அமெரிக்க வெளியுறவுக்கொள்கையில் தெற்காசியா

This entry is part [part not set] of 40 in the series 20050630_Issue

அமெரிக்க உள்துறை


( சமீபத்தில் சில அமெரிக்க ரகசிய ஆவணங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டன. வங்கதேச விடுதலைப் போராட்ட சமயத்தில் அமெரிக்காவின் நடைமுறைகளும் இவற்றில் உள்ளன. வங்கதேசவிடுதலைக்குப் பின்பு அமெரிக்க பாதுகாப்பு துணை அமைச்சர் தெற்காசியக் கொள்கை பற்றி தெளிவுபடுத்தியுள்ள ஆவணம் இது. 30 டிசம்பர் தேதியிட்ட ஆவணம் இது.)

சமீபத்திய நிகழ்வுகளின் பின்னணியில் ,உலக பாதுகாப்பு விவகாரங்களின் துறை (International Security Affairs) தெற்காசியக் கொள்கைகளில் நமது நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது. இன்னமும் முடிவாகாத சில சூழ்நிலைகளின் பின்னணியில் இந்த முதல் பதிலைத் தருகிறோம். சமீபத்திய சிக்கலினால் வல்லரசுகள் இந்தப் பகுதியில் கொண்டிருந்த உறவுகள் பெரிதும் மாறியும், இன்னமும் மாறிவருவதாய் உள்ளது.

இந்தியத் துணைக்கண்டத்தில் இந்தியா தடுக்க முடியாத அதிகாரமையமாய் மாறியுள்ளது. இதற்கு மேலாக, இந்திரா காந்தியின் ராணுவ வெற்றி உள்நாட்டில் அவருடைய அரசியல் வலிமையையும் அதிகரித்துள்ளது. ஆனால் , வரும் நாட்களில் பொருளாதாரப் பின்னடைவு கொண்டுவரும் சிக்கல்கள், அகதிகளின் நாடு திரும்புதல், சுதந்திரமான ஆனால் உதவியற்ற வங்கதேசம் இவற்றினால் இந்த வெகுஜன ஆதரவு பெரிதும் குறையும்.

யாஹ்யாவின் அரசு வீழ்ந்ததால், பாகிஸ்தானில் நிலையற்ற தன்மை உருவாகியுள்ளது. மிக புத்திக் கூர்மையும், பிரபலமும் கொண்ட ஒரே தலைவரான புட்டோவால் என்ன சாதிக்க முடியும் என்பது இன்னமும் தெளிவாகவில்லை. அவருடை அணுகுமுறையில் உள்ள முரண்பாடுகள் நம்முடன் கொண்டுள்ள உறவை சிக்கலாக்கக் கூடும். அவர் மிகப் பணக்காரராய் இருந்தாலும், கடுமையான சோஷலிச கருத்துகளைக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவின் தெற்காசியக் கொள்கையை மிக வெளிப்படையாய் கண்டன செய்யும் அவர்,. தனிப்பட்ட முறையில் நம் அலுவலர்களுடன் பேசும்போது சமனிலையும், வசீகரமும் கொண்டவராய்த் தோன்றுகிறார். வங்கத்தின் தலைவர் முஜிபுர் ரகுமானை சிறையிலிருந்து விடுவித்து, வீட்டுக் காவலில் வைப்பது , கிழக்கு பாகிஸ்தானையும் இஇந்தியாவையும் சமாதானப் படுத்தலாம். ஆனால் துணைக்கண்டத்தைப் பொருத்தவரையில் அவருடைய பேச்சு சண்டைக்கு அழைப்பதாய் உள்ளது.

வங்கதேசத்தின் நிலைமை பெரும் குழப்பத்தில் உள்ளது. இந்திய செயல்பாடுகள் பாகிஸ்தானின் ராணுவத்தையும், வங்காளியல்லாதவரையும் தாக்குதலிலிருந்து காப்பாற்றும் நோக்கம் கொண்டதாய் உள்ளது. அவாமி லீகின் மிதவாதத் தலைமையை ஊக்குவித்து, தீவிரவாதத் தலைமையிடம் அதிகாரம் சென்றடையாமல் காப்பதும் புது தில்லியின் நோக்கம் எனத் தெரிகிறது.

இந்தியா போருக்குத் தள்ளப்பட்டது, ஐ நாவின் செயலிழந்த தன்மையையும், சிக்கலைத் தவிர்க்க இயலாமையையும் சுட்டிக் காட்டுகிறது. பிராந்திய நாடுகள் தம்முடைய சிக்கலை சரியான நேரத்தில் தீர்த்துக் கொள்ளவும், வெளிப்படையாய் சிக்கலைக் கொண்டுவராமல் தமக்குள் தீர்த்துக் கொள்ளவும் ஒரு அமைப்பு தேவை என்று புலப்படுகிறது.

இஇந்த உண்மைகளை மனதில் கொண்டு குறுகிய காலத்திற்கான ஒரு கொள்கையை நாம் ஒரு பரந்த அளவில் கைக்கொள்ள முடியும். தெற்காசியா இரண்டாவது நிலை முக்கியத்துவம் கொண்ட பகுதியாய்த் தான் இருக்கும் என்ற உணர்வுடன், ஸ்திரத்தன்மையையும், சமனிலையையும் இந்தப் பகுதிக்கு நாம் கொணர்ந்தாக வேண்டும். அதே சமயம், மத்திய கிழக்குப் பகுதியில் நம் அனுபவத்தைக் கணக்கில் கொண்டு, ஒருபுறம் நாம் இணைவதைத் தவிர்க்க வேண்டும். அப்படித்தவிர்த்தால், குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றங்கள் நிகழும்போது நாம் எப்புறமும் சேருகிற சுதந்திரம் நாம் பெறுவோம். இந்த காரணத்தால், யாருக்கு ராணுவ தளவாடங்கள் வினியோகம் கிடையாது என்ற நம் கொள்கை எதிர்காலத்திற்கு மிக நல்லதே.

தெற்காசியாவையும், மத்திய கிழக்கையும் ஒப்பிடுவதில் நாம் தீவிரமாய் இறங்கலாகாது. தெற்காசியாவில் சோவியத் யூனியன் ஐயமின்றி பெரும் வலிமை கொண்ட அரசை ஆதரிக்கிறது. ஆனால் மத்திய கிழக்கில், சோவியத்தின் நேரடியான ஆதரவில்லாமல் இஸ்ரேலை அரபு சக்திகள் தோற்கடிக்க முடியும் என்ற பிரமை சோவியத்துக்க்குக் கிடையாது.

தெற்காசியாவில் நம் நோக்கங்கள் :

தெற்காசியாவில் அமெரிக்காவின் மிக முக்கிய நோக்கம் ஸ்திரத்தன்மையே. இதனால், சச்சரவுகள் எழாது , அதனால் வல்லரசுகளின் ஈடுபாடு இல்லாமல் இருக்கும். அதாவது நாடுகள் எதிரெதிர்த்திசையில் நிற்பதைத் தவிர்க்க அமெரிக்கா முயலவேண்டும்.

நடைமுறைப் படுத்துதல் :

பொருளாதார வளர்ச்சிக்கான உதவி – பாகிஸ்தானுக்கும், வங்கதேசத்துக்கும் – தேவை. இதுவே ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும். பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் நம் உடனடி தேவை, பாகிஸ்தானின் பாதுகாப்பை வலுப்படுத்த சிபாரிசு செய்வதே. பாகிஸ்தானின் பாதுகாப்பு குறையும் பட்சத்தில் இந்தியா, ஆஃப்கானிஸ்தான் இரண்டுமே பாகிஸ்தானைச் சீண்டலாம். அதே சமயம், இந்தியாவுடன் ராணுவரீதியாக இந்தியா அளவிற்கு பாகிஸ்தான் – வெளிசக்திகளின் உதவியுடன் – வளர முயன்றால், ‘இழந்த பகுதிகளை ‘ மீட்க முயன்று போரிட முற்படலாம். இது, தெற்காசியாவை நிரந்தரமான போர்ப்பகுதியாக்கி விடும். பாகிஸ்தானுக்கு அமெரிக்க தளவாட வினியோகம் 1. சீனாவின் வினியோகத்துடன் இணையாய் நகரவேண்டும். 2. பாகிஸ்தான் பொருளாதார சீர்திருத்தங்களில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்துவதாய் இருக்க வேண்டும். 3. மத்திய கிழக்குப் பகுதியின் முஸ்லீம் நாடுகளுடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். மத்திய கிழக்கு நாடுகளின் ஆதரவே பாகிஸ்தான் இப்போது தனிமைப் பட்டுக் கிடப்பதை நீக்க முடியும்.சோவியத் யூனியன் இந்தியாவிற்கு அளித்த ஆதரவு , வடக்கு ஆப்பிரிக்காவிலும், மத்திய கிழக்கிலும் சோவியத் எதிர்ப்பு உணர்வுகளைப் பெருக்கியுள்ளது. இதை அமெரிக்காவும், பாகிஸ்தானும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

****

Series Navigation

அமெரிக்க உள்துறை

அமெரிக்க உள்துறை