களிலும் பணக்காரர்களாகிவிட்ட ஒரு மிகச்சிறு கூட்டம் தானும் ஏங்கி அவ்வாறு ஏங்குவதாலேயே முதற்கூட்டத்தின் இறுமாப்பை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த இறுமாப்பை உடைக்க இருமுனைகளில் தாக்குதல் தொடுக்கலாம். ஓராண்டு அழுக்கைத் தனக்குள் அடக்கியிருக்கும் இந்த நூல்துண்டை வாய்ப்புள்ள போதெல்லாம் ஏளனம் செய்வது ஒரு முனை. இன்னொரு முனை இந்து மக்களின் ஒற்றுமை, பாரத தேச ஒற்றுமை என்று ஏமாற்றித் திரியும் இந்து முன்னணிப் பார்ப்பனத் தலைவர்களை அவர்கள் உண்மையிலேயே அத்தகைய ஒற்றுமையை விரும்புகிறவர்களானால் வெளிப்படையாக, ஊரறியத் தங்கள் “மேன்மை”யைக் குறிப்பதற்காகத் தாங்கள் அணிந்து கொண்டிருக்கும் பூணூல்களைக் கழற்றி எறிய முன் வருவார்களா, தம் சாதியினரையும் அதுபோல் செய்ய வலியுறுத்துவார்களா என்று அறைகூவல் விடுப்பது.

(தொடரும்)

அடிக்குறிப்பு:

[1] மையிடம் → மயிடம் → மகிடம் → மகிஷம் = எருமை. மகிடர்கள் → மடிகர்கள்.
“மாமயிடற் செற்றுகந்த” – சிலம்பு, வேட்டுவவரி.

குமரிமைந்தன்
kumarimainthan@sify.com
htpp://kumarimainthan.blogspot.com

Series Navigation

குமரிமைந்தன்

குமரிமைந்தன்

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 4. திருமண உறவுகள்

This entry is part [part not set] of 41 in the series 20060616_Issue

குமரிமைந்தன்



திருமண உறவுகள் எனும் போது நாம் திருமணத்தில் பெண்களுக்குள்ள உரிமைகளையே அளவுகோலாகக் கொள்கிறோம். மேற்சாதியினரிடையில் பெண்ணுக்கு மணவிலக்குரிமையோ மறுமணவுரிமையோ கிடையாது. அது மட்டுமல்ல, மணமகனுக்குப் பெருமளவில் சீதனம் கொடுப்பது அங்கு தவிர்க்க முடியாதது. ஆனால் கீழ்ச்சாதிகளில் பெண்ணுக்கு மணவிலக்கு, மறுமணம், கைம்பெண் மறுமண உரிமைகள் உண்டு. இன்னும் சொல்லப்போனால் ஆடவனை விடப் பெண்ணுக்கு இதில் அதிக உரிமை உண்டு. அது மட்டுமல்ல, நாட்டுப் புறங்களில் கீழ்ச்சாதி மக்களிடையில் நகர்ப்புறத்து மக்களிடை நிலவுவது போன்று பெண்ணின் “கற்பு” பற்றிய அவ்வளவு “பதற்றம்” இல்லை. சீதனம் அவர்களிடையில் பெரும்பாலும் வேண்டிய அளவு வசதி படைத்தோரிடையே மட்டுமே உண்டு. மணப்பெண்ணுக்கு மணமகன் பரியம் கொடுப்பது இன்றும் பெருவழக்காக உள்ளது.

திருமண உறவுகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலுள்ள ஏற்றத்தாழ்வு நம் குமுகத்தில் குறிப்பிடத்தக்க அளவு நிலவுகிறது. மேற்சாதிகளில் பெண் பொதுவாக இரண்டே வகைக் கடமைகளை நிறைவேற்றுகிறாள். ஒன்று, ஆடவனின் சொத்துகளுக்கு உரிமை பெறத்தக்க அவனுக்கே உரிய மக்களைப் பெறுவது; இன்னொன்று வீட்டில் அடிமைத் தொழில் புரியும் “இல்லத்தரசி”யாகவும் அவனுக்கு இன்பம் அளிக்கும் கேளிக்கைப் பொருளாகவும் இருப்பது. அவன் விரும்பும் வகை இன்பத்தை அவளால் வழங்க முடியவில்லை என்று அவன் கருதினால் வேறு பெண்களிடம் அதை அவன் நாடுவதை அவள் தடுக்க முடியாது. ஆனால் அதே பெண் தன் கணவனிடமிருந்து தனக்கு வேண்டிய இன்பத்தைப் பெற முடியாத போது இன்னொரு ஆடவனை அவள் நாட முடியாது (திருட்டுத்தனமாக உறவுகள் உரிமைகளாகா). அதே நேரத்தில் “கணவனுக்கே உரிய” குழந்தைகளைப் பெற வேண்டும் என எதிர்பார்க்கப்படும் பெண் தன் திருமணத்துக்கு முன்போ அல்லது கணவனைச் சாவிலோ சச்சரவிலோ பிரிந்த பிறகோ கூட இன்னொரு ஆடவனுடன் உறவு கொள்ளக்கூடாது.

ஆனால் கீழ்ச்சாதிப் பெண் இத்தகைய கொடிய ஒடுக்குமுறைக்கு ஆளாவதில்லை. அவளுக்குப் பிடிக்கவில்லையெனில் மணவிலக்குச் செய்து கொள்ளலாம். சாதியார் பஞ்சாயம் கூடி மணவிலக்குச் செய்து வைப்பர். மணவிலக்குப் பெற்ற பெண்ணும் கைம்பெண்ணும் மீண்டும் மணம் செய்து கொள்ளலாம். முந்திய திருமணத்தில் பிறந்த குழந்தைகளை அவள் தன்னுடன் வைத்துக் கொள்ளலாம்.

கீழ்ச்சாதிகளில் ஓரளவு சொத்துடைமை இருந்தாலும் அவர்களுக்குச் சோறு போடுவது அவர்களது உழைப்பு தான். திருமணத்தால் ஆடவனுக்குக் குடும்பத்தில் வரும் அதிகச் செலவை மனைவியாக வருபவள் உழைத்து ஈட்டி விடுகிறாள். அத்துடன் அவளுக்குப் பிறக்கும் குழந்தைகளைப் பேணுவதும் பெரும்பாடல்ல, ஏனென்றால் மிக இளம் பருவத்திலேயே அக்குழந்தைகள் ஏதோ ஒரு வகையில் உழைத்து ஈட்டத் தொடங்கி விடுகின்றனர். அதனால் கீழ்ச்சாதிகளிடையில் திருமணம் நடத்தப் பெரும்பணம் திரட்ட வேண்டும் என்பதற்காகக் காலங்கடத்தத் தேவையில்லாததால் ஆணும் பெண்ணும் பருவமடைந்த உடனேயே மணம் முடித்து விடுகின்றனர். அத்துடன் மணப்பெண் ஏற்கனவே மணமானவளா, குழந்தைகள் உள்ளவளா என்பதும் பெரும் கேள்வியல்ல, ஏனென்றால் குழந்தைகளோ மனைவியோ அவனுக்குத் தனிச் சுமை எதையும் கொடுக்கப் போவதில்லை. அது மட்டுமல்ல, குழந்தைகளுக்கு விட்டுச் செல்வதற்கென்று பெரும் செல்வம் எதுவும் இல்லாததால், ஆண் தனக்கேயுரிய குழந்தை வேண்டுமென்று பெரிதும் எதிர்பார்ப்பதில்லை.

மாறாகப் பணம் படைத்தோராகிய மேல் சாதியினரிடையில் மேலே கூறப்பட்டது போல் சொத்துரிமைக்காகக் குழந்தைகளைப் பெற வேண்டும் என்பதோடு மனைவி ஆடவனுக்குப் புதிய சுமைகளைக் கொண்டு வருகிறாள். நம் குமுகத்தில் ஒருவனுடைய வாழ்க்கைத் தரம் அவன் மனைவியிடம் காணப்படும் ஆடம்பரத் தோற்றத்தைக் கொண்டே மதிப்பிடப் பெறுகிறது. இந்தத் “தோற்றத்தை”ப் பேணி வருவதற்கும் குழந்தைகளை “நல்ல நிலைமைக்கு”க் கொண்டு வருவதற்கும் தேவையான அடித்தளம் உருவாவதுவரை ஆடவன் காத்திருக்க வேண்டியுள்ளது. பெண்ணிடமிருந்து முடிந்த அளவு சீதனத்தைக் கறப்பதற்காகப் பல பெண்களைப் பார்த்துத் தெரிவுசெய்ய வேண்டியிருக்கிறது. அக்கம் பக்கத்தில் பெண்ணே இல்லாதது போல் நாடு நகரம் கடந்து பெண் தேட வேண்டியுள்ளது. இதனால் ஆண், பெண் இருவர் திருமணங்களுக்கும் காலம் கடந்து கொண்டே போகிறது. (இதனால் ஏற்படும் உடன் விளைவுகளை நம்மால் புரிந்து கொள்ள முடியும்).

கீழ்ச்சாதிகளில் மணவிலக்கு மற்றும் மறுமணம் செய்து கொள்ளும் உரிமை இருப்பதால் மணப் பொருத்தத்துக்கென்று சோதிடம் போன்ற மிக நுணுக்கமான பொருத்தங்கள் பார்த்துக் காலத்தை வீணாக்குவதில்லை. கோயில்களில் “பூக்கட்டிப் போட்டு”த் திருவுளம் அறிவதோடு சரி. “பூவா, தலையா” பார்ப்பதற்கு இணையானதே இது. ஆனால் மேற்சாதிகளில் மணமக்களுக்குள் முறிவோ, கணவன் சாவோ பெண்ணை நிலையான வாழாவெட்டியாக்கிவிடும். எனவே பன்னிப் பன்னிப் பொருத்தம் பார்க்க வேண்டியிருக்கிறது.

கீழ்ச் சாதிகளில் மணவிலக்கு, மறுமணம் ஆகிய உரிமைகள் இருந்தாலும் அவர்களில் பொருளியலில் உயர்ந்து விட்டவர்களிடையில் பெண் இந்த உரிமைகளைக் கொண்டாட முடிவதில்லை. ஏனென்றால் இங்கு பெண் கணவனுக்குச் சுமையாகிறாள். எனவே “கைபடாத கனிகள்” கிடைக்க வாய்ப்பிருக்கும் போது அவன் ஏன் “எச்சிற் கனிகளை” நாட வேண்டும்? அதே நேரத்தில் இருக்கிற வளவாழ்வை விட்டு ஏழ்மை நிலையிலுள்ள ஒரு கணவனையே நாட வேண்டி வரும் என்பதால் பெண் தன் மணவிலக்கு-மறுமண உரிமைகளைப் பயன்படுத்துவதில்லை. எனவே இங்கு பார்ப்பனியம் எனப்படும் “வெள்ளாளக் கட்டு” தன் முழு வலிமையோடு செயற்படுகிறது.

எனவே பெண்ணுரிமையை நிலைநாட்ட விரும்புவோர் அதனை இன்றும் நம் குமுகத்தில் கடைப்பிடித்து வரும் கீழ்ச்சாதியினரின் பண்பாட்டைப் பற்றிக் கொண்டே அப்பணியைத் தொடங்க வேண்டும்.

பெண்ணுக்கு மணவிலக்கு, மறுமண உரிமைகள் பற்றிக் கூறும்போது அது வரைமுறையில்லாத புணர்ச்சியைக் குறிப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். ஆனால் வரைமுறையில்லாமல் பெண் யாருடனும் எப்போதும் தன் விருப்பம் போல் உறவு கொள்ளலாம் என்பது இதன் பொருளில்லை.

பெண்ணுரிமை என்பதற்கு “ஒரு பெண் ஓர் ஆடவன் மேல் ஏற்பட்ட விருப்பம் தவிர்த்த வேறெந்தப் பொருளியல் அல்லது குமுகச் சூழலாலும் அவனோடு உறவு கொள்ளக் கட்டாயத்துக்கு உள்ளாகாமலிருப்பதே” என்றார் லெனின். விலைமகளிர் வயிற்றுப் பிழைப்புக்காகவும் பல பெண்கள் பெற்றோரின் நெருக்குதலுக்குப் பணிந்தும் பல பெண்கள் வளமான வாழ்வுக்காகவும் தம் விருப்பத்துக்கு மாறான ஆடவர்களுடன் உறவு கொள்ள நேரிடுகிறது. அதே போல் மனம் ஒன்றாத கணவனுடன் சேர்ந்து வாழவேண்டிய நிலையிலும் பல பெண்கள் உள்ளனர்.

மறுபுறம் திருமணமாகாத ஒரு பெண்ணுடன் ஓர் ஆடவன் தொடர்புறும் போது அதன் விளைவு ஆடவனை உலகுக்குக் காட்டிக் கொடுப்பதில்லை. பெண் மட்டும் அதன் விளைவுக்குப் பலியாகிறாள். தாய்மையே பெண்மையின் சிறப்பு என்று மேலுக்குப் பறைசாற்றும் நம் குமுகம் மணமாகாத பெண்ணின் தாய்மையை எண்ணிப்பார்க்க முடியாத அளவு இழிவுபடுத்துகிறது. இந்த நிலையை மாற்ற சோவியத்து நாட்டு அரசு திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்ற பெண்களைத் “திருமணமாகாத அன்னையர்” என்று அழைத்து அவர்களுக்கு வாழ்க்கைப் பணமும் வழங்குகிறது. இருந்தாலும் அங்கு அத்தகைய பெண்களைப் பற்றிய பழைய கருத்துகள் இன்றும் வலிமையாக இருப்பதால் சில கடுமையான சிக்கல்கள் ஏற்பட்டிருப்பனவாகக் கூறப்படுகிறது. திருமணத்துக்கு முன் கருவுறும் பெண்கள் அதை வெளிக்காட்டிக் கொள்ளத் துணியாமல் அடிக்கடிக் கருக்கலைப்புச் செய்து கொள்வதால் மலடாகி விடுவதாகவும் அதனால் அங்கு, அதிலும் குறிப்பாகத் தொழில் வளர்ச்சி மிகுந்த உருசியாவின் ஐரோப்பியப் பகுதியில் மக்கள் தொகை குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே பெண்களுக்குப் பாலியல் உறவில் ஆண்களோடு சரிசமமான உரிமை தேவை என்பது, குறிப்பாகப் பெண்கள் மனதில் பதியும் படியாக உணர்த்தப்பட வேண்டும்.[1]

இன்று பல பெண்கள் படித்து மாதச் சம்பளத்துக்கு வேலைக்குப் போனாலும் கூட பெண்ணின் நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாகக் கூற முடியாது. பெண்ணின் வாழ்வு மேம்பட வேண்டுமென்பதிலோ பெண்களுக்குச் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதிலோ சிறிதும் கவலை கொள்ளாதவரும் எதிர்ப்பவர்களும் கூட படித்த, வேலை பார்க்கும் பெண்களையே மணம் செய்துகொள்ள விரும்புகின்றனர். படிக்கும் பெண்களைப் பற்றியும் வேலை பார்க்கும் பெண்களைப் பற்றியும் ஒருவருக்கொருவர் நையாண்டி செய்து கொண்டே தன் தங்கை, மனைவி அல்லது மகளை வேலைக்கு அனுப்புகின்றனர். இதை இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால் தம் தங்கை, மனைவி, மகள் ஆகியோரைப் பணத்திற்காகப் பிறரின் காட்சிப் பொருளாகவோ, விலைமகளிராகவோ பயன்படுத்தினால் என்ன மனநிலையிலிருப்பார்களோ அதே மனநிலையில் தான் அவர்களைப் பணிக்கு அனுப்புகிறார்கள். நாளுக்கு நாள் நஞ்சு போல் ஏறிவரும் கொடும் விலைவாசியும் அணைபோட்டுத் தடுக்கமுடியாத ஆவலாதிகளும் குழந்தைகளுக்குக் கல்வியளிப்பதில் ஏற்படும் கட்டுக் கடங்காச் செலவுகளும் கட்டாயப் படுத்தி ஆடவர்களை இந்நிலைக்கு இட்டுச் செல்கின்றன. படித்த பெண் இதனால் உண்மையில் விடுதலை பெறவில்லை. மாறாக முன் எப்போதையும் விட அதிகத் தளைகளால் பிணைக்கப்பட்டுள்ளாள். கல்வி பெற்று வேலை வாய்ப்புகளும் பெற்று விட்டால் பெண் விடுதலை பெற்று விடுவாள் என்று திரு.வி.க.வும், மு.வ.வும் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக நிகழ்வுகள் அமைந்துள்ளன. கல்வியும் வேலை வாய்ப்பும் இன்று உரிமைகளாயில்லை, சலுகைகளாகவே உள்ளன. இச்சலுகைகளைப் பெற அவளது பெண்மை முன்னிலும் பன்மடங்கு பல வேளைகளில் இழிவுபடுத்தப்படுகிறது. படித்து வேலை பார்க்கும் பெண் தன் வேலை, தன் குடும்பம் என்ற இரண்டு சிறைகளினுள் அடைக்கப்பட்டுத் தன் பண்பாட்டு வளர்ச்சி முற்றிலும் முடமாக்கப்பட்ட நிலையில் நிற்கிறாள். இதிலிருந்து அவளை விடுவிக்கப் பெண் விடுதலை என்ற பெயரில் செயற்படும் இயக்கங்கள் தொடர்ந்து தோல்வியையே தழுவி வருகின்றன.

மாறாக, நாட்டுப்புறத்திலும் நகர்ப்புறங்களிலும் வாழும் படிப்பால் பிழைக்காத கீழ்ச்சாதிப் பெண்களில் ஏறக்குறைய எல்லோருமே உழைக்கிறார்கள். வேளாண்மை, கட்டுமானத் தொழில், நெசவு, பீடிசுற்றுதல், தீப்பெட்டித் தொழில், பட்டாசுத் தொழில், பனைஓலைத் தொழில், பாய்முடைதல் மற்றும் எண்ணற்ற வகை வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள். நம் நாட்டில் உடல் உழைப்பில் ஈடுபட்டுள்ளோரில் ஆண்களை விடப் பெண்களே மிகுதி. இவ்வகைக் குடும்பங்கள், பெரும்பாலானவை பெண்ணின் உழைப்பாலேயே வயிற்றைக் கழுவுகின்றன. இன்று பெரும்பாலான ஊர்ப்புறத்து ஆடவர்களுக்கு வேலைவாய்ப்பு அருகி வருகிறது. எனவே பெண் ஈட்டும் பணத்தில் தான் குடிப்பதற்கும் சூதாட்டத்துக்கும் திரைப்படத்துக்கும் ஆடவன் செலவு செய்கிறான். பெரும்பாலான பெண்கள் தங்கள் வீட்டு ஆடவன் மட்டும்தான் இவ்வாறு செய்கிறான் என்று தப்புக் கணக்குப் போடுகிறார்கள். ஆனால் உண்மையில் இது ஒரு விதியாகவே செயற்படுகிறது என்பது பெண்களுக்குத் தெரிவதில்லை. பெண்ணின் இந்த அறியாமையினால் இன்னொரு வகைத் தீமைக்கும் அவள் ஆளாகிறாள். தன்னுடைய ஓய்வு நேரத்தில் ஏதோவொரு தொழில் செய்து குடும்பத்தின் வருமானத்தைப் பெருக்குவதாக அவள் கருதுவதால் தன் உழைப்பின் உண்மையான மதிப்பை உணராமல் ஏதோ கிடைத்தவரை ஆதாயம் என்று நினைக்கிறாள். எனவே அவளது உழைப்பு கடுமையாகச் சுரண்டப்படுகிறது. தன் உழைப்பினால்தான் குடும்பமே நடைபெறுகிறது என்பதை உணராததால் அவள் தன் உரிமைகளுக்காகப் போராடுவதிலிருந்தும் தடுக்கப்படுகிறாள். குழந்தைப் பருவத்திலிருந்தே பெண் ஆணுக்கு அடங்கியவள் என்று அவள் காதில் ஓதப்பட்டவை, அவள் பார்க்கும் திரைப்படங்கள், எப்போதாவது அவள் படிக்கும் அல்லது கேட்கும் கதைகள் இவையனைத்தும் சேர்ந்து அவளைத் தன் உரிமைக்காகப் போராடாமல் தடுத்து வைத்துள்ளன. குடும்பப் பொருளியலில் அவள் ஆற்றும் பங்கைப் புலப்படுத்தி, தான் உள்ளாக்கப்படும் சுரண்டலுக்கெதிராகப் போரிட அவளை ஆயத்தப்படுத்தும் போது தான் தன் அடிமை விலங்கனை உடைத்தெறியத் தேவையான தெளிவு அவளுக்குப் பிறக்கும். படிப்பால் பிழைக்கும் பெண்களின் விடுதலைக்கும் வழி பிறக்கும்.

ஒரு குமுகத்திலுள்ள ஆண்-பெண் உறவுநிலைக்கும் அக்குமுகத்திலுள்ள மக்களின் ஒற்றுமைக்கும் ஒரு தொடர்புண்டு. தனிக் குடும்பத்தின் வளர்ச்சி பற்றி ஆய்ந்த ஏங்கல்சு குமுகியல் ஆய்வாளர்களின் ஒரு முடிவைச் சுட்டிக் காட்டுகிறார்.[2] இவ்வாய்வாளர்கள் விலங்குகளிடம் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து எந்த ஒரு இனத்தினுள்ளும் கூடி வாழ்தலும் பாலியல் பொறாமையும் எதிர்விகிதத்தில் அமைந்துள்ளன என்பதே அது. பாலியல் பொறாமை குறைவாக உள்ள இனங்கள் பெருங்கூட்டங்களாக வாழ்கின்றன; பொறாமை மிகுந்த இனங்கள் தனித்தனிக் குடும்பங்களாக வாழ்கின்றன என்பது இதன் பொருள். பெரும்பாலான மனித இனங்களும் இன்று தனித்தனிக் குடும்ப அமைப்பில் இருந்தாலும் பலவற்றில் அக்குடும்பங்கள் நெகிழ்ச்சி உள்ளனவாய் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக ஐரோப்பியர்களிடையில் மணவிலக்கு, மறுமணம் போன்ற இறுக்கமில்லாத திருமண விதிகள் மட்டுமல்ல திருமண உறவை மீறிய பாலியல் உறவுகளும் இயல்பானவையாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இதன் மூலம் அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் கூட்டுணர்வு அவர்களின் வலிமைக்கு ஒரு முகாமையான காரணமாகும்.

அதே நேரத்தில் நம் நாட்டிலும் திருமண உறவை மீறிய பாலியல் உறவுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. ஆனால் இந்தப் பாலியல் ‘உரிமம்’ சில குறிப்பிட்ட சாதிகளின் உள்ளே மட்டுமே கிடைக்கிறது. இது அந்தச் சாதியின் ஒற்றுமை உணர்வை வளரச் செய்கிறது. அதே நேரத்தில் அந்தச் சாதியினர் பிற சாதியினருடன் தமக்குள்ள பிரித்துணர்வையும் இது இறுக்குகிறது. இப்படிச் சில சாதிகளில் தமக்குள் அடங்கிய இந்தப் பாலியல் உரிமம் நாடு அல்லது தேசியம் என்ற அளவிலான ஒற்றுமைக்கு எதிராக இருக்கிறது. எனவே பெண்ணுக்கு நாம் விரும்பும் பாலியல் ‘உரிமம்’ என்பது சாதி வரம்புகளைத் தாண்டியதாக இருக்க வேண்டும். அப்போது தான் உண்மையான தேசியம் என்ற வலிமையான உணர்வு தோன்றி வளர வழி ஏற்படும்.

இந்த இடத்தில் புலாலுணவு, பெண்ணுரிமை என்ற இரு பண்பாட்டுக் கூறுகள் பற்றியும் பெரியார் மேற்கொண்ட நிலையையும் அவற்றை அவர் அணுகிய முறையையும் நாம் சற்று நோக்க வேண்டும். புலாலுணவுக்கு மேற்சாதியினர் காட்டிய எதிர்ப்பை முறியடிக்கும் முறையில் தான் நடத்திய தீமிதிப்பு (பூக்குளி) நிகழ்ச்சிகளில் பன்றி இறைச்சியை அவரது தொண்டர்கள் உண்டார்கள். பெண்ணடிமையின் அடையாளமாகிய தாலியை அகற்றுவதை அவர் ஓர் இயக்கமாக நடத்தினார். ஆனால் புலாலுணவின் மேன்மையையும் எளிமையயும் பற்றியோ நாட்டுப் புறங்களில் பெண்களுக்கிருக்கும் உரிமைகள் பற்றியோ மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் கருத்துப் பரப்பலை அவர் செய்யவில்லை. அவரது அணுகல் ஒருவகை “அடாவடி” அல்லது மறுப்பியல் (Nihilist) அணுகலாகவே இருந்தது. அவரது இயக்கம் மேற்சாதியினரை அல்லது பார்ப்பனியம் எனப்படும் வெள்ளாளக் கட்டு மேற்கொண்ட கீழ்ச்சாதியினரை நோக்கியதாகவே அமைந்தது.

ஆண்-பெண் உறவுகளில் சீதனம், வரதட்சினை என்பவற்றைப் பற்றி ஒரு விரிவான ஆய்வு செய்யவில்லையெனில் அது முழுமையாகாது.

குமுகம் உடையாமல் இயற்கையிலிருந்து நேரடியாக உணவுப் பொருட்களைத் திரட்டி நிலத்தைச் சார்ந்து வாழ்ந்த நாட்களில் பெண்ணே குடும்பத் தலைவியாயிருந்தாள். ஆடவர் இரண்டாம் நிலையிலிருந்தனர். நாட்கள் செல்லச் செல்ல மனிதனின் அறிவியலும் தொடர்புகளும் விரிவடைந்த நிலையில் இந்தக் குமுகக் கூட்டுழைப்பிலிருந்து ஆடவன் விடுபட்டான். வாணிகம், படைப் பணி, அரசுப் பணி போன்றவற்றுக்காக ஆடவர்கள் குமுகத்திலிருந்து பிரிந்தபோது பெண்ணும் அவனுடன் செல்ல வேண்டியவளானாள். எனவே குடும்பத்திலுள்ள அவளது சொத்தின் பகுதிக்கு இணையாக அசையும் சொத்துக்கள் சீதனமாக, பெண்ணின் சொத்தாக அவளுக்கு வழங்கப்பட்டன. அவை பெரும்பாலும் வீட்டுப் புழக்கப் பொருட்களாகவும் அணிகலன்களாகவும் இருந்தன. நாள் செல்லச் செல்ல பணமும் இதனோடு வழங்கப்பட்டதுண்டு. இந்தப் பொருட்களெல்லாம் என்றுமே அவளுக்குரியனவே. ஒருவேளை மகப்பேறில்லாமல் அவள் இறந்து விட்டால் அவை அவளது பிறந்தகத்துக்கு உரிமையாகும். இது பார்ப்பனர் உட்பட அனைத்துச் சாதிகளிலும் இன்றுவரை நடைமுறை.

பெண்ணின் சீதனத்துடன் பணம் கொடுக்கப்பட்டால் அதற்கு ஈடாக ஏதாவதொரு சொத்தைப் பெண்ணின் பெயருக்கு எழுதிவைப்பது சில ஆண்டுகளுக்கு முன்புவரை பல கீழ்ச்சாதிகளில் நடைமுறையாக இருந்தது. ஆனால் அம்முறை இன்று வழக்கிழந்துவிட்டது. இன்று அது வரதட்சிணை (மணமகனுக்கு அளிக்கும் காணிக்கை) என்ற பெயரில் மணமகன் வீட்டாரால் கைக்கொள்ளப்பட்டு விடுகிறது.

வரதட்சிணை என்பது இன்றைக் குமுகக் கொடுமைகளில் மிக இழிவான ஒன்றாக நிலவுகிறது. கூடுதல் வரதட்சிணைக்காக மனைவியைக் கணவனும் அவனது உறவினர்களும் கொடுமைப்படுத்துவதும் அவளைக் கொன்றுவிட்டு இன்னொரு பெண்ணை மணம்செய்து வரதட்சினை பெறுவதும் இன்று அன்றாட நிகழ்ச்சிகளாகி விட்டன. படித்து வேலை செய்தாலும், சீதனமும் வரதட்சிணையும் கொண்டு சென்றாலும் பெண்மகளின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது. அத்துடன் கணவன் தன் பெற்றோர்களுடனும் உடன் பிறந்தோருடனும் சேர்ந்து வாழும் குடும்பங்களில் கணவனின் அன்பை அல்லது அவன் மீது ஆதிக்கத்தைப் பெறுவதில் மனைவிக்கும் அவனது தாய், உடன்பிறந்தோர் ஆகியோருக்கும் இடையில் ஏற்படும் போட்டியில் பெண் தன் கணவன் குடும்பத்துப் பெண்களாலேயே இரக்கமற்ற கொடுமைக்காளாகிறாள். இதன் விளைவாகக் கணவனும் மனைவியும் தனிக்குடித்தனமாகின்றனர். எனவே பெரும்பாலான நேர்வுகளில் கணவனின் பெற்றோர் கைவிடப்படுகின்றனர். ஆண்மகன் பொறுப்பிலேயே பெற்றோர் விடப்படுவதாலும் பெண்கள் கணவனோடு சென்று விடுவதாலும் இச்சூழ்நிலை தாய்தந்தையரை ஆதரவற்றவர்களாக்கி விடுகிறது. இது நம் நாட்டில் மிக இயல்பான நிகழ்ச்சியாகிவிட்டது. அரசூழியம் செய்து ஓய்வூதியம் பெறுவோர்க்குக் கொஞ்சம் பணமாவது கிடைக்கும். மற்றையோருக்கு அதுவும் கூட இல்லையாதலால் அவர்கள் இரவலர்களாக வேண்டியுள்ளது.

வரதட்சிணை எதிர்ப்பு என்பது பெண்ணுக்கு அவள் பெற்றோரிடமிருந்து கிடைக்கும் பங்கை இழக்கச் செய்யும் வகையில் ஆண்மக்களுக்கு ஆதாயம் தரும் முழக்கமாக மாறிவிடக்கூடாது. அதே நேரத்தில் அவளுக்கு அவ்வாறு கிடைக்கும் பங்கு அவளுக்கு உதவாமல் கணவனுக்கும் அவள் குடும்பத்தாருக்குமாகப் பறிபோய்விடவும் கூடாது. எனவே அவளது பணம் மணமகனுக்குக் கொடுக்கப்பட்டால் முன்பு கீழ்ச்சாதியினரிடையில் வழங்கியது போல் அதற்கிணையான ஈட்டாவணம் அவளுக்கு வழங்கப்பட வேண்டும்.

முதியவர்களுக்கான பராமரிப்புக்கு வேறொரு ஏற்பாடு செய்யலாம். பெண்கள் தத்தம் வீடுகளிலிருந்து கொண்டு மனைவி வீட்டுக்குக் கணவன் வாழவரலாம் அல்லது ஒவ்வொருவரும் தத்தம் முதுமைக்கென்று தமக்குப் பணம் சேர்த்து வைக்கும் பழக்கம் உருவாக வேண்டும்.

பெண் எதனால் இவ்வாறாக ஆதரவற்ற நிலைக்கு வருகிறாள்?
இதற்கு நேரடிக்காரணம் கற்பு, மறைமுகக் காரணம் தாய்மை.

திருமணத்துக்கு முன் ஆடவரோடு கூடுவது கற்புக்குக் களங்கம். ஆனால் அதற்குச் சான்று கருவுறுவதே. எனவே கருவுறுவதாகிய தாய்மையே அவளுக்குப் பகையாகிறது. மணமான பின் கணவன் உயிருடன் இருக்கையில் அவள் கருவுற்றால் அவள் கள்ள உறவு கொண்டிருந்தால் கூட யாரும் கண்டு கொள்வதில்லை. அதுபோல் கணவன் இறந்த பின் கருவுற்றாலும் களங்கம். இவ்வாறு ஒரு பெண் பெற்றோரின் பராமரிப்பில் இருக்கும் போது கற்பு தவறிவிடக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக அவளுக்குத் திருமணம் செய்துவைக்க முயலப்படுகிறது. இந்தப் பதற்றத்தில் மணமகன் வீட்டார் வரைமுறையின்றி மனம்போன போக்கில் “வரதட்சிணை” கேட்கிறார்கள்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் மணமகனின் உடன்பிறந்த பெண்களுக்கு வரதட்சிணை கொடுப்பதற்காகவே பல நேர்வுகளில் மணமகளின் வரதட்சிணை பயன்படுகிறது. இவ்வாறு மணமகனின் வரவும் செலவும் சரியாகவே போய்விடுகின்றன. எனவே வரதட்சிணை வாங்காமலிருந்தாலும் இதே சமநிலை உருவாகும். ஆனால் அதை எங்கே எப்போது தொடங்குவதென்பது தான் கேள்வி.

இவ்வாறு பெண் எப்போதும் கணவனுக்குக் கட்டுப்பட்டும் கணவன் இல்லாத போது அஞ்சி அஞ்சியும் வாழ நேரிடுவதற்கு கற்பு பற்றிய பதற்றமே காரணம் என்பது முடிவாகிறது. பெண்களுக்கெதிரான கொடுமைகள் தாங்க முடியாமற் போகும்போது இந்தக் கற்புக் கோட்பாடு தானே உடையும். அப்போது பெண்கள் உண்மையில் விடுதலை பெறுவார்கள்.

ஆண்-பெண் சமத்துவத்தின் முதற்படியாக நாம் செய்யக் கூடுவது கல்வி நிலையங்களில் ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் தனித் தனி நிறுவனங்கள் இருக்கும் நடைமுறை ஒழிக்கப்பட வேண்டும். ஆண்கள் பெண்கள் அனைத்து நிலையிலும் கலந்து பழக அனுமதிக்கப்பட வேண்டும். இதன் பக்க விளைவாகக் கல்வி நிறுவனங்கள் சில சமய நிறுவனங்களின் கைகளில் சிக்கியிருக்கும் நிலைமாறும்.

பேருந்துகளில் ஆண்கள் பெண்களுக்கென்று தனித்தனி இருக்கைகள் ஒதுக்கியிருக்கும் முறை மாற்றப்பட வேண்டும். இது தமிழகத்தில் மட்டும் கடைப்பிடிக்கப்படும் ஒரு பிற்போக்கு முறையாகும்.
மனிதப் பிறவியில் தாய்மைக்குரிய அமைப்புகளுடன் விளங்குவதால் பெண் மேம்பட்டவள். ஆனால் இந்த மேம்பட்ட நிலையே அவளுக்குச் சுமையாக கழுத்திலும் காலிலும் கட்டித் தொங்கவிடப்பட்ட பாரமாக மாறிவிட்டது. இதிலிருந்து அவள் விடுவிக்கப்பட வேண்டும்.

வரலாற்றுக்கு முற்பட்ட ஒரு காலத்தில் பெண் தாய்மைக்காகவே வணங்கப்பட்டாள். பெண் கருவுற்ற பின்னரே அவளுக்கு மணமுடிக்கப்பட்டது. அவள் யாரால் கருவுற்றாள் என்பது ஆராயப்படவில்லை. அவளால் தாய்மை எய்த முடியுமா என்ற கேள்விக்கு விடையாகவே அவளது தாய்மை மதிக்கப்பட்டது. திருமணத்துக்கு முன்பு கருவுறுவதே திருமணத்துக்கான அவளது தகுதியாகக் கருதப்பட்டது. அன்று பெண் ஆணின் ஈட்டத்தை அடையவிருக்கும் வழித்தோன்றல்களை ஈனும் கருவியாக இருக்கவில்லை. மாறாகத் தங்கள் குழுவுக்கு உழைக்கவும் அதைப் பாதுகாத்துப் போரிடவும் தேவையான குலப் பெருக்கத்துக்குத் தேவையானவளாகக் கருதப்பட்டாள். இன்று நிலை தலைகீழாக மாறிவிட்டது.

இப்போது பெண்ணுக்குச் செய்யப்படும் வளைகாப்பு தான் உண்மையான பழைய திருமணம். ஏனென்றால் முன்பு கணவன் இறந்தால் பெண் தன் கைவளையல்களை உடைத்தே கைம்மையினுள் நுழைந்தாள். கண்ணகியும் மதுரையை விட்டு வெளியேறிய போது தன் கைவளையல்களைத்தான் உடைத்துக் களைந்துவிட்டுப் போகிறாள். வளைகாப்புதான் முந்தியல் திருமணச் சடங்கு என்பதற்கு இது ஒரு தடயமாகும்.

இன்றும் சில குக்குல மக்களிடையில் பெண் கருவுற்ற பின்பே திருமணம் நடைபெறுகிறது. பெண் கருவுறக் காரணமானவன் கணவனாவதில்லை. கோவை இருளர்களைப் பற்றிக் கூறும் வனாந்தரப் பூக்கள் எனும் நூலில் இது கூறப்படுகிறது.[3]

இன்றைய குமுகத்தை ஆணாதிக்கக் குமுகம் என்று அழைக்கிறோம். ஆனால் மனித இனத்தின் தொடக்க காலத்தில் அது ஒரு பெண்ணாதிக்கக் குமுகமாக இருந்தது. ஆண் பெண் புணர்ச்சிக்கு வரைமுறை கிடையாது. எனவே எந்தக் குழந்தைக்கும் தந்தையை அறிய முடியாது. ஆகவே தாய் மட்டுமே அறியத்தக்க ஒரே பெற்றோர். உறவுகள் அனைத்தும் தாயின் வழியிலேயே இருந்தன. குலங்கள் தாயின் பெயரிலேயே அறியப்பட்டன. நம் நாட்டிலும் ஏழு பெண்களே அனைத்துச் சாதிகளின் மூலவர்களாகக் குறிப்பிடுப்படுகின்றனர்.

வரைமுறையில்லாத பாலுறவு நிலையில் இனப்பெருக்கத்துக்குப் பல பெண்களுக்கு ஒரே ஆண் போதுமானவன். ஆனால் பிறப்பில் ஆணும் பெண்ணும் ஏறக்குறைய சம எண்ணிக்கையிலேயே அமைவர். இதனால் ஆடவன் அன்றைய குமுகத்தில் அதிகப்படியானவனாகவே கருதப்பட்டான். பெண்கள் தத்தம் மக்கள் மீது தமக்கிருந்த செல்வாக்கினால் ஆடவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். இது நாளடைவில் ஆடவர்களிடத்தில் எதிர்ப்புணர்ச்சியை ஏற்படுத்தியது. ஆண்கள், பெண்களை எதிர்ப்பதற்கு ஒரு வகையான இயக்கத்தைத் தொடங்கினர். இதனைத் “தலைமறைவுச் சங்கங்கள்” என்று மாந்தநூலார் அழைக்கின்றனர். ஆடவர்கள் அண்டையிலுள்ள காடுகளுக்குச் சென்று மறைந்து வாழத் தொடங்கினர். தத்தம் கூட்டத்தில் உள்ள சிறுவர்கள் பருவமெய்தியதும் அவர்களைக் கடத்தி வந்து அவர்களின் சிந்தனையைத் திருப்பித் தம்மோடு வைத்துக் கொண்டனர். இதனால் இருபாலருக்கும் நெருக்கடிகள் தோன்றின. அதிலும் ஆண்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளே மிகுதி. ஏனென்றால் பெண்களிடையில் எப்படியாவது சில ஆடவராவது எஞ்சியிருந்தனர். எனவே ஆண்கள் செயற்கையான பாலுறவு முறைகளை வளர்த்தனர். பெண்களிடையிலும் செயற்கை முறைகள் உருவாயின. அவற்றின் விளைவாகப் பாலியல் நோய்களும் உருவாயின. ஆண்குறியின் மேல்தோலை அகற்றுதல், பெண் குறியிலுள்ள நாக்குப் பகுதியை அகற்றல் போன்ற நடைமுறைகள் இப்பழக்கங்களின் பின்தொடர்ச்சியே. தன்னினப் புணர்ச்சிக்கு பல்வேறு சமயங்களில் விதிக்கப்பட்டுள்ள தடைகளும் இதன் விளைவேயாம்.

ஆடவர்களின் இந்தப் போராட்டத்தின் விளைவுகள் என்ன? ஒரு கூட்டத்திலிருந்து பிரிந்து சென்ற ஆடவர்கள் பிற கூட்டத்தைச் சேர்ந்த பெண்களைத் தூக்கி வந்து கூட்டாகப் புணர்ந்தனர். பின்னர் நாளடைவில் ஒவ்வொரு கூட்டத்து ஆடவரும் பிற கூட்டத்து பெண்களுடன் உறவு கொள்ளும் புற மண வழக்கம் உண்டாகியது. அது மட்டுமல்ல முன்பு ஒரு தாயாதிக் குடும்பத்தினுள் நிலவி வந்த பாலுறவு மறைந்து அதன் இடத்தில் பல்வேறு வடிவங்களிலான மண உறவு முறைகள் உருவாயின.

மனித இனம் இயல்பில் வரைமுறையற்ற பாலுறவு கொண்டது. அதனால் ஏற்பட்ட இறுக்கமான ஒற்றுமை பிற உயிரினங்களை வெற்றி கொண்டு வளர்வதற்கேற்ற வலிமையை அதற்குக் கொடுத்தது. ஆனால் அதே வளர்ச்சியே நாளடைவில் அந்த ஒற்றுமைக்கு அறைகூவலாக அமைந்தது. அதற்கு விளைப்பு உத்திகளில் ஏற்பட்ட மேம்பாடுகளும் அதனால் ஏற்பட்ட விளைப்புப் பெருக்கமும் காரணமாக அமைந்தன. வாணிக வளர்ச்சி, அதனால் உருவான பாதுகாப்புச் சிக்கல்கள், வாணிகத்திற்குத் தேவைப்பட்ட படைப் பாதுகாப்பு அதன் வளர்ச்சியிலிருந்து உருவான அரசு போன்ற அமைப்புகள் குமுகக் கூட்டு உழைப்பிலிருந்து ஆடவரில் ஒரு பகுதியினரை விடுவித்தன. பெண்ணின் தாய்மை, அதன் தொடர்ச்சியான குழந்தையைப் பேணுதல் முதலியன அவளை இத்துறைகளில் ஆணுடன் போட்டியிட முடியாதவளாக்கின. சிறிது சிறிதாக பெண்ணின் தலைமை வலுவிழந்தது. ஆணின் நிலைமை வலுப்பெற்றது. அப்போதும் கூட ஆண்-பெண் உறவில் ஈரடுக்கு அமைப்பு ஒன்று இருந்தது. குழுவின் தலைவனின் குடும்பம் ஆண் தலைமையுடையதாகவும் மற்றவை பெண் தலைமையுடையவையாயும் இருந்தன. கேரளத்து நாயர்களின் முன்னாள் குடும்ப அமைப்பு இத்தகையது. தமிழகத்திலும் இத்தகைய அமைப்பு இருந்தமைக்குத் தடையங்கள் உள்ளன.

கூட்டுழைப்பிலிருந்து விடுபட்டு ஒட்டுண்ணி வாழ்க்கைக்கு உயர்ந்த ஆடவனுடன் வாழப் பெண்கள் புறப்பட்டனர். அவ்வாறு புறப்பட்டவர்கள் கைவிடப்பட்ட போது நெருக்கடிகள் உருவாயின. விலைமகளிர் உருவாயினர். திருமணம் என்ற ஒப்பந்த முறையும் உருவானது. பெண் ஆடவனை அண்டி வாழ வேண்டியவளானாள்.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப. (தொல்காப்பியம்)

அதே போல் நிலத்தை ஆள்கின்ற நிலக்கிழார்களுக்கும் அரசர்களுக்கும் கூட துணைவியான பெண் அவனை அண்டி வாழ வேண்டியவளானாள். கூட்டுழைப்பில் வாழ்ந்த பெண்ணுக்கிருந்த தற்சார்போ, துணிவோ, வழிவகையோ அவளுக்கில்லை.

இவ்வாறு பெண்ணின் அடிமைத் தனத்தின் வடிவமாகத் தனிக் குடும்பம் உருவானது. பெண்ணின் நடவடிக்கைகள் கட்டுக்குள் வந்தன.

தமிழ் இலக்கியத்தில் ஆண்-பெண் உறவின் பல்வேறு நிலைகளை நம்மால் உய்த்துணர முடிகிறது. காட்டில் ஒரு ஆடவனைக் கண்டு அவனைப் புணர்ந்து பிரிந்து செல்லும் “கூடல்” கட்டத்துக் குறிஞ்சித் திணை, தாம் விரும்பும் வரை மட்டும் சேர்ந்திருந்து வாழும் “இருத்தல்” கட்டத்து முல்லைத் திணை, வாணிகமோ, படைப்பணியோ, அரசூழியமோ செய்வதற்காகத் தம் கூட்டத்தை விட்டுச் செல்லும் ஆடவனுடன் பெண்ணும் “பிரிந்து” செல்லும் பிரிவு காட்டும் பாலைத் திணை, கணவன் பிற பெண்கள், அதாவது பரத்தையருடன் உறவு கொள்வதை அறிந்தும் அவனைப் பிரிந்து செல்லும் துணிவைத் தராத பொருளியல் சூழலில் “ஊடல்” செய்ய மட்டும் உரிமை கொண்டிருந்த மருதத் திணை, கணவனைப் பிரிவிலோ, சாவிலோ இழந்து விட்டால் அத்துடன் வாழ்வையே இழந்து பிரிவை நினைத்து இரங்கி வாழும் கைம்மை நிலையைக் காட்டும் நெய்தல் திணை என்பவை பொருளிலக்கணத்தின் மூலம் வெளிப்படும் கட்டங்களாகும். தொல்காப்பியத்தில் பெண்கள் கடற்பயணம் செய்யக் கூடாது என்ற தடையைக் காண்கிறோம். பெண்களின் குமுகச் செயற்பாடுகளில் இடப்பட்ட தடைகளுக்குத் திட்டவட்டமான ஒரு சான்றாகும் இது.

தமிழக மக்களின் பண்டை வரலாற்றின் சில மிக முகாமையான செய்திகளைத் தன்னகத்தே வைத்துள்ள சிலப்பதிகாரம் பெண்ணின் நிலைமையைப் பற்றிய சிறப்பான சில செய்திகளைக் கூறுகிறது.

1. குன்றக் குரவையில் குறவர் பெண்கள் தங்கள் காதலர்களையே மணம் செய்யவும் பிறரை மணம் செய்வதை விலக்கவும் வரமருளுமாறு கண்ணகியை வேண்டுகின்றனர். குறிஞ்சி நிலப் பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுக் கொண்டிருந்ததைக் காட்டும் காட்சி இது.

2. தலைக்கோல் பெற்ற கணிகையாகிய மாதவி தன் குமுகக் கடமையாக இந்திர விழா போன்ற நிகழ்ச்சிகளில் ஆடச் செல்வதைக் கோவலன் விரும்பவில்லை. அதனை மீறி அவள் நடப்பதற்காக அவன் ஊடியிருந்ததைக் கடலாடு காதையில் காண்கிறோம்.

3. அதே போல் கோவலனிடம் தன் உள்ளடக்கிடக்கையை எடுத்துக் கூறிய கண்ணகி தனக்கு அவன் இழைத்த கொடுமைகளில் பெரியதாக அருளாளர்களையும் விருந்தினர்களையும் பேணுவதாகிய குமுகப் பணிகளைச் செய்யவொட்டாமல் தடுத்ததே என்று கூறுகிறாள் (கொலைக்களக் காதை).

4. கோவலன் கொலையுண்டதை அறிந்து கண்ணகி பெண்கள் மீது சுமத்தப்படும் கைம்மைக் கொடுமைகளை எடுத்துக் கூறி அத்தகைய கைம்மையைத் தான் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்கிறாள். அந்தச் சூளுரையின் விளைவு தான் அவளது தொடர்ந்த செயற்பாடுகள்.

இவ்வாறு சிலப்பதிகாரத்தில் பெண்ணுரிமை, பெண்ணடிமை போன்ற கருத்துகள் பற்றிய கலந்துரைகள் வெளிப்படுகின்றன.

சிலப்பதிகாரத்தைத் தொடர்ந்து மணிமேகலையின் தலைவி திருமணம் இல்லாமலேயே வாழ்கிறாள். மக்கள்தொண்டு புரிகிறாள். அரசனை எதிர்த்து இயக்கமே நடத்துகிறாள்.

இதற்கும் மேலே சென்றுள்ளது குண்டலகேசி காவியம். அக்காவியத்தின் தலைவியாகிய வாணிக குலப்பெண் கொடியவனான கொள்ளையன் ஒருவனைக் காதலித்துப் பின்னர் அரசனால் அளிக்கப்பட்ட தண்டனையிலிருந்து அவனை மீட்டுத் திருமணம் புரிந்து கொண்டாள். பின்னர் ஒரு முறை அவர்கள் கேளிக்கையாகப் பேசிக் கொண்டிருந்த போது கணவனை விளையாட்டாகக் கொள்ளைக்காரன்தானே என்று கூறியதை அக்கொடியவன் மனதில் வன்மமாக வைத்திருந்தான். மலை வளம் காண்போமென அழைத்துச் சென்று மலை உச்சியிலிருந்து அவளை உருட்டி விடப் போவதாகக் கூறுகிறான். அவளோ அவனை வணங்கி வலம் வருவது போல் வந்து தானே முந்தி அவனை உருட்டி விட்டுக் கொன்று விடுகிறாள்.

இந்தக் கதையின் தலைவி, இக்கதையின் திரைப்படத் தழுவலாக வந்த ‘மந்திரிகுமாரி’யின் தலைவியைப் போலவோ “அந்த நாள்” தலைவியைப் போலவோ நாட்டுப்பற்றுக்காகத் தன் கணவனை “ஈகம்” செய்யவில்லை. தனக்காக, ஒரு மனிதப் பிறவியாகிய தன் உயிரைக் காத்துக் கொள்ளத் தன்னைக் கொல்ல வந்த கணவன் எனும் உறவு கொண்டவனாயினும் இன்னொரு மனிதப் பிறவியைத் தானே முந்திக் கொன்றாள். அவ்வாறு ஒரு மனிதப் பிறவியாகத் தனக்குள்ள தன்னுயிர் காக்கும் உரிமையைக் காத்து நின்றாள். அக்காவியமும் அவளைத் “தற்கொல்லியை முற்கொல்லி” என்று அழைத்து அவளுக்குள்ள உயிர்வாழும் உரிமையை வலியுறுத்துகிறது.

இக்கதைத் தலைவி துறவு மேற்கொண்டு புத்த சமயத்தைத் தழுவிப் பெரும் புகழ் பெற்றதாக அந்தக் கதை கூறுகிறது.

புத்த சமயத்தின் இக்கதைக்குப் போட்டியாகக் கணவனால் கொல்லப்பட்டுப் பேயாகிப் பின்னர் அவனைக் கொன்று பழிவாங்கிய நீலி மறுபிறவியில் நீலகேசியாகப் பிறந்து சமணத் துறவியாகிப் புகழ்பெற்றதாக நீலகேசி காவியம் கூறுகிறது.

இவையெல்லாம் பெண்ணுரிமை குறித்து அவ்வப்போது தோன்றிய இலக்கியப் படைப்புகள். இப்படைப்புகள் எந்த அளவுக்கு உண்மையில் பெண்களின் உரிமைகளின் வெளிப்பாடுகள் என்று நம்மால் சொல்ல முடியவில்லை. ஆனால் இன்று பெண்கள் கல்வியில் பெரும் முன்னேற்றமும், பொருளியலில் ஓரளவு தற்சார்பும் பெற்ற நிலையிலும் கூட நம் இலக்கியம் பெண்ணுரிமையைப் பொறுத்த வரை இந்த உயரத்தை எட்டவில்லை என்பதை ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

இவ்வாறு பெண்ணுரிமையைப் பொறுத்து ஒன்றோடொன்று போட்டி போட்ட இவ்விரண்டு சமயங்களும் பிற்காலத்தில் பெண்களைப் பாவப் பிறவிகளென்று கூறின.

சிவனியத்தின் எழுச்சிக்குப் பல்லாண்டு பாடியவர் காரைக்காலம்மையார். அதன் முன்னேற்றத்துக்குத் திலகவதி, மங்கையர்க்கரசி போன்ற பெண்கள் ஆற்றிய தொண்டு கொஞ்ச நஞ்சமல்ல. இருப்பினும் வெற்றி பெற்ற சிவனியம் பெண்களை இழி பிறவிகளாகவே மதித்தது.

மாலியத்திற்கு ஆண்டாளின் பணி அளப்பரியது. ஆனால் வலுப்பெற்ற மாலியம் பெண்களை மதிக்கவில்லை.

இவையனைத்தும் சுட்டிக்காட்டுவது ஒரே உண்மையைத்தான். குமுக இயக்கங்கள் தங்கள் போராட்டத்தின் ஒரு உத்தியாகவே பெண்ணுரிமையை எடுத்துரைக்கின்றனவேயன்றி பெண்ணுரிமை மீதுள்ள ஆர்வத்தினாலல்ல என்பதே அது. இதைத் தான் புகழ்பெற்ற வரலாற்றறிஞர் வில்தூரன் கூறுகிறார். இந்த நிலையில் பெண்களே தலைமை தாங்கி நடத்தும் பெண்ணுரிமை இயக்கங்கள், வெளிநாடுகளிலிருந்து பணத்தையும் முழக்கங்களையும் இரவல் வாங்கிச் செயற்படும் இயக்கங்கள் என்று பல உள்ளன. பெண்களுக்கு வேலைவாய்ப்பு, வரதட்சிணை ஒழிப்பு என்ற முழக்கங்களை இவை வைக்கின்றன. பெண்களுக்குக் குமுக நடவடிக்கைகளில் நேரடிப் பங்கு என்ற கேள்வி மெல்லியதாகவே கேட்கிறது.

பெண்களுக்குக் குமுக நடவடிக்கைகளில் நேரடிப் பங்கு, அனைத்துத் தொழிலிலும் ஈடுபட உரிமை என்ற கேள்விகள் எழுந்தாலும் அதனுள்ளே இருக்கும் ஒரு பெரிய சிக்கல் பெரும் தடங்கலாக இருக்கிறது. இதன் விளைவாக உண்மையிலேயே பெண்ணுரிமையை விரும்புவோரும் விரும்புவோர் போலக் காட்டிக் கொள்வோரும் ஒரு குறையை முன் வைக்கிறார்கள். பெண்களுக்கு உரிமைகளைக் கொடுக்க முன் வந்தாலும் அவர்கள் பின்னணியிலேயே இருக்க விரும்புகிறார்கள் என்பது தான் அந்தக் குறை. இப்படி ஒரு நிலைமை இருப்பது உண்மைதான். இதற்கு மூன்று காரணங்களை முகாமையாகக் கூறலாம்.

முதற்காரணம் ஒருவகைக் கூச்சம். இதுவரை வீட்டினுள்ளும் மிஞ்சிப் போனால் கல்வி நிலையங்களுக்குள்ளும் அடங்கிப் போயிருந்த பெண்கள் திடீரென்று வெளியில் வந்து தாராளமாகப் பழகுவதில் உள்ள கூச்சம். இந்தக் கூச்சம் பெரும்பாலான ஆடவர்களிடமும் கூட உண்டு. இதனாலேயே பலர் பொதுவாழ்வில் ஈடுபட வேண்டுமென்ற ஆர்வம் இருந்தாலும் அதை அவர்கள் தவிர்க்கக் காரணமாகிறது. பெண்களிடையில் குமுகச் சூழலால் உருவான கட்டுப்பாடுகள் சிறிது சிறிதாக விலகி அதனால் இக்கூச்சமும் குறையத் தொடங்கியிருக்கிறது.

இரண்டாவது காரணம் மெத்தனம். இப்போது நிலவும் சூழ்நிலையில் பெண்கள் தங்களுக்குச் சில வசதிகள் இருப்பதாகக் கருதுகிறார்கள். தம் தலை மீது சுமைகள் எதையும் தாங்க வேண்டியதில்லை. பணம் ஈட்டல், அவற்றுக்கு ஏற்றவாறு செலவுகளை முறைப்படுத்தல், செலவுகளின் முன்னுரிமையை முடிவு செய்தல், பணம் ஈட்டுவதிலுள்ள ஒழுக்கம், தன்மானம் போன்ற சிக்கல்களை எதிர்கொள்ளல் போன்ற பொறுப்புகளிலிருந்து தப்புவது போன்றவை குடும்பத்தினுள் உள்ள வசதிகள்.

பேருந்துகள், திரைப்பட அரங்குகள் போன்றவற்றில் பெண்களுக்கென்று மட்டும் ஒதுக்கீடுகள், சில துறைகளில் பெண்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்க வேண்டுமென்ற கருத்து நிலவுதல் போன்ற சிறப்புச் சலுகைகள் போன்றவை பெண்களை இன்று நிலவும் அமைப்பை உடைத்து விடுபட வேண்டுமென்ற வேட்கையைப் பரவலாக ஊட்டவில்லை.

மூன்றாவது காரணம் முகாமையானது மட்டுமல்ல பிற இரண்டு காரணங்களுக்கும் அடிப்படையானது. புறமனதில் வெளிப்படாமல் உள்மனதில் மறைந்து நின்று செயற்படுவது. அதை நாம் பெண்மை அச்சம் என்று குறிப்பிடலாம். தாய்மை அச்சம் என்பது கூடப் பொருத்தமாக இருக்கும்.

பெண் புறவாழ்வில் ஈடுபட்டால் பலதரப்பட்ட ஆண்களோடும் பழக வேண்டியிருக்கும். இரவு, பகல் என்ற வேறுபாடு, உள்ளூர், வெளியூர் என்ற வேறுபாடு இன்றிப் பழகவேண்டியிருக்கும். அத்தகைய சூழல்களில் அவள் விரும்பியோ விரும்பாமலோ திருமணத்திற்கு முன்பாக அல்லது திருமணத்துக்குப் புறம்பாக ஆண்களுடன் உடலுறவு கொள்ளநேரும். அது வெளிஉலகுக்குத் தெரியாமலிருந்தாலும் தாய்மை மூலம் வெளிப்படலாம். அதன் மூலம் அவள் குடும்ப வாழ்வும் குமுக வாழ்வும் பாதிக்கப்படுவது இன்றைய நிலையில் உறுதி. இன்று ஒரு பெண் பிற ஆடவர்களுடன் தன் தொழில் தேவைகளுக்காகக் கூட குமுகம் விதித்திருக்கிற வரம்புக்கு அதிகமாகப் பழகினால் அவள் மீது ஐயங்கொள்கிறது. குமுகக் கட்டுபாட்டை மீறுபவளென்று குற்றம் சாட்டுகிறது. அவளை ஒதுக்கி வைக்கிறது. பெண்கள் அவளை ஏளனம் செய்கின்றனர். ஆண்கள் அவள் பெண்மையை மலிவாகக் கருதுகின்றனர். வீட்டினுள் பெற்றோரும் உடன்பிறந்தோரும் கணவனும் அவளை நம்ப மறுக்கின்றனர். அவள் தன்மானத்துடன் வாழ்வது இயலாமற் போகிறது. அளவிலாத் துணிவும் திறமையும் பெற்ற சிலர் இச்சூழலிலும் புறவாழ்வில் வெற்றி பெறுகின்றனர். பலர் பொருளியல், அரசியல் பின்னணியினால் நிலைத்து நிற்கின்றனர். அவர்களைப் பற்றி இழிசொற்கள் கூறப்பட்டாலும் அவற்றால் பாதிப்புக்குள்ளாகும் எல்லையை அவர்கள் தாண்டி நிற்கிறார்கள்.

வரலாற்றில் குறிப்பாகப் பிற்போக்கு நிலவிய இடைக்காலத்திலும் பெண்கள் புறவாழ்வில் ஈடுபட்டுப் புகழெய்தியுள்ளனர். ஆனால் அதற்கு அவர்கள் ஏதோவொரு விலைகொடுக்க வேண்டியிருந்தது. காரைக்காலம்மையார் பேயுருக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதன் பொருள் சரியாகப் புரியவில்லை. ஆனால் பெண்ணென்ற வகையில் ஆண்கள் நெருங்க முடியாத ஓர் உருவத்தை அவர் பூண்டார் என்பது புலனாகிறது. ஒளவையார் என்ற பெயரில் அழைக்கப்படும் பெண்கள் கிழவிகளாகவே குறிப்பிடப்படுகின்றனர். முதுமை எய்திய பின்னர் தான் புறவாழ்வில் ஈடுபட்டனர் என்பது இதன் பொருளாயிருக்கலாம். திருநாவுக்கரசரின் தமக்கை திலகவதியார் வீட்டினுள்ளிருந்தே தம்பியைச் சமயமாற்றம் கொள்ள வைத்ததன் மூலம் புகழ் பெற்றவர். அவரது புறவாழ்வு வீட்டினுள்ளேயே அடங்கிவிட்டது. கூன்பாண்டியன் மனைவி மங்கையர்க்கரசி அரசனின் மனத்தை மாற்றியதினால் புகழ் பெற்றவள். ஆனால் அவளது ஒழுக்கத்தைப் பற்றிக் கேலி பேசுபவர்கள் உண்டு. மதுரை அரசி மீனாட்சி மகனின் பெயரால் நாட்டை ஆண்டவள். அதிகாரியாக இருந்த தாயுமானவரை அவளோடு தொடர்புபடுத்தியதால் அவர் துறவு பூண்டார். ஆனால் இக்குறைகள் பெரிதாய்ப் பேசப்படுவதில்லை. ஏனென்றால் அவர்களின் சமயச் சார்பு அவர்களைக் காத்து நிற்கிறது. ஆண்டாளுக்கு அரசனின் முழுத்துணையும் இருந்தது. ஆனால் அரங்கனோடு இரண்டறக் கலந்துவிட்டாள் என்ற கதையின் பின்னால் என்ன ஒளிந்துகொண்டிருக்கிறதோ அறியோம்.

மீண்டும் நிகழ்காலத்துக்கு வருவோம். பணக்கார நாடுகளில் பெண்களின் நிலையைப் பார்ப்போம். புதினங்களின் மூலமாகவும், தாளிகைகளின் மூலமாகவும் அறிந்தவற்றைத் தான் இங்கு குறிப்பிடுகிறேன்.

பொதுவாகவே ஐரோப்பாவில் தொழிற்புரட்சிக்குப் பின் பாலியல் பொறையுடைமை இருந்தது. ஒரு பெண் கணவனல்லாத ஒருவனுடன் தொடர்பு வைத்திருந்ததாகத் தெரியவந்தால் ஆடவர் இருவரும் தனிப் போர் நடத்தி வெல்பவர் அப்பெண்ணை வைத்திருந்தனர் என்று தெரிகிறது. ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பின் அடிப்படையில் வானம் வசப்படும் என்ற தொடர்கதையை தினமணிகதிர் இதழில் பிரபஞ்சன் எழுதினார். ஆளுநர் டியூப்ளேயின் மனைவியின் மகள் (மனைவிக்கு டியூப்ளே இரண்டாம் கணவன்) வேறொருவனோடு தொடர்பு வைத்திருந்ததை அறிந்து அவனைக் கையும்களவுமாகப் பிடிப்பதற்காக அவளது கணவன் வருகிறான். மனைவியும் அவள் காதலனும் தனியறையில் கலவியில் ஈடுபட்டிருப்பதை அறிந்து நாகரிகத்துடன் பொறுமையாக வெளியில் காத்திருக்கிறான். அவர்கள் வெளியில் வந்த பின் மனைவியின் காதலனைத் தனிப் போருக்கு அழைக்கிறான். போரில் காதலன் பின்னடைய மனைவியை அழைத்துக் கொண்டு செல்கிறான். செல்லப் பிள்ளையாக வளர்ந்து உலகம் அறியாதவளாக வாழ்ந்து விட்ட அப்பெண் மனம் கருகி உண்ணாமலிருந்து செத்துப் போகிறாள்.

கிறித்தவ சமயம் மணவிலக்கை ஏற்றுக் கொள்ளவில்லையாயினும் மணவிலக்கு ஐரோப்பிய நாடுகளில் நடைமுறைக்கு வந்துவிட்டது. அமெரிக்காவில் கணவன் மனைவி இருவரும் வழக்கு மன்றம் செல்லாமலே வழக்குரைஞர்கள் மூலம் மணவிலக்குப் பெற்றுக் கொள்ளலாம். பொருட்படுத்தத் தேவையற்றவை என நமக்குத் தோன்றும் காரணங்களுக்கெல்லாம் கூட அங்கு மணவிலக்கு வழங்கப்படுகிறது. தன் துணை வேறொருவருடன் உடலுறவு கொள்வதைக் கண்டு அது அவருக்கும் தெரிந்துவிட்டால் இருவரும் உடனடியாக மணவிலக்குப் பெற்றுக் கொள்வது நாகரிகமாகக் கருதப்படுகிறது. தொடர்ந்து அவர்கள் நண்பர்களாகவே வாழ்வர். ஆனால் தன் துணை இன்னொருவருடன் காதலுடன் பழகுவதைப் பொறுத்துக் கொள்வதும் அதைப் பிறர் அறிந்தாலும் மற்றவரை அதற்காக இழிவாக நினைப்பதும், தூற்றுவதும் இல்லை. கழகப் பாடல்களில் குறிப்பிடப்படுவது போல் “அலர்” எழுவது உண்டு.

இவ்வளவு இருந்தும் அமெரிக்கப் பெண்களுக்கு நிறைவு இல்லை. திருமணத்தையே தங்களுக்கு இடப்படும் விலங்காகக் கருதுகிறார்கள். என்னதான் கணவன்கள் கண்டும் காணாமலுமாக நடந்து கொண்டாலும் மனைவி தனக்கென்று நேரத்தையும் மனத்தையும் கொஞ்சமாவது ஒதுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பு. அதற்குக் கூட அமெரிக்கப் பெண்கள் ஆயத்தமாயில்லை. அதே நேரத்தில் உடலின்பத்தையும் குழந்தைப் பேற்றையும் புறக்கணிக்கவும் விரும்பவில்லை. எனவே தன்னிடம் நெருங்கிப் பழகவரும் ஆடவர்களிடம் எவ்வளவு காலம் வேண்டுமாயினும் இருவரும் விரும்பும் வரையில் சேர்ந்து வாழலாம்; ஆனால் அவன் என்றும் தன்னை மணம் புரிந்து கொள்ளக் கேட்கக் கூடாது என்ற கட்டுப்பாட்டை விதிக்கின்றனர்.

தமக்குப் பிறக்கும் குழந்தைகளை காப்பகங்களில் வளர்க்கிறார்கள். கிழமை இறுதிகளில் தங்களோடு வைத்துக் கொள்கின்றனர். அங்கு பொதுவாக வேலை வாய்ப்புகளில் பெரும் இடரில்லை. வேலையிலிருக்கும் போது உள்ள ஈட்டத்தைச் சேமித்து முதலீடுகள் செய்து வேலையில்லாக் காலங்களில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இவ்வாறு மீண்டும் தந்தை என்ற உறவு இல்லாமலே குழந்தைகள் வாழும் சூழ்நிலை உலகில் உருவாகிறது.

அண்மையில் இந்தித் திரைப்பட நடிகை ஒருவர் திருமணம் செய்யாமலே குழந்தை பெற்று அதைத் துணிவுடன் ஊரறிய வளர்த்து வருகிறார். இதுவும் அந்த அமெரிக்கப் பாணிதான்.

இதனுடன் ஆண் ஆணுடனும் பெண் பெண்ணுடனும் வாழும் ஓரினப் புணர்ச்சி இப்போது மேலைநாடுகளில் மலிந்து வருகிறது. பிரிட்டன் ஒலிபரப்புக் கழகம் புதுமண இணைகளுக்கு வழங்கி வந்த தேனிலவுச் செலவுச் சலுகையை இத்தகைய ஓரினப் புணர்ச்சியாளருக்கும் மணமின்றிச் சேர்ந்து வாழ்வோருக்கும் விரிவுபடுத்தியுள்ளமை நோக்கத்தக்கது.

பெண் தன் உரிமைகளில் எதனையும் ஆடவரோடு பகிர்ந்து கொள்ள மனமின்மையும் ஆடவன் தன் மனைவிக்குச் சமஉரிமை வழங்க விரும்பாமையுமே இத்தகைய ஓரினத் திருமணங்களுக்குக் காரணங்கள்.

இந்த வேளையில் கிறித்தவ மறைநூலில் காணப்படும் ஒரு செய்தி ஆர்வ மூட்டுவதாக உள்ளது. மக்கள் மீண்டும் உயிர்த்தெழுதலைப் பற்றி ஏசுவிடம் கேட்டனர். ஒரு பெண் தன் வாழ்க்கையில் ஒருவர் பின் ஒருவராகக் கணவர்கள் இறந்து போக மீண்டும் மீண்டும் ஏழு முறை மணக்கிறாள். உயிர்த்தெழுதலின் போது அவள் அந்த ஏழுவரில் யாருடைய மனைவியாக இருப்பாள் என்பது அந்தக் கேள்வி.

அவர் கூறிய விடை நம்மைச் சிந்திக்க வைக்கிறது. உயிர்த்தெழலின் போது கணவன் மனைவி போன்ற உறவுகள் இருக்காது என்பதே அந்த விடை. இந்த விடை இக்கட்டான ஒரு கேள்வியிலிருந்து நழுவுவதற்காகச் சொல்லப்பட்டதாக இருக்குமோ? இருந்திருக்க முடியாது. ஏனென்றால் விடை கேள்வியைவிடச் சிக்கலானதாகும். பெண்ணடிமைத்தனம், பெண் விடுதலை என்ற சிக்கல்களைப் பற்றிய ஆழமான சிந்தனைகளிலிருந்தே இத்தகைய ஒரு விடை பிறக்க முடியும். ஏசுபிரான் கூறிய இந்த நிலையை நோக்கியே பணக்கார நாடுகள் சென்று கொண்டிருக்கின்றன.

நம் பண்டைத் தொன்மங்களில் கந்தருவர் என்றொரு இன மக்கள் வருகின்றனர். அவர்களை யாழோர் என்றும் விஞ்சையர் என்றும் இயக்கர் என்றும் தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. அங்கு ஆடவரும் பெண்களும் மணமின்றியே கூடுவர். பொருளிலக்கணத்திலுள்ள குறிஞ்சித் திணைக்கு யாழோர் மணத்தையே தொல்காப்பியர் ஒப்பிட்டுக் காட்டுவார். தொன்மங்கள் இதைக் கந்தருவ மணம் என்று குறிப்பிடும். துசியந்தனும் சகுந்தலையும் காட்டில் கந்தருவ மணம் புரிந்து கொண்டனர் என்றே மகாபாரதம் கூறும். கந்தர்வர்கள் வானில் பறப்பவர்கள். அமெரிக்கர்களையும் ஐரோப்பியர்களையும் போல் அறிவியலிலும் செல்வத்திலும் உயர்ந்திருந்த இவர்களிடையில் அவர்களை விடவும் மேம்பட்ட ஆண்-பெண் உறவுகள் சுட்டப்படுவதைப் பார்க்கும் போது இவர்கள் புராண வடிவில் காட்டப்படும் உண்மையில் வாழ்ந்த ஒரு மக்கள் கூட்டமோ என்ற ஐயுறவு நம் மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

நம் நாட்டில் கணவனில்லாமல் பெண்கள் வாழ வேண்டிய கட்டாயச் சூழல் உருவாகி வருகிறது. ஆடவர்கள், அதிலும் குறிப்பாகப் படித்த ஆடவர்கள் பணத்துக்காக மனைவிகளைத் தீக்குளிப்பாட்டும் வழக்கம் பெருகி வருகிறது. எனவே பெண்கள் உயிருக்கஞ்சித் திருமணத்தைத் தவிர்க்க முற்படுவர். அதற்காகவே தம் சொந்தக் காலில் நிற்கும் பயிற்சியையும் அவர்கள் மேற்கொள்வர்.

பிறந்த பெண் குழந்தைகளைக் கொல்வதும் பிறக்கும் முன்பே கண்டறிந்து கருக்கலைப்பதும் இன்று பொது வழக்கிலிருப்பவை. இது நம் நாட்டுப் பெண்ணியர்கள் நடுவில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் இவர்களால் இதை உடனடியாகத் தடுத்து நிறுத்த முடியாது. இந்த நடைமுறை பெண் அளவுககு மீறிக் கொடுமைப் படுத்தப்படுவதின் விளைவே. இந்த விளைவே ஆணின் ஆதிக்கத்துக்கு சாவு மணி அடிப்பதாக முடியும்.

வாழும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அவளை ஆடவரிடமிருந்து விலகி நிற்கத் தூண்டும் அதே வேளையில் பெண் குழந்தைக் கொலையும் கருக்கலைப்பும் எதிர்கால ஆண்-பெண் சமநிலையைக் குலைத்துப் பெண் ஒரு அரும்பொருளாய் மாறி விடுவாள். ஆண் மண்டியிட்டுத் தான் ஆக வேண்டும்.

மனிதன் இன்னும் பெருமளவு விலங்காகவே வாழ்கிறான். எனவே அவனால் வரப்போவதை முன் கூட்டியே அறிய முடிந்தாலும் தன் செயல்களை மாற்ற முடிவதில்லை. எனவே பெண்களின் எண்ணிக்கை குறைந்த பின்னரே அவன் இக்கொலைகளை நிறுத்த முயல்வான்: அதன் பின்னர் தான் உண்மையான ஆண்-பெண் சமநிலை உருவாகும். அதுவரை பெண்ணுரிமை இயக்கங்களும் அயராது பாடுபடவேண்டும்.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

[1] இப்பகுதி சோவியத்து நாடு உடைபடுவதற்கு முன் எழுதப்பட்டதாகும்.
[2] எப். ஏங்கல்சு குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் முன்னுரை.
[3] நியூசெஞ்சுரி புத்தக நிலைய வெளியீடு.

குமரிமைந்தன்
kumarimainthan@sify.com
htpp://kumarimainthan.blogspot.com

Series Navigation

குமரிமைந்தன்

குமரிமைந்தன்

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 3. உணவு

This entry is part [part not set] of 39 in the series 20060609_Issue

குமரிமைந்தன்


மரக்கறி உணவு, புலால் உணவு என்ற இருவகை உணவுகளைப் பற்றி இந்தியாவைப் போல் உலகில் எங்கும் இவ்வளவு கூக்குரல் எழுவதில்லை. மரக்கறி உணவு சாதி உயர்வுக்கு ஓர் இன்றியமையாத தேவை என்பது நம் நாட்டு மரபு. இன்று மேற்சாதிகளாகக் கருதப்படும் சிலவற்றில் புலால் உண்பவர் இருந்தாலும் தாம் புலால் உண்பதில்லை என்று காட்டிக் கொள்வதில் அச்சாதிகளிலுள்ள பணக்காரர்கள் மிகக் குறியாயிருக்கிறார்கள். அதே நேரத்தில் கீழ்ச்சாதிகளில் சில விதிவிலக்குகள் நீங்கலாக அனைவரும் புலால் உணவினரே. மாடு, பன்றி போன்ற சில குறிப்பிட்ட விலங்குகளின் இறைச்சியைத் தவிர்ப்பவர் வேண்டுமானால் இருக்கலாம்.

இயற்கையில் மண்ணிலும் விண்ணிலுமிருந்து மூலகங்களைப் பெற்று அவற்றை உயிர்மப் பொருட்களாக மாற்றுபவை இடம் பெயராத தாவரங்களெனப்படும் நிலைத்திணைகளாகும். இவ்வகையில் அவற்றை முதனிலை உயிரிகள் எனலாம். இந்நிலைத்திணைகளை உண்டு வாழ்கின்ற தழையுண்ணிகளாகிய விலங்குகளை இரண்டாம் நிலை உயிரிகள் எனலாம். தழையுண்ணிகளை உண்ணும் கொல்விலங்குகளை மூன்றாம் நிலை உயிரிகள் என்பது பொருந்தும். இடம் பெயர்கின்ற உயிரிகளாகிய விலங்குகளில் அனைத்துண்ணிகள் (தழைகளையும் விலங்குகளையும் உண்பவை) உண்டு. மனிதன் இத்தகைய ஓர் அனைத்துண்ணியாகும். அவன் தன் உடல் வளர்ச்சிக்கும் உயிர் நிலைப்புக்கும் வேண்டிய பல்வேறு சத்துகளை நிலைத்திணைகளிலிருந்து பெறும்போது பல்வேறு ஊட்டப் பொருட்களையும் வெவ்வேறு வகை நிலைத்திணைகளிலிருந்து பெற வேண்டியுள்ளது. ஆனால் புலாலுணவு உண்ணும் போது ஏற்கனவே அந்த விலங்கு நிலைத்திணைகளைத் தின்று உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துகளாக மாற்றிய உணவை அவற்றின் உடல் உறுப்புகளிலிருந்து நேரடியாகப் பெறுகிறான். எனவே புலாலுணவாயின் உடலுக்கு வேண்டிய ஊட்டப் பொருட்களைக் குறைந்த அளவு உணவிலிருந்தே பெற முடியும்.[1] அதே நேரத்தில் அதே அளவுள்ள ஊட்டப் பொருட்களைப் பெற எண்ணற்ற வகையும் அதிக அளவும் கொண்ட புல்லுணவு தேவை. இந்த வகையில் புலாலுணவு எளிமையானது, மலிவானது புல்லுணவு சமைப்பதற்குச் சிக்கலானதும் சிக்கன மற்றதுமாகும். எனவே தான் மேற்சாதியினரால் பொருளியலில் தாழ்ந்துவிட்டோர் தாமாகவே புலாலுணவுக்கு மாறி விடுகின்றனர். அதே நேரத்தில் பொருளியலில் உயர்ந்துவிட்ட கீழ்ச்சாதியைச் சேர்ந்தவர்கள் வகைவகையாகக் காய்கறிகள் வாங்கவும் சமைக்கவும் பணமும் நேரமும் வந்தவுடன் மரக்கறி உணவுக்குத் தாவி விடுகின்றனர்.

புலாலுணவு மலிவென்பது உணவகங்களில் உண்பவர்களுக்குப் பொய்யாகத் தோன்றக் கூடும். ஆனால் நாட்டுப்புறங்களில் குளங்களிலும் ஆறுகளிலும் மக்கள் தாமே பிடிக்கும் மீனையும் காட்டுப் பகுதிகளில் அல்லது ஊரின் புறத்தே புதர் மண்டிய இடங்களில் தாமே வேட்டையாடும் சிறு விலங்குகளையும் நாம் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.

புலாலுணவு, புல்லுணவு என்ற வகைப்பாட்டில் இன்னொரு வேடிக்கையான நிகழ்முறையையும் நாம் கவனிப்பதில்லை. புல்லுணவினர் எனத் தங்களைத் தம்பட்டமடித்துக் கொள்வோர் மாடாகிய விலங்கிலிருந்து கிடைக்கும் விலங்குணவாகிய ஆனைந்து எனப்படும் பால்படு பொருட்கள் (பால், மோர், தயிர், வெண்ணெய், நெய்) குறிப்பாக நெய் இன்றி உண்ணவேமாட்டார். நெய்விட்டு உண்பதென்பது குமுக உயர்வுக்கு இன்றியமையாத அடையாளமாகக் கருதப்படுகிறது. முதலியார் சம்பம் விளக்கெண்ணெய்க் கேடு என்ற பழமொழி வட மாவட்டங்களில் நிலவுவது இதற்குச் சான்று. பார்ப்பனர்களும் அவர்களைப் பின்பற்றி பிற வெள்ளாளக் கட்டாளர்களும் இப்போது முட்டையையும் புல்லுணவென்று முத்திரை குத்தி விட்டனர்.

நம் நாட்டில், குறிப்பாக வட இந்தியாவில் “விலங்குக் கொழுப்பு” பற்றிய கூக்குரல் அடிக்கடி எழும். பாராளுமன்றத்தில் கூட இது எழுப்பப்படும். ஆனால் நெய் ஒரு விலங்குக் கொழுப்பு தானே என்று கேட்கும் தெளிவு இதுவரை யார்க்கும் ஏற்படவில்லை. மாட்டிறைச்சியைத் தின்போரைச் சாதிகளிலெல்லாம் இழிந்த சாதியினராகக் கொள்ளுவது நம் நாட்டு மரபு. புலையர், சக்கிலியர், பறையர் ஆகியோரைத் தாழ்த்துவதற்கு இதையே காரணமாகக் காட்டுகின்றனர். ஆனால் மாட்டைப் “பிழிந்து” அதன் குருதியிலிருந்து தோன்றும் பாலையும் நெய்யையும் பெருமையுடன் அருந்தும் பார்ப்பனர் அந்தனர்களென்று போற்றப்படுகின்றனர். அவ்வாறு குருதியும் ஆற்றலும் மேற்சாதியினரால் பிழியப்பட்ட பின் எஞ்சிய சக்கையை உண்ணும் கீழ்ச்சாதியினர் புலையர், சக்கிலியர், பறையர் என்று பழிக்கப்படுகின்றனர். இந்த மடைமையையும் கயமையையும் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டியது நம் கடமையாகும்.

பாலின் புலாலுணவுத் தன்மையை இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தோன்றிய ஒரு நூல் திறம்பட எடுத்துக் கூறுகிறது. காய்கறி உணவுகள் இருக்கும் சமையலறையில் பூனை அவற்றில் எதனையும் நாடாது உறியிலிருக்கும் பால்படு பொருட்களையே நாடுவதையும், பால் கெட்டுப் போனால் அதிலிருந்து எழும் கெட்ட நாற்றத்தையும் சான்றுகளாக எடுத்துக்காட்டியிருக்கிறது அந்நூல். வருண ஒற்றுமை விளக்கம் என்பது நூலின் பெயர். ஆசிரியர் பெயர் இராசகோபால பாரதி என்பது. பாரதத்தின் மக்களெல்லோரும் பாரதி என்ற பட்டத்தை மட்டுமே சூட்ட வேண்டு மென்ற கொள்கையின் அடிப்படையில் இவர் தன் பெயருக்குப் பின்னால் பாரதி என்ற பட்டத்தைச் சூடிக்கொண்டார். இவர் பார்ப்பனர் என்று தெரிகிறது. நூலின் படிகளைப் பெரியாரின் குடியரசு இதழுக்கும் அனுப்பியுள்ளார். அவ்விதழ் மட்டுமல்ல வேறு பல இதழ்கள், தனி மனிதர்களின் திறனாய்வுகளையும் நூலில் வெளியிட்டுள்ளார்.

இருந்தும் பெரியார் இந்த உண்மையைத் தன் கருத்துப் பரப்பலில் சேர்க்கவே இல்லை. இதைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தால் நமக்குக் கிடைக்கும் முடிவு இதுதான். பெரியார் புல்லுணவு உயர்ந்தது என்றிருக்கும் கருத்தை உண்மையாகவே உடைக்க விரும்பவில்லை. உண்மையான புல்லுணவாளர்கள் சைவ வெள்ளாளர்களும் சமணர்களுமே, பார்ப்பனர்களல்ல என்று நிலைநிறுத்துவதே அவரது நோக்கமாக இருந்திருக்க வேண்டும். பார்ப்பனர்கள் வேள்விகளின் போது மாட்டிறைச்சியை உண்டார்கள் என்று வேதம் முதலிய நூல்களிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செய்திப் பரப்பல் மாட்டிறைச்சியின் பெருமையை எடுத்துரைத்து, ‘எனவே ஒரு காலத்தில் பார்ப்பனரே புலாலை உண்டனர், ஆகையால் நாமும் அதை உண்பதில் தவறில்லை’ என்று கூறுவதற்கல்ல. பார்ப்பனர்கள் உண்மையான புல்லுணவினர் அல்ல என்றும் உண்மையான புல்லுணவினர் யாரென்றும் குறிப்பிட்டுச் சொல்லும் ஓர் உத்தியேயாகும் இது.

இன்னொரு புறம் புலால் உணவுக்கெதிரான கருத்துப் பரப்பல் வல்லரசுச் சுரண்டலுக்குக் கருவியாக இன்று செயற்படுகிறது. மூன்றாம் உலக நாடுகளிலிருந்து இறைச்சியையும் மீனையும் பிடுங்கிச் செல்வதற்காகப் பன்னாட்டு நிறுவனங்கள் கருத்தரங்குகள் நடத்திப் புல்லுணவின் மேன்மையைப் பறைசாற்றுகின்றன. மனிதத் தேவைக்கு மிக அதிகமான அளவில் புலாலுணவு தின்று நோய்களுக்கு ஆளாகும் மேலை நாட்டினரைச் சான்று காட்டி “அறிவியலாளர்கள்” அறிவுரைகள் வழங்குவர். சில முகம்மதியர்களும் சேர்த்துக் கொள்ளப்படுவர். இங்கு தம் சாதிப் பண்பாட்டைக் காக்க எப்போதும் முனைந்து நிற்கும் கூட்டம் அதற்குப் பெரும் விளம்பரம் கொடுக்கும். மக்கள் தம்மால் இந்த “இழிந்த” புலாலுணவை விட முடியவில்லையே என்று உள்ளுக்குள் குமைந்து நிற்பர், அல்லது அதை விட்டு விடவும் செய்வர். இங்குள்ள ஆடும் மாடும் இறைச்சியாகி மேலை நாடுகளுக்கு ஏற்றுமதியாகி அங்குள்ளோரின் உடலையும் பணப்பைகளையும் கொழுக்க வைக்கும். எனவே ஏழை எளியவர்க்கும் எளிதில் ஊட்டச்சத்தைத் தருவனவும் மனிதன் நேரடியாக உட்கொள்ள முடியாத புல்பூண்டுகளை உட்கொண்டு வளருவனவுமாகிய விலங்குகளின் இறைச்சி உணவே நமக்குப் பொருத்தமானது என்ற வகையில் புலால் உணவாகிய பண்பாட்டுக் கூற்றினை நாம் உயர்த்திப் பிடிக்க வேண்டும்.

தொல்பழங்காலத்திலேயே வாணிகம்(போக்குவரத்து), வேளாண்மை, பால்படு பொருட்கள் ஆகிய தேவைகளின் பொருட்டு மாட்டைக் கொல்வதற்கு எதிராகப் பெரும் போராட்டங்கள் நம் நாட்டில் நடந்துள்ளமைக்குச் சான்றுகள் நம் பண்பாட்டில் விரவிக் கிடக்கின்றன. வேள்விகளில் மாடுகள் பலியிடப்பட்டதால் வேள்விகளை எதிர்த்துப் பல போர்கள் நடந்துள்ளமை புராணங்களிலிருந்து புலப்படும். தக்கன் வேள்வியை அழித்த உமையை(தக்காயணி)த் தவிர வேள்விகளை அழித்தோர் அனைவரும் அரக்கர்களாக்கப்பட்டனர். (வேள்விகளை அழித்தவளென்று இராமனால் கொல்லப்பட்டவளாகக் கூறப்படும் தாடகை கூடத் தென்தமிழ் நாட்டில் உள்ள ஓர் மலையின் பெயராக நிலவுகிறாள். உமையாக மதுரையில் வணங்கப்படும் மீனாட்சியாகிய தடாதகைப் பிராட்டியின் இன்னொரு வடிவம் தானோ இவளும்?) புத்த சமண சமயங்களும் வேள்வியை எதிர்த்து எழுந்தனவே.

இன்று போக்குவரத்திலும் வேளாண்மையிலும் மாட்டின் தேவை மிகக் குறைந்துவிட்டது.

தமிழ்நாட்டில் பாலுக்கு வளர்ப்பதை விடக் கன்று ஈனுவதற்கென்றே மாடுகள் பெரும்பாலும் வளர்க்கப்பட்டு வந்துள்ளன. அடிவாரத்துக்குக் கொண்டு வராமலே மேற்குத் தொடர்ச்சி மலையினுள் கன்றுகளை ஈனுவதற்கென்றே மாடுகளை அம்மலையின் அடிவாரத்திலுள்ள மக்கள் மலைத்தொடர் நெடுகிலும் வளர்க்கிறார்கள். முன்பு காளைக் கன்றுகள் வளர்ந்ததும் வண்டியிழுப்பதற்கும் உழவுக்கும் விற்கப்பட்டன. சமநிலத்திலும் இதுவே பெரும்பான்மை வழக்கம். கன்றுக்குப் பால் கொடுப்பதைத் தவிர மனிதத் தேவைக்காகப் பால் கறக்கப்படாமையால் தமிழ்நாட்டு மாடுகளில் ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர பால்மடி வளர்ச்சியடையவில்லை. எனவே தமிழ்நாட்டில் தரமுள்ள பால்மாட்டு இனங்கள் உருவாகவில்லை. அதே வேளையில், முன்பு போல் கன்று ஈனும் மாடுகள் ஈன்று கொண்டே இருக்கின்றன. கன்றுகள் அண்டையிலுள்ள கேரளத்தில் இறைச்சியாக்கப்பட்டு மேலை நாடுகளுக்கு ஏற்றமதியாகின்றன.

இந்த நிலையில் மாட்டிறைச்சி மீது மக்களுக்கிருக்கும் தவறான கருத்துகளை மாற்றி அதனை உணவாகக் கொள்ளுவதன் பயன்கள் பற்றி எடுத்துரைக்க வேண்டும். அதன் மூலம் மலிவு விலையில் அவர்களால் இறைச்சியைத் தாராளமாகப் பெற முடியும். உலகில் உடல் நிறத்திலும் தோற்றப் பொலிவிலும் உயரம், உடல் வலிமை, மூளை வலிமை ஆகியவற்றிலும் மேம்பட்ட மக்களில் மிகப் பெரும்பாலோர் மாட்டை இறைச்சியாக நேரடியாகவோ அல்லது பால், நெய் என்று மறைமுகமாகவோ உண்போரேயாவர். எனவே நம் மக்களும் வளமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான மாட்டிறைச்சி உண்பதற்குத் தேவையான மாட்டையும் அதை உண்பதற்கான மன இசைவையும் வளர்த்தெடுப்பது தேவையாகும்.
சங்க இலக்கியங்கள் மூலம் தமிழ்நாட்டில் அந்தணர் முதல் அடியோர் வரை இறைச்சியை உட்கொண்டதை அறிய முடிகிறது. அதில் இன்று போன்று இழிவுணர்ச்சி எதுவும் புலப்படவில்லை. சோற்றோடு இறைச்சியை வேகவைத்து உண்ணும் பழக்கம் பரவலாக இருந்தது. இன்று பிரியாணி என்று முகம்மதியார்கள் விரும்பி உண்ணும் உணவு வகை அன்று புலவுச் சோறு என்று வழங்கப்பட்டது. அதில் பயன்பட்ட மெல்லிய அரிசி இன்று புலவரிசி (புலவு அரிசி) என அழைக்கப்படுகிறது. இந்த உண்மைகளிலிருந்து இறைச்சிக்கெதிரான கருத்துகள் பிற்காலத்திலேயே உருவாயின என்பது புலப்படும். இவ்வுண்மைகளை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.

புலாலுணவுக்கெதிரான கருத்துப் பரப்பல்களிலொன்று விலங்குக் கொழுப்பு உடல் நலத்துக்குத் தீங்கானது என்பதாகும். அதில் அடங்கியிருக்கும் கொலற்றரால் எனும் பொருள் குருதி நாளச் சுவர்களில் படிந்து குருதியோட்டத்தைத் தடுத்து குருதிக் கொதிப்பிற்கும் நெஞ்சாங்குலை நோய்க்கும் மார்படைப்புக்கும் இட்டுச் செல்லும் என்று கூறப்படுகிறது. இந்த மருத்துவக் கருத்தை எதிர்க்கும் ஆய்வு முடிவுகளும் வெளிவந்துள்ளன. அத்துடன் விலங்குக் கொழுப்புகளை விட நிலத்திணைக் கொழுப்புகளே பெரும்பான்மையாகக் கொலற்றராலைக் கொண்டுள்ளன. மீன் கொழுப்பு உண்மையில் கொலற்றராலைக் கரைக்கும் தன்மை வாய்ந்தது. கோழிக் கொழுப்பில் கொலற்றரால் கிடையாது. ஆனால் நிலைத்திணைக் கொழுப்பில் நாட்டில் புழக்கத்திலிருப்பவற்றில் நல்லெண்ணைய் ஒன்று தான் கொலற்றரால் இல்லாதது. இந்நிலையில் விலங்குக் கொழுப்புக்கெதிரான இந்தப் பரப்பல் பொய்ம்மையானது, குறும்புத்தனமானது.

அதே நேரத்தில் நம் நாட்டு மக்களின் சராசரி கனலி (Calorie) நுகர்வோ உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு. புலாலுணவு நுகர்வோ அதை விடவும் குறைவு. அப்படியிருக்க நம்மிடையில் “கொழுப்புச் சத்து மிகுதி தொடர்பான நோய்கள்” மட்டும் மிகுதி. இது ஏன்? அரேபியர்களும், ஆத்திரேலியர்களும் அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் உருசியர்களும் உணவில் பெரும்பகுதியாகப் புலாலையே உட்கொள்ளுகின்றனர். அப்படியிருந்தும் அவர்களுடன் ஒப்பிட நம் மக்களுக்கு இந்நோய்கள் ஏன் மிகுதி?

இதற்குப் பொருளியல், குமுகியல் சூழல் தான் காரணம். இந்நாட்டில் ஆண்மகன் குடும்பம் எனும் மிகப்பெரும் தளையால் பிணைக்கப்பட்டவன். மனைவி அவன் கால்களுக்குக் கட்டுப்போடுகிறாள். தன் மக்களுடன் சேர்ந்து அவன் தோள் மீது அமர்ந்து கொள்கிறாள். நிலவும் சூழ்நிலையில் என்னதான் பாடுபட்டாலும் குடும்பத்தின் தேவைகளை அவனால் ஈடுசெய்ய முடியவில்லை. வெளிஉலகிலோ தலைவிரித்தாடும் ஊழல், ஏமாற்று, உழைப்புக்கு மதிப்பின்மை, நேர்மைக்கு ஏற்பட்டுள்ள இழுக்கு, உண்மை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பகைமைகள், அடாவடி அரசியல், உலகம், கொலை, கொள்ளை, வழிப்பறி, கற்பழிப்பு செய்யும் கயவர் கூட்டங்களுடன் காவல்துறையின் கூட்டு இவையனைத்தும் அவனுக்குக் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன. பொருளியல் வாழ்வு, கல்வியியல், வேலைவாய்ப்பு என்ற அனைத்திலும் கைக்கூலியே நோக்கமாகக் கொண்ட சட்டதிட்டங்களைக் கைகளில் வைத்துக் கொண்டு மிரட்டும், அலைக்கழிக்கும் ஆட்சி முறை என்று அமைதியில்லா மனம்.

பெண்ணுக்கோ பிறந்ததிலிருந்தே ஒதுக்கி வைக்கப்படும் நிலை. பெண் விடுதலை என்ற பெயரால் கிடைத்த கல்வி வாய்ப்போ ஓயாத பாடபுத்தகங்களுடன் மாரடிப்பு. அத்துடன் வீட்டில் தாயாருக்கு உதவி, திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், இதழ்கள், புத்தகங்கள் ஆகியவற்றில் இடைவிடாமல் காதலின் வலிமையைப் பார்த்துவிட்டு நடைமுறையில் பெற்றோர் நிகழ்த்தும் கொடுங்கோண்மை. அரசூழியம் போன்ற வேலைக்குச் சென்றால் அவ்வேலையுடன் அவ்வாறு செல்லாத பெண்கள் செய்யும் பணிகளில் இவளுக்கு எந்தச் சலுகையுமின்மை. அலுவலகத்திலும் வெளி உலகிலும் அவள் மீது தொடுக்கப்படும் பாலியல் கணைவீச்சுகள், அதனால் பாதிப்புறும் அவளுக்கு மறுபுறத்தில் சற்றும் நெகிழ்ந்து கொடுக்காத காலத்துக் கொவ்வாத கற்பு நெறி அளவீடுகள். பழமையை விட்டுக்கொடுக்காத குமுகச் சூழ்நிலையில் மாறிவரும் நடைமுறைகளை நாடிப்போகும் மக்களைக் கட்டுப்படுத்த முடியாமை என்று பலதிசை இழுவிசைகளுக்குள் அவளுக்கு அமைதியில்லா மனம்.

வேலைக்குச் செல்லாத பெண்கள் வெளி உலகின் கவர்ச்சிகள் இழுத்தாலும் அதற்கு இடங்கொடுக்க முடியாத மனச்சூழல். வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதால் உண்டாகும் இறுக்கம், பிறரெல்லாரும் வளமாகவும் மகிழ்வாகவும் வாழ்வது போன்ற மாயத்தோற்றம் தன் மீதும் கணவன் மீதும் ஏற்படுத்துகின்ற வெறுப்பு என்று அனைவருக்கும் இந்தக் குமுகச் சூழல் அமைதியின்மையை உருவாக்கி விட்டிருக்கிறது.

வாணிகம், தொழில் துறைகளில் ஈடுபட்டிருப்போர் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகளின் மிரட்டலுக்கு உட்பட்டாலும் வரித்துறையினரின் அதிலும் வருமானவரித் துறையினரின் அச்சுறுத்தல் அவர்களை விழிப்பிலும் தூக்கத்திலும் விரட்டுகிறது. இவற்றாலெல்லாம் நம் மக்களுக்கு அவர்கள் உண்ணும் உணவுக்குத் தொடர்பில்லாத நோய்கள் உருவாகின்றன.

புறநானூற்றில் பிசிராந்தையார் தனக்குத் தலை நரைக்காமைக்குக் கூறிய காரணங்கள் உயர்வு நவிர்ச்சியல்ல என்பதற்கு இன்றைய நம் நாட்டு மக்களே சான்று.

அதே நேரத்தில் புல்லுணவு உயர்வானதென்று கூறித் தம் மேன்மையை நிலைநாட்ட விரும்பும் பொய்ம்மையாளர் இச்சூழலை எல்லாம் மறைத்து புலாலுணவு தான் இதற்குக் காரணம் என்று கூறிப் பொய்ப் பரப்புகிறார்கள்.

அத்துடன் இயற்கை மருத்துவம் என்ற பெயரால் முகாம்கள் நடத்துவதில் பெரும் ஊக்கம் காட்டுகிறார்கள். வல்லரசு நாடுகள் இதற்குப் பெரும் பணம் செலவழிக்கின்றன.

வளர்ந்தவர்களையும், முதியவர்களையும் நோக்கியதென்ற பெயரால் பொதுத் தொடர்புக் கருவிகள் (வானொலி, தொலைக்காட்சி, தாளிகைகள், திரைப்படம்) மூலமாகச் செய்யப்படும் இப்பரப்பல் சின்னஞ்சிறு பிஞ்சுகளின் உள்ளங்களைப் பற்றிக் கொண்டு “இதில் கொழுப்பிருக்கிறது”, “அதில் கொலற்றரால் இருக்கிறது” என்று சொல்லி சத்தான உணவு வகைகளைப் புறக்கணிக்க வைக்கிறது. அதனால் நடுத்தர வகுப்பினரின் வளரும் தலைமுறையே உடல் வலிமையிலும் மூளை வலிமையிலும் சுண்டிப்போய் விட்டிருக்கின்றன.

இந்தச் சூழ்நிலையில் வலுமிக்க வளருந் தலைமுறையின் நலனுக்காகவும் மக்களுக்கு இன்றியமையாத புலால், ஏற்றுமதி என்ற பெயரால் கடத்தப்பட்டு நமக்குக் கிடைக்காமற் போவதைத் தடுத்து நிறுத்தவும் புலாலுணவின் மேன்மையையும் புல்லுணவின் போதாமை, இயலாமைகளையும் மக்களிடம் வலிமையாகப் பரப்ப வேண்டும்.

அடிக்குறிப்பு:

[1] நம் நாட்டு மரபு மருத்துவ முறையிலும் சீன மருத்துவ முறையிலும் ஒரு குறிப்பிட்ட உறுப்பு நோயுற்றால் அல்லது வலிமை குன்றினால் கால்நடைகளின் அதே உறுப்பை உண்பதன் மூலம் அதனைச் சரி செய்ய முடியும் என்ற கருத்து உள்ளது. அதனை மேலைநாட்டு மருத்துவம் படித்த நம் நாட்டினர் ஏற்றுக் கொள்ளாமல் ஏளனம் செய்கின்றனர். ஆனால் ஆங்கில மருத்துவத்தில் கல்லீரல் பிழிவுகள் ((Liver extracts) போன்ற மருந்துகள் பயன்படுவதை அவர்கள் கவனிப்பதில்லை.

kumari mainthan [kumarimainthan@sify.com]

Series Navigation

குமரிமைந்தன்

குமரிமைந்தன்

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல் – 2. சமயம்

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

குமரிமைந்தன்


தமிழகத்தில் இரு வேறு சமயப் போக்குகள் உள்ளன. அவற்றுக்குப் பெருநெறி, சிறுநெறி என்று மேலை மாந்தநூலார் பெயர் சூட்டினர். மேற்சாதியினர் பார்ப்பனர் மூலமாகக் கடவுளை வணங்கும் முறையைப் பெருநெறி என்றும் கீழ்ச்சாதியினர் தாமே நேரடியாகத் தம் தெய்வங்களை வணங்குவதைச் சிறுநெறி என்றும் வகுத்தனர்.[1] பெரும் கோயில்களில் தேர்த் திருவிழா, பார்ப்பனப் பூசாரிகளால் சமற்கிருதத்தில் போற்றி (அர்ச்சனை), ஆறுகால பூசை, நெய்வேதியம், வேள்வி, தேவரடியார்கள், காணிக்கை மற்றும் பெரும் நில மானியங்களோடுள்ள தெய்வங்களைப் பெருந்தெய்வங்களென்றும் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பூசை, தெய்வமாடுதல், பலிகொடுத்தல், நேர்த்திக் கடன் செய்தல் ஆகியவற்றோடு வணங்கப்படும் தெய்வங்களைச் சிறு தெய்வங்களென்றும் கூறும் மரபு இன்று நம்மிடம் உள்ளது. ஆனால் இவ்விரு நெறிகளையும் கடைபிடிக்கும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் இந்த வகைப்பாடு தலைகீழான தென்பது புலப்படும். பெரும்பான்மை மக்கள் வழிபடும் முறையைப் பெருநெறி என்றும் சிறுபான்மையினரின் நெறியைச் சிறுநெறி என்றும் அழைப்பது தான் சரியான நெறி. ஆனால் குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக வழக்கிலுள்ள வகைப்பாட்டையே இங்கு நாம் பின்பற்றுகிறோம்.

மேற்சாதிக் கடவுள்களாகச் சிவன், திருமால், முருகன், பிள்ளையார், சத்தி ஆகியோர் விளங்குகின்றனர். கீழ்ச்சாதிக் கடவுள்களாக மாரியம்மன், முத்தாரம்மன், காளி, இயக்கி, நீலி, திரவுபதை போன்ற பெண் தெய்வங்களும் அய்யனார், கருப்பசாமி, சுடலைமாடன், வண்ணாரமாடன், இயக்கிமாடன், கொம்பமாடன், பன்றிமாடன், மதுரைவீரன், முனியன், சடையன், சப்பாணி போன்ற ஆண் தெய்வங்களும் மற்றும் எண்ணற்ற குல தெய்வங்களும் குடும்பத் தெய்வங்களும் விளங்குகின்றன.

பெருந்தெய்வங்கள் எனப்படுபவை கூடச் சிறு தெய்வங்களாயிருந்து உருமாறியவையே. ஆண்குறி, பெண்குறி வணக்கங்கள் குறியியல் வடிவம் பெற்று இலிங்கமாக இணைந்தன. சங்க கால அகத்துறைத் தலைவியரின் கிண்டலுக்குள்ளாகிய, உயிர்ப்பலியுண்ட வேலன் இன்று முருகனாகிவிட்டான். இன்றும் இந்த நிகழ்முறை தொடர்கிறது. மாரியம்மன் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. “பணக்கார” மாரியம்மன் கோயில்களெல்லாம் பெருந்தெய்வ வழிபாட்டு முறை நோக்கித் திரும்பிவிட்டன. சிறு தெய்வவழிபாட்டிலிருந்தே பெருந்தெய்வ வழிபாடு தோன்றிய தென்பதற்குப் பெருந்தெய்வக் கோயில்களிலேயே சான்றுகள் உள்ளன. எல்லாக் கோயில்களிலுமிருக்கும் பலிபீடம் அத்தகைய சான்றுகளில் ஒன்று. இப்பலிபீடத்துக்கு எத்தனையோ ஆதனிய (ஆன்மீக) விளக்கங்களை மதவாணர்கள் தந்தாலும் உண்மையை மறைக்க முடியாது. பல கோயில்களில் பலியிடுவதற்கென்றே கொண்டு வரப்படும் விலங்குகளும் பறவைகளும் ஏலத்தில் விற்கப்படுவதை நாம் காண முடியும். உயிர்ப்பலியிட்டு குருதி சிந்துவதை எலுமிச்சம் பழத்தை அறுத்துக் குங்குமத்தில் தோய்த்துப் பிழிவதன் மூலம் ஈடுசெய்வதைக் காணலாம். இந்து மத இயக்கத்தினர் பல ஊர்க்கோயில்களில் பெருந்தெய்வ வழிபாட்டைப் புகுத்த முயன்று கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்கள் முயற்சி வெற்றிபெறாது. குமுக அடித்தளத்தில் பண்பியல் மாற்றம் நிகழாத நிலையில் கடந்த காலங்களில் போலவே இன்றும் புதிது புதிதாகச் சிறு தெய்வங்கள் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன.

கீழ்ச்சாதி மக்களின் சமய நெறியாகிய சிறு தெய்வ வழிபாடு அந்த மக்களின் வாழ்க்கை முறையாகிய பண்டப் படைப்போடு நெருங்கிய தொடர்புடையது. தாங்கள் படைத்த பண்டங்களைப் படையல் செய்து அவற்றை உண்டு வழிபட்டு தொடர்ந்து வரும் தங்கள் உழைப்புக்கு உரிய பலன் வேண்டி கூட்டாக வணங்குவது அவர்களது வழிபாட்டு முறை. தாங்கள் பலி கொடுக்கும் விலங்குகளையும் படையலிட்ட உணவையும் தங்கள் உறவினர்களுடன் உண்டு களிக்கின்றனர். வழிபாட்டைத் தாங்களே கலை வடிவில் நிகழ்த்துகின்றனர். அவர்களது வழிபாட்டில் பண்டங்களின் அழிவு மிகக் குறைவு. வழிபாட்டின் போதே தொடர்ந்து பருவ நிலைகள், செழுமை போன்றவற்றை அறிவதற்காகச் சில சடங்குகளை மேற்கொள்கின்றனர். (இவை எந்த அளவுக்கு அறிவியலுக்கு உகந்தவை என்ற ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும் என்று நம் நாட்டில் “அறிவியல்” பயின்று விட்டதாகக் கொட்டமடிக்கும் எந்த மேதையும் இன்று வரை கருதியதில்லை. ஒருபுறம் அவற்றை வெறும் மூடநம்பிக்கைகள் என்று ஒதுக்குவோரும் மறுபுறம் அவற்றில் தெய்வீக ஆற்றல் வெளிப்படுகிறது என்று போற்றி ஒதுங்குவோருமே உள்ளனர்.) கீழ்ச்சாதியினர் தம் தெய்வத்திடம், அதாவது தெய்வமாடியாகிய ஒரு மனிதனின் மீது ஏறி அவனை ஆட வைப்பதாகத் தாங்கள் நம்பும் தெய்வத்திடம் தம் தாய்மொழியில் முறையிடவோ சண்டையிடவோ அல்லது அதைத் தூற்றவோ கூடத் தயங்குவதில்லை. அவர்களது வேண்டுதல்கள் எப்போதும் இவ்வுலகைப் பற்றியவையே. மேற்ச்சாதியான் தன் வளமையை உலகுக்குக் காட்டவும் தனக்கும் தன் குடும்பத்துக்கும் மட்டும் இவ்வுலகிலும் மேலுலகிலும் அனைத்தும் கிடைக்க வேண்டுமென்றும் அல்லது மக்களை ஏமாற்றிக் கோயிற் சொத்துகளையும் ஊராரையும் கொள்ளையடிக்கவும் “பெருந்தெய்வங்”களுக்குக் காணிக்கைகளும் “திருப்பணி”களும் வேடிக்கைகளும் செய்கிறான். சுரண்டப்பட்ட மனித உழைப்பும் நேரடியான மனித உழைப்பும் அளவற்று வீணடிக்கப்படுகின்றன. தனது “வேண்டுகோள்களை” இறைவனுக்குச் சொல்வதற்கென்று இடைத்தரகர்களை வைத்துத் தனக்குப் புரியாத மொழியில் அவர்கள் கூறுவதைக் கேட்டுப் பூரித்துப் போகிறான். மேலுலகில் முடிவில்லாத இன்ப விளையாட்டே அவனது இறுதிக் குறிக்கோள்.

இந்த இரண்டு முறைகளில் நாம் ஏன் கீழ்ச்சாதி மக்களின் சிறு தெய்வ வழிபாட்டின் பக்கம் நிற்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை காண்போம். உலகில் மனித வடிவில் வணங்கப்படும் தெய்வங்களில் பெரும்பாலானவை வீர வணக்கத்திலிருந்து உருவானவையே. கட்டுத்திட்டமான நெறிமுறைகளை உடைய யூத மதத்தின் யகோவா வணக்கம் மோசேயைச் சிந்திக்காமல் நடைபெறுவதில்லை. அதே போல் முகமது நபி இல்லாமல் அல்லா இல்லை. இயேசு ஆகிய மகன் இன்றி ஆண்டவர் ஆகிய “தந்தை” இல்லை. இவையெல்லாம் வீர வழிபாட்டின் திரிந்த வடிவங்களே.

தமிழகத்திலும் வீர வழிபாடு நினைவுக் கெட்டாத காலந்தொட்டு வருவது. வீரச்செயல் புரிந்தோருக்கு நடுகல் நடுவது நமது மரபு.

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் (தொல். பொருள் 60)

என்று அதற்கு இலக்கணமும் வகுக்கப் பட்டிருக்கிறது.

பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் (அகம் 131)

போன்ற விளக்கங்களும் காணக்கிடக்கின்றன.

இயற்கையை வெற்றி கொள்வதற்கு மக்களுக்கு வழிகாட்டியோர், எதிரிகளிடமிருந்து அவர்களைக் காத்தோர், மக்களுக்குத் தொண்டாற்றியோர், பெருமைக்குரிய முன்னோர், செயற்கரிய செய்தோர், போர்க்களத்தில் வீரமரணம் எய்தியோர், இயற்கையல்லா முறையில் இறந்தோர் சிறு தெய்வங்களாயினர். வன்கொலையாக இளம் பருவத்தில் வாழ்க்கையை நுகரா நிலையில் மாண்டோர், சூலியாக மாண்ட பெண்கள், கொல்லப்பட்டோர் ஆகியோர் பேய் வடிவில் தம் கொலைக்குக் காரணமானவர்களை அல்லது தொய்வுறாத தமது இளமைத் துடிப்பு காரணமாக பொதுமக்களைத் துன்புறுத்துவர் என்ற அச்சத்தாலும் வணங்கப்பட்டனர். மற்றும் நன்மை அல்லது தீமை செய்யும் விலங்குகள், மரங்கள் போன்று உயிருள்ளவையும் உயிரற்றவையாகிய ஆறுகள், மலைகள், கடல்களும், கோள்கள், நாண்மீன்கள் போன்ற வான் பொருட்களும் கூட வணக்கத்துக்கு உரியவையாகின்றன.

இவ்வாறு வீர வணக்கத்திலிருந்து தோன்றி அவற்றின் தோற்றச் சூழலிலிருந்து அயற்பட்டும் அயற்படுத்தப்பட்டும் பல சிறு தெய்வங்கள் “பதவி உயர்வு” பெற்றுப் பெருந் தெய்வங்களாகியுள்ளன. இந்தப் பதவி உயர்த்தம் அனைத்தும் அவற்றை வணங்குவோர் பொருளியலில் அல்லது அரசியலில் உயர்வடைந்ததன் விளைவாகவோ அல்லது அத்தகைய முயற்சிகளுக்குத் துணையாகவோ நடைபெற்றுள்ளன என்பது அவற்றின் வரலாறுகளைக் கூர்ந்து ஆராய்ந்தால் புலப்படும். அரசியல் காரணியே முனைப்பாகச் செயற்பட்டுள்ளது பெரும்பான்மை.

நம் நாட்டில் சிறு தெய்வ வழிபாட்டை ஒழித்துப் பெருந்தெய்வ வழிபாட்டை மேற்கொள்ள அல்லது சிறு தெய்வங்களைப் பெருந்தெய்வங்களாக்கப் பல முயற்சிகள் நடந்துள்ளன. புதிய சமயங்களின் பின்னணியில் புதிய ஆளும் வகுப்புகள் உருவான காலங்களில் அவற்றின் தலைவர்களும் ஒடுக்கப்பட்ட சாதிகளிலிருந்து செல்வத்தில் அல்லது செல்வாக்கில் வளர்ச்சி பெற்றவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் உருவாகிவிட்ட நிலையில் தோன்றிய தலைவர்களும் பொதுச் சீர்த்திருத்தத் தலைவர்களும் இம்முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். சிறு தெய்வங்களைச் சிவன், காளி, திருமால் ஆகியோரோடு உறவுபடுத்துவதன் மூலம் இந்த நோக்கத்தை எய்த அவர்கள் முனைந்திருக்கிறார்கள். ஆனால் அவையனைத்தும் தோல்வியையே தழுவின. புதிய கதைகளும் புராணங்களின் கட்டற்ற பெருக்கமுமே ஒரே பயனாக இருந்துள்ளது. பழைய தெய்வங்கள் தொடர்ந்து வாழ்ந்து வரும் போது புதுப் புதுத் தெய்வங்களும் புதுப்புதுப் புராணங்களும் தோன்றிக் கொண்டேயிருக்கின்றன. நம் நாட்டிலுள்ள ஒவ்வொரு கோயிலையும், ஒவ்வொரு தெய்வத்தின் வரலாற்றையும் அணுகி ஆய்வோருக்கு அவற்றின் மீது படிந்திருக்கும் சமய, அரசியல் சுவடுகள் தெளிவாகவே தெரியும். வரலாற்றிலிருந்து தெய்வங்களையும் தெய்வங்களிலிருந்து வரலாற்றையும் தெளிவாகப் புரிந்துகொள்ள இந்த அணுகல் உதவும்.

நாகரீகத் தொடக்கத்தில் மனிதன் இயற்கையையும் பிற மனிதக் கூட்டங்களையும் எதிர்த்து இடைவிடாத போராட்டம் நடத்த வேண்டியிருந்த சூழ்நிலையில் அவனுக்கு இரு வகைகளிலும் அருந்தொண்டாற்றியவர்களின் நினைவை அவன் போற்றியதில் தவறேதுமில்லை. இன்றும் பொருளியலிலும் அதனால் அறிவு வாய்ப்பிலும் மாபெரும் ஏற்றத்தாழ்வுகளும், இயற்கை ஆற்றல்களை விட மனிதனின் கட்டுப்பாட்டை மீறிவிட்ட குமுக ஆற்றல்களின் முன் ஈடு கொடுத்து நிற்க முடியாத குமுகச் சூழல்களும் தலைவர் வழிபாட்டை உருவாக்கியது தவிர்க்க முடியாததாகிறது. ஒவ்வொரு நிகழ்விலும் தொடக்கத்தில் மக்களுக்கும் தனியாட்களான தலைவர்களுக்கும் இடையிலுள்ள முரண்பாடு நட்பு முரண்பாடாக இருந்து, பின்னர் அது பகை முரண்பாடாகவும் ஆனால் அகவறுமை காரணமாக மக்களால் புரிந்து கொள்ள முடியாமலும் மாறுகிறது. மக்களிடையில் பொருளியல் ஏற்றத்தாழ்வுகள் குறையுந் தோறும், அதன் விளைவாகவும் காரணமாகவும் மக்களிடையிலுள்ள உறவுகள் மேம்படுந்தோறும் இந்தப் பகை முரண்பாடு மீண்டும் நட்பு முரண்பாடாக மாறும். அப்போது இந்தத் தலைவர் வழிபாடு என்பது சிறந்தோரைப் போற்றுதல் என்பதாக மாறும். இன்று பொருள் குவிப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் குமுக அமைப்பிலிருந்து விடுபடும் போது மனிதனை இயக்கும் விசை குமுக ஏற்பு என்ற குறிக்கோளாகவே அமையும். எனவே அப்போது சிறந்தோரைப் போற்றுதல் என்பது குமுகத்தின் நலனுக்கு எதிராக இருக்க முடியாது.

சிறந்தோரைப் போற்றுதல் என்பதிலிருந்த சிறு தெய்வ வழிபாடாகி முழு முதற் கடவுள் வழிபாட்டிற் சென்று நிற்கும் இன்றைய நிலையிலிருந்து சிறந்தோரைப் போற்றுதல் என்ற நிலையைப் புதிய சூழ்நிலைகளில் எய்த வேண்டுமாயின் சிறு தெய்வ வழிபாட்டை நம் தொடக்கப் புள்ளியாகக் கொள்ளலாம். ஆனால் அதே நேரத்தில் ஒவ்வொரு சிறு தெய்வத்தின் தோற்றத்தையும் ஆய்வு செய்து அதன் உண்மையான குமுகக் குறிதகவை மக்களுக்கு எடுத்து விளக்கி அவர்களது பண்பாட்டை உயர்த்த வேண்டும். ஆய்வு நிலையில் பேரா.நா. வானமாமலை சில அடிப்படைப் பணிகளைப் புரிந்து (சில தவறுகள், முற்கோள்கள்[2] இருந்தாலும்) வழிகாட்டியிருக்கிறார். ஆனால் அந்த மக்களின் உண்மையான சிக்கல்களைக் கையிலெடுத்து அவற்றின் மெய்யான தீர்வுக்குச் சரியான வழிகாட்டி அவர்களை வழிநடத்தி அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற ஓர் இயக்கத்தால் தான் இப்பணியை முழுமையாக்கி நடத்தி வெற்றி பெற முடியும்.

இந்த இடத்தில் வரலாற்றில் “உயர்நிலை”த் தெய்வங்களைக் கைவிட்டு வீர வழிபாட்டுக்கு மாறிய ஒரு மக்களைப் பற்றி அறிந்து கொள்வது நல்லது. சப்பானியர் சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் மேற்கொண்ட “பேரரசு மீட்பியக்கம்” (Meiji Restoration) அதுவரை அங்கு செல்வாக்குப் பெற்றிருந்த மேற்சாதி மதமான புத்தத்தைப் புறக்கணித்து விட்டு வீர வழிபாட்டுச் சமயமான சிண்டோயியத்தை (Shintoism)த் தேசியச் சமயமாக்கியது. அதன் விளைவாக அதுவரை இழிவுபடுத்தப்பட்டு வந்த பெரும்பான்மையான கீழ்ச்சாதி மக்களுக்குத் தன்னம்பிக்கையும் தன்மான உணர்வும் உடலுழைப்பின் மீது மதிப்பும் உருவாகி இன்றைய புதிய சப்பான் உருவாவதற்கு அடிப்படையான உளவியல் சூழ்நிலை ஏற்பட்டது. நம் நாட்டில் இத்தகைய வீர வழிபாடான சிறு தெய்வங்கள் கீழ்ச்சாதிகளிலிருந்து அல்லது அவர்களது வாழ்வில் தொடர்பு கொண்ட தனி மனிதர்களிலிருந்து உண்டானவை. எனவே அவ்வழிபாட்டை உயர்த்திப் பிடிப்பதென்பது அவர்களை ஏற்றுக் கொள்வதாகவும் அவர்களையும் அவர்களது உழைப்பையும் மதிப்பதாகவும் பொருள்படும். அதனால் அவர்களுக்குத் தன்னம்பிக்கையும் தன்மதிப்பும் உருவாகும். அதிலிருந்து புதிய குமுகத்தைப் படைப்பதில் அவர்களது முழு ஒத்துழைப்பும் பங்களிப்பும் கிடைக்கும்.

ஆனால் பழைய மதங்களை நாம் அப்படியே என்றென்றும் கொண்டிருக்க வேண்டுமென்பதில்லை. சமயமில்லா, கடவுளில்லா, மூடநம்பிக்கைகளில்லா ஒரு குமுகத்தைப் படைக்க வேண்டுமென்பதே நம் இறுதிக் குறிக்கோள். ஆனால் அதை எய்துவதற்குள் சில இடைநிலைகளைத் தாண்ட வேண்டியிருக்கும். இயற்கையாற்றல்களும் குமுக விசைகளும் மனிதனின் கட்டுக்குள் இல்லாமலிருக்கும் வரை கடவுள் நம்பிக்கை ஏதோவொரு வடிவத்தில் இருந்து கொண்டுதானிருக்கும். ஆனால் அது குமுக வளர்ச்சிக்குத் தடையாயில்லாத வகையில் இருக்க வேண்டும்.

பெருந்தெய்வ வழிபாடு முழுக்க முழுக்க மன்னராட்சி மற்றும் நிலக்கிழமை மற்றும் வருணக் குமுக அமைப்பின் எதிரொளிப்பாகவும் அதற்கு வலுவூட்டுவதுமாகவே உள்ளது. மன்னர்களுக்குச் செய்யும் 16 வகைப் பணிவிடைகள் (சோடச உபசாரம்) தேர் ஊர்தல், வாகன உலா, கொடியேற்றுதல் முதலிய அனைத்தும் அக்குமுக அமைப்பையே எதிரொளிக்கின்றன. அதன் அடிப்படையில் தான் இன்று அரசியல் தலைவர்களுக்கும் மதிப்பு வழங்கப்படுகிறது. அத்துடன் பூசகருக்குக் கருவறை, அரசர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உள்மண்டபம். வணிகருக்கும் வேளாளருக்கும் திருச்சுற்று, பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் வெளிப்புறம் என்று வருண முறையிலேயே அவை அமைக்கப்பட்டிருக்கின்றன.

நிறைய சொத்துகளும் பெரும் உண்டியல் வருமானமும் உள்ள கோயில்களில் கூட திருவிழாவின் போது பெரும்பான்மை நாட்களும் பல்வேறு தரப்பு மக்களால் திருப்பணி(உபயம்)யாகவே விழா நடைபெறுகிறது. கோயில் வருமானத்திலிருந்து செய்யப்படும் செலவு மிகக்குறைவே. கோயில் வருமானத்தை தக்கார், அறங்காவலர்கள், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், அமைச்சர்கள், இறுதியில் ஏதாவதிருந்தால் பூசகர் ஆகியோர் கொள்ளையிட்டுக் கொள்கின்றனர்.

தமிழ்நாட்டிலுள்ள நன்செய் நிலங்களின் பரப்பில் நான்கிலொரு பங்கு திருக்கோயில்களுக்கும் மடங்களுக்கும் உடைமையாயிருக்கின்றன என்று ஒரு புள்ளிக் கணக்கு குறிப்பிடுகிறது. இவற்றின் பயன்பாடு குத்தகையாளான் முழு ஆதிக்கத்தினுள் சென்றால் வேளாண்மைச் செல்வம் பெருகும். அது போலவே பெரும்பரப்புகளில் கோயில்களுக்குச் சொந்தமான புன்செய் நிலங்களும். “ஊர் கூடித் தேரிழுத்தல்” என்ற ஒரு சொலவடையை பழமையாளர்கள் ஒன்றுபட்ட முயற்சிகளுக்கு உவமையாகப் பயன்படுத்துவர். ஆனால் உண்மையில் தேரிழுக்கும் போது வெளிப்படுவது நம் மக்களின் ஒற்றுமையல்ல, வேற்றுமைகளே. தேர் என்னும் பெயரில் மரக்கட்டைகளின் ஒருபெரும் குவியல் மீது ஒரு பொம்மையை வைத்து இழுக்கும் கேலிக்கூத்தே தேரோட்டம். இதில் பூணூலணிந்த பார்ப்பான் தேரில் வைத்து இழுக்கப்படுவான். முதல் வரிசை (மரியாதை)க்காரரென்றும் அறங்காவலரென்றும் தக்காரென்றும் அறநிலையத்துறை செயல் அலுவலர் என்றும் மேன்மக்கள் வடத்தைத் தொட்டு “இசைவு” வழங்குவர். பிற மக்கள் உடல் வருந்தி இழுப்பர். கட்டை போடுவதற்கென்று தனிச் சாதியார். பெரும்பாலும் மேற்சாதியினர், போற்றி(அர்ச்சனை)த் தட்டைக் காணிக்கையுடன் நீட்டுவர். இவ்வாறு தேரிழுக்கும் நடைமுறையில் நம் குமுகத்தில் நிலவும் அனைத்துச் சாதி, வகுப்பு வேறுபாடுகளும் வெளிப்படுகின்றன.

ஆண்டுக்கு இரண்டு முறை எல்லாக் கோயில்களிலும் “ஊர் கூடித் தேரிழுத்து” வந்த மக்கள் அதன் மூலம் தங்களுக்குள் ஒற்றுமைப் பட்டிருப்பார்களானால் வாணிகத்துக்காக இந்நாட்டினுள் நுழைந்த ஐரோப்பியக் குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் இந்நாட்டைக் கைப்பற்றி ஆளலாமென்ற எண்ணமும் அதன் அடுத்த கட்டமாக ஆளவேண்டுமென்ற அவாவும் அதனடிப்படையில் அதற்கான முயற்சிகளும் அதன் விளைவாக இருநூறாண்டு அடிமைத்தனமும் விளைந்திருக்காது. இது நிகழ்ந்து கொண்டிருந்த ஏறக்குறைய 250 ஆண்டுக்காலம் (1600 – 1850) “ஊர் கூடித் தேரிழுத்த நம் “ஒற்றுமை” எங்கே போய் ஒளிந்து கொண்டது?

பல நூறு தன்கள் எடையுள்ள மரத்தைத் தேர் என்று சொல்லி அதில் ஒரு பொம்மையையும் பார்ப்பனர்களையும் வைத்து இழுப்பதும், மக்களுக்கு உண்மையான ஆர்வமில்லா நிலையில் பாரதிய சனதா கட்சி, இந்து முன்னணி, இரா.சே.ச. போன்ற பழமையாளர்கள் தெருத் தெருவாக மக்களைக் கெஞ்சித் திரிவதும் தேவையற்ற கிறுக்குத் தனங்கள். தேர் மரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட்டு விட்டுத் தேர்த் திருவிழாக்களை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்.

சிறு தெய்வ வழிபாட்டிலும் சாதி முறை நிலவுகிறது. அத்துடன் தனித்தனிச் சாதிகளுக்கு ஒரே தெய்வத்துக்குத் தனித்தனிக் கோயில்கள் உள்ளன. பொதுக் கோயில்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனியிடமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்த போராட்டங்கள் பல இடங்களில் தோன்றியுள்ளன. சில இடங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்றும் ஒரே கோயிலில் தனித்தனித் திருவிழாக்கள் அல்லது கொடைவிழாக்கள் நடத்தப்படும் அளவுக்கு இப்போராட்டங்கள் முன்னேறியுள்ளன.

மொத்தத்தில் நம் குமுகத்திலுள்ள வழிபாட்டு முறையே சாதிகளற்ற ஒரு மக்களாட்சிக் குமுகத்துக்கு உகந்ததாயில்லை. எனவே அனைத்து மக்களும் சமத்துவத்துடன் அமைதியாகக் கலந்து எளிமையாகத் தம் மன அமைதியைத் தேடும் வகையில் கிறித்தவம், முகம்மதியம் போன்ற சமயங்களில் உள்ளவாறு அகன்ற, காற்றோட்டமும் வெளிச்சமுமுடைய தூய வழிபாட்டு மண்டபங்களில் வழிபாடு செய்யும் வகையில் உள்நாட்டு மதத்தை மேம்படுத்த வேண்டும். அத்தகைய கருத்துகளைப் பரப்பும் “ஆன்மிக”த் தலைவர் எவராவது உருவானால் அவருடன் தோளோடு தோள் நின்று அந்த இயக்கத்தை வளர்க்க வேண்டும்.

கிட்டத்தட்ட 6-ம் நூற்றாண்டு தொடங்கி பத்தாம் நூற்றாண்டுக்குள் தமிழகத்தில் பெருங்கோயில்கள் எடுத்து அவற்றுக்கு நிறைய நிலங்களும் எழுதி வைக்கும் பழக்கம் மன்னர்களிடையில் வேர் கொண்டது. சோழப் பேரரசின் காலத்தில் அரசின் ஓர் உறுப்பாகவே கோயில்கள் செயற்படத் தொடங்கிவிட்டன. மக்களிடம் வரி தண்டுவதிலிருந்து நலப்பணிகள் செய்வது, படையணிகள் பராமரிப்பது வரை அனைத்துப் பணிகளிலும் கோயில்கள் ஈடுபட்டன. இன்றோ அத்தகைய பணிகள் எதுவுமில்லை. கடவுளுக்குப் படையல் செய்வது, இசை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நிகழ்த்துவது என்ற அளவில் சிறிய பணிகளே மேற்கொள்ளப்படுகின்றன. அதிலும் பெரும் பணம் சுரண்டப்படுகிறது. எனவே இயல்பாகவே நிலங்கள் குத்தகையாளர்களிடம் சென்றடைந்து விட்டன. இந்நிலங்களை கோயில்களுக்கு மீட்க வேண்டும் என்ற குரல் வலுவாகக் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு எதிர்க்குரல் கொடுப்பவர் எவருமில்லை.

மன்னராட்சிக் காலத்தில் அரசின் அனைத்துப் பணிகளுமே கோயில்கள் மூலம் செய்யப்பட்டதால் அதற்குத் தேவையான பொருளியல் அடிப்படைக்கு நிலங்கள் தேவைப்பட்டன. இன்றோ வழிபாடு தவிர கோயில்கள் வேறெந்த நோக்கத்தையும் நிறைவேற்றவில்லை.

பண்டைக் கோயில்களில் பெரும்பாலானவை முன்பு கருவறை மட்டும் இருந்து பின்னர் வெவ்வேறு மன்னர்கள் காலத்தில் ஒவ்வொரு சுற்றாக விரிவாக்கப்பட்டு வந்துள்ளன. எனவே கட்டிட வடிவமைப்பு ஒழுங்கற்றதாகவும் உள்ளே செல்லச் செல்ல காற்றும் வெளிச்சமும் புக முடியாத நிலையில் இருளடைந்து வெளவால்களின் உறைவிடமாகி ஈரமும் நாற்றமும் கொண்டு விளங்குகின்றன. ஒரு நலமான வழிபாட்டுக்கு இவை தகுதியற்றவையாகிவிட்டன. எனவே இக்கோயில்களைத் தகர்த்து விடலாம். கோயிலின் சொத்துக்களைக் குத்தகையாளருக்குச் சந்தை விலையில் பாதி விலையை வாங்கிக் கொண்டு கொடுத்துவிடலாம். பொதுமக்களின் குத்தகைச் சொத்துகளில் இந்நடைமுறையே கையாளப்படுகிறது. இதன் மூலம் நிலங்களின் விளைப்புத் திறன் உயரும். அந்நிலங்களில் பயிரிட்டு வரும் கீழ்ச்சாதி மக்கள் இதனால் பயன் பெறுவர். ஆங்காங்கிருக்கும் சிறு தெய்வக் கோயில்களைக் கூட இடித்துவிட்டு ஒவ்வொரு பகுதிக் கென்று மக்கள் எண்ணிக்கை அடிப்படையில் வெறும் வழிபாட்டு மண்டபங்களை மட்டும் கொண்ட கோயில்களைக் கட்டலாம். கோயில் பராமரிப்புச் செலவை அவ்வப்பகுதி மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். இதை அடுத்த கட்டமாக வைத்துக் கொள்ளலாம். நாள் செல்லச் செல்ல, குமுகம் முன்னேற முன்னேற இந்தக் கோயிலும் செல்வாக்கிழந்து கோயிலில்லா, கடவுளில்லா குமுகம் உருவாகும். கோயில்களைப் பராமரிக்க பணம் செலுத்துவதில் மக்கள் காட்டும் ஆர்வம் அல்லது ஆர்வமின்மையே சமயத்தின் அல்லது கோயிலின் தேவை அல்லது தேவையின்மையை அளக்கும் அளவு கோலாகிவிடும்.

(தொடரும்)

அடிக்குறிப்புகள்:

[1] மிலட்டன் சிங்கர் எனும் மேனாட்டு அறிஞர் இக்கோட்பாட்டை உருவாக்கியவர் என்று தெரிகிறது.
[2] முற்கோள் : Prejudice

குமரிமைந்தன்
kumarimainthan@sify.com
htpp://kumarimainthan.blogspot.com

Series Navigation

குமரிமைந்தன்

குமரிமைந்தன்

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல்

This entry is part [part not set] of 39 in the series 20060526_Issue

குமரிமைந்தன்



1. அறிமுகம்

தமிழகத்தில் திராவிடர் இயக்கம் தோன்றி வளர்ந்து மக்களிடம் செல்வாக்குப் பெற்று வந்த போது இங்கிருந்த “பொதுமை”யினர் அதனை வெறும் பண்பாட்டு இயக்கம் என ஒதுக்கித் தள்ளினர். தங்கள் கொச்சைப் பொருளிய(Economism)ச் சகதியினுள் சிக்கித் தடுமாறினர். பின்னர் சீனத்தில் மாசேதுங் பண்பாட்டுப் புரட்சியை நடத்திய பிற்பாடு அவரைப் பின்பற்றியோர் பீக்கிங்கில் பெய்த மழைக்கு இங்கு குடைபிடித்துக் கொண்டிருக்கின்றனர். அங்கு மழைவிட்ட பின்னரும் இங்கு குடை பிடிப்பது நிற்கவில்லை; பொருளியல் சிக்கல்களைத் தொழிற்சங்க வாணிகர்களின் மொத்த வேட்டைக் களமாக்கிவிட்டு இவர்கள் ஓடிவிட்டனர். அவ்வாறு ஓடியவர்கள் பண்பாட்டுப் பணிகள் என்ற பெயரால் வெறும் கலை இலக்கியங்களைக் கிளறி அதிலேயே இன்பம் காணுகின்றனர். எழுதப் பேனாவும் தாளும் அச்சிட அச்சகமும் சுவர்களில் விளம்பரம் எழுதவும் விற்றுக் கொடுக்கவும் நன்கொடை தண்டவும் இளைஞர் கூட்டமும் இருப்பதால் இதழ்கள் நடத்துவதோடு தங்கள் “பண்பாட்டுப் பணி” நிறைவு பெற்றதாக நம்பிவிடுகின்றனர். அல்லது நம்பச் சொல்கின்றனர். இந்த நிலையில் பண்பாடு என்பது என்ன, பொருளியல் வாழ்வுக்கும் அதற்கும் உரிய உறவு என்ன, பண்பாட்டுப் பணியில் கலை, இலக்கியம் ஆகியவற்றின் இடம் யாது, தமிழகம் இன்றுள்ள நிலையில் பொருளியல், பண்பாட்டுக் கலை இலக்கியப் பணிகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது, என்ற கேள்விகளுக்கு நாம் விடை காண வேண்டியவர்களாகிறோம்.

பண்பாடு என்பதை மார்க்சியம் குமுகத் (சமுகத்) தன்னுணர்வு என்ற சொல்லால் குறிக்கிறது. இதில், ஒரு மக்களின் சமயம், உணவு முறை, திருமண உறவுகள், அவர்கள் அணியும் உடை, சட்டங்கள், அரசியல் அமைப்பு, மெய்யியல், அறிவியல், தொழில்நுட்பம், நம்பிக்கைகள், சடங்குகள், அவர்கள் கொண்டாடும் திருநாட்கள், மொழி, கலை, இலக்கியம் ஆகியவை அடங்கும். அறிவியல், தொழில் நுட்பம் ஆகியவை படைப்பு விசைகளான பொருளியல் அடித்தளத்தோடு நேரடியாகத் தொடர்பு கொள்ளும் அதே வேளையில் பொருளியல் அடித்தளத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் சுவையான வடிவங்களில் வடித்துக் காட்டுவனவாகக் கலையும் இலக்கியமும் செயற்படுகின்றன.

பொருளியல் மற்றும் பண்பாட்டுக் கூறுகளைத் தன்னுள் தேக்கி வைத்து அவற்றை வளப்படுத்துவதிலும் அதன் மூலம் தான் வளர்வதிலும் மொழி செயற்படுத்துகிறது. கலை இலக்கிய வடிவங்களில் பொருளியல் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துவதில் மொழியே எலும்பும் சதையுமாகச் செயற்படுகிறது.

கலை இலக்கியம் பற்றித் தெள்ளத் தெளிவாகத் தமிழ்ப் பெரும் புலவர் இளங்கோவடிகள் கூறுகிறார்.

குமரி வேங்கடம் குணகுட கடலா
மண்திணி மருங்கில் தண்டமிழ் வரைப்பில்
செந்தமிழ் கொடுந்தமிழ் என்றிரு பகுதியின்
ஐந்திணை மருங்கின் அறம்பொருள் இன்பம்
மக்கள் தேவர் எனஇரு சார்க்கும்
ஒத்த மரபின் ஒழுக்கொடு புணர
எழுத்தொடு புணர்ந்தசொல் அகத்தெழு பொருளை
இழுக்கா யாப்பின் அகனும் புறனும்
அவற்று வழிப்படூஉம் செவ்விசிறந்(து) ஓங்கிய
பாடலும் எழாலும்[1] பண்ணும் பாணியும்
அரங்கு விலக்கே ஆடலென்(று) அனைத்தும்
ஒருங்குடன் தழீஇ உடம்படக் கிடந்த
வரியும் குரவையும் சேதமும் என்றிவை
தெரிவுறு வகையால் செந்தமிழ் இயற்கையில்
ஆடிநல் நீழலின் நீடிருங் குன்றம்
காட்டு வார்போல் கருத்துவெளிப் படுத்து …., த்

தன் நூலை முடிக்கின்றார்.[2]

சிந்தனை பற்றிய எதிரொளிப்புக் கோட்பாடு பற்றி லெனின் பருப்பொருளியமும் பட்டறிவுத் திறனாய்வும்[3] என்ற தன் நூலில் குறிப்பிடுகிறார்.[4]

ஆனால் வாழ்க்கைக்கும் கலை இலக்கியங்களுக்கும் உள்ள தொடர்பு முற்றிலும் பொருளுக்கும் கண்ணாடியில் அதன் நிழலுக்கும் உள்ள தொடர்பு போன்றதல்ல. கலை இலக்கியங்கள் தங்கள் தாக்கத்தைக் குமுகத்தின் மீது ஏற்படுத்த முடியும். ஆயினும் அவை இரண்டுக்கும் உள்ள இடைவெளி அளவோடு இருந்தால் தான் இது நடைபெறும். இந்த எல்லையைத் தாண்டிக் கலை இலக்கியம் செல்ல முற்பட்டால் அது மக்களிடமிருந்து தனிமைப்பட்டு வெறும் வேடிக்கைப் பொருளாக அல்லது கனவாக மாறிவிடும். வாழ்க்கைக்கும் கலை இலக்கியங்களுக்கும் உள்ள இந்த இடைவெளியும் நிலையானதல்ல. குமுக மாற்ற வேகத்திற்கேற்ப அது கூடிக் குறையும்.

பண்பாடு என்ற பெயரால் கலை இலக்கியங்களை மட்டும் தூக்கிப் பிடிப்பது என்பது இவ்வகையில் நிழலைப் பிடிக்க முயல்வது போன்றதே. இவ்வாறு பண்பாட்டைத் தொடாத கலை இலக்கிய முயற்சிகளைச் சுட்டிக்காட்டிவிட்டு பண்பாட்டுச் சிக்கலினுள் நுழைவோம்.

ஒவ்வொரு நாட்டு மக்களிடையிலும் இருவேறு பண்பாடுகள் உள்ளன என்று லெனின் கூறினார். சொற்களில் கூறவதாயின் இவை இரண்டும் உழைக்கும் மக்களின் பண்பாடும் உடமை வகுப்பின் பண்பாடும் ஆகும். நம் நாட்டின் இப்பண்பாடுகள் எவ்வாறு நிலவுகின்றன என்று பார்ப்போம்.

நம் நாட்டில் சாதி அடுக்குகளுக்கும் பொருளியில் வகுப்பு அடுக்குகளுக்கும், அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில விதிவிலக்குகள் இருந்தாலும், ஓர் ஒத்திசைவு உண்டு. எனவே மேற்கூறபட்ட இரு பண்பாடுகளும் சாதிப் பண்பாடுகளாகவே நம்மிடையே நிலவுகின்றன. அவற்றை நாம் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். அதற்கு முன் நாம் ஒன்றை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும். நம் நாட்டின் வரலாற்றுப் போக்கில் பொருளியலில் மேல் நிலையிலிருந்த பல மக்கள் குழுவினர் அரசியல் மாற்றங்களினால் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். எனவே அவர்களிடம் முன்பு நிலவிய சில உடைமை வகுப்புப் பண்பாட்டுக் கூறுகள் அல்லது கருத்துக்கள் இன்றும் ஒட்டிக் கொண்டிருக்கக் கூடும். ஆனால் இன்றைய பொருளியல் நிலைமையின் காரணமாகப் பலர் இப்பண்பாட்டுக் கூறுகளைக் கைவிட்டாலும் இன்று நாம் அவற்றின் இடத்தில் கடைப்பிடிக்கும் புதிய கூறுகளைப் இழித்துக் கூறுவதன் மூலம் தம் முன்னாள் பண்பாட்டையே தாம் இன்னும் வைத்துக் கொண்டிருப்பதாகக் காட்டிக் கொள்வார்கள். இந்த நிகழ்முறையை மனதில் கொண்டால் தான் நம் குமுகப் போக்கை நம்மால் சரியாகப் புரிந்துகொள்ள முடியும்.

நம் நாட்டில் மேற்சாதியினரும் கீழ்ச்சாதியினரும் அடிப்படையில் முற்றிலும் வேறுவேறான இரு பண்பாடுகளைக் கொண்டுள்ளனர். இருந்தாலும் ஒரே மண்ணில் வாழ்வதாலும் அன்றாட வாழ்வில் ஏற்படுகின்ற தவிர்க்க முடியாத தொடர்புகளினாலும் பல வேளைகளில் இவ்விரு பண்பாடுகளுக்கும் இடையிலுள்ள எல்லைக்கோட்டைத் துல்லியமாக அறிய முடியாமல் கூட இருக்கும். பொருளியல் மற்றும் அரசியல் மாற்றங்களால் கீழ்ச்சாதியினரால் சிலர் மேம்பாடு அடையும் போது மேற்சாதிப் பண்பாடுகளைக் கைக்கொள்கின்றனர். இந்த நிகழ்முறை நம் மண்ணில் தொன்று தொட்டே நிலவி வரும் ஒன்றாகும். இதனைப் புதுப்பார்ப்பனியம் என்று நம்மில் சிலர் அழைக்கின்றோம். இந்த நிகழ்முறையை நாம் புதிதாக அறிகிறோமே தவிர நிகழ்முறை புதிதல்ல. எனவே இதனைப் பார்ப்பனியம் என்றே அழைக்க வேண்டும். தான் தன் சாதியினரின் சராசரிப் பொருளியல் நிலையை விட உயர்வடையும் போது தன் சாதியினரையும் அவர்களுடைய பண்பாட்டையும் இழிவாக் கருதி மேல் சாதியினருடன், அவர்கள் எட்டி உதைத்தாலும் அவ்வாறு உதைத்த காலை கட்டிப்படித்துக் கொண்டு உறவாடுவதைத் தான் பார்ப்பனியம் என்று கூற வேண்டும். இதுவே பார்ப்பனர்களின் தொடர்ச்சியான மேலாண்மைக்கு உயிரூற்றாகவும் கீழ்ச்சாதியினரின் மீளா அடிமைத் தனத்துக்கு உரமாகவும் விளங்குகிறது.

பார்ப்பனர்கள் தம் “சுயதர்மத்தை”க் கைவிட்டு வெளியே வந்தாலும் கூட நம் நாட்டிலுள்ள மேற்சாதியினர் உட்பட்ட “பார்ப்பனியர்கள்” (புதுப்பார்ப்பனர் என்பதைப் பார்ப்பனியர்கள் என்ற சொல்லால் குறிப்பதே சரி என்று கருதுகிறேன்.) அதை விரும்புவதில்லை. பார்ப்பனர்கள் தம் “சுயதர்மத்தை”க் கைவிட்டு வேறு வகை வாழ்க்கையில் புக முயன்றால் இந்தப் பார்ப்பனியர்கள் உடனே கூக்குரலிடுவர். வள்ளுவர் கூட,

மறப்பினும் ஓத்துக் கொள்ளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்

(வேதத்தைப் பார்ப்பான் மறந்துவிட்டால் கூட மீண்டும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அவன் தன் குலவொழுக்கத்தைக் கைவிட்டால் அதை மீட்க முடியாது) என்று கூறினார்.

அரிசி விற்றிடும் அந்தணர்க் கோர் மழை
வரிசை தப்பிய மன்னருக் கோர் மழை
புருச னைக்கொன்ற பூவையர்க் கோர் மழை
வருசம் மூன்றும ழையெனப் பெய்யுமே.

என்று மழை தப்புவதற்கான காரணங்களை விவேக சிந்தாமணி தொகுத்துக் கூறுகிறது.

“குலவொழுக்கம் குன்றிய் பார்ப்பான் கணவனைக் கொன்ற பெண்ணோடு ஒப்பிடப்படுகிறான். புத்தர் முதல் செயகாந்தன் வரை உண்மையான பார்ப்பனனின் இலக்கணத்தைக் கூறுவதன் மூலம் இதே கருத்தைத் தான் முன்வைக்கின்றனர்.

நாம் மேலே தொகுத்துக் கூறிய பண்பாடுகளில் பார்ப்பனர்களும் அவர்களை ஒட்டி பிற மேற்சாதியினரும் பின்பற்றுகிற ஒழுக்கங்களை ஆரிய ஒழுக்கங்கள் என்றும் கீழ்ச்சாதியினர் அவற்றைக் கைகொள்ளுவதைச் சங்கதப்படுத்துதல் (Sanskritisation) என்றும் கூறுகின்றனர் குமுக இயல் ஆய்வாளர்கள்.[5] ஆனால் சங்கதத்துக்கோ வேதத்துக்குரியவர் என்று நம்பப்படும் ஆரியர்களுக்கோ இந்தப் பண்பாட்டுக் கூறுகளுடன் எந்தத் தொடர்புமில்லை. எடுத்துக்காட்டுக்குச் சிலவற்றை மேற்கொள்வோம்.

வேதங்களோ வேள்வி நடத்தும் பார்ப்பனரோ ஊன் உணவை விலக்கவில்லை. உயிர்க்கொலை வேள்விகளை நடத்துவதே வேதிய (வைதீக) சமயமாகிய பார்ப்பன சமயமாகும். இதனை எதிர்த்தவையே புத்தமும் சமணமும். புத்த தமிழ்க் காப்பியமாகிய மணிமேகலையில் வரும் ஆபுத்திரன் வரலாறு இதனைத் தெற்றென விளக்குகிறது. வேள்வியில் பலியிடுவதற்காகக் கட்டப்பட்டிருந்த ஆமாட்டை அவிழ்த்து விடுவித்துவிட்டான் என்பதற்காகப் பார்ப்பனர்களால் தன் பார்ப்பன வளர்ப்புப் பெற்றோரிடமிருந்து அவன் துரத்தப்படுகிறான். இதிலிருந்து இரண்டாம் நூற்றாண்டின் இறுதிக் காலம் வரை பார்ப்பனர்கள் வேள்விகளில் மாட்டை அடித்துத் தின்று வந்தார்கள் அல்லது அத்தகைய கருத்து நிலவியது என்பது புலனாகிறது. பண்டப் படைப்பு வளர்ச்சியாலும் வேளாண்மை மற்றும் வாணிக வளர்ச்சிகளின் தேவைக்காகவும் ஏற்பட்ட மாட்டு உழைப்பின் தேவையால் மாட்டு வேள்வி எதிர்ப்பு உருவாகியது. பின்னர் வாணிகர்களின் மதமாகிய சமணத்தால் உயிர்க்கொலை எதிர்ப்பாக மட்டுமின்றி மூக்கில் திரையும் கையில் மயிற்பீலியும் இருட்டறை வாழ்வுமாகக் கோணல் வடிவம் பெற்றதே மரக்கறி உணவின் தோற்றம். அதே போல் பெண்ணின் அப்பழுக்கற்ற கற்பு வேதங்களிலோ புராணங்களிலோ வேண்டப்படவில்லை. அரசர்களின் மனைவிகள் ஆண்பிள்ளை பெறுவதற்காகக் கணவனின் உடன்பிறந்தோர், தாயாதிகள், குலகுரு, யாராவது ஒரு துறவி அல்லது எந்த ஓர் ஆண்மகன், பலிகொடுக்கப்பட்ட குதிரை இவர்களுடனெல்லாம் உடலுறவு கொள்ளக் கட்டாயப்படுத்தப் பட்டனர். தலைமகன் உரிமை (Male primogeniture) என்ற அடிப்படையில் அரசன் இறந்த பின் நாட்டின் ஆட்சி மாற்றத்தில் குழப்பங்கள் நிகழாமல் இருப்பதற்காக ஓர் ஆண்மகவைப் பெற்றெடுக்க வேண்டிய ஒரு குமுகக் கடமையாக அவள் இவையனைத்தையும் செய்ய வேண்டியிருந்தது. பார்ப்பனத் திருமணங்களில் கூறப்படும் மந்திரங்களில் மணமகள் மணமகனுக்குத் தன்னை ஒப்படைக்கும் முன் யார் யாருக்கு உடமைப்பட்டவள் என்பது தொகுத்துக் கூறப்படுகிறது.

ஆனால் முதன்முதலில் கூட்டுக் குடும்ப உழைப்புக்கு மாறான ஒரு வழியில் செல்வத்தைத் திரட்டிய வாணிக வகுப்பே தன் தனிச் செல்வத் திரளைப் பெற்றுக் கொள்வதற்குத் தனக்கேயுரிய பிள்ளைகள் வேண்டுமென்று பெண்ணடிமையை உருவாக்கியது. இந்த நோக்கத்தில் கணவனோடு வாழும் போது மட்டும் பிற ஆடவரை நாடக்கூடாது என்ற பகுத்தறிவு எல்லையை மீறித் திருமணத்துக்கு முன்னரும் கணவன் இறந்த பின்னரும் கூட எவரையும் பெண் நாடக்கூடாது என்ற கொடுங்கோன்மைக்கு அவளை ஆளாக்கினர். இவ்வாறு குமுக வளர்ச்சியில் வெவ்வேறு கட்டங்களில் புதியதாகத் தோன்றிய “உயர்ந்த” பண்பாட்டுக் கூறகளை யெல்லாம் குமுக மேல்மட்டத்திலிருந்த பார்ப்பனர் தம் நிலையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று. இவ்வாறு ஒவ்வொரு மேற்சாதிப் பண்பாட்டுக் கூறும் பணம் படைத்த பூரியப் பண்பாட்டுக் கூறு என்பதை நாம் பின்னால் விளக்குவோம். மேலைநாட்டு ஆய்வாளர்களும் அவர்களைப் பின்பற்றும் நம் நாட்டு அறிஞர்களும் அறியாத ஒரு சொல்வழக்கு இவ்வொழுக்கங்கள் பார்ப்பனர்ககுரியவையல்ல என்பதை நம் நாட்டுப்புற மக்கள் அறிந்திருந்தார்கள் என்பதைக் காட்டுகிறது. புலாலுணவைக் கைவிடல், காலையிலெழுந்து குளித்துத் திருநீறு பூசி மணியடித்துப் பூசைசெய்தல், உடுத்தும் உடையை அன்றாடம் துவைத்துக் கட்டல். பார்ப்பனரை வைத்துச் சடங்குகள் நிகழ்த்தல். கைம்பென் மறுமணத்தை மறுத்தல். மணவிலக்கு. மறுமணம் ஆகியவற்றை விலக்கல். உழைப்பை வெறுத்தல். சாதிவேற்றுமையை நுணுக்கமாகக் கடைப்பிடித்தல். ஆளுவோருக்கு எப்போதும் சார்பாக இருத்தல் போன்ற ஒழுக்கங்களைக் கையாள்வதற்கு வெள்ளாளக் கட்டு மேற்கொள்ளுதல் என்ற சொல் வழங்குகிறது என்பதை இங்கு சொல்லி விடுகிறோம். எனவே மேற்சாதிப் பண்பாட்டு ஒழுக்கங்களைக் கீழ்ச் சாதியினர் கைக்கொள்ளும் செயல்முறையைப் பார்ப்பனியம் என்று குறிப்பிடுவதை விட “பார்ப்பனியம் எனப்படும் வெள்ளாளக் கட்டு” எனக் குறிப்பிடுவது பொருத்தமாகவும் கருத்தைத் தெளிவாக விளக்குவதாகவும் அமையும்.

பண்பாட்டுப் புரட்சி பற்றிப் பேசும் நம் நாட்டிலுள்ள எந்தக் குழுவுக்கும் நாம் இங்கு கூற இருப்பவை தான் நம் நாட்டில் நிலவும் உண்மையான பண்பாட்டுக் கூறுகள் என்ற சிந்தனை கூடக் கிடையாது என்பதை நம்மால் அறுதியிட்டுக் கூற முடியும். அடுத்து, அவர்கள் கூறும் புதிய பண்பாடு எது என்பதிலோ அது எப்படி இருக்கும், எப்படி இருக்க வேண்டுமென்பதிலோ சிந்தனையோ தெளிவோ அவர்களிடம் இல்லை. அவர்கள் செய்வதெல்லாம் சில கலை, இலக்கியங்களைத் திறனாய்வதும் அக்கப்போர் அரசியல் பேசுவதும் “புதிய மக்களாட்சிப் புரட்சி” நடந்தவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறுவதும் தான். எதுவென்று தாங்களே அறியாதவர்கள், எங்கிருக்கிறோம் என்பதையும் அறியாத நிலையில் பண்பாட்டுப் புரட்சி பற்றிப் பேசுவது நம் நாட்டில் உள்ள இரங்கத்தக்க நிலைகளில் மிகக் கொடியது. நிற்கிற இடமும் அறியாமல் கடக்க வேண்டிய பாதையும் புரியாமல் இலக்கிலும் தெளிவில்லாமல் புதிய பண்பாட்டைப் பற்றிக் கூக்குரல் எழுப்பும் இவர்களை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு நமது தேடுதலைத் தொடர்வோம்.

ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்கு நடக்க வேண்டுமாயின் முதலில் ஒரு காலை நின்ற இடத்தில் ஊன்றிக்கொண்டு மறுகாலைத் தூக்க வேண்டும். நமது குமுகத்தில் இருவேறு பண்பாடுகள் நிலவுகின்றன. இந்த இரண்டில் எதில் நாம் காலை ஊன்றிக்கொள்ள வேண்டும் எதிலிருந்து காலை நகர்த்த வேண்டுமென்று பார்ப்போம். ஒரு பாட்டாளி வகுப்புப் பண்பாட்டைப் படைப்பது நமது இலக்கு என்ற தெளிவிலிருந்து நாம் தொடங்க வேண்டும். நாம் மேலே கூறிய இரண்டு வகைப் பண்பாடுகளிலும் உழைக்கும் மக்களின் பண்பாடாக விளங்குவது கீழ்ச்சாதியினரின் பண்பாடே என்பதை நாம் காணலாம்.

பண்பாட்டுக் கூறுகளை ஒவ்வொன்றாக எடுத்து ஆய்வோம். இந்த ஆய்வில் முற்பட்ட சாதிகள் மேற்சாதிகளென்றும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகள் கீழ்ச்சாதிகளென்றும் குறிக்கப்பட்டுள்ளன. கீழ்ச் சாதிகளின் பண்பாடு எனும் போது அவர்களில் பெரும்பாலோர் வாழ்கின்ற நாட்டுப்புறங்களில் நிலவுவற்றையும் மேற்சாதிகளின் பண்பாடு எனும் போது அவர்களில் பெரும்பாலோர் வாழ்கின்ற நகர்ப்புறங்களில் நிலவுபவற்றையும் நாம் எடுத்துக்காட்டுகிறோம். இனி பண்பாட்டுக் கூறுகளை பார்ப்போம்.

(தொடரும்…….)

அடிக்குறிப்புகள்:

[1] எழால் – யாழ்

[2] சிலப்பதிகாரம், நூற்கட்டுரை

[3] Materialism and Emprio Criticism

[4] சிந்தனை பற்றிய எதிரொளிப்புக் கோட்பாடு பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் தான் மேலை உலகில் தோன்றி வளர்ந்தது. சங்கம் மருவிய காலத்துக்கு (கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கு) உரிய சிலப்பதிகாரத்தில் இலக்கியம் பற்றிய இத்தகைய தெளிவான கோட்பாடு உருவான குமுகச் சூழல் பற்றிப் பேசினால் நம் “மார்க்சியத்” தோழர்களுக்குக் எரிச்சல் வரும். சங்க காலத்தைக் குக்குலங்களின் (பழங்குடியினர்) காலமென்று காட்டவே அவர்கள் விரும்புவர். தொல்காப்பியத்தில் காணப்படும் எண்ணற்ற இலக்கிய வடிவங்கள் காட்டும் உயர்ந்த நாகரீகப் பின்னணியைப் பார்க்க அவர்களுக்குப் பிடிக்காது. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அனைத்தும் சமற்கிருதத்திலிருந்து தான் தமிழுக்கு வந்ததென்று காட்டும் பார்ப்பனியச் சிந்தனை. இன்னொன்று குமுகம் எப்போதும் முன்னோக்கியே நகரும் என்ற தவறான கருத்து அல்லது பொய்யான வாதம். முதல் காரணமே பெரும்பாலும் இரண்டாம் காரணத்துக்கு அடிப்படையாக இருக்கிறது. பேரா.க.சிவத்தம்பி, பேரா. கைலாசபதி ஆகியோர் இச்சிந்தனைகளை வளர்த்துப் பரப்பிய மிகப்பெரும் “மார்க்சியர்கள்” என்ற பெருமைக்கு உரியவர்கள். இப்பணியைத் தொடங்கி வைத்த பேரா.நா.வானமாமலையையும் நாம் மறந்து விடக்கூடாது. மார்க்கியம் என்பது தமிழ்பப் பழிப்பு, தமிழ் ஒழிப்பு என்பதே என்ற மனப்பான்மையைப் பரப்பியோரில் இம்மூவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களில்லை.

[5] சங்கதப்படுத்தல் என்ற சொல்லை எம்.என். சீனிவாசு என்ற பார்ப்பன ஆய்வாளர் பயன்படுத்தினார். அன்றிலிருந்து பலர் அச்சொல்லைப் பிடித்துக் கொண்டனர். ஆனால் எம்.என். சீனிவாசு ஆங்கிலத்தில் பயன்படுத்திய Sanskritisation என்ற சொல் சில பார்ப்பனரல்லா மேற்சாதி அறிஞர்களுக்குப் பிடிக்கவில்லை. வேளாளச் சாதியினராகிய முத்துச் சண்முகனார் அதை “மேனிலையாக்கம்” என மொழிபெயர்த்தார். அதாவது சங்கதமும் அதை அடையாளமாகக் கொண்ட மேற்சாதிப் பண்பாட்டுக் கூறுகளும் கீழ்ச்சாதியினரின் பண்பாடுகளையும் அவர்களது மொழிமையும் விட மேம்பட்டவை என்பதைச் “சங்கதப்படுத்தல்” என்ற சொல் வெளிப்படையாகக் காட்டவில்லை என்பது அவர்களது மனக்குறை. எனவே தான் “மேனிலையாக்கம்” என்ற சொல்லை வடித்து வழக்கிற்குக் கொண்டுவர முயல்கின்றனர். இவரைப் பின்பற்றியே சி. கனகசபாபதி என்பவரும் பாரதியும் பாரதிதாசனும் – ஒப்பியல் திறனாய்வு என்ற தன் நூலில் பார்ப்பனரின் பண்பாடு உயர்வானது என்ற கருத்தை வெளிப்படுத்துகிறார்.

Series Navigation

குமரிமைந்தன்

குமரிமைந்தன்