இணையவழி தமிழ் கற்பித்தல் – தொடக்கக்கல்வி அறிமுகமும், சிக்கல்களும், தீர்வுகளும்

This entry is part [part not set] of 48 in the series 20060203_Issue

முனைவர் மு. பழனியப்பன்


இணையம் தற்போது மக்களுக்குத் தேவையானச் செய்திகளை அள்ளித்தரும் அமுதசுரபியாக விளங்கி வருகிறது. உள்ளூர் செய்திகள், வெளியூர் செய்திகள், வெளிநாட்டுச் செய்திகள், அயல் கண்டச் செய்திகள் எனப் பலவகைச் செய்திகளை விரல் நுனிச் சொடுக்கலில் பெற முடிகிறது. உள்ளூர், வெளியூர், வெளிநாடு, வெளி கண்டம் ஆகிய எப்பகுதி மாந்தருடனும் நேரில் பேசுவது போல காட்சி மற்றும் பேச்சு வழியாக உரையாடமுடிகிறது. கற்பித்தல், மருத்துவம், பொழுதுபோக்கு, விற்பனை, இடப்பதிவு, அஞ்ிசல் முதலான பல துறைகளில் இக்காலத்தில் விரைவான முன்னேற்ற ங்கள் இணைய நுழைவால் ஏற்பட்டுள்ளன என்பது உண்மை.

தற்போது இணைய வழிக் கற்பித்தல் முறை பரவலாகி வருகிறது. இக்கற்பித்தல் முறை வெறும் வகுப்பறைக் கற்பித்தல் போல் ஆசிரியரிடமிருந்து மாணவர் கற்கும் ஒருவழிப்பாதையாக மட்டும் இல்லாமல் பல்வழிப்பாதை கொண்ட முழுநிறைவு கொண்ட கற்பித்தல் முறையாக விளங்குகின்றது. இக்கற்பித்தல் முறையில் பாட வல்லுநர்களால் வடிவமைக்கப்படும் பாடங்கள் பல்லூடக வசதிகளுடன் கற்பவருக்குத் தரப்படுகின்றன. தேவையான இடங்களில் பேச்சுரைகள், அசைவுப்படக் காட்சிகள், புகைப்படங்கள், செயல்முறை விளக்கங்கள், பின்னணி இசையுடன் பாடல்களை கேட்டல், முறையான இராகத்தில் பாடல்களைக் கேட்டல், பாடத்திற்குத் தேவைப்படும் பாடம் அல்லாத மற்ற பயில்வுத் துணைக்கருவிகள் ( எடுத்துக்காட்டிற்கு – பார்வை நூல்கள், மூலநூல்கள், சோதனைச்சாலைச் செய்முறைகள், பாடத்தோடு தொடர்புடைய பிற வளைதளங்கள் ஆகியவற்றைப் பெறவும் இக்கற்பித்தல்முறை உதவி செய்கிறது) முதலானவற்றைக் கொண்ட பல்வழிக் கற்பித்தல் முறைகளைத் தருவதாக

இணையவழிக் கல்வி முறை விளங்குகிறது.

மேலும் இக்கற்பித்தல் முறையில் ஓர் ஆசிரியர், ஒரு மாணவர் என்ற கற்றல் நிலை பின்பற்றப்படுகிறது. இதன்மூலம் மாணவரின் கவனம் சிதறாமல் தடுக்கப்படுகிறது. நடப்பில் உள்ள வகுப்பறைகளைப் போல நூறுபேருக்கு ஓர் ஆசிரியர் என்ற தொல்லை இக்கற்பித்தல் முறையில் இல்லை. மேலும் தேவையான நேரத்தில் பாடங்களைப் படித்துக்கொள்ளலாம். இரவு பகல் என்ற நேர எல்லை இல்லை. இக்கற்பித்தல் முறையில் திரும்பத் திரும்பப் கற்ற பாடங்களையே பார்வையிடலாம். சொல்லித்தருபவருக்கு சலிப்பு வரும் என்ற நிலை இல்லை.

தற்போது வகுப்பறைக் கற்பித்தல் தவிர மற்றொரு கல்விமுறையாக தொலைத்தூரக் கல்வி முறை தமிழகத்தில் பெ ருமளவில் உள்ளது. தொலைதூரக் கல்விப் பாடங்கள் பெரும்பாலும் குறிப்புரைகளாகவே (notes) அமைந்திருக்கின்றன. மூல நூல்களை மாணவர்கள் நூலகங்களில் தேடிக் கண்டுபிடித்துப் படிக்க வேண்டும். ஆனால் இணையக்கற்பித்தல் முறையில் தரப்படும் கல்வி குறிப்புரைகளைக் கொண்டு இருந்தாலும் நூலக வசதியை இக்ிகல்வி முறை இணையவழியாகவே பெற்றிருப்பதால் மாணவர் இந்தத்தொல்லைக்கும் ஆளாக மாட்டார்கள். மூலநூல்களை அவர்கள் விரல் சொடுக்கலில் சொடுக்கிப் படித்துவிட முடியும்.

தற்போது இயங்கிவரும் வகுப்பறைக் கற்பித்தல், தொலைநிலைக் கற்பித்தல் ஆகிய இருநிலைகளையும் விட மேம்பட்ட கற்பித்தல் முறையாக இணையக் கற்பித்தல் முறை விளங்குகின்றது.

இக்கற்பித்தல்முறையின் மற்றொரு சிறப்புக் கூறு அதன் தேர்வு முறையாகும். இணையவழிக் கற்பித்தல் முறையில் தேர்வுகளும் இணைய வழியாகவே நடத்தப்படுகின்றன. இருப்பினும் எழுத்தறிவை முழுமையாகச் சோதித்தறியச் சில நேரங்களில் எழுத்துத் தேர்வுகளும் வைக்கப்பெறுகின்றன.

இணையவழித்தேர்வு என்பது மிகச் சிறந்த தேர்வு முறையாகும். இத்தேர்வை வீட்டில் இருந்தே எழுதலாம். தேர்வெழுத பொது இடத்திற்குக் குறிப்பிட்ட நேரத்திற்கு வருதல், காலதாமதம் ஏற்பட்டால் தேர்வில் பங்கேற்க இயலாமை போன்ற இன்னல்கள் இணையவழித்தேர்வில் களையப்படுகின்றன.

மேலும் இத்தேர்வில் தேர்வின் கால எல்லை சரியாக பின்பற்றப்படுகிறது. கணினியில் தேர்வைத் தொடங்கிவிட்டால் அதுவே முடிக்கும் நேரம் வரும் போது இயங்காமல் நின்று விடும். மேலும் கேள்வித்தாள் தேர்வு எழுதும் ஒவ்வொரு மாணவருக்கும் சுழல் அடிப்படையில் வேறுவேறாக அமையும் என்பதும் கவனிக்கத்தக்கது. இதன்மூலம் காப்பியடித்தல் என்ற பெருங்குறை தவிர்க்கப்படுகிறது. தேர்வு முடிந்த மறுநிமிடமே அதற்கான மதிப்பெண் முடிவையும் இணையவழித் தேர்வில் பெற இயலும். இதன்மூலம் மாணவர்கள் உடனடியாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

இத்தேர்வில் பங்கேற்க ஒருவகை அனுமதி எண்ணும் அதற்குரிய கடவுச்சொல்லும் தரப்படும். அதைப் பயன்படுத்தி குறிப்பிட்ட மாணவர் மட்டுமே தேர்வை எழுதமுடியும். இம்மாணவர்தான் தேர்வை எழுதுகிறாரா என இணையதள படக்காட்சிப்பதிவுக் கருவி மூலம் கவனித்துக் கொள்ள இயலும். இதன்வழி ஆள் மாறாட்டத்தையும் தவிர்க்கலாம்.

இவ்வகையில் பலவகைச் சிறப்புக்களைக் கொண்டதாக இணையவழிக் கற்பித்தல் முறை விளங்குகிறது.

தமிழ் தொடக்கக் கல்வி முறையைக் கற்பிக்கப் பல இணைய தளங்கள் தற்போது உள்ளன. பேச்சுத்தமிழ் கற்கவும், தமிழ் இலக்கணம் கற்கவும், தமிழ் எழுத்தொலிகளைக் கற்கவும் பல இணையத் தளங்கள் இலவசமாகவும், கட்டண அடிப்படையிலும் ி தற்போது கிடைக்கின்றன

இவற்றில் பெரும்பாலான இணையதளங்கள் மொழியியல் அடிப்படையில் தமிழைக் கற்பிக்கின்றன. இதன்மூலம் பிற மொ ழி தெரிந்த வளர்ந்த அறிவுடையவராலேயே தமிழைக் கற்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. சிறு குழந்தைகள் மொழியியலைப் புரிந்து கொண்டு மொழியைப் படிக்கவருவது என்பது இயலாத ஒன்று.

எனவே சிறு குழந்தைகள் முதல் வளர்ந்த வயதினர் வரை கற்கும் வகையில் பாடங்களை அமைப்பது மிக்க நன்மை தரும் என்பது இக்கட்டுரையாசிரியரின் கருத்து. இக்கட்டுரையாசிர ியர் தமிழ் இணையப்பல்கலைக் கழகத்தில் உதவி இயக்குநராகப் டிசம்பர் 2004 முதல் பணியாற்றிவருகிறார். இவர் தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் தற்போது உள்ள துவக்கக் கல்விப் பாடங்களை மேம்படுத்துவதற்காகவும், துவக்கக் கல்வியின் அடுத்த நிலைப்பாடங்களைத் தயாரிக்கும் பணியிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

அவர் தம் அனுபவத்தின்போது இக்கற்பித்தல் முறை வாயிலாகப் பெற்ற சில அனுபவங்களை இக்கட்டுரையில் உரைப்பது பொருத்தமுடையது.

தமிழ் இணையப்பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழியைக் கற்றுத்தரும் துவக்கக் கல்வி என்பது தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்தாரால் வழங்கப்பட்டுவரும் பள்ளிக் கல்வி பாடப்புத்தகங்களை அடிப்படை யாகக் கொண்டு அமைக்கப் பெற்றுள்ளது. இப்புத்தகப் பகுதிகளை அப்படியே கையாண்டு கொள்ளாமல் மாணவர்தம் கற்கும் திறன்களை அளவிடும் முன்மாதிரி அளவுகோல்களாக அப்புத்தகங்கள் கொள்ளப்படுகின்றன. இதனடிப்படையில் புதிய பாடப்பகுதிகள் உருவாக்கிக் கொள்ளப் படுகின்றன.

இப்பல்கலைக் கழகத்தில் துவக்கக் கல்வி மூன்று பகுதிகளாக உள்ளது. முதற்பகுதி – மழலைக்கல்வி என்பதாகும். இக்கல்வி முறை தமிழ் கற்க விரும்பும் மாணவர்களுக்குத் தமிழ் மொழி குறித்த அறிமுகச் செய்திகளை வழங்கும் வகையில் பல்லூடக வசதிகளோடு அமைக்கப்பெற்றுள்ளது. இதனைக் கற்க எவ்விதப் பணமும் கிடையாது. இக்கல்விமுறை குழந்தைப் பாடல்கள், கதைகள், உரையாடல்கள், எண்கள், எழுத்துகள் என பல தரவுகளை உள்ளடக்கியது.

அடுத்த நிலை சான்றிதழ் என்றும், அதற்கு அடுத்த பகுதி மேற்சான்றிதழ் என்றும் வகைமை செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்த நிலையில் பட்டப்படிப்பையும் இவ்வகையில் தொடரும் வாய்ப்பினைத் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தந்து கொண்டிருக்கிறது.

சான்றிதழ்க்கல்வி என்பது முதல் ஆறு வகுப்புகள் வரையான எல்லையை உடையது. இக்கல்வி முறை மூவகைப்பட்டது. அவை பின்வருமாறு 1. அடிப்படை, 2. இடைநிலை, 3. மேல்நிலை என்பனவாகும். இப்பாடங்களை வடிவமைக்க வல்லுநர்க் குழு அவ்வப்போது அமைக்கப் பெறும். இவர்கள் தந்த பாடவடிவமைப்பு அவ்வப்போது இணையதளப் படுத்தப்படும்.

அடிப்படை நிலை என்பது தமிழகப் பள்ளிக் கல்வி நிலை அளவில் ஒன்றாம் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் படிக்கக் கூடியது. இதில் தமிழ் எழுத்துக்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். ? ?ட ? ? என்ற எழுத்தில் இருந்து ஆரம்பித்துப் படிப்படியாக எழுத்துக்கள் கற்றுத்தரப்பெறுகின்றன.

இடைநிலை என்பது தமிழகப் பள்ளிக் கல்வி நிலையில் மூன்றாம் நான்காம் வகுப்புகளுக்கு உரிய தர நிலையில் அமைக்கப் பெற்றுள்ளன. இப்பாடப்பகுதியில் பேச்சுத்தமிழும் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இப்பாடங்கள் எளிய நிலையில் புரிந்து கொள்ளும் வகையின.

மேல்நிலை என்பது ஐந்தாம் ஆறாம் வகுப்பு மாணவர்களின் தகுதி கருதியது. இதில் மொத்தம் 18 பாடங்கள் உள்ளன.

இம்மமூவகையும் கல்வித்திறன் ஊட்டும் வகையில் வடிவமைக்கப் பெற்றவை. இவற்றை இலவசமாகப் பார்வையிடலாம். சான்றிதழ் பெறவேண்டும் என எண்ணுவோர் அதற்கான கட்டணத்தைக் கட்டவேண்டும். இப்பாடங்களைக் குறுந்தகடுகள் வழியாகவும் இவ ற்றைப் பெறமுடியும். தற்போது மழலைக்கல்வி, அடிப்படை, இடைநிலை ஆகியன ஒவ்வொன்றும் நூறு ரூபாய்க்குக் கிடைக்கின்றன. இவற்றைக் காண்பதில் எவ்வித எழுத்துருச் சிக்கல்களும் இருக்காது.

தற்போது மேற்சான்றிதழ் நிலை ஒன்றுக்கான பாடங்கள் தயாராகி வருகின்றன. மேற்சான்றிதழ் என்பதும் மூன்று நிலைகளை உடையது. நிலை 1. ( 7,8 வகுப்புகளின்தரத் தகுதி ) நிலை 2. ( 9,10 வகுப்புகளின்தரத் தகுதி ), நிலை 3. ( 11,12 வகுப்புகளின்தரத் தகுதி ) என்பன அவை. இப்பாடத்தயாரிப்பின் போது சில சிக்கல் ஏற்பட்டன. எடுத்துக்காட்டிற்காகச் சில கூறி இக்கட்டுரையை நிறைவு செய்வது பொருத்தமுடையது.

பாடங்களில் வழக்குத் தொடர்களை, மரபுத்தொடர்களைப் பயன்படுத்துவதில், பழமொழிகளைக் கையாள்வதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. ஏனெனில் வெளிநாட்டு மாணவர்களுக்கு இத்தொடர்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.

எடுத்துக்காட்டிற்காக ஒரு தொடர் இங்கு தரப்படுகிறது. ? ?காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளுக்கு ஈடு இணை இல்லை ? ? என்ற தொடர் பாட ஆசிரியரால் ஒரு பாடத்தில் தரப்பெற்றிருந்தது. இந்தத் தொடரை வெளிநாட்டு மாணவர்களுக்கு அறிமுகம் செய்வதில் சிக்கல் எழுகிறது. ஈடு என்பதற்கும் இணை என்பதற்கும் ‘equal ‘ என்ற ஒரு பொருளே ஆங்கில அகராதிகளில் தரப்பெறுகின்றன. ஆங்கில வழியாக தமிழைக் கற்பித்தல் என்ற முறையில் இயங்கிவரும் இப்பாடத்திட்டங்;களில் ஈடு என்பதையும் இணை என்பதையும் வேறுபடுத்தி அறிவிக்க முடிவதில்லை. இச்சிக்கலைத் தீர்க்கச் சில வழிகளும் உள்ளன. பாடத்தில் பயன்படுத்தப்பெறும் மரபுத் தொடர்களை, வழக்குத் தொடர்களை, பழமொழிகளை விளக்குவதற்காகவே தனிப்பக்கங்கள் ஏற்படுத்தப்பெற்று அவற்றை விளக்கம் செய்தபின் பாடத்திற்குள் நுழையும் வண்ணம் செய்யப்படுவதால் இச்சிக்கலைத் தீர்க்கமுடிகிறது.

அடுத்து பாடங்களில் தமிழர் பழக்க வழக்கம் சார்ந்த பகுதிகளை, பண்பாட்டுச் செய்திகளை அறிமுகம் செய்வதிலும் சிக்கல் எழுகிறது. எடுத்துக்காட்டிற்காக இங்கு ஒன்று சுட்டப் பெறுகிறது. ‘தமிழ் விடு தூது ‘ என்ற செய்யுள் பகுதி இடம்பெறும் பாடத்தில் ‘தள்ளிச் சிறலீர் கூடித் தாலாட்டி ‘ என்ற பாடலடி வருகிறது. இப்பாடலடியை விளக்கும்போது தொட்டில், தாலாட்டுதல் முதலான குழந்தையை வளர்க்கும் தமிழர் பழக்க வழக்கங்களைக் கூற வேண்டியுள ிளது. வெளிநாட்டு மாணவர்கள் தாலாட்டுதல், தொட்டில் என்பதை அறிந்திருப்பரோ என்ற ஐயம் ஏற்படுகிறது. எனவே இச்சிக்கலைத் தீர்க்க தொட்டில் குறித்த அசைவுப்படக்காட்சிகள், தாலாட்டுதல் குறித்த அசைவுப்படக்காட்சிகள் பாடங்களில் தரப்பட்டு இச்சிக்கலும் தீர்க்கப்பட்டது.

தமிழ் இலக்கணங்களைக் கற்பித்தலிலும் பல சிக்கல்கள் உள்ளன. பயன்ப ாட்டு நிலையில் பயன்படும் தமிழ் இலக்கணங்களைச் சொல்லித்தருவதில் சிக்கல்கள் எழுவதில்லை. ஆனால் பயன்பாட்டில் இல்லாத வழக்கொழிந்த இலக்கணக் கூறுகளை இணையவழிக் கற்பித்தலில் சொல்லித் தரும்போது சில சிககல்கள் ஏற்படுகின்றன. எடுத்துக்காட்டிற்கு உரிச்சொல் என்ற இலக்கணக் கூறைக் கற்பிக்கும்போது ஏற்படும் சிக்கலைக் கூறலாம். தற்போது உரிச்சொற்கள் அதிகமாக மக்களால் பயன்படுத்தப்படுவதில்லை. ஏனவே பழைய ? ?கடி ? ? முதலான எடுத்துக்காட்டுகளையே உரிச்சொல்லுக்குச் சொல்ல வேண்டி உள்ளது. இவற்றைத் தவிர்த்துவிட்டுப் பாடத்தை நகர்த்தவும் முடியாது. இந்தச் சிக்கலையும் பல முறை வழக்கொழிந்த இலக்கணங்களை மாணவர்க்கு அறிவிக்கும் நிலையில் தீர்க்க இயலும். இதன்மூலம் மாணவர்கள் மீண்டும் நினைவாற்றல் பெறும் கல்விமுறைக்கே தள்ளப்படுகின்றனர்.

இவை போல பல சிக்கல்கள் இணையவழிக் பாடத் தயாரிப்பில் உள்ளன. இவை விரிப்பின் பெருகும். இவ்வகைச் சிக்கல்களை ஓரளவு நீக்கி தமிழ் இணையப்பல்கலைக்கழகம் பாடத்திட்டங்களைத் தயாரித்து வருகிறது.

தமிழ் இணையப்பல்கலைக்கழகம் நடத்தும் இப்பாடத்திட்டங்களைத் துவக்கக்கல்வி ஆசிரியர்கள் அறிந்து தம் மாணவருக்கு அறிவிக்க வேண்டும். அக்காலம் விரைவில் வரவேண்டும்.

தமிழகத்தில் தமிழ்மொழிக் கல்வி பெறாமல் தடைபடுத்தப்பட்டவர்களும் தமிழ் இணையப் பல்கலையில் இணைந்து தமிழ்க்கல்வியைப் பெற இயலும். சான்றிதழைப் பெற முடியும். அக்காலமும் விரைவில் வரவேண்டும்.

அதற்கு உதவும் வகையில் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் செயலாற்றி வருகிறது. அதன் இணையத்தள முகவரி tamilvu.org

அதன் இருப்பிட முகவரி – தமிழ் இணையப்பல்கலைக்கழகம், எல்நெட் மென்பொருள் நகரம், நான்காம்தளம், தரமணி சென்னை- 113

தமிழ் இணையப்பல்கலைக் கழகம் அதன் செயல்பாடுகளை அவ்வப்போது பயிற்சிப் பட்டறைகள் மூலமாகவும் தெரிவித்து வருகிறது. இவ்வகைப் பட்டறைகளை நடத்தத் தமிழ் இணையப் பல்கலைக் கழகம் ஒரு கை தர தயாராக உள்ளது. மறு கை தர தங்களை அழைக்கிறோம். நம் இரு கைகளும் இணைந்து கூடி, கைகள் தட்டித் தமிழ் பரப்புவோம்.

—-

muppalam2003@yahoo.co.in

Series Navigation

முனைவர் மு. பழனியப்பன்

முனைவர் மு. பழனியப்பன்