குஷ்புவும், ஈ வெ ராவும் – சில சமன்பாடுகள்

This entry is part [part not set] of 22 in the series 20051006_Issue

விஸ்வாமித்ரா


—-

குஷ்புவை செருப்பாலடிப்போம், குஷ்புவை விளக்குமாற்றால் அடிப்போம், குஷ்புவை தமிழ்நாட்டை விட்டே துரத்துவோம், தமிழ்ப் பெண்களின் கற்பைக் களங்கப் படுத்திய குஷ்புவே ஒழிக, …. இவை போன்ற, இதை விடக் கடுமையான ஆபாசமான கணைகள் , தாக்குதல்கள் குஷ்புவின் மீது தொடர்ந்து தமிழ் நாடு முழுவதும், திருமா வளவன் மற்றும் ராமதாசின் கட்சிக் கும்பல்களால் தொடுக்கப் படுகின்றன. தமிழ் நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் குஷ்புவின் மீது வழக்குத் தொடுக்கப் பட்டுள்ளன. அட, அப்படியென்ன குஷ்பூ சொல்லி விட்டார் ?

‘ஆண்கள் தங்கள் மனைவிகள் கன்னித்தன்மையோடு திருமணம் வரை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது ‘

‘பெண்கள் திருமணத்திற்கு முன்பே உடல் உறவு வைத்துக் கொள்வதில் தவறில்லை ஆனால் நோய் வராமல் பாதுகாப்பாக இருந்து கொள்ள வேண்டும் ‘

இதைச் சொன்னது யார் ? குஷ்பு

குஷ்பு என்பவர் யார், எங்கு இதைச் சொன்னார் ?

ஒரு நடிகை. அவரது அனுபவத்தில் எது சரியென்று அவருக்குப் படுகிறதோ, அதை அவரது கருத்தாக செக்ஸ் சம்பந்தமான கணக்கெடுப்பை வருடா வருடம் வெளியிட்டு தனது பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ளார்.

பொதுவாக நடிகைகள் சொல்லும் உபதேசங்களையோ, கருத்துக்களையோ மக்கள் யாரும் வேதவாக்காக எடுத்துக் கொண்டு அதையே பின்பற்ற முயல்வதில்லை. இதே போன்ற கருத்துக்களை கமலஹாசன் உட்பட பல நடிகர் நடிகைகளும், கவிதாயினிகளும் இதற்கு முன்பே சொல்லியுள்ளார்கள். அப்படி ஒரு நடிகை தன் கருத்தைச் சொல்லுவதால் தமிழ் பெண்களின் கற்பும், மானமும் பறி போய் விடுமானால், ஒரு குஷ்பூ தெரிவித்த கருத்தைக் கேட்டு அதன்படி தமிழ் நாட்டுப் பெண்கள் நடக்க ஆரம்பித்து விடுவார்களேயானால், கண்ணகி பிறந்த தமிழ்நாட்டிற்கு ஒரு நடிகையின் கருத்தினால் மட்டுமே களங்கம் ஏற்பட்டு விடுமானால், அது என்ன கற்பாக, என்ன பாரம்பரியமாக இருக்க முடியும் ? அப்படிப் பட்ட பலவீனமான பண்பாடா தமிழ்ர் பண்பாடு ? ஒரு குஷ்பூவின் அறிக்கையினால் தமிழ் நாட்டுப் பெண்கள் அனைவருக்கும் களங்கம் ஏற்படும் என்று இவர்கள் சொல்வார்களேயாயின் இவர்கள் அல்லவோ தமிழ் நாட்டுப் பெண்களைக் கேவலப்படுத்துவதாக ஆகிறது ?

குஷ்பு ஒரு நடிகை என்ற அளவில் தனக்குத் தோன்றிய, தனது அனுபவத்தின் படி ஒரு கருத்தைச் சொல்லியுள்ளார். அதை ஏற்கவில்லையெனில், இவர்களும் அதே பத்திரிகைக்கோ, பிற பத்திரிகைக்கோ, தாங்களும் ஒரு பேட்டி கொடுத்து ஐயா, அப்படியாகப் பட்ட கருத்து தவறு என்று சொல்லிவிட்டுப் போயிருக்கலாம், அல்லது இன்னும் ஒரு படி மேலே போய், கற்பின் முக்கியத்துவத்தை தமிழ் நாட்டுப் பெண்களுக்கு இவர்கள் கட்சி கூட்டங்கள் போட்டு பாடம் எடுத்திருக்கலாம், அல்லது கற்புக் காப்புக்களை வாங்கி இலவசமாக விநியோகித்திருக்கலாம். அதை விட்டு, விட்டு ஏன் இந்த வெறிக்கூச்சல் ? ஏன் இந்த ரவுடித்தனம் ? ஏன் இந்த அடவாடித்தனம் ? ஏன் இந்த அராஜகம் ?

இப்பொழுது குஷ்புவை எதிர்ப்பவர்களில் முன்னணியில் இருப்பவர்கள் ராமதாஸும், திருமாவளவனும். இவர்கள் தங்களை ஈ வெ ராவின் சீடர்கள் என்று அறிவித்துக் கொண்டவர்கள். ஈ வெ ராவின் சிலைக்கு பிறந்தநாளுக்கும், திவசத்திற்கும் சென்று சிலையுயர ரோஜா மாலை அணிவிப்பவர்கள். ஈ வெ ராவைப் பழித்தவர்களைச் சும்மா விடாதவர்கள். அப்படியாகப் பட்ட சீடர்கள் கூறுகிறார்கள், ஈ வெ ரா கற்பில் ஆணும் பெண்ணும் சமம் என்று மட்டும்தான் சொன்னாராம். என்ன சீடர்கள் இவர்கள் ? தங்கள் குரு என்ன சொன்னார் என்பது கூடத் தெரியவில்லையா அல்லது தெரியாதது போல் நடிக்கிறார்களா ? போகட்டும் சந்தேகத்தின் பலனை இவர்களுக்குக் கொடுத்து, இவர்களுக்கு உண்மையில் ஈ வெ ரா என்ன சொன்னார் ? எதைப் போதித்தார் ? எதை எழுதினார் என்பதை சற்றே நினைவு படுத்தலாம். பின்வரும் பாராக்காள் ஈ வெ ரா கற்பைப் பற்றியும், ராமதாசும், திருமாவும், கருணாநிதியும் தலையில் வைத்துக் கூத்தாடும் கண்ணகி குறித்தும், கற்பைப் போதித்த திருவள்ளுவர் குறித்தும் பல்வேறு கால கட்டங்களில் கூறியவை.

—-

ஈ வெ ரா கற்பை, திருமணத்தைப் பற்றி விடுதலையில் எழுதியது:

இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால் ‘கலியாணம் ‘ என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக் ‘கலியாணம் ‘ என்ற அமைப்பு முறை இருப்பதால்தான், கணவன் – மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் – அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பது – அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. இந்தக் கல்யாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பான்தான். சாஸ்திரங்களில் சூத்திரனுக்கு கல்யாண முறையே இல்லையே!

தொல்காப்பியத்திலே கூறப்பட்டு இருக்கிறதே ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப ‘ என்று இருக்கிறதே. ‘மேலோர் இவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காதிய கரணமும் உண்டே ‘ என்றும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் இருந்ததெல்லாம், சூத்திரர்களுக்குத் திருமணம் என்ற அமைப்பே இல்லாதிருந்தது என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது.

பெரும் பகுதி மக்களைச் சூத்திரனாக்க உடலுழைப்புக்காரனாக்க எப்படிப் பார்ப்பான் சாத்திரங்கள் செய்தானோ அதைப் போலத்தான் பெண்களை அடிமையாக்க ‘கலியாணம் ‘ என்ற முறையும் ஏற்படுத்தப்பட்டது.

இந்த நாட்டிலே ஒரு பெண்ணானவள் பதிவிரதையாக இருக்க வேண்டும் என்றால், அவள் எவ்வளவுக்கு எவ்வளவு அடிமை உணர்வோடு இருக்கிறாளோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவள் உயர்ந்த பதிவிரதையாகப் பாவிக்கப்படுகிறாள். இதைத்தான், நமது இதிகாசங்களும் புராணங்களும் சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன.

வள்ளுவனிலிருந்து ஒவ்வொரு பெரிய மனிதனும் பெண்ணை அடிமைப் பொருளாகத்தான் கருதியிருக்கிறானே தவிர, ஆண்களோடு சரிசமானமான உரிமையுடையவர்களாகக் கூறவில்லையே. ஆணும் பெண்ணும் சம உரிமை இல்லாத உலகில் சுதந்திரத்தைப் பற்றிப் பேச எவனுக்கு யோக்கியதை இருக்கிறது ?

முஸ்லிமை எடுத்துக்கொண்டால், பெண்களை உலகத்தைக் கூடப் பார்க்க விட மாட்டேன் என்கிறானே! முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதை விடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா ?

நம் நாட்டு யோக்கியதைதான் என்ன ? ஏழு வயதிலேயே பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, அன்றைக்கு இரவே சாந்தி முகூர்த்தம் வைத்து விடுவானே.

பெண்களுக்காவது உணர்ச்சி வர வேண்டாமா ? சிங்காரிப்பது – ஜோடித்துக் கொள்வது – சினிமாவுக்குப் போவது என்பதோடு இருந்தால் போதுமா ? தாங்களும் சம உரிமை உடையவர்கள் என்ற உணர்ச்சி வர வேண்டாமா ?

‘நான் 1932இல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை, ‘Proposed Husband and Wife ‘ என்கிறார்கள். அப்படி என்றால், என்ன அர்த்தம் ? என்று கேட்டேன். ‘நாங்கள் உண்மையான கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம். ‘ ‘ என்றார்கள். ‘எவ்வளவு காலமாக ‘ என்று கேட்டேன். ‘எட்டு மாதமாக ‘ என்கிறார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள் ? அந்த நாடு முன்னேறுமா ? ‘பதிவிரதம் ‘ பேசி பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா ?

‘விடுதலை ‘ 28.6.1973

நமது மக்கள் 100க்கு 80 பேர் தற்குறிகள். நம் பெண்கள் 100க்கு 90 பேர் தற்குறிகள். இந்தப் பெண்களுக்கு உள்ள ‘கற்பு ‘ என்கின்ற ஒரு காட்டுமிராண்டித்தனமான விலங்கு 100க்கு 90 பெண்களை மிருகக் கன்றுகளாகவே ஆக்கிவிட்டன.

ஈ வெ ரா கண்ணகியைப் பற்றி கூறியது:

கண்ணகி சினிமாவை பார்த்தேன். அதன் பிறகு அந்தக் கதையைப் பார்த்தேன். பழந் தமிழர் பெருமைக்கு இந்தக் கதையா ஆதாரம் என்கின்ற ஆத்திரம்தான் வந்தது. இதைப் போன்ற முட்டாள்தனமான கதை ஆரியப் புராணங்கள் ஆகியவற்றிலும் இல்லை என்பது எனது அபிப்பிராயம். இந்தக் கதை ஓர் இலக்கியமாக இருப்பது தமிழர்களின் மானக்கேடுதான்.

எனவே, தமிழ்நாட்டின் பழந்தமிழ் மக்களின் புத்திக்கும், நடைக்கும், ஒழுக்கத்துக்கும், ஆட்சி முறைக்கும், வீரத்திற்கும் இந்த இலக்கியங்கள் எடுத்துக்காட்டாக ஆகுமா என்று உங்களைக் கேட்கிறேன். இது எந்த விதத்தில் ஆரியர் புளுகையும் முட்டாள்தனத்தையும்விட குறைந்து இருக்கிறது என்று கேட்கிறோம்

ஈ வெ ரா திருவள்ளுவரைப் பற்றி எழுதியது: http://www.thinnai.com/pl0311042.html

—-

படித்துவிட்டார்களா ? ஆக திருமணம் என்பது ஒழிக்கப் படவேண்டிய ஒரு சடங்கு என்கிறார் ஈ வெ ரா. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாம் ஆனால் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்கிறார் ஈ வெ ரா. பதிவிரதம் என்பதும் கற்பு என்பதும் ஒரு நாட்டை முன்னேற்றாது என்கிறார் ஈ வெ ரா. இதைத்தானே குஷ்வும் சொன்னார். பெண்கள் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதில் ஏதும் தவறில்லை ஆனால் நோய் வரமால பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என்கிறார் குஷ்பு. அவருக்கு செருப்படி, ஈ வெ ராவுக்கு ரோஜா மாலையா ? என்னையா இது நியாயம் ?

குஷ்புவாவது கற்பு பற்றி ஏதும் கருத்துத் தெரிவிக்கவில்லை ஆனால் ஈ வெ ராவோ கற்பு என்பதே ஒரு காட்டுமிராண்டித்தனம் என்கிறார். ஏற்கனவே தமிழ் மொழி ஒரு காட்டுமிராண்டி பாஷை என்று சொன்னவர்தான் இந்த புண்ணியவான்.

இதையெல்லாம் ஈ வெ ரா சொல்லவே இல்லை என்று ராமதாசும், திருமாவும் இன்னும் மறுக்கப் போகிறார்களா ? குஷ்புவாவது ஒரு சாதாரண நடிகை. அவர் சொல்லை யாரும் பொருட்படுத்தப் போவதில்லை. அவர் பின்னால் யாரும் செல்லப் போவதில்லை. ஆனால் ஈ வெ ரா யார் ? தமிழர்களின் தந்தையல்லவா ? தமிழ்ர்களின் பெரியார் அல்லவா ? அவர் வாழ்க்கைப் பாடமாக வைக்கப் பட்டுள்ளது அல்லவா ? அவர் கொள்கைகள் புத்தகங்களாகவும், பிரச்சாரங்களாகவும் தமிழ் நாடு முழுவதும் பரப்பபடுகிற்து அல்லவா ? அவருக்கு தெருவுக்குத் தெரு, முக்குக்கு முக்கு சிலை வைக்கப் பட்டுள்ளது அல்லவா ? அவர் பின்னால் பல திராவிட இயக்கங்கள் செல்கின்றன அல்லவா ? ஈ வெ ரா தமிழர்களின் பகுத்தறிவுப் பகலவன் அல்லவா ? அவர் சொன்னால் அது தமிழகத்தை மிகவும் பாதிக்கும் அல்லவா ? ஒரு கருத்தை ஒரு ஈ வெ ரா சொல்வதற்கும், ஒரு பெரியார் சொல்வதற்கும் , ஒரு பகுத்தறிவுப் பகலவன் சொல்வதற்கும், ஒரு தமிழர்களின் தந்தை சொல்வதற்கும், ஒரு சாதாரண நடிகை சொல்வதற்கும் பெருத்த வித்தியாசம் உண்டல்லவா ? எது அதிக பாதிப்பை ஏற்படுத்த வல்லது ? எது அதிக களங்கத்தை ஏற்படுத்தக் கூடியது ? யார் சொல்வதற்கு அதிக வலு இருக்கும் ? மதிப்பு இருக்கும் ?

ஆக ஈ வெ ராமசாமி நாயக்கர் சொன்னதற்கு குஷ்பு சொன்னதை விட பல மடங்கு மதிப்பும், மரியாதையும், செல்வாக்கும் உண்டு. அப்படி இருக்கும் பொழுது இந்தப் பண்பாட்டுக் காவலர்கள், தமிழர் மானத்தைக் காக்க அவதரித்தவர்கள், கண்ணகி பிறந்த பூமியின் மானத்தைக் காக்க உறுதி பூண்டவர்கள் யாரை முதலில் எதிர்த்திருக்க வேண்டும் ? யாரை முதலில் விமர்சித்து விட்டு பின்னர் குஷ்புவிடம் வந்திருக்க வேண்டும். அப்படி செருப்பாலடிப்பதையும், விளக்குமாற்றால் கடவுள் சிலைகளை அடிப்பதையும் தமிழ் நாட்டுக்கு ஒரு கலாச்சாரமாகவே அறிமுகப் படுத்தியது இந்த ஈ வெ ராதானே ? ஒரு வேளை இது வரை ஈ வெ ரா சொன்னது என்ன என்பது தெரியாததனால் இவர்கள் ஒரு அறியாமையினால் ஈ வெ ராவின் சிலைகள் மீதோ, அவரது வாரிசுகள் மீதோ, அவர்கள் புத்தகங்களின் மீதோ தங்கள் எதிர்ப்பைக் காட்டாமல் இருந்திருக்கக் கூடும். இப்பொழுது தெரிந்து கொண்டு விட்டார்கள் அல்லவா ? தமிழர்களின் மானத்தை, தமிழ் பெண்களின் கற்பை களங்கப் படுத்திய ஈ வெ ராவையும் அவர் தம் கொள்கைகளையும் ஒரு கை பார்த்து விட்டுத்தான் பண்பாட்டுக் காவலர்கள் ஓய்வார்கள் என்று நம்புவோமாக. இனிமேல் தங்களை ஒரு பொழுது ஈ வெ ராவின் சீடர்கள் என்று அழைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நம்புவோமாக. கொள்கைப் பிடிப்புள்ளவர்கள் அல்லவா ? இனி ஈ வெ ரா இருக்கும் திசை பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டார்கள். தமிழ் நாட்டுப் பெண்களைக் களங்கப் படுத்துவது ஈ வெ ராவாக இருந்தால் என்ன குஷ்புவாக இருந்தால் என்ன ? யாராலும் தமிழின விரோதிகள்தானே. ராமதாஸும் திருமாவும் இனி சும்மா விட மாட்டார்கள் ஈ வெ ராவையும் அவர் தம் கொள்கைகளையும், சீடர்களையும். ஒரு கை பார்த்து விட்டுத்தான் ஓய்வார்கள் என்று நாம் நம்புவோமாக.

மாறாக ஈ வெ ராவின் சீடர்கள் என்று தங்களை அறிவித்துக் கொண்டு தமிழ் நாட்டை ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சியினர் ஏன் இந்த விஷயத்தில் மொளனமாக உள்ளனர் ? அவர்களுக்கு ஈ வெ ராவின் கொள்கைகளை ராமதாஸும், திருமாவும் எதிர்ப்பதில் உடன் பாடு உள்ளதா ? ஈ வெ ராவின் கொள்கைகளை துணிவுடன் உலகுக்கு அறிவித்த வீராங்கனை, கொள்கையின் கலங்கரை விளக்கம் குஷ்பூ அவர்களின் மீது வீசப்படும் தாக்குதல்களை ஏன் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் ? இவர்கள் உண்மையிலேயே ஈ வெ ரா சீடர்கள்தானா ? வெகுண்டு எழுந்திருக்க வேண்டாமா கருணாநிதியும், ஜெயலலிதாவும் போட்டி போட்டுக் கொண்டு ? ஏன் இந்த மெளனம், ஓ ஒருவேளை இவர்களுக்கும் ஈ வெ ரா என்ன சொன்னார் என்று தெரியாமல் போயிருக்கலாம், இப்பொழுதுதான் அறிவித்து விட்டோமே, இனிமேலாவது, ஈ வெ ராவின் கொள்கைகளை எதிர்க்கும் ராமதாசுடன், ஈ வெ ராவின் உண்மையான வாரிசுகளான தங்கள் கட்சிக்கு இனிமேல் ஒட்டோ உறவோ கிடையாது என்று துணிந்து அறிவிப்பாரா ? ஈ வெ ராவின் கொள்கைகளை துணிந்து இந்த உலகத்திற்கு எடுத்துச் சொன்ன குஷ்புவை உடனடியாகத் தமிழர்களின் அன்னை என்று அறிவிப்பார்கள் என்று நம்புவோமாக. அன்னைக் குஷ்புவுக்கு ஏற்கனவே ஒரு மறத்தமிழன் கட்டியுள்ள கோவிலுக்கு அரசாங்கத்தின் சார்பில் ஒரு குடமுழுக்கும் நடத்துவார்கள் என்றும் நம்புவோமாக.

என்ன செய்யப் போகிறார்கள் ஈ வெ ராவின் சீடர்களும், பண்பாட்டுக் காப்பாளர்களும் ?

—-

viswamitra12347@rediffmail.com

Series Navigation

விஸ்வாமித்திரா

விஸ்வாமித்திரா