விவாதம்:தெளகீது பிராமணியத்தின் நுனிப்புல் மேய்ந்த வார்த்தைகள்

This entry is part [part not set] of 35 in the series 20060127_Issue

ஹெச்.ஜி.ரசூல்


எனது வகாபிசமும் நவீன முதலாளித்துவமும் தொடர்பான கட்டுரைக்கு அருளடியான். பாபுஜி ஆகியோர்களின் எதிர்வினைகளை திண்ணையில் வாசித்தேன். அடித்தள இஸ்லாமிய மக்களின் மரபுகள், வாழ்வியல் சடங்குகள், புனைவுகள் சார்ந்து இயங்கும் தர்கா வழிபாட்டில் உட்புதைந்திருக்கும் ஆன்மீக உளவியலை கண்டறியாமலும், எனது கட்டுரையின் அடிநாத சாரத்தை புரிந்து கொள்ளாமலும் நுனிப் புல் மேய்ந்த வார்த்தைகளாக அவை காட்சியளித்தன.

1. அருளடியானது எதிர்வினையின் முற்பகுதி தர்கா வழிபாடு ஏழை எளிய மக்களின் பிரதிதித்துவம் சார்ந்தது என்ற என் கருத்தை நகைச்சுவையென பகடி செய்துவிட்டு பிற்பகுதியில் ஏழைகளும் நடுத்தரவர்க்கத்தினரும் சற்று அதிகமாக தர்கா வழிபாட்டில் உள்ளனர் என்பது உண்மைதான் என்பதாகக்கூறியுள்ளார். இது அவரது குழப்ப மனலையையே காட்டுகிறது.

2. தர்கா நிர்வாக வருமானம் குறித்த பிரச்சனைகள் எனது கட்டுரை பேசும் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. இது நாற்பது லட்சம் ஹாஜிகளின் ஹஜ் பயணத்தின் மூலமாக சவுதி அரேபிய அரசாங்கம் மற்றும் அரபு நிறுவனங்கள் ஈட்டும் வக, பொருளாதார லாபங்களை பரிசீலிப்பது போன்றதொரு வேறுபட்ட பகுதியாகும். எனினும் அரசின் வக்ப் வாரிய சட்ட நிர்வாகத்தின் கீழ் அனைத்து தர்காக்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்பதே அறியப்படவேண்டிய உண்மையாகும்.

3. நவீன முதலாளியத்தின் பிரதான குணங்களில் ஒன்றான பகுத்தறிவு வகைப்பட்ட அணுகுமுறையை தர்கா நடவடிக்கைகளில் முன்வைக்கும் வகாபிசம் இஸ்லாத்தின் பெருங்கதையாடல் நிகழ்வுகளான ஈமான் கொள்ளுதல், வஹியின் மூலம் இறக்கப்பட்ட திருக்குர்ஆன் வசனங்கள், ஹஜ்ஜின் சடங்குகள் உள்ளிட்ட பலப்பல நிகழ்வுகளில் இத்தகைய அணுகுமுறையை பேணுவதில்லை. வகாபிசத்தின் போலி அறிவுவாத நிலைபாட்டினையும், இரட்டை நாக்குத் தன்மையினையும் அம்பலப்படுத்தவே இவ்விவாதம் முன்வைக்கப்பட்டது.

4. கல்வி அறிவு பெற்றவர்கள் தர்கா பண்பாட்டை மறுத்து விடுவார்கள், கல்வியறிவற்ற மூடர்களே இதைப் பின்பற்றுகிறார்கள் என்கிற வகையிலான கருத்து தொனித்த எதிர்வினைப் பகுதி வகாபிய பாசிச மனோபாவத்தின் வெளிப்பாடாகும். ஷிர்க் (இணைவைத்தல்) பித்அத் (இஸ்லாத்தில் புதிதாக நுழைந்தது) என்கிற இரு சொல்லாக்கங்களைப் பயன்படுத்திக் கொண்டு, எதற்கெடுத்தாலும் தங்களைத் தவிர பிற தர்கா மரபு இஸ்லாமியர்களை மார்க்கம் தெரியாதவர்கள், மூடநம்பிக்கையாளர்கள், விலக்கப்பட வேண்டியவர்கள் என்பதாக தொடர்ந்து சொல்லி வருகின்றார்கள். இத்தகைய கருத்தியல் வன்முறை நிகழ்த்திவரும் வகாபிகள் என்னும் இந்த தெளகீதுவாதிகள் இஸ்லாத்திற்குள் ஒரு வகை பிராமணியத்தை கட்டமைக்க முயல்கிறார்கள்.

பிராமணியம் – பிராமணர் உள்ளிட்ட வைதீகவாதிகளை உயர்ந்தவர்களாகவும் தூய்மையாளர்களாகவும் பிற இடைநிலை ஜாதி மற்றும் தலித்துக்களை விலக்கப்பட்டோர்களாகவும் தீண்டத்தகாதோர்களாகவும் கருதுகிறது. அகமணமுறையை பின்பற்றவும் கட்டாயப்படுத்துகிறது. அதிகாரம் இணைந்த புரோகித தலைமையை முன்றுத்துகிறது. இந்த குணங்கள் அனைத்தும் வகாபிகள் எனப்படும் தெளகீது பிராமணர்களின் வழிமுறையாக இருக்கிறது. பின்னைக்காலனியச் சூழலில் எது அறிவு, எது கல்வி, என்பதான கேள்வியும், பாரம்பரிய மற்றும் தொழில்நுட்ப அறிவு பற்றியும் விவாதங்கள் கிளப்பப்படுகின்றன. இன்றையகல்வி ஆன்மீகவியல் தாண்டி, பண்பாட்டு மானுடவியல், மொழியியல், தொல்குடி வரலாற்றியல், பின்னை அமைப்பியல், நாட்டாரியல் என்பதான பன்னூறு நுண்ணிய தளங்களில் விரிவடைந்திருப்பதும் இந்த வகையான கல்வியல் அணுகுமுறையில் தர்கா பண்பாட்டு நடவடிக்கைகளை அணுகி கற்க வேண்டியவர்கள் வகாபிகளே ஆகும் என்பதுதான் சொல்லப்படாத உண்மையாகும்.

5. வகாபிசத்தின் நவீன முதலாளியக்குரல் வாழ்நாளில் ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஜகாத் – ஏழை வரி கொடுத்தால் போதும் எனக்கூறி பெருமுதலாளிய நலன்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, ஏழை எளிய மக்களுக்கு துரோகம் செய்து கொண்டிருக்கிறது. இதனை ஏற்றுக் கொள்ளும் எதிர்வினையாளர் தாங்கள் இக்ககருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை எனவும் தமிழகத்தின் பிரபல இஸ்லாமிய நற்செய்தியாளர் பி.ஜேயின் தலைமையிலான குழுமத்தினர்தான் இதனை கொள்கை வடிவில் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார். அப்படியெனில் எனது கட்டுரையின் இத்தகவலை ஏன் தவறான தகவலென்று எதிர்வினையாளர் குறிப்பிடவேண்டும். எந்த இயக்கத்தின், குழுமத்தின் பிரதிதியாக அவர் பேசுகிறார் என்பதையும் அவர் தெளிவுபடுத்தி இருக்க வேண்டும்.

6. பாபுஜியின் எதிர்வினையும் இத்தகையதான முனை மழுங்கிய அளவுகோல்களைக் கொண்டு எழுதப்பட்டிருந்தன. இஸ்லாத்தின் உள்கட்டுமானங்கள் குறித்து மறுவிவாதம் தொடங்கிய உடனே ஜனநாயகமற்று இக்குரல்களை எல்லாம் இந்துத்துவ அரசியலின் ஆதரவுக்குரல்களாக சித்தரிக்க முயல்வது மிக மோசமான அணுகுமுறையாகும்.

இரண்டு வகை இஸ்லாம் உண்டென்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் சொன்ன பாதையில் எனது சிந்தனை தொடர்வதாக பாபுஜி கவலைப்படுகிறார். எனது கட்டுரையை அவர் ஆழமாக புரிந்து கொள்ளாததின் வெளிப்பாடு இது. என்னைப் பொறுத்தவரையில் ஆன்மீக இஸ்லாம், பண்பாட்டு இஸ்லாம், அரசியல் இஸ்லாம், சூபி இஸ்லாம் என இஸ்லாமை குறிப்பது இஸ்லாத்தின் உள்ளடக்கரீதியான பன்முக அடையாளங்களை (multiple Identity) வெளிப்படுத்தும் நோக்கில் அமைந்ததாகும். இதுபோன்றே காலத்தின் அடிப்படையிலான வகைப்படுத்தலில் பூர்வீக இஸ்லாம், நவீன இஸ்லாம், பின்நவீன இஸ்லாம் என்பதான சொல்லாடல்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதனை ஆய்வு ரீதியாக பாபுஜி போன்றவர்கள் புரிந்து கொள்ள முயலவேண்டும்.

7. இந்திய தமிழ் முஸ்லிம் சமூகத்தில் இஸ்லாமல்லாத பழக்கவழக்கங்களாக தாலி, தர்கா வழிபாடு, அத்வைத கோட்பாடு புகுந்துவிட்டதாக கோபப்படுகிறார். மூன்று முடிச்சு போடும் தாலிக்கும் முஸ்லிம்களின் பழக்கமான ‘கரிசமமாலை ‘ அதலுக்கும் இடையே நுட்பமான தனித்தன்மை அடையாளங்கள் உண்டு. மேலும் சூபிசம் அத்வைத கோட்பாடென்றால் இஸ்லாத்தின் பெயரால் இவாகள் சொல்லும் வகாபிசம் துவைத கோட்பாடா ? இதுபற்றி தனியாக விவாதிக்கலாம்.

8. தர்கா பண்பாட்டின் புறவடிவத்தை பார்த்து பிறசமய வழிபாட்டை பின்பற்றுவதாக கூறும் வகாபிகள், கிராமப்புறங்களில் பத்ரகாளியம்மனுக்கும், கருப்பண்ணசாமிக்கும் ஆட்டை, மாட்டை பலி கொடுப்பதற்கும் முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாளன்று ஆடுகளையோ, மாடுகளையோ ராஜஸ்தானிலிருந்து வரவழைத்து ஒட்டகங்களையோ பலிகொடுப்பதற்கும் (குர்பானி) பெரிய வித்தியாசத்தை காட்ட முடியாது. பலியிடும் முறைகளில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் இந்த புறவடிவம் தவிர்த்து அகவடிவத்தில் குறிப்பாக நோக்கம், நிய்யத்தில் தனித்தன்மைகள் இருப்பதை எவ்வாறு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டுமோ அதுபோலவே தர்காவின் கபறு ஜியாரத்திற்கும் அகவடிவம் சார்ந்த தனித்தன்மைகள் உண்டு. இதனை கவனமாக உற்று நோக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒன்றை அடையாளமாக மேலோட்டமாக பார்ப்பது, ஒற்றைமயமாகும். அரேபிய வகைப்பட்ட பண்பாட்டு அதிகாரத்திற்கே இழுத்துச் செல்லும்.

—-

mylanchirazool@yahoo.co.in

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்