அண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா ? – 2

This entry is part [part not set] of 35 in the series 20060127_Issue

மலர் மன்னன்


அண்ணாவைப் பற்றி நான் எழுதுகையில் உடனுக்குடன் படித்துக்கொண்டே வந்த நண்பர் ஒருவர், மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராய்க் கண்ணீர் சிந்தலானார். ‘அண்ணாவிடம் இவ்வளவு சிறப்பியல்புகள் இருந்தனவா ? ஆனால் அவருடைய வழிவந்தவர்கள் நடந்துகொள்ளும் முறைக்கும் அண்ணாவின் குணநலன்களுக்கும் ஒரு சிறிதும் தொடர்பு இல்லையே! கருணாநிதி ‘ஆட்சி மாறப்போகிறது என்பது நினைவிருக்கட்டும் ‘ என்று இப்போதே மறைமுகமாக எச்சரிக்கை செய்யத் தொடங்கிவிட்டார். ஜயலலிதாவும் அதிகாரிகளிடம் பழிவாங்கும் போக்கில்தான் நடந்துகொள்கிறார். எத்தனை அதிகாரிகள் இவர் ஆட்சியில் பந்தாடப்படுகிறார்கள்! சிலருக்கு மாற்று இடம் தராது வீட்டில் உட்காரும்படிச் செய்துவிடுகிறார். இவர்களுக்கும் அண்ணாவுக்கும் சம்பந்தமே இல்லையே! ‘ என்று ஆச்சரியப்பட்டார்.

இதற்கு நான் என்ன பதில் சொல்வது ? ஜயலலிதாவுக்கு அண்ணாவிடமிருந்து கேடயம் வாங்கியதற்குமேல் வேறு பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் கருணாநிதி அண்ணாவுடன் நெருக்கமாக இருந்தவர். அண்ணாவிடமிருந்து அவரது இதயத்தை இரவலாகக் கேட்டு வாங்கியிருப்பதாக வேறு சொல்பவர். மேலும் இன்று எண்பது பிராயம் தாண்டிவிட்டவர். அவரே இப்படியிருக்கும்போது ஜயலலிதாவிடம் எப்படி அன்ணாவின் பிரதிபலிப்பை எதிர்பார்க்கமுடியும் ?

அண்ணாவிடம் இவ்வளவு பாசம் வைத்திருக்கிறீர்களே, அவரால் நீங்கள் அடைந்த பலன் என்ன என்றும் அந்த நண்பர் கேட்டார். அவர் மீது பிழை இல்லை. பலன் கிடைத்தால்தான் ஒருவர் மீது பாசம் இருக்கும் என எண்ணத் தோன்றும் காலத்தில் வாழ்பவர் அவர்!

உலகாயதப்படிப்பார்த்தால் எனக்கோ என் குடும்பத்திற்கோ ஒரு துரும்பின் அளவுக்கும் அண்ணாவால் பலன் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படிப்பார்த்தால் யாரால்தான் என்ன பலன் லவ்கீகமாய் ? மேலும் லவ்கீகப் பலன் பார்த்தா ஒருவருடன் பழகுவதும், ஒருவரை நேசிப்பதும் ? அண்ணாவிடமிருந்து சில நற்பண்புகளையேனும் கற்றுக்கொள்ளமுடிந்ததே, அதனைக் காட்டிலும் சிறந்த பலன் என்ன இருக்க முடியும் ? உலகாயதப் பலன்களை எதிர்பார்த்து நான் அவரோடு பழகவும் இல்லையே! அப்புறமென்ன ?

அண்ணா முதலமைச்சரான பிறகு முன்போல அவருடன் நெருங்கியிருக்க இயலாது போயிற்று என்றாலும் செய்தியாளன் என்ற முறையில் தினந்தோறும் கோட்டைக்குச் செல்வதும் அடிக்கடி அவரைச் சந்திப்பதும் நிகழ்ந்து வந்தது. முதலமைச்சராக அண்ணா தமது முதல் செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டியபோது ஒரு நிருபர் மதுவிலக்கு தளர்த்தப்படுமா என்று கேட்டார். கேள்வி முடிவதற்கு முன்னதாகவே அண்ணா பதிலிறுத்துவிட்டார்: அயாம் அன் அடிக்ட் டு ப்ரொஹிபிஷன் என்பதாக. அன்ணாவின் அந்த வாக்குச் சாதுரியம் கேட்டு, அடிக்ட் என்ற பிரயோகத்தின் பொருத்தம் கண்டு, நிருபர்கள் அனைவரும் ஆஹாஹா என்று

வாய்விட்டுக் கூவி ரசித்தனர், கச்சேரியில் ஒரு ஸ்வரப் பிரயோகம் கேட்டு மகிழ்வது போல!

அண்ணா சொன்னார்: ‘ ‘ நான் சிறுவனாயிருக்கையில் பள்ளியிலிருந்து திரும்புகையில் தெருவோரங்களில் பலர் உருண்டு கிடப்பது கன்ணில் படும். அது என்னை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஆனால் கடந்த பல தலைமுறைகளாக அம்மாதிரியான காட்சியினைக் காணும் நிலைமை நம் குழந்தைகளுக்கு இல்லை. இதனை நான் மாற்றிவிடமாட்டேன், எவ்வளவுதான் நிிர்ப்பந்தம் ஏற்பட்டாலும். ‘ ‘

அண்ணாவை மிகக் கேவலமாக மேடையில் பேசுபவர்கள் பலர் இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களில்

சின்ன அண்ணாமலையும் ஒருவர். ஒரு தடவை அண்ணா முதல்வரான பிறகு வெளியூர் சென்று ரயிலில்

திரும்பிக்கொண்டிருந்தார். நடு நிசி. விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயிலில் இடம் தேடி சின்ன அண்ணாமலை அல்லாடிக் கொண்டிருப்பதை ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டார் அண்ணா. சின்ன அன்ணாமலை இடம் கிடைக்காமல் திண்டாடுகிறார் போலிருக்கிறது. நாம் அழைத்துச் செல்வோம், உடனே அவரை அழைத்துவாருங்கள் என்று காவலரை அனுப்பினார் அண்ணா. முதல்வர் அழைக்கிறார் வாருங்கள் என அவரை அழைத்து வந்தார் காவலர். சின்ன அண்ணாமலைக்கு நம்பவே முடியவில்லை. இங்க இடமிருக்கு, வாங்க என்று அவரை அழைத்துக் கொண்டார், தமிழக முதலமைச்சர் அண்ணா. இச்சம்பச்வத்தைப் பதிவு செய்த சின்ன அண்ணாமலை, அந்தக் கணமே அண்ணா மீது தமக்கு இருந்த துவேஷம் நீங்கியதாகவும் பதிவு செய்திருக்கிறார்.

யேல் பல்கலைக் கழக அழைப்பின் பேரில் அமெரிக்கா செல்லும் வழியில் அண்ணா வாடிகன் சென்று

போப் ஆண்டவரைப் பார்த்தார். நம் நாட்டு சமயத் தலைவர்களைப் பார்க்காத அண்ணா மாற்று சமயத் தலைவரைப் பார்ப்பதா எனப் பலர் கடுமையாக விமர்சித்தனர். அண்ணாவோ ஒரு நோக்கத்துடன்தான் அந்தச் சந்திப்பை மேற்கொண்டார். அந்தச் சமயத்தில் கோவா விடுதலைப் போரில் பங்கேற்ற சிலரைப் போர்ச்சுகல் அரசு கைது செய்து லிஸ்பனுக்கு அழைத்துச்சென்று சிறைவைத்திருந்தது. அந்த கோவா

விடுதலைப் போராட்டத் தியாகிகள் தம் வாழ்நாள் முழுவதும் அன்னிய நாட்டுச் சிறையிலேயே கழிந்துவிடும் என்றுதான் எண்ணியிருந்தனர். அவர்களை விடுதலை செய்யுமாறு போர்ச்சுகல் அரசுக்கு அறிவுறுத்து

மாறு போப் ஆண்டவரிடம் விண்ணப்பித்தார், அண்ணா. போப் அதற்கு இணங்கி போர்ச்சுகல் அரசிடம் கோவா விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறையில் இருப்போரை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். போப் ஆண்டவரே கேட்டதால் அதற்குப் போர்ச்சுகல் அரசு இணங்கியது. ஆனால் நடைமுறைகளின் காரணமாக அதில் தாமதமேற்பட்டது. விடுதலையாகி வந்த கோவா விடுதலைப் போராட்டத் தியாகிகள் தமது விடுதலைக்குக் காரணமான, தங்களை முன்பின் அறியாத அண்ணாவைச் சந்தித்து நன்றி கூற விழைந்தனர். அதற்குள் அண்ணா காலமாகிவிட்டிருந்தார்.

‘ ‘அண்ணா ஈஸ் ஜெம் ஆப் எ மேன் ‘ ‘ என்பார் மெயில் ராமனாதன். அவர் ஒரு பிராமணர். அண்ணா முதலமைச்சராகப் பணியாற்றுவதை மதிப்பீடு செய்த மெயில் இதழ், பதவியினால் சிலர் பெருமை அடைகிறார்கள், சிலர் தாம் வகிப்பதால் தமது பதவிக்குப் பெருமை அளிக்கிறார்கள். அண்ணா தாம் வகிக்கும் பதவிக்குப் பெருமை தேடித்தருபவர் என்று தலையங்கம் எழுதியது. நூற்றாண்டு கண்ட மெயில் ஆங்கில மாலை நாளிதழ், பிராமணர் வசமிருக்கும் சிம்சன் குரூப் நிர்வாகத்தில் நடந்த பத்திரிகை.

அன்ணா மறைந்தபோது, தினமணியில் தலையங்கம் எழுதிய ஏ என் சிவராமன், வெறும் சம்பிரதாயதிற்காக அல்லாது அண்ணாவைப் போற்றித் தலையங்கம் எழுதினார். அவரும் பிராமணர் மட்டுமல்ல, தேசிய உணர்வில் ஊறித் திளைத்தவரும்தான்.

அண்ணா முதல்வர் பதவியேற்ற சில நாட்கள் வரைதான் அப்பதவிக்குரிய மரியாதையைக் காக்கவேண்டும் என்பதற்காக தினமும் முக சவரம் செய்து, சலவை ஆடை அணிந்து காட்சியளித்தார். பிறகு வழக்கம்

போல் குறைந்தது மூன்று நாள் சவரம் செய்யாத முகமும் கசங்கிய சட்டையும் அழுக்கேறிய நான்கு முழ வேட்டியுமாக எமக்கு நன்கு பரிச்சயமான அண்ணாவாகத் தோற்றமளிக்கத் தொடங்கிவிட்டார்!

அன்ணாவைப் பற்றிப் பேசுவதற்கு என்னிடம் இன்னுமின்னும் செய்திகள் உள்ளன. சமயம் வரும்போது அவற்றைப் பதிவு செய்ய வேண்டியதுதான். ஏனெனில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இக்கட்டுரையை முடித்தாகவேண்டுமேயன்றி எவ்வளவுதான் வளர்த்திக் கொண்டு போவது ?

கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, எவ்விதப் பிரதிபலனும் எதிர்பாராத அபிமானிகள் உள்ளவரை அண்ணா இருந்துகொண்டுதானிருப்பார். அவர் இல்லை என்று யாரால் சொல்ல முடியும் ?

—-

malarmannan79@rediffmail.com

Series Navigation

மலர் மன்னன்

மலர் மன்னன்