அம்ஷன் குமாரின் பாரதியாரும் பாரதி துவேஷிகளும்

This entry is part [part not set] of 39 in the series 20060609_Issue

மலர் மன்னன்


சென்னையில் நேஷனல் போக்லோர் ஸப்போர்ட் சென்டர் (தேசிய நாட்டாரியல் ஆதரவு மையம்) என்றொரு அமைப்பு இயங்கிவருகிறது. அண்மையில் இந்த அமைப்பு அம்ஷன் குமார் இயக்கிய பாரதியார் ஆவணப் படத்தைத் தனது அரங்கில் திரையிட்டது. ( இந்தப் படத்தை தயாரித்தவர்கள் நியூ ஜெர்சி சிந்தனை வட்டமும் , அதன் முன்னணி பாரதி அன்பருமான முருகானந்தமும். ) நிகழ்ச்சிக்கு அகில பாரத பாரதிய ஜனதாவின் துணைத் தலைவர் இல. கணேசனையும் என்னோடு அழைத்துச் சென்றிருந்தேன். உடனே, பார்த்தாயா, பார்த்தாயா மறுபடியும் பெயர்களை உதிர்க்கத் தொடங்கிவிட்தடான் என்று எவரும் ஆரம்பித்துவிடக்கூடும். காரணமாகத்தான் அவரது பெயரைக் குறிப்பிட்டிருக்கிறேன். பின்னர் அது பற்றியக் குறிப்பிடுகிறேன்விவரம் வரும். முக்கியமாக அவர் இல. கணேசன் பாரதிப் பிரியர். பல பாரதி பாடல்களை உணர்ச்சிப் பெருக்குடன் மனப்பாடமாகப் பாடுபவர். எனவேதான் அவரையும் அழைத்துச் சென்றேன். மகிழ்ச்சியுடன் வந்தார்.

தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் ஒரு பெரியார் இருக்கக் கூடுமாயின் அது சுப்பிரமணிய பாரதியாகத்தான் இருக்க முடியும், நாற்பது வயது நிரம்புவதற்கு முன்னரே அவர் மறைந்துவிட்டபோதிலும் என்று நான் பல கூட்டங்களிலும் குறிப்பிட்டு வருகிறேன்.
வ.உ. சிதம்பரம் அவர்களும் பாரதியாரைப் பெரியார், பெரியார் என்று பல இடங்களில் குறிப்பிட்டு எழுதியும் பேசியும் வந்துள்ளார். கவிஞர் பாரதிதாசன் பாரதியாரை ஐயர் என்று மரியாதையுடன் அழைக்கக் கேட்டிருக்கிறேன். ஒருமுறை பாரதிதாசன் பாரதியாரின் மனைவியார் செல்லம்மா அவர்களைச் சந்தித்துவிட்டு வந்து, அந்த அம்மாவை விழுந்து வணங்கிவிட்டு வந்ததாகக் குறிப்பிட்டார். அது அவரது சுபாவத்திற்கு மாறானதாக இருக்கவே, காலில் விழுந்து கும்பிட்டுவிட்டா வந்தீர்கள் என்று வியப்புடன் கேட்டோம்.

என்ன இருந்தாலும் ஐயரின் மார்பைப் புல்லியவரல்லவா அந்த அம்மையார் என்று சிலிர்ப்புடன் பதிலளித்தார், பாரதிதாசன். இந்தச் சம்பவம் இப்போது மிகவும் முதியவராகிவிட்ட சுரதாவுக்கு நினைவிருக்கலாம். அல்லது இப்போதுள்ள நிலமைக்கு ஏற்ப அப்படியொரு சம்பவம் நிகழவில்லை என்று அவர் கூறினாலும் ஆச்சரியப்பட மாட்டேன்!

பாரதியாரைத் தமிழரின் பெரியார் எனக் கருதுவதால் அவர் தொடர்பான எந்த நிகழ்ச்சியானாலும் கலந்துகொள்ளத் தவறுவதில்லை. ஞானசேகரனின் பாரதியைப் பார்த்தது போலவே அம்ஷன் குமாரின் பாரதியையும் ஆவலுடன் காணச் சென்றேன்.

அம்ஷன் குமாரின் ஆவணப் படத்திலிருந்து இரு புதிய தகவல்கள் கிடைத்தன. இரண்டுமே பாரதியின் குணவியல்பைப் புலப்படுத்தும் அருமையான விஷயங்கள். இரண்டுமே அவரது அந்திமக் காலத்தில் நிகழ்ந்தவை.

புதுச்சேரியிலிருந்து வெளியேறிய பாரதியார் தமக்கெனப் போக்கிடம் இன்றி, மனைவியின் ஊரான கடையத்திற்குச் சென்று சில காலம் வசித்த நாட்களில் அங்கிருந்த பல்வேறு சாதிச் சிறுவர்களும் தம்மோடு தயக்கமின்றிப் பழக இடமளித்தது ஒரு தகவல். அப்படிப் பழகிய சிறுவர்களில் ஒருவரின் நேர்காணல் ஆவணப் படத்தில் இடம்பெற்றுள்ளது.

பாரதியார் கிட்ட அக்கிரகாரத்திலே யாருமே பேசமாட்டாங்க. சின்னப் பசங்களையும் அவரோட பழகவிட மாட்டாங்க. நாங்க சிலபேர் மட்டும் அவரோட பழகறதுண்டு.
அவர் தனியாளா தெருவிலே ஒரு சிப்பாய் மாதிரி விறைப்பா நடந்து போவாரு. அதப் பார்த்தாலே எங்களுக்கு சுவாரசியமா இருக்கும் என்றெல்லாம் தகவல்களை அளித்தார் அவர்.
பாரதியார் தினந்தோறும் பலருக்கு கார்டு எழுதிப் போட்டுக்கொண்டே இருப்பாராம். எழுதிய கார்டுகளை அவரே எடுத்துப் போய் அஞ்சலகத்திலுள்ள பெட்டியில் போட்டுவிட்டு வருவாராம். தமது நூல்களை வெளியிடுவதற்காக அவர் பலரிடம் நிதியுதவி கேட்டு வின்ணப்பித்து ஒரு பலனும் கிடைக்கப்பெறாமல் மீண்டும் சென்னையில் சுதேசமித்திரன் நாளிதழில் ஒரு சாதாரண உதவி ஆசிரியராகப் பணிசெய்யப் போக நேர்ந்தது நமக்குத் தெரியும்தானே!

ஒரு முறை அவரோடு பழகிய சிறுவர்களில் ஒருவன் அவர் அடுக்கிவைத்திருந்த அஞ்சலட்டைகளில் நாலைந்தை ஏதோ ஆர்வத்தில் எடுத்துத் தன் மடியில் ஒளித்துவைத்துக் கொண்டானாம். கார்டுகளைக் கணக்குப் பார்த்து வைத்திருந்த பாரதியாருக்கு சில கார்டுகள் குறைவது தெரிந்துவிட்டது. வேறு யாரும் அங்கு வராததால் அந்தச் சிறுவர்களை விசாரித்திருக்கிறார், பாரதியார். நாங்கள் யாரும் எடுக்கவில்லை என்று சிறுவர்கள் கூறியிருக்கிறாகள். கார்டுகளை எடுத்த பையனும் அவ்வாறே கூறியிருக்கிறான். பிறகு அவன் விளையாடுகிறபோது இடுப்புத் துணி நழுவி, மடியில் அவன் ஒளித்துவைத்திருந்த கார்டுகள் கீழே விழுந்துவிட்டன!

அதைப் பார்த்துவிட்டார், பாரதியார். சிறுவன் கார்டுகளைத் திருடியதைவிடவும் எடுக்கவில்லை என்று அவன் பொய் சொன்னதுதான் அவருக்குப் பொறுக்கவில்லை. கோபத்தில் சிறுவனை அடித்துவிட்டாராம். பிறகு, கோழைகள்தான் பொய் சொல்லுவார்கள், நெஞ்சில் துணிவுள்ளவர்கள் பொய் சொல்லமாட்டார்கள், ஆகவே எந்த இக்கட்டானாலும் பொய் சொல்லக் கூடாது என்றெல்லாம் புத்தி சொல்லி சமாதானப் படுத்தினாராம். ஆனால் மறு நாளிலிருந்து அந்தச் சிறுவன் வருவதை நிறுத்திவிட்டானாம். பாரதியார் மற்ற சிறுவர்களிடம் அவன் ஏன் முன்போல வருவதில்லை, வரச் சொல்லுங்கள், எனக்கு அவன் மீது கோபம் இல்லை என்பாராம்.

கடையத்தில் ஊருக்கு வெளியே எவரும் போகாத குன்றின் மீது எறுவதற்குப் போவாராம். சிறுவர்களும் துணிவு பெற்றவர்களாய் அவருடன் போவார்களாம். இவ்வாறாகக் கடையத்தில் அக்கிரகாரத்து பிராமணர்களின் புறக்கணிப்பிற்கும் அலட்சியத்திற்கும் இலக்கான பாரதியாருக்கு, பிராமணரல்லாத சிறுவர்களின் தோழமை வாய்த்து, தனிமைப் படுத்தப் படுவதிலிருந்து மீட்சி கிட்டியிருக்கிறது.

தமது நூல் வெளியீட்டு முயற்சி தோற்று, பாரதி இரண்டாவது முறையாகச் சென்னைக்கு வந்து சுதேசமித்திரனில் பணியாற்ற நேர்ந்திருக்கிறது. இம்முறை தேச சேவைக்காக அல்ல, வயிற்றுப் பாட்டிற்காக! இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். அத்தருணத்தில் அவர் எவ்வளவு தூரம் மனம் கசந்து போயிருப்பார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பத்திருபது ஆண்டுகள் முழு மூச்சுடன் தம் மொழிக்கும் தாயகத்திற்கும் ஆற்றிய பணிகளுக்குக் கிடைத்த மரியாதை அவரை எந்த அளவுக்குச் சோர்வடையச் செய்திருக்கும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும்.

புதுச்சேரியிலிருந்து வெளியேறிய பாரதியார் கடலூரில் பிரிட்டிஷ் அரசின் போலீசில் சிக்கிச் சில நாட்கள் சிறைப்பட நேர்ந்தபோது இனி அரசியலில் ஈடுபடுவதில்லை என உறுதிமொழி யளித்துத் தான் விடுதலை பெற முடிந்தது. அந்த உறுதி மொழிக்கு இணங்க சுதேச மித்திரனில் மாதச் சம்பளத்திற்கு வேலை பார்க்கிற உதவி ஆசிரியராகப் பெரும்பாலும் செய்தித் தந்திகளைத் தமிழ்ப் படுத்துகிற பணியைத்தான் அவர் செய்து வந்திருக்கிறார். எனவேதான் அவரது அந்திமக் காலத்தில், அவர் சுதேசமித்திரனில் பணிசெய்த சமயம்
நிகழ்ந்த ஜாலியன்வாலா பாக் படுகொலை பற்றி அவர் தமது பெயரிட்டு கண்டனம் எதுவும் எழுதாமல் விட்டிருக்க வேண்டும்.

நெஞ்சுரமும் ஆவேசமும் சுதந்திர வேட்கையும் மிகுந்த ஒரு கவிஞனை இவ்வாறு செயலிழக்கச் செய்த பழி அவர் காலத்துத் தமிழ்ச் சமுதாயத்தையே சாரும். ஆனால் இவ்வாறான சிந்தனையின்றி, ஆவணப் படம் திரையிட்டான பிறகு நடந்த கலந்துரையாடலின்போது பாரதியார் மீது இதற்காக வியப்புத்தெரிவிக்கும் போக்கே காணப்பட்டது.

பாரதியார் சுதேச மித்திரனில் பணியாற்ற வந்தபோது முதலில் வட சென்னையில் தம்புச் செட்டித் தெருவில்தான் குடியிருந்தாராம். அவர் குடியிருந்த வீட்டின் இன்னொரு பகுதியில் குடியிருந்தவரின் நேர் காணல் நான் குறிப்பிட்ட மற்றொரு அம்சம்.

தம்புச் செட்டித் தெருவிலிருந்து சுதேசமித்திரன் அலுவலகத்திற்கு தினமும் ரிக்ஷாவில் செல்வதும் அவ்வாறே வீடு திரும்புவதும் பாரதியாரின் வழக்கமாம். ஒரு சம்பள தினத்தன்று ரிக்ஷாவில் பாரதியார் திரும்புகையில் ரிக்ஷாக்காரன் தனது வறிய நிலையைச் சொல்லி வருந்தவும், பாரதியார் மனமிரங்கித் தமது சட்டைப் பையிலிருந்த சம்பளப் பணம் முழுவதையும் எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டாராம்!

வீடு சென்றதும் பாரதியார் இதைச் சொன்னதும், மாதம் முழுவதும் செலவுக்கு என்ன செய்வது என்று செல்லம்மா தவித்துப் போனாராம். குடியிருந்தவரிடம் (அப்போது மிகவும் இளைஞராக இருந்தவர்) பாரடா மாமா செய்திருப்பதை, இப்போது மாதம் முழுவதும் செலவுக்கு என்ன செய்யப் போகிறேனோ என்று வருத்தப்பட்டாராம். உடனே இளஞர் ரிக்ஷாக்காரனைத் தேடிச் சென்று என்னப்பா இது, அய்யர்தான் கொடுத்தார் என்றால் நீ முழுப்பணத்தையுமா வாங்கிக் கொள்வது என்று சொல்லி, அதற்குள் அவன் ஐந்து ரூபா செலவழித்துவிட்டிருக்க மிச்சப் பணத்தை வாங்கிவந்து செல்லம்மா மாமியிடம் கொடுத்தாராம்.

பாரதியார் ஒன்றும் மனைவியின் தவிப்பைப் பார்த்துவிட்டு ரிக்ஷாக்காரனிடம் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற ஓடவில்லை. குடியிருந்த இளைஞர்தான் மாதச் சம்பளத்தையே நம்பி வாழ வேண்டியிருக்கிற ஒரு மத்தியதர வர்க்கத்துப் பெண்மணியின் நியாயமான கவலையைத் தீர்க்க ரிக்ஷாக்காரனிடம் சென்று பாரதியார் கொடுத்த பணத்தைத் திரும்ப வாங்கி வந்திருக்கிறார். எனினும் கலந்துரையாடலின் போது, தமக்கென்று எதுவும் வைத்துக்கொள்ளாமல் பிறருக்குக் கொடுத்துவிடுபவர் என்று பாரதியார் பற்றி ஒரு கருத்து உருவாகிவிட்டிருக்கிறது; ஆனால் ஒரு குரூப்பு பின்னாலேயே போய் பணத்தை வாங்கி
வந்துவிட்டிருப்பது இப்போது புரிகிறது என்று எகத்தாளமாக ஒரு குரல் ஒலித்தது. பாரதியாருக்கு கண்ணம்மா என்ற பெயரில் ஒரு பெண்ணின் தொடர்பு இருந்ததாகவும், அந்தப் பெண்ணின் தம்பி என்று ஒருவரைச் சமீபத்தில் பெங்களூரில் தமக்கு அறிமுகம் செய்தார்கள் என்றும் ஒருவர் தெரிவித்தார். ஆவணப்படத்தில் பாரதியாருக்கு அபின் அருந்தும் பழக்கம் இருந்தது பற்றிய குறிப்பு இடம் பெற்றிருந்தது அனாவசியம் என்று இல. கணேசன் அம்ஷன் குமாரிடம் வருந்தினார். ஆனால் நான் அதில் ஒரு தவறும் இல்லை எனத் தெரிவித்தேன். பாரதியார் போன்ற ஒரு வரைப் பற்றிய தகவல்கள் முழுமையாகப் பதிவு செய்யப்படுவது சரிதான்; அபின் அருந்தும் பழக்கம் இருந்ததாலேயே அவரது ஆளுமையோ அவரது பங்களிப்போ பங்கம் அடைந்துவிடாது என்று சொன்னேன். பொதுவாக நம் மக்களுக்கு எதிர்மறையான விஷயங்கள்தாம் உடனடியாக மனதில் பதிந்துவிடுகின்றன. இப்போதுகூடப் பார்த்தோம் அல்லவா, கலந்துரையாடலில் உத்சாகத்துடன் பேசப்பட்டது எதிர்மறையானவைதாமே, என்றார், இல. கணேசன்.

ஆம், பாரதியாருக்கு ஜாதியபிமானம் இருந்ததாகக் கூட ஒருவர் சந்தேகம் எழுப்பினார்! இப்படியொரு சந்தேகம் வருவானேன் என்று பின்னர் விசாரித்தபோது ஒரு விவரம் கவனத்திற்கு வந்தது.

கடையத்தில் பாரதியார் இருந்த சமயம் அவரோடு நண்பர்போல் உரிமையெடுத்துக்கொன்டு பழகியிருக்கிறார், பிராமணரல்லாத, ஆனால் மேல் ஜாதியைச் சேர்ந்த ஒரு நபர். ஒரு நாள், பாரதியாரே உமக்குத்தான் ஜாதி வித்தியாசம் கிடையாதே உங்கள் பாப்பா சகுந்தலாவை என் பையனுக்குக் கலியாணம் செய்து கொடுக்கிறீர்களா என்று அந்த நபர் கேட்டாராம். உடனே பாரதியாருக்கு அடக்க மாட்டாத கோபம் வந்துவிட்டதாம்.

என்னைக் கேட்டால் பாரதியாருக்குக் கோபம் வந்தது சரிதான் என்பேன். முதலில் அந்த நபர் எந்த தொனியில் அவ்வாறு கேட்டாரோ, கெரியாது. அன்றைக்கு பாரதியார் இருந்த நிலையை நினைத்துப் பார்க்கிற போது, ஒரு இளக்காரத்துடன்தான் அந்த நபர் கேட்டிருக்கக்கூடும். சொந்த ஜாதியாராலேயே ஒதுக்கப்பட்டும் உதாசீனம் செய்யப்பட்டும் கிடந்தவர் மட்டுமல்ல, மனநிலை பிறழ்ந்தவர் என்றும் ஏளனம் செய்யப்படுபவராகத்தான் பாரதியார் அப்போது இருந்திருக்கிறார். இன்னொன்றையும் என் சொந்த அனுபவத்தை வைத்துச் சொல்லிவிடுகிறேன்.

சிதம்பரத்தில் நான் இருந்த காலத்தில் தென்னார்க்காடு மாவட்ட திராவிடர் கழகச் செயலாளராக இருந்தவர் கிருஷ்ண சாமி உடையார். அவர் மகன் எனக்கு ஓரளவு பழக்கம்.
ஒருமுறை உடையார் என்னிடம் சொன்னார்:

ஒரு காலத்திலே நாங்க யாரும் எங்க கிராமத்திலே அக்கிரகாரத்துக்குள்ளவே நொழைய முடியாது தம்பீ! செருப்புப் போட்டுக்கிட்டோ, தலப்பா கட்திக்கிட்டோ அய்யமாரை நெருங்க முடியாது. இப்ப அப்படியில்லே. அக்கிரகாரத்துக்குள்ள வீடெல்லாங்கூட வாங்கிக் குடியிருக்க முடியுது!

இதை மிகவும் பெருமையாக. ஒரு கவுரவம் வாய்த்தது போன்ற உணர்வுடன் அவர் சொன்னார்.

ரொம்ப சந்தோஷங்க. இதே மாதிரி உங்க தெருக்கள் எல்லாம் இருக்குதே அங்க பள்ளர், பறையர், எல்லாரும் செருப்புப் போட்டுக்கிட்டும், தலைப்பா கட்டிக்கிட்டும் நொழையமுடியுது இல்லீங்களா? அவங்க உங்க தெருக்கள்லே வீடுவாங்கி குடியேற முடியுது இல்லீங்களா? என்று கேட்டேன்.

உடையார் முகம் கறுத்தது. இந்தப் பையனிடம் பேச்சுக் கொடுத்திருக்கலாகாது என்று வருந்துபவராகக் காணப்பட்டார். அந்த மாதிரியெல்லாம் நடந்துடலே என்றார் சுருக்கமாக. மேற்கொண்டு அவர் பேச்சைத் தொடரவில்லை.

ஆக, எந்தச் சாதியாருக்கும் சாதி பாகுபாடு போக வேண்டும் என்றால் அது தமது சாதியைவிட ஒரு படி மேலேயுள்ளவரோடு கலந்து போவதுதானேயன்றித் தமக்குக் கீழேயுள்ள சாதியாரைத் தம்மோடு இணைத்துக்கொள்வது அல்ல!
ஒரு சக்கிலியக் குடும்பத்திலோ பறையர் குடும்பத்திலோ பெண் எடுக்க மனம் இல்லாத மேல் சாதி பிராமணரல்லாதவருக்கு பிராமணரான பாரதியார் வீட்டுப் பெண் கேட்கிறது! ஆதுதான் அவருக்குத் தெரிந்த சாதியொழிப்பு! அதிலும் இயலாமையிலே இருந்த பிராமணரான பாரதியாரிடம்தான் அவருக்கு அவ்வாறு கேட்கிற துணிவு வந்திருக்கிறது! மேலும் மிகவும் இயாலமையிலிருந்த ஒரு பிராமணர் மனைவியைக் கள்ளத்தனமாக வைத்துக்கொள்கிற கொழுப்பும் அந்த நபருக்கு இருந்திருக்கிறது! அந்தக் கொழுப்புதான் பாரதியாரிடம் அப்படிக் கேட்கிற துணிவையும் கொடுத்திருக்கிறது! இப்படிப்பட்ட ஒரு ஈனப் பிறவி பாரதியாரிடம் தன் மகனுக்குப் பெண் கேட்கிறது தைரியமாக! பாரதியார் ஜாதி மறுப்பாளர் என்பதால் அவரை மடக்கிவிடுகிற அகந்தையும் அதில் தொனிக்கிறது! பாரதியாருக்குக் கோபம் வந்ததில் என்ன தவறு? ஜாதி வித்தியாசமின்றி பாரதி அன்பர்கள் அனைவருக்குமே ரத்தம் கொதிக்கச் செய்யும் விஷயம் அல்லவா இது?

சாதியொழிப்பும் சாதி மறுப்பும் ஒரு சாதி தனக்கு மேலாக உள்ள சாதியுடன் சம்பந்தம் கொள்வது மட்டுமல்ல, தனக்குக் கீழ் ழுள்ள சாதியோடும் உறவாடுவதுதான்!

இது உறைக்காமல் ஒரு பிறவி பாரதியாரிடம் சம்பந்தம் பேசுமாம், அதற்கு பாரதியார் சூடு கொடுத்தால் பாரதியார் ஜாதியபிமானமுள்ளவராம். சாதிகள் இல்லையடி பாப்பா என்று அவர் பாடியது வெறும் பாசாங்காம்!

துவேஷத்திற்கும் ஓர் எல்லையில்லையா?

பாரதியாரின் படைப்பாற்றல் மிகத் தீவிரமாக இயங்கியது புதுச்சேரியில்தான். அவரது ஆன்மிக விழிப்பும் அங்குதான் முழு உத்வேகம் பெற்றது. ஆனால் அம்ஷன் குமாரின் பாரதியாரில் பாரதியின் புதுச்சேரி வாழ்க்கை பற்றிய விவரங்கள் முழுமையாக இல்லை. புதுச்சேரியில் பாரதி என்று தனியாகவே ஒரு ஆவணப்படம் எடுக்கலாம் என்றார் அம்ஷன் குமார். இந்த ஆவணப் படத்திற்கே நிர்வாகத் தரப்பில் எவ்வித ஒத்துழைப்பும் கிட்டவில்லை என்றார். பாரதி வைக்கப்பட்டிருந்த சிறைக் கொட்டடியைப் பார்க்கவும் படம் எடுக்கவும் அனுமதி கிட்டவில்லையாம்!

பாரதியார் பற்றிய ஆவணப் படம் எடுக்கும் வாய்ப்பு அம்ஷன் குமாருக்கு வருவதற்குள் பாரதியாரின் சம காலத்தவர் பலர் மறைந்துவிட்டனர். ஏறத்தாழ நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டிருக்க வேண்டிய ஆவணப் படம் இது. அப்படி எடுத்திருந்தால் பாரதியாரைப்பற்றிய ஏராளமான தகவல்களைப் பதிவு செய்திருக்க முடியும். அன்று பாரத செய்தித் துறையின் ஆவணப் படப் பிரிவு இல்லாமல் இல்லை. தமிழ் மாநிலத்திலும் ஓர் அரசு அத்தகைய வசதியுடன் இல்லாமல் போய்விடவில்லை. எனினும் அன்றைக்கும் பாரதியைத் துவேஷிப்பவர்கள் இருந்தனர் போலும்.

***

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்