எடின்பரோ குறிப்புகள் – 19

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

இரா.முருகன்


எடின்பரோ குறிப்புகள் – 19

இங்கிலாந்தில் கோடை காலம் தொடங்கிவிட்டது. ஓவர்கோட், கம்பளிக் கோட்டு, ஸ்வெட்டர் இத்யாதிகளுக்கு இப்போதைக்குப் பிரியாவிடை கொடுத்துப் பரணிலே ஏற்றிவிட்டு, டீ ஷர்ட்டோடும், பெர்மூடாவோடும் பிரின்சஸ் தெருவில் சனிக்கிழமை மதியக் கூட்டம் அலைமோதுகிறது. எல்லா டீ ஷர்ட்டிலும் கிட்டத்தட்ட ஒரே வாசகம் – ‘எனக்குப் பிடித்த அணி, இங்கிலாந்தை எதிர்த்து விளையாடும் அணி’.

உலகக் கோப்பை கால்பந்தாட்டத்தில் இங்கிலாந்து கடந்த வியாழக்கிழமை டிரினிடாட் – டுபாகோ அணியை எதிர்த்து விளையாடி இரண்டு – பூஜ்யம் கோல் கணக்கில் வெற்றி பெற்றது ஏற்படுத்திய ஏமாற்றத்தை, பியர் கடை ஸ்டூலில் உட்கார்ந்து குடித்து விவாதித்து முடித்து ஸ்காட்லாந்து சகித்துக் கொண்டாகிவிட்டது. டேவிட் பெக்கம் ரைட் பாக்வேர்டாக பின்வரிசைக்கு இடப்பெயர்ந்து ஜாக்கிரதையாகத் தடுத்தாட உத்தேசித்தாலும், வரும் செவ்வாய்க்கிழமை நடக்கும் அடுத்த ஆட்டத்தில் இங்கிலாந்தின் முதுகில் ஸ்வீடன்காரர்கள் டின் கட்டிவிடுவார்கள்; அதோடு இந்தப் பசங்க ஆட்டம் க்ளோஸ் என்று தற்போதைய விவாதம் பிரின்சஸ் தெரு முனை, தோட்ட பெஞ்சுகளில் உற்சாகமாகத் தொடர்கிறது.

மாசேதுங்க் தாராள மனசோடு கைகாட்டிய ஆயிரம் மலர்களோடு கொசுறாக இன்னும் இருபது முப்பது பூ வகைகள் எல்லா நிறத்திலும் பூத்துக் குலுங்கி எடின்பரோ கோட்டைப் பகுதியை வண்ணக் களஞ்சியமாக்கியிருக்கும் நேர்த்தியை ரசிக்க நேரமில்லாமல், குரேஷியாவை எதிர்த்து பிரேசில் ஆட்டக்காரரன் காகா போட்ட அற்புதமான கோலை ஒருத்தன் செடிகொடிகளுக்கு நடுவே பசும்புல்லை மிதித்துத் துவைத்தபடி நிகழ்த்திக் காட்டிக்கொண்டிருக்கிறான். ரொனால்டோ, ரொனால்டின்ஹோ யாரும் இந்த வருடம் ஹீரோ இல்லை, இது காகா வருடம் என்று ஒரு சின்ன மஞ்சள் பூவைத் துடிக்கத் துடிக்கக் கிள்ளி எடுத்து இதழ் இதழாக வாயில் வைத்துக் கிழித்துத் துப்பியபடி இன்னொருத்தன் உற்ச்காகமாக குரலை உயர்த்துகிறான்.

உலகக் கோப்பை எப்போ முடியும் என்று கேட்டபடி மிச்ச மலர்கள் காற்றில் ஆடிக் கொண்டிருக்கின்றன.
888888888888888888888888888888888888888888888888888888888888888

பிரின்சஸ் தெரு ராயல் ஸ்காட்டிஷ் அகாதமி வாசலில் பெரிய சைஸ் கன்னட சினிமா பேனர் தட்டுப்பட்டபோது மூக்குக் கண்ணாடியை மாற்ற வேளை வந்துவிட்டது என்றுதான் முதலில் தோன்றியது.

ஆனாலும் சந்தேகம் நிவர்த்தியாகாமல் இன்னும் அருகில் போய்ப் பார்க்க, அது பேனர் தான். பெரிய சைஸ் தான். கன்னடமே தான்.

பேனரில் நூறு வருடத்துக்கு முந்தைய கெட்-அப்பில் ஆணும் பெண்ணுமாக இரண்டு பேர் – முகமும் கழுத்தும் மட்டும். தலைக்கு மேல் நீளமாகப் பேனரின் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடிவரை நெளியும் கன்னட எழுத்துக்கள். இரண்டு முகத்திலும் கண் இமைகளுக்குக் கீழே ஓட்டை. ஓட்டை வழியாகப் பின்னால் இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் யாருக்கோ சொந்தமான இரண்டு ஜோடி நிஜக் கண்களும் பார்வையில் படுகின்றன. சர்ரியலிசச் சாயலைப் பூசிக்கொண்டு ஒரு சாயங்கால நேரம் மெல்ல நகர்ந்து வந்து கொண்டிருக்கிற உணர்ச்சி.

ராயல் ஸ்காட்டிஷ் அகாதமிக்குள் படியேறும்போது பேனருக்குப் பின்னால் கட்டிய சாரத்தில் இன்னொரு வெள்ளைக்கார ஜோடி ஜாக்கிரதையாகக் குதித்தேறி, மரப்பலகையில் செதுக்கியிருந்த ஓட்டைகளுக்குள் கண் வைத்துப் பார்க்க ஆரம்பித்திருந்தது.

அகதாமியில் இந்த வாரம் ஸ்காட்டிஷ் கலைஞர்கள் மன்றத்தின் (சொசைட்டி ஓஃப் ஸ்காட்டிஷ் ஆர்ட்டிஸ்ட்) 109-வது வருடக் கண்காட்சி தொடங்கியிருக்கிறது. நூற்றொன்பது வருடமாக விடாமல் கலைக் கண்காட்சி நடத்தும் இந்தக் கலைஞர் பேரவையை இந்த ஒரு சாதனைக்காகவே எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நுழைவுச் சீட்டோடு காட்சி அட்டவணையையும் விலை கொடுத்து வாங்கிக்கொண்டு புரட்ட, இந்த ஆண்டுக் கண்காட்சியில் சிறப்பம்சம் – இந்தியக் கலைஞர்களின் பங்களிப்பு.

கொல்கத்தா ரொபீந்த்ர பாரதி பல்கலைக் கழகக் கலை வரலாற்றுப் பேராசிரியரும் நீர் வண்ண ஓவியவருமான சோஹினி தார், mixed media படைப்புகளில் சாதனை படைக்கும் கவிதா ஜெய்ஸ்வால், களிமண் பிரதிமைகள் மற்றும் ப்ரிண்ட் மேக்கிங், புகைப்படக்கலைஞரான சென்னை நாகசாமி ராமச்சந்திரன், இன்னொரு சென்னை ஓவியரான ரவிசங்கர் ஆகியோரின் படைப்புகள் இந்த ஆண்டு ஸ்காட்லாந்து கலைக் கண்காட்சியில் இடம் பெற்றுக் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

முக்கியமாக திருவல்லிக்கேணி ஓவியரான ரவிசங்கரின் செறிவும் அடர்த்தியும் கொண்ட பேனா – மசி ஓவியங்கள் பற்றிக் குறிப்பிட்டே ஆகவேண்டும். கொஞ்சம் இந்திய மரபு ஓவியச் சாயலோடு இவர் வரைந்து காட்சிக்கு வைத்திருக்கும் இரண்டு ஓவியங்களுமே ஸ்காட்லாந்து பற்றியவை.

ஸ்காட்லாந்தின் தேசிய உடையான கில்ட் அணிந்தவன் குதிரையில் ஆரோகணித்திருக்கும் I had my heart set on the dark horse ஓவியத்தின் கருப்பு வெளுப்பு உருவாக்கும் eerie சூழல், குதிரையின் உடல், ஆரோகணித்திருப்பவனின் முகம் இவற்றின் பரப்பில் இயைந்தும் அல்லாமலும் நுணுக்கமாக நிரப்பப்பட்ட visual தகவல் செறிவால் கூடுதலாக தீவிரமடைகிறது. ஸ்காட்லாந்தின் தேசிய நாதசுவரமான பேக்-பைப் வாசிக்கும் கலைஞனைச் சித்தரிக்கும் Bagpipes wrapped around my memories ஓவியத்தில் வாத்தியக் கலைஞனைச் சுற்றிக் குழல் போல வளைந்து நெருக்கும் வளையங்களில் ஒன்று முதுகுக்குப் பின்னாலிருந்து பாம்புத் தலையாக எட்டிப் பார்க்கிறது. பாரம்பரிய உடையான கில்ட்டின் மேல் சட்டைப்பையில் லா கோஸ்ட்டே உடை தயாரிப்பாளரின் முத்திரை எழுதியிருந்த நினைவு.

வாசலில் வைத்திருக்கும் கன்னட பேனர்? பெங்களூரில் பேனர் ஆர்ட்டிஸ்டாக எத்தனையோ கன்னட, இந்தி, தமிழ்ப் படங்களுக்கு பேனர் எழுதிய மூர்த்தி முத்து, லாசர் என்ற கலைஞர்களின் ஒத்துழைப்போடு, எடின்பரோ சிற்பக் கலைஞர் ஏனியஸ் வைல்டர் உருவாக்கியது. எட்வர்ட் ஸ்டூவர்ட் சார்லஸ், ப்ளோரா மக்டொனால்ட் என்ற நூறு வருடத்துக்கு முற்பட்ட ஸ்காட்லாந்துப் பிரபுவும் சீமாட்டியும் இடம் பெறும் இந்த பேனர், ‘To see ourselves as others see us’ என்ற கவிஞர் ராபர்ட் ப்ரவுனின் கவிதை வரிகளுக்கு உயிர் கொடுப்பது. பேனரின் கண் துவாரங்கள் வழியாகப் பின்னாலிருந்து உலகத்தைப் பார்க்கும்போது, ‘பார்வையாளர்கள் – காட்சிப் பொருள் இரண்டும் கலந்த தற்கால உலகளாவிய கலாச்சாரம் சார்ந்த அடையாளத்தை அடையும் அனுபவம் கிட்டுவதாக’ கண்காட்சியின் காட்சிப் பட்டியல் அறிவிக்கிறது.

‘காட்சியும் நானே, காண்பதும் நானே’.

8888888888888888888888888888888888888888888888888888888888888888

அண்மையில் காலமான எடின்பரோ எழுத்துக்காரியும் பின் நவீனத்துவத்துவப் படைப்பாக்கத்தின் முக்கியமான முன்னோடியுமான மூரியல் ஸ்பார்க் பற்றி இந்தப் பகுதியில் சில வாரங்கள் முன்னால் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

ஸ்பார்க்கின் புகழ்பெற்ற நாவலான The Prime of Miss Jean Brodie (பெங்குவின் வெளியீடு) படிக்கக் கிடைத்தது.

நிஜவாழ்க்கை, அதைச் சார்ந்தும், விலகிப் படர்ந்தும் பந்தலிட்டுப் போகும் புனைவு என்று நகரும் நாவல் 1930-களின் ஆரம்பத்தில் எடின்பரோ நகரப் பெண்கள் பள்ளியைக் களமாகக் கொண்டது. மிஸ் ப்ராடி என்ற ஆரம்பப் பள்ளி ஆசிரியை கல்வி, அறிவுத் தேடல், இவற்றோடு வாழ்க்கையின் தொடர்பு பற்றிய மரபான சிந்தனைகளோடு வேறுபட்டவள். இவளுடைய வகுப்பு மாணவி ஒருத்தியின் பார்வையில் கதை சொல்லப்படுகிறது.

கதை நடைபெறும் கிட்டத்தட்ட முப்பது வருட காலத்தை வளைத்து நெகிழ்த்திச் குறுக்கி கதையாடலோடு சிரமமில்லாமல் கலக்க வைக்கும் முயற்சியில் மூரியல் ஸ்பார்க் பெற்றிருக்கும் வெற்றி அசாதாரணமானது. ‘முப்பது வருடம் கழித்து ஹோட்டல் தீ விபத்தில் இறக்கப் போகிற மேரி வகுப்பில் டீச்சரைப் பார்த்துக் கேட்டாள்’ என்று சகஜமான ஆரம்பிக்கும் வாக்கியங்கள். இந்த foretelling-ல் குறித்த எதிர்காலம் அடுத்த வாக்கியத்தில் நிகழ்காலமாகிறது. அங்கே இருந்து flash-back-ல் ஒரு பத்து வருடம் பின்னால் போய் ஒரு விவரிப்பு. அது வளைந்து திரும்பி அடுத்த வாக்கியத்தில் வகுப்பில் மேரியோடு டீச்சருக்கு முன்னால் மறுபடியும் பாடம் கேட்க உட்கார்ந்து விடுகிறது.

இந்த மாணவிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை. டீச்சருக்கு அவளுடையது. மாணவிகள் டீச்சர் கோடிகாட்டிய அவளுடைய பழைய கால அனுபவங்களைத் தங்கள் கற்பனையால் முழுமைப்படுத்த முற்படுகிறார்கள். அதை எல்லோருடைய நிகழ்கால அனுபவங்களும், அவை ஏற்படுத்தும் புதிய கற்பனைகளும் பாதித்துக் கொண்டிருக்க, எல்லாமே காலத்தோடு நகர்ந்து மாறிக் கொண்டே இருக்கிறது.

ஒரு சின்னக் குழப்பம் கூட ஏற்படுத்தாமல் பக்கங்கள் நகர, விறுவிறுவென்று நாவல் பாய்ந்து, சட்டென்று முடியும்போது மூரியல் ஸ்பார்க்கின் படைப்பாற்றல் ஏற்படுத்திய பிரமிப்பு இன்னும் அடங்கிய பாடில்லை.

புதிய சிந்தனைகளோடும் படைப்பாக்கம் குறித்த உற்சாகத்தோடும் உலக இலக்கியப் போக்குகளை உள்வாங்கி மாற்றி, படர்த்தி, ஆழப்படுத்தி முன்னெடுத்துச் செல்லும் இம்மாதிரிப் படைப்புகள் எல்லா மொழிகளிலும் அவற்றுக்கு உரிய கவனிப்பையும், வரவேற்பையும் பெற்றிருக்கின்றன – தமிழைத் தவிர.

8888888888888888888888888888888888888888888888888888888888

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்